2020

2020

“தேவையானால் அலுகோசுவின் கடமையை சபாநாயகர் செய்ய முடியும் ‘ – சரத் பொன்சேகா

“தேவையானால் சபாநாயகர் தூக்கு மேடையை பாராளுமன்றத்திற்கு எடுத்து வந்து பொருத்தி சபாநாயகர் அலுகோசுவின் கடமையை சபாநாயகர் செய்ய முடியும்“  என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது,

தற்போதைய நிலவரத்துக்கு அலுகோசுவின் கடமையை சபாநாயகர் செய்ய முடியும் எனவும், அதேவேளை 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் மற்றும் பலம் இல்லாமல் போகும் விதத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை என்பதால் 20 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றோம் எனவும், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாடு முன்னோக்கி செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இது 19 ஆவது திருத்தச் சட்டத்தின் தவறல்ல.
அன்றைய தலைவர்களாக இருந்த ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரின் பலவீனம் காரணமாக அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் போனது என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

சிமன்ஸ் அதிரடியால் ,கரீபியர் பிரிமீயர் லீக் 2020 சம்பியனானது போலார்ட்டின் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் ! –

ஐ.பி.எல், பிக் பாஷ் டி20 லீக்கை போன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியர் பிரிமீயர் லீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.
இந்த வருடத்திற்கான டி20 லீக் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று கரீபியன் பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டி ர்டினிடெட் நகரில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா சாக்ஸ் அணி டிரிபாகோ நைட்ரைடர்ஸ் எதிர்கொண்டது. நாணயச் சுழற்சியில்  வென்ற டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, செயின்ட் லூசியா சாக்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கார்ன்வெல் மற்றும் மார்க் டியல் களமிறங்கினர். கார்ன்வெல் 8 ஓட்டங்களிலும் மார்க் டியல் 29 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஆன்ரே பிளட்சர் அதிகபட்சமாக 39ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால், டிரிபாகோ அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக செயின்ட் லூசியா சாக்ஸ் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
டிரிபாகோ அணியின் கேப்டனும் பந்துவீச்சாளருமான கேரன் போலாட்டு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணியின் சிமன்ஸ் மற்றும் வெப்ஸ்டர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெப்ஸ்டர் 5 ஓட்டங்கங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த டிம் செய்ஃப்ரிட் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய டெரன் பிராவோ, சிமன்ஸ் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு வீரர்களும் எதிர் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த சிறப்பான ஆட்டத்தால் 18.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 157ஓட்டங்களை எட்டியது.
இதனால் செயின்ட் லூசியா சாக்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிராபாகோ நைட் ரைடர்ஸ் அணி கரீபியன் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.
டிராபாகோ அணியின் சிமன்ஸ் 49 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 84 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அதேபோல் டேரன் பிராவோவும் 47 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 58 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த டிராபாகோ அணியின் சிமன்சுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் அந்த அணியின் கேப்டன் கேரன் போலாடுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

“இலங்கையில் கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர்“ – கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கார்னெட் ஜெனுயிஸ்.

இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்னெட் ஜெனுயிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி கனடாவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நீண்ட நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “வலிந்து காணாமலாக்கப்படுதல், கடத்தல் என்பன சர்வதேச உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் சமூகங்களிலும் முக்கியமான ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக குறிப்பாகவும் மனித உரிமை விவகாரம் குறித்து பொதுவாகவும் என்னைப் போன்ற அரசியல்வாதிகள் பேச வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்கள்.

இப்போது ஒரு தொகையான மக்கள் இந்த விடயம் தொடர்பாக வழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தைக் கேட்பதற்காக ரொறொன்ரோவிலிருந்து ஓட்டோவாவுக்கும் கியூபெக்கிலிருந்து ஓட்டாவாவுக்கும் நடைபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த நடைபவனியை மேற்கொண்டுள்ள மக்களுக்கு எமது கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

இலங்கையிலும் உலக நாடுகளிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எமது கொன்சர்வேட்டிவ் கட்சி கோரி வந்திருக்கின்றது.

