2020

2020

விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்பட சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தனவுக்கு நாமல் அழைப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்படுமாறு விளையாட்டுதுறை  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் விளையாட்டுத்துறையை சிறந்த முறையில் செயற்படுத்துவது தொடர்பாக, விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக  குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய விளையாட்டுச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் பெயரிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்  இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர், 1973 ஆம் ஆண்டின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

அவர்கள் விளையாட்டுகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கும்” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

சங்கக்கார மற்றும் ஜெயவர்தன தவிர இலங்கையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக  பங்காற்றிவரும் தொழில் வல்லுநர்களும் இந்த பட்டியலில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸை அடுத்து தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் !

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (19.08.2020) அதிகாலை 03.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக கரையோர பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பிலிப்பைன்சிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.

டோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் !

கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்தது, டோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு முழுமை பெறாது என்று டோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே தலைவர், கேப்டன் கூல் , ஜென்டில்மேன் விளையாட்டுக்கு உரித்தாக விளங்கியவர் என்ற பெருமைக்குரியவர் தோனி. கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, அவரின் தனிப்பட்ட செயல்பாடுகளிலும் சரி டோனி தேர்ந்தெடுக்கும் வழி, முடிவுகள் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அதுதான் அவருக்கு பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய டோனி, கடந்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் தனது ரன் அவுட்டில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பின் தோனியால் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய மனது வரவில்லை. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடமல் இருந்த தோனியின் நிலை குறித்து பல்வேறு கேள்விகள், ஓய்வு குறித்த ஊகங்கள் எழுந்தன.

ஆனால், அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி நேற்று மிகவும் எளிமையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

நீல நிற ஜெர்ஸியில் மீண்டும் வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு தோனியின் அறிவிப்பு பேரிடியாக இருந்தது. தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் உணர்வுப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்(ட்விட்டர்)

“இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களின் பங்களிப்பு அளப்பரியது தோனி. 2011 உலகக்கோப்பையை ஒன்றாகச் சேர்ந்து வென்ற தருணம் வாழ்வில் மறக்கமுடியாதது. 2-வது இன்னிங்ஸ் உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்”

சர்வதேச கிரிக்கெட்டில் சாம்பியனாக விளங்கும் விராட் கோலியை அரவணைத்து வளர்த்துவிட்டது தோனி என்றால் மறுக்கலாகாது. தோனியிடமிருந்து பலவிஷங்களை கோலி கற்றுக்கொண்டார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து “ ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பயணத்துக்கும் ஒருநாள்முடிவு உண்டு. ஆனால், நீங்கள் அறிந்த ஒருவர் மிகவும் நெருக்கமாக அந்த முடிவை அறிவிக்கும்போது, அதிகமான உணர்ச்சிகளை உணர்வீர்கள்.

நீங்கள் இந்த தேசத்துக்கு செய்தவை எப்போதும் ரசிகர்களின் இயத்தில் நீங்காமல் இருக்கும். ஆனால், உங்களிடம் இருந்து நான் பெற்ற மரியாதையும், அன்பும் எப்போதும் என மனதில் நிற்கும். உங்களின் சாதனைகளை உலகம் பார்த்துள்ளது, நான் தள்ளிநின்று பார்த்துள்ளேன். அனைத்தையும் விட்டுச் செல்வதற்கு நன்றி, என் தொப்பியை எடுத்து நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி (ட்விட்டர்)

“ கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. நாட்டுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் கிடைத்த என்ன மாதிரியான அற்புதமான வீரர் தோனி. அவரின் தலைமைப்பண்புகள் வேறுவிதமானவே. அதை எதோடும் ஒப்பிடுவது கடினமான ஒன்று.

அவரின் இளமைக் காலத்தில் ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் திறமை உலகத்தை உற்றுப்பார்க்க வைத்தது, அவரின் திறமை, புத்திசாலித்தனத்தை கவனிக்க வைத்தது. ஒவ்வொரு நல்ல விஷயங்களும் ஒருநேரம் முடிவுக்கு வரும், அதுபோலத்தான் தோனியின் ஓய்வும். களத்தில் எந்தவிதமான வருத்தமில்லாமல் தோனி சகாப்தம் முடிந்துள்ளது”

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி(ட்விட்டர்)

தோனியின் கிரிக்கெட் திறமை என்றென்றும் பேசப்படும். அவரின் மிகப்பெரிய இடத்தை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டதில் பெருமையையும், சிறப்பையும் பெருகிறேன். உங்களின் சிறந்த தொழில்முறை கிரிக்கெட்டைக் கண்டுவியந்திருக்கிறேன். சிறந்த கிரிக்கெட் வீரருக்கு எனது சல்யூட். வாழ்க்கையை அனுபவியுங்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்”

வீரேந்திர சேவாக்(ட்விட்டர்)

“ மகி போல ஒருவீரர் இருக்கவே வாய்ப்பில்லை. வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால், இவரைப் போல் அமைதியாக இருக்கமாட்டார்கள். பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதோடும், குடும்பத்தோடும் இணைந்திருந்து ஓர் உறுப்பினராகவே இருந்தார்.

