Multiple Page/Post

50 ஆண்டுகளாக: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை ஆடும் முறை மாறவில்லை! ஆனால் ஆட்டம் தொடர்கிறது!! – த.ஜெயபாலன் .

கிரேக்கத் தத்துவஞானி சாக்கிரட்டீஸ் தன்னை ஒரு மேதை என்றார். அவர் தான் அவ்வாறு எண்ணியதற்கு என்ன காரணம் என்பதையும் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, “எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியுமாதலால்  நான் ஒரு மேதை – I know that I am intelligent, because I know that I know nothing” என்கிறார் சாக்கிரட்டீஸ். தனக்கு ஒரு விடயம் தெரியாது என்பதை உணர்ந்த ஒருவரே அந்த விடயத்தைத் தேடுவதற்கும் அறிவதற்கும் தூண்டப்படுவார். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வார். ஆனால் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நம்புவவர்களிடம் தேடல் இருக்காது அறிவும் வளராது. இன்றும் சிறந்த விஞ்ஞானியாகக் கருப்படும் ஐசாக் நியூட்டன் கூட எமது மூதாதையர் குறிப்பிட்டது போல கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு என்றே கூறுகின்றரர். இன்னும் கற்பதற்கும் அறிவதற்கும் நிறைந்த விடயங்கள் இருக்கின்றன என்பதையே அது குறிக்கின்றது.

ஆனால் தங்கள், தங்கள் கிணற்றுக்குள் வாழும் தமிழ் தேசிய வாதிகளோ தாங்கள் அனைத்தும் அறிந்துவிட்ட தோரணையில் அறிக்கைவிடுவதும் முடிந்த முடிவாக கருத்துக்களை முன்வைப்பதும் வேடிக்கையாக உள்ளது. இது ஒருவகை அதிமேதாவித்தனக் கோளாறு – superiority complex. பட்டும் இன்னமும் புத்தியில் தெளிவில்லை. சில சமயம் இது இவர்களுக்கு தீர்க்க முடியாத மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம்.

இந்தப் பழமொழி அரசியல் அடிப்படையில் தவறு என்றாலும் தமிழ் தேசியத்திற்கு பொருத்தமாக இருப்பதால் குறிப்பிடுகிறேன். ‘குருடன் பெண்டிலுக்கு அடித்தது போல’ தமிழ் தேசிய வாதிகள் எப்போதாவது சொல்லவது, கத்துவது சரியாக இருந்துவிடுவதும் உண்டு. அதை வைத்துத்தான் அவர்களது அரசியல் பிழைப்பு நடக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு இவர்களால் எப்போதுமே இழப்புத்தான். உயிரை வகைதொகையின்றி இழந்தனர். அளவில்லாத உடைமைகளை இழந்தனர். இப்போது எஞ்சியிருக்கின்ற உரிமைகளை இழக்கின்றனர். பொருளாதாரத்தை இழக்கின்றனர். கல்வியை இழக்கின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை, பொருளாதாரத்தை, கல்வியை அழிக்கின்ற விடயத்தை மிகச்சிரத்தையாக செய்துவருகின்றனர், தமிழ் தேசிய வாதிகள். பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டு மக்களை அழித்தனர். அரசியல் என்பதன் அடிப்படையே இயலாததை இயலுமாக்கும் திறன் – politics is the art of making imposible posible என்பதை உணராமல், தங்களை வளர்க்கும் திறன் என்று புரிந்து வைத்துள்ளனர். இவ்வளவு காலத்தில் இவர்கள் தங்களையும் ஒன்றும் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வைக்கோல் பட்டறையைச் சுற்றிச் சுற்றி வந்து குரைப்பவர்களாகவே உள்ளனர்.

இந்த லட்சணத்தில் மாவை சேனாதிராஜா வாரிசு அரசியலுக்கும் மகனைக் களமிறக்கி உள்ளார். மாவை சேனாதிராஜா ஒன்றும் தன் திறமையால் முன்னுக்கு வந்தவரல்ல. தனக்கு மேலுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட படிப்படியாக முன்னுக்கு நகர்ந்தவர். இதே பாணியில் இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி எப்போது பாடையில் ஏறுவார் தான் எப்போது பதவியேற்கலாம் என்று லண்டனில் இருந்து வந்த சாதிமான் எஸ்.அரவிந்தன் கிளிநொச்சியில் காத்துக்கிடக்கின்றார். இவருக்கு அரசியலுக்கு வர உள்ள ஒரே தகுதி யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையனை தன்னுடைய நண்பர் தங்கமுகுந்தனோடு சேர்ந்து அடித்ததே.

தங்கமோ பித்தளையோ முகுந்தன் யாழ்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாளை மாற்றி வைப்பேன் என்று சன்னதம் ஆடுகின்றார். மே 31 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை யூன் 1இல் எரிக்கப்பட்டது என்று எழுதி நூலக எரிப்பின் சூத்திரதாரிகளான காமினிதிஸ்சநாயக்காவைவும் சிறில் மத்தியூவையும் காப்பாற்ற முனைகின்றார். அ அமிர்தலிங்கம் மே 31 முதல் யூன் 2 வரை நடந்த சம்பவங்களை தொகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் அ.அமிர்தலிங்கத்திற்கே எந்த நாள் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது என்பதில் உறுதி இருக்கவில்லை. அப்போதைய ஈழநாட்டின் தவறான செய்தியின் அடிப்படையிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு தான் தமிழ் தேசியம் புனைவுகளையே வரலாறாக்க கொக்கரிக்கின்றது. இப்படி சொந்த விடயங்களிலேயே விவரம் போதாதவர்கள் தற்போது வெளிவிவகாரம் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர்.

How LTTE killed TULF leader Amirthalingam - NewsIn.Asiaதமிழ் தேசியம் எப்போதும் பிரச்சினைகளைத் தணிக்க அல்லது தீர்த்துவைக்க விரும்புவதில்லை. எப்போதும் முரண்பாடை மோசமடையச் செய்யும் வகையிலேயே செயற்படும். அதற்கு அவர்களது அரசியல் போதாமை முக்கியகாரணம். 1980க்களில் அவர்களுடைய சமன்பாடு ‘எதிரியின் எதிரி, தங்களின் நண்பன்’. இந்த உலுத்துப்போன சமன்பாட்டைத் தான் அவர்கள் இன்றும் கடைப்பிடிக்கின்றனர். இலங்கை அமெரிக்காவின் நண்பன். இந்தியாவின் எதிரி. அதனால் இந்தியாவுக்கு சேவகம் செய்து, இந்தியாவை தமிழர்களின் நண்பனாக்கினால் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா தீர்த்து வைக்கும். இதுதான் அன்று முதல் இன்று வரை தமிழ் தேசியம் பின்பற்றுகின்ற சமன்பாடு.

இந்தியாவின் அரசியல் வாரிசான ராஜீவ் காந்தியயைப் படுகொலை செய்த பின்னரும் கூட இந்தக் கூட்டம் இந்தச் சமன்பாட்டை மாற்றவில்லை. ராஜீவ் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம். ”கள்ளத்தோணிகள், தோட்டக்காட்டான்கள், வடக்கத்தையான்’ என்றெல்லாம் நாங்கள் செல்லமாகத்தான் கூப்பிடுகிறோம்.  மற்றும்படி நாங்களும் நீங்களும் நண்பர்கள் தான். எங்களுக்கு ஒன்றென்றால் தமிழகம் கொந்தளிக்கும்” என்றெல்லாம் இவர்கள் சில பஞ்டயலக் வைத்து அரசியல் செய்ததைவிட இவர்களிடம் ஒரு துளி அரசியல் தெளிவும் இருந்ததில்லை.

