June

June

அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்கள் – உலக சுகாதார நிறுவனம் விசனம் !

ஆப்ரிக்காவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் இன்று உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது.

உலகளவில் 3,100க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 72 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என பொது அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் அளித்த விளக்கத்தில், “குரங்கு அம்மை வைரஸ் பரவல், ஆப்பிரிக்காவுடன் தெளிவான தொடர்பு இல்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பிரதான ஊடகங்களில், அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என கூறியுள்ளனர். இதையடுத்து உலக சுகாதார நிறுவனம், நிபுணர்களுடன் இணைந்து, குரங்கு அம்மை வைரஸின் பெயர்களை மாற்றுவது மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அந்த அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வைரஸ் தொற்று விரைவில் புதுப்பெயரில் அழைக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வாதிகாரம் ஒழியட்டும் கியூபாவில் மக்கள் போராட்டம் – அமெரிக்காவின் சதி என்கிறார் கியூப ஜனாதிபதி !

கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக 381 பேருக்கு  25 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்துள்ளது. இவர்களில் 297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல் அல்லது கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் சுதந்திரம் வேண்டும். சர்வாதிகாரம் ஒழியட்டும்”, “விடுதலை வேண்டும்” “எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்,”  என கோஷமிட்டே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விலைவாசி உயர்வு மற்றும் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் “16 முதல் 18 வயதுடைய 16 இளைஞர்களும்” அடங்குவர் என்று அனைத்தின் அரச தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.

மிகவும் அரிதான போராட்டத்தையடுத்து, கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

1962-ஆம் ஆண்டில் இருந்து கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை, “பொருளாதாரத்தை முடக்கும் கொள்கை” என்று அவர் சாடினார். நாட்டை வீழ்த்துவதற்காக அமெரிக்கா அமர்த்திய கூலிப்படையினர்தான் இந்தப் போராட்டக்காரர்கள் என்று கூறிய அவர், தனது ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து கியூப புரட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“புரட்சியாளர்களே! நீங்கள் வீதிக்கு வந்து போராட உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் – மேலும் இருவர் பலி !

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.

படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

“நீங்கள் குப்பையை வீசினாலும் நாம் பழங்களையே வீசுவோம்.”- சிங்கள பேரினவாதிகளுக்கு செயலால் அடி கொடுத்த வைத்தியர் ஷாபி !

ஏப்ரல்21 சஹ்ரான் குழுவினரின் தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று ஷாபி ஷிஹாப்தீன். சஹ்ரான் தாக்குதலை அடுத்து இலங்கையின் பல பகுதிகளிலும் முஸ்லீம்கள் மீதான வன்முறைகளும் – அடக்குமுறைகளும் அரங்கேறின.

வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவாரா? வெளிவந்த  தகவல் - ஐபிசி தமிழ்

இந்த நாட்களில் சிங்கள மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமான திவயின பத்திரிகை “வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் சிங்கள தாய்மாரை இலக்கு வைத்து கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.சுமார் 4000 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மே 2019 23 திகதி ” என மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

 

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு காட்டுத்தீ போல இலங்கையில் – குறிப்பாக தென்னிலங்கையில் எரிந்து கொண்டிருந்த நிலையில் ஊடகங்களும் – தீவிர சிங்கள அரசியல் கட்சிகளும் இதனை தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொண்டன.

 

பௌத்த பிக்குகள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரிதான விசாரணைகள் எதுவுமற்ற நிலையில் உடனடியாக வைத்தியர் ஷாபியை  கைது செய்ததது காவல்துறை. வெறும் வதந்திகளை வைத்து மட்டுமே அந்த ஷாபி  மீதான குற்றச்சாட்டுக்கள் அரங்கேறின. ஷாபி ஷிஹாப்தீன் தீவிரவாத கொள்கைகளை உடைய முஸ்லீம் குழுக்களுடனும் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கிடையில் ஷாபி ஷிஹாப்தீனின் வீட்டின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன் அவருடைய குடும்பத்தினரும் மானபங்கப்படுத்தப்பட்டிருந்தனர். இதனை வைத்து மிகப்பெரிய அரசியல் அரங்கேறிக்ககொண்டிருந்ததது. 2019 – மே – 24 பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானார் ஷாபி. தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

எனினும் ஷாபியிடம் சிகிச்சை பெற்ற பல சிங்கள பெண்கள் கருத்தரித்ததுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஷாபி நிரபராதி எ்னபதை வெளிப்படுத்தின. தொடர்ந்து ஷாபி விடுதலையானார்.

கைது தவறானது என்ற முடிவுக்கு வந்ததுடன் பெருமளவிலான பெண்களுக்கு தெரியாமல் கட்டாய கருத்தடை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட விசேட வைத்தியர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கில் ஷாபி குற்றமற்றவர் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.

அதன்படி, அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் அனைத்தையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டது.

சேவையிலிருந்து கட்டாய விடுப்புக் காலத்திற்கான நிலுவைத் தொகைகள், கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் அனைத்தையும் மனுதாரர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு செலுத்த முடியும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அதன்படி, வைத்தியர் ஷாஃபிக்கு நிலுவைத் தொகை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.

வைத்தியர் ஷாபி பணி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதிக்குரிய, நிலுவை வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை ஜூலை 10ஆம் திகதிக்கு முன்னர் மீளச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளாக 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதத்தை (2,675,816.48) வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதற்கான காசோலையை வைத்தியர் ஷாபி பெற்றுக்கொண்டதுடன், நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுகாதார அமைச்சிடம் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளார்.

Dr-Shafi-Shihabdeen-Returns-His-Salary-Arreary-to-Purchase-Medicines

தற்போது நாட்டில் கடும் நெருக்கடியில் உள்ள மருந்துகளை வாங்குவதற்கு தேவையான பணமாக தமது சம்பள நிலுவையை சேர்த்துக்கொள்ளுமாறு கோரி வழங்கியுள்ளார்.