இர்பான் பதான் (ட்விட்டர்)

ஒவ்வொரு லெஜென்டும் ஒருநாள் ஓய்வு பெறுவார்கள். இன்று மகியின் நாள். மகியுடன் இணைந்து விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன், நண்பராக எனக்கு பல்வேறு வழிகாட்டல்களை களத்தில் கூறியுள்ளார். கிரிக்கெட் வாழ்வை மிகச்சிறப்பாக தோனி முடித்துள்ளார்.

வி.வி.எஸ். லட்சுமண்(ட்விட்டர்)

சிறிய நகரிலிருந்து வந்து, மேட்ச் வின்னராக உயர்ந்தார் தோனி. உலகக் கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கத்தக்க வீரராக, மறக்கமுடியாத வீரராக தோனி இருக்கிறார். சிறந்த நினைவுகளை அளித்தமைக்கு தோனிக்கு நன்றி. உங்களுடன் விளையாடியதை பெருமையாகக் கொள்கிறேன் மகி, உங்களுடன் விளையாடியதையும், நாம் பகிர்ந்து கொண்ட விஷயங்களும் எப்போதும் பசுமையாக இருக்கும்

மைக்கேல் வான்(ட்விட்டர்)

2011 உலகக்கோப்பை சச்சினுக்கு பிரியாவிடையாக இருந்தது, ஆனால், தோனிக்கு மாஸ்டர்பீஸ். என்ன ஒரு அற்புதமான சர்வதேச கிரிக்கெட் வீரர் வாழ்க்கை. ஒருநாள், டி20 போட்டியில் மிகச்சிறந்த கேப்டன்,பினிஷர் தோனி என்று எப்போதும் கூறலாம்.

பாக். முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா(ட்விட்டர்)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு. சிறந்த தலைவர், மிகப்பெரிய சாதனைகள், அனைவரையும் மகிழ்விக்கும் ஒப்பற்ற வீரர், டிஆர்எஸை கணிக்கும் உலகில் சிறந்த கேப்டன், ஆனால், இவை அனைத்தும் தோனி குறித்தும், இந்திய கிரிக்கெட் குறித்தும் மறக்கமுடியாத நினைவுகள்

பாக். முன்னாள்வீரர் ஷோயப் அக்தர்(ட்விட்டர்)

தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது

ரவிச்சந்திர அஸ்வின்(ட்விட்டர்)

லெஜென்ட் எப்போதும் தங்களுக்கே உரிய வழியில் ஓய்வு பெறுகிறார்கள். தோனி நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். சேம்பியன்ஸ் கோப்பை, 2011 உலகக்கோப்பை, சிஎஸ்கேவுக்காக ஐபிஎல் கோப்பை என அனைத்தும் என் நினைவில் நிற்கும். உங்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்(ட்விட்டர்)

கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன்களில் தோனி ஒருவர். உங்களுடன் நான் சிறப்பான தருணங்களை செலவழித்துள்ளேன். உங்களின் அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

டோனியுடன் இணைந்து விடைபெறுகிறார் சுரேஷ் ரெய்னா !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங்டோனி  ஓய்வு அறிவித்து ஒரு மணி நேரத்துக்குள் இந்தியஅணியின் இடதுகைதுடுப்பாட்ட வீரர்  சுரேஷ் ரெய்னாவும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் 7.29 மணியிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரெனப் பகிர்ந்தார் மகேந்திர சிங் தோனி. அவர் அறிவிப்பு தந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள், சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேந்திரசிங்டோனி உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரெய்னா, “தோனி, உங்களுடன் இணைந்து விளையாடியது என்றுமே இனிமையாக இருந்ததே தவிர வேறெப்படியும் இல்லை. என் இதயம் முழுக்க பெருமிதத்துடன், நானும் உங்களோடு இந்தப் பயணத்தில் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தோனி, ரெய்னா இருவருமே ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள். இருவருமே நெருங்கிய நண்பர்களும் கூட. தோனியின் ஓய்வுக்குப் பின் உடனடியாக ரெய்னாவும் ஓய்வு அறிவித்திருப்பது இவர்களின் நட்புக்கு எடுத்துக்காட்டு என்றே நெட்டிசன்கள் பதிவிட்டு, நெகிழ்ந்து வருகின்றனர். ரெய்னாவும் தோனியோடு, சென்னையில், ஐ.பி.எல் பயிற்சி முகாமில் உள்ளார். இருவரும் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளனர்.

ரெய்னா 226 ஒரு நாள் போட்டிகளிலும், 18 டெஸ்ட் போட்டிகளிலும், 78 டி20 போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மகேந்திர சிங் டோனி !

தான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர் மகேந்திர சிங் டோனி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் டோனி விளையாடவுள்ளார். இதற்கான பயிற்சி முகாமில் பங்குபெற தற்போது சென்னை வந்துள்ளார் தோனி.