சங்கானை நிச்சாமத்தில் சாதியப் போராட்டத்திற்காக குண்டெறிந்த பொழுது அ அமிர்தலிங்கம்  சங்கானையயை சங்ஹாய் ஆக்குகிறார்கள் என்று புலம்பினார். இன்றோ யாழ்ப்பாணத்தில் சீனா பனிப்போர் தொடுக்கிறது என்று முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி அறிக்கைவிடுகின்றார். கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மாறியிருக்கிறார்களே அல்லாமல் அவர்களுடைய அரசியலில் எந்தவித மாற்றமும் இல்லை.

2009இல் தமிழ் தேசியம் முள்ளிவாய்க்காலில் மண்கவ்வியதை அவர்களால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுடைய அரசியல் போதாமையின் விளைவே இது என்பதை அவர்கள் இன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களும் தமிழ் தேசியப் பூநூல் அணிந்த காலம் அது. மதியுரைஞர் பாலசிங்கத்தின் இடத்தை நிரப்ப கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களுக்கு ஐபிசி இல் நேர்முகத் தேர்வுகள் பல நடந்தன. காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து இவர்கள் தமிழ் தேசியத்துக்கு மார்ஸிய மூலாம் பூசினர். பூசிய மூலாம் கொட்டிண்ண, தமிழ் தேசியம் வேகமாகக் கறள்பிடித்தது. இந்த கீ போர்ட் மார்க்ஸிட்டுகள் இன்று கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் ‘ஓர்கானிக்’  வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். வறுமையில் வாழும் மாணவர்களுக்கு கல்வியூட்டுவதே அரசுக்கு துணைபோகும் என்று புரட்சிகர தமிழ் தேசியம் பேசியவர்கள் இன்று, ஓர்கானிக் தமிழ் தேசியப் புரட்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள்,  கீ போர்ட் மார்க்ஸிஸ்டுக்களும் அ.அமிர்தலிங்கம் விட்டுப்போன சமன்பாட்டையே பயன்படுத்துகின்றனர். இந்தச் சமன்பாட்டில் எதிரியும் நண்பர்களும் மாறிவிட்டனர். இலங்கைக்கு இப்போதும் இந்தியா தான் எதிரியாம். அமெரிக்கா உட்பட மேற்குநாடுகளும் இலங்கைக்கு எதிரியாம். சீனா தான் இலங்கையின் நண்பனாம். அதனால் சீனாவுக்கு எதிராக தமிழ் மக்கள் கிழர்ந்து எழுந்து இந்தியாவையும்  அமெரிக்க நேசநாடுகளையும் குசிப்படுத்தினால், அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார்களாம். இதுதான் தமிழ் தேசியவாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் முதல் அனைவரதும் முடிவான நிலைப்பாடு. இந்தப் பின்னணியில் தான் இவர்கள் இப்போது கத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் வைத்துத்தான் தமிழ் தேசியவாதிகள் ஏன் அறிக்கை விடுகின்றனர்; கத்துகின்றனர்; ஏன் அறிக்கைவிடவில்லை; கத்தவில்லை என்பதைப் பார்க்க வேண்டும். வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று முற்று முழுதான பொய்யான தகவலை வெளியிட்டது வேறொன்றுக்கும் அல்ல. அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளையும் இந்தியாவையும் குசிப்படுத்தி அவர்களுடைய தூதரகங்களில் கவனத்தைப் பெறவே.

உலகின் செல்வந்த நாடுகளான அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளின் கூட்டத்தொடர் பிரித்தானியாவின் சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசமான கோன்வோலில் நடைபெறுகின்றது. அங்கு  வைத்துத் தான் இந்த நேசநாடுகள் ஒரு பில்லியன் (பத்துக்கோடி) வக்சீன்களை வறிய நாடுகளுக்கு வழங்க முன்வந்தன. இந்த உதவியயைச் செய்ய முன் வந்தமைக்கு காரணமே எங்கே சீனா இந்நாடுகளுக்கு வக்சீனை வழங்கி ராஜதந்திர ரீதியில் தங்களை தோற்கடித்துவிடும் என்ற பயத்தினால் என்பதை பிரித்தானியாவின் முன்னணிப் பொருளியல் பத்திரிகையான ‘பினான்சியல் ரைம்ஸ்’ நேற்று முன்பக்கத்தின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இன்னும் பல ஊடகங்களும் இதனை வெளியிட்டு இருந்தன. இந்த செல்வந்த நாடுகளின் மாநாட்டில் சீனா இடம்பெறாத போதும், இம்மாநாட்டில் சீனாவே ஆளுமை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்க ஒன்றியம் இந்தச் செல்வந்த நாடுகளின் உதவியயே வரவேற்றிருந்த போதும், இந்நாடுகளின் போக்கை ‘தடுப்பூசி இனவாதம்’ என பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கண்டித்து இருந்தது. நோயைக் கட்டுப்படுத்தும் வக்சீனை ஏனைய நாடுகள் உருவாக்கத் தடைவிதித்துவரும் இந்தச் செல்வந்த நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டதால் பத்துவீதத்தையே வறிய நாடுகளுக்கு கையளிக்க முன்வந்துள்ளன. அதுவும் எப்போது இந்நாடுகளைச் சென்றடையும் என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. சீனாவும் ரஸ்யாவும் தங்களது வக்சீனை வறிய நாடுகளுக்கு வழங்கி வருவதால் தான் இந்தச் செல்வந்த நாடுகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள குறைந்தளவு வக்சீனை அதுவும் காலதாமதமாக வழங்க முன்வந்தன.

யாழ்ப்பாணத்தில் இந்தியா – சீனா இடையே பனிப்போருக்கான வாய்ப்பு என்று அனந்தி சசிதரன் யூன் 11இல் வலம்புரியில் வெளியிட்ட கருத்துக்களும் இந்தப் பின்னணியிலேயே நோக்கப்பட வேண்டும். செல்வந்த நாடுகளின் தூதராலயங்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன், அனந்தி சசிதரன் போன்ற விபரமும் விவேகமுமற்றவர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளில் தங்களுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.

Selvam Adaikalanathan - Photos | Facebookதிருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கப்படுவது தொடர்பிலும் திருச்சியில் விடுதலை செய்யுங்கள் அல்லது எங்களை கருணைக்கொலை செய்யுங்கள் என்று கூறும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் தமிழ் தேசியவாதிகள் மௌனமாக இருப்பதும், இதனால் தான். இந்த அகதிகளோடு தொலைபேசியில் உரையாடியதாகக் கூறும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படையாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சமன்பாட்டில் அரசியல் விபரமும் விவேகமுமற்ற அ அமிர்தலிங்கம் முதல்  செல்வம் அடைக்கலநாதன் வரை பிரபாகரனின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு உட்பட எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் இந்தியாவின் தாளத்துக்கு தப்பாமல் ஆட்டத்தை தொடர்கின்றனர்.
_._._._._._
அகர வரிசையில் அனந்தி முதல் உயிர்மெய் வரிசையில் கடைசியில் வரும் விக்கினேஸ்வரன் வரை தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் தாங்கள் வாழும் கிணற்றுக்கு வெளியே பெரியதொரு உலகம் இருக்கின்றது என்பதை ஒரு போதும் எண்ணிப் பார்க்காமலேயே வாழ்ந்தும் கத்தியும் பழகிவிட்டனர். இந்த இருவருக்கும் இடையேதான் மற்றைய தமிழ் தேசியவாதிகளும் தங்கள் தங்கள் கிணற்றுக்குள் வாழ்ந்தும் கத்தியும் வருகின்றனர். இவர்களது கத்தல்களையும் புலம்பல்களையும் காதுகுத்து மற்றும் மரணச் செய்திகளுக்கிடையே வெளியிடுவதற்கு சில ஊடகங்கள்: உதயன், வலம்புரி, காலைக்கதிர், லங்காசிறி ஜப்னா நியூஸ் என்று காத்திருக்கும் அளவுக்குத் தான் தமிழ் தேசியத்தின் இருத்தல் இருக்கின்றது.

