2020

2020

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு முள்ளந்தண்டு மாற்றுச் சத்திர சிகிச்சை தேவை!!!

மழை வரும் வராமலும் இருக்கும்!
சம்பந்தன் அண்ணை ஜனநாயமாக நடப்பார் அப்படி இல்லாமலும் இருப்பார்!!
கோத்தபாயா அபிவிருத்தியயை முன்னெடுப்பார் முன்னெடுக்காமலும் இருப்பார்!!!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு முள்ளந்தண்டு சிக்கல்கள் நிறைய உள்ளது. அதில் பா உ சித்தார்தனுக்கே கூடிய சிக்கல் உள்ளது. தேர்தல் முடிவிற்குப் பிறகு பா உ சித்தார்த்தன் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் வழங்கிய நேர்காணலில் என்ன சொல்ல வருகின்றார் எனபது சித்தார்த்தனுக்கும் புரியவில்லை இவரை நேர்காணல் செய்த ஊடகவியலாளர்களுக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று ரீதியான தோல்வியயைக் கண்டுள்ள நிலையில் பத்து ஆண்டுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அரசியல் முதுகெலும்பு இல்லாததால் அல்லது அது இத்துப் போனதால் தான் குப்பை கொட்டினர் என்பது உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர் அறிந்த இரகசியம். சிவசக்தி ஆனந்தன் அருந்தவபாலன் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்படும் என்று அறிந்த புத்திசாலிகள். இப்படியான முதுகெலும்பற்ற புத்திசாலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு அழைக்கப்பட்ட கூட்டமொன்றில் கூட த சித்தார்தனுக்கு இருப்பதற்கு ஆசனமே வழங்கப்படமால் அவமானப்படுத்தப்பட்டார். அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நின்றால் ஒரு ஆசனம் கிடைக்கும் என்பதால் தான் இணைந்தார். அதற்கான பலனை அனுபவிக்கின்றார்.

த சித்தார்த்தன் புளொட் இயக்கமாக இருக்கும் போதும் சரி அரசியலுக்கு வந்த போதும் சரி முதுகெலும்பற்ற ஒருவராகவே செயற்பட்டார். புளொட் அமைப்பில் அவர் தலைமையேற்ற போது நடந்த எந்தக் கொடூரச் செயலையும் அவர் தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முற்படவில்லை. இவர் பிறகெப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகமின்மையைத் தட்டிக் கேட்பார். நாட்டில் நடக்கும் ஜனநாயக மறுப்பைத் தட்டிக் கேட்பார். தன்னைச் சுற்றி என்ன அநியாயம் நடைபெற்றாலும் அது பற்றி அறச்சீற்றம் கொள்ளாத அல்லது கொள்ளத் தெரியாத ஒரு அரசியல் வில(லா)ங்கு சித்தார்த்தன்.

த சித்தார்த்தன் யாழ் சமூகத்தை பிரதிபலிக்கின்ற சராசரி மனிதன். யாழ் சமூகத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏதோ தாங்கள் உண்டுஇ தங்கள் வேலையுண்டு மற்றையவர்களிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துவிடக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவர்கள். தங்களைச் சுற்றி என்ன அநீதிகள் நடைபெற்றாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். அதனைத்தான் கடந்த கால ஆயுதப் போராட்டமும் மக்களுக்கு கற்றுக்கொடுத்தது. தட்டிக் கேட்பவர்களை கேள்வி கேட்பவர்களை ஆயுதம் தாங்கியவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டுமல்ல அரச ஊழியர்களுக்கும் கூட பிடிப்பதில்லை. அதனால் தான் யாழ் சமூகத்தில் என்ன விலைகொடுத்தும் மாற்றத்தை தடுத்துவிடவே முயற்சிப்பர். அந்தப் பின்னணியில் வந்தவர் தான் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

இவர் பொதுவெளிக்கு வந்திராவிட்டால் நானும் இந்த விமர்சனத்தை வைத்திருக்க வேண்டி வந்திராது. சராசரியாக உள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்குள் த சித்தார்த்தன் ஒப்பீட்டளவில் நேர்மையானவர் தான். அதனால் தான் ஒரு வாக்கு வங்கியயைத் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார். ஆனால் இவருடைய நேர்மை கடந்த பத்துவருடத்தில் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ் மக்கள் பெற்றெடுத்திருக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்களை பெறுவதற்கு இவரைப் போன்றவர்கள் தடையாக இருந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக இவருடைய ஆசனத்தில் ஒரு செயற்திறன் மிக்கவர் சிவசக்தி ஆனந்தன் போல் ஒருவர் இருந்திருந்தால் இன்னும் பலதை மக்களுக்கு செய்திருக்க முடியும்.