 

உண்மையிலலேயே இன்று வரை ஷாபி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டைமுன்வைத்த திவயின பத்திரிகை நிறுவனமோ, அல்லது வதந்திகளை மட்டுமே வைத்து ஷாபியை கைது செய்த குருணாகல் பொலிஸ் பிரிவோ அவரிடம் மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை. வைத்தியர் ஷாபி மேற்கொண்ட மருத்துவப்பணி குருணாகல் பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறான ஒரு அவப்பெயரை சந்தித்த ஷாபி மீதும் அவருடைய குடும்பத்தனர் மீதும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மீதும் மிக இலகுவாக குற்றஞ்சுமத்தி ஒரு மனிதரின் சமூக அந்தஸ்தை கிழித்தெறிந்ததது இந்த சிங்கள பேரினவாதம்.

 

ஆனால் இவை தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாத வைத்தியர்ஷாபி எந்த வைத்தியசாலை நிர்வாகத்தால் குற்றவாளியாக்கப்பட்டாரோ – அவமானப்படுத்தப்பட்டாரோ அதற்கே தன்னுடைய ஊதியப்பணமான 2.6மில்லியன் ரூபாவை வழங்கி இனவாதிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

2ம் உலகப்போர் முடிந்ததை தொடர்ந்து ஜேர்மனி கிழக்கு ஜேர்மனி – மேற்கு ஜேர்மனி என இரண்டாக பிளவுபட்டது. அது வரை ஒற்றுமையுடள் வாழ்ந்த மக்கள் ரஷ்ய சார்பு – அமெரிக்க சார்பு என இருகூறாக்கப்பட்டனர். இதனை நினைவுபடுத்த பேர்ளினில் கிழக்கு – மேற்கு ஜேர்மனியை பிரிக்கும் வகையில் சுவர் எழுப்பப்பட்டது. ஒரு பகுதி மக்கள் இன்னொரு பகுதி மக்கள் மீது தமது வெறுப்பை காட்ட குப்பைகளை கொண்டு சென்று மதிலின் மறுபக்கமாக வீசிக்கொண்டேயிருந்தனர். எனினும் மற்ற பகுதி மக்கள் குப்பைகளை வீசாது பழங்களையும் – நறுமணபபொருட்களையும் கொண்டு போய் வீசினார்களாம்.

நமக்கு அவர்கள் குப்பையை வீசினாலும் நாம் பழங்களை வீசுவோம் என பெரிய விடயத்தை சிங்கள பேரினவாதிகளுக்கு  தனது செயல் மூலம் ஷாபி வெளிப்படுத்தியுள்ளார்.

 

 

 

லண்டன் சைவ மாநாடு ஒரு பார்வை

ஒரு சமூகம் புலம்பெயர்ந்து செல்லும் போது அந்த சமூகத்தினுடைய கலாச்சார பாரம்பரியங்களையும் அது சுமந்தே செல்கின்றது. ஒருவருடைய அடையாளம் என்பது இந்த சமய, கலாச்சார விழுமியங்களும் இணைந்தது தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கே தங்கள் அடையாளத்தை இழந்து அடையாளமற்ற மனிதர்களாக உலகில் உருவாகிவிடுவமோ என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் சமய, கலாச்சார விழுமியங்களை இறுக்கிப் பிடித்தனர். இது தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வினால் உந்தப்பட்டதன் விளைவு. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுக்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரித்தானியாவில் தங்களுக்கான வழிபாட்டுத்தலங்களை நிறுவ முயன்றனர்.

தாயகத்தில் வீடுகளில் சாமியறை என்றொன்னு இருக்கும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் சாமிக்கு ஒரு அறையை ஒதுக்க பொருளாதாரம் இடம்கொடாது. சாமிக்கு ஒதுக்கும் அறையை வாடகைக்கு விட்டால் நாலு காசு வரும் என்ற நிலையே புலம்பெயர் தேசத்தில் உள்ளது. அதனால் பெரும்பாலும் படிகளுக்கு கீழே, அல்லது கொரிடோரில் ஒரு தட்டை அடித்து அதில் சாமியை வைத்துவிடுவார்கள். ஆரம்பநாட்களில் வானில் சாமிப்படத்தை கொண்டுவந்து வானை வடக்கு நோக்கி ரிவேர்ஸ் பண்ணிவிட்டு பூசைகள் நடத்திய கதைகளும் உண்டு. மோபைல் கோயில்கள். காலங்கள் உருண்டோட வருமானம் போதாததாலட கிறிஸ்தவ தேவாலங்கள் தமது கட்டிடங்களை விற்க ஆரம்பித்தன. தவறணைகளும் நட்டத்தில் ஓட ஆரம்பித்ததால் அவற்றை விற்க ஆரம்பித்தன. ஒன்றோடு ஒன்று முற்றிலும் முரண்பட்ட இந்த சமூக நிறுவனங்களுக்கு மக்கள் கூடுவதற்கான அனுமதி இருப்பதால் அவற்றை வாங்கி கோயில்களைக் கட்டுவது ஒரு ரென்ட்டாகி விட்டது. இவ்வாறு கோயில்கள் உருவாகி லண்டனில் தற்சமயம் நாற்பது கோயில்கள் வரை உள்ளன. அவற்றில் ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில், ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி கோயில் இரண்டும் மட்டும் இலங்கைத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில் தவிர்ந்த ஏனைய தமிழ் கோயில்களில் சாமி வெளிவீதி சுற்றுவதற்கே இடமில்லை. திருவிழா காலங்களில் மட்டும் உள்ளுராட்சிமன்றில் அனுமதி பெற்று சாமி வீதிக்கு வரும். இவ்வாலயங்கள் அனைத்தும் திருவிழாக்களை எப்படியாவது செய்துவிடுவார்கள். இல்லையேல் ஆலயத்தினது வருமானமும் கௌரவமும் பாதிக்கப்படும். இந்த நாற்பது ஆலயங்களுமே பெரும்பாலும் திட்டமிடல் இல்லாமல் வாய்க்கின்ற இடத்தை எடுத்து கோயிலாக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வாலயங்கள் குடிமனையான இடங்களிலேயே உள்ளன. அதலால் இவ்வாலங்களில் பெரும்தொகையானவர்கள் கூடுவதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். மேலும் குடியிருப்பாளர்களுக்கும் இவ்வாலயங்களுக்கும் இடையே முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். தங்கள் பகுதிகளில் கார் நிறுத்துவதில் நெருக்கடி, அதீத சனநடமாட்டம், சத்தம் என குற்றச்சாட்டுகள் எழும்.