 

தமிழ் தேசியத்துக்கு கிடைத்த ஒரேயொரு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தலைவர் துரத்திவிட்டதும் அவர் இயற்கை எய்தியதும் வரலாறாகிப் போனபின் அந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. அந்த இடத்தை நிரப்ப பலர் போட்டி போட்டாலும் யாராலும் அதனை நிரப்ப முடியவில்லை. இப்போது அதற்குத் தேவையும் இல்லாமல் போய்விட்டது. தமிழ் தேசியம் இப்போது அல்ஸமியர் எனும் ஞாபகமறதி நோய் (தமிழில் அறளைபேர்ந்துவிட்டது என்றும் சொல்வார்கள்) க்கு ஆளாகிவிட்டது. அவர்களுக்கு பழையதும் ஞாபகம் இருக்காது. தாங்கள் என்ன கதைக்கின்றோம் என்பதும் ஞாபகம் இருக்காது. அதனால் அவர்கள் அரசியலில் இருந்து சுகவீன விடுமுறையில் செல்வது அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.

“முதலில் காசை கட்டு – காசு இல்லாவிட்டால் தொலைக்காட்சியை பார்த்து படி – அவர் பிரபலமான வாத்தி அவரோட வகுப்புக்கு 1500 தரனும்.” – இலவசக்கல்வியின் தரத்தை கெடுக்கிறதா..? zoom மூலமான கல்வி !

அண்மைய நாட்களில்  இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக முழுமையான இலங்கையும் ஏதோ ஒரு வகையில் முடங்கிப்போய் இருக்கின்றது. முக்கியமாக இந்த காலகட்டங்களில் பாடசாலைகள் நிறுத்தப்பட்டுள்ளமையானது இணைய வழிக் கல்விக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. பாடசாலை நடக்கிறதோ இல்லையோ அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்ற தரம் 5 பரீட்சை,  தரம் 11 பரீட்சை,  தரம்13 பரீட்சைகள் என அனைத்துமே தவறாத நேரத்தில் முறையாக நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

இணையம் மூலமாக கல்வி கற்றுக் கொள்ளுங்கள்,  தொலைக்காட்சி மூலமாக கல்வி கற்றுக் கொள்ளுங்கள்,  உங்களிடம் இணைய தொலைபேசி – தொலைக்காட்சி வசதி இல்லாவிடில் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்துங்கள் என்றெல்லாம் அரசு ஏதோ ஒரு வகையில் தன்னுடைய கல்வி சார்ந்த நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை ஒரு இலவச கல்வி வழங்கும் நாடு என்கின்ற அடிப்படையில் தன்னுடைய கல்வி நடவடிக்கைகளை ஏதோ ஒரு வகை இலவசமாக கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து கொண்டே இருக்கின்றது. ஆரோக்கியமானது தான்.

