கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மாவீர்கள் என்றால் யார்? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்? – கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (2) : வாசு (முன்னாள் போராளி)

Pirabakaran_Mahathayaபுலிகளால் படுமோசமாக சித்திரவதைக்கு உட்பட்டு பின்னர் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் உப தலைவர் மாத்தையா உட்பட 700 போராளிகளை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். புலிகளால் துரோகி முத்திரை குத்தப்பட்ட இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக தானே இயக்கத்தில் இணைந்தவர்கள்? பிரபாகரனின் முட்டாள்தானமான முடிவுகள் தமிழ் பேசும் மக்களிற்கு ஒரு விதமான விடிவையும் ஏற்படுத்தாது என்பதை உணர்ந்து தானே அவர்கள் புலிகளின் தலைமையை மாற்ற அன்று முனைந்தார்கள். இந்தியாவுடன் இணைந்து அவர்கள் செயற்பட முனைந்தது அன்று ஒரு முட்டாளை தலைமைப் பதவியில் இருந்து தூக்கவே என்பதை இன்று நாம் நன்கே உணர முடிகிறது. தமது பாதுகாப்புக்காக மக்களை ஆயிரக்கணக்கில் இன்று பலி கொடுத்த பிரபாகரனின் தலைமையுடன் ஒப்பிடுகையில் அன்று மாத்தையா வென்றிருந்தால் இந்த அவலங்கள் தடுக்கப்பட்டிருக்குமல்லாவா? புலிகளின் இன்றைய அழிவு தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தையும் அல்லவா அழித்து விட்டு சென்றுள்ளது.  ஆனால் இந்த அழிவை தடுத்து நிறுத்த முனைந்த மாத்தையா மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்கள் இன்னமும் துரோகிகள். அவர்களை கொன்றவர்கள் மாவீரர்கள்.

நான் ஒரு வாதத்திற்காக மேற்சொன்ன விடயத்தை எடுத்தாலும் 1986 ரெலோ மீதான தாக்குதலுடனேயே புலிகளின் அனைத்து தலைவர்களும் தமிழ் மக்களின் விரோதிகளாக மாறி விட்டார்கள்.  அன்று ரெலோ மீதான தாக்குதல் நடாத்துகையில் யாழ் மக்கள் கொக்கோகொலா கொடுத்ததை நேரில் கண்டவன்! ரெலோ மீதான தாக்குதல் நடாத்துகையில் யாரும் கேள்வி கேட்கவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினார்கள். ரெலோவின் தாக்குதலை நியாயப்படுத்த நாமே (புலிகள்) கொள்ளையடித்த வாகனங்களை வரிசையில் நிற்பாட்டி விழா நடாத்துகையில் மக்கள் கைகொட்டி ஆரவாரம் செய்தார்கள். புலிகள் தொடர்ந்தும் மிகமோசமாக மாற்று இயக்கங்களை வேட்டையாடினார்கள். அதையும் மக்கள் பார்த்து மௌனித்து இருந்தார்கள். புலிகளின் கையில் இருந்த துப்பாக்கி அவர்களை மௌனிக்க வைத்தது. புலிகளால் கொல்லப்பட்ட அனைவரும் தமிழ் மக்களின் விடுதலையை உண்மையில் நேசித்தவர்கள். அரசியல் சித்தாந்த சிந்னையற்று  புலிகள் அமைப்பால் வளர்க்கப்பட்ட பலர் புலிகளின் பாசிச குணத்தை புரிந்து கொள்ளாது மேலும் மேலும் சகோதர படுகொலைகளை புரிந்து வந்தார்கள். இந்த கொலைகளை செய்தவர்கள் பிரபாகரனினால் புலிகளின் முக்கிய தளபதிகள் ஆக்கப்பட்டார்கள்.

கந்தன் கருணை படுகொலை! மக்களின் விடுதலையை நேசித்தவர்கள், நிராயுதபாணியாக தடுத்து வைக்கப்பட்டவர்கள்! அருணா என்ற புலிகளின் மூத்த தளபதியால் படுகோரமாக கொல்லப்பட்டவர்கள்! மக்கள் விடுதலையை நேசித்து இயக்கங்களுக்கு சென்றவர்கள் துரோகிகள். ஆனால் நிராயுதபாணிகளான அந்த போராளிகளை கொன்ற அருணா ஒரு மாவீரனாக கார்திகை 27இல் தரிசிக்கப்படுவான்.