அணமையில் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் நிகழ்ச்சியில் கூட அவர் ஸ்பொட்டாக எதனையும் சொல்லவில்லை. மேலே குறிப்பிட்டதுபோல் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாகவே கருத்துத் தெரிவித்து உள்ளார். தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படவில்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட மாவை சேனாதிராஜாவுக்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கவில்லை என்பது தான் அவருடைய ஆதங்கம். தமிழரசுக் கட்சி ஜனநாயகப்படி முடிவெடுக்கவில்லை என்பது உண்மைதான். சரி ஜனநாயகப்படி முடிவெடுத்தால் நீங்கள் ஏன் மக்கள் தங்கள் ஜனநாயகத்தின் மூலம் தோற்கடித்தவரை பின் கதவால் கொண்டுவர முற்படுகிறீர்கள். இதில் என்ன ஜனநாயம் இருக்கின்றது. தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறைத் தொகுதிக்கான பிரநிநிதித்துவமாக வழங்கியது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தன்னுடைய தேசியப் பட்டியல் ஆசனத்தை யாழ் குடாவில் உள்ள ‘குதிரை கழுதை’ களுக்கு வழங்கியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நீங்களும் இன்னும் ஆனையிறவு தாண்டாத மனநிலையில் இருப்பது ஏன். உங்களைப் போல் இன்னுமொரு முதுகெலும்பற்றவர் கட்சிக்குள் இருந்தால் நீங்கள் இன்னும் கூடியகாலம் குப்பை கொட்டலாம் என்பதற்காகவா?

மேலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைக் கூட சித்தார்த்தனால் விளங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. ஓரிடத்தில் குறிப்பிடும் போது மக்கள் அரசுசார்பானவர்களுக்கு வாக்குகள் அளித்ததால் மக்கள் தேசியத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னுமொரு இடத்தில் குறிப்பிடும் போது மக்கள் தேசியத்துடன் தான் இருக்கிறார்கள் என்கிறார். நீங்கள் அங்கம் வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் காரணம் நீங்களும் உங்களைப் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனையும் சாதிக்கவில்லை என்பதனாலேயே. ஏன் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் மக்கள் தவறாக தங்கள் வாக்குகளை அளித்துவிட்டார்கள் என்று கூறும் சித்தார்த்தன் மக்களுடைய வாழ்நிலை கடந்த பத்து ஆண்டுகளாக மேம்படாததற்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ளாதவர் குறைந்தபட்சம் தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி எதனைச் சாதித்தேன் என்பதைக் கூறிப்பிட்டிருக்க வேண்டும்.

விருப்பு வாக்கு விடயம் பற்றிக் கேட்டபோது கூட ஒரு முதுகெலும்பற்ற பதிலையே சித்தார்த்தன் முன்வைக்கிறார். ஒரிடத்தில் விருப்பு வாக்கில் மோசடிகள் இடம்பெறுவதாக நம்பகரமாக தெரிய வருவதாகத் தெரிவிக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆனால் நடந்திருக்கலாம் என்றும் சொல்கின்றார். அவருடைய நம்பகமான தகவல் எதுவென்றால் தன்னுடைய மிக நெருங்கிய நண்பருக்கு அவருடைய நண்பர் சொன்னதாகச் சொல்கிறார். இதெல்லாம் ஒரு நம்பகரமான தகவல் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பொது ஊடகத்தில் சொல்லுகின்றார் அதனைக் கேட்டு இரண்டு ஊடகவியலாளர்கள் ஆமாம் கொட்டுகின்றனர். விருப்பு வாக்கு மோசடிக்கு அவர் கொடுத்த உதாரணம் 2004இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைபேசியூடாகவே விருப்பு வாக்குகளை மாற்றியதாக குறிப்பிடுகின்றார். 2004இல் புலியின்றி ஓரணுவும் அசையாது இருந்த போது விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதையும் 2010ற்குப் பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர் இந்த அரசியலில் எதைத்தான் சாதிக்கப் போகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அரசியலில் இருந்தும் இல்லாத ஒருவராகவே அடுத்த ஐந்து ஆண்டுகளை வீணடிக்கப் போகின்றார். முடிந்தால் எனது கூற்றை அவர் பொய்யாக்கி விடட்டும்.

