Multiple Page/Post

கிளி.பச்சிலைப்பள்ளியில் தை மாதத்திற்கு முன்னதாக எஞ்சியுள்ள அனைவரும் மீள்குடியேற்றப்படுவர்.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவில் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எதிர்வரும் தை மாதத்திற்கு முன்னதாக மீள்குடியேற்றம் செய்யப்படுவர் என பச்சிலைப்பள்ளி பிரதேசச்செயலர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மிள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் 72 குடும்பங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பச்சிலப்பள்ளி பிரதேச்செயலர் பிரிவில் இதுவரை 2393 குடும்பங்களைச் சேர்ந்த 7426 மக்கள் மீள்குடியர்த்தப் பட்டுள்ளதாகவும் பிரதேசச் செயலர் தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது? : த ஜெயபாலன்

LTTE LOGOஇன்று வெளியாகி வருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியிலேயே தேசம்நெற் இது தொடர்பான பல கட்டுரைகளை எழுதி மனித அவலத்தை நிறுத்துமாறு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பையும் வலியுறித்தி இருந்தது. பாரிய தோல்விகளைச் சந்தித்த தமிழீழ விடுதலைப் புலிகளை இறுதிநேரம் வரை காத்திருந்து மனித அவலத்தை ஏற்படுத்தாமல் பல மாத்ங்களுக்கு முன்னதாகவே சரணடைய வேண்டும் என்றும் கேட்கப்பட் இருந்தது. ஆனால் இன்று அனைத்தும் காலம்கடந்தவையாகி உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் புலம்பெயர் ஆதரவாளர்களினதும் அரசியல் எப்போதும் கண்கெட்ட பின் சூரிய நம்ஸ்காரமாகவே இருந்துள்ளது.

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்

சரணடைந்தவர்கள் சித்திரவதைக்கு உட்பட்டு படுகொலை செய்யப்பட்ட பல தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் மே 17 2009ல் பதிவிடப்பட்ட இப்பதிவை மீண்டும் மீள்பதிவிடுகிறோம்.

._._._._._.

May 17 2009

நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது?

புலிகளின் ‘பிளக் சற்றடே’ ஆக அமைந்த நேற்றைய தினம் (மே 16 2009) எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே – Black Saturday : இந்தியா தேர்தல் முடிவு : த ஜெயபாலன், முதல் பல்வேறுபட்ட ஊர்ஜிதமற்ற செய்திகள் பரவலாக வெளிவருகின்றன. புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வெளியிட்ட வேண்டுகோளுக்கு அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் இதுவரை சாதகமான சமிஞைகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை எனத் தெரிகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரின் வேண்டுகோள் வன்னியில் உள்ள தலைமைத்துவத்துடன் தொடர்பு கொண்டு வெளியிடப்பட்ட வேண்டுகோள் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறான முயற்சிக்கு இந்திய சம்மதித்திருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இறுதி நேரத் திருப்பங்களில் மிகுந்த நம்பிக்கையுடைய புலிகள் அவ்வாறான திருப்பத்திற்கு காத்திருப்பதாகவே நம்பப்படுகிறது.

நேற்றைய இந்தியத் தேர்தல் முடிவுகளால் மிகுந்த ஏமாற்றமடைந்த புலிகள் தங்கள் தோல்வியை ஏதோ ஒரு வகையில் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் கடைசி முயற்சிகளில் இறங்கி உள்ளனர். அதன் இறுதி நடவடிக்கையாகவே ஒபாமா நிர்வாகத்திற்கு புலிகளின் சர்வதேச இணைப்பாளர் விடுத்த வேண்டுகோள் அமைந்து உள்ளது. இலங்கை இராணுவத்திடம் புலிகளின் தலைமை சரணடைவது அவர்களுடைய கடந்த மூன்று தசாப்த போராட்டத்தையும் அர்த்மற்றதாக்கி அவர்களது வரலாறும் களங்கப்பட்டுவிடம் என்பதை சரியாகவே உணர்ந்து உள்ளனர். அதனால் இலங்கை இராணுவத்திடம் சரணடையாமல் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்திடம் சரணடைவதன் மூலம் தங்கள் முகத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனக் கருதுகிறார்கள்.

