Multiple Page/Post

‘கன்னி கழியாத என்டொஸ்கோபி’ – டொக்டர் த சத்தியமூர்த்தி “அம்பியா? அந்நியனா?” தொடரும் குற்றச்சாட்டுகள்: “நான் உண்மைகளைச் சொன்னால் கொல்லப்படலாம்” யாழ் டொக்டர் வி நாகநாதன்

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தன்மீது வீண்பழிகள் சுமத்தியதாக அவ்வைத்தியசாலையில்; தற்போதும் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் டொக்டர் வி நாகநாதன் யூலை 25 அன்று குற்றம்சாட்டியுள்ளார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி இவ்வாறு பலர் மீதும் பாய்ந்துள்ளதாகவும் அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர் கையில் உள்ள முட்டை கூட அம்மிக்கல்லையும் உடைக்கும் எனத் தெரிவிக்கின்றார், மிகுந்த மனவுறுதி கொண்ட டொக்டர் வி நாகநாதன். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தியால் ஓகஸ்ட் 2017இல் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், டொக்டர் வி நாகநாதன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று குற்றம்சுமத்தி அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்ததோடு அவருக்கு வழங்கவேண்டிய சம்பளத்தையும் இடைநிறுத்தி வைத்;திருந்தார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி அதற்குப் பின் 2023 இல் இன்னுமொரு குற்றச்சாட்டையும் டொக்டர் வி நாகநாதன் மீது எழுப்பியிருந்தார். டொக்டர் வி நாகநாதன், தனது முகநூலில் தங்களுடைய ஸ்தாபனப் பணிக்கோவைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவதாக குற்றம்சாட்டி அக்கடிதத்தை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி இருந்தார்.

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி, டொக்டர் வி நாகநாதனுக்கு எதிராக பனிப்போர் தொடுக்க என்ன காரணம்? இதற்குப் பின்னாலும் ஒரு மோசடி அம்பலப்படுத்தப்பட்டது காரணமாக இருந்துள்ளது. டொக்டர் த சத்தியமூர்த்தி, டொக்டர் வி நாகநாதனை தற்காலிகமாக இடைநிறுத்தி அவரது சம்பளமும் நிறுத்தப்பட்ட ஓகஸ்ட் 2017க்கு ஆறு மாதங்கள் முன்பாக பெப்ரவரி 2017இல் “கைபடாத என்டஸ்கோபி இயந்திரம்: கன்னி கழிவது எப்போது” என்ற யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடியை அம்பலப்படுத்தும் அகரன் என்பவர் எழுதிய கட்டுரை புதுவிதி என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அக்காலகட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்தவர் இன்றும் அதே பதவியில் இருப்பவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. இந்த ஊழல் குற்றச்சாட்டுக் கட்டுரை பணிப்பாளர் டொக்டர் த சத்தியமூர்த்தியை வெகுவாகப் பாதித்திருக்கும் என்பது பொதுப்புத்திக்கு தெரிந்த விடயம். “இக்கட்டுரையை அகரன் என்ற பெயரில் எழுதியது புலனாய்வு ஊடகவியலிலும் தேர்ச்சி பெற்ற டொக்டர் வி நாகநாதன் அல்லது இவர் இக்கட்டுரைக்கான தகவலை அகரன் என்ற புனைப்பெயரில் எழுதியவருக்கு வழங்கியிருக்கு வேண்டும்” என்ற எண்ணப்பாடு அங்கு இருந்து என்கிறார் டொக்டர் வி நாகநாதன். ஆனால் அவர் அதனைத் தான் எழுதியதாகவோ அல்லது அதற்கான தகவல்களை வழங்கியதாகவோ குறிப்பிட மறுத்துவிட்டார். இந்தப் பின்னணியிலேயே டொக்டர் விநாகநாதன் சக மருத்துவர்களோடும் சக மருத்துவப் பணியாளர்களோடும் தகாதமுறையில் நடப்பதாகவும் இவருக்கு மனநோய் இருப்பதாகவும் குற்றம்சாட்டி பணிப்பாளர் த சத்தியமூர்த்தி இவரைத் தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தியதுடன் அவருடைய சம்பளத்தையும் எவ்வித மனிதாபிமானமும் காட்டாமல் நிறுத்தியுள்ளார்.

டொக்டர் த சத்தியமூர்த்தியால் வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீண்ட போராட்டத்தினூடாக வெற்றிகொண்ட டொக்டர் வி நாகநாதன் மருத்துவத்துறையில் யாழ் வைத்தியசாலையில் கட்டமைப்பு ரீதியான (பழிவாங்கல்கள்) செயல்கள் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டினார். இன்றும் இக்குற்றச்சாட்டுக்களை வைத்துவிட்டு அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிக்குத் திரும்புகின்றார். டொக்டர் த சத்தியமூர்த்தியின் நிர்வாகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் – பணியில் உள்ளவர்கள் ஒரு நச்சுச் சூழலிலேயே பணியாற்றுவதாக தெரிகின்றது. தானோ சத்தியமூர்த்தியோ ‘ஒரு குட் மோர்னிங்’ கூடப் பரிமாறிக்கொண்ட ஞாபகம் தனக்கில்லை என்கிறார் டொக்டர் வி நாகநாதன்.

பணிப்பாளர் டொக்டர் த சத்தியமூர்த்தி குற்றச்சாட்டுகளை டொக்டர் வி நாகநாதன் மீது மட்டும் எழுப்பவில்லை. இவ்வாண்டு ஏப்ரலில் டொக்டர் என் ஜெயகுமரன் தொழில்முறை தவறி தன்னால் சிகிச்சை அளிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளிகளை யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதாக டொக்டர் த சத்தியமூர்த்தி குற்றம்சாட்டி கடிதம் அனுப்பி இருந்தார். பொது அறிவின் அடிப்படையில் மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமான யாழ் நோயாளிகள் தொடர்ந்தும் மகரகம சென்று செக்அப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் அலைக்கழியாமல் அந்தச் செக்அப்பை யாழிலேயே செய்ய முடியும். ஆனால் அதனைச் செய்யாமல் டொக்டர் ஜெயக்குமரன் மீது குற்றம்சுமத்தி த சத்தியமூர்த்தி கடிதம் எழுதியது ஏன்? என்ற கேள்வி அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கேட்கப்படவில்லை. த சத்தியமூர்த்தியும் அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. “எனது கடமையைச் செய்கிறேன். குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது எனது பொறுப்பல்ல என்ற வகையிலேயே அப்பதில் அமைந்தது.

டொக்டர் அர்ச்சுனா எய்த அம்பில் சிக்கிய டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் மயூரன், டொக்டர் பிரணவன் வரிசையில் டொக்டர் த சத்தியமூர்த்தி தொடர்ந்தும் பலரினால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றார். முள்ளிவாய்க்கால் முடிவுவரை மருத்துவப் பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காத்தவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. இவர் மனித உரிமைக் கவுன்சிலில் அரசுக்கு சாதகமாக சாட்சியமளித்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனை யாரும் ஒரு தவறாகக் கருதவில்லை. தொடர்ந்தும் அவர் மக்களுக்கு சேவை வழங்க வந்திருப்பதை பலரும் வரவேற்றனர். அதன் காரணமாக இன்னும் பலருக்கும் டொக்டர் த சத்தியமூர்த்தி மீது ஒரு மென்போக்கு உள்ளது.