Kittu_Colநினைக்கவே மனம் கொந்தளிக்கிறது! புலிகளின் முக்கிய தளபதி கிட்டு! ஆயிரக்கணக்கான ரெலோ, புளட், மற்றும் பல இயக்கங்களின் போராளிகளை கொன்று குவித்த ஒரு போர்க் குற்றவாளி! இவரினது படங்கள் கார்த்திகை 27இல் பாரிய மண்டபத்தை அலங்கரித்து நிற்கும். மக்கள் அதற்கு பூ போட்டு வணங்குவார்கள்! ஆனால் இவரால் கொல்லப்பட்ட அத்தனை மனிதங்களும் துரோகிகள்! ரெலோ சிறீ சபாரட்னம், புளட் சின்ன மென்டிஸ் உட்பட பல நூற்றுக் கணக்கான மாற்று இயக்கப் போராளிகளை தனது சொந்த கைகளால் நிராயுதபாணிகளாக வைத்து கொலை செய்த கிட்டு ஒரு மாவீரன். விடுதலையை நேசித்து சென்ற மாற்று இயக்கத்தினர் துரோகிகள்!

புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகள் புலேந்திரன், குமரப்பாவின் மரணத்தை அண்மையில் ஐரோப்பா எங்கும் சிறப்பாக கொண்டாடினார்கள். இவர்களும் இந்த முறை மாவீரர் தின மண்டபங்களில் புலம்பெயர் தமிழ் மக்களின் சிர வணக்கத்திற்குள்ளாகும் முக்கிய தளபதிகள். ஆனால் இந்த இருவரது தலைமையிலும் கொல்லப்பட்ட எல்லைக் கிராம அப்பாவி சிங்கள மக்கள் மற்றும் சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? இவர்களின் கொலை வெறிக்கு நூற்றுக்கணக்கான அப்பாவி சிங்கள மக்கள் மட்டும் கொல்லப்படவில்லை. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல போராளிகளும் இவர்கள் இருவரினதும் கட்டளையால் கொல்லப்பட்டனர்.

மன்னார் தளபதி விக்டர். இவரின் படமும் மாவீரர் மண்டபங்களை அலங்கரிக்கும் ஒரு படம். ஆனால் அனுராதபுரம் தாக்குதலை தலைமை வகித்து சென்று  அப்பாவி நிராயுதபாணி சிங்கள மக்கள் வெட்டியும் சுட்டும் கொலை செய்த இந்த மனிதன் ஒரு மாவீரன்? தமிழ் சமூகமே வெட்கி தலைகுனிய வேண்டிய கொலைகளை மிக சர்வசாதாரணமாக செய்த இந்த புலித் தலைமைகள் மாவீரர்கள்? மக்களை நேசித்து மக்களிற்காக இவர்களால் கொல்லப்பட்டு இறந்தவர்கள் துரோகிகள்?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல் புலித் தலைமை செய்த இனச்சுத்திகரிப்பு! தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை யாழ் குடாவில் இருந்து சில மணித்துளிகளுக்குள் வெளியேற சொன்ன புலிகளின் தலைவருக்கும் நாசிகளுக்கும் ஒரு கொஞ்ச வித்தியாசமே. நாசிகள் யூதர்களை கொன்று குவித்தார்கள், புலிகள் முஸ்லீம் மக்களை உயிருடன் நடை பிணமாக யாழ் குடாவை விட்டு வெளியேற்றினார்கள். இந்த நிகழ்வுக்கு காரணமான பல தளபதிகள் இன்று மாவீரர் பட்டியலில் விளக்கேற்றி கௌரவிக்கப்படுவார்கள். ஆனால் இவர்களால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் இன்னமும் புத்தளத்தில் அகதிகளாக வாழ்கிறார்கள்.

கார்த்திகை 27இல் நீங்கள் இறந்த போராளிகளை வணங்குவதில் தவறில்லை. ஆனால் வணங்கப்படுபவர்கள் தவறானவர்கள். இவ்வளவு காலமும் புலிகளிடம் ஆயுதம் இருந்தது கேட்க பயந்தோம். இனியும் இதை கேட்காது போனால் நாம் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் மட்டுமல்ல மானிட குலத்திற்கே துரோகம் செய்தவர்கள் ஆகி விடுவோம். ஹிட்லரும் ஜேர்மனி என்ற தேசத்தை நேசித்தவன் தான். ஆனால் அவன் மனித நேயத்தை முழுவதுமாக மறந்த மனிதன். நாம் மாவிரர் தினம் கொண்டாடுவது கிட்டத்தட்ட நாசிகளின் மரணத்தை கொண்டாடுவதற்கு ஒப்பானது. புலிகளில் இருந்து கரும்புலிகளாகி பிரபாகரனை நம்பி மோசம் போனவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்! புலிகள் இயக்கத்தில் மக்களின் விடுதலையை நேசித்து சென்ற இறந்தவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் மட்டுமல்ல மக்களை நேசித்து மக்களிற்காக போராடி இறந்த அனைத்து இயக்கப் போராளிகளும் வணங்கப்பட வேண்டியவர்கள். இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களும் வணங்கப்பட வேண்டியவர்கள்.

