Multiple Page/Post

முல்லைத்தீவிலிருந்து புலிகள் தப்பிவிடாதபடி சுற்றிவளைப்பு – கடற்படைப் பேச்சாளர்

sl_navy.jpg
முல்லைத்தீவிலிருந்து புலிகள் தப்பிவிடாதபடி முப்படையினரும் சுற்றிவளைத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க நேற்று தெரிவித்தார். முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் ஒன்பது படைப்பிரிவினர் தாக்குதல்களை நடத்தி முன்னேறிவரும் அதே சமயம் வடக்கு, கிழக்கு கடற்பரப்பின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் தலைவரும், அவரது சகாக்களும் கடல் வழியாக எந்த வகையிலும் தப்பிச் செல்ல முடியாது என்று உறுதியாக தெரிவித்த அவர் கடற்படையினர் நான்கு நிலைகளாக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரின் 25ற்கும் அதிகமான படகுகள் 24 மணி நேரம் முழுமையான ரோந்துக் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக கடற்படையின் டோரா படகுகளும், கடற்படையின் விசேட படைப்பிரிவுகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், புலிகள் தப்பிச் செல்லுதல், பிரவேசித்தல் மற்றும் விநியோகங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றையும் தடுத்து நிறுத்த போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத் தலைவரும் அவரது சகாக்களும் கடல் வழியைப் பயன்படுத்தி தப்பிச்செல்வதாயின் பெருந்தொகையான படகுகள் தேவைப்படும். இந்நிலையில் கடற்படையினரின் பாதுகாப்பை மீறி எந்த நிலையிலும் தப்பிச் செல்ல முடியாது என்றும் புலிகளின் எத்தகைய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க பாதுகாப்பு படையினரும், கடற்படையினரும் தயார் நிலையிலுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் தசநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுண்டிக்குளம் கடல் நீரேரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற் புலிகளின் பாரியபடகு ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்களை பயன்படுத்தி நேற்றுக் காலை 11.20 மணியளவில் நடத்தப்பட்ட இந்த விமானத் தாக்குதலில் கடற்புலிகளின் பாரிய படகு தாக்கியழிக்கப் பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, முதலாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் சுண்டிக்குளப் பகுதியிலிருந்து புலிகள் தப்பி ஓடுவதையும், பின்வாங்கிச் செல்வதையும் படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து நேற்றுப் பிற்பகல் 1.00 மணியளவில் விமானப் படையினர் தப்பிச் செல்லும் புலிகளை இலக்கு வைத்து மற்றுமொரு விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த விமான தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகள் உறுதி செய்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியா உதவும்! – இந்தியத் தூதுவருடன் பஸில் ராஜபக்ஷ பேச்சு

basil.jpgவடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியாவும் உதவி செய்யும். ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷவுக்கும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா சாத்தியமான, இயலுமான ஒவ்வொரு துறையிலும் தனது உதவிகளை வழங்கும் என்று இந்தியத் தூதுவர், பஸிலிடம் வாக்குறுதி அளித்தார் என்று தகவல்கள் தெரிவித்தன.  இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு “தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி’ மூலம் 300 மில்லியன் ரூபாவைத் திரட்டுவதற்கு கடந்த புதன்கிழமை – இம்மாதம் 7 ஆம் திகதி – நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சட்டமூலத்தைச் சமர்ப்பித்துப் பேசிய பிரதி நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இந்த வரி அழிவுற்ற வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யவே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் –  கடந்த ஒக்ரோபர் மாதம் இறுதிவாரத்தில் இந்தியாவுக்கு ஜனாதிபதியின் விசேட தூதுவராகச் சென்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசிய ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, நேற்று இந்தியத் தூதுவருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அப்போது வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியாவும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இயன்றளவு, சாத்தியமான சகல உதவிகளும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் என அறியப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய நிவாரணப் பொருள்களின் விநியோகம் குறித்தும் பஸில் ராஜாபக்ஷ இந்தியத் தூதுவருக்கு விவரமாக விளக்கினார். அது குறித்து இந்திய அரசின் சார்பில் தூதுவர் அலோபிரசாத் திருப்தி தெரிவித்ததுடன்- இந்திய அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அன்பளிப்புகளை விநியோகித்தமைக்கும் இலங்கை அரசுக்கு நன்றியும் கூறினார்.     

