2020

2020

சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட பரவல் அலை

சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டப் பரவலை அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் மெல்லத் தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் சுகாதார அமைப்பு கூறும்போது, “சீனாவில் கடந்த மூன்று மாதங்களுக்குப்  பிறகு  இன்று (புதன்கிழமை) 100க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 89 பேருக்கு உள்ளூரிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சின்ஜியாங் மாகாணத்தைச் சேந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உரும்கி நகரில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 15 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் இறக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலியன்,உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

முல்லைத்தீவில் விரைவில் உருவாகவுள்ள பல்கலைகழகம். – வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் பரிகாரக்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலையின் தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியை வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் நேற்று வைபவரீதியாகத் திறந்து வைத்துள்ளார்.அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இது தொடர்பான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கு கருத்து தெரிவிக்கும் போது

“வட மாகாணம் ஒரு காலகட்டத்திலே இலங்கையிலேயே கல்வியில்  தலை நிமிர்ந்து நின்றதொரு மாகாணமாகும். இந்த நாட்டிலுள்ள அனைவருமே கல்வியென்று சொன்னால் யாழ்ப்பாணமும் வட மாகாணமும் என்று சொல்லுமளவிற்கு சிறந்து விளங்கியது.

மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்து கல்வி கற்பதை பாக்கியமாக கருதினார்கள். அந்நிலை மாறி இன்று க.பொ.த. சாதாரணப் பரீட்சைப் பெறுபேற்றில் 9ஆவது இடத்தில் வட மாகாணம் உள்ளது.

வளப்பகிர்வைச் சரியாகப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்பதில் வட மாகாண சபை மிக ஆழமாகச் சிந்தித்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றது.

இதன் ஒரு பகுதியாகத்தான் புதிய கட்டடங்களை வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளித்துள்ளார்கள்.

பிரதமரின் வேண்டுதலின் பேரில் நமது தேவைகளை முன்னிலைப்படுத்திய கோரிக்கையை நான் அவரிடம் கையளித்துள்ளேன்.

மாணவர்களே, நீங்கள் அரச உத்தியோகத்தை தேடிச் சென்றாலும், தனியார் வேலையைத் தேடிச்சென்றாலும், சுய தொழில் செய்தாலும், வேலைக்காக வெளி நாடுகளுக்குச் சென்றாலும் உங்களுடைய கல்வித் தகைமையென்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் கல்வி அறிவுள்ளவர்களாகவும் கல்வித் தகைமையைக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

தற்போது அரசாங்கம் பல்கலைக்கல்விக்காக இன்னுமொரு செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. ‘சித்தி பல்கலைக்கழகம்‘ என்ற ஒன்று உருவாக்கப்படப்போகிறது.

இதுவரை வெட்டுப்புள்ளிகள் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் முறை இருக்கிறது.

அதாவது  20% மாணவர்களே பல்பலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்பட்டார்கள். இந்த ‘சித்தி பல்கலைக்கழகத்தில்‘ நீங்களாகவே விரும்பிய துறைகளில் விண்ணப்பித்து இணைந்து கொள்ள முடியும்.

அந்தப் பல்கலைக்கழகத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொணடிருக்கின்றன.

க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் இல்லாமல் நாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினாலும் அதனால் பயனடையப்போவது நமது மாகாணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கப்போவதில்லை.

ஆகவே மாணவர்கள் கல்வித்தகமையை உயர்த்திக்கொள்ள வேண்டும். உங்கள் ஒழிமயமான எதிர்காலத்திற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள் ”

என வடக்குமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ்.வடமராட்சியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மாயம்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு கடற்பகுதியில்  மீன்பிடிப்படகு ஒன்று கவிழ்ந்ததில் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் காணாமல் போனவரை ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடும் பணியில் கடற்படையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்பரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை படகு ஒன்றில் இரண்டு மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர்.