இப்பின்னணியில் லண்டன் திருக்கோயில்களின் ஒன்றியம் தனது 22வது வருடாந்த மாநாட்டை நடாத்த வழமை போல் யூன் 18, 19ம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது. அரசியல் வாதிகள், நடிகர்கள், பாடகர்கள், தேவாரம் திருவாசகம் பாடுபவர்கள், சொற்பொழிவாளர்கள் என்று ஒரு பல்சுவை மசாலா நிகழ்வாக அது இடம்பெறும். ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் லண்டன் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கதாக எதையும் சாதித்து இருக்கின்றனவா என்றால் . இவ்வாலயங்கள் இருக்கின்றது என்பதனைக் உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்களும் இவ்வாறானதொரு நிகழ்ச்சியை நாடாத்துகின்றோம் என்று காட்டுவதற்கு அப்பால் இவ்வாலயங்கள் என்ன செய்கின்றன என்பது அவ்வாலயங்களின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.

தனித்தனி ஆலயங்களாக ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம் என்பன தாயக உறவுகளுக்கு கணிசமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றும்படி ஏனைய ஆலயங்கள் அவ்வாறான உதவிகளைப் பெயரளவில் மட்டுமே மேற்கொள்கின்றன. இவ்வுதவிகள் கூட தாயகத்தின் வாழ்நிலை முன்னேற்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

வெறும் பேச்சுக்காக தமிழும் சைவமும் ஒன்றென்று முழங்கும் திருக்கோயில்கள் ஒன்றியம் தமிழுக்கோ சைவத்துக்கோ கடந்த கால்நூற்றாண்டில் என்ன செய்தார்கள் என்ற மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். ஒரு சுப்பர்மாக்கற் நடத்துவது போலவே லண்டனில் உள்ள இந்த ஆலயங்கள் செயற்படுகின்றன.

இவர்களுடைய வருடாந்த நிகழ்வு கூட ஒரு கலை நிகழ்ச்சி என்பதற்கு அப்பால் செல்வதில்லை. புலம்பெயர் மண்ணில் தமிழையோ சைவத்தையோ எப்படி வழக்கப் போகின்றனர் என்ற எந்தத் திட்டமிடலும் சிந்தனையும் இல்லை. அதற்கான பார்வையும் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

லண்டனில் உள்ள ஆலயங்கள் அவைகள் தனிநபர்களுடைய ஆலயங்களாக இருந்தாலென்ன பொது ஆலயங்களாக இருந்தாலென்ன அவற்றிடம் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ கோயிலை நடத்துகிறோம் திருவிழாச் செய்கின்றோம் என்பதோடு சரி. அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை எவ்வாறு கைமாற்றப் போகின்றோம் என்பது பற்றி அவர்களிடம் எவ்வித சிந்தனையும் இல்லை. இன்று வரையும் தமிழுக்கும் சைவத்துக்குமான ஒரு ஆவணக்காப்பகமோ ஆய்வு நிறுவனமோ கிடையாது.

ஆலயங்கள், புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழ் மற்றும் சைவம் பற்றிய எவ்வித விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இது விடயமாக நூலகவியலாளர் என் செல்வராஜா பலரையும் அணுகி இருந்தார். தனது கருத்துக்களையும் தெரியப்படுத்தி இருந்தார். அவர் ஒரு தனி மனிதனாக 20,000க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் நூல்களைத் தொகுத்து தனது சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் அவற்றை வெளியிட்டுவிருகின்றார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகம் எப்போது தீக்கிரையானது என்பதே திரிபுபடுத்தப்பட்ட நிலையில் 1981 மே 31இல் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றை தனி மனிதனாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆலயமும் ஒரு நூலகத்தை வைத்திருக்காவிட்டாலும் இந்தத் திருக்கோயில்கள் ஒன்றியம் ஒரு ஆவணக்காப்பகத்தை உருவாக்கி தமிழினதும் சைவத்தினதும் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கு எமது வரலாற்றை கைமாற்றுவதற்கான காத்திரமான ஆய்வு செய்யப்பட்ட தரமான நூல்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதற்கான எவ்வித முயற்சிகளிலும் இத்திருக்கோயில்கள் ஒன்றியம் ஈடுபடவில்லை.

இப்பொழுது முதுமையை எட்டும் இந்தத் திருக்கோயில்களின் உறுப்பினர்கள் தற்போது அவர்களது அந்திம காலத்தை நெருங்குகின்றனர். இவர்களுக்குப் பின் இவர்களுடைய வாரிசுகள் யாரும் இந்த காளாஞ்சிக் கெடுபிடிக்கு வரப்போவதில்லை. அடையாளம் இல்லாத சிலர் தங்களிடம் உள்ள டாம்பீகத்தை பறைசாற்ற கோயில்களுக்கு வருவார்களேயல்லாமல் அடுத்த தலைமுறையினரில் கோயில்களின் எதிர்காலம் கேள்விக்குறியே. ஏற்கனவே லண்டனுக்கு வெளியே உள்ள கோயில்கள் ஒன்றிரண்டு நாளாந்த செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் திண்டாடுகின்றன. மேலும் தற்போதைய விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சியும் ஆலயங்களின் வருமானத்தையும் கணிசமான அளவு பாதிக்கும்.

