Multiple Page/Post

பெண்கள் மீதான வன்முறையை தடுப்போம் என்ற கலந்துரையாடலில் பேச பல பெண்களை துஷ்பிரயோகம் செய்த குடுமி ஜெயாவின் சகபாடி உமா சந்திரா பிரகாஷ்க்கு அழைப்பு !

பெண்கள் சந்திப்பினூடாக Zoom இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று “மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் உரத்துப்பேசுவோம்.” என்ற தொனிப் பொருளில் 13.05.2023 அன்று  சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இன்றைய திகதிக்கு கட்டாயமாக பேசப்பட வேண்டிய ஒரு தலைப்பாக இது காணப்படுகின்றது.  அதே நேரம் இது தொடர்பில் இருக்கக்கூடிய முரணான தன்மையையும் எடுத்துக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.

“பெண்கள் மீதான வன்முறையை நிகழ்த்துபவர்களை காட்டிலும் அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற சூழலை உருவாக்குபவர்களும் குற்றவாளிகளே”

மேற்குறித்த Zoom மூலமான கலந்துரையாடலுக்கும் – இந்த மேற்கோள் வசனத்துக்குமிடையிலான தொடர்பு பற்றி நாம் அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது. காரணம் குறித்த Zoom கலந்துரையாடலில் பெண்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான உமா சந்திரபிரகாஷ் அழைக்கப்பட்டுள்ளமையாகும்.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளராக உள்ள ஜெயசந்திரன் எனும் குடுமி ஜெயா தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பதுடன் – சாதிய மனோநிலையில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பாக அச்சமுதாயத்தின் பெண்களை தன்னுடைய இச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற ஒரு அராஜகப் போக்கில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார். பொதுவெளியில் கூட பெண்களை மிக இழிவாக தரக்குறைவாக கதைக்கக்கூடிய மனோநிலையில் உள்ள குறித்த ஜெயச்சந்திரன் என்பவரை ஆதரிக்கின்ற –  அவருடைய சக பாடிகளுள் ஒருவரே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான  உமாசந்திரா பிரகாஷ் ஆவார்.

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் பெண்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் – பெண்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படுகின்ற Zoom மூலமான கலந்துரையாடலில் உமாசந்திரபிரகாஷ் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மீதான வன்முறைகளை தொடர்ச்சியாக நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய குடுமி ஜெயா எனப்படும் ஜெயச்சந்திரன் போன்ற பல அரசியல் தலைவர்கள் என்ற போர்வையிலும் சமூகத் தலைவர்கள் என்ற போர்வையில் நம் மத்தியில் உலவி கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காட்டிலும் ஆபத்தானவர்கள் அவர்கள் செய்கின்ற வன்முறைகளை பெண்கள் மீதான அடக்குமுறைகளையும் தம் சார்ந்த கட்சி அரசியலுக்காகவும் தங்களுடைய சுயநலன்களுக்காகவும் சகித்துக் கொண்டு செல்லக்கூடிய உமாசந்திரா பிரகாஷ் போன்றவர்கள். பொதுவெளியில் தங்களை பெண்ணியவாதிகளாக காட்டிக் கொள்ளும் இவர்கள் திரை மறை பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஏதோ ஒரு வகையில் துணை போகின்றார்கள் என்பதே பொருள்.

தேசம் நெட் இது தொடர்பில் பல தடவைகள் செய்திகளை பிரசுரம் செய்தும் இது பற்றிய பதில்களை ஐக்கிய மக்கள் சக்தியோ – அல்லது உமாசந்திரா பிரகாஷ் அவர்களோ பொதுவெளியில் வழங்கியிருக்கவில்லை.

இதே நேரம் குறித்த இணையவழி கலந்துரையாடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளது. கட்சி சார்ந்த அழுத்தங்களும் இதன் பின்னணியில் உள்ளதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில் குறித்த Zoom மூலமான கலந்துரையாடலில் உமாசந்திரா பிரகாஷ் அவர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் – குடுமி ஜெயா தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படும் என்ற அச்சம் காணப்படுவதால் உமாசந்திரா அவர்கள் மேற்குறித்த இணையவழி கலந்துரையாடலில் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவருகிறது.