பரீட்சைகள் – பாடத்திட்டங்கள் தொடர்பான விவாதத்திற்கான கட்டுரை அல்ல இது. தென்னாசியாவின் கல்வியறிவு வீதம் அதிகம் உடைய நாடுகளில் ஒன்றாக இலங்கை தனிச்சிறப்பு பெற்று இருக்கின்ற நிலையில் அதற்கான அடிப்படைக் காரணம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன இலவசக் கல்வித் திட்டமேயாகும். இலங்கையின் நகர்ப்புறங்கள் தொடங்கி கடைமட்ட கிராமம் வரை இன்றும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் உள்ளன. ஆக இலவசக் கல்வியை பொருட்டு குறைசொல்ல முடியாத ஒரு நிலையில் எங்களுடைய நாடு இருக்கின்றது.  மறுக்கமுடியாத உண்மை.
SC stays HC verdict asking schools to provide gadgets, internet to poor students | India News - Times of India
விடயம் அதுவல்ல. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்நிலை வகுப்புகள் (zoom) ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கடந்த வருடமே இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துவிட்டது இணையவழிக் கல்வி திட்டம் மிகப்பெரும் தோல்வியடைந்த ஒரு திட்டமாக இலங்கையில் இருக்கின்றது என. முக்கியமாக கிராமங்களில் வலையமைப்பு வசதிகள் முறையாக சென்றடையாமை, பல ஏழை சிறுவர்களின் வீடுகளில் தொலைபேசி இன்மை, எனப் பல காரணங்களை குறிப்பிட்டு ஆசிரியர் சங்கம் அந்த தகவலை வெளியிட்டிருந்தது. எனினும் தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி அமைச்சின்  கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன – இன்றும் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் இலங்கையின் தொலைக்காட்சி மூலமான கற்பித்தல் முறைமை கூட 60 வீதம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த வருடம் அறிவித்துள்ளது. எனவே இந்த இணைய வழி கல்வி மற்றும் தொலைக்காட்சி கல்வி என்பன தொடர்பாக கல்வி அமைச்சு மேலதிகமான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான முறையான திட்டங்களை அமுல்படுத்தும் என்பதில் சந்தேகம் ஒன்றுமில்லை. ஆக ஏதோ ஒரு வகையில் அரசின் இணைய வழிக்கல்வி திட்டங்கள் தோல்லியடைந்துள்ள நிலையில் ஒழுங்கான கல்வியை பெற மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களின் இணையவழி – நிகழ்நிலை வகுப்புக்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
உண்மையிலேயே இணைய வழி மூலமாக பாடசாலைகளில் அதிகம் கற்பிக்க முடிவதில்லை என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். பாடசாலை குறிப்பிடக்கூடிய தவணைகளுக்குள் பாடத்திட்டங்களை முடித்து விட வேண்டிய தேவை அதிகம் காணப்படுகின்றது. எனவே பாடத்திட்டங்களை முடிக்காவிட்டால் பாடசாலை ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டிய உயர் அதிகாரிகள் பலர். எனவே பாடசாலையை பொறுத்தவரையில் ஆசிரியர்கள் ஓட்டமும் நடையுமாகவே கற்பிக்க வேண்டிய தேவை இன்றைய காலங்களில் அதிகம் இருக்கின்றது. முன்னைய காலங்களை காட்டிலும் இன்றைய நிலையில் பாடத்திட்டங்களின் அளவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் கொரோனா காரணமான விடுமுறையும் அதிகரித்துள்ளது.  வேறு வழி இல்லை ஆசிரியர்கள் மிக வேகமாக கற்பிக்க வேண்டிய தேவை இன்னும் அதிகரித்துள்ளது.  அப்படியானால் மாணவர்கள் வேறு வழியை தான் தேட வேண்டும். இந்த நிலையில் மாணவர்கள் பணம் கட்டியாவது கற்போம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். எனினும் இதனை பல தனியார் கல்வி நிலையங்கள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திவிடுகின்றனர்.
online class 1200
இலங்கை ஒரு இலவசக்கல்வி வழங்கும் நாடு என்ற அடிப்படையில் ஒரு பணக்காரனின் வீட்டு பிள்ளையும் ஒரு ஏழையின் பிள்ளையும் சமமாகவே பாடசாலைகளில் பெரும்பாலும் நடத்தப்பட்டு கற்பிக்கப்படுகின்றனர். எனவே வறுமை இலங்கையின் கடைக்கோடி கிராமம் மாணவர்களின் கல்வியை கூட பாதித்தது கிடையாது. ஆனால் இந்த இணைய வழி கல்வி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஏதோ ஒரு வகையில் இலங்கையின் பாடசாலை மாணவர்கள் கல்வி தொடர்பான ஒரு விதமான மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக வறுமை இந்த இணைய வழிக் கல்விக்கு மிகப்பெரும் தடையாக உள்ளது. தொலைபேசி ஏழை மாணவர்கள் எல்லோர் வீடுகளிலும் இருப்பது கிடையாது. மேலும் தொலை பேசி இருந்தால் கூட அந்த தொலைபேசிகளை எப்படி பாவித்து இந்த இணைய வழி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது மாணவர்களுக்கும் தெரியாது அவர்கள் சார்ந்த பெற்றோருக்கும் தெரியாது. இது மிகப் பெரும் குறை. அடுத்த தலைமுறைகளில் இந்த பிரச்சனை பெரிதாக இருக்காது. ஆனால் இன்றைய தேதிக்கு இது ஒரு பெரும் பிரச்சனை தான்.
நாள் கூலிக்காக ஓடிக்கொண்டு அந்த வருமானத்தில் தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கின்ற பெற்றோர்களுக்கு இந்த இணைய வழிக் கல்வி மிகப் பெரும் சுமையினையும் மன உளைச்சலையும் வழங்குகின்றது. இந்த இணைய வழி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன சில ஆசிரியர்கள் ஆரோக்கியமான வழியில் இலவசமாக கல்வியை வழங்குகின்றனர். உண்மைதான் அது நேரம் அறிந்து செய்யப்படுகின்ற உதவி வரவேற்கத்தக்கது. அதுபோல கற்பிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை பெற்று மாணவர்களுக்கு கல்வியை வழங்குகின்ற ஒரு சில ஆசிரியர்களின் சேவையும் பாராட்டத்தக்கது. இங்கு பேசுபொருள் இவர்களும் அல்ல.
அண்மையில் என்னுடைய பக்கத்து வீட்டு பையன் ஒருவனின் தந்தை என்னிடம் பேசும்போது கூறியது “நாங்களே நாள் கூலிக்காக வேலை செய்து உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம். மகள் 13 படிக்கிறாள். போன்ல தான் ஏதோ படிக்கனுமாம் என்று சொல்லி பெட்டை  கேட்டதால பாடசாலை லீவு விட்டதும் அந்த டிஸ்பிலே உடைஞ்ச போன கிடந்த கொஞ்சம் காசு போட்டு திருத்தி கொடுத்தன். சரி இனிமே மகள் படிக்கலாம் என்டு நினைச்சா – இந்த இன்டர்நெட் வகுப்புக்காக மாசம் 5000 க்கு மேல் கேட்குறாங்கள். தொடக்கம் மூவாயிரம் அப்படித்தான் காசு இருந்தது. அது கட்டவே கஷ்டம் இப்ப இன்னும் ஒரு கிளாஸ் மேலதிகமாக போகுது. பயணத் தடை காலத்துல அந்த 5,000 ரூபாய்க்கு நான் எங்க தம்பி போவேன். கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை அந்தப் பாடசாலையை திறந்தா கொஞ்சம் நிம்மதியா தானும் இருக்கலாம்.” என ஒரு வேதனை தோய்ந்த குரலில் கூறினார்.
பிறகு மேலதிகமாக விசாரித்தபோது தெரிந்தது அந்த மாணவி வழமையாக போகின்ற தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் தான் அந்த வகுப்பை செய்கிறார்களாம். அந்த மாணவி தரம் 11 இல் அந்த தனியார் கல்வி நிலையத்திலேயே படித்திருந்தாள். அதுபோல 12ஆம் தரம் வந்ததும் தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களாக அவள் அங்கு தான் படித்துக் கொண்டிருக்கிறாள். சரி அந்த மாணவி அங்கே தானே படிக்கிறார். அதாவது கடந்த பல வருடங்களாக அந்த மாணவி அந்த கல்வி நிலையத்திலேயே படித்து அந்த கல்வி நிலையத்திற்கு என பல ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து இருக்கிறாள். அவளை தன்னுடைய மாணவியாக அந்தக் கல்வி நிலையம் நினைத்து அரவணைத்திருக்க வேண்டியது அவர்களுடைய கடமை. மாறாக குடும்ப நிலையை கூறி அந்த மாணவி இந்த மாத வகுப்புக்கான பணம் கட்ட முடியாது என கூறியபோது அந்த மாணவியை குறித்த தரம் 13 மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையத்தின் WhatsApp குழுமத்தில் இருந்து நீக்கியுள்ளதுடன் பணத்தைத் திரட்டி முடிய அழைப்பை ஏற்படுத்துங்கள் எனவும் கூறியுள்ளனர்.
 இதுதான் இன்றைய தேதியில் இணைய வழிக் கற்பித்தலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் செய்கின்ற வேலை. சுதந்திரத்திற்கு பின்னரான  இலங்கையை பொறுத்தவரை இன்று வரை தரமிழகாக்காது காணப்படுகின்ற ஒரு சில விடயங்களில் கல்வியும் ஒன்று. ஆனால் இந்த இணைய வழி கல்வி மூலமாக அந்த தரம் இழக்கப்பட்டு விடுமோ என்கின்ற அச்சம் மேலோங்குகிறது. தனித்து அந்த ஒரு மாணவிக்கு மட்டுமே நடக்கின்ற விடயம் அல்ல இது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு பல ஆயிரம் ஏழை மாணவர்கள் உள்ளாகின்றனர் இதுவே உண்மை.