இந்நிலையில் வெளியில் இருந்து பல்லாயிரங்களைக் கொட்டி ஏற்பாடு செய்யப்படும் இந்த வருடாந்த நிகழ்வுகள் அது முடிந்த சில நிமிடங்களிலேயே அர்த்தமற்றதாகிவிடும். இந்நிகழ்வுகள் சைவத்தையும் தமிழையும் விஞ்ஞானபூர்வமாக ஆய்வுசெய்யும் மாநாடுகளாகவும் அம்மாநாட்டின் அறிக்கைகள் ஆவணங்களாகவும் கொண்டுவரப்பட்டு இருந்தால் இம்மாநாடுகள் மிகக் கனதியானவையாக இருந்திருக்கும்.

இத்திருக்கோயில்கள் ஒன்றியத்தால் அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த ஆலயங்களில் ஆளுமை செலுத்துபவர்களிடம் அதற்கான அறிவுநிலையோ சிந்தனையோ கிடையாது. தலைப்பாகையைக் கட்டி காளாஞ்சி வாங்குவதற்கு அப்பால் அவர்கள் இதுவரை சிந்திக்கவில்லை.

இவர்களது குறுகிய சிந்தனைகளை வைத்து தங்களை சைவப் பெரியார்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஆறுதிருமுருகன், கம்பவாருதி போன்றோர் வெளிநாடுகளுக்கும் வந்து வசூல் செய்துகொண்டு திரும்புகின்றனர். ஆறுதிருமுருகனின் திருவிளையாடல்கள் “யாழ் பல்கலைக்கழகம்: ஒரு பார்வை” என்ற நூலில் விரிவாக தொகுக்கப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனே அடுத்த மாவீரர் உரையில் அவர்களைப் புகழ வேண்டியதாகிவிட்டது. அப்படியிருக்கு “வாராதே வரவல்லாய்” என்று கம்பவாருதி ஜெயராஜ் மல்லிகையில் எழுதிய கட்டுரைக்கு “வம்பவாரிசு ஆருக்கு வைக்கிறார் ஆப்பு”, “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சு” என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகையில் 2004இல் கட்டுரைகள் வெளிவந்தன. இவர்கள் சமூக மேம்பாட்டிற்காக தாயகத்தில் குறிப்பிடத்தக்க சேவைகள் எதனையும் வழங்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ஜெயராஜ் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்ப உறவுகள் மிகச் சிதைந்து இருப்பதாக கம்பவாருதி ஜெயராஜ் குறிப்பிடுகின்றார். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் ஜெயராஜ் வாழ்கின்ற தாயகத்தில் கல்வி மிகக்கீழ் நிலைக்குச் சென்றுள்ளது, இளவயதுத் திருமணங்கள் அதிகரித்து விட்டது, அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றது, திருமணமாகாமலேயே குழந்தைகள் தாய்மை அடைகின்றனர், திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் அதிகரித்து வருகின்றது. அப்படிப்பட்ட மண்ணில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு உரைக்கு கம்பவாருதி ஜெயராஜ் குழவிற்கு ஒரு லட்சம் செலவாகும் என நிதி திரட்டப்பட்டது. இப்போது கிளிநொச்சியில் கலைக்கூடம் அமைக்கவும் நிதி திரட்டப்படுகின்றது. இதே போல் ஆறுதிருமுருகனும் அடிக்கடி அடிக்கல் நாட்டுகிறார் கட்டிடங்கள் கட்டுகின்றனர். ஆனால் அதனைப் பயன்படுத்த வேண்டிய இளைய தலைமுறை பற்றி இவர்களிடம் எவ்வித பார்வையும் இல்லை. அடிக்கல் நாட்டுவது, கட்டிடம் கட்டுவது, அதன் பின் அது தேடுவாரற்று கிடக்கும். இதுதான் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது. புலத்தில் இருந்து வசூலிக்கப்படும், திரட்டப்படும் வழங்கப்படும் நிதி பெரும்பாலும் இதுவரை விழலுக்கு இறைத்த நீராகவே ஆனது. ஒரு வகையில் ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் போன்றவர்களை வளர்க்கவும் தாயகத்தில் சமூகச் சீரழிவிற்குமே புலம்பெயர் பணம் பெரும்பாலும் பயன்பட்டது.

பிரபல்யமானவர்கள் என்பதற்காக அவர்களுக்கு வாரி இறைப்பதினால் சமூகத்திற்கு எந்தப்பலனும் கிடைப்பதில்லை. ஆளுக்கொரு பிரபலத்தை கொண்டு திரிந்து எமது சமூகப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவைகளையுணர்ந்து நீண்டகால நோக்கில் சிந்தித்துச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். தற்போது தங்கள் கடைசிக்காலத்திலாவது, தங்கள் பெயர் சொல்லும் வகையில் காலத்தால் அழியாமல் இருக்க தமிழுக்கும் சைவத்துக்கும் பிரித்தானியாவில் ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்க இத்திருக்கோயில்களின் ஒன்றியம் முன்வரவேண்டும்.

 

ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைனுக்கும் – சீனாவை கட்டுப்படுத்த தாய்வானுக்கும் அமெரிக்க ஆயுத உதவி !

சீனாவுக்கு ஆசிய நாடுகள் தரும் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு மந்திரி வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளாா்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

பன்முகத்தன்மை என்ற போா்வையில் அமெரிக்கா தனது நாட்டின் நலன்களை பிற நாடுகளின் மீது திணிக்கிறது. எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது, பிற நாடுகளை கொடுமைப்படுத்த கூடாது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிா்ப்பதற்காக, இந்தோ-பசிபிக் என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பை அமெரிக்கா உருவாக்கும் முயற்சி, ஆசிய நாடுகள் சீனாவுக்கு தரும் ஆதரவை பறிக்கும் முயற்சியே ஆகும்.