டொக்டர் என் ஜெயக்குமரன் யாழ் போதனா வைத்தியசாலையில், இடம்பெற்ற ஊழலை அம்பலப்படுத்தியதற்காகவே அவர் குடும்பத்தின் மீது கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு, குடும்பத்துடனேயே யாழில் இருந்து உயிருக்கு அஞ்சி ஓட நிர்ப்பந்திக்கப்பட்டார், இச்சம்பவம் டொக்டர் பவானி பணிப்பாளராக இருந்த போது அவரின் பின்னணியில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. 2012 இல் இடம்பெற்ற அச்சம்பவத்திற்கும் டொக்டர் பவானிக்குப் பின் 2015இல் பணிப்பாளராக பொறுப்பேற்ற டொக்டர் த சத்தியமூர்த்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. டொக்டர் ஜெயகுமரனுக்கும், டொக்டர் சத்தியமூர்த்திக்கும் எவ்வித முன் விரோதமும் இல்லை. அப்படியிருந்தும் டொக்டர் த சத்தியமூர்த்தி எதற்காக டொக்டர் என் ஜெயகுமரனைக் குற்றம்சாட்டி அக்கடிதத்தை ஏப்ரல் 2024இல் எழுதினார். டொக்டர் த சத்தியமூர்த்தி அப்பாவி ‘அம்பியா ?’மாபியா கும்பலைத் திருப்திப்படுத்த அந்த முறையற்ற கடிதம் அனுப்பப்பட்டதா? இல்லை அவர் ‘அந்நியனா’ அவரும் மாபியா கும்பலின் பிரதிநிதியா?
டொக்டர் த சத்தியமூர்த்தி யாழ் சைவ வேளாள மேட்டுக்குடியைச் சேர்ந்தவரல்ல. யாழ் போதனா வைத்தியசாலைக்கு இவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதில் யாழ் சைவ வேளாள மேட்டுக்குடிக்கு எப்போதும் ஒரு புகைச்சல் இருந்துள்ளது. இன்றும் இப்புகைச்சல் இருக்கின்றது. கிளிநொச்சியில் வாழ்ந்த மலையகப் பின்புலத்தைக் கொண்ட வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து மேலெழுந்தவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. அவர் பணிப்பாளராகப் பொறுப்பேற்றதன் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு சாதகமான பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகள் அனுமதிக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளும் உள்ளது. அவ்வாறான பல குற்றச்சாட்டுகளில் கை படாத என்டோஸ்கோபி இயந்திரம், கன்னி கழியாது சில ஆண்டுகள் அங்கு இருந்ததும் ஒன்று.

யாழில் பரீட்சை எடுத்து மருத்துவம் கற்கும் யாழ் மருத்துவ மாணவர்கள், ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்து மருத்துவம் கற்க வருகின்ற மாணவர்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட பெயர் குறிப்பிட விரும்பாத டொக்டர். ஏனைய தமிழ் மாவட்டங்களில் மருத்துவத்துறைக்கான வெட்டுப்புள்ளி யாழ் மாவட்டத்தைவிட குறைவாக இருப்பதால் அவர்கள் பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழகம் புகுந்தகாலம் முதல் நையப்புடைக்கப்பட்டு இரண்டாம் தரமானவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். அவர்கள் மருத்துவர்களாகி பதவிகளைப் பொறுப்பேற்றாலும் இந்தப் பேதமை அவர்களின் ஆழ்மனங்களில் இருக்கின்றது என்றும் அந்த வன்னி டொக்டர் தெரிவிக்கின்றார். அப்படி இருக்கையில் கிளிநொச்சியிலிருந்து மலையகப் பின்னணியோடு மருத்துவரான த சத்தியமூர்த்தி தன்னுடைய பதவியைத் தக்க வைப்பதென்பதே மிகுந்த நெருக்கடியானது.

நிலைமை இப்படி இருக்கையில், டொக்டர் த சத்தியமூர்த்தி அங்கிருந்து யாழ் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதனையும் எடுத்திருக்க முடியுமா? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. பல்வேறு இன்னல்கள் மத்தியிலும் தான் அடைந்த அந்த முக்கிய பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் யாராக இருந்தாலும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் டொக்டர் த சத்தியமூர்தி அங்கு வெளித்தெரியாத மருத்துவ மாபியாக்களின் சூழ்நிலைக் கைதியாக ஒரு ‘அம்பி’யாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையேல் டொக்டர் த சத்தியமூர்த்தியும் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கொண்டு அதற்கு அடிமைப்பட்டு அவரும் ஒரு ‘அந்நியனாக’ மருத்துவ மாபியாக்களில் ஒருவராக மாறியிருக்கலாம். டான் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டது போல் “நான் எனது கடமையைச் செய்கிறேன். வரும் குற்றச்சாட்டுகள் பற்றி அக்கறையில்லை” என்று தொடர்ந்தும் தத்துவம் பேச முடியாது. வடக்கில் உள்ள பதினைந்து லட்சம் வரையான மக்களின் மருத்துவம் உயிர்வாழ்வு யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக த சத்தியமூர்த்தியின் முடிவுகளில் உள்ளது. அவர் வடக்கு தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளார். 2015 முதல் அவர் சம்பாதித்த அசையும் அசையாச் சொத்துக்களை வெளிப்படுத்தி யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 2015 முதல் என்ன நடந்தது என்று சத்தியம் பேச வெண்டும்.

கடற்தொழில் அமைச்சராக இருந்தாலும், வடக்குக்கு பொறுப்பான அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வருகின்றார். தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் புறம்தள்ளப்பட்டு அமைச்சராக இருந்தாலும் மக்களால் அணுகக் கூடிய ஒருவராக டக்ளஸ் தேவானந்த பார்க்கப்படுகின்றார். யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய அபிவிருத்திச் சங்கமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளின் கைகளிலேயே உள்ளது. இவர்களோடு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்க்கு இன்று தெரிவிக்கையில், “டொக்டர் த சத்தியமூர்த்தியின் கைகளும் சுத்தமான கைகள் அல்ல. ஆனால் அங்கு பணிப்பாளர் பொறுப்பை ஏற்பதற்கு அவரிலும் பார்க்க மோசமானவர்களே உள்ளனர்” எனத் தெரிவித்தார். தாங்கள் டொக்டர் த சத்தியமூரத்தியை பணிப்பாளர் பதவியிலிருந்து இறக்குவதற்கு கோரியதாக குறிப்பிட்ட சமூக செயற்பாட்டாளர், அதனால் தான் தாங்கள் அவரை மகாணப் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாகவும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