இந்நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேந்திர சிங் டோனி காணொளி ஒன்றைப் நேற்றையதினம் பகிர்ந்துள்ளார். அதோடு, “இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளியில், அவர் இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் டோனி அறிவித்திருந்தார். விராட் கோலி அணிக்கு தலைமையேற்ற சமயத்திலிருந்தே தோனியின் ஓய்வு குறித்துப் பல முறை ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது மகேந்திர சிங் டோனி அறிவித்துள்ள ஓய்வும், வெறும் ஒரு நாள் போட்டிகளிலிருந்தா இல்லை டி.20 போட்டிகளுக்கும் சேர்த்தா என்பது குறித்துத் தெளிவில்லை. விரைவில் இது குறித்த விரிவான அறிக்கையை மகேந்திர சிங் டோனி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. பலர் சமூக ஊடகங்களில் இது குறித்துப் பகிர்ந்து, விவாதித்து வருகின்றனர்.

ஊடக யூகங்கள் இல்லை, வழக்கமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை, பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை, பிரம்மாண்டமாக, விடைபெறுவதற்கென எந்த ஆட்டமும் இல்லை, இறுதி உரை எதுவுமில்லை, (அறிவிப்பு வரும் வரை) யாருக்கும் இது பற்றிய ஒரு யோசனையும் இல்லை, அழகான இந்திப் பாடலுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு காணொலியுடன் அறிவித்துள்ளதைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படியொரு ஓய்வை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் அறிவித்ததில்லை எனவும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

வெளியானது  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விபரம் ! –

தேர்தல் முடிவடைந்தது தொடக்கம்  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் யார் ..? என்பது தொடர்பான இழுபறி தொடர்ந்து வந்த நிலையில்   ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தயாரிக்கப்பட்டுள்ள பெயர் பட்டியல் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, ஹரீன் பெர்ணான்டோ, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுப்பதவிகளில் ராஜபக்க்ஷக்களே ஆதிக்கம் !

நேற்றை தினம் இலங்கையினுடைய புதிய அமைச்சரவை கண்டி மகுல்மடுவவில் பதவியேற்றுக்கொண்டது.  இம்முறை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளமையை கண்டித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ராஜபக்ஷ குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப்பதவிகளின் பிபரங்கள் வருமாறு ..,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம், மத விவகாரம், கலாசாரம், நகர அபிவிருத்தி அமைச்சர்

சமல் ராஜபக்ஷ – நீர்பாசன அமைச்சர் மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சஷிந்திர ராஜபக்ஷ – நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரியின் புதல்வர் நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர்களை தவிர ஜனாதிபதியின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நபராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை – இலங்கை தமிழர் ஒருவர் கைது !

பிரித்தானியாவில் பெண் ஒருவரை மோசமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு 8 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் Portslade, Brighton பகுதியில் வசிக்கும் 40 வயதான  ஒருக்கே 8 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உணவகம் ஒன்றின் மேலாளரான பணியாற்றிய இலங்கை தமிழர் தனது பணியிடத்தில் வைத்து இந்த செயலை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கின் போது நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபர் பணியாற்றும் உணவகத்திற்கு வந்த இளம் பெண்ணை விருந்து ஒன்றிற்கு அவர் அழைத்துள்ளார். எனினும் அங்கு விருந்தில் குறித்த பெண் மாத்திரமே இருந்துள்ளார். இதன் போது பெண்ணிற்கு மதுபானம் வழங்கிய இலங்கையர் இரண்டாவது முறையும் குடிக்குமாறு பலவந்தப்படுத்தியுள்ளார்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பதாக கூறி அந்த பெண்ணை நம்ப வைப்பதற்கு இலங்யைர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த சீசீடீவி கமராக்களையும் அவர் செயலிக்க செய்து கதவுகளையும் மூடியுள்ளார்.

அத்துடன் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பெண் சுயநினைவை இழந்த நிலையில் கிழே விழுந்து கிடந்துள்ளார்.

சம்பவத்தின் போது அவ்விடத்திற்கு வந்த பெண்ணின் காதலன் அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பெண்ணிற்கும் இலங்கையருக்கும் மேற்கொண்ட DNA பரிசோதனையில் அவர் மோசமாக நடந்துக் கொண்டமை உறுதியாகியுள்ளது.

அதற்கமைய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது அந்த உணவகத்தில் 3 சட்டவிரோத குடியேறிகள் பணியாற்றுவது தெரியவந்துள்ளதுடன், இந்த இலங்கையரின் குடியுரிமை விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, கொடூர தாக்குதல் மேற்கொண்ட உட்பட பல்வேறு குற்றசாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய 8 ஆண்டுகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பிணை வழங்குவதற்கு முன்னர் அவரது தண்டனையின் மூன்றில் இரண்டு பங்கையாவது அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவர் ஆபத்தானவர் என கருதப்படுகின்றமையினால் தண்டனை காலங்களின் பின்னர் நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய நடவடிக்கை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அதிருப்தி !