இது மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் மோதலையும் உருவாக்குவதற்கான ஒரு உத்தியாகும். சீனா தனது ராணுவத்தை விரைவாக நவீனப்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனா, சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இது பசிபிக் கடற்பகுதியில் சீன கடற்படை தளம் உருவாகலாம் என்ற அச்சத்தை அமெரிக்கா உருவாக்கி, தென் சீனக் கடல் பகுதிகளில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்துகிறது. இது எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுவதாகும். பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சாா்ந்த பிரச்சினை உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் கடல் சாா்ந்த பிரச்சினைகளை தாங்களாகவே தீா்த்து கொள்ள வேண்டும். தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே சீனாவை எதிர்க்கும் போர்வையில் தைவானுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவ்வாறு சீனா பாதுகாப்பு மந்திரி கூறினார்.

இதே நேரம் ரஷ்யாவை கட்டுப்படுத்தவே உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதாகவும் போர் முடிவடையாது நீண்டு கொண்டு செல்வதற்கு அமெரிக்காவும் அதனுடைய நேட்டோ நாடுகளுமே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

களவாடப்படும் தமிழர் நிலங்கள் – வாய் பேச்சோடு நிற்கும் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் !

இலங்கையில் பௌத்த – சிங்கள பேரினவாதம் ஏதொவொரு வகையில் தன்னுடைய ஆதிக்க கரங்களை சிறுபான்மை மக்கள் மீது அழுத்திபிடித்து்ககொண்டு தான்  இருக்கிறது என்பதை குருந்தூர் மலை மீது அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை அமைப்பு நடவடிக்கைகள் மிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டியுள்ளன.

May be an image of 3 people and outdoors

இங்கு இரண்டு விதமான விடயங்கள் அலசப்பட வேண்டியவை.

01. குருந்தூர்மலை, திருகோணமலை, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை என பல இடங்களில் உள்ள தமிழர் வழிபாட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நிலையில் இதற்கு எதிராக செயற்பட வேண்டியவர்கள் மிகுந்த அமைதியுடன் இருப்பதை தான் இங்கு நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

தேர்தல் காலங்களில் மட்டும் மழைக்காலத்து ஈசல்கள் போல போலித்தேசியம் பேசிவிட்டு காணாமலேயே போய்விடுகிறார்கள் இந்த தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதிகள். ஜனாதிபதிக்கு அறிவுரை கூறுமளவுக்கு – எதிர்க்ட்சிகளை இணைத்து பிரேரணை கொண்டுவரும் அளவுக்கு தெளிவாக சட்டங்கள் தெரிந்த பல சட்டத்தரணிகள் வட-கிழக்கு தமிழ்தேசிய கட்சிகளில் அங்கத்தவர்களாயுள்ளனர். இருந்தும் என்ன பயன்..? தமிழர் நிலங்களில் தொடரும் இந்த நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ள முயற்சிக்கவும் இல்லை. பிரச்சினை பூதாகரமாக உள்ள போது மட்டும் மக்களோடு மக்களாக வந்து கொடி பிடித்து விட்டு சென்று விடுவதாக தான் பாராளுமன்ற அரசியல்வாதிகளின் நிலையும் காணப்படுகின்றது.

இதற்காக தான் இவர்களை நாம் பாராளுமன்றம் அனுப்பினோமா என மக்களும் கேள்வி கேட்பதில்லை. அவர்களும் மக்களுக்காக – தமக்கு வாக்களித்த மக்களின் உரிமைக்காய் எந்த கஷ்டமும் பட்டதாக தெரியவில்லை. பட்டதும் இல்லை.

இந்த அரசியல்வாதிகள் பிரச்சினைகளை வளர்க்கவே விரும்புகின்றனர் .தமிழர் பகுதிகளில் இன முரண்பாடு தொடர்பான பிரச்சினைகள் எரிந்து கொண்டிருப்பதை இந்த தமிழ்தேசிய தலைவர்கள் விரும்புகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அப்போது தானே இதை வைத்து – இந்த நிலத்தை மீட்டுத்தருவதாக கூறி ஓட்டு சேர்க்க முடியும்.

கிட்டத்தட்ட இந்தியாவின் அயோத்தியில் உள்ள மசூதியையும் – ராமர் கோயிலையும் வைத்து நூற்றாண்டை தொடரும் மதப்பிரச்சினையை எவ்வாறு அரசியல்வாதிகள் தூண்டி குளிர்காய்கிறார்களோ அதே போலத்தான் நம்மவர்களும் செய்கிறார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இந்த மனநிலையில் தான் தமிழ்தலைவர்கள் உள்ளார்கள் என்றால் உண்மையிலேயே இவர்கள் தூக்கி வீசப்பட வேண்டும். வீசப்பட வேண்டியவர்கள்.

02.இன்று விகாரை அமைப்பு நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுவரும் குருந்தூர் மலை பகுதியானது தொல்லியல் பகுதியாக அறிவிக்கப்ப்படிருந்தததுடன் அங்கு எந்த புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியாது என நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பிருந்த நிலையில் சத்தமேயில்லாமல் அரச ஆதரவுடனும் – இராணுவ பாதுகாப்புடனும் விகாரை அமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்படியானால் நாட்டில் ஒவ்வொரு மக்களுக்கு ஒவ்வொரு சட்டம். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம்..? சிறுபான்மை மக்களுக்கு ஒரு சட்டம்..?

இன்று அப்பகுதி இளைஞர்களும் பல பகுதிகளிலிரு்து சென்ற இளைஞர்களும் – மக்களும் கூடியதால் தற்காலிகமாகவிகாரை அமைப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்காலிகம் தான் இது. விகாரை இன்னும் வளரும் என்பதில் துளியும் ஐயமில்லை.

அண்மையில் செய்தி ஒன்றைக்காண கிடைத்ததது. ‘ பதுளை வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்றதாக அந்த செய்தி நீண்டு கொண்டு சென்றது.

 

அது சரி இதற்கும் விகாரை அமைப்புக்கும் என்ன சம்பந்தம்..?