வருடம் முழுவதும் தனியார் கல்வி நிலையங்களில் மாதப்பணம் , கருத்தரங்குக்கான பணம் என மேலும் அதிக அளவில் உழைத்துக் கொள்கிறார்கள் தானே இந்த இடர் காலங்களிலாவது கூலித் தொழில் செய்யும் குடும்பங்களின் நிலையை உணர்ந்து ஓரளவுக்காவது தொகையை குறைத்து வகுப்புகளை செய்கின்ற மனச்சாட்சி உடையவர்களாக குறித்த ஆசிரியர்கள் இல்லை. சொல்லப்போனால் இன்று ஆசிரியர்களாக இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கானோரை உருவாக்கியது இலங்கையின் இலவசக் கல்வி என்பதை மறந்துவிட்டவர்களாகவே இந்த இணைய வழிக் கல்விக்காக அதிக பணம் பெறும் ஆசிரியர்கள் செயற்படுகின்றனர்.
இன்னும் சில இடங்களில் இணையவழி நிகழ்நிலை வகுப்புக்காக இணைகின்ற போது பொது வெளியில் வைத்து பணம் கட்டாத மாணவர்களின் பெயர்களை வாசித்து அவர்களை பணம் கட்டும் வரை குழுமத்திலிருந்து விலக்குவதாக கூறுகின்ற கொடுமைகளும் அரங்கேறுகின்றன. இங்கு இரண்டு விதமான பிரச்சினைகள் மாணவர்களை மிகவும் தாக்கி விடுகின்றன.இந்த இணையக்கல்வி  பணம் நோக்கி இந்த சமூகம் ஓட வேண்டும் என உந்துவதுடன் பணம் இல்லாதவர்கள் படிப்பதற்கு தகுதியில்லாதவர்கள் என்ற சிந்தனையையும் மாணவர்களிடையே விளைத்து விடுகின்றது என்பதே உண்மை.
சில இணைய வகுப்புக்களில் 3000 நான்காயிரம் என்றெல்லாம் மாணவர்கள் படிக்கின்றனர். பாவம் ஒரு சில ஏழை மாணவர்கள் பங்கு பெறுவதால் தான் அவர்களுக்கு உழைப்பு இல்லாமல் போய்விட போகிறது. சில ஆசிரியர்களுடைய நியாயப்படுத்தல் வாதங்கள் நீங்களெல்லாம் ஆசிரியர்களா..? என்று சிந்திக்க வைத்து விடுகின்றது.
என்னிடம் பேசிய அந்த கூலித்தொழில் செய்கின்ற தந்தையின் மகள் கற்கின்ற கல்வி நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி இருந்தேன். பணம் எவ்வளவு எனக்கேட்டிருந்ததுடன் இல்லாத பிள்ளை தானே ஒரு பிள்ளையை இலவசமாக இணைத்துக் கொள்வதால் என்ன நடந்துவிடப் போகிறது என கேட்டேன். அந்த நிர்வாகி என்ன நினைத்தாரோ தெரியாது. ஒருவிதமான அதிகாரத் தொனியில் கதைக்க ஆரம்பித்தார். “ஒரு நிகழ்நிலை வகுப்புக்காக நாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது இங்கு யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு ஆசிரியர்களும் மிகப் பிரபலமான ஆசிரியர்கள். அவர்கள் கேட்கின்ற தொகையை நாங்கள் வழங்கியே ஆகவேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளும் இப்படி வறுமை வறுமை என கூறினால் நாங்கள் கல்வி நிலையத்தை இழுத்து மூடிவிட்டு செல்ல வேண்டியதுதான். அதுதான் பாடசாலைகள் இலவச வகுப்புகள் நடக்கின்றன தானே – மேலதிகமாக தொலைக்காட்சி வகுப்புகளும் நடக்கின்றன தானே அவற்றில் உங்கள் பிள்ளைகளை இணைத்துக்கொள்ள சொல்லுங்கள்.” என கோபமாக கூறிவிட்டு என் நம்பரையே ப்ளோக் செய்துவிட்டார் அந்தக் கல்வி கற்ற – கற்பிக்கின்ற பிரஜை. இவர்களிடம் என்னத்தைச் சொல்லி நிலையை ஏற்க வைப்பது…?
என்னுடைய வாதம் வகுப்புகளுக்கான பணம் வாங்கக் கூடாது என்பதல்ல. நியாயமான அளவு மனச்சாட்சியின் படியாக நிதியை அறவிடுங்கள் என்பதே என்னுடைய வாதம். தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்ற காலங்களில் மாணவர்களின் தொகை தேவை. ஆனால் இணையவழிக் கல்வி காலங்களில் மாணவர்களின் பணம்தான் தேவையாக இருக்கிறது பலருக்கு. அன்றாடம் வேலைக்கு சென்று உழைத்து ஆயிரம் ரூபாய் நாட்கூலி பெற்றால்ல்தான் இலங்கையில்  அதிகமான குடும்பங்களில் அடுப்பு எரியும். அந்த ஆயிரம் ரூபாயில் தான் மாணவர்களின் கல்விச் செலவுகள் வேறு.  ஆனால் இன்று பயண தடை என நாடு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக முடங்கி இருக்கின்றது. வேலை வாய்ப்புகள் இல்லை. பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்படியாக பல பிரச்சினைகள் அவர்களுக்கு.  சரி அரசாங்கம் கொடுத்த 5000 ரூபாய் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால் கூட
“அவர் பிரபலமான ஆசிரியராம்..; அவருடைய ஒரு வகுப்புக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வருகின்றார்கள். அப்படியான அவர் போல ஒரு மூன்று ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கான தொகை 5,000 எனக்கூறி அரசாங்கம் கொடுத்த அந்த 5000 குடும்பத்தில் ஒரு மாணவனின் படிப்புகாகவே செலவழிந்து விடுகிறது. இங்கு இருப்பவர்கள் கட்டிவிடுவார்கள் அது பிரச்சனை இலலை..: இல்லாதவனும் இல்லாதவனின் பிள்ளைகளும் என்ன செய்வார்கள் என்பது தான் என்னுடைய ஆதங்கத்திற்கான அடிப்படை காரணம்.
கடந்த மாதம் ஒரு வகையில் சேர்த்து வைத்திருந்த பணத்தை கட்டிய மாணவனால் இந்த மாதம் பணத்தை கட்ட முடியவில்லை. உண்மைதான் பயணத்தடை அவனால் கட்ட முடியாது. தந்தை நாட் கூலி. பாவம்  பிள்ளை என்ன செய்யும்..? மாணவன் தொடர்பு கொண்டு கேட்டால் பணம் செலுத்திய ஆதாரத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் அப்பொழுதுதான் நிகழ்நிலை வகுப்புக்கான ID password , அனுப்புவோம் என்று கூறுமளவிற்கு ஆசிரியர்கள் மனச் சாட்சி இல்லாது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
 இதே நாட்டில்தான் யுத்த காலங்களில் தன் உயிரையும் பணயம் வைத்து நம் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியர்கள் வாழ்ந்தார்கள். வீட்டில் பிரச்சனை என்பதால் தன்னுடைய வீட்டிலேயே மாணவர்களை அழைத்துச் சென்று தன் செலவிலேயே படிப்பித்த ஆயிரம் ஆசிரியர்கள் வாழ்ந்த நாடு இது. இன்று உயர் பதவியில் இருக்க கூடிய ஒவ்வொருவரும் இதுபோன்ற சுயநலமற்ற யாரோ ஒரு ஆசிரியரை சரி சந்தித்து இருப்பார்கள். அவர்களுடைய தியாகத்தினால் தான் இன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆசிரியர்களாக இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்கள் உங்களிடம் அதிக அளவிலான தொகையை கேட்டு உங்களை விரட்டி இருந்தால் உங்களால் இன்றைய நிலையை எட்டி இருக்க முடியுமா என்பதை சற்று சிந்தனை செய்து பாருங்கள்.
முதலில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். அடுத்த மனிதருடைய பிரச்சினையை சிந்தியுங்கள். தனியார் கல்வி நிலையங்கள் மீது அவ்வளவு காழ்புணர்ச்சி இருக்குமாயின் – அறவிடப்படும் பணம் அதிகமாக இருக்குமாயின் உங்களுடைய பிள்ளைகளை பாடசாலைகளில் நடக்கும் இணைய வழிக் கல்விக்கே  அனுப்புங்கள் என இந்த இணைய வழிக் கல்வியில் காசு பறிக்கும் ஆசிரியர்கள் ஏதோ நியாயம் கதைப்பது போல கூறிவிடுகின்றனர்.
எப்படியாவது கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என எண்ணி  வேறு வழியை தேடி வரும் மாணவர்கள் இவ்வாறான தனியார் இணையவழிக் கல்விகளில் இணைந்து கொள்கின்றனர். அவர்களின் கல்வி மீதான ஆர்வத்தை புரிந்து கொண்டு இந்த இணைய வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கொஞ்சம் சலுகை கொடுக்க முன்வரவேண்டும். காசு தானே. கொரோனா பயணத்தடை காலம் முடிவடைய சேர்த்துக் கொள்ளலாம். இன்றைய சூழலில் இவர்களின் நிலையை அறிந்து ஓரளவுக்காவது மனச்சாட்சியுடன் செயற்படுங்கள். கல்வி ஒருவிதமான புனிதப் பணி போன்றது தான். அதற்காக இலவசமாக கற்பியுங்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. ஏழ்மையான குடும்பங்கள் தான் இங்கு அதிகம் உள்ளன. அவர்கள் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்துங்கள். உண்மையிலேயே மூன்று பாடங்களுக்காக 5000 ரூபாய் வாங்குவதெல்லாம் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. மனசாட்சிக்கு பயப்படுங்கள். பணம்  செலுத்தக்கூடிய மாணவர்களிடமிருந்து நீங்கள் குறித்த தொகையை வாங்குகின்ற அதே நேரம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட- பணம் இல்லாத மாணவர்கள் மீது குறித்த தொகையின் அரைவாசியை அறவிடுவதற்கான முன்வாருங்கள். போதுமானது.
 இணையவழிக் கல்வி தொடர்பாக புறுபுறுத்து கொண்டு இருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு – கோயில்களிலும் தேவையற்ற ஆடம்பரங்களுக்காகவும் எவ்வளவோ கொட்டித் தீர்க்கின்றோம். முடிந்தால் உங்கள் அயலில் உள்ள ஏழை மாணவர்களின் இணைய வழிக் கல்விக்கான ஏதாவது உதவிகளை செய்ய முன்வாருங்கள். உங்கள் வீடுகளில் பாவிக்கப்படாது பூட்டி வைத்தபடி சிறிய பழுதுகளுடன்  இருக்கக்கூடிய அண்ட்ராய்ட் போன்களை  உங்கள் அயலில் இருக்கக்கூடிய ஏழைச் சிறுவர்களுக்கு திருத்திக் கொடுக்க முற்படுங்கள். அவர்களுக்கான டேடாகார்ட் வசதிகளை செய்து கொடுங்கள்.
மனிதர்களாக இணைவோம் .
எல்லாம் ஒரு நாளில் அழிந்துவிடும்.
இங்கே எஞ்சி நிற்கப் போவது மனிதம்  மட்டுமே. சிந்தனை செய் மனமே. 