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய தேசியப்பட்டியலை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் இந்த முடிவை எடுக்கும் போது கூட்டமைப்பினுடைய தலைவர் தங்களுடன் கலந்துரையாடவில்லை என நேற்றையதினம்  மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். தன்னிச்சையாக தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசன ஒதுக்கீடானது பங்காளிக் கட்சிகயான புளொட் மற்றும் டெலோ ஆகிய இரு கட்சிகளுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தாமல் தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு குறித்த தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு டெலோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஏனைய மாவட்டங்களில் பிரதி நிதித்துவம் இருக்கின்றமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏனையவர்களினால் மிகவும் மோசமான செயற்பாடுகளினால் பாதீக்கப்படுகின்றனர்.

அடக்கு முறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு ஒரு பிரதி நிதித்துவம் தேவை. அந்த பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் ஜனநாயக ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடையத்திலாவது கலந்தாலோசிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.

சம்பந்தன் தன்னிச்சையாக குறித்த தெரிவை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சின்ன விடையத்திலே இவ்வாறு நடந்து கொண்டால் இனி வரும் காலங்களில் சரியான ஒரு முடிவை மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்துக்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.

எங்களோடும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைவரும் ஆதரவை வழங்குவோம்.

ஏற்கனவே எமக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளது. எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்கின்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையிலே இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

மாவை சேனதிராஜாவிடம் கூட ஆலோசனைகள் செய்தார்களா? என்று தெரியவில்லை. குறித்த தேசிய பட்டியல் ஆசனமானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். தன்னிச்சையான முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவு இனி எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படக் கூடாது.

சம்மந்தன் ஒரு வயது முதிர்ந்தவர்.அனுபவம் உள்ளவர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக உள்ளவர். இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை சஞ்சலத்திற்கு உள்ளாக்கும்.

எனவே குறித்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அவர் அங்கு குறிப்பிட்டார்.

வட – கிழக்கில் கூட்டமைப்பின் சரிவும், 2020 தேர்தல் முடிவுகள் தந்த படிப்பினைகளும்! – அருண்மொழி