டொக்டர் சத்தியமூர்த்தியின் தொழில்முறைக்கு முரணாண செயற்பாடுகள், தனிப்பட்ட பழிவாங்கள்கள் தொடர்பில் GMOA – ஜிஎம்ஓஏ டொக்டர் மதிவாணன் 30 வரையான பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தயாரித்து சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளார். இந்த விசாரணை தொடர்பிலேயே வெளிநாட்டில் கற்கைகளுக்காகச் சென்றிருந்த த சத்தியமூர்த்தி கற்கையை இடைநிறுத்தி அவசர அவசரமாக நாடு திரும்பினார். டொக்டர் அர்ச்சுனா பதவியை பொறுப்பேற்க முன்னமே அவரை யாழில் இருந்து விரட்ட விடாமுயற்சி எடுத்த ஜிஎம்ஓஏ, இறுதியில் அர்ச்சுனாவை வெளியேற்றும்வரை தென்மராட்சி மக்களின் உயிரைப் பணயம் வைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டது. ஆனால் டொக்டர் த சத்தியமூர்த்தி விடயத்தில் அவரைக் குற்றம்சாட்டுகின்ற அந்த அறிக்கை வெளியே வராமலேயே மூடி மறைக்கப்பட்டது. இந்த அறிக்கை மருத்துவ மாபியாக்கள் டொக்டர் த சத்தியமூர்த்தியை சூழ்நிலைக் கைதியாக்கும் ஆயதமா? என்ற கேள்வி எழுப்பப்படாமலிருக்க வாய்ப்பில்லை.

கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்ச்சியில் யூலை 25 டொக்டர் வி நாகநாதன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷியா உல் ஹஸனுடன் மேற்கொண்ட உரையாடல் மருத்துவத்துறையை குறிப்பாக மருத்துவ மாபியாக்களின் பழிவாங்கல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தி உள்ளது. டொக்டர் வி நாகநாதன் மேலும் தெரிவிக்கையில் சிறுநீரக மாபியாக்கள், கருவள மாபியாக்கள் எனப் பல்வேறு ஊழல்கள் பற்றியும் பேசினார். மேலதிக தகவல்களை வெளியிடுவது தனது உயிருக்கும் ஆபத்தாக முடியும் என்கிறார் டொக்டர் வி நாகநாதன். வரும்நாட்கள் அவருடைய பணிக்கும் உயிருக்கும் சவாலாக அமையுமா? என்பதை காலம்குறித்துக்கொள்ளும்.

தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள்: த சித்தார்த்தன், எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், செ அடைக்கலநாதன், செ கஜேந்திரன், இவர்களின் அடிப்பொடிகள் தேசியம் பேசாதவர்கள்: ரா அங்கஜன் அவர் அடிப்பொடிகள், இவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு ரமேஸ் பத்திரண சென்று மக்களின் குறைகளை விசாரிப்பதை விரும்பவில்லை. அதற்குக் காரணம் டொக்டர் த சத்தியமூர்த்தி, டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் மயூரன், டொக்டர் ராஜீவ் போன்றவர்கள் இவர்களுக்குக் கொடுத்த அழுத்தம். இவர்களோடு மலையகப் பெண்களுக்கு குளியல் அறையை மறுத்து அவர்கள் வெளியே நீராடுவதை சிசிரிவியில் பதிவுசெய்து அச்சிறுமிகளை துன்புறுத்திய ஆறு திருமுருகன் நெருங்கிய நட்பிலும் உள்ளார். அண்மையில் அபயம் என்ற அறக்கட்டளை மேலுமொரு ஸ்கானிங் மெசினை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்திருந்தது.

மேற்குறிப்பிட்டவர்களுடைய பிறந்த தினங்களில் பாராட்டு நிகழ்வுகளில் ஆளுக்கு ஆளாள் துதிபாடும் ஆறுதிருமுருகன் தனது பெயருக்கு வெள்ளையடிக்க அந்த ஸ்கானிங் மெசின் வழங்கப்பட்ட புகைப்படத்திலும் தன்னைச் செருகிக் கொண்டார். ஆனால் அந்த மெசினை வாங்கிக்கொடுத் கொடைவள்ளல் அங்கில்லை. இந்த ஸ்கானிங் மெசினில் யாருடைய கையாவதுபடுமா? அல்லது அதுவும் என்டோஸ்கோபி மற்றும் சாவகச்சேரியில் உள்ள மெசி;ன்கள் போல் மூடிக்கட்டி வைக்கப்படுமா என்பதை காலம் தெளிவாகச் சொல்லும். வழித்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு அதனை பொறுக்கிக்கொண்டு சென்று விற்கும் மாபியாக்கள் எல்லாம் ஓரணியில் திரள்கின்றனர். இவர்களுக்கு வக்காலத்து வாங்க கள்ள உறுதி முடிப்பதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கேட்ட குமாரவடிவேல் குருபரன் தலைமையிலான அப்புக்காத்துக்கள் பைலும் கையுமாகச் சுற்றுகிறார்கள். தமிழ் தேசியத்தை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியுமா?

“நான் பதவியை விட நாட்டை நேசிக்கிறேன்.” – ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியது குறித்து முதன்மையாக பைடன் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாட்டு மக்களுக்கு முதல்முறையாக   உரையாற்றியபோது பைடன்,

“இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான நேரம் இது, அவர்களுக்கு வழிவிடுவதே சிறந்தது என்று நான் முடிவு செய்தேன்.

நமது தேசத்தை ஒன்றிணைக்க அதுவே சரியான வழியாகும் என்பதற்காக விலகினேன். தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஜனநாயகத்தை காப்பதற்காகவே அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளேன். பதவியை நான் மதித்தாலும், அதைவிட நாட்டை நேசிக்கிறேன்.

ஜனாதிபதியாக அமெரிக்க மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன், ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பது பதவியைவிட முக்கியமானது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடம் உள்ளது.

கமலா ஹாரிஸ்(kamala harris) மிகவும் அனுபவம் கொண்டவர், திறமையானவர். துணை ஜனாதிபதியாக அவரது செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. தற்போது அமெரிக்காவை வழிநடத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தாண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த பல ஆண்டுகள் அமெரிக்கா மற்றும் உலகின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய தேர்தல். நேர்மை, கண்ணியம், நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியற்றை அமெரிக்க மக்கள் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சிறுவர்களிடையே குறைவடையும் நோயெதிர்ப்புச் சக்தி – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

உலகளாவிய ரீதியில் உள்ள சிறார்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அதன்படி, உலகளாவிய ரீதியில் சிறுவர் நோய்த்தடுப்பு பாதுகாப்பு 2023 ஆம் ஆண்டு ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2019 ஆம் ஆண்டு தொற்றுநோக்கு முந்தைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, 2.7 மில்லியனுக்கும் அதிகளவான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2022 ஆம் ஆண்டில் தடுப்பூசிக்கூட செலுத்தப்படாத சிறுவர்களின் எண்ணிக்கை 13.9 மில்லியனாக காணப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டில் 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

 

இதனால் அம்மை நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் அதேபோன்று, 31 நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, 75 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு இல்லை எனவும், தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

அச்சுறுத்தும் நிபா வைரஸ் – அறிவிக்கப்பட்டது அவசரகால நிலை!