ஆனால் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் தனது வேண்டுகோளை இந்தியாவை நோக்கி விடுத்து இருந்தால் இந்த யுத்தத்தைப் பின்னணியில் இருந்து நடாத்தும் இந்தியா அதற்கு சம்மதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல் வந்து அதனிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. புலிகளுக்கு இந்தியாவிடம் சரணடைவதில் உள்ள முக்கிய பிரச்சினை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் பொட்டம்மானுக்கும் இந்தியா விதிதத்து உள்ள பிடியாணை. இவ்விருவரும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பகுதியினுள் இருந்தால் இந்தியாவிடம் சரணடையும் முடிவை எடுத்திருக்க இயலாது. அவ்வாறு சரணடைந்து இந்தியாவை அரசியல் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ள வைக்கும் அரசியல் வல்லமை புலிகளிடம் இல்லை. அவர்களிடம் உள்ள முரட்டுத்தனமான ஈகோ அவர்களது உயிருக்கும் ஆபத்தாகி உள்ளது.

இன்று (மே 17 2009) அதிகாலை முள்ளிவாய்க்கால் களமுனையில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு தப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பாரிய தாக்குதலில் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இத்தாக்குதல் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆளில்லாத விமானங்கள் தாள்வாகப் பறந்து வேவு பார்த்ததில் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியினுள் இருப்பதாகவே இராணுவம் நம்புவதாக உறுதிப்படுத்த முடியாத மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது.

இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து இராணுவம் சுற்றுவளைக்கப்பட்ட பகுதி தொடர்பாக இறுதியான சில முடிவுகளை எடுக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஏற்கனவே இராணுவம் தற்போது சுற்றி வளைக்கப்பட்ட பகுதியில் இருந்து கடந்த 72 மணித்தியாலங்களில் 50 000 மக்கள் வெளியேறி உள்ளதாகவும் அப்பகுதியில் பொது மக்கள் இல்லை எனவும் தெரிவித்து உள்ளது. பொது மக்கள் அங்கு உள்ளார்களா? அல்லது அனைவரும் வெளியேறிவிட்டார்களா? என்பதனை சுயாதீனமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் பொதுமக்கள் யாவரும் வெளியேறிவிட்டார்கள் என்று இராணுவம் கூறி இருப்பது கடுமையான இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இராணுவம் தயாராகலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.

இராணுவம் புலிகளின் தலைமையை உயிருடன் கைது செய்வதையோ அல்லது அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து தங்களிடம் சரணடைவதையோ பெரும்பாலும் விரும்புகின்றது. வெளியேறி வருகின்ற மக்களுக்கும் இடப்பெயர்வு முகாம்களுக்குமே சர்வதேச பொது ஸ்தாபனங்களை அனுமதிக்காத இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை அமெரிக்காவிடமோ அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றிடமோ ஒப்படைக்க அவ்வளவு இலகுவாக சம்மதித்து விடாது. அதற்கான நெருக்குதல்களே பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணின் ‘பின் விளைவுகளை இலங்கை சந்திக்க நேரும்’ என்பது போன்ற அச்சுறுத்தல்கள். இது சர்வதேச அமைப்புகள் மூலமும் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக்கப்படலாம்.

ஆனால் மீண்டும் இந்தியாவின் பாத்திரம் இதில் மிகவும் முக்கியமானது. இந்தியா புலிகளை தன்னை நோக்கி மண்டியிட முயற்சிக்கும் என்றே நம்பலாம். அதனால் இலங்கை அமெரிக்காவினதும் சர்வதேசத்தினதும் அழுத்தங்களுக்கு பணியாமல் இருப்பதற்கு இலங்கைக்கு பக்க பலமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.

2002ல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இந்தியா உங்களுக்கு பிடியாணை பிறப்பித்து உள்ளது பற்றி புலிகளின் தலைவர் வே பிரபாகரனை நோக்கி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரபாகரன் அப்போது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துக்கூடாகக் கூறியது, ‘அண்ணை நடக்கிறதை கதைக்கச் சொல்லுங்கோ’ என்ற வகையில் பதிலளித்திருந்தார்.

