Multiple Page/Post

உலகக்கிண்ண தொடர் தோல்வி – ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி ராஜினாமா !

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அணி நிர்வாகத்துடனான சில கருத்து வேறுபாடுகளும் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் கலாச்சாரம் கெட்டுப்போய்விடாது – மகாசங்கத்தினருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பதில் !

பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிக விலை கொடுத்து சேலைகளை வாங்குவதில் சிக்கல் நிலவி வருவதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, போக்குவரத்து சிரமம் காரணமாக ஆசிரியர்கள் பலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பாடசாலைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, புடவை அல்லது ஒசரியைவிட எளிதான எளிய உடையை அணிவதன் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களை கையாள்வதில் திறமையாக செயற்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின் கலாசாரத்திற்கு புறம்பானது என மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஜோசப் ஸ்டாலின் , ஆசிரியர்களின் உடையை மாற்றலாம், ஆனால் துறவறம் பூண்டவர்கள் தங்களது ஆடைகளை மாற்ற முடியாது என்பதால், இந்த கோரிக்கையை அந்நியப்படுத்த வேண்டாம் என்றுகேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் மகாசங்கத்தினர் குறிப்பிடுவது போன்று கலாசாரம் எந்த வகையிலும் அழிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தது.

10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான இடம் பெயர்வு – உக்ரைனிலிருந்து 1.4 கோடி பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேற்றம் !

‘ரஷ்யா-உக்ரைன் போரால் இதுவரை 1.4 கோடி பேர் உக்ரைனில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அடுத்து வரும் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய மோசமான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்’ என்று ஐநா அகதிகள் பாதுகாப்பு ஆணையர் பிலிப்போ கிராண்டி கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று நியூயார்க்கில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த பிப்ரவரியில் துவங்கியது. அதன் பின்னர் உக்ரைனில் இருந்து இன்று வரை 1.4 கோடி பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். கடந்த சில 10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான இடம் பெயர்வு இது.

உக்ரைனில் இருந்து வெளியேறி அகதிகளாக உள்ள இவர்கள், அடுத்து வரும் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போதிய உணவு, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கடும் குளிரை எதிர்கொண்டால், உயிரிழப்புகள் ஏற்படும். துரதிருஷ்ட வசமாக அவர்களுக்கு, குடியேறிய நாடுகளின் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு நாளையும் அவர்கள் சிரமத்துடன் கழிக்க வேண்டிய பரிதாபமான நிலையில் உள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அவர்களுக்கு உதவி வருகின்றன. ஆனால் இது, பெரிய கடலில் ஒரு துளி என்பது போல மிகவும் குறைவாக உள்ளது. உலக நாடுகள் முன்வந்து, இவர்களுக்கான உதவி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். ஆனால் அதை விட முக்கியம் ரஷ்யா-உக்ரைன் இடையேயான நடந்து வரும் இந்த அர்த்தமில்லாத போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு – கொலை செய்யவே வந்தேன் என துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தகவல் !

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான்கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007-ல் ஒரு பேரணியின் போது எப்படி படுகொலை செய்யப்பட்டார்? என்பதை இன்றைய தாக்குதல் நினைவுபடுத்தியது.

ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து அந்த நபர் துப்பாக்கியால் சுடும்போது பதிவான வீடியோ வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை , இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது காவல்துறையால் உறுதி செய்யப்படவில்லை.

பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம்

மோசடிப் பல்கலைக்கிழகத்தின் துணைவேந்தர் – கலாநிதி செல்வின் குமார்

உலகத் தமிழ் பல்கலைக்கழகம் (யூஎஸ்ஏ) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பல்கலைகழகத்தில் ஆய்வாளர்களும் இல்லை. மாணவர்களும் இல்லை ஆனால் கலாநிதிப் பட்டம் வழங்கப் போகிறார்களாம். இன்றுள்ள மொழிகளிலேயே மூத்த மொழியாகவும் மக்களால் பரிபாஷிக்கப்படுகின்ற பயன்பாட்டில் உள்ள மொழி கடந்த 3500 ஆண்டுகளாக தன்னை நிலை நிறுத்தி வைத்துள்ளது. அம்மொழியின் பெருமையை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை அதன் பெருமையை சிறுமைப்படுத்தாமல் ஆவது இருப்பதுவே சாலச் சிறந்தது. உலகத் தமிழ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் கடையைத்திற்ந்துள்ள ஒரு கூட்டம் தமிழ் கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் செயலில் இறங்கி உள்ளனர்.