டோனி போன்ற ஒரு பெரிய வீரரை சரியான விதத்தில் பி.சி.சி.ஐ நடத்தவில்லை! – சக்லைன் முஷ்டாக்

டோனி தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை சுதந்திர தினத்தன்று அறிவித்தார். முறையாக பிரியாவிடை அளிக்காமல் தோனியை இப்படி ஓய்வு பெற விட்டிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சக்லைன் முஷ்டாக் யூடியூப் சேனலில் கூறியதாவது:

நான் எப்பொழுதுமே தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய செய்திகளைத்தான் கூறுவேனே தவிர எதிர்மறை எண்ணப்போக்கை வெளிப்படுத்த மாட்டேன்.

ஆனால் டோனி ஓய்வு விஷயத்தில் நான் இதைக் கூறியாக வேண்டியுள்ளது. இது பிசிசிஐக்கு ஒரு தோல்வி. தோனி போன்ற ஒரு பெரிய வீரரை சரியான விதத்தில் பிசிசிஐ நடத்தவில்லை.

அவரது ஓய்வு இப்படி நடந்திருக்கக் கூடாது. இது என் இதயத்திலிருந்து எழும் உணர்வு, டோனியின் லட்சக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் உணர்ந்திருப்பார்கள்.

பிசிசிஐ குறித்து இப்படிக் கூற என்னை மன்னிக்கவும், பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை. எனக்கு வருத்தமாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அவர் ஆடுவது மகிழ்ச்சி. ஆனால் சர்வதேச ஓய்வு இன்னும் வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கனவுகள் உண்டு. ஒவ்வொரு வீரருமே ஆட்டத்தில் தான் உயர்ந்திருக்கும் போது ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புவார்கள். டோனிக்கும் இந்த கனவு இருந்திருக்கலாம்.

இவ்வாறு கூறினார் சக்லைன் முஷ்டாக்.

தமிழர்களிடம் தாம் இந்நாட்டு பிரஜைகள் என்ற உணர்வு இதுவரை ஏற்படவில்லை !- பாராளுமன்ற முதலாவது அமர்வில் சிறீதரன்.

இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு  செயற்பட முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கடந்த 20.08.2020 காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஒரு முக்கியமான பிரச்சினை தொடர்பில் நாட்டின் தலைவர் பேசாமல் விட்டமையானது நாட்டின் ஒரு துரதிஷ்ட நிலையாக எம்மால் பார்க்கப்படுகிறது.

இந்த நாட்டில் வாழ்கின்ற இரு தேசிய இனங்கள் சிங்கள தேசிய இனமும், தமிழ் தேசிய இனமும். தமிழ் தேசிய இனம் கடந்த 70, 80 ஆண்டுகளாக இந்த மண்ணிலே பல இனப்படுகொலைகளுக்கும், அழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு இனம்.அதனால் தான் அவர்கள் ஒரு நீண்ட கால போராட்டத்திற்குள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்கள்.

அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கையிலே இன்று போராட்ட வடிவங்கள் மௌனிக்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டினுடைய பிரஜைகள் தாங்கள், தாங்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இன்னமும் உருவாகாமல் இருப்பது இந்த நாட்டிலே கொண்டு வரப்படுகின்ற பல்வேறுபட்ட சட்டங்களும், சிங்கள மக்களுடைய மனோ நிலைகளும், அவர்களை வழிநடத்துகின்ற சிங்கள தலைவர்களின் எண்ணங்களுமே இன்னும் இந்த நாட்டை வேறுபட்ட நிலைக்குள் வைத்திருக்கிறது.

குறிப்பாக இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு இதனை நடத்த முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என்பதற்கு வரலாறு அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதல்ல.

ஏனென்றால் நீண்ட நெடும் வரலாற்று பாடங்களை அவர்கள் கற்றுக் கொண்டவர்கள். இந்த ஒரே தீவினுள் இரண்டு தேசிய இன மக்கள் வசிக்கின்ற போதும் அவர்கள் தமக்குரிய அரசியலையும் பொருளாதாரத்தையும் வெவ்வேறு அடிப்படையில் கொண்டுள்ளனர்.