இந்த நடைபவனியை மேற்கொண்டுள்ள மக்களுக்கு நான் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் கொடுக்கப்போகும் மகஜருக்கு கனேடிய அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

மீண்டும் வருகிறார் யுவராஜ்!

பீல்டிங், பேட்டிங்,  பவுலிங் என மூன்று துறைகளிலும் அசத்தியவர். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் இந்தியா கைப்பற்ற முக்கிய நபராகவும் இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு மற்றும் சகலதுறை வீரராகவுமு்  திகழ்ந்தவர் யுவராஜ் சிங்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘நான் இளைஞர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். விளையாட்டு குறித்து பல்வேறு அம்சங்கள் பேசினோம். அவர்களிடம் நான் பேசும்போது பல்வேறு விசயங்களை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என உணர்கிறேன்.
நான் இரண்டு மாதங்களாக பயிற்சி மேற்கொண்டேன். ஆஃப்-சீசன் முகாமில் பேட்டிங் மேற்கொண்டேன். பயிற்சி ஆட்டத்தில் போதுமான அளவிற்கு ரன்கள் அடித்தேன். பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் புனீத் பாலி என்னை அணுகி, ஓய்வு முடிவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தொடக்கத்தில் அவரது கோரிக்கையை நான் ஏற்க விரும்புகிறேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உள்ளூர் கிரிக்கெட் தொடரை நான் முடித்துவிட்டேன். பி.சி.சி.ஐ அனுமதி கொடுத்தால், உலகளவில் பிரான்சிஸ் அளவிலான லீக்குகளில் விளையாட விரும்புகிறேன்.
ஆனால் என்னால் பாலியின் வேண்டுகோளையும் நிராகரிக்க முடியாது. கடந்த மூன்று அல்லது நான்கு வாரங்களாக ஏராளமான நினைப்புகள் வந்தன. ஆனாலும், எது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
பஞ்சாப் அணி சாம்பியன்ஷிப் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நான், ஹர்பஜன் சிங் இணைந்து தொடர்களை வென்றுள்ளோம். ஆனால் நாங்கள் இணைந்து பஞ்சாப்பிற்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே, இது என்னுடைய இறுதி முடிவில் முக்கிய காரணியாக இருக்கும்’’ என்றார்.

பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து வீரர் தாவித் மலன்!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-1 இங்கிலாந்து தொடரை வென்றது. இந்தத் தொடரில் இங்கிலாந்து வீரர் தாவித் மலன் 129 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதன்மூலம் டி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான  தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
கடைசி 16 போட்டிகளில் 682 ஓட்டங்கள் அடித்துள்ள தாவித் மலன், 48.71 சராசரியும், 146.66 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார்.
877 புள்ளிகளுடன் தாவித் மலன் முதல் இடத்திலும், 869 புள்ளிகளுடன் பாபர் அசாம் 2-வது இடத்திலும், 835 புள்ளிகளுடன் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், 824 புள்ளிகளுடன் கே.எல் ராகுல் 4-வது இடத்திலும், 785 புள்ளிகளுடன் கொலின் முன்றோ 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார்.

“2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் ” – ஜப்பான் உறுதி.

இந்த ஆண்டு சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகினுடைய 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வருகின்ற நிலையில் 2020,2021 ஆகிய வருடங்களில்  நடைபெறவிருந்த உலககூட்டத்தொடர்கள், விளாயாட்டுப்போட்டிகள் என்பன ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஒலிம்பிக்கிற்கான ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு செலவிட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓராண்டுக்கு இப்போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை 23 ம் தேதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டோக்‍கியோவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒலிம்பிக்கிற்கான அமைச்சர் ஹஷிமோடோ, கொரோனா இருந்தாலும், இல்லையென்றாலும் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிக்காக அனைவரும் இணைந்து செயல்படுவதாகவும், விளையாட்டு வீரர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசு, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்களை சமாளிப்பது உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கவனித்து வருவதாக ஹஷிமோடோ தெரிவித்துள்ளார்.