அமெரிக்காவில் இயங்குவதாகக் கூறும் இயங்காத பல்கலைக்கழகம் ஒரு நூறுடொலருக்கு ஒரு இணையத்தை இயக்கிக் கொண்டு உலகத் தலைவர்கள் சிலரது படங்களையும் போட்டு சில பல்பலைக்கழகங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்விணையத்தளத்தில் இப்பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைக்கும் பல்கலைக்கழகங்களின் பகுதி இன்னமும் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான மழைக்கு முளைக்கும் காளான்கள் போன்ற இவ்வமைப்புகள் தமிழையும் தமிழ் புலமையையும் கொச்சைப்படுத்துகின்றன. இதுவொரு மோசடியான பல்கலைக்கழகம் என இந்தியாவில் இருந்து வெளிவரும் தி ஹிந்து இணையத்தளமும் சுட்டிகாட்டியுள்ளது.

ஆரம்பப் பள்ளியைக் கூட இயக்குவதற்கு லாயக்கற்றவர்கள் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கின்றோம் என்ற பெயரில் ரீல் விட்டுக்கொண்டு தற்போது கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்போகின்றனராம். இந்த கௌரவ கலாநிதிப்பட்டம் என்பது இறால் போட்டு சுறா பிடிக்கும் தந்திரமாக மாறியுள்ளது. முகவரியற்ற இந்த உலகத் தமிழ் பல்கலைக்கழகம் முகவரியுள்ள சிலருக்கு ஆசைகாட்டி கலாநிதிப்பட்டம் வழங்குவதாகக் கூறி தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர். இந்த வலையில் லண்டனில் அறியப்பட்ட சில நல்ல தலைகளும் வீழ்ந்துள்ளது. அல்லது வீழ்த்தப்பட்டுள்ளது.

நவம்பர் 6ம் திகதி பிரித்தானியாவின் முக்கிய பலகலைக்கழகங்களில் ஒன்றான யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரரில் இந்த கௌரவ கலாநிதப்பட்டம் வழங்கப்பட இருப்பதாக உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரரின் ஹரோ கம்பஸில் நடைபெறும் இந்நிகழ்வுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இப்பல்கலைக்கிகத்தின் மண்டபத்தை வாடகைக்குப் பெற்றதைத் தவிர பல்கலைக்கழகத்திற்கு ஏதும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இது விடயமாக தேசம்நெற், யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரருக்கு ஒரு மின்அஞ்சலையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்த மோசடிக் கலாநிதிப் பட்டத்திற்கு கொன்சவேடிவ் கட்சி அமைச்சர் போல் ஸ்கலி, லிபிரல் டெமொகிரட் கட்சிப் பா உ சேர் எட்டேவி பிரித்தானியாவின் முன்னணித் தமிழ் வழக்கறிஞர் அருண் கணநாதன், சட்ட ஆலோசகர் குலசேகரம் கீதார்தனன், கவுன்சிலர் பரம் நந்தா, ஈலிங் அம்மன் ஆலயச் செயலாளர் சொக்கலிங்கம் கருணைலிங்கம், அருணாசலம் ராஜலிங்கம், நாடுகடந்த அரசு சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகிய லண்டனில் அறியப்பட்ட நபர்களுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை விடவும் உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவி டாக்டர் சாந்தினி ஒமகாண்டம், ஏ ஆர் ரகுமானின் சகோதரி டாக்டர் ஏ ஆர் ரெகானா உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச இணைப்பாளர் டாக்கடர் எஸ் எம் ரஸ்மி ரூமி ஆகியோருக்கும் கௌரவ கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சிலருடன் தொடர்புகொண்ட போது அவர்கள் தங்களுக்கு மின் அஞ்சல் வந்ததாகவும் மேலதிக விபரங்கள் தெரியவில்லை என்றும் தங்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றின் அனுசரணையோடுதான் இந்த கௌரவப்பட்டம் வழங்கப்படுவதாக நினைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தனர். அவ்வாறான தோற்றப்பாடே அங்கு தெரிவிக்கப்பட்டது. இப்பட்டங்களை தமிழகப் பல்கலைக்கழகங்கள் கூட வழங்க முன்வந்திருக்வில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான மோசடியான கலாநிதிப் பட்டங்கள் தொடர்பாக என் செல்வராஜா “கலாநிதிகளும் கல்லாநிதிகளும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தர். தமிழர்கள் சிலர் இவ்வாறான மோசடியான பட்டங்களை காவிக்கொண்டு திரிவதன் மூலம் கல்வியைiயும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ‘கௌரவ கலாநிதிப்பட்டம்’ வாங்க அழைக்கப்பட்ட சிலர் தாங்கள் அதில் கலந்துகொள்வதுபற்றி முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்தனர். தங்களுடைய பெயர்களை ஒரு தலைப்பட்சமாக அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இவ்வாறான மோசடியான பட்டங்களை கௌரவ கலாநிதி என்ற பெயரில் பெறுவதன் மூலம் அவர்கள் ஏற்கனவே பெற்ற கல்வித் தகமைகள் மீதும் சந்தேகம் ஏற்படும் நிலையை இப்பட்டங்கள் உருவாக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறான மோசடியான கல்வித் தகமைகளை நிரகரிப்பதும் ஒரு சமூகக்கடமையே.