எது எவ்வாறான போதும் ஊடகங்களும் – சமூக சிந்தனையோடு இயங்குகின்ற தன்னார்வலர்களும் இப்படிப்பட்ட பெண் அடக்குமுறைக்கு துணை போக கூடிய உமாசந்திரா பிரகாஷ் போன்றவர்களை தேர்தல் காலங்களில் மக்கள் ஓரங்கட்ட முன்வர வேண்டும். அதுவே இவர்கள் போன்ற நபர்களுக்கு ஒட்டுமொத்த சமூகமாக நாம் கொடுக்கக்கூடிய பதிலடியாக இருக்கும்.

தொழில்நுட்பமும் – மனிதனுடைய சிந்தனை திறனும் மென்மேலும் உச்சநிலையை அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் உலகம் முழுதும் அடக்கு முறையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படை பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளும் பாலியல் ரீதியான கொடுமைகளும் அவர்களை மரணத்தை நோக்கி இன்னும் வேகமாக தள்ளி விடுகின்றன. இந்த நிலையில் தேசம் நெட் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் சார்ந்த செய்திகள் தொடர்பில்  தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

 

மேற்குறித்த பிரச்சனை தொடர்பில் தேசம் நெட் ஏற்கனவே பதிவு செய்திருந்த செய்தியைக் காண காண கீழே உள்ள Link ஐ Click செய்யவும்.

அன்பே சிவம் எல்லாம் குடுமி மயம்: பாரிஸில் சிவன் கோவில் வருமானத்தில், நல்லூரில் ‘காம’ விடுதி, யாழ் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் – பின்னுகிறார் சாதிமான் குடுமி ஜெயா!

 

இம்ரான்கானை விடுதலை செய்தது உயர் நீதிமன்றம் !

நீதிமன்றத்தில் வைத்து இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம் என கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

ஊழல் வழக்கில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ´ரேஞ்சர்ஸ்´ எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை, 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இம்ரான் கான் கைது சட்ட விரோதம், நீதிமன்றத்தில் யாரையும் கைது செய்யக்கூடாது. அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் இம்ரான் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதி அவர் மீதான வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார்.

 

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் – விசாரணைகளை ஆரம்பித்த ஐ.சி.சி !

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளதா..? என்பதை ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா உள்ளிட்ட இரு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

குழுவின் ஏனைய உறுப்பினராக பங்களாதேஷ் துடுப்பாட்ட சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் உள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐ.சி.சி. அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தகவல்கள் கண்டறிவார்.

அரசியல் தலையீடுகள் குறித்து சிறிலங்கா கிரிக்கெட் தரப்பில் இருந்து பலமுறை முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை ஐ.சி.சி. நியமித்திருந்தது.

இதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஐ.சி.சி தலைவர் கிரே பார்க்லேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி சந்திப்பொன்றை மேற்கொள்ள சந்தர்ப்பமொன்றை கோரினார்.

இந்நிலையிலேயே இந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2022ல் அரசியல் தலையீடு இலங்கை கிரிக்கெட்டில் நிரூபிக்கப்படுமாயின் ஐசிசி உறுப்புரிமை ரத்து செய்யப்படலாம்.

ஐ.சி.சி.யின் விதிகளின்படி, விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் இறுதி நோக்கத்துடன் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்பி பிளஸ்  வரிச்சலுகைக்காக விண்ணப்பிக்கும் இலங்கை !

2024 -34 காலப்பகுதிக்கான ஜிஎஸ்பி பிளஸ்  வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசியா பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ்  வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசியா பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்

“அதிகரிக்கும் கனடா – சீனா இடையான முரண்பாடு.” – தூதுவரை வெளியேற உத்தரவிட்ட சீனா !