இரண்டாவது போட்டியிலும் ஆஸிக்கு ஏமாற்றம்., பட்லரின் அதிரடியால் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து !

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் காணப்பட்ட நிலையில் ,
2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாடியது. வார்னர் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், அலேக்ஸ் கேரி 2 ஓட்டங்களிலும்  ஆட்டமிழந்தனர். இதனால் 3 ஓட்டங்களுக்குள்ளேயே  2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.
கேப்டன் ஆரோன் பிஞ்ச் 33 பந்தில் 40 ஓட்டங்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்தில் 35 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 18 பந்தில் 26 ஓட்டங்களும் அடித்தனர். பேட் கம்மின்ஸ் 5 பந்தில் 13 ஓட்டங்களும், ஆஷ்டோன் அகர் 20 பந்தில்  23ஓட்டங்களும் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157ஓட்டங்கள் அடித்தது.
பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள்  பேர்ஸ்டோவ்  9ஓட்டங்களுடன்  வெளியேறினார். அடுத்து ஜோஸ் பட்லர் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மலன் 32 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பட்லர் 54 பந்தில் 77 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையி உள்ளது.
3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளைமுறுதினம் (செப்டம்பர் 8-ந்தேதி) நடக்கிறது. அதன்பின் செப்டம்பர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் உலகின் நம்பர் 1 வீரர்! – தகர்ந்தது 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவு.

யு.எஸ் ஓபின் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் ஆடிய நோவக் ஜோகோவிச் அமெரிக்க ஓபின் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உலகின் நம்பர் 1 வீரரை தகுதி நீக்கம் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாப்லோ கரேனோ பஸ்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டின் போது சர்வ் ஒன்றைத் தோற்று ஜோகோவிச் 5-6 என்று பின் தங்கினார். இதில் சற்றே வெறுப்படைந்த ஜோகோவிச் பந்தை மட்டையால் கொஞ்சம் வேகமாகவே பின் பக்கமாக வெறுப்பில் அடிக்க அது அங்கு நின்று கொண்டிருந்த பெண் லைன் நடுவரின் தொண்டையைத் தாக்கியது, நடுவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

உடனே ஜோகோவிச் அவர் அருகே சென்று அவருக்கு உதவினார், தேற்றினார். ஆனால் யு.எஸ் ஓபின் தொடர் ரெஃப்ரி சோரம் ஃப்ரீமெல் மைதானத்த்துக்குள் விரைந்து வந்தார். ஆட்ட நடுவர் ஆரிலி டூர்ட்டிடம் பேசினார், கிராண்ட் ஸ்லாம் கண்காணிப்பு அதிகாரி ஆண்டிரியாஸ் எக்லியும் உடனிருந்தார்.

யு.எஸ் ஓபின் அதிகாரிகளுக்கும் நோவக் ஜோகோவிச்சுக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. நோவக் ஜோகோவிச் தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை தெரியாமல்தான் நடந்து விட்டது மன்னிக்கவும் என்றார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் விதிகள் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராகச் சென்றன. கடைசியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அவர் பரிதாபமாக தன் கிட் பேக்கை எடுத்து கொண்டு வெளியேறினார்.

எதிர் வீரர் பஸ்டா அதிர்ச்சியில் உறைந்தார். 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவு முடிந்தது.

இதற்கு முன்பாக 1995-ம் ஆண்டு விம்பிள்டனில் பிரிட்டன் வீரர் டிம் ஹென்மன் இதே காரணத்துக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

யு.எஸ் ஓபினிலிருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் யு.எஸ் ஓபனில் அவர் எடுத்த தரவரிசைப் புள்ளிகளை இழக்கிறார். மேலும் அபராதத் தொகையையும் ஜோகோவிச் செலுத்த வேண்டும்.