இந்த கௌரவ கலாநிதிப் பட்டங்களுக்குப்பின் நாடுகடந்த அரசு இருப்பதாக நம்பப்படுகின்றது. நாடுகடந்த அரசு என்ற இந்தக் கருத்துரவாக்கம் கவிஞர் பேராசிரியர் சேரனால் முன்வைக்கப்பட்டு தற்போது இலங்கையில் கௌரவத் தடுப்புக்காவலில் உள்ள கே பி என்றறியப்பட்ட செல்லராசா பத்மநாதனால் (குமரன் பத்மநாதன்) ஏற்றுக்கொள்ளப்பட்டது. கெ பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுசெல்லப்பட விசுவநாதன் உருத்திரகுமாரனால் தற்போது இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த நாடுகடந்த அரசின் பிரதமராக உருத்திரகுமாரன் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து செயற்படுகின்றார். இந்த கௌரவ கலாநிதிப் பட்டம் பெறுபவர்களில் ஒருவரான சொக்கலிங்கம் யோகி நாடுகடந்த பிரதமர் அலுவலகத்தின் அமைச்சராக உள்ளார். நாடுகடந்த அரசு என்ற கருப்பொருள் ஆழமானதாக இருந்தபோதும் அதில் தங்களை எம்பிக்கள் அமைச்சர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் உள்ளடக்கமே இருப்பதில்லை. அதனால் நாடுகடந்த அரசு என்பது ஒரு கோமாளித் தனமாகவே பார்க்கப்படுகின்றது. சொக்கலிங்கம் யோகி தமிழர்களின் அகதி அந்தஸ்து விடயங்களில் நிறைய உதவுபவராக இருக்கின்றார். ஆனால் அவர் ஒரு அரசியல் உள்ளடக்கமற்றவராகவே கருதப்படுகின்றார். இந்த மோசடி காலாநிதிப் பட்டங்களுக்குப் பின் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளும் உள்ளது என்று தெரியவருகின்றது.

4 ஆண்டுகளுக்குள் 5-வது பொதுத்தேர்தல் – மீண்டும் பிரதமராகிறார் பெஞ்சமின் நெதன்யாகு !

இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நெதன்யாகு. லிகுட் கட்சியை சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நெதன்யாகு பதவி வகித்துள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி மூலம் நெதன்யாகு பிரதமரானார். ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்ததால் நெதன்யாகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு சுமார் ஓராண்டு காலம் ஆட்சி செய்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அவரது அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப்பெற்றன. இதனால் அந்த நாட்டின் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும். இத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு – யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 120 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 85 சதவிகித வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுள்ள நிலையில், அவற்றில், 65 தொகுதிகளில் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் அவரது கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை.?

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர்  31 ஆம் திகதிக்கு முன்னதாக இந்தியா சென்று குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 டிசம்பரில் இயற்றப்பட்டது.

இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து, 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தலைமை நீதியரசர் யு.யு.லலித் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், நேற்று (31) இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டத்தரணி  வில்சன் வாதங்களை முன்வைத்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தின் பலனை மூன்று நாடுகளுக்கு மட்டும் என கட்டுப்படுத்துவதில் நியாயம் இல்லை எனவும்  இதர அண்டை நாடுகளிலும் இதேபோன்ற துன்புறுத்தலை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர்களுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படுமா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்த சட்டத்தரணி, இதற்கு சொலிசிட்டர் ஜெனரலிடம் பதில் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை  டிசம்பர்  மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து, உயிரிழப்பு, காயத்துக்கான நட்டஈடினை பெற்றுக்கொள்ள யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை !

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒருங்கமைப்பில் யாழில் நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை   நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையானது யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் இடம்பெறுகிறது. இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

இச்சேவையில் நீதி அமைச்சர், நீதி அமைச்சரின் செயலாளர் வசந்த பெரேரா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மேலதிக செயலாளர் ம.பிரதீபன், காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து, உயிரிழப்பு, காயத்துக்கான நட்டஈடினை பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த நடமாடும் சேவை நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்றியுள்ளன.

குறித்த நடமாடும் சேவையானது நாளை செவ்வாய்க்கிழமை (நவ 1) கிளிநொச்சி திறன் விருத்தி மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவை சேர்ந்தவர்களும், கிளிநொச்சியில் நாளை நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் தமது மேற்படி தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் பாலம் இடிந்து வீழ்ந்த விவகாரம் – 125 பேரை மட்டுமே தாங்கக் கூடிய பாலத்தில் 500 பேருக்கு அனுமதி !

குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் இடிந்ததால் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

மாநில காவல் துறை இந்த விபத்து தொடர்பில் கூறியதாவது: “மோர்பியில் நிகழ்ந்த துயரச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக பாலத்தின் பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள், பாலத்தில் ஏறுவதற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்த பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 233 மீட்டர் நீளம் கொண்ட கேபிள் நடைபாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. முன்னதாக பாலத்தை சீரமைப்பதற்காக 7 மாதங்களாக பாலம் மூடப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய மதிப்பு ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குஜராத்தின் புத்தாண்டு தினமான அக்டோபர் 26ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன் பெறப்பட வேண்டிய Fitness Certificate பெறப்படவில்லை என்று மோர்பி நகர மன்றத் தலைவர் சந்திப்சின் ஜாலா குற்றம் சாட்டியுள்ளார். இந்த பாலம் 125 பேரை மட்டுமே தாங்கக் கூடியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவத்தின்போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட சுமார் 500 பேர் பாலத்தின் மீது இருந்துள்ளனர். பாலத்தின் மீது இருந்தவாறு மக்கள் பலரும் சாத் பூஜை செய்துள்ளனர்.

அதேநேரத்தில், பாலத்தின் மீது ஏறிய இளைஞர்கள் சிலர், வேண்டுமென்றே பாலத்தை உலுக்கி சேட்டையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் கோஸ்வாமி என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம், புகார் அளித்ததாகவும் எனினும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியள்ளார்.

உலகின் 15நாடுளில் 200க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியினர் !

உலகின் 15நாடுளில் 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மிக முக்கியமான பதவிகளை வகித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, நார்வே உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பலர் அங்கு உயர்பதவி வகிக்கின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை இதில் சேர்க்கலாம். அண்மையில் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்தப் பட்டியலில் இடம்பெற்றார். இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன். சவுத்தாம்படனில் 1980-ல் பிறந்தவர் ரிஷி சுனக். இவரது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்தவர்.

இதேபோல் கயானா நாட்டின் முதலாவது முஸ்லிம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் இர்பான் அலி. இவர் 2020 ஆகஸ்டில் அதிபர் பொறுப்பை ஏற்றார். வெஸ்ட் கோஸ்ட் டெமார்ரா பகுதியில் 1980 ஏப்ரல் மாதம் பிறந்த இவர், இந்தோ-கயானிஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2015-ல் போர்சுக்கல் பிரதமராக பொறுப்பேற்றவர் அன்டோனியா கோஸ்டா. இவர் 1961-ல் லிஸ்பனில் பிறந்தார். இவரது தாத்தா-பாட்டி கோவாவைச் சேர்ந்தவர்கள்.

மொரீஷியஸ் பிரதமராக 2017-ல் பொறுப்பேற்றவர் பிரவிந்த் ஜக்நாத். இவர் 1961-ல் மொரீஷியஸின் வாகோஸ்-பீனிக்ஸ் பகுதியில் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். மொரீஷியஸ் அதிபராக 2019-ல்பொறுப்பேற்ற பிரித்விராஜ் சிங் ரூபன் 1959-ல் இந்திய ஆர்ய சமாஜி இந்து குடும்பத்தில் குவாட்ரே போர்ன்ஸ் என்ற பகுதியில் பிறந்தார்.

சூரிநாம் நாட்டின் அதிரபராக 2020-ல்பதவியேற்ற சந்திரிகா பிரசாத் சன்டோகி,1959-ல் லெலிடார்ப் என்ற பகுதியில் இந்தோ-சூரிநாமிஸ் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்.

கயானாவின் துணை அதிபராக 1999 முதல் 2011 வரை பதவி வகித்த பாரத் ஜக்தேவ், முந்தைய பிரிட்டிஷ் கயானா பகுதியிலுள்ள டெமார்ரா-மஹாய்கா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா ராம் ஜியாவன், 1912-ல் உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிட்டிஷ் கயானாவுக்கு குடிபெயர்ந்தவர்.

அயர்லாந்து அரசின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர் லியா வராட்கர். 1979-ல் டப்ளினின் பிறந்த வராட்கரின் தந்தை மும்பையைச் சேர்ந்தவர். அதேபோல் சுமார் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் 55 இந்திய வம்சாவளியினர் கேபினட் அமைச்சர் பதவி வகிக்கின்றனர். மேலும் 63 இந்திய வம்சாவளியினர் பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவும், பெடரல் அவை உறுப்பினர்களாவும் உள்ளனர். 12 பேர் தூதர்களாக பணிபுரிகின்றனர்.

மொரீஷியஸ், ஃபிஜி, சிங்கப்பூர், சூரிநாம் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.

ஃபிஜி, கயானா, சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பலர் மத்திய வங்கி நிர்வாக தலைவர்களாகவும் இருந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகர் நீரா டாண்டன் உள்ளிட்ட 112 இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளில் உள்ளனர்.