ஆனால் மக்களை ஏமாற்றி இந்த போராளிகளை மற்றும் தமிழ் சமூகத்தையே ஏமாற்றிய புலித் தலைமைகள் காலத்தால் மறக்கப்பட வேண்டியவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் வாழ்வை துறந்தவர்களை வஞ்சித்த புலி, புளொட், மற்றும் ரெலோ அமைப்புகளின் தலைமையை வணங்குவது மனித குலத்திற்கு அவமானம் தேடித்தரும் ஒரு செயல்! மக்கள் இதை மறந்தால் தமிழ் சமூகமே மனித குலத்திற்கு அவலத்தை தந்த ஒரு இனமாகவே மற்றவர்களால் பார்க்கப்படும்!

மாவீரர்களை நினைவுகூருவோம்!!!
அவர்களைக் கொச்சைப்படுத்தாமல்!

மெளலவி ஆசிரியர் நியமன போட்டி பரீட்சை அடுத்த வாரம்

மெளலவி ஆசிரியர் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை, அடுத்தவாரம் கொழும் பில் நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி கூறினார்.  போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (1) : வாசு (முன்னாள் போராளி)

Maaveerar_Illamகாரத்திகை 27 மாவீரர் நாள்! புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த புலி வீரர்களை மட்டும் நினைவு கூரும் நாள்! தம் சுயநலம் பாராது பொது நலனுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த இந்த மனிதங்களை நினைவு கூர வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. இயக்க வேறுபாடுகளை மறந்து இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த மறவர்கள் காலா காலத்திற்கு வணங்கப்பட வேண்டியவர்கள். மறுக்கப்பட முடியாத உண்மை.
ஆனால் கடந்த மே மாத நிகழ்வுகள் அதன் பின்னான அரசியல் மாற்றங்கள், அதற்கு முன்னான விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் செயற்பாடுகள் அனைத்தும் இந்த மாவீரர்களின் வீர மரண நியாயத்தை ஒரு அநியாயமான மரணமாக மாற்றி விட்டது என்பது சகிக்க முடியாத உண்மை. இன்று இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களின் வெறுப்பை விடுதலைப் புலிகள் சம்பாதித்துள்ளனர். வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் மெல்ல மெல்ல புலிகளின் பாசிச போக்கை உணர ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் புலிகள் இயக்கத்தில் இணைந்த 99 வீதமான போராளிகள் தேச விடுதலை என்ற ஒரு நோக்கோடுதான் அந்த அமைப்பில் இணைந்தார்கள். பலர் பலவந்தமாக இணைக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த போராளிகள் அனைவரும் புலிகள் அமைப்பின் இருப்பை காக்கவே பலி கொடுக்கப்பட்டார்கள் என்ற உண்மையை இன்று நாம் வெளிப்படையாக காண முடிகிறது. முள்ளிவாய்கால் முற்றுகைக்கு முன் புலிகளின் பாரிய தாக்குதலை புதுக்குடியிருப்பில் இராணுவம் முறியடித்தததை நாம் அறிவோம். அந்த தாக்குதலில் புலிகளின் அதி சிறந்த பல தளபதிகள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான போராளிகள் அவர்களுடன் கொல்லப்பட்டார்கள். இவர்களை அனைவரும் கொல்லப்பட்டது தனி ஒரு மனிதனை காப்பாற்றவே! பிரபாகரன் என்ற ஒரு மனிதனை காக்க புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட 500 போராளிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பின்னர் பிரபாகரனிடம் சென்ற பொட்டு ‘நாங்கள் இங்கையிருந்தால் எல்லாரும் கொல்லப்படுவோம், உடைத்துக்கொண்டு வெளியேறுவோம்’ என்று கூற இந்த சமயத்திலும் பிரபாகரன் ‘இஞ்சை பாராடா பொட்டுவுக்கு மரண பயம் வந்திட்டது’ என்று அங்கு கூடியிருந்த சகபோராளிகளிடம் நக்கலடித்தார். இறந்த தளபதிகளின் பெயர்களை வெளியிட மறுத்ததுடன் ஏனைய போராளிகளை காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுக்க அவர் முனையவில்லை. மாறாக மேலும் பல போராளிகளை பலி கொடுக்கவும் மக்களை ஆயிரக்கணக்கில் பலிக்கடாக்கள் ஆக்கி வெளிநாடுகளில் இருந்து ஒரு அனுதாப அலையை பெறவே முழுமையாக முயற்சித்தார். இதன் விளைவு மக்கள் கூடியிருந்த இடங்களில் இருந்து வலிந்து தாக்கி அந்த இடங்களை இராணுவத்தின் குறிகள் ஆக்குவது.