மேலும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் புறக்கணித்ததால் இன்னொரு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

நோவக் ஜோகோவிச் தடை குறித்து கருத்துக் கூறிய அனைவருமே வேறு வழியில்லை, ஜோகோவிச் தன் விதியை சந்தித்துதான் ஆக வேண்டும், விதிமுறைகள் அப்படி என்கின்றனர்.

சம்பவத்துக்குப் பிறகு ஜோகோவிச் இறுகிய முகத்துடன் தன் கருப்பு டெஸ்லா காரில் பறந்தார். யு.எஸ் ஓபனில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது, ஜோகோவிச்சின் செர்பிய ரசிகர்களுக்கு தகுதி நீக்கம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த சம்பவத்துக்கு ஜோகோவிச் மன்னிப்புக் கேட்டு, வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதில், “இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையும் என்னை வருத்தமடையச் செய்ததோடு என்னை வெறுமையாக்கியுள்ளது. காயம்பட்ட அவரை நான் உடனடியாக கவனித்தேன் கடவுள் புண்ணியத்தில் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறார்.

அவருக்கு இதன் மூலம் ஏற்படுத்திய வேதனைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றே செய்யவில்லை. ஆனால் பெரும்தவறிழைத்து விட்டேன். அவரது அந்தரங்கத்திற்கு மதிப்பளித்து அவரது பெயரை நான் வெளியிடவில்லை. தகுதி நீக்கம் குறித்து நான் மீண்டும் என் ஏமாற்றத்தை தணிக்க பணியாற்ற வேண்டும்.

இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஒரு வீரராகவும் இனிமேலாவது ஒரு மனிதனாகவும் மாற முயற்சிகள் மேற்கொள்வேன். யுஎஸ் ஓபினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த என்னைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி, என்னை மன்னித்து விடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அண்டு 26 போட்டிகளில் வென்று ஒன்றைக் கூட தோற்காது 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பொது கண நேர வெறுப்பின் செயலால் பலனை அனுபவித்து வருகிறார் ஜோகோவிச்.

வெளியானது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி அட்டவணை . முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதல் ! – முழுமையான அட்டவணை இதோ.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன. அதற்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இதில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

IPL 2020 Schedule Announced, Mumbai Indians To Take On Chennai Super Kings  In Opener

 

இறுதிப் போட்டி வருகின்ற  நவம்பர் 10- ம் தேதி நடக்கிறது. ப்ளே ஆப் சுற்று நடக்கும் நகரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.சி.சி.ஐ வெளியிட்ட அட்டவணையில் ரவுண்ட் ராபின் போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி முதல் 46 நாட்களில் 56 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் 10 நாட்களில் இரு ஆட்டங்கள் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு: முதல் போட்டி மும்பை vs சென்னை

துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களில் டி20 போட்டிகள் நடக்கின்றன. இரவு நடக்கும் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும், இரு போட்டிகள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கும் தொடங்குகிறது.

இதன்படி வரும் 19-ம் தேதி சனிக்கிழமையன்று துபாயில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது நாள் 20-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

3-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. அதன்பின் 22-ம் தேதி ஷார்ஜாவில் முதல் போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.

துபாய் நகரில் 24 லீக் போட்டிகளும், அபுதாபியில் 20 லீக் ஆட்டங்களும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடக்கின்றன. ப்ளே ஆப் நடக்கும் இடங்களும், இறுதிப்போட்டி நடக்கும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை தமிழர்களின் எதிர்கால நிலைத்திருப்பில் அரசியல் சாராத பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவையும் அவசியமும்….! – அருண்மொழி

வடக்கு – கிழக்கு சமூக அக்கறையுடைய இளைஞர்களிடையேயும் அரசியல் விமர்சகர்களிடையேயும்  பொதுக்கட்டமைப்பு ஒன்றின் தேவை பற்றிய விடயங்கள் ஆழமான  பேசுபொருளாக மாறி வருகின்ற இந்த நிலையில் தேசம் நெற் இன் இந்தக்கட்டுரை பொதுக்கட்டமைப்பின் தேவை பற்றியும் அதன் செயல் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுகின்றது.