இந்த உண்மைகளை அனுசரித்து ஏற்கனவே நடந்திருந்தால் இலங்கை பொருளாதாரத்தின் அபிவிருத்தியை எட்டுவதில் எவ்வித பிரச்சினைகளையும் கொண்டிருக்க மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

13ஆவதி திருத்தத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – இந்தியா உறுதி

இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21.08) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது தமிழ்மக்களின் கரிசனைகள், குறிப்பாக நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பின்னரான தமிழ்மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது. கூட்டமைப்புடனான சந்திப்புக் குறித்து இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் கூறியிருப்பதாவது:

இந்திய உயர்ஸ்தானிகரைக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்திருந்ததுடன், இதன்போது அண்மையில்  நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றிக்கு உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில்ஸ இந்தியாவின் நிலைப்பாட்டை இதன்போது உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரணிலை நாடாளுமன்றம் அனுப்ப முயற்சி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலர், ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்தது. ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றவில்லை. எனினும் தேசிய பட்டியல் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. அதற்கான நபரை பெயரிடுவதில் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. புதிய பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரின் பெயர், இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேசிய பட்டியல் உறுப்பினரை அறிவிக்க, ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் 7 நாள் அவகாசம் கோரியுள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப செயற்குழு உறுப்பினர்கள் சிலர் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவன் கைது! மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மனைவி புகார்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியின் மனைவி மனித உரிமைகள் ஆனைக்குழுவில் நேற்று முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் நகரப் பகுதியில் நேற்று காலை  முச்சக்கர வண்டியில் பயணித்த சிவில் உடையில் இருந்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இதனையடுத்து சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது கணவன் பொலிசாரால் திட்டமிட்டு பழிவாங்கும் பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் பயணித்தமைக்கான பணத்தினைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக் கொறடாக்களாக ஐவர்

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதி மற்றும் உதவி கொறடாக்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதி கொறடாகவாக பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆளும் கட்சியின் உதவி கொறடாக்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்மகுமார, மொஹமட் முஸ்ஸமில் மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த பதவிகளுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் ஆளும் கட்சியின் பிரதம கொறாடாவான அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பிரித்தானியாவில் ஒரு வேலைக்கு 1000 பேர் விண்ணப்பம்! அரசியல், பொருளாதார, கல்விக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும்!!!

பிரித்தானியாவின் ஒரு பகுதியில் ஒரு வெற்றிடத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மார்ச் 2020இல் கொரோனா பன்டமிக் ஆரம்பித்த வேளையில் பிரித்தானியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைந்த நிலையில் காணப்பட்டது. அப்போது வேலையற்றவர்களின் எண்ணிக்கை 1.35 மில்லியன்களாக இருந்தது. ஆனால் அடுத்த மூன்று மாதகாலத்தில் யூனில் வேலையில்லாமல் அரசு உதவிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 2.7 மில்லியன் பேர் வேலை இழந்தவர்களுக்கான அல்லது வருமான போதாமைக்கான உதவிகளைப் பெற்று வந்தனர். மார்ச் முதல் யூலை வரையான காலத்தில் மட்டும் 730000 பேர் சம்பளம் வழங்கப்படுவதில் இருந்து நீக்கப்பட்டதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்து இருந்தது.

கிழக்கு லண்டனில் உள்ள எனது நண்பரின் முடிதிருத்தும் நிலையத்துக்கு எப்போது சென்றாலும் காத்திருந்து முடிதிருத்த வேண்டும். அல்லது முன்னரே அவரிடம் நேரத்தை பதிவு செய்து செல்வது வழமை. மூன்று பணியாளர்கள் இருந்தாலும் 2 தொடக்கம் 5 பேர்வரை காத்திருப்பார்கள். சில தினங்களுக்கு முன் கார் MOT எடுக்கச் சென்றபோது சலூனில் மூன்று பணியாளர்கள் இருப்பதைப் பார்த்தேன். MOT எடுத்துவிட்டு அண்ணளவாக ஒரு மணிநேரத்திற்குப் பின் மீண்டும் முடி திருத்தச் சென்றேன். பணியாளர்களைத் தவிர யாரும் இல்லை. மார்ச் மாதமளவில் பொறுப்பாய் இருந்த நண்பரோடு உரையாடிய போது தானும் ஒரு சலூன் திறக்கப்போவதாகச் சொல்லி இருந்தார். புதிய சலூன் திறப்பது பற்றிக் கேட்டேன். ‘பயமாக இருக்குது அண்ணா’ ஆட்கள் வரவே பயப்படுகிறார்கள். எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றது என்று சலிப்போடு கூறினார்.