கனடா மற்றும் சீனா இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதற்ற நிலை காணப்படுகிறது. சீனாவின் ஹூவாவெய் பகுதியை சேர்ந்த முக்கிய நபரை கனடா கைது செய்தது. இதற்கு பதிலடியாக சீனாவும், கனடா நாட்டை சேர்ந்த 2 பேரை தனது நாட்டில் வைத்து கைது செய்தது. அவர்கள் 3 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் கொள்கையை கனடா பின்பற்றுகிறது என கூறி தொடர்ந்து அந்நாடு மீது சீனா குமுறலை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் இனப்படுகொலை நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை ஆதரித்ததற்காக கனடாவின் எம்.பி.யான மைக்கேல் சோங் மற்றும் அவரது உறவினர்களை ஹாங்காங்கில் வைத்து சீன உளவு அமைப்புகள் கைது செய்ய திட்டமிட்டன. இதுபற்றி அறிந்ததும் கனடா அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில், கனடா வெளியுறவு மந்திரி மெலானி ஜோலி கூறும்போது, இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக சீன தூதர் ஜாவோ வெய், கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என கூறினார். எங்களது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை எந்த வடிவிலும் நாங்கள் சகிக்கமாட்டோம் என அவர் கூறினார். கனடாவில் உள்ள மற்ற வெளிநாட்டு தூதர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கையை கனடா விடுத்துள்ளது. இந்த நிலையில், இதற்கு பதிலடியாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், வருகிற மே 13-ந்திகதி சீனாவில் இருந்து வெளியேறும்படி, கனடா தூதர் ஜெனிபர் லின் லாலண்டுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என அறிவித்தது. இதுபோன்ற காரணமற்ற முறையிலான ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்தும்படி கனடாவை சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் வலியுறுத்தி உள்ளார்.

“உக்ரைன் போருக்கு மேற்கு நாடுகளின் ஆணவமே காரணம்.” – புடின் காட்டம் !

கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் நாசி படைகளை வீழ்த்தி வெற்றி பெற்ற தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக ரஷ்ய அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற வெற்றி தின கொண்டாட்டத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மேற்குலக நாடுகள் உண்மையான நாசிக்களின் வழிமுறைகளை உருவாக்கி வருவதாக புடின் குற்றம்சாட்டினார்.

ரஷியாவை தாக்குவதற்காக திட்டமிடும் மேற்கு நாடுகள், 2-ம் உலகப்போரின் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்வதாகவும், தற்போது நாகரீகத்தின் முக்கியமான திருப்புனையில் நாம் இருக்கிறோம் என்றும் கூறினார். மேலும் உக்ரைன் பிரச்சினைக்கு மேற்கு நாடுகளின் கட்டுப்பாடற்ற இலக்குகளும், ஆணவமும் தான் காரணம் என்று தெரிவித்த அவர், நமது தாய்நாட்டின் மீது உண்மையான போர் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது கைது !

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) இன்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், தேசத்துரோகம், மதநிந்தனை, ஊழல், பண மோசடி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராணுவம், உளவு அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்தியதாக ராணுவம் தெரிவித்த மறுநாள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்குச் சென்ற இம்ரான் கான், நீதிமன்றத்தில் பயோமெட்ரிக் பதிவு செய்தபோது, ரேஞ்சர்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து, வழக்கறிஞர்களையும் பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கி, இம்ரான் கானை கைது செய்து கைது செய்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஷிரீன் மசாரி தெரிவித்துள்ளார். ‘என்ன சட்டங்கள் இவை? நிலத்தை ஆக்கிரமிப்பது போல் ரேஞ்சர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதுதான் இன்றைய பாகிஸ்தான். துணை ராணுவப் படைகளால் உயர் நீதிமன்றம் தாக்கப்பட்ட பாசிச நாடு இது. அரச பயங்கரவாதம், ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை தாக்கி, இம்ரான் கான் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவரை கடத்திச் சென்றுவிட்டனர்’ என்றும் மசாரி கூறி உள்ளார். ரேஞ்சர்கள் இம்ரான் கானை சட்டை காலரைப் பிடித்து சிறை வேனில் ஏற்றிச் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேல் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் !