ஆனால் புலிகள் அடுக்கடுக்காக விட்ட அரசியல் தவறுகள் இன்று அவர்களது மரணம் வரை அவர்களைத் துரத்துகின்றது. ‘அரசன் அன்று கொல்வான். இந்தியா நின்று கொல்லும்.’ என்பது பொருத்தமாகிவிட்டது.

இலங்கை அரசாங்கம் சரணடையும் தருவாயில் உள்ள புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதோ அல்லது அப்பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்துவதோ மற்றுமொரு மனித அவலத்தை உருவாக்கும். மேலும் அது சர்வதேச யுத்த விதிகளை மீறுவதாக அமையும். ஆகவே இந்த யுத்தத்தை மனிதாபிமான நோக்கில் சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக முடிவுக்கு கொண்டுவருவதே பொருத்தமானது. இராணுவத்தரப்பில் மக்கள் அங்கில்லை என்று கூறப்பட்டாலும் அது சுயாதீனமாக ஒறுதிப்பட்ட ஒன்றல்ல. அப்பகுதி மீது தாக்குதல் நடத்துவது மற்றுமொரு மனித அவலத்தை ஏற்படுத்தும்.

இன்று புலிகள் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் வெறும் தற்காப்பு நடவடிக்கைகளையே அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். அதனால் அரசு வலிந்து தாக்குதல் நடத்தி மனித அவலத்தை ஏற்படுத்துவது அவர்கள் புலிகளாக இருந்தாலுமே பாரிய மனிதவிரோதச் செயலாகும். சுற்றி வளைக்கப்பட்டு உள்ள புலிகள் மனிதாபிமான முறையில் கௌரவமாக சரணடைவதற்கான வழிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பதே நீண்டகால நோக்கில் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுப்பதற்கு வழியை ஏற்படுத்தும்.

அவர்கள் புலிகளாக இருந்தாலும் அவர்கள் போராடுவதற்கான சூழலை இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இனவாத அரசுகளே ஏற்படுத்தின. அவர்களது போராட்டமுறை பயங்கரமானதாக இருந்துள்ளது. இன்று அவர்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்டு உள்ளனர். அதற்கு மேல் அவர்களைக் கொன்றொழிப்பதை எந்தத் தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தமிழ் தாயுடைய பிள்ளைகள் சகோதரர்கள். அவர்கள் பிரதான சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட பூர்வமான அரசினுடைய முதற்கடமை.

தமிழ் மக்களை அரசின் மீது நம்பிக்கைகொள்ள வைப்பதற்கான மிக முக்கிய காலகட்டம் இது. சுமுகமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி அனைவரும் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கும் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லவும் உள்ள முதல் நிபந்தனை இன்று சுற்றிவளைக்கப்பட்டு உள்ள புலிகளை கௌரவமான முறையில் சரணடைய ஏற்பாடு செய்து அவர்களையும் வன்னி முகாம்களில் உள்ள மக்களையும் கௌரவமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவது.

இதனைவிடுத்து அவசர அவசரமாக இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அவர்களை அழிப்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வன்மத்தை ஏற்படுத்தும்.  மேலும் ஏற்கனவே எல்லைப்புறக் கிராமங்களில் பதுங்கி உள்ள புலிகள் சிங்களக் கிராமங்கள் மீதும் தாக்குதளை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. இது 1983யை மீண்டும் நிகழ்த்த வழிககுக்கலாம்.

என்னதான் புலிகள் மக்களைக் கேடயங்களாக பயன்படுத்தி இருந்தாலும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்களை அழிக்க முற்படுவது அரச பயங்கரவாதமாகவே அமையும். ஏற்கனவே ஏற்பட்ட மனித அவலங்களுக்கு அரச படைகளும் சம பொறுப்புடையவர்கள். இன்று அரசு இராணுவ நகர்வில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதால் மற்றுமொரு மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு அரசினுடையது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 35 யாழ்.மாணவர்கள் 3 ‘ஏ’ திறமைச்சித்தி.

sri-lankan-students.jpgக.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று செவ்வாய்கிழமை இணைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் 35 பேருக்கு மூன்று ‘ஏ’ திறமைச்சத்தி கிடைத்துள்ளது.

வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுமங்கலி சிவகுமார் என்ற மாணவி கணிதப்பிரிவில் மூன்று ‘ஏ’ திறமைச் சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் என்ற மாணவன் உயிரியல் பிரிவில் மூன்று ‘ஏ’ சித்திபெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். வர்த்தகப் பிரிவிலும் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் புருசோத்தமக்குருக்கள் ராஜாராம் மூன்று ‘ஏ’ பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். கலைப்பிரிவில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரன் மூன்று ‘ஏ’ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார்.

யாழ்.இந்துக் கல்லூரியில் கணிதப்பிரிவில் 9 பேரும், உயிரியல் பிரிவில் 3 பேரும் மூன்று ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர். வேம்படி மகளிர் கல்லூரியில் கணிதப்பிரிவில் 4 பேரும், உயிரியல் பிரிவில் 3 பேரும், வர்த்தகப்பிரிவில் 2 பேரும் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் ஒருவரும், உயிரில் பிரிவில் 3 பேரும் மூன்று ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கணிதம், உயிரியல், கலை ஆகிய பிரிவுகளில் தலா ஒவ்வொருவரும், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் வர்த்தகப்பிரிவில் ஒருவரும் மூன்று ‘ஏ’ சித்தியும் பெற்றுள்ளனர்.

யாழ். வெள்ள அனர்த்தத்திற்கு அவசர நிதி ஒதுக்கிடு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அனர்த்த நிலமையை சீர்செய்வதற்காக அவசரமாக பத்து இலட்ச ரூபா நிதியை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒதுக்கியுள்ளதாக யாழ். அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூவாயிரம் ரூபாவிற்கு குறைவாக மாதாந்தம் வருமானம் பெறும் மக்களுக்கே இந்த நிதியிலிருந்து சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்து நிலம் ஈரமாகியுள்ள நிலையில் தங்கியுள்ள மக்களுக்கு பிளாஸ்ரிக் விரிப்புக்களை வழங்க அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகரசபைக்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரசபைக்கு புதிதாக இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய் கிழமை இந்த இணையத்தளத்தை மாநகரசபை முதல்வர் வைபவ ரிதியாக ஆரம்பித்து வைத்தார்.

மாநகர சபை ஆணையாளர் மு.சரவணபவ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ் மாநகர சபை இணையத்தளத்தின் முகவரி www.jaffnamc.lk என்பதாகும்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.நகருக்குப் பொறுப்பான படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள உணவகத்தின் பின்புறத்தில் கை;கண்டு ஒன்று காணப்பட்டது.

நேற்று செவ்வாய் கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்தில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுத்திகரிப்பு பணியாளர்கள் கொடுத்த தகவலையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் படையினருக்கு தெரிவியப்படுத்தினர் இதனையடுத்தே இக்குண்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் தமிழர்களின் ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

Angajan_Ramanathanலண்டனில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நேற்று ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்டக் கிளையினரின் ஏற்பாட்டிலும் படையினரின் ஏற்பாட்டிலும் அந்த ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்றன. இப்பேரணிகள் முதலில் தனித்தனியாக ஒழங்கு செய்யப்பட்டு பின்னர் ஒன்றிணைக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பான பேரணி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகளுடன் முற்றவெளிப் பகுதியூடாக யாழ்.பஸ்நிலையத்திற்கு வந்தடைந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இ. அங்கஜன் அங்கு உரையாற்றினார். பின்னர் அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதியூடாக சென்று ஆரியகுளம் சந்தி, ஸ்ரான்லி வீதி வழியாக பேரணி மீண்டும் யாழ்.பஸ்நிலையத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பட்ட நடவடிக்கைக்காக குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பஸ்கள் மூலம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்த நிலையில் இப்பேரணி நடைபெற்றதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழக உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