மக்களும் போராளிகளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதும் சரணடையவோ அல்லது தப்பி செல்லவோ பிரபாகரன் முயற்சிக்கவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் முற்றுகையில் தனது புத்திர செல்வம் காயமுற்றதும் பதைபதைத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடேசன் மூலம் இராணுவத்திடம் உடனடியாக சரணடைய உத்தரவிட்டார். பிரபாகரனை ஒரு மிகமோசமான சுயநலவாதி  என்பதை அன்றுதான் பல புலிப் போராளிகள் உணர்ந்தார்கள். ஏற்கனவே தலைமையை காப்பாற்ற இவ்வளவு அழிவு வேண்டுமா என பல போராளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்கள். இதன் உச்சக்கட்டம் பானுவை போட்டுத்தள்ள தலைவர் பிறப்பித்த உத்தரவு பல அதிர்வலைகளை புலிகள் மத்தியில் உருவாக்கியது.

இறுதிக் காலத்திலும் தனது பாசிச குணத்தை பிரபாகரன் விடவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியது. ஆரம்ப காலங்களில் மைக்கல் என்ற விடுதலை புலி உறுப்பினரை தனது சொந்த நலனுக்காக பாயில் வைத்து சுட்டுக்கொன்ற பிரபாகரன் இறுதியில் அதேவிதமாக தன் மரணத்தை தழுவினார். பிரபாகரன் மரணம் பற்றி பல விதமான கதைகள் வந்தாலும் நான் நம்பகரமாக கேள்வியுற்றது இவரின் மெய்பாதுகாலரே இவரை போட்டுத் தள்ளியதாக! இரவு நந்தி கடலை கடக்க முயற்சிசெய்து அது முடியாது போக சற்று ஓய்வெடுத்த பிரபாகரனை அவரின் மெய்பாதுகாவலர்கள் திட்டமிட்டு நெற்றிப்பொட்டில் சுட்டுவிட்டு நந்திக் கடலில் தூக்கி போட்ட பின் அந்த பாதுகாவலர்கள் பின்னர் இறந்தவர்கள் போல் பாசாங்கு செய்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தகவல்களை வன்னியில் இருந்து தப்பி சென்ற புலிகளின் முக்கியமான ஒரு தளபதியின் துணைவியார் உறுதிப்படுத்தினார். 

தனது சொந்த நலனுக்காக தனது போராளிகளை மாவீரர்கள் ஆக்கிய பின்னர் அவர்களை  வணங்கும் பிரபாகரன் தனது இயக்கத்தின் முதலாவது போராளி இறந்த தினத்தை மாவீரர் தினமாக பிரகடனம் செய்தார். இந்த மாவீரர் தினம் பின்னர் மாவீரர் வாரமாக ஒரு வாரம் அனுட்டிக்கப்பட்டு கார்திகை 27இல் உலகெங்கும் மாவீரர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. தாயகத்தில் இந்த நாட்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் புலம்பெயர் நாடுகளில் இது பணம் கறக்கும் சடங்காகவே மாற்றப்பட்டது. 2002 இற்கு பின்னர் புலிகளின் தொழில் நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கையில் பிரபாகரனின் கொள்கை விளக்க உரையை நேரடியாக ஒலிபரப்பும் ஒரு விழாவாக இது மாற்றப்பட்டது.

லண்டனில் நடைபெறும் மாவீரர் நிகழ்வில் வாசலில் ஒரு கார்திகை பூ ஐந்து பவுண்களுக்கு விற்பார்கள். பிறகு உள்ளே வரிசையாக கோயில் திருவிழா வியாபாரிகள் போல் உதவியாளர்கள் பலர் புலி விளம்பர பொருட்களை விற்பார்கள். இதில் புலி சின்ன கோப்பையிலிருந்து புலிச்சின்ன துவாய், புலிச்சின்ன குடை, போன்ற பொருட்களை மக்களிடம் திணிப்பதுடன் மறுபுறத்தில் கொத்துறொட்டி முதல் கொக்கோகோலாவை 3 மடங்கு விலையில் மக்களிடம் விற்பார்கள். ஆக இறந்த மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளையும் புலிகளின் தலைமை தனது இயக்கத்தை சந்தைப்படுத்தும் நாளாக மாற்றியது.

இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு ஐந்து மாதமாகிறது. புலிகளின் தலைவர் இருக்கிறார் இல்லை என்று முட்டாள் தனமான ஒரு விவாதத்துடன் இருக்கும் புலம்பெயர் புலி உறுப்பினர்கள் மீண்டும் கார்த்திகை 27ஐ விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். பாரிய செலவில் லண்டனில் ஒரு பெரிய மண்டபம் இந்த முறையும் இதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி திரட்டலுக்கு மாவீரர் தின ரிக்கற்றுகள் புலிகளின் லண்டன் உறுப்பினர்களால் தற்போது விற்கப்பட்டு வருகிறது. ரிக்கற் அனுமதி பத்திரமா அல்லது செலவிற்கான நன்கொடையா என்று தெரியவில்லை.

வன்னியில் தம் வாழ்விடங்களில் இருந்து மந்தைகள் போல் மிரட்டி தமது பாதுகாப்பிற்காக பிரபாகரானல் கடத்திச் செல்லப்பட்ட மக்கள் கூட்டம் இன்று அரச தடுப்பு முகாம்களில் அவல வாழ்வை எதிர் கொள்ளும் இந்த நேரத்திலும் இந்த புலிகள் மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாட மக்களிடம் ரிக்கற்றுகளை விற்பது மிகவும் கேவலமானது! இந்த புலம்பெயர் புலிகள் வன்னி இறுதி யுத்தத்திற்காக எனக்கு தெரிந்த பல நண்பர்களிடம் கெஞ்சி கூத்தாடி பின்னர் மிரட்டி  கடந்த மே மாதம் கூட ஆயிரக்கணக்கான பவுன்ஸை புடுங்கினார்கள். இந்த காசு அங்கு போய் சேர முன்பே தலைவர் போய்ச் சேர்ந்து விட்டார். காசை கமுக்காமாக அடித்த புலிப் பிரதிநிதிகள் இப்ப தலைமறைவு! ஆனால் இப்ப புதிதாக சில முகங்கள்  மாவீரர் தின நிதிப்புடுங்கலுக்காக புலம்பெயர் புலித் தலைமையினால் வீடுகள்தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் மக்கள் மௌனமாக பார்த்துக்கொண்டு பணத்தை மீண்டும் இந்த பினாமிகளிடம் கையளிப்பது வன்னியில் தடுப்பு முகாம்களில் இருக்கும் அனைத்து மக்களிற்கும் செய்யும் மிக மோசமான துரோகம்! இதை விட மிக மேசமான துரோகம் காரத்திகை 27ஐ மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாடுவது!

மாவீர்கள் என்றால் யார்? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்? – கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (2) : வாசு

டெஸ்ட் போட்டிக்கு ஆபத்து – கங்குலி

ganguly.jpgஇலங்கை- இந்தியா முதல் டெஸ்ட் போட்டி முடிவு குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருப்பதாவது:- ஆமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தின் போக்கை கவனித்தால் இந்த மைதானத்தில் ஆடுகளம் சரி இல்லாமல் இருந்ததை காட்டுகிறது.

டெஸ்ட் போட்டிக்கு தகுந்த மாதிரி ஆடுகளம் அமைக்கப்படவில்லை. இதனால் தான் இப்படி போட்டியின் போக்கு மாறியது.  பொதுவாக இந்திய மைதானங்களில் சிவப்பு மண் இருக்கும். இதில் அமைக்கும் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக எகிறி சுழலும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்.

ஆனால் ஆமதாபாத் மைதானம் சுழற்பந்துக்கு ஏற்றார்போல இல்லை. எனவே பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டியின் நிலைமை வேறு மாதிரி அமைந்து விட்டது.

போட்டியின் முடிவு தெரிந்தால்தான் அது ரசிகர்களை ஈர்க்கும். 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி மவுசு அதிகரித்து வரும் இந்த வேளையில் இது போன்று டெஸ்ட் போட்டி முடிவுகள் இருந்தால் டெஸ்ட் போட்டிக்கே ஆபத்தாகி விடும்.  இவ்வாறு அவர் கூறினார்.

வவுனியா தமிழருக்கு நாம் தீண்டத்தகாதவர்கள்; முகாமிலிருந்து வெளியேறிய பெண்ணின் சாட்சியம்: ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