அத்தியவசிய தேவைகளில் ஒன்றான முடிதிருத்தும் நிலையத்தின் நிலையே இப்படி என்றால் மற்றைய வேலைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பிரித்தானியாவில் ஒவ்வொரு நாளும் நிறுவனங்கள் எத்தினை பேரை வேலையால் நிறுத்துகின்றனர் என்ற விபரம் வெளிவந்த வண்ணமே உள்ளது. வீடுகளில் மிக அறியப்பட்ட நிறுவனங்களான பிபி – BP, பிரிடிஸ் ஏயர்வெய்ஸ், M&S – எம் அன் எஸ், ஜோன் லூயிஸ், பிஸா கட், தி கார்டியன், ஈவினிங் ஸ்ராண்டட் பத்திரிகைகள் என்று இந்தப் பட்டியல் மிகநீளமானது. ‘வைட் கொலர் ஜொப்’ என்று பிரித்தானியர்கள் பெருமைப்படுகின்ற பல தொழில்கள் தற்போது ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது.

நிறுவனங்கள் தொடர்ந்தும் வேலையில் பணியாளர்களை வைத்திருப்பதற்காக வழங்கும் பேர்லோ திட்டம் ஒக்ரோபரில் முடிவுக்கு வரும் போது, வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வேலை நீக்கம் என்பது வெறுமனே கொரோனாவினால் ஏற்பட்டது மட்டுமல்ல. கொரோனாவிற்கு முன்னரேயே பிரித்தானிய வேலைமுறையில் மாற்றங்கள் வேண்டும் என்பதை நிறுவனங்கள் மிகத் திட்டமிட்டு தகுந்த நேரத்திற்காக காத்திருந்தன. கொரோனா வின் தாக்கம் இந்த மாற்றத்தை சடுதியாக துரிதப்படுத்தி உள்ளது.

பிரித்தானிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் கூடுதல் முதலீடுகளைச் செய்துவருவதால் கூடுதல் லாபத்தை காண முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயற்படத் தொடங்கிவிட்டன. மனித வலுவுக்காக ரொபேட்களை கணணிகளைப் பயன்படுத்தும் முறை தற்போது தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மனிதர்கள் செய்யும் பணிகளை கணணிகளும் ரோபேட்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ரீற்றெயில் செக்ரரை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய வருமானம் அதிகரித்தே உள்ளது. ஆனால் அவர்கள் ஒன்லைன் மூலமாக வருமானமீட்டுவது மிகையாக அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள் தங்களுடைய கல்லும் சீமேந்தும் கொண்டு கட்டப்படும் வியாபார நிலையங்களின் எண்ணிக்கையை மிக விரைவில் குறைத்துக் கொள்வார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் வங்கிகள் எமது ஹைஸரீற்றில் இருந்து காணாமல் போய்விடும். அடுத்த ஆண்டு முதல் பிரித்தானியா ஓட்டிகள் இல்லாத வாகனங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைக்கு அனுமதிக்க உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரக்ஸிகளும் ஊபர் ட்ரைவர்களும் வேலை இழக்க வேண்டி ஏற்படலாம். தற்போது நாங்கள் செய்கின்ற பல நடைமுறை வேலைகள் இன்னும் சில ஆண்டுகளில் வரலாறு ஆகிவிடும்.

தற்போதைய பொருளாதாரமானது மிக வேகமாக அறிவியல் பொருளாதாரமாக மாறி வருகின்றமையால் வேலைவாய்ப்பிற்கான சந்தையில் தங்களை விற்க விரும்பும் ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் கூட வெறும் சான்றிதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு வேலைழயப் பெற்றுவிட முடியாது. அவர்கள் கடுமையான போட்டியயை சந்திக்க வேண்டி நேரிடும். சான்றிதள்கள் மட்டுமே அறிவாகி விடாது. ஏனைய திறன்களும் பரீட்சிக்கப்படும்.

பழையன கழிவதும் புதியன புகுவதும் இயல்பானாலும், இழக்கப்படும் வேலைகளுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பம் புதிய வேலைகளை உருவாக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமே மனித வலுவைக் குறைத்து அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தைக் குறைத்து அதீத லாபம் மீட்டுவது மட்டுமே.