Vasanthy_Arasaratnam_Prof_UoJஅண்மைக் காலமாக மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவில் நவம்பர் 27ல் இடம்பெற்ற பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களின் தெரிவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை யாழ்-சைவ-வேளாள-ஆண் ஒருவரே பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டு வந்தார். அதற்கு மாறாக பேராசிரியர் ஹுல் 2006ல் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை அச்சுறுத்தலை மேற்கொண்டு பேராசிரியர் ஹுல் ஐ தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்தனர். தற்போது பல்கலைக்கழகக் கவுன்சிலால் மூவர் (பேராசிரியர்கள் வசந்தி அரசரட்ணம் ரட்னஜீவன் ஹூல் என் சண்முகலிங்கம்) தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அவர்களுடைய பெயர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அண்மைக்காலமாக தேசம்நெற் யாழ் பல்கலைக்கழகத்தின் திரைமறைவில் இடம்பெற்ற நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றை வெளிக்கொண்டு வந்ததன் பயனாக என் சண்முகலிங்கம் தவிர்ந்த ஏனைய தகுதியற்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டனர். யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தருக்கான தெரிவில் ஆரம்பத்தில் முன்னணி வேட்பாளர்களாகக் கருதப்பட்ட பேராசிரியர் எஸ் சத்தியசீலன், பேராசிரியர் என் ஞர்னகுமாரன் ஆகியோர் நவம்பர் 27ல் முதல் மூவருக்குள் தெரிவு செய்யப்படவில்லை. யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றுக்கு காரணமானவர்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகள் உப வேந்தராக இருந்த பேராசிரியர் என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவராக உள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணிப் பேராசிரியர்களின் திருவிளையாடல்கள் அம்பலத்திற்கு வந்ததால் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, ஒப்பீட்டளவில் தகுதியான ஒரே வேட்பாளர் ஆனார். அதனால் தேசம்நெற் இன் தொடர்ச்சியான பிரச்சாரங்கள் அவருக்கு சாதகமாக இருந்ததுடன் அரசியல் ரீதியான ஆதரவும் அவருக்கு கிடைத்தது.

உப வேந்தருக்கான தகமை அடிப்படையில், கல்வித் தகமையாக இருந்தாலென்ன நிர்வாக – முகாமைத்துவத் திறனாக இருந்தாலென்ன பேராசிரியர் ஹுல் ஏனைய அனையவர்களைக் காட்டிலும் மிக உச்சத்திலேயே உள்ளார். ஆனால் அவருக்கான அரசியல் ஆதரவு மிகக்கீழ் நிலையிலேயே உள்ளது. ஆனால் கல்வித் தகமை, நிர்வாக – முகாமைத்துவத் திறன் அடிப்படையில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கீழ் நிலையில் (பேராசிரியர் ஹுல் உடன் ஒப்பிடுகையில்) இருந்தபோதும் அவருக்கான அரசியல் ஆதரவு மேல்நிலையில் உள்ளது. அதனால் அவரை யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஆக்குவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் இருந்து போட்டியிட்டவர்களில் அப்பதவிக்கான தகமையைக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டு உள்ள, ஆவணங்கள் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் கரங்களும் கறைபடிந்தவை என்பதனை நிரூபிக்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பல மோசடிகள் மூடி மறைக்கப்படுகின்றன. பல்கலைகழகத்தின் பெயருக்கு நல்லதல்ல என்று கூறி மோசடிகள் தொடர்ச்சியாக மூடிமறைக்கப்பட்டதால் யாழ் பல்கலைக்கழகம் மிகச் சீரழிவுக்கு சென்றுள்ளது. பல்வேறு மட்டங்களிலும் உள்ளவர்கள் மோசடியில் ஈடுபட்டு அவை மூடிமறைக்கப்படும் போது அவர்கள் உயர்நிலைக்குச் செல்லும் போது மேலும் மேலும் மோசடிகளில் ஈடுபட்டு அவற்றை பல்கலைக்கழகத்தின் பெயரைப் பாதுகாப்பதாகக் கூறி மூடிமறைக்கின்றனர். அதனால் பல்கலைக்கழகம் பற்றி தேசம்நெற் இல் வெளிக்கொண்டு வரப்பட்ட விடயங்கள் மிகச்சொற்பமானவையே எனவும் மோசடியும் ஊழல்களும் குவிந்துள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2003ல் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான கணணி வலையமைப்பு மற்றும் பாகங்களை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டார். இவ்வாறான பெரும்தொகைக் கொள்வனவுகள் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையிலுமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் பேராசிரயர் வசந்தி அரசரட்ணம் இந்த விதிமுறைகளை மீறி நேரடியாக M/S Delvon Computers (Pvt) Ltd, என்ற நிறுவனத்துக்கு கொள்வனவுக் கட்டளையை வழங்கி உள்ளார். இந்நிறுவனம் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தர தளபதி ஒருவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொள்வனவு பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையினூடாகவும் மேற்கொள்ளப்படாமையினால் இக்கொள்வனவுக்கான நிதியினை வழங்க நிதிக்குழு தாமதித்தது. அவர்கள் குறிப்பிட்ட கொள்வனவு தொடர்பான கணக்கியல் பதிவுகளில் கேள்விகளை எழுப்பினர். அப்போதைய உப வேந்தர் மோகனதாஸ் இவ்விடயத்தை நிதிக்குழுவிற்கு குறிப்பிட்டு இருந்தார். அதன் பின்னர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் முன்னர் வழங்கிய தொகையைக் குறைத்து புதிய தொகையை வழங்கியதாக தெரியவருகிறது.