நடந்து முடிந்த இலங்கையினுடைய ஒன்பதாவது பாராளுமன்றத்தேர்தல் இலங்கையின் அரசியல் பொருட்டு எதிர்பார்க்காத பல திருப்பங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக இலங்கையை அடுத்த 05 ஆண்டுகள் ஆள்வதற்கான ஆணையை பொதுஜன பெரமுன  கட்சிக்கு வழங்கியுள்ள மக்களுடைய தீர்ப்பானது பழம்பெரும் கட்சிகளைஅரசியல் அரியாசனத்திலிருத்தே தூரத்தூக்கி வீசிவிட்ட சோகமும் இந்த தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் மத்திய ஆட்சி நிலை மாற்றங்கள் இவ்வாறு இருக்க  தமிழர் அரசியல் சார்ந்து இருக்கக்கூடிய அபத்தங்களையும் ஒரு விதமான அரசியல் வெற்றிடத்தையும் இந்தத்தேர்தல் தோலுரித்துக்காட்டியுள்ளதுடன் எதிர்கால நகர்வுகள் எத்தன்மையனவாக அமையும் வேண்டும் என்பதையும் சிந்திக்கச்செய்திருக்கின்றன இந்தத்தேர்தல் முடிவுகள். இந்த கட்டுரையின் நோக்கமும் 2020 தேர்தல் முடிவுகள் கற்றுந்தந்த பாடங்கள் என்ன என்பதை தமிழர் தாயகமான வட-கிழக்கை மையப்படுத்தி நோக்குவதாக அமைந்து கொள்கின்றது.
தமிழர்களின் உரிமைகளை வேண்டிய தமிழ்தேசிய கோரிக்கைகளுடனான ஆயுதப்போராட்டமானது மௌனித்துப்போய் கிட்டத்தட்ட  10 வருடங்கள் கடந்து போயுள்ள நிலையில் அரசியல் ரீதியான வழிமுறைகளே இறுதியானது என்ற முடிவுக்குள் வந்துள்ள தமிழினமானது 2009 இன் பின்னர் இரண்டு பாராளுமன்றத்தேர்தல்களை சந்தித்துள்ள போதிலும் கூட தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான எந்த தீர்வுககளும் இது வரையில் கிடைத்திருக்கவில்லை. அதன் தொடர்ச்சியான மூன்றாவதும் தீர்க்கமானதுமான தேர்தல் முடிவுகளில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கணிசமான மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது. அதாவது 2010 தொடங்கியது முதல் தேசியம்/ தமிழர் தாயகம் என்ற விடயத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வந்த தமிழ்மக்களுடைய முடிவுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இதுவரை காணப்பட்ட வாக்கு வங்கி சரி அரைவாசிக்கு குறைவடைந்துள்ளதுடன் வடக்கு – கிழக்கு இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சிதறல் அதிகரித்துள்ளதுடன் மக்களில் கணிசமான தொகையினர்  பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவற்றை  மையப்படுத்திய அரசாங்கத்துடன் சார்ந்த  அரசியல் கட்சிகளின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளமையும் துலாம்பரமாக வெளிப்படக் காணலாம். தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வடக்கு – கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பு மனோநிலை,  தமிழர் அரசியல் தொடர்பாக காணப்படும் வெறுமை , மக்களுடைய மனநிலை போன்ற விடயங்கள் நன்கு ஆராயப்பட வேண்டியனவாகும்.
2009 ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் மக்களுடைய அரசியல் சார் அபிலாசைகளை காவிச்சென்ற அல்லது செல்லக்கூடிய ஒரு அமைப்பாக மக்களின் ஒரே தெரிவாக காணப்பட்டது இலங்கை தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமேயாகும். இந்த நிலையில் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாராளுமன்ற தேர்தல்களாகட்டும், ஜனாதிபதி தேர்தலாகட்டும், மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களிலும் கூட தமிழ் மக்கள் 2009 முதல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முடிவுகளுக்கே பெரும்பாலும் கட்டுப்பட்டோராக காணப்பட்டனர். எனினும் 2020 தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய வாக்குவங்கியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆகப்பெரிய பின்னடைவுக்கான காரணங்களை முதலில் அறிந்து கொள்ளுதல் தலையாயது. கடந்து முடிந்த ஒரு தசாப்பத காலத்தில் தமிழ்  மக்கள் அதிகம் விரும்பிய நம்பியிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களினால் தமிழ்மக்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கு எது விதமான ஆரோக்கியமான முடிவுகளையும் எட்ட முடியவில்லை என்ற விரக்தியான மனநிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர் என்பதே ஆகப்பெரிய அபத்தமாகும். இந்த நிலையிலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு மீதான வெறுப்புணர்வும் தமிழர்களிடையே அதிகரிக்க ஆரம்பித்தது. குறிப்பாக நல்லாட்சி அரசினை பாதுகாக்க தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அதிக பிரயத்தனம் மேற்கொண்ட அளவிற்கு கூட தமிழர் பிரச்சினைகளில் கூட்டமைப்பு கவனம் செலுத்தவில்லை. இராணுவமயப்படுத்தலிலுள்ள தமிழர் காணிகளை விடுவிப்பதிலோ அல்லது சிங்கள மயப்படுத்தப்பட்ட / சிங்கள மயப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் பகுதிகளை மீட்பதிலோ பெரியளவிலான அக்கறை காட்டமை, தமிழ்தேசிய நீக்க அரசியலை கையிலெடுத்தமை, சுமந்திரனை மையப்படுத்திய அரசியல் போக்கை கடைப்பிடித்தமை , அபிவிருத்தி சார்ந்து முன்னேற்றகரமான திட்டங்களை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்காமை,  வேலையில்லா பிரச்சினைகளுக்கான தீர்வுத்திட்டங்களை செயற்படுத்தாமை, வலிந்து காணாமலாக்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அலட்டிக்கொள்ளாமை என பல காரணங்களிடைப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதான வெறுப்புணர்வு இன்னும் தீவிரமாகியதே தவிர குறைந்தபாடில்லை.