இந்த பொருளாதார நெருக்கடி – உணவுப்பற்றாக்குறை – எரிபொருள் நெருக்கடி என பல பிரச்சினைகள் உள்ள இந்த நாட்டில் இன ஒற்றுமையுடன் நாட்டின் இனங்களை இணைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டிய இந்த காலத்தில் கூட நாட்டின் அரசியல் தலைவர்களும் – மதத்தலைவர்களும் புதிய ஒரு அரசியல் பிரச்சினையை இந்த விகாரையை வைத்து முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை மேலும் முனைப்படைய செய்து கொண்டு தான் புலம்பெயர்ந்த தமிழர்களை அழைத்து பொருளாதாரத்தை மீட்க வழி தேடுகிறார்கள்.

இன மதப்பிரச்சினைகளை வைத்துக்ககொண்டுதான் நாட்டை முன்னேற்ற சிங்களவர்களுடன் தமிழர்களும் இணைய வேண்டும் என்கிறார்கள்.

இதே நிலை தொடருமாயின் இந்தியாவின் அயோத்தி எத்தனை உயிர்களை காவு வாங்கியதோ..? அதே போல இங்கேயும் மீண்டும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது.

சிங்களவர்களுக்கும் – தமிழர்களுக்கும் ஏன் பிரச்சினை.? என்ன பிரச்சினை..? என்ற கோணத்தில் அணுகி இன ஒற்றுமையை ஏற்படுத்தும் வரை – இன ஒ்றறுமையை ஏற்படுத்த முன்வரும் வரை இந்த நாட்டுக்கு அந்த கௌதமபுத்தரால் கூட விடிவு கொடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.

தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்

‘தோற்றுத்தான் போவோமா….’ புகலிட தொகுப்பு மலரினை மீண்டுமொருமுறை மீள் வாசிப்புக்குட்படுத்தினேன். இது பிரான்சின் தலைநகர் பாரிசில் 1995 ம் ஆண்டு ஒரு மேதினத்திலன்று விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தோழர் சபாலிங்கம் நினைவாக, சுமார் 5 வருடங்கள் கழித்து 1999 ம் ஆண்டு பிரான்சில் இருந்து சபாலிங்கம் நண்பர்கள் வட்டத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. புலிகளின் வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயமாக ஒரு கறுப்புப் பக்கமாக இன்றும் விளங்குகின்ற தோழர் சபாலிங்கத்தின் படுகொலை ஆனது அன்று புகலிட சமூகத்தில் பெரும் அதிர்ச்சியினையும் திகைப்பினையும் ஏற்படுத்தியிருந்த விடயம் நாம் அறிந்ததே. இந்த படுகொலையினால் அன்று இங்கு புகலிடத்தில் மனித உரிமைகளை முன்னிறுத்தி தீவிரமாக செயற்பட்டு வந்த புலி எதிப்பாளர்களின் செயற்பாடுகளில் ஒரு தடுமாற்றமும் பயப்பிராந்தியும் ஏற்பட்டிருந்தது. ஆயினும் சுமார் 5 வருடங்கள் கழித்து தற்கொலைக்கு ஒப்பான ஒரு செயலாக இம்மலர் வெளியீட்டினை நிகழ்த்திய ‘சபாலிங்கம் நண்பர்கள் வட்டம்’ அமைப்பினரின் இப்பணியினையும் இதன் பின் உள்ள அர்ப்பணிப்பையும் துணிச்சலினையும் நாம் மறுக்கமுடியாது.

அனைத்து அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு மலரில் ஈழம், புகலிடம், தமிழகம் என்ற பரப்பில் இருந்த பல்வேறு விதமான படைப்பாளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் படைப்புக்கள் வெளியாகியிருந்தன. இந்நூலின் முன்னுரையில் வெளியீட்டாளர்கள் ‘இது வெறும் புலிகளுக்கு எதிரான குரல் அல்ல. பல்வேறு விதமான அரச அடக்குமுறைகள், பெண்களின் மீதான வன்முறை, குழந்தைகளின் மீதான அடக்குமுறை, என அனைத்து மனித நேயமற்ற செயல்களுக்கு எதிராகவும் எமது குரல் ஒலிக்கின்றது’ என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.

‘காலம் தாழ்த்திய ஒரு அஞ்சலி’ என்று இதன் ஆரம்பப் பக்கங்களிலேயே சமுத்திரன் ஒரு பதிவினை எழுதுகிறார். உண்மைதான். இது ஒரு காலந்தாழ்த்திய அஞ்சலிதான். நாம் ஏற்கனவே மேலே கூறியபடி இம்மலரானது சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டு 5 வருடங்கள் கழித்து மிகவும் தாமதமாகவே வெளியிடப்பட்டிருகின்றது. ஆயினும் மிகவும் காத்திரமாகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் வெளிவந்திருக்கின்றது.