இந்திய மாநிலமான கேரளாவில் சுகாதார அவசர கால நிலையை அம்மாநில சுகாதார அதிகாரிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் 60 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜோர்ஜ் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வைரஸ் தொற்றில் இருந்து விடுபட, நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், முகக்கவசம் அணியுமாறும் சுகாதாரத் துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

 

இஸ்ரேல் , பலஸ்தீன  பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது – சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

இஸ்ரேல் , பலஸ்தீன  பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது என்பதால் அதனை விரைவில் திரும்பப் பெற வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை, சர்வதேச நீதிமன்றம் நேற்று (19.07.2024) பிறப்பித்துள்ளது. இதற்கமைய, சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஆலோசனைக் கருத்தின் காரணமாக, சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலுக்கான ஆதரவு பலவீனப்படுத்தப்படலாம்.

அதேவேளை, சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் நவாஃப் சலாம், பலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து 15 நீதிபதிகள் கொண்ட குழு வழங்கிய கட்டுப்பாடற்ற ஆலோசனைக் கருத்தை நேற்று வாசித்துள்ளார்.

இதற்கமைய, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலிய குடியேற்றங்களை கட்டியெழுப்புதல் மற்றும் விரிவுபடுத்துதல், அப்பகுதியின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல், நிலங்களை இணைத்தல், நிரந்தரக் கட்டுப்பாட்டை விதித்தல் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகள் உட்பட பல கொள்கைகள் சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக நீதிபதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், சர்வதேச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவை மறுக்கும் விதத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, “யூத மக்கள் தங்கள் சொந்த நிலத்தினை ஆக்கிரமிப்பவர்கள் அல்ல, எமது நித்திய தலைநகரான ஜெருசலேமிலிலோ, யூதேயாவிலோ மற்றும் சமாரியாவில் உள்ள எங்கள் முன்னோர்களின் நிலத்திலும் நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

மேலும், பல இஸ்ரேலிய அரசுப் பேரவையின் அமைச்சர்கள் மற்றும் குடியேறிய தலைவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக கண்டித்துள்ளனர். அதுமாத்திரமன்றி, சிலர் இதற்கு பதிலடியாக மேற்கு கரையை உடனடியாக முறையாக இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், மே மாதம், தெற்கு காசாவின் ரஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்றத்தை மீறி காசா, ரஃபா உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

மௌனம் சம்மதமல்ல: “எனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து என்னை யாழில் இருந்து விரட்டியது டொக்கடர் சத்தியமூர்த்தி அல்ல, மெடிகல் மாபியா” டொக்டர் ஜெயகுமரன்

யாழில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன் வீட்டை அடித்து நொருக்கி கழிவு எண்ணை ஊற்றி தன்னை விரட்டியது டொக்டர் த சத்தியமூர்த்தி அல்ல என்று டொக்டர் நடராஜா ஜெயகுமரன் இன்று யூலை 19 இணையத்தளப் பதிவில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சமூகவலைத் தளங்களில் பரவியுள்ள இந்தத் தவறான செய்தியால் தன்னுடைய நன்மதிப்பு பாதிக்கப்பட்டதுடன் தனக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளதாக டொக்டர் சத்தியமூர்த்தி தேசம்நெற்றுக்கு அனுப்பிய குறும் செய்தியில் இன்று யூலை 19 குறிப்பிட்டுள்ளார்.

நேற்று யூலை 18 மாலை கப்பிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்வுக்கு நேரடியாக வந்து நேர்காணல் வழங்கிய மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயகுமரன், நேர்கண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் சியா உல் ஹஸ்ஸன் 2012இல் வீட்டை அடித்து நொருக்கி எரித்தமை தொடர்பாக அழுத்திக் கேட்டதுடன் டொக்டர் சத்தியமூர்த்தியுடைய பெயரையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார். அப்போது டொக்டர் நடராஜா ஜெயகுமரன் மௌனமாகவே இருந்தார். அந்த ஒளிப்பதிவு டொக்டர் சத்தியமூர்த்தியே டொக்டர் ஜெயகுமரனை வெளியேற்றியத்தின் பின்னணியில் இருந்தார் என்பதை உருவகப்படுத்தியது.

டொக்கடர் அர்ச்சுனாவின் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகின்ற நிலையில், அர்ச்சுனாவும் டொக்டர் சத்தியமூர்த்திக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ள நிலையில், டொக்டர் சத்தியமூர்த்தி மிகத் தவறாக குற்றம்சாட்டப்பட்டார். நேர்காணலை மேற்கொண்ட சியா உல் ஹஸ்ஸனோ அல்லது புற்றுநோய் நிபுணரோ இரு மணிநேரம் வரை நீடித்த நேர்காணலில் இதனைத் தெளிவுபடுத்தத் தவறியிருந்தனர்.

இந்நிகழ்ச்சி டொக்டர் சத்தியமூர்த்தி புற்றுநோய் நிபுணர் நடராஜா ஜெயகுமரன் அவர்கள் தொழில்முறைக்கு மாறாக தான் சிகிச்சை அளித்த நோயாளிகளை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புகின்றார் என்று இவ்வாண்டு மே மாதம் குற்றம்சாட்டி எழுதப்பட்ட கடிதம் தொடர்பாகவே அமைந்தது. அச்சமயத்தில் டொக்டர் அர்ச்சுனாவின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல்கள் அம்பலப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி, தானும் யாழில் இருந்து வலிந்து துரத்தப்பட்டதை புற்றுநோய் நிபுணர் நடராஜா ஜெயக்குமரன் அந்நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரையாடல்களுக்கு மத்தியில் தனது வீடு அடித்து, நொருக்கி, எரிக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், அதனால் யாழில் இருந்து வெளியேறியதாகவும் புற்றுநோய் நிபுணர் ஜெயகுமரன் குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில் அந்த வீடு உடைக்கப்பட்ட பிரச்சினைக்கும் டொக்டர் சத்தியமூர்த்தியுடைய கடிதமும் தொடர்புபடுத்தப்பட்டதுடன் டொக்டர் சத்தியமூர்த்தி வீடுடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுவதாக அந்த நேர்காணல் நகர்ந்தது. இது தொடர்பில் புற்றுநோய் நிபுணர் ஜெயகுமரன் மௌனமாகவே இருந்தார். இதுவே டொக்டர் சத்தியமூர்த்தி மீது இந்த வீண்பழி விழக் காரணமானது.

ஆனால் அதனைத் தற்போது தெளிவுபடுத்தியுள்ள டொக்டர் ஜெயகுமரன், என்னை விரட்டியடித்ததும் எனக்கு தவறான முறையில் கடிதம் அனுப்பியதும் இரு முற்றிலும் வேறுபட்ட சம்பவங்கள் என்றும் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

அந்நேர்காணலில் யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்களை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்து வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர் யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாடினார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன். 2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய இவர் அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்ததால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்வில் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவரின் பெயரைச் சொல்வதற்கே அருவருப்படைந்த டொக்டர் ஜெயகுமரன், பதவியைக் குறிப்பிட்டே இந்த விமர்சனத்தை வைத்தார். நேர்கண்ட சியா உல் ஹஸ்ஸன் டொக்டர் சத்தியமுமூர்த்தியின் பெயரைக் குறிப்பிட்டு இக்குற்றச்சாட்டை வைத்த போது டொக்டர் ஜெயக்குமரன் மௌனமாக இருந்தார். மௌனம் சம்மதமாக பார்வையாளர்களால் விளங்கிக்கொள்ளப்பட்டது.

தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால் தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருவதாகவும் டொக்டர் ஜெயகுமரன் அதில் தெரிவித்தார்.

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் டொக்டர் அர்சுனாவால் அம்பலத்துக்கு வந்ததையடுத்து யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது சகோதரன் இராசரத்தினம் பிரகாஸ் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் முதலுதவிச் சிகிச்சை கூட வழங்கபடாமல் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாமல் எட்டு மணி நேரத்துக்குப் பின் இரத்தப்போக்கால் உயிரிழந்த செய்தி யூலை 14 தேசம்நெற் இல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் டொக்டர் கிருசாந்தி தங்களது தந்தையர்களுடைய புற்றுநோய்யை குணமாக்குவதிலோ நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை என கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்மகன்கள் நேரடிச்சாட்சியமளித்தனர். இவர்கள் மகரகமையில் டொக்டர் நடராஜா ஜெயகுமரனின் சிகிச்சையால் தங்கள் தந்தையர் குணமமைந்ததாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை நம்பியிருந்திருந்தால் தங்கள் தந்தையர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என்றும் மகன்மார் தெரிவித்தனர்.

புற்றுநோய்க்குள்ளான நோயாளியின் கணவர் தன்னுடைய மனைவிக்கு நடந்த கொடுமையை விபரிக்கையில் “ஆறாவது தடவை மருந்து ஏற்றும் காலம் தவறிவிட்டது” என்று டொக்டர் கிருசாந்தி தெரிவித்து இருக்கிறார். “அப்ப என்ன செய்யலாம் டொக்டர்?” என்று கணவர் கேட்க, “வீட்டை கூட்டிக்கொண்டு போய் நாளைக் எண்ணிக்கொண்டிருங்கோ” என்று அலட்சியமாக அதிகாரத்தோரணையில் தெரிவித்ததாக அக்கணவர் கண்கலங்கியவாறு தெரிவித்தார். அதன் பின் இந்தியா அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற போது “எங்கேயோ எல்லாம் போய் நீங்கள் ரீட்மன்ட் எடுத்திட்டு வாறத பார்க்கவோ நான் இங்க இருக்கிறன்” என்று டொக்டர் கிரிசாந்தி தெரிவித்ததாக அக்கணவர் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு வந்து உதவும்படி கேட்ட போதும் டொக்டர் கிருசாந்தி மறுத்துள்ளார். எல்லாம் கையறுந்த நிலையில் மகரகம புற்றுநோய் மருத்துவ நிலையத்துக்குச் சென்றபோது காலம் கடந்துவிட்டது. அங்கும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை கூடுதாலக இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் சிஅங்கு மரணத்தை தழுவினார்.

டொக்டர் ஜெயக்குமரனின் நன்மதிப்பை அறிந்து பலர் யாழில் இருந்து மகரகம சென்று சிகிச்சை எடுக்கின்றனர். முக்கிய சிகிச்சைகள் முடிவடைந்து குணமானவர்கள் ஊர் திரும்பியபின் வழமையான பரிசோதணைகளை யாழ் தெல்லிப்பளையில் செய்யும்படி மகரமக வைத்தியசாலை கடிதம் கொடுத்து விட்டால், யாழ் தெல்லிப்பளையில் இந்த நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்குவதாக டொக்டர் நடராஜா ஜெயக்குமரன் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் டொக்டர் சத்தியமூர்ந்தி உட்பட ஐவர் கையெழுத்திட்டு டொக்டர் நடராஜா ஜெயகுமரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் தேவையற்ற விதத்தில் தன்னுடைய நோயாளிகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒவ்வொரு நோயாளிக்கும், தனக்கு பொருத்தமான வசதியான இடத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. ஆனால் டொக்டர் சத்தியமூர்த்தி சிகிச்சை முடிவின்பின் மேலதிக சிகிச்சைகளை யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாழில் வழங்குவதற்கு ஏன் மறுப்புத் தெரிவிப்பது நோயாளர்களுக்கு மிகுந்த கஸ்டத்தையும் செலவீனத்தையும் ஏற்படுத்துகின்றது. இவர்கள் மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக அங்குள்ள கண்ணியமான கறைபடியாத மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலும் யாழ் நோக்கி வரும் சிறந்த மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுவடைந்து வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் என்ன நடந்ததோ அதுவே தனக்கு 2012 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிகழ்ந்தது என்கிறார் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன். தான் தொடர்ச்சியாகவே இந்த டொக்டர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஐவர் கையொப்பமிட்ட கடிதம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். டொக்டர் அர்ச்சுனாவை மிரட்டுகின்ற மருத்துவ மாபியாக்களே டொக்டர் ஜெயகுமரனை யாழில் இருந்து வெளியேற்றுவதிலும் ஈடுபட்டிருந்தது. 2012இல் சமூகவலைத்தளங்கள் ஆதிக்கம் பெற்றிருந்தால் தானும் டொக்டர் அர்ச்சுனா போன்றே செயற்பட்டிருப்பேன் என்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன்.
கபிடல் தொலைக்காட்சியின் தவறான திசைதிருப்பும் நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டவர்கள் தற்போது செய்தியின் உண்மைத் தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம். மகரகம புற்றுநோய் மருத்துவநிபுணர் நடராஜா ஜெயகுமரனின் வீடு அடித்து நொருக்கப்பட்டு கழிவு எண்ணையும் ஊற்றப்பட்டது என்பது முற்றிலும் உண்மை. அது அவர் அங்கு நடைபெற்ற ஊழலை வெளிக்கொணர்ந்ததால் அதற்கான பழிவாங்கலாக மருத்துவ மாபியாக்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் டொக்டர் ஜெயக்குமரனின் வீடு தாக்கப்பட்டு அவர் யாழில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் டொக்டர் சத்தியமூரத்திக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்ற உண்மை பதிவுசெய்யப்பட வேண்டும்.

“வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்த வேண்டும்” – மீனாக்ஷி கங்குலி

“வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்த வேண்டும்” என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டுவருவதாக, அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தமது எதிராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதாகவும் மீனாக்ஷி கங்குலி இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக நாட்டின் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர் கடந்த காலத்தில் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக நாட்டில் சிறியளவு முன்னேறங்கள் ஏற்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. அவை விசயம் தெரியாம (தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு) பெரிசாக்கி கதைக்கினம்” புளொட் தலைவர் த சித்தார்த்தன்

 

வடக்கின் சுகாதார நிலைகள் பற்றிக் கேட்டறிய நேற்று யூலை 18 சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண யாழ் விஜயம் மேற்கொண்டிருந்தார் அங்கு அவரைச் சந்தித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி சார்பில் எஸ் சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ராமநாதன் அங்கஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் இவர்கள் வடக்கில் மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகளோ, பாதிப்போ இருப்பதாக எதுவும் குறிப்பிடவில்லை.