இந்த அடிப்படையிலாக கூட்டமைப்பின் மீதான ஒரு வெறுப்பான மனோநிலை மக்களை அதற்கு மாற்றீடான புதிய கட்சிகளின் பக்கம் சாரவும்,  அபிவிருத்தியை நோக்கி மக்கள் சிந்தனை நகரவும் காரணமானது. இந்த ஒரு புள்ளியிலிருந்தே 2020 பாராளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஆரம்பித்திருந்தன.  தமிழ்தேசிய கூட்டமைபின் மீது தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு மனோநிலை தமிழ்தேசியம் பேசிய அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி மீதும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீதும் ஒரு தொகுதி மக்களுடைய பார்வை திரும்ப காரணமானது. அது மட்டுமன்றி அபிவிருத்தி நோக்கிய மக்களுடைய பார்வை அரசுடன் இணைந்து பயணிக்க கூடிய தலைவர்கள் மூலமாகவே அது கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதுடன் வடக்கு – கிழக்கில் அரசுடன் இணையவுள்ள கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களுடைய வாக்குகள் ஒருங்கு சேர காரணமானது. இந்த வகை கட்சிகளான ஈ.பி.டி.பி,  அங்கஜனை முதன்மை வேட்பாளாராக கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்ற கட்சிகள் பெற்ற  முழுமையான வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு கிட்டியதாக உள்ளது யாழ் தேர்தல் தொகுதியில் மட்டும். அதுபோல வடக்கு கிழக்கில் பொதுஜன  பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி,  தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கடசி, ஈ.பி.டீ.பி,ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்பனவற்றுக்கு  கிடைத்துள்ள ஆசனங்கள் என எல்லாமுமாக சேர்த்து கிட்டத்தட்ட 17 ஆசனங்களாகும். இது  வடகிழக்கில் கூட்டமைப்பின் ஆசனங்களை விட   அதிகமாகும். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த சிதறுண்ட ஆசனங்கள் யாவுமே முழுமையாக தமிழ்மக்கள் தங்களுடைய தலைமைக்கட்சியாக எண்ணிய  தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய கடந்தகால  தூரநோக்கற்ற அரசியல் நகர்வுகளாலும் தமிழர் தலைமைகளிடையே காணப்பட்ட  ஒற்றுமையீனத்தாலும் அரசியல்தீர்வு , பொருளாதார அபிவிருத்தி என்ற இரண்டு தளங்களிலும் 2009ன் பின்னரான அடைவுமட்டங்களில் மாற்றங்களின்மையாலும்    மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையினுடைய வெளிப்பாடே  என்பதை தமிழ்தேசியம் பேசும் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த கால நல்லாட்சி அரசில் பெற முடியாத எதனையும் இன்றைய பொதுஜன பெரமுனபாராளுமன்றில் அல்லது ஆட்சியில் நினைத்தும் பார்க்க முடியாது. ஏனெனில் பொதுஜன பெரமுன எனும் ராஜபக்சக்களின் கட்டமைப்பில் தீவிர சிங்கள மக்களின் வாக்குகளே அதிகம் குவிந்துள்ளமையால் இந்த அரசில் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை நினைத்துப்பார்ப்பதென்பது குதிரைக்கொம்பு போன்றதே. இது ஒரு புறமிருக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து இந்திய விஜயத்தினை மேற்கொண்டிருந்த கோட்டபாய ராஜபக்ஷ அவர்களிடம் இந்தியப்பிரதமர் மோடி தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை பற்றி பேசிய போது தமிழ்மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் எவையுமேயில்லை. தீர்க்கப்பட வேண்டிய பொருளாதார அபிவிருத்தி சார் நடவடிக்கைகளே உள்ளன எனக்குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.  இவ்வாறான ஒரு அரசிடம் இருந்து தமிழரின் அரசியல் சார் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக முழுமுயற்சியுடன் செயற்பட வேண்டிய தேவை தமிழ்தேசியம் பேசிய பாராளுமன்ற தலைவர்களிடம் காணப்படுவதுடன் சர்வதேசத்திற்கும் எங்களுடைய பிரச்சினைகளை இடித்துரைக்க வேண்டிய தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இவர்கள் என்பதையும் புரிந்து செயலாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மறுநாள் காலை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் அவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,  சி.வி விக்னேஸ்வரன் போன்றோரை இணைந்து செயற்பட அழைப்பு விடுத்திருந்தார். இது எந்தளவு தூரம் அகவயமானது என்பது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது.