Realesed from camps and reached to Vavuniyaகிளிநொச்சியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தினர் முகாம் வாழ்க்கையின் பின்னர் அங்கிருந்து வெளியேறி வவுனியாவிற்கு இம்மாதம் 5ம் திகதி வந்துள்ளனர். கிளிநொச்சியில் தமது உயர்தர வகுப்புப் படிக்கும் இரு பிள்ளைகளையும் புலிகளிடமிருந்து பாதுகாக்கப் போராடி, பின்னர் செல்லடிக்குள் உயிர் தப்பினால் போதுமென போராடி, மாசி மாதத்தில் ஒரு பிள்ளையைப் பிரிந்த நிலையில் இவர்கள் முகாமிற்கு வந்தனர். ஒரு மாதத்தின் பின்னர் மற்றைய பிள்ளையை உறவினர்களுடன் சந்தித்த போதிலும் அவர்களின் மகன் புலிகளின் வலுக்கட்டாய பயிற்சியில் 10, 15 நாட்கள் அகப்பட்டதால் தற்போது நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் 2006ம் ஆண்டின் பின்னர் புலிகளால் கட்டாயப் பயிற்சிக்கு உட்படுத்தப் பட்டவர்களை ஒரு வருடத்தின்பின் தாம் விடுவிப்போம் எனக் கூறியுள்ளனர் எனவும் அவர் சொன்னார்.

தம்முன்னால் மகன் புலிகளால் இழுத்துச் செல்வதை கண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்ட கணவருடனும் மற்றைய பிள்ளையுடனும் முகாமினுள் அடுத்த போராட்ட வாழ்வை வாழ்ந்தார்கள். வெய்யில் என்றால் இருக்க முடியாத வெக்கை, மழை என்றால் ஈரம் ஊறும் நிலத்தில் பொலித்தீன் துணையுடன் படுக்கை, விடியமுதல் வரும் இலையான்கள், அட்டைகள் பாம்புகள் சுண்டெலிகள் இவற்றுடனும் ஒரு போராட்டம். தற்போது இவற்றைத் தாண்டி வவுனியா வந்தபோதும் தமது போராட்டம் ஓயவில்லை எனக்கலங்கினார்.

தாம் வவுனியாவில் எதிர்நோக்கும் வேதனைகளையும் எப்போது கிளிநொச்சி போவோம் எனகாத்திருப்பதன் காரணங்களையும் எம்முடன் உரையாடுகையில் வெளிப்படுத்தினார்.

நாம் வவுனியாவுக்குப் பதிவுசெய்து ஒருமாதிரி முகாமைவிட்டு வெளியேறிவிட்டோம். இங்கு வந்தால் நாங்கள் கிளிநொச்சிக்காரர் முகாம்காரர் அகதிகள் என்று வவுனியா மக்களுக்கு எங்களில் ஒரு கீழ்த்தரமான எண்ணம். முகாம்காரர் என்றால் ஏதோ குப்பைகள் கூளங்கள் என்றமாதிரி தாழ்வான எண்ணங்கள். எங்களோடு ஒட்டமாட்டினம்.

பள்ளிக்கூடம் போனால் முகாம்பிள்ளை என்று சுட்டிக் காட்டப்படுகிறார்கள். வித்தியாசமாய் நடத்துகிறார்கள். நாங்கள் அனுபவித்தமாதிரி வவுனியா மக்கள் அனுபவிக்கவில்லை. எங்களுக்கு இது சரியான தாக்கமாய் இருக்கிறது. எல்லாம் இழந்து வந்திருக்கிற எங்களை இவர்கள், வேறொங்கோ உலகத்திலிருந்து வந்த தீண்டத்தகாத ஆட்கள் மாதிரி நடத்துகிறார்கள்.

குடியிருக்க வீடு பார்க்கப் போனால் ஒரு இன்ரவியூவே நடத்துவினம். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன வயது. பிள்ளைகள் எங்கே. ஒருபிள்ளை நலன்புரி முகாமில் இருக்கிறதென்று சொன்னாலும் பிரச்சினை. வீடு தரமாட்டாங்கள் என்ற பயம். சொல்லாவிட்டாலும் என்ன நடக்குமோ என்ற பயம். என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். வசதியாக இருந்தவர்கள் என்று சொன்னால் வாடகை கூடக் கேட்பாங்களோ என்ற பயம். வசதி குறைந்தவர்கள் என்று சொன்னால் வீடு தரமாட்டார்களோ என்ற பயம். நேற்று முழுக்க வீடு பார்க்கப்போய் ஒவ்வொரு விதமான ஆட்களை சந்தித்து வந்தோம். ஜந்தாம் திகதி வந்தோம் இன்னும் ( Nov 18ம் திகதி) வீடு எடுக்க முடியாமல் அலைகிறோம்.