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெத்தலகேமில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பள்ளி கட்டிடமானது ஸதா விரோதமாக கட்டப்பட்டதாகவும் அங்கு படிக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறி அப்பள்ளியை இடிக்க இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் இஸ்ரேல் அதிகாரிகள் அப்பள்ளியை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அங்கு கல்வி பயின்று வந்த குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என  தெரிவித்துள்ளது. பள்ளி இருந்ததற்கான தடையாமே இல்லாமல் இடித்து அளிக்கப்பட்ட சம்பவத்தால் பாலஸ்தீனியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 பேருக்கு தூக்கு தண்டனை !

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று மனித உரிமைகள் குழு ஒன்று கூறியுள்ளது. ஈரான் நாட்டில் கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தூக்கிலிடப்படுகின்றனர். அதனால் ஈரான் அரசு நிர்வாகத்தை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டில் செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான் அரசு இந்தாண்டில் மட்டும் இதுவரை 194 பேரை தூக்கிலிட்டு கொன்றுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களில் பாதி பேர் ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தூக்கிலிடப்பட்ட 42 கைதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றவர்கள் ஆவர். கடந்த 10 நாட்களில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஈரானின் முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சர் அலிரெசா அக்பரி, இங்கிலாந்து நாட்டிற்கு ஈரானின் அணுசக்தி ரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் ஜனவரி மாதம் தூக்கிலிடப்பட்டார். கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 582 கைதிகளை தூக்கிலிட்டதாக ஐ.எச்.ஆர் கூறுகிறது. அதே 2021ம் ஆண்டில், 333 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்த்த போராட்டக்காரர்கள் – 52 பேர் வரை கைது !

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு 52 மன்னராட்சி எதிர்ப்பு போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர்.

சனிக்கிழமையான நேற்று பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை வரை கூடியிருந்தனர்.

சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற உடையணிந்து இருந்த அரச நடைமுறை ஆதரவாளர்களுக்கு மத்தியில், நூற்றுக்கணக்கான மஞ்சள் ஆடை அணிந்த மன்னராட்சி எதிர்ப்பாளர்களும் ஊர்வலப் பாதையில் இணைந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் கையில் “எங்கள் ராஜா இல்லை”(Not My King) என்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு, பெரிய ஸ்பீக்கர்களில் மன்னராட்சிக்கு எதிரான கோஷங்களை கூச்சலிட்டனர்.

முடிசூட்டு விழாவில் மன்னராட்சி எதிர்ப்பாளர்கள் இடையூறுகளை ஏற்படுத்தலாம் என பொலிஸார் உறுதியாக நம்பிய நிலையில் அதன் தலைவர் கிரஹாம் ஸ்மித்-தை ஊர்வலம் தொடங்கும் முன்பே தடுத்து வைத்தனர்.

அத்துடன், மேலும் மன்னராட்சிக்கு எதிரான 51 ஆர்ப்பாட்டக்காரர்களை கூட்டத்தில் இருந்து பிரித்து பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக லண்டன் பெருநகர காவல்துறையின் தளபதி கரேன் ஃபிண்ட்லே வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை நாங்கள் கைது செய்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் கவலையை நாங்கள் முற்றிலும் புரிந்து கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மன்னராட்சியை அகற்றிவிட்டு ஒரு அரச தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்பும் குடியரசுக் குழுவின் தலைவரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

16 மணிநேர காவலுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்ட கிரஹாம் ஸ்மித், “இங்கிலாந்தில் அமைதியான போராட்டத்திற்கு இனி உரிமை இல்லை” என்று தெரிவித்தார்.