இதன்போது கடலில் ஏற்பட்ட பலத்த காற்றினால், படகு கவிழ்ந்து கடலில் தந்தளித்த அவர்களை மீட்க மீனவர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும் ஒருவர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் காணாமல்போன மற்றைய மீனவரை தேடும் பணிகள்  தொடர்ந்தும் கடற்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் வீதி விபத்து உயிரிழப்புக்கள் :- வவுனியாவில் ஒருவர் பலி.

வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து இன்று ஓமந்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், நோயாளர்காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன்,  அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

நேற்றைய தினம் பேராதெனிய – கம்பளை பிரதான வீதியின் கெலிஓய, கரமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சுமார் ஆறு இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது கொரனா உயிரிழப்பு.

கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார்  6 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது . உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்துள்ளனர்.

 கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவின் வுகானில் இந்த வைரஸ்  தோன்றியதில் இருந்து , இந்த வைரஸ் தொற்றினால் மொத்தம் 650,011 பேர் உயிரிழந்துள்ளதோடு , 16,323,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அதில் 9,190,345 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் .
ஜூலை 9 முதல் தற்போது வரைக்கும் 100,000 க்கும் மேற்பட்ட புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் உலகளாவிய எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது . எ.எப்.பி புள்ளிவிபரங்களின் படி , ஜூலை 9 ஆம் திகதி முதல் 100,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன . மேலும் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளது .

உலக அளவில் சுமார் 70 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு – ஐக்கியநாடுகள் சபை அனுமானம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உணவு விநியோகத்தை பாதிப்பதன் விளைவாக கிட்டத்தட்ட 70 லட்சம்  குழந்தைகள் தங்களது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
118 ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா ஏற்படுத்தும் தாக்கத்தை நிபுணர்களின் குழு விவரித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே மிதமாக அல்லது கடுமையாக உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் பாதிக்கப்படுவது 14.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர், இதன் விளைவாக கூடுதலாக 67 பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
ஆரம்பகால வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் மீது கொரோனா தொற்றுநோயின் ஆழமான தாக்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் கல்வியில் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பாதிப்புகள், நாட்பட்ட நோய் அபாயங்ளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடல் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது தசைகள் மற்றும் கொழுப்பு மறைந்து போகும் போது தங்களது உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ளனர்.

இலங்கையின் மழையுடனான வானிலை தொடர்ந்தும் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்றைய தினம் மாலையிலிருந்து அடுத்த சில தினங்களுக்கு நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை தொடர்ந்து  அதிகரித்து காணப்படும்  என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இவற்றோடு சேர்த்து  மேலும் சில  இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் இப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் கவனத்தில்கொள்ளத்தக்கது.

ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்ப்புகைத்தாக்குதல்.

உலக அளவில் அதிகரித்து வரக்கூடிய கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேலைக்காக சென்றிருந்த இலட்சக்கணக்கானோர் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பி ய வண்ணம் உள்ளனர். மேலும் வேலைவாய்ப்பினை இழந்துகொண்டோர் தாங்கள் பணியாற்றும் நாடுகளில் வேலை வாய்ப்பினை பெற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதனை அவதானிக்ககூடியதாகவுள்ளது. இதனுடைய ஒரு பிரதிபலிப்பாக ஜோர்தானில் வேலை வாய்ப்பை இழந்த இலங்கையர் குழுவினரால் ஏற்பட்டுக் கொண்ட பதட்டமான நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்நாட்டு பொலிஸாரினால் இலங்கையர் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக  ஜோர்தான் நாட்டினுடைய அல்காரா பகுதியில் உள்ள கைத்தொழில்பேட்டை ஒன்றில் பணியாற்றிய இலங்கையர்களினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அப்பகுதி பொலிசாரினால் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜோர்தான் நாட்டினுடைய அல்காரா அப்பகுதியில் பணியாற்றி இருந்த இந்ததொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக தங்களுடைய வேலைவாய்ப்பினை இழந்திருந்த நிலையில் அவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிய வந்ததை அடுத்து ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் நேற்றைய தினம் அதாவது [27 ஆம் திகதி ] தொழில்பேட்டை அமைந்துள்ள பகுதிக்கு விசாரணை செய்வதற்காக விஜயம் செய்துள்ளனர். இதன்போது போராட்டக்காரர்கள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியற்ற  முறையில் நடந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்றதான தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்களினுடைய போராட்டங்கள் அண்மைய காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தல் காலத்தில் மட்டும் உரிமை பேசும் தமிழ் தேசியத் தரப்புகள் – டக்ளஸ் காட்டம்