அதனால் அரசு புதிய தொழில்சார் சட்டங்களை இயற்றி வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தை உயர்த்தி, அரச உதவித் திட்டங்களை உயர்த்த வேண்டும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வாரத்திற்கு 40 மணிநேர வேலைக் கணக்கு தற்போது தொழில்நுட்பம் அதன் உச்சத்தை தொட்டுள்ள இன்றைய காலகட்டத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானது. அதன் பலனை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

மக்கள் தனிமனிதர்களாக மட்டும் சிந்திக்காமல் சமூகம் சார்ந்தும் சிந்திக்க வேண்டிய அரசியல் சூழலில் நாம் வாழ்கின்றோம். மக்கள் கூட்டத்தை தனிமனிதர்களாக்கி தனிமனிதர்களிடையே போட்டியயை உருவாக்கி சமூக அக்கறையை இல்லாமல் செய்து வெறும் போட்டியயையும் பொறாமையயையும் உருவாக்கும் தற்போதைய அரசியல் பொருளாதார கல்விக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தங்களுடைய பட்டப் படிப்பிற்காக £50000 வரையான கடன் சுமையைப் ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களதும் யுவதிகளதும் எதிர்காலம் அரசின் கொள்கைவகுப்பிலேயே தங்கியுள்ளது. பெருநிறுவனங்கள் லாபமீட்டுவதற்காக தங்களைத் தயார்படுத்தும் இந்த இளைஞர் யுவதிகளின் கல்வி முற்றிலும் இலவசமாக்கப்பட வேண்டும்.

‘தகுதியானவர்களைத் விரட்டி அடியுங்கள்!’ – தமிழ்ச் சூழல்; ‘தகுதியானவர்களை துரத்திப் பிடியுங்கள்!’ – சர்வதேசச் சூழல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களில் ஓப்பீட்டளவில் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன். இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விரட்டியடிக்க அக்கட்சிக்குள் பல்வேறு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் சமூகவலைத்தள கனவான்களும் படாத பாடுபட்டனர். அதே போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர் மணிவண்ணன். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவரை ஓரம்கட்டுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காய்நகர்த்தி வருகின்றார். எங்கே மணிவண்ணன் தனக்கு போட்டியாகி விடுவாரோ என்பதற்காக தனக்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போடக் கூடிய ‘குதிரை’ கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுகிறது.

அரசியலில் மட்டுமல்ல அரசியலுக்கு வெளியேயும் குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அல்லது அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழன் இவ்வாறுதான் சிந்திக்கின்றான். போராட்டகாலங்களில் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்: வே பிரபாகரன், உமா மகேஸ்வரன் போன்றவர்கள் கூட எங்கே தங்களிலும் பார்க்க திறமையானவர்கள் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தனர். இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் கூட ஒரு நேர்மையான, ஆளுமைமிக்க ஒருவர் துணைவேந்தராக வரக்கூடாது என்பதில் யாழ் பல்கலைக்கழக சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் பாலியல் வல்லுறவு புரிந்தவர்களைக் கூட இன்றும் பேராசிரியர்களாக வைத்துள்ளனர். துணைவேந்தர்களாக வருவதற்கு சிபாரிசு செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக சர்வதேசம் இயங்குகின்றது. அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பின்புலம் கொண்ட ஒருவர் போட்டியிடுவதாக கொண்டாடும் நாம் அதன் பின்னணியைச் சற்று நோக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியில் துணைவேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவர். இவர் ஜோ பைடனுக்கு எதிராக பலத்த சவாலை விடுத்ததுடன் ஒரு விவாதத்தின் போது ஜோ பைடனை நிலைகுலைய வைத்தார். ஜோ பைடனுக்கு அந்நேரத்தில் சொல்வதற்கு வார்த்தைகள் கூட வரவில்லை. அவரது ஆதரவை சற்று தடுமாற வைத்தவர்.