முல்லைத்தீவு ஐயம்பெருமாள் முகாம் படையினர் வசம்

_army.jpgமுல்லைத்தீவு, ஐயம் பெருமாள் பிரதேசத்தில் அமைந்துள்ள சகல வசதிகளையும் கொண்ட புலிகளின் முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் இந்த முகாமை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடும் தளமாகவும், பயிற்சி முகாமாகவும் இருந்துள்ள இந்த முகாம் விசாலமிக்க தோட்டம் ஒன்றுக்கு மத்தியில் அமையப் பெற்றுள்ளதாகவும் அதனை சுற்றிவர 12 அடி நீளமான முற்கம்பிகளால் வேயப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதான விரிவுரை மண்டபம், 12 தற்காலிக கொட்டகைகள், மருத்துவ அறை ஒன்று, களஞ்சியசாலை கட்டடம் மற்றும் சமையலறை ஒன்றும் இந்த முகாமில் அமையப் பெற்றுள்ளன. இதுதவிர 60 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் உட்பட ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சகல பிரஜைகளையும் பதிய பாதுகாப்பு அமைச்சு முடிவு

laptop.jpgநாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் பதிவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல மக்களினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு இம்முடிவை எடுத்திருப்பதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

அனைத்து இன மக்களும் தமது விபரங்களை பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்வதற்கு இலகுவாக இணையத்தளம் ஒன்றையும் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

www.citizens.lk

என்ற இணையத்தளம் ஊடாக வீட்டிலிருந்தபடியே தமது விபரங்களை பதிவு செய்ய முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

ஆனையிறவு மீட்பு தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி – முரளி எம்.பி

murali.jpgஆனையிறவைப் படையினர் கைப்பற்றிய வெற்றியானது தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. தெரிவித்தார். ஆனையிறவைப் படையினர் கைப்பற்றியதையடுத்து அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இம்மாநாட்டில் முரளிதரன் எம்.பி. தமதுரையில் மேலும் தெரிவித்தாவது, புலி பயங்கரவாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இது வரை காலமும் அவர்கள் ஜனநாயகத்துக்கு வர சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதனை அவர்கள் பயன்படுத்தத் தவறி விட்டார்கள். இத்தடை என்பது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் இது மிகவும் உறுதுணையாக அமையும்.

கிளிநொச்சியைக் கைப்பற்றியபின் புலிகள் தமக்குப் பலம் இருப்பதாகவும், நிலம் இருப்பதாகவும் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டனர். இதைக் கூறியே நிதி வசூலித்தனர். இது பொய்யாகியுள்ளது. தற்போது ஏ-9 திறக்கப்பட்டதானது குடா நாட்டு மக்கள் பெரும் பலனை அனுபவிக்க வழிசமைக்கும்.

முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களை மீட்பதில் ஜனாதிபதி மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறார். விரைவில் முல்லைத்தீவு மீட்கப்பட்டுவிடும். வடக்கு மக்கள் பல வழிகளிலும் பயன்களை அனுபவிக்க முடியும் எனவும் அவர்மேலும் தெரிவித்தார். இராணுவம் ஆனையிறவைக் கைப்பற்றியமை புலிகளுக்கு பேரிழப்பாக உள்ளன. 23 வருட காலத்தின் பிற்பாடு ஏ-9 வீதி திறக்கப்பட்டமை யாழ். குடா நாட்டு மக்களுக்கு சொல்லொண்ணா சந்தோஷத்தினையும் குதூகலத்தினையும் புத்தெழுச்சியையும் உண்டு பண்ணியுள்ளது.