மருத்துவ பீடத்திற்கான கணணி வலையமைப்பு மற்றும் அதற்கான பாகங்களைக் கொள்வனவு செய்ய WHO, 963400.00 ரூபாய்களை மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி இருந்தது. ஆனால் பேராசிரியர் வசந்தி அரசரடணம் தனக்கு வழங்கப்பட்ட நிதி வரையறைக்கு பலமடங்கு அதிகமாக கொள்வனவு விதிகளை மீறி நேரடியாக கொள்வனவுக் கட்டளையை வழங்கி இருந்தார். ஆனால் இது கேள்விக்கு உட்படுத்தப்பட்ட போது கொள்வனவுத் தொகை குறைக்கப்பட்டது. அப்படி இருந்துமே அப்போதைய சந்தை நிலையிலும் பார்க்க அதிகமாகவே இருந்தது.
 
இது தொடர்பாக நிதிக்குழுவின் ஒக்ரோபர் 25 2004ல் இடம்பெற்ற 247வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது 2003ல் 1163550.60 ரூபாய்க்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழக விதிமுறைகளையும், ரென்டர்முறைகளையும் மீறி கொள்வனவை மேற்கொண்டதாக அப்போதைய உபவேந்தர் மோகனதாஸ் 247வது நிதிக் குழு கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
 
நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வழங்கிய குறிப்பில் வேலைத்திட்டத்திற்கு ஆன செலவீனம் ரூபாய் 2,080,839.18 ஆல் அதிகரித்து உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதாவது மொத்த செலவீனம் ரூபாய் 2,080,839.18 + 963,400.00  = 3 044 239.18.  வழங்கப்பட்ட நிதிவரையறைக்கு (963400.00 ரூபாய்) அதிகமாகவே பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் செலவீனத்தை மேற்கொண்டார்.

இந்த அதீத செலவீனத்தை மருத்துவ பீடத்தின் தகவல்தொழில் நுட்பத்திற்கு யுனிவசிற்றி கிறான்ட் கொமிசனால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தருமாறு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் கேட்டு இருந்தார்.

Delvon நிறுவனம் கேட்டுக்கொண்ட நிதியை வழங்காமல் ஓராண்டுவரை கூட்டங்களில் விவாதித்து ஒக்ரோபர் 30 2004 ல் இடம்பெற்ற நிதிக் குழுவின் 291வது கூட்டத்தில் பல்கலைக்கழகக் கவுன்சில் (Council Memo 277/17(e)) இது தொடர்பாக பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தை கண்டித்து இருந்தது. எதிர்காலத்தில் இது தொடர்பான அனைத்து விடயங்களும் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் (through Bursar) ரென்டர் முறையினூடாகவுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழகத்தின் சார்பில் Delvon  நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதால் பல்கலைக்கழக நிதிக் குழு பல்வேறு அழுத்தங்களாலும் குறைக்கப்பட்ட ஆனாலும் சந்தை நிலையிலும் அதிகமான கட்டணத்தை நிறுவனத்திற்கு வழங்கியது.

