Multiple Page/Post

“All eyes on Rafah” -பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான மனிதர்கள் !

காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளியான “All eyes on Rafah” என்ற ஹேஷ்டெக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில், அதிகளவாக பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

அதன்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” வாசம் பொருந்திய புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

இது, இஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், All eyes on Rafah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 2.75 கோடிக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “All eyes on Rafah” என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் வைரலாகி வருகின்றது.

குறித்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன.

பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் புகைப்படம் அமைந்தது.

All eyes on Rafah என்ற புகைப்படத்தை, சர்வதேசக பிரபலங்கள் தங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

ரபாவில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் பாரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது  வான்வெளி தாக்குதலில் நடத்தி உள்ளது.

வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரபாவில் தஞ்சம் புகுந்துள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.

இந்த மிலேச்சதனமான தாக்குதலில் 35 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மற்றும் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

எற்கனவே ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.

தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய புதிய தாக்குலுக்கு 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் புதையுண்டு போன 2000 பேர் !

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் உறங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர்.

இதனால் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், 650-க்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் இல்லை – ஈரான் இராணுவம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் இல்லை என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

மலைப்பகுதியில் விழுந்ததும் ஹெலிக்கொப்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது அது தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் இல்லை என ஈரான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என ஏ.பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெலிக்கொப்டர் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஈரான் இராணுவத்தின் இந்த அறிக்கை தொலைக்காட்சியிலும் வெளியாகியுள்ளது.

ஹெலிக்கொப்டர் விபத்திற்கு எவர்மீது குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் சுமத்தப்படாதமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிக்கொப்டருடனான தொடர்பாடல்களின் போது சந்தேகத்திற்கு இடமான எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இலங்கை மாணவர்களை வரவேற்கும் இந்தியா!

சுயநிதித் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இலங்கை மாணவர்களின் விண்ணப்பங்களைக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வரவேற்கிறது.

அதன்படி, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான MBBS, BDS, BE, B.Tech, B.Pharm, B.Arch, Diploma level Technical மற்றும் Diploma in Pharmacy ஆகிய கற்கைநெறிகளுக்குத் தகுதியான இலங்கை மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களைக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலத்தில் சமர்ப்பிக்க முடியும்.

MBBS/BDS பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் NEET தேர்வு மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் ,பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாட நெறிகளில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொறியியலில் BE/B.Tech மற்றும் Diploma in engineering ஆகிய கற்கைநெறிகளுக்கு பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் கணிதம் ஆகிய பாட நெறிகளில் 60 சதவீதம் மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B.Pharmacy மற்றும் Diploma in Pharmacy ஆகிய கற்கைநெறிகளுக்கு உயிரியல், பௌதிகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாட நெறிகளில் 60 சதவீதம் மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B.Arch கற்கைநெறிக்கு புதுதில்லியின் கட்டிடக்கலை கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பங்களைக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.

எனது தமிழ் கலாச்சாரத்தில் இருந்து கற்றுக்கொண்ட விடயங்களே வெற்றிக்கு காரணம் – மாஸ்டர் செவ் 2024 போட்டியில் வெற்றிபெற்ற பிரின் பிரதாபன் !

பிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியான மாஸ்டர் செவ் 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்றிபெற்றுள்ளார்.

தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் தனது தமிழ் பின்னணியிலிருந்து தைரியமான ஆக்கபூர்வமான சுவைகளின் சேர்க்கைகளை உருவாக்கப்பெற்ற உத்வேகத்தின் காரணமாகவே மாஸ்டர் செவ்வில் வெற்றிபெற முடிந்தது என தெரிவித்துள்ளார்.

தனது பெற்றோர்களே தனக்கு உணவு மற்றும் சுவையின் மீதான ஆர்வத்தை தூண்டினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

பிரின் பிரதாபனின் தந்தை கோபால் ஒரு பொறியியலாளர் தாயார் டார்க்கே வங்கியில் பணிபுரிகின்றார்.

எனது சமையலில் தமிழ் கலாச்சாரம் முக்கிய பங்கு வகித்தது இந்த விடயத்தில் நான் அதிஸ்டசாலி என அவர் தெரிவித்துள்ளார்.

எனது பெற்றோர் மிகச்சிறந்த சமையல்திறன் மிக்கவர்கள் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் சுவையால் வழிநடத்தப்படும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பின்னணியை பொறுத்தவரை ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது சிலர் பொருட்களை சேர்க்க முடியாது சில பொருட்களை சேர்க்க முடியும் சுவைகள் சிலவேளை ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது தமிழ் கலாச்சாரத்திலிருந்து பாடங்களை கற்று நான் தயாரிக்கும் பல உணவு வகைகளில் அவற்றை சேர்த்துள்ளேன் ஐரோப்பிய உணவு வகைகளிலும் சேர்த்துள்ளேன் எனவும் அவர் தமிழ்கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.

