17

17

ஜனாதிபதித் தேர்தல் முடிவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு

sarath.jpgஇலங்கை யில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜெனரல் சரத் ஃபொன்சேகா சார்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையிலும் தேர்தல் முடிவுகளிலும் கணினியை உபயோகித்து மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் முடிவுகள் குறித்த உத்தியோகபூர்வ பிரகடனத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளரை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாக்கி பலவந்தமான முறையில் தனக்கு சார்பான ஒரு முடிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மோசடியான வழியில் பெற்றிருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் ஏற்கனவே அளித்திருந்த அனுமதியின் பேரில், தடுத்துவைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் கையொப்பத்தைப் பெற்று அவரது பெயரிலேயே மனுவும் ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்பு

srilanka_parliament_02.jpgஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று (16) முதல் ஏற்கப்படுவதாக தேர்தல் திணைக் களம் தெரிவித்தது. 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கே இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள் ளதாகவும் திணைக்களம் கூறியது.

இம்முறை தேர்தலில் கூடுதலான அரசாங்க ஊழியர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்த தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது. இதன்படி 2008 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு சகல அரச நிறுவனங்க ளிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்க 22ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவிருந்த பௌத்த தேரர்களின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கண்டியில் நாளை நடைபெறவிருந்த பௌத்த தேரர்களின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கால வரையறையின்றி குறித்த சங்க சம்மேளன கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக கண்டி மல்வத்த, அஸ்கிரிய மற்றும் ராமன்ய பீடாதிபதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த கண்டி மஹா மலுவலவில் இந்த கூட்டத் தொடர் நடத்தப்படவிருந்தது.நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும், பௌத்த பிக்குகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையின் கௌரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாநாயக்கத் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.