ஜோர்ஜ் பிளொய்ட்டின் கொலையை உலகுக்கு காட்டிய 18வயுது யுவதிக்கு உலகின் தலைசிறந்த  விருதான புலிட்சர் விருது !

சினிமாவுக்கு வழங்கப்படும் ஒஸ்கார் விருதை போல ஊடக, புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் புலிட்சர் விருது, அமெரிக்கா ஊடகவியலாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912 ஆம் ஆண்டு முதல் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது. உலகின் தலைசிறந்த  விருதுகளுள் ஒன்றான இந்த விருது இவ்வருடம்  அமெரிக்க கறுப்பினத்தவர் ஜோர்ஜ் பிளொய்ட் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கு அடையாளம் காட்டிய 18 வயது யுவதிக்கு 2021 ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்படவுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக  உயர்ந்த விருது அறிவிப்பு! - Tamil News - IndiaGlitz.com

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020 மே 25 ஆம் திகதி ஜோர்ஜ் பிளொய்ட் (46) என்ற கறுப்பினத்தவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்த டெர்ரக் சாவின் (44) என்ற காவல்துறை அதிகாரி, அவரை மண்டியிடச் செய்து கழுத்தில் முழங்காலை வைத்து பலமாக அழுத்தினார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளொய்ட் உயிரிழந்தார்.

ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக  உயர்ந்த விருது அறிவிப்பு! - Tamil News - IndiaGlitz.com

இந்த சம்பவத்தின் அமெரிக்காவின் பல இடங்களில் போராட்டம் வெடித்ததுடன், பல நாடுகளிலிருந்து கண்டனங்கள் வலுத்தன. சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையான வீடியோவை எடுத்த பெண்ணுக்கு கிடைத்த  உயரிய கவுரவம் | Pulitzer Honour For Teen Who Courageously Recorded George  Floyd Murder ...

இந்த கொலை சம்பவத்தை அப்போது 17 வயது யுவதியான டார்னெல்லா ஃபிரேசியர் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜோர்ஜ் பிளொய்டின் கொலை, வெளி உலகிற்கு தெரியவருவதற்கு அக்காணொளி மிக முக்கியமான காரணமானது.

உலகம் முழுவதும் பரவிய இந்த காணொளி, இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இளம்பெண் டார்னெல்லா பிரேஸரை பாராட்டும் விதமாக அவருக்கு சிறப்பு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

5 ஆம் வகுப்பு முதல்  12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வரை பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சாமியார் – சாமியாருக்கு உதவிய ஆசிரியர்கள் !

இந்தியாவின் தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது, இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த இவர் 30 வருடங்களுக்கு முன்பு பிழைப்புதேடி சென்னை வந்தார்.

காவி உடை அணிந்து பூஜைகள் செய்து வந்த நிலையில், சிவசங்கர் பாபா என தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு ஆன்மீக உரையாற்ற ஆரம்பித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யாகவா முனிவருடன் நடந்த விவாதத்தில் கைகலப்பான வீடியோ காட்சி பரபரப்பானதையடுத்து, சில தனியார் தொலைக்காட்சிகளில் ஆன்மிக செற்பொழிவின் மூலம் பிரபலமானார்.

அரசியல் தொடர்புகள் மூலம் தன் செல்வாக்கை உயர்த்திக்கொண்ட சிவசங்கர் பாபா, கேளம்பாக்கம் அருகே சுஷில் என்ற பக்தர் வழங்கிய நிலத்தில், ராமராஜ்ஜியம் என்ற பெயரில் ஒரு நகரை உருவாக்கினார். அதில் நிலத்தை தானமாக வழங்கியவரின் பெயரையும், தனது அவதாரத்தின் பெயரையும் இணைத்து சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்ற ஆசிரம பள்ளியை நிறுவி நடத்தி வருகிறார்.

பாலியல் புகாரில் சிக்கிய குருஜி! யார் இந்த சிவசங்கர் பாபா!?நடிகர் ரஜினியின் பண்ணை வீடு அருகே சுமார் 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் பக்தர்கள் என்ற பெயரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 30 ஆண்டுகளாக தன்னை கடவுளின் அவதாரம் எனக் கூறி வரும் சிவசங்கர் பாபா, ஆனந்த நடனம் ஆடிய போதெல்லாம் அவரை கடவுளின் அவதாரமாக நினைத்து வணங்கி வந்தனர்.