முதலில் இந்த பொதுக்கட்டமைப்பு ஏன் தேவை..? என்பது பற்றி நோக்குதல் அவசியமாகின்றது.

இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கத்துக்கு மிக அவசியம் ஏற்பட்ட பின்னணியில் இலங்கை வாழ் தமிழ் மக்களை இணைக்ககூடிய ஒரு மையப்புள்ளியாக ஒரு பொது அமைப்பு ஒன்றின் தேவை அதிகமாக கடந்த காலங்களில் உணரப்பட்டமையேயாகும். உலகின் ஒவ்வொரு அடக்கப்பட்ட சமூகங்களிலும் அரசியல் சார்ந்த அமைப்புக்களே அரசிற்கும் அடக்கப்பட்ட சமூகங்களுக்குமிடையான தொடர்பாளராக செயற்பட்டு, மக்களினுடைய உரிமைகளை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியோராக காணப்படல்  வேண்டும். ஆனால் இலங்கை தமிழர் அரசியலை பொறுத்த வரை அப்படியான ஒரு அமைப்பு இல்லை என்பதே உண்மை.  தமிழர் மத்தியில் பல அமைப்புக்கள் அரசியல் சார்ந்து உருவாகியுள்ளமையால் மக்கள் எந்த அமைப்பின் பக்கம் நிற்பது என்ற குழப்பமான ஒரு சூழலே நிலவுகின்றது. கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஓரளவேனும் பலமான ஒரு அமைப்பாக காணப்பட்டமையால் மக்களுடைய வாக்குகள் முதல் ஆதரவு என அனைத்துமே அதனை மையப்படுத்தியதாக காணப்பட்டடது. எனினும் கூட்டமைப்பு தன்னுடைய அரசியலை மக்கள் நலன்சார்ந்து பெரியளவிற்கு நகர்த்தியிராத நிலையில் மக்கள் மாற்று அணிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றில் தமிழரின் வாக்கு பலத்தை சிதைத்துள்ளதுடன் சிறுபான்மை இனங்களின் ஆதரவு இல்லாமலேயே ஒரு கட்சி பெரும்பான்மையுடன் அரசமைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தை நாம் சிந்தித்தித்து பார்க்க வேண்டியோராகவுள்ளோம்.

தமிழ் மக்கள் பேரவையுடைய தோல்வியும் கூட பொதுக்கட்டமைப்புக்கான வெளி ஒன்றினை உருவாக்கியுள்ளது. முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து வடக்கு – கிழக்கின் புத்தி ஜீவிகளையும் இளைஞர்களையும் இணைத்து பாரிய கொள்கைப் பிரகடனங்களோடு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பானது தன்னுடைய அரசியலுக்காக மக்களுடைய எதிர்பார்ப்பை சிதைத்து எஞ்சி நின்ற நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியது. இது பொதுக்கட்டமைப்பு பற்றி அதிக இளைஞர்கள் சிந்திக்க பயப்படுகின்ற ஒரு சூழலையும் உருவாக்கி விட்டது. இந்த நிலையிலேயே பொதுக்கட்டமைப்பு பற்றி சிந்திக்க வேண்டியோராக நாமுள்ளோம்.

தமிழர் சமூகத்தினுடைய பின்தங்கிய நிலையை அடிப்படையில் இருந்து கட்டமைக்க பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது. கல்வி சார்ந்து தமிழர் சமூகம் அடக்கப்பட்டமை கூட கடந்தகால போராட்டங்களுக்கான மையமாகும். உண்மையிலேயே அந்த அடக்கு முறையில் நாம் தோற்றுப்போய் பெரும்பான்மை சமூகம் வென்றுவிட்டது என்பதே உண்மை. நம்முடைய தமிழர் சமூக கல்வி நிலை அண்மைக்காலங்களில் அதிகம் பின்தங்கியுள்ளது. மாணவர்களிடம் கல்விக்கு தடையாக போதைப் பொருள்பாவனை,  வறுமை , சமூக ஏற்றத்தாழ்வுகள் என பல காரணங்கள் துணை போகின்ற நிலையில் ஆக்கபூர்வமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்புவது தொடர்பாக கவனம் செலுத்தக்கூடிய பொது அமைப்பு ஒன்று இன்றியமையாததாகிறது.

அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்காக பிரச்சினைகள் ஏற்படும் போது எதிர்வினையாற்றக் கூடியோராகவோ..? அல்லது மக்களுடைய மனதை புரிந்து கொண்டோராகவோ..? இல்லை. மக்களுடைய நிலையை புரிந்து அதனை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அரசியல் தலைவர்கள் இல்லை. நம்முடைய அரசியல் தலைவர்கள் தங்களுள் சண்டையிட்டு கொள்வதிலும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனரே தவிர மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனமும் கூட. இந்த நிலையிலேயே மக்களுக்கான அரசியல் தலைவர்களை உருவாக்கவும் அடையாளம் காட்டவும் இந்த பொதுக்கட்டமைப்பு அவசியமாகிறது.

தமிழர் சமூகங்களிடையே பொருளாதார அபிவிருத்தியை உருவாக்க அரசியல் தலைமைகள் தவறிய நிலையில் பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்தி ஒரு பொது அமைப்பின் தேவை அவசியமாகின்றது. சொல்லப்போனால் மக்களுடைய வாழ்வை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்வோம் எனக்கூறும் தேர்தல்கால  அரசியல்வாதிகளுடைய வாழ்க்கையிலும் வாகனங்களிலும் மட்டுமே அபிவிருத்தி தென்படுகிறதே தவிர வட – கிழக்கில் ஏழை எந்த அபிவிருத்தியும் இல்லாமலே இருக்கின்றான். மேலும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயலாற்றும் அரசியல்வாதிகள்  பொருளாதார அபிவிருத்தி என்னும் பெயரில் உள்ள  வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிரப்புகின்றனரே தவிர புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவோ,  தொழில் முயற்சிகளை தமிழர் பகுதிகளில் உருவாக்கவோ முனைவதாக தெரியவில்லை. இதனாலேயே தமிழர் சமூகம் பொருளாதார நிலையிலும் பின்நிற்க வேண்டியுள்ளது. இந்தநிலையிலேயே தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய அமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது.

இதே வேளை இனம் எனும் போது தமிழர் என நம்மை நாமே குறிப்பிட்டாலும் கூட பிரதேசவாதத்தால் வடக்கு தமிழர்,  கிழக்கு தமிழர்,  மலையகத் தமிழர் எனவும் [அதற்குள்ளும் பல உபபிரதேச பிரிவுகள் உள்ளன] சாதிய கட்டமைப்புக்களாலும் சமயரீதியாகவும் பல கூறாக பிரிந்துள்ள தமிழர்களை ஒன்றிணைத்து பயணிக்க வேண்டிய ஒரு பொதுக்கட்டமைப்பு தேவையாக உள்ளது.

விமர்சனங்கள் தாண்டி 2009 க்கு முன்பு வரை மக்களை வழிப்படுத்த காணப்பட்ட ஒரு அமைப்பினுடைய தேவையை இன்று உணரக்கூடியதாக உள்ளது.

இந்தநிலையில் மக்களை வழிப்படுத்தவும் அரசியல் சார்ந்து நம்முடைய கருத்துக்களை ஒரு சேர பதிவு செய்யவும் அரசியலை தீர்மானிக்கூடிய எனினும் அரசியல் பின்னணியற்ற ஒரு அமைப்பினுடைய தேவை காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இங்கு பொதுக்கட்டமைப்பு என்னும் போது ஆயுதக்கலாச்சாரம் பற்றி சிந்திப்பதல்ல. ஆக்கபூர்வமான நகர்வுகளூடாக நம்முடைய உரிமைகளையும் நிலைப்பையும் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபப்ட்டுள்ள அரசிடம்  இருந்து பாதுகாப்பதும் பெற்றுக்கொள்வதும் தமிழர் பகுதிகளின் சமூக,  பொருளாதார,  கல்வி, கலாச்சார  நிலைகளை மேம்படுத்துவதுமேயாகும்.