வடக்கை பொறுத்த வரை அங்கஜனுக்கு கிடைத்த ஒரு ஆசனம் ஈ.பி.டி.பிக்கு கிடைத்த இரு ஆசனங்கள், பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்திக்கு வன்னியில் கிடைத்த தலா ஒரு ஆசனங்கள் அபிவிருத்திக்காக கிடத்த ஆசனம் என ஒரு விதமாக கூறப்பட்டாலும் கூட யாழில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோருக்கு கிடைத்த  ஆசனங்கள் தமிழ்தேசியகொள்கைக்கு கிடைத்த ஆசனங்களேயாகும் . இதே நேரத்தில் தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் பொருளாதார மேம்பாடு பற்றி  பேசாமையை காரணம் காட்டியே அங்கஜன் அவர்களுடைய வாக்கு வங்கி நிரப்பப்பட்டது. அது போல வன்னி தேர்தல் தொகுதியை பொருத்த மட்டில் தமிழ்தேசிய தலைவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமையில்லாத நிலையே வன்னி வாக்குச்சிதைவுக்கு காரணமானது.  அது மட்டுமன்றி தமிழ் மக்கள்  தேசிய கூட்டணிக்கு வன்னி தேர்தல் தொகுதியில் பெரிய பரீட்சையமின்மையால் சிவசக்தி ஆனந்தனுக்கு சென்ற தேர்தலில் கிடைத்த ஆசனம் இந்த தடவை இல்லாது போனது. இந்த அடிப்படையிலே ஈ.பி.டி.பி கட்சிக்கான ஒரு ஆசனம் வன்னியில் பங்கிடப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்தேசியம் பேசும் பாராளுமன்ற  தலைமைகளிடம் பெரிய பொறுப்பு ஒன்று காணப்படுவதை விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வுகளை மையப்படுத்தி நகர்வது தமிழர்கள் பொருட்டு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது பொருளாதார அபிவிருத்தி நோக்கிய பயணங்கள். அதற்காகவும் சேர்த்து இனிமேல் செயற்ப்பட வேண்டும்.
அடுத்ததாக கிழக்கின் நிலை பற்றியும் அதீத கவனம் செலுத்த வேண்டிள்ளது.கடந்த கால நல்லாட்சி அரசிலும் சரி அதற்கு முற்பட்ட காலம் 2010இல் இருந்தே நாம் படிப்படியாக இழக்க தொடங்கி விட்ட ஒரு பகுதியாக கிழக்கு உள்ளது. குறிப்பாக இந்த தேர்தல் முடிவுகளின் படி மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களும் திருகோணமலையில் ஒரு ஆசனமுமே கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கடந்த காலத்தில் அம்பாறையில் காணப்பட்ட நிலையை விடஇந்த தடவை மிக மோசமானதாகவே உள்ளது.  அம்பாறையில் பொதுஜன பெரமுன கட்சி பெற்ற மொத்தமான வாக்குககள் 1,29,012 ஆக காணப்பட கூட்டமைப்பு வெறுமனே 25,255 வாக்குகளையே பெற்றது. மேலும் அம்பாறையில் இருந்த ஒரு நேரடி தமிழ்கட்சியின் கடந்த கால ஆசனமும் பறிபோயுள்ளது என்பதே கசப்பான உண்மை. இது ஒருபுறமிருக்க திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே கூட்டமைப்பால் தக்கவைத்துக்கொள்ள முடிந்தமை கிழக்கில் தமிழர்தாயகம் என்ற நிலைக்கு விழுந்த மிகப்பெரிய சறுக்கலேயாகும். இதுதவிர மட்டக்களப்பில் நான்கு ஆசனங்கள் தமிழருடைய ஆசனங்கள் எனக்குறிப்பிட்டு மார்தட்டிக்கொள்ளும் போதிலும் கூட சாணக்யாராஹுல் கடந்த காலங்களில் அரசுதரப்பு கட்சிகளுடன் பயணித்து இந்த தேர்தலில் கூட்டமைப்பில் நின்று வெற்றிபெற்றுள்ளார். பிள்ளையான் மற்றும்  வியாழேந்திரன் ஆகியோருடைய ஆசனங்கள்  அரசினுடைய கொள்கைகளுக்கு ஆதரவான ஒரு போக்கிலேயே அமைந்து கொள்ளும் என்பதில் எந்த ஒரு கேள்விக்குமிடமில்லை. இந்த நிலையிலேயே நாம் கிழக்கினுடைய நிலை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
ஏற்கனவே கன்னியா உள்ளிட்ட பிரதேசங்களில் பௌத்தமயப்படுத்தல் வேகமாக உருவெடுத்து கடந்த காலங்களில் பல இடர்பாடுகளை தோற்றுவித்துள்ளது. அதே நேரம் வேகமாக கிழக்கு தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது. அண்மையில் கூட தொல்லியல் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு தமிழர் வரலாற்று பகுதிகள் யாவுமே சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைககள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டவண்ணமுள்ளன. இந்த பின்னணியில் கிழக்கில் தமிழ்பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மட்டுமே கையில் கிடைத்திருந்த ஒரே வாய்ப்பாக இருந்தது. எனினும் அதனை முழுமையாக  தவறவிட்டிருக்கிறோம் என்பதே நிஜமும் கூட.
இந்த நிலையிலேயே தமிழர் தாயகம் என்ற நிலையில் நாம் கூறிக்கொண்டிருக்கும் வடக்கு – கிழக்கின் எதிர்கால நிலை பற்றி ஆழமாகவும் அகலமாகவும் சிந்திக்கவேண்டியவர்களாக நாம் உள்ளோம். உண்மையில் வடக்கில் குறிப்பாக யாழ் தேர்தல் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கான ஐந்து ஆசனங்கள்  என்ற நிலை மாற்றமடைந்து தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் மூன்றிற்கான ஆசனங்கள் ஐந்து என்ற நிலையே தோற்றம் பெற்றுள்ளது. இதே நேரத்தில் கூட்டமைப்பினுடைய நகர்வுகளில் இனிவரும் நாட்களில் பெரியளவிற்கான மாற்றங்கள் அல்லது சிறப்பான அரசியலை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. கட்டுரையாளர் இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது  பல்வேறுபட்ட அரசியல் அவதானிப்பாளர்களும் கூட்டமைப்பினுடைய  தேசியப்பட்டியலினை பயன்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் தமிழ்தேசிய இருப்புக்கான ஒருவரை தெரிவு செய்ய முனைய வேண்டும் என கேட்கப்பட்ட போதிலும் கூட அந்த  தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தொடர்பான ஒரு விதமான