இந்த நிலையில்தான் அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் அவர் மீது பரபரப்பு பாலியல் புகார்களை கூறியுள்ளனர். 5 ஆம் வகுப்பு முதல்  12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வரை பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் தங்கள் புகாரில் குற்றம்சாட்டியுள்ளனர். ஆன்மிகம் என்ற போர்வையில், தன்னை கடவுள் கிருஷ்ணர் என்று கூறிக் கொண்டும் தான் குறிவைக்கம் மாணவியை கோபிகா என்று கூறியும், சிவசங்கர் பாபா இந்த கொடூர செயல்களை அரங்கேற்றி வருவதாக மாணவி சமூகவலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு குளிர்பானம் என்ற பெயரில் மதுபானங்களை கொடுத்து அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை தாம் நேரடியாக பார்த்ததாகவும் மாணவி தமது புகாரில் கூறியுள்ளார். சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் கூறிய அடுக்கடுக்கான புகார்கள் சமூகவலைதளங்களில் பூதாகரமாக வெடித்ததையடுத்து, முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் திகதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார்.

அடுத்தநாள் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தினார். அடுத்தகட்டமாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆசிரமத்தில் சிவசங்கர்பாபா இல்லாத நிலையில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வருகின்ற 11ம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேர் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மனு அனுப்பியுள்ளனர். எனினும் இன்றைய விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகத்துக்கே கலாச்சாரத்தை கொடுத்தோம், மொழிகளை கொடுத்தோம் என வீண் தம்பட்டம் அடிப்பதை விடுத்து தமிழ்நாட்டு புத்திஜீவிகள் முதலில் தங்கள் சார்ந்த சமூகத்தை திருத்த முன்வரவேண்டும். கடவுளின் பெயரால் போலிசாமியார்கள் போடுகின்ற ஆட்டம் அளவுக்கதிகம். தெரிந்த ஒரு சாமியார் தான் இவர். தெரியாத ஆயிரம் சாமியார்களும் உள்ளனர்.

பார்ப்போம் என்ன செய்யப்போகிறார்கள் என்று..!

“கொரோனா பரவலையடுத்து அதிகரித்துள்ள இனவெறித் தாக்குதல்கள் ” – ஐரோப்பிய ஒன்றியம்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மனித உரிமை மீறல், இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் போன்றவை அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில்,

“இந்த கொரோனா காலம் சமநிலையற்ற போக்கை அனைத்துத் துறைகளிலும் உருவாக்கியுள்ளது. சமூகத்தில் பலவீனமானவர்கள் மேலும் பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா  ஊரடங்கால் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மேலும், மனித உரிமை மீறல், இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் போன்றவை அதிகரித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம் பி சார்ள்ஸ்ம் கொரோனாவும்: கொரோனா வைரஸில் இருந்து தப்பினாலும் ரிஎன்ஏ வைரஸில் இருந்து தப்பிக்க முடியவில்லை!!!

கொரோனாவையே கட்டுப்படுத்தும் தடுப்பூசி பத்து மாதங்களில் ரெடியாகிவிட்டது. ஆனால் தமிழ் தேசிய வைரஸ்களின் அழிவில் இருந்து தமிழ் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாபற்ற முடியவில்லை. ஐம்பது வருடங்களாக இந்த தமிழ் தேசிய வைரஸ்கள் உருமாறி, உருமாறி காலத்திற்குக் காலம் தமிழ் மக்களை அழித்து வருகின்றன. சிங்கள பேரினவாதத்துடன் போட்டி போட்டு தமிழ் மக்களை அழித்து வருகின்ற இந்த தமிழ் தேசிய வைரஸ்கள்: தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய புடுங்கிகள்: (ரெலோ, புளொட், புலி) என்றெல்லாம் உருமாறி தமிழ் மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பிடுங்கி எடுத்துக்கொண்டுள்ளனர்.

கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்த கதையாக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோதாவில் வீம்பு பேச்சுக்களும் வீம்புத்தனங்களும் செய்து தமிழ் மக்களை இன்று கடைநிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் தலைமைகளும் சரி, இன்று பாராளுமன்றம் செல்கின்ற அரசியல் தலைமைகளும் சரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்கள் எல்லோருக்கும் அறிவு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் முட்டாள்களாகவே எண்ணுகின்றனர். முன்னவர்களது அதிகாரவெறிக்கு தமிழ் மக்கள் மண் மூட்டைகளாக்கப்பட்டனர். பின்னையவர்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களாக்கப்பட்டனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் தேசிய ஆயுதக் குழுக்களும் கட்சிகளும் தமிழ் மக்களின் குருதியயை குடித்தே வருகின்றனர். இதில் இரா சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த சித்தார்த்தன் எல்லோருமே ஒரே டிஎன்ஏ உள்ள வைரஸ்கள் தான். இந்த வரிசையில் கடைசியில் உருமாற்றம் அடைந்தவர்கள் தான் சி வி விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் அவரில் இருந்து திரிபடைந்த மணிவண்ணன்.

வைரஸ்கள் திரிபடைந்து உருமாற்றம் பெறும் பொழுது பொதுவாக அவற்றின் வீரியம் குறைவடைந்து பலவீனமாகும். ஆனால் தமிழ் தேசிய வைரஸ்கள் திரிபடைந்தாலும் அவற்றின் தமிழ் மக்களை அழிக்கின்ற ஆற்றலில் எவ்வித பலவீனமும் ஏற்படவில்லை. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அனைத்து நிலைகளிலும் இவர்கள் தமிழ் மக்களை அழித்தொழித்து வருகின்றனர். பொறுப்பற்ற முட்டாள்கள் பொறுப்பான பதவிகளில் அமருகின்ற போது சமூகம் பேரழிவை நோக்கித் தள்ளப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இதற்கு வளர்ந்த நாடுகள் வளர்முக நாடுகள் என்று விதிவிலக்குகள் இல்லை. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்மினதும் இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடியினதும் முட்டாள் தனமான முடிவுகளே இந்நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்குப் பலியாகக் காரணம். இன்று உலகமெங்கும் வளர்முக நாடுகளில் கொரோனாவிற்கு மக்கள் பலியாவதற்கு முக்கிய காரணம் பிரித்தானிய, அமெரிக்க அரசுகளின் பணத்தாசை மட்டுமே. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பதவிக்கு வரும்வரை கொரொனா தடுப்பூசியின் உரிமத்தை சிறிதுகாலத்திற்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் பதவிக்கு வந்த பின் அதனை அடக்கியே வாசிக்கின்றார்.

கொரோனா தடுப்பூசிக்கான உரிமம் விட்டுக்கொடுக்கப்பட்டு இருந்தால் உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு வக்சின் உருவாக்கப்பட்டு கூடிய விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் பெரும் தடையாக உள்ளன. இவர்களே இன்றைய கொரோனா கொலையாளிகள். தங்களுக்கு தேவையான போது மனித உரிமை அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் இவர்கள் இப்பொழுது தங்களால் பல்லாயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதை நாசுக்காக மூடி மறைக்கின்றனர். இவர்களுடைய மேற்குலக பிரச்சார ஊடகங்களும் அதனை கண்டும் காணாமல் மௌனமாய் உள்ளன. தமிழ் தேசிய வைரஸ்களைப் போன்றவர்களே இன்னும் இந்த காலனித்துவத்திற்கு அடிமைச்சானம் எழுதிக்கொடுத்துவிட்டு கதையளந்து திரிகின்றனர்.