 

மாறாக புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்ற போது ரமேஸ் பத்திரணவின் தந்தைக்கு புகழாரம் சூட்டியதோடு தங்களுடைய பிரதேசத்துக்கு வந்ததற்கும் நன்றியும் தெரிவித்தார். தென்மராட்சி மக்களும் மற்றவர்களும் ஏதோ விசயம் தெரியாமல் கொஞ்சம் எல்லாத்தையும் பெருப்பித்துப் போட்டினம். பிரச்சினை இருக்குத் தான். ஆனா பிரச்சினை இல்லை” என்று மிகத் தெளிவாக மிக உறுதியாக சிரித்து சில்லெடுத்தார். இலங்கையில் உள்ள முதகெலும்பற்ற பிரயோசனமற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயரெடுத்த சித்தார்த்தனுக்கு ஊன்றுகொலாக பா உ சிறிதரனும் அங்கு வந்திருந்தார். பக்கத்தில் உள்ள தென்மராட்சி மக்களின் குரலுக்கு செவிமடுக்காத எஸ் சிறிதரன், லண்டனில் தனது மகனை படிப்பிக்கும் கோயில்காரரின் தேருக்கு லண்டனுக்கு காவடி எடுக்கின்றார். பா உ எஸ் சிறிதரன் லண்டன் வந்தால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றை நடத்த லண்டனில் வாழும் தென்மராட்சி மக்களும் அவர்களின் நண்பர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் தென்மராட்சி மக்களதும் தமிழ் மக்களதும் முதகில் குத்திவிட்டதாக கிளிநொச்சியில் வாழும் மனிதஉரிமைப் பாதுகாவலர், செயற்பாட்டாளர் த கிருஷ்ணன் தேசம்நெற்க்கு யூலை 18 வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். பா உ க்கள் எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், த சித்தார்த்தன், ராமநாதன் அங்கஜன், செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் அவர்களது கட்சிகளும் தாங்களுக்கு தமிழ் மக்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறையில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டிவிட்டார்கள் என த கிருஷ்ணன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வைத்தியசாலை ஐரோப்பிய வைத்தியசாலைகளின் தரத்தில் இருப்பதாக ரமேஸ் பத்திரண தெரிவித்ததை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ இனிமேல் வயிற்றுவலி வந்தால், பாம்பு கடித்தால், பல்லுக் கொதித்தால், நெஞ்சு நொந்தால், பிள்ளைப்பேறு என்றால் அருகில் உள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். அந்த டொக்டர் கையெழுத்துப் போட்டுவிட்டு ப்ரைவேட்டுக்கு போயிருந்தால், அவர் வரும்வரை இவர்கள் காத்திருக்க வேண்டும். அப்படி வந்து பார்த்து சரிவராது என்று சொன்னால் நீங்கள் யாழ்ப்பாணம் போதனா வைதியசாலைக்கு கொண்டு போய் உயிர் தப்பி வந்து சொல்லுங்கோ. “பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு அவை விசயம் தெரியாம கதைக்கினம்” என்று புளொட் சித்தார்த்தனும் சிறிதரனும் அங்கஜனும் சொல்றதை நாங்களும் ஏற்றுக்கொள்வோம்.

முதல்ல பென்ஸ்காரை குவிச்சு வைத்துக்கொண்டு சைக்கிள் சின்னத்தில தமிழ் தேசியம் பேசிய பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ஐரோப்பிய தரத்தில் இருக்கிற யாழ் தேசிய மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள். இனிமேல் வடக்கில இருக்கின்ற ஒரு பாரளுமன்ற உறுப்பினரும் அரசாங்க வைத்தியசாலையைத் தவிர வேறு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதற்கு உரிமை இருக்கிறதோ அதுதான் உங்களுக்கும்.

குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

துணை ஜனாதிபதி வேட்பாளராக 38 வயதான ஒஹியோ செனட் உறுப்பினர் ஜேடி வென்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

மில்வொக்கியில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் அதிகூடிய வாக்குகளை பெற்றதை அடுத்து இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த முறை தேர்தலில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடனிடம் தோல்வியடைந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் அவரை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

 

இதேவேளை, இரகசிய ஆவணங்களை மறைத்து வைத்திருந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

புளோரிடா நீதிமன்றத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

 

இந்தத் தீர்ப்பானது துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் உள்ளிட்ட இரகசிய ஆவணங்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ட்ரம்ப் நிரபராதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2021 ஆம் ஆண்டில் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் புளோரிடாவிலுள்ள அவரது தங்குமிடத்தின் களஞ்சிய அறையிலிருந்து பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக 40 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

போல் சத்தியநேசன்: இன, மத, சாதி பேதங்கள் கடந்த மானிடன்!

நான் 1991 ஜனவரியில் பிரித்தானிய மண்ணுக்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்த போது, இந்த மண்ணில் எனக்கு முதன் முதல் அறிமுகமாகியவர்கள் தயாமயூரனும், போல் சத்தியநேசனும். அப்போது போல் சத்தியநேசனை எனக்கு யாரென்றே தெரியாது. இரு வாரங்களாக இன்னுமொரு பாதுகாப்பான நாட்டினூடாக ஸ்பெயினூடாக பிரயாணம் செய்ததன் காரணத்தால் நாங்கள் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சு முயற்சி எடுத்தது. நாங்கள் ஆறுபேர் தரையிறங்கி இருந்தோம். அந்த 1991 லண்டனில் வரலாறு காணாத பனிகொட்டி தலைநகரே ஸ்தம்பித்து இருந்தது. நாங்கள் தடுத்து வைத்திருந்த 14 வரையான நாட்களில் முதன் முதலாக ‘சீரியல்’ என்ற உணவை பார்த்தோம். அதற்கு பால் ஊற்றி சாப்பிட வேண்டும் என்பதும் தெரியாது. இலங்கையிலிருந்து கொண்டு வந்த சேர்ட், சறம், சப்பாத்து அணிந்து எதிர்காலம் பற்றிய ஏக்கத்தில் பேதலித்துப் போயிருந்த காலம். உறவுகளைப் பிரிந்து எதிர்காலம் கேள்விக்குறியாகி நின்றது.

அப்போது போல் சத்தியநேசனும் மற்றும் சிலரும் பிரித்தானியாவில் தமிழ் அகதிகளுக்கான அமைப்புகளை நிறுவி பெரும்தொகையில் வந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார். வசந் என்னுடைய மூத்த சகோதரன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சார்ந்தவர். அவரோடு பயிற்சி பெற்றவர், நண்பர் தயாமயூரன். நான் லண்டன் வந்திறங்கியதும் அவரைத் தொடர்புகொண்டேன். அப்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வானொலிச் செய்திச் சேவைகளை ஆரம்பித்து இருந்தது. அன்று தகவல்தொழில்நுட்பம் வளராத காலகட்டம். தொலைபேசி, கடிதம் என்ற பாரம்பரிய தொடர்புசாதனங்களே வெளிநாடு வந்த தமழிர்களுக்கு பயன்பாட்டில் இருந்தது. இலங்கைச் செய்திகளைச் சேகரித்து அவற்றை தொலைபேசியில் பதிவிட்டு வெளியிடுவார்கள். அந்தத் தொலைபேசிக்கு போன் பண்ணினால் பதிவு செய்யப்பட்ட செய்தியைக் கேட்கலாம். இந்தச் செய்திப் பதிவை தற்போது பெர்ஸ்ற் ஓடியோ கலையகம் – பாமுகம் நடாமோகனே பதிவு செய்து வந்தார். நடாமோகனுடனேயே போல் சத்தியநேசனும் அக்காலத்தில் சேர்ந்து செயற்பட்டார். நடாமோகன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகச் செயற்பாட்டாளராக இருந்ததால் போல் சத்தியநேசனும் கழகச் செயற்பாட்டாளர் ஆனார். வெளிநாடுகளுக்கு ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரே அதிகம். புளொட் அமைப்புக்குள் ஏற்பட்ட பிளவும் அதன்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய விடுதலை அமைப்புகளை கொன்றொழித்ததாலும் போராடச் சென்ற எழுபதுகளுக்கு முன் பிறந்த அத்தலைமுறையினர் தங்கள் உயிரைப் பாதுகாக்க மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அதனால் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளின் செல்வாக்கு சற்று குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது.