பொதுக்கட்டமைப்பின் செயல் பயணம் எப்படி இருக்க வேண்டும்..?

இந்த பொதுக்கட்டமைப்பினுடைய எழுச்சியானது திரையில் நாம் காண்பது போல ஒரு சில உணர்ச்சி பாடல்களுடன் முழுமை பெற மாட்டாது. அது தன்னுடைய தளத்தை ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் இருந்து தொடங்க வேண்டும். கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஆக்கபூர்வமாக சமூகத்துக்காக சிந்திக்க கூடிய சரியான நபர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் மூலமாக அந்த கிராம முன்னேற்ற நடவடிக்கைகளை படிப்படியாக பொதுக்கட்டமைப்பு நகர்த்த வேண்டும். கிராமங்களின் இளைஞர் அமைப்புக்கள் / விளையாட்டுக் கழகங்களை கொண்டு அவர்களுடைய சமூகத்தின் தேவையை அவர்ககளே பொறுப்பெடுக்க கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த பொதுக்கட்டமைப்பு வடக்கு – கிழக்கு – மலையகத்தின் கிராமங்களை மையப்படுத்தியதாக நகர ஆரம்பிக்க வேண்டும். இதுவே அமைப்பினுடைய முனைப்பான வளர்ச்சிக்கான அடிப்படைகளை ஏற்படுத்தும்.

பொதுக்கட்டமைப்பின் நகர்வுகள் ஏழ்மையை மாற்றக் கூடியதாக நகர வேண்டும். புலம்பெயர் தேசங்களிலிருந்து அனுப்பப்படும் பணம் முறையாக எல்லோரிடமும் போய் சேர்வதில்லை. அத்துடன் அந்த பணம் பசியோடு இருப்பவனுக்கு ஒரு வார காலமோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்யுமே தவிர பணம் முடிய அந்த குடும்பத்தின் நிலை…? எனவே புலம்பெயர் அமைப்புக்களுடாக கைமாற்றப்படுகின்ற பணத்தை முறையாக பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பசியோடு இருப்பவனுக்கு நிரந்தமான சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க அந்தப்பணத்தை பயன்படுத்தல் ஆரோக்கியமானது. மேலும் பண்ணைகள் அமைத்தல்,  தள்ளு வண்டிக்கடைகள் ஏற்படுத்திக்கொடுத்தல், தொழில் உபகரண வசதிகளை வழங்குதல், இப்படியாக பொருளாதார மாற்றங்களை அடிப்படையில் இருந்து ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையாளர்களை உருவாக்குதும் வறுமை ஒழிப்பின் ஒரு படியே..!

இவ்வளவு பெரிய இழப்புக்களின் பின்னணியில் நம்முடைய கல்விக்கு பெரிய பங்குண்டு. நம்முடைய அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக வளப்படுத்துவது காலத்தின் அதிமுக்கிய தேவையாகவுள்ளது. போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டுக் கலாச்சார மோகம், என அடுத்த தலைமுறை தன்னுடைய கல்வியை நம்கண்முன்னேயே தொலைத்துக்கொண்டு நிற்கின்றது. நெல்சன் மண்டேலா கூறுவது போல ஒரு சமூகம் தன்னை மாற்றிக்கொள்ளவோ அல்லது முன்னேறவோ  நினைக்குமிடத்து கல்வி மட்டுமே தெளிவான ஒரு ஆயுதம் என கூறுகின்றார்.  எனவே எல்லா மாணவர்களுக்கும் சரியான முறையான ஆரோக்கியமான கல்வி கிடைக்க வகை செய்தல் அவசியமாகின்றது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கதைத்தை மீள கட்டியெழுப்பல்,  நம்முடைய வரலாற்றை ஆரோக்கியமாக கடத்துதல்,  மாணவர் தொழில்வழிகாட்டல் கருத்தரங்குகளை மேற்கொள்ளல், பாடசாலை மட்டங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வான நிலையை இல்லாதாக்க செயற்படல்,  மாணவர்களின் கல்விக்கான வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல் என பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் மாணவர்களோடு மாணவர்களாகவும் மேற்கொள்கின்ற பட்சத்தில் ஆரோக்கியமான அடுத்ததலைமுறையை உருவாக்க முடியும்.