 

 

இஸ்ரேல் தற்போது இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை !

இஸ்ரேலிற்கு பாரம்பரியமாக ஆதரவை வெளியிட்டு வந்த நாடுகளால் இஸ்ரேல் தற்போது இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

 

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே அமெரிக்க இஸ்ரேல் தனிமைப்படுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் இதனை தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேல் இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து கரிசனையடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம் என அவர் பதிலளித்துள்ளார்.

 

இது நியாயமான கேள்வி சர்வதேச அமைப்புகளில் இஸ்ரேலிற்கு ஆதரவாக செயற்படுகின்ற நாடு என்ற அடிப்படையில் நாங்கள் இஸ்ரேலிற்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதை பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலிற்கு கடந்தகாலங்களில் ஆதரவை வெளியிட்ட குரல்கள் கூடவேறுதிசையில் பயணிக்கின்றன எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

 

இது எங்களிற்கு கரிசனையளிக்கின்றது இது இஸ்ரேலின் நீண்டகால பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்களை பாதுகாக்கும் மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் அதேவேளை ஹமாசை தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதன் மூலமே இஸ்ரேல் சர்வதேச ரீதியில் தனிமைப்படுவதை தவிர்க்க முடியும் என சுலிவன் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும் ஒரு தலைப்பட்சமான பிரகடனங்கள் மூலம் அதனை அடைய முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை – அவுஸ்திரேலிய அரசாங்கம்

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

 

பாலஸ்தீன அதிகாரசபையை சீர்திருத்தவேண்டும் பணயக்கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்பற்றிஅவுஸ்திரேலியா பாலஸ்தீன தேசத்தைஅங்கீகரிக்கவேண்டும் என கிறீன்ஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

அவுஸ்திரேலிய இரண்டு தேசகொள்கைக்கு நீண்டகாலமாக ஆதரவுஅளித்து வந்துள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இந்த செயற்பாடு முன்னர் எப்போதையும் விட அவசியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

பாலஸ்தீனியர்களிற்கு மேலதிக உரிமைகளை வழங்கும் இரண்டு தேசக்கொள்கைகயை அங்கீகரிக்கும் ஐக்கியநாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வாக்களித்திருந்தது என தெரிவித்துள்ள பெனிவொங் எனினும் இதன் அர்த்தம் அவுஸ்திரேலியா ஓருதலைப்பட்சமாக பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது என்பதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் – சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர்

இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் விரிவான சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார்.

அதன்படி முள்ளிவாய்க்கால் விஜயத்தின்போது வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை ‘வட்டுவாகல் பாலம்’ எனும் மேற்கோளுடன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், ’15 வருடங்களுக்கு முன்னர் வட, கிழக்கில் விடுதலைப்புலிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து  ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இப்பாலத்தைக் கடந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது இந்த நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மிகக்குறுகியதொரு பகுதிக்குள் சுமார் 300,000 தமிழர்கள் அடைபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், போர் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதற்கு முன்னைய சில மாதங்களில் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது’ எனவும் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்களே வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் 6 மாதமேயான குழந்தை உட்பட பல குழந்தைகளும், சிறுவர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த 30 வருடகால யுத்தத்தில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத , வலிந்து காணாமலாக்குதல்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களைப் புரிந்துள்ளனர். இவற்றால் சுமார் 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 60,000 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்’ எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மே 17ம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் இதன் காரணமாக உண்மை நீதி இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்கு பதில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மௌனமாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்ட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் மேலும் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 18ம் திகதி நினைவேந்தல் தினத்திற்கு முன்னர் வடக்குகிழக்கில்நினைவேந்தல் நிகழ்வுகளை இலங்கை பொலிஸார் குழப்ப முயன்றனர் யுத்தத்தின்போது நிலவிய பட்டினி நிலையை குறிக்கும் விதத்தில் வழங்கப்படும் கஞ்சியை தயாரித்து வழங்கியமைக்காக நால்வரை கைதுசெய்து ஒருவாரம் தடுத்துவைத்திருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் சிலரும் ஏனையவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை தடை செய்யும் விதத்தில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள்கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிகழ்வுகளை தடுத்தனர் அல்லது மக்கள் அங்கு செல்வதை தடுத்தனர் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படி வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கையில் இடம்பெற்றது என்பதையும் அதன் அளவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் உடனடி நம்பகதன்மைமிக்க விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்,பாரியமனித புதைகுழிகளை தோண்டுவதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் ஒரு சுதந்திரமான வழக்குரைஞர் அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் பயங்கரவாததடைச்சட்டம் உட்பட துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு கடும் வேதனையைதுன்பத்தை ஏற்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் மேலும் இது நாட்டில் மேலும் துஸ்பிரயோகங்கள் நிகழும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள வழக்குரைஞர்கள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.