இரண்டு அறைகள் கொண்ட ஒரு மண்குடிசையில் ஒரு அறையில் நான்கு குடும்பம் இருக்கிறோம். இந்த வீட்டில் இருப்பவர்கள் எமக்கு உறவானவர்கள். எமக்கு சில மாதங்கள் முன்பாக வெளியேறினவர்கள். அட்வானஸ் றென்ட் என்று வீட்டுக்காரர் வாங்குவார்கள் ஆனால் மழைக்கு எல்லாப் பக்கத்தாலும் ஒழுக்கு ஒன்றும் செய்து தரமாட்டார்கள். எல்லாம் நாமே பார்த்துக்கொள்ள வேணும். புதிதாக ஒரு தட்டிகூட இறக்க விடமாட்டார்கள். நாங்கள் எவ்வளவு காலம் இருக்கலாம் என்று எதுவும் சொல்ல மாட்டினம் இருந்தாப்போல் எழும்பச் சொன்னால் எழும்ப வேணும் இதில் எதை நம்பி எந்தப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பது என்றும் யோசிக்க வேணும்.

ஆஸ்பத்திரிக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. கடைக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. எங்கை போனாலும் கிளிநொச்சிகாரரோ முகாம்காரரோ அகதிகளோ என்று தாழ்வான எண்ணங்களே.

இடம்பெயர்ந்து வந்தனாங்கள் கையில் ஒன்றும் இல்லாமல் வந்தனாங்கள் இங்கையெண்டாலும் பிள்ளைகளைப் படிப்பிப்பம் என்று போனால் ‘என்ன சீருடை இல்லாமல் வாறீங்கள்’ என்று கேள்வி. பிள்ளைகளுக்கு ரெஸ்ட் வைத்துத்தான் எடுப்பார்கள். 3ம் வகுப்புப் பிள்ளைக்கும் தேவாரம் பாடச்சொல்லி வாய்பாடு கேட்டார்கள். பாஸ் என்றால்தான் சேர்ப்பார்கள். பெயில் விட்ட பிள்ளையென்றால் எங்கு போகுமோ எனக்குத் தெரியாது. பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம் என்று அங்கு போனால் ‘என்ன நீங்கள் நிறச்சட்டை போட்டுக்கொண்டு வந்திருக்கிறீங்கள்? என்ன ஒண்டும் தெரியாதனீங்களே வன்னியில் இருந்தனீங்கள். யூனிபோம் போடவேணுமெண்டு தெரியாதோ?’ என்று கேள்வி. ஆசிரியர்கள் அதிபர் இவர்கள் எல்லாம் படித்தவர்கள் பண்பானவர்கள் நாட்டுநிலைமை தெரிந்தவர்கள் இந்தப் பிள்ளைகள் எந்தச் சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் என்று யோசிக்கவில்லைத்தானே. அன்பாக என்றாலும் அவர்களை வரவேற்று கைகுடுக்கத் தெரியவில்லை. டீசன்ட் டிசுப்பிளின் தெரியாதவர்களா இவர்கள்.

வவுனியாவில் பள்ளிக்கூடங்களிலும் வசதிகள் குறைவு. முகாமில் இருந்த படிப்பு இங்கு இல்லை. முகாமினுள் அங்கிருந்து வந்த ரீச்சர்மாரே படிப்பித்தாங்கள். மேசை கதிரை கூட இல்லை. ஒருசில பிள்ளைகளுக்குத்தான் மேசை கதிரை இருந்தது. பிள்ளைகள் நிலத்தில் இருந்து மடியில் வைத்து எழுதுவாங்கள். இருந்த வீடுகளுக்கு லைட் இல்லை. பிள்ளைகள் றோட்டு லைட் வெளிச்சத்தில்தான் படிப்பார்கள். றோட்டு லைட்டுக்கு கீழே பாயைப் போட்டுவிட்டு மடியில் புத்தகங்களை வைச்சுப் படிப்பாங்கள். ஏதோ அந்த நிலைமைகளுக்கேத்த மாதிரி உணர்ந்து அவங்களும் இருந்தாங்கள். இங்கை பள்ளிக்கூடத்திலும் முகாம் பிள்ளையைப் பாருங்கோ நல்லாசெய்யுது என்று மற்றப் பிள்ளைகளுக்கு ரீச்சர் சொன்னாவாம்.