மிக முக்கியமாக உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு தனித்து ஒரு மாவட்டத்தை மட்டுமே மையப்படுத்தி இயங்காது எல்லா பகுதி தமிழர்களையுப் மையப்படுத்தி இயங்குவதே பொதுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவும் இலகுவாக வழி செய்யும். இதை விடுத்து யாழ்ப்பாண பகுதியை மட்டுமே மையப்படுத்தி பொதுக்கட்டமைப்பு நகருமாயின் அது வீண் முயற்சியே..!

ஆக்கபூர்வமான வகையில் எங்களுடைய தேவைகளையும் வலிகளையும் பெரும்பான்மை சமூகத்திடம் முன்வைக்க வேண்டிய பொறுப்பினை பொதுக்கட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள், மாணவர் படுகொலை நிகழ்வுகள் என்பன பற்றிய நிகழ்வுகளை ஆக்கபூர்வமாக எல்லா தரப்பினருக்கும் தெரியப்படுத்தல் வேண்டும். அதாவது எங்களுடைய வலிகளையும் தேவையையும் அதன் நியாயப்பாட்டையும் பெரும்பான்மை சமூகத்துக்கு எடுத்துக்கூற கூடிய ஒரு ஊடகமாக இந்த பொதுக்கட்டமைப்பு செயற்பட வேண்டும்.

இவை தவிர பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புக்கான உதவிகளை வழங்குதல்,  நுண்நிதி உள்ளிட்ட தொடரும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடையே பேசுதல், அழிந்து வரும் கலைகளையும் கடந்த கால வரலாறுகளையும் ஆவணப்படுத்துதலும் மீள் ஆக்கப்படுத்தலும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்ற வகையிலாக சமூகப்பபொறுப்புடன் கூடிய ஒரு பொதுக்கட்டமைப்பே இன்றைய காலத்தின் தேவையாகும்.

இந்த வகையிலாக எல்லா பகுதி தமிழர்களையும் ஒரே கோர்வையாக இணைத்துக்கொண்டு செல்லக்கூடியதான நெகிழ்திறன் உள்ள ஒரு அமைப்பாகவும், தமிழர் சமூகத்தின்  அடிப்படையில் இருந்து ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களூடாக தன்னுடைய எதிர்கால தூரநோக்குககளையும் இலக்குகளையும் கட்டமைத்து பயணிக்க கூடிய ஒரு அமைப்பாகவும் இருக்கின்ற பட்சத்தில் மட்டுமே இந்த அமைப்பினுடைய பயணத்தின் மீது முழுமையான மக்கள் நம்பிக்கையும் திருப்பப்பட்டு அரசியல் சார்பற்ற ஆனால் அரசியலை தீர்மானிக்க கூடிய அமைப்பாக அது வளர்ச்சி கண்டு தமிழ் மக்களுக்கான அமைப்பாக மிளிர முடியும். இந்த அமைப்பினுடைய வெற்றிக்காக எத்தனை வருடங்களும் எடுக்கலாம். ஆனால் அமைப்பினுடைய வெற்றியின் இறுதியில் இந்த பொதுக்கட்டமைப்பு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையின் அளவே மதிப்பீடாக காணப்படும். அந்த மக்கள் நம்பிக்கையே பொதுக்கட்டமைப்பு கைகாட்டும் வழி சரியெனும் நிலைக்கு மக்களை கொண்டு செல்ல அத்தியாவசியமானது.

பொறுத்திருந்து பார்க்கலாம் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை இலங்கைத்தமிழ் இளைஞர்களும் புத்திஜீவிகளும் அரசியாலாளர்களும் எவ்வாறு கையாளப்போகின்றனர் என்று……..!