இவ்வாறான மோசடிகள் நிர்வாகச் சீர்கேடுகள் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களிலும் அவற்றின் வளாகங்களிலும் மலிந்து காணப்படுகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் உயர் பதவிகளில் உள்ளவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்ற போது ‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்ற வரைவிலக்கணம் இழக்கப்பட்டுவிடுகின்றது.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழ உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

போரின் போது முல்லை மாவட்டத்தில் உடமைகளை கைவிட்டவர்கள் அவற்றை மீட்டுச்செல்ல அனுமதி.

இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் உடமைகளை கைவிட்டவர்கள் தங்களின் உடமைகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைப் பெறும் விண்ணப்பத்தை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முல்லை மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம், தேவிபுரம், வள்ளிபுரம், இரணைப்பாலை. ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் பொருட்களைக் கைவிட்டவர்களே இவ்வாறான நடைமுறையைக் கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் உரிமையாளர்கள் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய தங்கள் பொருட்களை எடுத்துச்செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து இலங்கை திரும்பிய கலாநிதி விக்கிரமபாகு மீது தாக்குதல்!

Wikramabahu Karunaratnaநவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தின் அதிகாரிகள் பொலிஸார் முன்னிலையில் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. கலாநிதி விக்கிரமபாகுவை வரவேற்பதற்காக கட்சி ஆதரவாளர்களும் மனித உரிமைவாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனித உரிமைவாதிகளும் சட்டத்தரணிகளும் கூடி இருந்ததாகவும் அவர்களுக்கு முன்னிலையிலேயே சீருடை அணிந்த அதிகாரிகள் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

அண்மையில் லண்டன் வந்திருந்த கலாநிதி விக்கிரமபாகு லண்டனில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்விலும் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். மேலும் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் கலாநிதி விக்கிரமபாகு கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் 100,000 பேர்வரை மரணமடைந்ததாகவும் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்து இருந்தார்.

விமானநிலையத்திற்கு வெளியே கலாநிதி விக்கிரமபாகு வரவும் ஒரு டசின் வரையான சீருடை அணிந்த விமானநிலைய அதிகாரிகள் விக்கிரமபாகுவைச் சூழ்ந்து ‘துரோகி’ என முழக்கமிட்டு உள்ளனர். ‘மகிந்தவால் இணைக்கப்பட்ட நாட்டை, துரோகி பிரிக்கப் பார்க்கிறாய்!” என சீருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் முழங்கி உள்ளனர். மேலும் கலாநிதி விக்கிரமபாகு வானில் ஏறி அவ்விடத்தை நீங்கும்வரை இவர்கள் கோசம் எழுப்பி உள்ளனர்.

கலாநிதி விக்கிரமபாகுவின் வருகை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற எம்ரிவி ஊடகவியலாளர் பிரேம் லால் லங்கா ஈ-நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜயசூரிய ஆகியோரும் தாக்கப்பட்டதாக அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

டிசம்பர் 02ல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி ராஜபக்ச உரையாற்ற இருந்ததற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு கலாநிதி விக்கிரமபாகுவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனவும் முக்கிய காரணமாக இருந்ததாக அரச தரப்பில் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்று உள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள லங்கா சாசமாஜக் கட்சி உறுப்பினருடன் தொடர்பு கொண்ட போது கலாநிதி விக்கிரமபாகு மீது எவ்வித தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆனால் அவரைக் காண வந்திருந்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சிருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் சிலர் ‘துரோகி’ என்றும் ‘நாட்டைப் பிரிக்க வந்த துரோகி’ என்ற வகையிலும் கோசங்களை எழுப்பியதாகவும் தெரிவித்தார். கோசங்களை எழுப்பியவர்கள் கலாநிதி விக்கிரமபாகுவை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலினால் வாகனம் மிக மோசமாக சேதமடைந்து உள்ளது.

நவம்பர் 28ல் கலாநிதி விக்கிரமபாகு தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். (இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.) நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற கலாநிதி விக்கிரமபாகு சென்ற கூட்டத்திலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து இருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு உடன் தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்ட போதும் உடன் தொடர்புகொள்ள முடியவில்லை.