உரிமை என்ற சொல்லை தமிழ் தேசியவாதம் பேசும் தரப்புகள் தேர்தல் காலத்தில் மட்டும் தான்
பயன்படுத்துகின்றார்களே தவிர ஏனைய காலங்களில் அந்த சொல்லை மறந்துவிடுகின்றார்கள்.
என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் கட்சியின் நலனுக்கு அப்பால் மக்களது நலன்களையும் மேம்பாடுகளையுமே முக்கியமானதாகக்
கருதுகின்றேன். நாம் எனது மக்களுக்காக கடந்த காலங்களில் அரசுகளுடன் இணக்க அரசியலை
முன்னெடுத்து அதனூடாகப் பலவற்றை செயற்படுத்திக் காட்டியுள்ளோம்.

ஆனால் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டவுடன் எந்தவிடயத்தை கையில் எடுத்து தேர்தலில் வெற்றி
பெறலாம் என்ற நோக்குடன் செயற்படும் இதர தமிழ் தரப்பினர் தமது தேர்தல் வெற்றிக்காக பொய்
வாக்குறுதிகளை மட்டுமன்றி நடைமுறைசாரா கருத்துக்களையும் வெளியிட்டு மக்களை ஏமாற்றி
வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது உரிமை என்ற சொல்லை பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள் தமது தேர்தல் வெற்றியை
இலக்காக கொண்டு மட்டும்தான் அதனையும் முன்னிறுத்திவருகின்றனர்.

அத்துடன் இது அவர்களின் தேர்தல் கால உச்சரிப்பு மட்டுமே அல்லாமல் தேர்தல் முடிந்ததன்
பிற்பாடான காலப்பகுதியில் முன்னெடுக்கும் செயற்பாடாகவும் இருக்கப்போவதில்லை.
கடந்தகாலங்களில் இத்தகையவர்களுக்கு வாக்களித்து தோல்வி கண்ட தமிழ் மக்கள் இனியும் அவ்வாறு
ஏமாற்றமடைய மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அந்தவகையில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை தெமிழ் மக்கள் தமது எதிர்காலத்திற்காக
கிடைக்கும் மிகப்பெரும் சந்தர்ப்பமாக கருதி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு மக்களை
அவர்களது அபிலாஷைகளுடன் அமைதியாக வாழ வழிவகை செய்யப் போராடிக்கொண்டிருக்கும் எமது
வீணைச் சின்னத்துக்கு ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்து அனைத்தையும் வெற்றிகொள்ளுங்கள்
என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானின் சர்ச்சைக் கருத்து: மனு இரத்து

கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கருணா, ‘ஆனையிறவில் ஓர் இரவில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவச் சிப்பாய்களைக் கொன்றோம்’ என்று ஒரு வாக்குமூலத்தை தன்வாயாலேயே வழங்கியிருந்தார்.

தென்னிலங்கையில் இந்த கருத்து பரபரப்பையும் சிங்கள மக்களிடையே கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
கருணாவைக் கைது செய்யவேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன. தேரர்களும் கருணாவின் கருத்துக் கண்டனம் தெரிவித்ததுடன் அவரைக் கைதுசெய்யும் படியாக வலியுறுத்தினர். இந்த நிலையில் கருணா தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் விசாரணைகள் இன்றி மனு இரத்துச் செய்யப்பட்டது.