இருந்தாலும் ஜோ பைடனின் மகன் உப ஜனாதிபதித் தெரிவில் கமலா ஹாரிஸை தெரிவு செய்தார். அவருடைய திறமைக்காகவும் அவருடைய அரசியல் கொள்கைகள் தன்னுடைய அரசியல் கொள்கைகளுக்கு சமாந்தரமாக இருப்பதாலும் ஜோ பைடன் கமலா ஹாரிஸை தனது உபஅதிபராகத் தேர்வு செய்துகொண்டார். ஜோ பைடன் (77 வயது) யைக் காட்டிலும் மிக இளமையான கமலா ஹாரிஸ் (வயது 55) தனக்குப் பின் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு ஏற்ற வகையிலேயே இத்தேர்வு இடம்பெற்றுள்ளது. மேலும் ஜோபைடன் ஜனாதிபதி ஆனாலும் கமலா ஹாரிஸே கூடுதல் ஆதிக்கம் செலுத்தவார் என்றும் நம்பப்படுகின்றது. 2024இல் தவறினால் 2028இல் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிடலாம் என்று நியுயோர் ரைம்ஸ் எதிர்வு கூறியுள்ளது.

தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்மின் முதலாவது எதிரியாக கமலா ஹாரிஸே இருக்கப் போகின்றார். அவர் ஒரு குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் பொது மருத்துவச் சேவைக்கு ஆதரவானவராகவும் இருப்பதால் டொனால் ட்ரம்மின் முதல் தாக்குதல் இலக்கு கமலா ஹாரிஸாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

தமிழ் சமூகம் இந்த சர்வதேச அரசியலில் இருந்து ஏதாவது பாடங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பிரித்தானியா: ஜசிஎஸ்சிஈ மற்றும் ஏலெவெல் பெறுபேறுகளும் அரசின் குளறுபடிகளும்!! மருத்துவக் கற்கை நெறியில் அதன் பிரதிபலிப்புகளும்!!!

இன்று (Aug 20, 2020) வெளியான 16 வயது மாணவர்களின் தரம் 11ற்கான ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகள் இன்று வெளியாகியது. இந்த ஜிசிஎஸ்ஈ முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் நல்ல பெறுபேறுகளுடன் வந்திருப்பதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் சித்தியடைந்த மாணவர்களின் பெறுபேறுகள் 10 வீதத்தால் அதிகரித்து உள்ளது. மேலும் உயர்சித்தி பெற்றவர்களின் வீதம் 25 சத விதத்தால் அதிகரித்து உள்ளது. ஆனால் ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகளுக்கு சமனான பிரெக் தொழிற்பயிற்சி பாடங்களின் பெறுபேறுகளை வெளியிடுவதை நேற்று (ஓகஸ்ட் 19, 2020) பெறுபேறுகளுக்கு பொறுப்பான அலுவலகம் ஓப்குவால் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் பிரெக் பாடங்களை எடுத்த மாணவர்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இப்பெறுபேறுகள் பற்றிய குழறுபடிகள் கல்வி அமைச்சுக்கு ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட போதும் கல்வி அமைச்சு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனக் குற்றமசாட்டப்படுகிறது. இவ்வளவு குழறுபடிகளுக்கும் யார் காரணம் என்பதற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கல்வி அமைச்சுச் செயலாளர் கவின் வில்லியம்சன் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகவும் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்தில் அரச விதிமுறைகளை மீறிய டொமினிக் கம்மிங்கை பதவி விலக்கக் கோரிய போதும் பொறிஸ் ஜோன்சன் அதனை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பொறிஸ் ஜோன்சன் செயற்திறனற்ற பிரதமராக இருப்பது மட்டுமல்லாமல் வெறும் விசுவாசிகளை வைத்து நாட்டை நிர்வகிக்க முறல்கின்றார் என்ற குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிய தலைவர் கியர்ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி இன்னமும் ஸ்தீரனமான நிலையில் ஆளும்கட்சிக்கு சவால் விடாமல் உள்ளது.