பொது மக்களின் வரிப்பணத்திலும் உலகெங்கும் இருந்து பெறப்பட்ட தகவலையும் அறிவையும் கொண்டு தயாரிக்கப்பட்ட வக்சீனுக்கு இப்பொது ஒரு சில உலகப்பெரும் மருத்துவ நிறுவனங்கள் உரிமம் பாராட்டுகின்றன. ரஸ்யாவினதும் சீனாவினதும் வக்சீனே இன்று வளர்முக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வக்சீனை உற்பத்தி செய்து பிரித்தானியாவுக்கு வழங்கிய இந்தியாவுக்கே தன்னிடம் உள்ள வக்சினில் ஒரு பகுதியயை பிரித்தானியா வழங்க மறுத்திருந்தது சில வாரங்களுக்கு முன் வந்த செய்தி.

சுற்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்காமல், கேட்காமல், தீரவும் விசாரிக்காமல் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர், “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று பாராளுமன்றத்தில் முழங்கினார்; அல்ல யாருக்கோ முதுகு சொறிந்தார்.

உலகில் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரம் உடைய நாடுகளே. அந்தக் கட்டமைப்புத் தான் அந்நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியது. (அது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் குறித்துக்கொள்க.) அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையும் ஒப்பீட்டளவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும் ஒரு காரணம் என்பதை மருத்துவத்துறை சார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் விட்ட அறிக்கைகளில் வடக்கு கிழக்கில் கொரோனா தடுப்பு மையங்களை உருவாக்குவதற்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தாங்களும் ஏதோ அறிக்கை வெளியிட வேண்டும், பாராளுமன்றத்தில் முழங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அறிக்கை விடுவது பின்னர் அதுபற்றி மௌனமாக இருப்பது என்பது இவர்களுடைய சாக்கடை அரசியல் தந்திரம். அதற்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை சாரள்ஸ் நிர்மலநாதன் நிரூபித்துள்ளார். “சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது” என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்து உள்ளார். எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என்ற விவஸ்தையே இல்லாத முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை தமிழ் மக்கள் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

இந்த தமிழ் தேசிய வைரஸ்களுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால் எஞ்சியுள்ள தமிழ் சமூகமும் அழிந்துபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு விடயம் பற்றி பேசுவதாக இருந்தால் அதனைப் பற்றி தேடி ஆய்வு செய்து பேச வேண்டும். இல்லையேல் தெரியாத விடையத்தை பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தெரியாத விடையத்தை தெரிந்தது போல் காட்டி இப்படி ஊதிக்கெடுக்கின்ற ஆண்டிகள் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தமிழீழ மடம் கட்டித் தர வெளிக்கிட்டு உள்ளனர். இவர்கள் மடம் கட்டுகிறார்களோ இல்லையோ தமிழ் மக்களுக்கு கொல்லி வைப்பது என்றே விறகுக்கட்டைகளுடன் வலம்வருகின்றனர். ஜாக்கிரதை!

கனடாவில் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் – முஸ்லீம்கள் என்பதால் இனவெறித்தாக்குதலா என்ற சந்தேகம்..?

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் லண்டன் நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவர்கள் மீது காரை மோதினார்.

இதில் அவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் மீண்டும் அவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் அவர்கள் கார் சக்கரங்களில் சிக்கி நசுங்கினர். இந்த கோர சம்பவத்தில் 74 மற்றும் 44 வயதான 2 பெண்கள், 46 வயதான ஒரு ஆண் மற்றும் 15 வயதான சிறுமி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் அந்த குடும்பத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பினான்.‌அதனை தொடர்ந்து காரை மோதி தாக்குதல் நடத்திய அந்த வாலிபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.‌

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளியை போலீசார் தேடினர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே முதற்கட்ட விசாரணையில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என தெரியவந்தது.‌ எனவே இது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.‌ இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஐநாவின் பொதுக்குழு தலைவராக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் 143 வாக்குகளால் தெரிவு !

ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் 2021-22க்கான வாய்ப்பு ஆசிய -பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வருடம் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் அறிவித்தார். இவரை எதிர்த்து அப்போது யாரும் போட்டியிட முன்வராத நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இவருக்கு ஆதரவு வழங்கியது.

அதே சமயம் மாலத்தீவு இந்த பதவியை இதுவரை வகித்தது இல்லை. இதனால் பல்வேறு நாடுகள் நல்லெண்ண அடிப்படையில் மாலத்தீவின் வெளியுறவுத் துறை மந்திரி அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளித்தது. இந்தியாவும் கடந்த நவம்பரில் அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளிப்பதாக அதிகார்பூர்வமாக தெரிவித்தது .

இதற்கிடையே, திடீரென ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரி சலமாய் ராசூல் இதே பதவிக்கு போட்டியிடுவதாக 6 மாதங்கள் முன் அறிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு பல நாடுகள் ஆதரவு தந்தாலும், திடீரென கடைசி கட்டத்தில் வந்ததால் முன்கூட்டியே பலர் மாலத்தீவிற்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.

அதோடு ஆப்கானிஸ்தான் ஏற்கனவே 1966-67ல் இந்த பதவியில் இருந்துள்ளது. மாலத்தீவு இந்த பதவியை வகித்தது இல்லை. மாலத்தீவு ஏற்கனவே பலரிடம் பேசி ஆதரவை பெற்று இருந்தது.

இந்நிலையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் மாலத்தீவு வெற்றிபெற்றது. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபை 76வது தலைவராக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் 191 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவருக்கு ஆதரவாக 143 வாக்குகள் விழுந்தன. 48 வாக்குகள் எதிராக சென்றன.

வரும் செப்டம்பரில் 76-வது பொதுச்சபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை ஷாகித் துவக்கி வைப்பார்.

‘தி பேமிலி மேன் 2 தொடர் ஒளிபரப்பை அமேசான் நிறுவனம் நிறுத்தாவிட்டால் உலகம் முழுதும் தமிழர்களுடைய எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.” – பாரதிராஜா அறிக்கை !

‘தி பேமிலி மேன் 2’ தொடர் ஒளிப்பரப்பை அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து நிறுத்த வேண்டும் எனக் கூறி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

image

image

“ எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர்  திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம்,வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை
கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அல்-கொய்தா அமைப்பு தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி உயிருடன் தான் இருக்கிறார்.” – ஐ.நா.சபை அதிர்ச்சி தகவல் !

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்புக்கு அய்மான் அல்-ஜவாகிரி பொறுப்பேற்றார்.

10 ஆண்டுக்கு முன்பு பொறுப்பேற்ற அவர் அமெரிக்காவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அல்-ஜவாகிரியை கொல்வோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.

இதற்கிடையே அய்மான் அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக சமீப காலங்களாக தகவல் வெளியானது. ஆனால் அதை அல்-கொய்தா அமைப்பு உறுதிப்படுத்தவில்லை.

இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது. இந்த நிலையில் அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி இறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.சபை தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான எல்லை பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இதில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா அமைப்பு தலைவர் அய்மான் அல்-ஜவாகிரியும் உள்ளார். அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் பயங்கரவாதிகளின் பிரசார வெளியீடுகளில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக முன்னர் வெளியான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அல்-கொய்தா அமைப்புடன் தலிபான் மற்றும் சில வெளிநாட்டு பயங்கரவாதிகளும் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-கொய்தா மத்திய தலைமையுடன் இணைந்து இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அல்-கொய்தா, தலிபான் தலைவர்களின் உரையாடல்களை சில நாடுகள் இடைமறித்து கேட்டுள்ளன. சமீப காலமாக இந்த உரையாடல்கள் குறைந்து உள்ளன. இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானின் காந்தஹார், ஹெல் மந்த், நிர்முஸ்பில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.