அழகலிங்கம் எழுதிய ‘அராயகமும் மார்க்சியமும்’ தி. உமாகாந்தனின் ‘சரியும் சர்வாதிகார சாம்ராஜ்ஜியங்கள்’ போன்ற காத்திரமான கட்டுரைகள் இம்மலரை சிறப்பிக்கின்றன. ‘சிந்தனை: அக்கினிக்குஞ்சு’ என்ற தலைப்பில் பேராசிரியர் மு.நித்தியானந்தன் சிந்தனைக்கு அஞ்சும் மனிதர்கள் குறித்தும் அச்சமும் பீதியும் கொண்டு மாற்றுக் கருத்துக்களை கண்காணிக்கும் மனிதர்கள் குறித்தும் எழுதி ராஜினி திரணகமவின் படுகொலையுடன் தொடர்பு படுத்தி ஒரு சிறப்பான கட்டுரையினை எழுதுகிறார். ‘புலம் பெயர்ந்தது தமிழர்கள் மட்டுமல்ல, வன்முறைகளும்தான்…’ என்ற கட்டுரையில் அழகு குணசீலன் இதுவரை காலமும் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்ற அராஜகங்கள், வன்முறைகள், படுகொலைகள், மாற்றுச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மீதான தடைகள் பற்றியும் தேடகம் எரிப்பும் குறித்தும் ஒரு அட்டவணையுடன் கூடிய விரிவான கட்டுரை ஒன்றினை எழுதுகிறார். அசோக் யோகன் கண்னமுத்து ‘துடைப்பானின் குறிப்புக்கள்’ என்ற தனது பதிவில் தேசியவாத உணர்வுகள் எப்படி தேசியவெறியாக உருமாறி, அது எவ்வகையில் மற்றவர்களின் மீது மேலாண்மை செலுத்துகின்றது என்பதினை விளக்கி, எமது தேசிய இனப்பிரச்சினைகளின் தீர்வாக மார்க்சிய வழிப்பட்ட அணுகுமுறையினை ஆராய்கின்றார். ‘காலுடைந்த சிவில் சமூகமும் தமிழ் புத்திஜீவிகளும்’ என்ற கட்டுரையில் இன்றய தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளின் போலித்தனங்கள் குறித்து ஸ்பார்ட்டகஸ்தாசன் விரிவான கட்டுரை ஒன்றினை சேரன், சி.புஷ்பராஜா, சமுத்திரன், தமிழரசன், செ.கணேசலிங்கன், சுவிஸ் ரஞ்சி, ப.வி.சிறிரங்கன், ஜோர்ஜ் குருசேவ், முதலானோரின் அரசியல் கட்டுரைகளுடன் அருந்ததி, சேரன், இளைய அப்துல்லாஹ், நா.விச்வநாதன், தமயந்தி திருமாவளவன், சி.சிவசேகரம், சோலைக்கிளி, உமா, இளைய அப்துல்லாஹ், றஞ்சனி, அ.ஜ.கான், முத்துலிங்கம், செல்வம் அருளாந்தம், இந்திரன் போன்றவர்களது கவிதைகளும் தமயந்தி, உமா, தயாநிதி, ரவீந்திரன், நிருபா, சந்துஷ், நா.கண்ணன் ஆகியோர்களின் சிறுகதைகளும் இம்மலரில் இடம் பிடித்துள்ளன.

இன்று தீவிரமான புலி எதிர்ப்பாளர்களாக இருந்து புலிகளிற்கு எதிராக தமது உரத்த குரல்களை படைப்புக்களாக பதிவு செய்து வருகின்ற பலரது படைப்புக்கள் எதுவும் இதில் இடம் பெறாதது, இவர்கள் புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அழிவிற்கு பின்பாகவே தீவிரமான புலி எதிப்பாளர்களாக மாறி புலிகளிற்கு எதிராக கம்பு சுத்தப் பழகி இருக்கின்றார்கள் என்ற உண்மையினையும் எமக்கு எடுத்துச் சொல்கின்றது. முக்கியமாக இன்று சிங்கள இனவாத அரசின் ஒத்தோடியாக மாறி, இலங்கை அரசின் அனைத்து அராஜகங்களுக்கும் செயல்களுக்கும் ஒத்து ஊதுகின்ற பாண்டி பஜார் போராளி அன்று சபாலிங்கம் இலண்டன் வந்து அவரைச் சந்திக்க விரும்பியபோது அவரைச் சந்திக்க மறுத்ததும் இதனை சபாலிங்கம் பாரிசில் தனது தோழர்களிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டதும் எமது புகலிட வரலாற்றில் நாம் மறைக்க முடியாத உண்மைகள்.

இம்மலரானது உண்மையில் ஒரு இரண்டு தசாப்தகால ஈழ-புகலிட சமூக, பண்பாட்டு அரசியல் களங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை வெளிப்படையாகப் பேசி நிற்கின்றது என்றே நாம் கருதுகின்றோம். சேரன் ‘காற்றை எதிர்த்து ஒரு காலடி’ என்ற ஒரு விரிவான கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் அவர் இங்கு புகலிடத்தில் வெளியாகி இருந்த சிறுசஞ்சிகைகள் தவிர்ந்த அன்றைய அனைத்துப் பத்திரிகைகளும் புலிகளின் எதேச்சதிகாரங்கள், அராஜகங்கள் போன்றவற்றை எப்படி ஆதரித்து நின்றன என்பதினை தெளிவாக விளக்குகிறார்.

இதே வேளை இங்கு வெளியாகியிருந்த பெரும்பாலான சஞ்சிகைகள் அனைத்துமே புலி எதிர்ப்பாளர்களினாலேயே வெளி வந்திருந்தன என்பதுவும் நாம் மறுக்க முடியாத உண்மை. புலிகள் தமது இராணுவ வெற்றிகள் மூலமும் அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் மூலமும் கட்டிக் காத்து வந்த பிம்பங்களை கட்டவிழ்ப்பதில் இவர்கள் மிக வெற்றிகரமாகச் செயற்பட்டார்கள் என்பதும் அதனை இவர்கள் இறுதிவரை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அத்துடன் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளிற்கு எதிராக குரல் கொடுத்த இவர்களது பல்வகை அமைப்புக்களிலும் கூட ஜனநாயக விரோதப் பண்புகளே கோலோச்சி இருந்தது என்பதுவும் வரலாறு இன்று எமக்குக் காட்டி நிற்கும் உண்மைகள். இவர்கள் புலிகளின் பிம்பங்களை சிதைப்பதற்காக அவர்களிக்கு எதிராக பல்வேறு பிம்பங்களை சிருஷ்டித்தார்கள். ஆனால் அந்த பிம்பங்களின் பின்னால் உள்ள அதிர்ச்சிகரமான முகத்திலறையும் உண்மைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளி வந்து இன்று அந்த பிம்பங்களும் ஒவ்வொன்றாகச் சிதைவடையும் போது எமது அறிவு ஜீவிகளின் ஒரு 3௦ வருட கால ஏமாற்று வேலைகளும் பித்தலாட்டங்களும் எம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