கடந்த வாரம் வெளியான ஏலெவெல் பரீட்சைப் பெறுபேறுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. ஆசிரியர்கள் எதிர்வுகூறிய பெறுபேறுகளை மாற்றி அல்கோரிதம் ஒன்றைப் பயன்படுத்தி மாணவர்களின் பெறுபேறுகள் குறைக்கப்பட்டது. அதனால் சமூகமட்டத்தில் கீழ்நிலையில் இருந்த மாணவர்களின் பெறுபேறுகளே மேலும் கீழிறக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஆனாலும் பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் பல மாணவர்கள் தங்களுடைய முதல் தெரிவான கற்கைக்கோ முதல் தெரிவான பல்கலைக்கழகத்திற்கோ செல்வதற்கான வாய்ப்பு இந்தக் குழறுபடிகளால் பறிபோயுள்ளது. பல ஆண்டுகள் மாணவர்கள் செய்த உழைப்பை அரசு தனது செயற்திறன் இன்மையால் உதாசீனம் செய்துள்ளது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசு மீண்டும் மீண்டும் தன் இயலாமையை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தி விருகின்றது. கொரோனா ஒரு பெரும் உயிர்க்கொல்லி நோய்க்கிருமி என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தும் பொறிஸ் ஜோன்சனின் அரசு எவ்வித முன்நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது எழுபதினாயிரத்திற்கு அதிகமானோர் பிரித்தானியாவில் கொல்லப்பட்டனர். அதற்கு எவ்வித பொறுப்பையும் அரசு ஏற்கவில்லை. ஐரோப்பாவில் கொரோனாவில் கொல்லப்பட்டோர் அதிகமான நாடாக பிரித்தானியா உள்ளது. இந்த கொரோனா பேரழிவின் பின் என்எச்எஸ் இற்கு வாரா வாரம் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக மாயாஜாலம் போட்ட அரசு, பல்கலைக்கழகங்களில் மருத்துவதுறைக்கு விதிக்கப்பட்டு இருக்கும் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை தளர்த்த மறுத்துவருகின்றது. ஏனெனில் ஒவ்வொரு புதிய மருத்துவரை உருவாக்கவும் அரசு அம்மருத்துவர்களை உருவாக்க அரசு முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அதனைச் செய்யத் தயாரில்லாததால் மருத்துவ படிப்பை மேற்கொள்வதில் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.

இது இம்முறை தகுதிபெற்ற பல மாணவர்களையும் தங்களது கனவுத் தொழலாக உள்ள மருத்துவத்துறைக்குள் நுழைவதற்கு தடையாக உள்ளது. அல்கோரிதம் காரணமாக சமூகத்தின் பிற்பட்ட தளத்தில் இருந்து மருத்துவத்துறைக்கு சென்ற மாணவர்களின் கனவுகளில் அரசு மண்ணைவாரி விசியது. அதனால் ஆசிரியர்களின் எதிர்வு கூறலின் அடிப்படையில் மருத்துவத்துறைக்கு தெரிவானவர்கள், அரசின் அல்கோரிதத்தினூடாக அவர்களின் பெறுபேறுகள் கீழிறக்கப்பட்டு மருத்துவத்துறையில் கற்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இழந்தனர். தற்போது அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போதும், பல்கலைக்கழகங்கள் மருத்துவத்துறைக்கான இடங்களை ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டதாலும், கல்வியில் சமூகஇடைவெளி பேணப்பட வேண்டி இருப்பதாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் விரும்பிய மருத்துவத்துறையில் கற்றுகும் வாய்ப்பை இழக்கின்றனர். அரசு கூடுதல் நிதியயை முதலிட்டு மருத்துவக் கல்விக்கான எண்ணிக்கையைத் தளர்த்தினால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்.

பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு முக்கியமான காரணம் போதிய மருத்துவர்களும் மருத்துவ தாதிகளும் இல்லாமையே. இன்றும் பிரித்தானிய சுகாதார சேவைகளில் பல்லாயிரக்கணக்காண வெற்றிடங்கள் உள்ளது. கொரோனா போன்ற உயிர்க்கொல்லிகள் தாக்கினால் அதனைக் கையாள்வதற்கு வேண்டிய மருத்துவ மனிதவலு பிரித்தானியாவில் இல்லை. அதனால் மருத்துவத்துறைக் கல்விக்கான எண்ணிக்கையை தளர்த்துவது அவசியம். வெறும் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக பொறிஸ் ஜோன்சன் அரசு நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் காத்திரமான உதவிகளை செய்யத் தயாராகவில்லை. மாறாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் உருவாக்குகின்ற மருத்துவர்களையும் மருத்துவத்துறை சார்ந்தவர்களையும் கவர்ந்து இழுத்து தங்களது சுகாதார சேவைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புகின்றனர். இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளில் சுகாதார சேவைகள் பாதிப்படைகின்றது. இந்நாடுகள் உருவாக்கும் மருத்துவர்களால் பிரித்தானியா நன்மையயைப் பெற முயற்சிக்கின்றது.