இழுபறி நிலையே தொடரந்து வருகின்றது. இந்த அடிப்படையில் ஒரு தூரநோக்கற்ற நகர்வுகளே இனியும் தொடருமாயின் தமிழ்தேசிய கூட்டமைப்பு எனும் அமைப்பு காலவோட்டத்தில் இல்லாமலேயே போய்விடும் என்பது கண்கூடு. அதுபோல அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய நகர்வுகள் தனித்து யாழ்ப்பாணத்திற்குள் மட்டுமே முடங்கி காணப்படுவதால் அது தன்னுடைய கட்சிக்கான மக்கள் அபிப்பிராயத்தை பெறவும் கிழக்கில் குறிப்பாக அம்பாறையில் இழந்துபோயுள்ள ஒரு ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ள அம்பாறையை சேர்ந்த ஒருவருக்கு அது வழங்கப்பட வேண்டும் என பல அரசியல் ஆர்வலர்களாலும்  வலியுறுத்தப்பட்ட போதிலும் கூட அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே தமிழ்தேசியம் தமிழர் தாயகம் போன்ற விடயங்களை வெளிப்படையாக பேசிக்கொண்டேயிருந்தாலும் கூட நம்மிடையே ஆளுக்கொரு கட்சி கொள்கைக்கொரு கூட்டம்   என்ற ரீதியிலான ஒரு நிலைப்பாடே இந்த பாராளுமன்ற தேர்தலின் முழுமையான பின்னடைவுக்கான காரணமாகும். இந்த தேர்தலில் தமிழர் தலைமைகள் நிலையை உணர்ந்து ஒரு மித்த குரலாக இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் நிலை மாறியதே வடக்கு கிழக்கில் புதிய சக்தியான பெரமுனவும்,  ஐக்கியமக்கள் சக்தியும் கனிசமான ஆசனங்களை பெற காரணமாயமைந்ததது. இது தவிர பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை சிங்கள மக்களினுடைய முழுமையான ஆதரவுகளுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அமைக்கும் என்பது ஏற்கனவே எதிர்வுகூறப்பட்ட நிலையில் தமிழ்தேசிய அரசியல் பரப்பின் முக்கியமான ஆளுமைகள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதுவே பெரமுன போன்ற பெருங்கட்சிகளை எதிர்த்து நிற்க போதுமான வீரியத்தை எமக்கு வழங்கியிருக்கும். ஆனால் தமிழ்த்தலைவர்கள் மூன்றுகட்சிகளாக பிரிந்து மேலும் பெரிய வரலாற்று தவறை செய்துவிட்டனர் என்பதே உண்மை.
கடந்த காலத்தவறுகளை சுட்டிக்காட்டுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது எதிர்காலத்துக்கான நகர்வுகள் பற்றிய முன்னாயத்தங்களாகும். தற்போதைய பாராளுமன்றில் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற கொள்கையோடு பயணிக்க கூடிய கட்சிகளின்  13 அங்கத்தவர்களே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய ஒவ்வொரு அசைவும் தீர்க்கமானதாகவும் தமிழருடைய எதிர்கால அரசியல் இருப்பு,  பொருளாதார , அபிவிருத்தி நலன்களையும்  மையப்படுத்தியதாக காணப்படுவதுடன் கடந்த காலத்தில் விடப்பட்டதான தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் அமைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற போது மட்டுமே இழந்து போன வடக்கு – கிழக்கு மக்களுடைய அபிப்பிராயத்தை மீள கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் தமிழ்தேசியம் என்ற கொள்கையை உயிர்ப்புநிலையிலும் வைத்திருக்க முடியும்.  வடக்கு – கிழக்கு பகுதிகள் இணைந்ததமிழர் தாயகம் என்ற நிலையே நம்முடைய வரலாற்று இருப்பை தொடர்ந்தும் பேண அவசியமானது என்பதை இந்த தமிழர் தலைமைகள் உணர்ந்து செயற்டவேண்டியவர்களாகவுள்ளனர். இந்தத்தேர்தல் முடிவுகளில் இருந்து எவ்வளவு பாடங்களை நம்முடைய அரசியல் தலைமைகள் கற்றுக்கொள்கின்றனரோ..? அவ்வளவுக்கு தமிழர் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான நகர்வுகளை மேற்கொள்ளமுடியும். மேலும் இந்த தமிழர்தலைமைகள் ஒற்றுமையுடன் பயணிக்கும் போது மட்டுமே பெரும்பான்மை அங்கத்தவர்களை கொண்டுள்ள பொதுஜன பெரபமுன பாராளுமன்றில் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஓரளவாவது ஓரளவாவது புதிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அல்லாது விடின் வழமை போல ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய கொள்கைகளை மட்டுமே இறுகப் பிடித்து வழமை போல பிரிவினை பாராட்டி வருவார்களாயின் எஞ்சியுள்ள மக்கள் ஆதரவையும் இழந்து , வருகின்ற காலங்களில் பெரும்பான்மை வாதத்துக்குள் அல்லது ராஜபக்சக்களின் இலங்கைக்குள் நம்முடைய அடையாளத்தை இழந்து வரலாற்றை தொலைத்து பயணிக்கப்போகின்ற அவலமான ஒரு நிலையே ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது.
 பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நமது தமிழர் தலைமைகள் ஒருபுறத்தில் சர்வதேசத்திற்கு தமிழர் பிரச்சினைகளை கொண்டு செல்ல வேண்டியவர்களாகவும், மறுபுறத்தில் பெரும்பான்மை சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியேறிய பொதுஜனபெரமுன பாராளுமன்றில் தமிழர்களின் தனிக்குரலாக ஒலிக்க வேண்டியவர்களாகவும் , பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டியோராகவும் காணப்படுகின்றனர்.மிகப்பிரதானமாக மேற்குறிப்பிட்ட மூன்று விதங்களில் கடமையாற்ற வேண்டிய நமது தலைமைகள் அடுத்த 05 வருடங்களுக்கு  என்ன செய்யப்போகின்றனர்..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.