அதன் பின் 1980க்களுக்கு முன் பிறந்த தலைமுறையினர் என் போன்றவர்கள் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தோம். அவ்வாறு புலம்பெயர்ந்த எங்களுக்கு எங்களுக்குப் பின் புலம்பெயர்ந்தவர்களுக்கும் போல் சத்தியநேசனின் உதவிகள், செயற்பாடுகள் புதிய மண்ணைப் பற்றிக்கொள்வதற்கான ஆதாரமானது. இந்த உதவிகளுக்கு பின்னால் இன்னும் பலருடைய உழைப்புகளும் இருந்தாலும் போல் சத்தியநேசன் இதனை தனது முழுநேரக் கடமையாகவே செய்து வந்தார். நான் உட்பட என்னுடன் வந்த ஆறு பேரும் அரசியல் தஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரு வாரங்களில் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோம். அடுத்த ஆறு ஆண்டுகள் என்னை நிலைப்படுத்திக் கொள்ள, வந்த கடன் அடைக்க, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைக்க, சுற்றி உள்ளவர்களின் சுமைகளைக் குறைக்க என்று வேலை, படிப்பு என்று ஓடியது.

பின் படிப்படியாக எனது சமூக, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பிக்க போல் சத்தியநேசனுடனான உறவு வலுக்க ஆரம்பித்தது. 1997இல் தேசம் சஞ்சிகையை ஆரம்பித்தேன், 2000 மாம் ஆண்டுகளில் லண்டன் உதயனில் கடமையாற்றினே;. அதன் பின் லண்டன் குரல் பத்திரிகையை ஆரம்பித்தேன். 2007 இல் தேசம்நெற், 2023இல் தேசம்திரை என்று எனது ஊடகப் பயணம் தொடர எனக்கும் போலுக்குமான உறவு நெருக்கமானது. போல் சத்தியநேசன் பற்றிய செய்திகள் அன்றைய எனது ஊடகங்களில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அப்போதெல்லாம் பெரும்பாலான நிகழ்வுகளில் போல் சத்தியநேசனும் நானும் கலந்துகொள்வோம். போல் சத்தியநேசனுக்கு மிகப் பிடித்த விடயம் ‘மைக்’ அதனை வாங்கினால் வார்த்தைகள் சரளமாக கிறிஸ்தவத் தமிழில் மடைதிறந்து பாயும். கருத்துக்களுக்கு பஞ்சமில்லாத, எந்தச் சூழலிலும் தனது கருத்தை லாவகமாக வைத்துவிடுவார். அந்தக் கருத்துக்களில் பெரும்பாலும் ஒரு முற்போக்கான அணுகுமுறை அல்லது மக்கள் நலன் இருக்கும். அது எனது ஊடகத்தில் அடுத்த இதழில் செய்தியாகிவிடும்.

அகதிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் செயற்பாடுகள், அகதிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், தமிழ் மக்களை இம்மண்ணின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் விடயங்களில் போல் சத்தியநேசன் மிகத்தீவிரமாகச் செயற்பட்டவர்.

போல் சத்தியநேசனின் பாரிய முயற்சிகளில் ஒன்று தமிழ் மக்களிடையே உருவான வன்முறைகளைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சி. அதில் பாரிய வெற்றியையும் போல் சத்தியநேசன் அடைந்தார். ஒப்பிரேசன் என்வர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கொட்லன்ட் யாட்டின் வன்முறைக்குழக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அத்திவாரம் இட்டவர் போல் சத்தியநேசன். லண்டன் தெருக்களில் தமிழ் இளைஞர்களின் இரத்தம் சொட்டுவதை அவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்தியதில் போல் சத்தியநேசனின் பங்கு அளப்பெரியது. என்னையும் எனது குடும்பத்தையும் கொல்லுவோம் என்று என்னை மிரட்டிய குழுவைத் தேடிப் பிடித்து நண்பர் டேவிட் ஜெயத்தின் உதவியோடு சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது என்னோடு கூட வந்து அந்த 30 வரையான இளைஞர்களோடும் உரையாடி அதனை சுமூகப்படுத்தியதில் போல் சத்தியநேசனின் பங்கு முக்கியமானது. நண்பர் தோழர் டேவிட் ஜெயம் இல்லையென்றால் அது சாத்தியமாகியிராது.

அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட விடயம் ‘தைத் திங்கள்’ கொண்டாட்டம். இதனை 20 ஆண்டுகளுக்கு முன்னரேயே திட்டமிட்டு கடந்த 20வது ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீற் நோத்தில் கொண்டாடி வந்தவர் போல் சத்தியநேசன். தைத் திருநாளன்று ஈஸ்ற்ஹாமில் உள்ள அலங்காரத் தெருவிளக்குகளை மேயரை அழைத்து வந்து ஏற்றி தமிழர் திருநாளான தைப்பொங்கலை ஈஸ்ற்ஹாமின் விழாவாக மாற்றியவர் போல் சத்தியநேசன் என்றால் மிகையல்ல. யூலை 12 போல் சத்தியநேசனுடைய நினைவுக் கூட்டம் அதே தைப்பொங்கல் விழா கொண்டாடப்படும் வீதியில் அவருடைய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் உரையாற்றிய ஈஸ்ற்ஹாம் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் வேர்க் அன் பென்சன் (Work & Penssion Minister) அமைச்சருமான ஸ்ரிபன் ரிம்ஸ் (Stephen Timms) தனது உரையில் அதனை நினைவு கூர்ந்தார். அங்கு உரையாற்றிய ஏனைய கவுன்சிலர்கள் பலரும் அதனை நினைவு கூர்ந்தனர்.