யாழ். குடா மக்கள் தங்களது விவசாய விளை பொருட்களை தகுந்த பெறுமதிக்கு உரிய நேரத்துக்குச் சந்தைப் படுத்தவும் அதிகரித்திருந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கவும் யாழ். மண்ணில் தலைசிறந்த பல்கலைக்கழகம் மீட்சி பெறவும் நீண்ட நாட்களாக ஒடுக்கப்பட்டிருந்த வன்னி மக்களுக்கும் யாழ். குடா மக்களுக்குமான உறவுகள் புதுப்பொலிவுபெறவும் ஒட்டு மொத்தமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளின் வளங்கள் செழுமையடைய இது வழிகோலியுள்ளது.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கண்டனம்

lasantha-02.jpgசண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட விதத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்தக் கொலை ஊடகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை என குறிப்பிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு காணப்பட முயற்சிக்கும் நிலையில் லசந்த அரசாங்க பாதுகாப்புத் தரப்பு தொடர்பாகவும் ஊழல்கள் தொடர்பாகவும் செய்திகளை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் பட்டப் பகலில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

cars.jpgயாழ்.  மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் 2009 ஆம் ஆண்டுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் நடைபெறுவதாக யாழ்.மாவட்ட போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர் எம். பத்மநாதன் அறிவித்துள்ளார். வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பதிவு செய்த பிரதேச செயலகங்களுக்குச் சென்று கடந்தாண்டு வாகன அனுமதிப்பத்திரம் ,வாகன காப்புறுதிஅனுமதிப்பத்திரம் ஆகியவற்றைக் காண்பித்து புதிய ஆண்டுக்கான வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் வேண்டியுள்ளார்.

வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கால எல்லை மார்ச் 31 ஆம் திகதி வரையறை செய்யப்பட்டிருந்தாலும் முன்கூட்டியே சிரமமின்றி வாகனவரி அனுமதிப்பத்திரத்தைப் பெறுமாறு வாகன உரிமையாளரை அவர் கேட்டுள்ளார்.

‘சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்தவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்

lasa-body.jpgபடுகொலை செய்யப்பட்டுள்ள ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரம துங்கவின் பூதவுடல் இன்று நண்பகல் பொரள்ளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

இதேவேளை லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு காரணமானவர்களை தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப் பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும் இவ் விசேட பொலிஸ் குழுவினருக்கு ‘சண்டே லீடர்’ பிரதம ஆசிரியரின் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் உள்ளிட்ட பல இரகசியங்கள் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்தும் வகையில் இப்பொலிஸ் குழுவினர் மும்முரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கிரிமண்டல மாவத்தையிலுள்ள அன்னாரது இல்லத்திலிருந்து பூதவுடல் நாளை நண்பகல் 12 மணிக்கு நாரஹேன்பிட்டி சந்திக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து பூதவுடல் பெருந்திரளான மக்கள் ஊர்வலத்துடன் பொரள்ளை கனத்தை மயானத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது கலைஞர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்களென பலர் லசந்தவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரீ.எம்.வீ.பி – புலிகள் மோதல், மூவர் பலி – திஹிலிவட்டையில் சம்பவம்

ak47.jpgஏறாவூர்,  திஹிலிவட்டை பிரதேசத்தில் ரி. எம். வி. பி.க்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதல்களில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சந்திவெளி வாவிக்கு அப்பால் அமைந்துள்ள ரி. எம். வி. பி. அலுவலகத்தின் மீது புலிகள் இயக்க உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இந்த மோதல்களில் ரி. எம். வி. பி. உறுப்பினர் ஒருவரும், புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருசிவிலியன்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலங்களுடன் துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ரீ. எம். வி. பி. தரப்பில் சந்திவெளியைச் சேர்ந்த 34 வயதுடைய எஸ். சீலன் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பளை, சோரன்பற்று பிரதேசங்களிலிருந்து 53 பேர் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்வு

civillians_.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் போர் நடவடிக்கை காரணமாக பளை, சோரன்பற்று மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதியில் இருந்து 53 பேர் இடம்பெயர்ந்து நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். யாழ்.வருகைதந்துள்ளவர்கள் அனைவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பளை பகுதியில் இருந்து வந்தவர்கள் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வள்ளங்களில் வந்த 33 பேரை கடற்படையினர் கைதுசெய்து பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். இவர்களைத் தங்க வைப்பதற்குரிய நடவடிக்கையை மாவட்ட செயலகம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பளை மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து வந்தவர்களில் நான்கு கைக்குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்வர்கள் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.