தோழர் சபாலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்படுள்ள இந்த அஞ்சலி மலரில் சபாலிங்கம் குறித்ததான எந்த விபரங்களோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறுகளோ இதில் இணைக்கப்படாதது கொஞ்சம் ஏமாற்றத்தினை அளிப்பதினை இங்கு அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இம்மலர் வெளிவந்து இன்று 20 வருடங்களாகின்றன. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஏமாற்றமும் சோகமும்தான் எஞ்சுகின்றது. இந்த தொகுப்பில் தமது படைப்புகளை வெளிக்கொணர்ந்த தி.உமா காந்தன், திருமாவளவன், சி.புஷ்பராஜா, செ.கணேசலிங்கன் போன்றோர் இன்று உயிருடன் இல்லை. தோழர் அ.ஜ.கான் மிக அண்மையில்தான் தமிழகத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடைந்து, எம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி இருந்தார். இதில் எம்மை அதிக துயரத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தும் விடயம், அன்று இந்த இதழில் தமது படைப்புக்கள் மூலம் அதிகாரத்திற்கு எதிராகவும், படுகொலைகள், வன்முறைகள் என்பவற்றிட்கெதிராகவும் தமது உரத்த குரல்களை பதிவு செய்த பலரும், இன்று இலங்கை பேரினவாத சிங்கள அரசின் ஆதரவாளர்களாக மாறி இலங்கை அரசின் அராஜகங்களையும் படுகொலைகளை நியாயப்படுத்தும் மனிதர்களாக மாறியுள்ளமைதான். இவர்கள் இன்றும் சிங்கள பேரினவாத அரசு ஈழப்போரின் இறுதியில் நிகழ்த்திய இனப்படுகொலையை அது இனப்படுகொலை இல்லை என்று மறுதலிப்பவர்களாகவும், அந்த அரசின் அனைத்து வகை செயற்பாடுகளிற்கும் ஆதரவளிப்பவர்களாகவும் மாறியுள்ளமை உண்மையில் எம்மை திகைப்பில் ஆழ்த்தும் விடயங்களாகும்.

இதற்குமப்பால் இவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களின் மாற்றுக் கருத்துக்களுக்கு சிறிதேனும் மதிப்பளிக்காதவர்களாக, ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் குறித்து எந்தவித அக்கறையுமற்றவர்களாக, தம் மீதான சிறு அளவு விமர்சனங்களை கூட ஏற்றுக் கொள்ளாதவர்களாக, மற்றவர்களின் மீது வசை பாடுபவர்களாக, அந்த வசைகளை பாடுவதற்காக எந்த எல்லைகளையும் மீறுபவர்களாக தொடர்ந்தும் இருந்து வருவது எமக்கு தொடர்ந்தும் வேதனையளிக்கும் விடயங்களாகும். இவர்களது இன்றைய இத்தகைய செயல்கள் இவர்களது அன்றைய செயற்பாடுகளை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கின்றது. இவையாவும் இன்று எம்மை இவர்களது அன்றைய எழுத்தக்களை மீண்டும் ஒரு மறுவாசிப்பிற்கு உட்படுத்தப் பட வேண்டிய அவசியத்தினை எம்மிடம் வலியுறுதி நிற்கின்றது. இதற்குமப்பால் இவர்களில் சிலர் இன்று புலி ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக மாறியிருப்பதுவும் கூட வரலாற்றின் ஒரு முரண்நகையே.

முடிவாக, ‘தோற்றுத்தான் போவோமா…’ என்று அறைகூவல் இட்டு பல தசாப்த காலங்களாக அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த இவர்கள், இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாகவே தம்மளவில் தாமே தோற்றுப் போயிருந்தது எமது வரலாற்றின் ஒரு துயர சம்பவமே.

தோல்விகளின் வரலாறுகளையே தொடர்ந்தும் எழுதுவதுதான் எமது தலையெழுத்தா என்ன ???

கட்டாய மரண தண்டனையை இரத்து செய்கிறது மலேசிய அரசாங்கம் !

கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது.

2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஒரு சீர்திருத்தக் கூட்டணி மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது, ஆனால் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்பால் திட்டம் ஸ்தம்பித்தது.

அப்போதிருந்து, மரண தண்டனை கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை குறைக்க வேண்டும் என்ற நீர்த்துப்போன திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

மரண தண்டனைக்கு பதிலாக என்ன தண்டனைகளை வழங்கலாம் என்பது குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும் என கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அனைத்துத் தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதையும் உத்தரவாதப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முன்னுரிமையைக் காட்டுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனை கட்டாயமாக இருக்கும் குற்றங்களுக்கு, நீதிபதியின் விருப்பப்படி மரண தண்டனை வழங்கக்கூடிய பல குற்றங்களும் உள்ளன.

மாற்றங்களைச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும், மேலும் வான் ஜுனைடி ஒரு காலக்கெடுவை வழங்காமல் சிறிது நேரம் எடுக்கும் என கூறினார். இந்த செயல்முறை மக்கள் கற்பனை செய்வது போல் எளிதானது அல்ல என்று அவர் மேலும் கூறினார்.

அறிவிப்பை வரவேற்கும் அதே வேளையில், பிரச்சாரகர்களும் எச்சரிக்கையை வெளிப்படுத்தினர். ‘கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதாக மலேசியாவின் பொது அறிவிப்பு ஒரு முக்கியமான முன்னோக்கிய படியாகும்’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் பில் ராபர்ட்சன் கூறினார்.

ஆனால் அனைவரும் உற்சாகப்படுத்தத் தொடங்கும் முன், இந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்த மலேசியா உண்மையான சட்டத் திருத்தங்களை நிறைவேற்றுவதை நாம் பார்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து வந்த மலேசிய அரசாங்கங்கள் மனித உரிமைகள் குறித்து அதிகம் வாக்குறுதி அளித்தாலும் இறுதியில் மிகக் குறைவாகவே வழங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவில் மேலும் 22 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் ஒப்புதல் இருந்தது. இந்நிலையில், கட்டாய மரண தண்டனை அங்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனையை எதிர்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இறந்த மகனின் உடலை எடுக்க லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை – பிச்சை எடுத்த தந்தை!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை பணம் கேட்டதால் பிச்சை எடுக்கும் தந்தையின் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமஸ்டிபூரைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடலை வாங்க தனது மனைவியுடன் அவர் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் வேதனையடைந்த தம்பதி இலஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்துள்ளனர். இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.