போல் சத்தியநேசனிடம் உதவி, ஆலோசணை பெறாத ஒருவர் ஈஸ்ற்ஹாமில் இருப்பாரா என்பது சந்தேகம். அவருக்கு என்று ஒரு வீடு இருந்தாலும் ஹைஸ்ரிட் நோத் (High Street North) தான் போலின் முகவரி. அதிலுள்ள ஏதாவது ஒரு கடையில் அலுவலகத்தில் போலைக் காணலாம். இவ்வாறு போல் சத்தியநேசன் பற்றிய கதையாடலை அடுக்கிக் கொண்டே போகலாம். என்னைப் போல், போல் சத்தியநேசனை அறிந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதையிருக்கும். போல் சத்தியநேசன் இல்லாமல் பிரித்தானிய தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்ய முடியாத அளவுக்கு வரலாறான தோற்றத்தால் மட்டுமல்ல பண்பாலும் உயர்ந்த மாநிடன். ஒரு கிறிஸ்தவ தமிழனாக இருந்த போதும் ஈஸ்ற்ஹாமிலும் லண்டனிலும் உள்ள சைவ ஆலயங்களின் திருவிழாக்களில் போல் சத்தியநேசனைக் காணலாம். பள்ளிவாசலிலும் காணலாம். அதனால் தான் ஈஸ்ற்ஹாமை போல் புண்ணிய பூமி என்று அடிக்கடி குறிப்பிடுவார்.

போல் சத்தியநேசன் ஒரு பெருமிதமற்ற மனிதர். அவர் ஒரு போதும் பணத்திற்கு ஆசைப்பட்டவரும் கிடையாது, அதற்கு பணிந்துபோனவரும் கிடையாது. அதனை வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மதிப்பவரும் கிடையாது. வயது வித்தியாசமின்றி அனைவரோடும் தன்னை இணைத்துக்கொண்டு உரையாடலை வளர்க்க அவர் ஒரு புள்ளியை இனம்கண்டுகொள்வார். குறிப்பாக பெண்களோடு உரையாடுவது என்றால் அவருக்கு தனிப்பிரியம். அதனை நாங்கள் நண்பர்கள் கூடினால் நையாண்டி பண்ணிக்கொள்வோம். நைற் கிளப்பிற்குச் சென்றிருந்த போது யாரையோ உரசியதற்காக உடனே வோஸ்ரூம் சென்று கையைக் கழுவி வந்த ‘சைவம்’ விரும்பும் மனிதன் போல் சத்தியநேசன் என நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை கொள்ளாத பிரம்மச்சாரியாகவே தன் வாழ்க்கையில் சிங்கிளாக இருந்து கெத்துக் காட்டியவர். போல் இருக்கும் இடம் என்றைக்குமே சச்சரவாகவும் கலகலப்பாகவும் இருக்கும். அண்மையில் கூட தன்னுடைய நண்பர்களோடு உரையாடும் போது, “நீங்கள் நான் போனபிறகு செத்தவீட்டுக்கு வந்து றீல் விடுறத விட்டுப்போட்டு இப்ப உயிரோட இருக்கேக்க சாப்பாடைக் கொண்டு வந்து பார்த்திட்டு போங்கோ’ என்று பகிடியாக சில நண்பர்களிடம் கூறியுள்ளார். “என்ர பொடியை வைச்சுக் கொண்டு செத்தவீட்டில எதாவது கணக்கு கதைச்ச ஆவியாய் வந்து அடிப்பன்” என்று சிலரை மிரட்டியும்உள்ளார்.

சில வாரங்களுக்கு முன் எனது இணையரோடு ஈஸ்ற்ஹாம் வந்திருந்த போது சந்தித்து, உணவருந்த அழைத்தேன். ‘விழுந்து நடக்க கஸ்டமாய் இருக்கு அடுத்த முறை வரும் போது போன் எடும், நான் வந்து சந்திக்கிறேன்” என்றார். அது தான் அவருடன் என்னுடைய கடைசி உரையாடல். யூலை 5 எனது பள்ளி மாணவர்களைக் கூட்டிக்கொண்டு பேர்மிங்ஹாம் சொக்லேட் பற்ரிக்கு சென்றிருந்தேன். செல்லும் வழியில்தான் போல் சத்தியநேசன் எம்மை விட்டுப் பிரிந்த செய்தியை அறிந்தேன். கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுப் பயணத்தை மீள்பயணம் செய்து வந்திறங்கினேன். நோயின் அனைத்து வலிகளில் இருந்தும் அவருக்கு ஒரு விடுதலை கிடைத்துள்ளது. போல் சத்தியநேசனுக்கு என்று ஒரு தனிப்பட்ட குடும்பம் இல்லை. ஆனால் போல் சத்தியநேசனின் குடும்பம் மிகப்பெரியது. ஈஸ்ற்ஹாம் என்ற குடும்பத்தில் போல் தலைமகன். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவர் உறவுகள்.

அண்மைய சில ஆண்டுகள் வரை இந்த உறவு தொடர்ந்தது. கவுன்சிலர் போல் முன்னாள் கவுன்சிலராக நோயும் ஆட்கொள்ள அவருடைய நடமாட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டது. நானும் என்னுடைய ஆசியர் பயிற்சி, தொழில் நிமித்தம் லண்டனுக்கு வெளியே சென்றதால் எமது உரையாடல்கள் தொலைபேசி உரையாடல்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

நீண்ட காலமாகவே பல்வேறு நோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்த போல் சத்தியநேசன் வீட்டில் கட்டிலால் வீழ்ந்து, கையில் நோபட்டு இருந்தார். அவரை யூலை நான்கு சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் நண்பர்கள் அனுமதித்திருந்தனர். யூலை நான்கு இரவு நன்பர்கள், சகோதரர் உணவு பரிமாறி உரையாடித் திரும்பியதன் பின்னர் மறுநாள் அதிகாலை போல் சத்தியநேசன் உயிர்நீர்த்துள்ளர்.

குட்டி யாழ்ப்பாணமான ஈஸ்ற்ஹாம் உள்ளுராட்சி சபையின் முன்னாள் மேயர் கவுன்சிலர் அதற்கும் மேலாக அங்குள்ள மக்களின் மனங்களை வென்ற போல் சத்தியநேசனின் இறுதி நிகழ்வுகள் யூலை 17ம் திகதி முறையே அவர் வாழ்ந்த பேர்ஜஸ் றோட்டில் (Burgess Road உள்ள சென் போல் St Paul Church தேவாலயத்தில் காலை 10 மணி முதலும் அடுத்து மனோபார்க் மயானத்தில் மாலை 2 மணிக்கு நல்லடக்கமும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக ப்ளேக் ஹோல் றோட்டில் (Blake Hall Road உள்ள சுவாமிநாராயணன் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் Swaminarayanan Sports World இல் மாலை 3 மணிக்கு ஒன்றுகூடலும் நடைபெற இருக்கின்றது.

இன, மத, சாதி பேதங்கள் கடந்த நல்லதொரு மானிடன் போல் சத்தியநேசன் ஈஸ்ற்ஹாமில் ஏற்பாடு செய்யப்பட்ட வெவ்வேறு நினைவு நிகழ்வுகளில் அப்பிரதேச மக்கள், லண்டனில் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள், ஈஸ்ற்ஹாம் உள்ளுராட்சி சபையின் கவுன்சிலர்கள், நண்பர்கள், அவரின் பிறப்பிடமான உரும்பராயின் சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் என நூற்றுக்கணக்கில் வந்து அஞ்சலி செய்தனர். ஈஸ்ற்ஹாம் யை தன்னுடைய வாழ்விடமாக்கி அதற்கு ‘புண்ணிய பூமி’ என்று புகழ்ந்துரைக்கும் போல் சத்தியநேசன் அந்த மண்ணோடு சங்கமமாக உள்ளார்.