எதற்கும் முகாம் பிள்ளை முகாம்பிள்ளை என்று பிரித்துத்தான் பார்ப்பார்கள். ஒருக்கா உழுக்குளம் பாடசாலையில் ஒரு பிள்ளைக்கு குளவி கடித்து விதையொன்று வீங்கிவிட்டது. பிள்ளைக்கு அதில் ஒப்பறேசனும் செய்த இடம். ரீச்சரிடம் பிள்ளை போய் தனக்கு இப்பிடி என்று சொல்ல அவ அதிபரிடம் அனுப்பிவிட்டா. அதிபர் இன்னும் ரெண்டு பிள்ளைகளைப் பிடித்து அவர்களுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பிள்ளைக்கு எங்கை நோகுது என்ன நடந்தது என்று ஒருத்தரும் பார்க்கவேயில்லை. இன்னொரு பிள்ளைக்கு கிபீர் சத்தம் கேட்டாலே மயக்கம் வரும். ஒருக்கா கிபீர் வருகுதென்று ஓடிப்போய் ஒழிக்கையில் பிள்ளையின் தலையில் அடிபட்டுவிட்டது. பிள்ளைக்கு கை கால் குளிர்ந்து மயங்கி ஒருமாதிரி வந்து மருந்தெடுத்தது. சில நேரங்களில் அவனுக்கு ஒருமாதிரி வரும். நல்லாய் படிக்கக்கூடிய பிள்ளை. அந்தப் பிள்ளையின் பிரச்சினை என்னவென்று தெரியாமல் அவனை பழக்கவழக்கம் தெரியாத பிள்ளை என்று பேசியிருக்கினம். எங்கடை பிள்ளைகளை எப்பவும் தாழ்வாய்த்தான் நடத்துவினம். சரியான கவலையாக இருக்குது. முகாமிலை தண்ணியதுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை முகாமிலேயே இருந்திருக்கலாம். வெளியாலை வந்து வவுனியாச் சனங்களோடை துன்பப்படுவது பெருங் கவலையாக இருக்கிறது.

நாங்கள் இங்கை படுகிறபாடு நீங்கள் இங்கை வந்து பார்த்தால்தான் தெரியும். என்னென்ன கஷ்டங்கள் எல்லாம் அனுபவிக்கிறம். என்ன வாழ்க்கையோ. புலிகளின் கட்டாயப் பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட எமது குழந்தைகள் இப்போது புலிப்பட்டம் சூட்டப்பட்டு உள்ளுக்கிருக்கினம். பொதுமக்கள் எங்களுக்கு அகதிப்பட்டமும் கம்பிவேலி வாழ்க்கையும். வவுனியா தமிழருக்கு நாம் தீண்டத்தகாதவர்கள். நாங்கள் வீடுவாசல் சொத்து சுகம் பிள்ளைகள் படிப்பு எதிர்காலம் எல்லாத்தையும் இழந்து போதாதற்கு வவுனியாவில் மரியாதையும் இழந்து நிக்கிறோம். முகாம் போன ஆட்கள் எல்லாம் பயிற்சி எடுத்த ஆட்கள் என்று பார்க்கினமோ என்னத்தை நினைத்துக்கொண்டு எங்களை இப்படி நடத்துகிறார்களோ தெரியவில்லை. இங்கையிருந்தும் ஒரு இடம்பெயர்வு வரும் என்றுதான் நான் நம்புகிறேன்.

இங்கு காசுக்குத்தான் முதலிடம். வன்னிக்குள் உறவினர்களுடன் நாங்கள் எப்பிடி வாழ்ந்தம். வன்னிக்குள் இருந்த எல்லாரும் ஒன்றாய்தான் இடம்பெயர்ந்து வந்தனாங்கள். ஆனால் இங்கை வந்து பார்த்தால் சொந்தக்காரரோ தள்ளி நிக்கிறாங்கள். வன்னிக்காரரோடை அண்டினால் பிரச்சினையாம். வீடுவாசல் கொடுப்பதற்குப் பஞ்சிப்படுகினம். சில சொந்தங்களுக்கு போன் பண்ணினால் எடுக்கிறாங்களேயில்லை. உங்களையெல்லாம் வைச்சிருந்து விட்டு பிறகு கோட்டு வழக்கு பொலிஸ் என்று நாங்கள் அலைய ஏலாது என்று சிலர் சொன்னார்கள். சொந்தங்களை வைத்திருந்தால் தமக்கு பொறுப்பு செலவு என்று வந்துவிடும் என்றும் யோசிக்கிறார்கள் போலிருக்குது. முகாமுக்குள் இருந்தவர்களை சொந்தச் சகோதரமே வந்து பார்ககாமலும் இருந்திருக்கினம். பிறகு தமக்கு ஏதும் தொல்லை வந்திடுமோ என்ற பயம். எனது தம்பி குடும்பம் முகாமில் இருக்கிறார்கள் அவர்களைப் பார்க்கப் போனபோது இங்கு நாங்கள் படுகிற கஷ்டம் எல்லாத்தையும் சொன்னோம். அங்கிருந்த அதிபர் ஒருவரையும் சந்தித்து கதைத்தேன். வவுனியா வந்து அடிமை வாழ்க்கை வாழுவதைவிட இங்கேயே இருந்துவிட்டு நாம் நேரடியாக கிளிநொச்சிக்கே போவோம் என்று முடிவெடுத்துள்ளார்கள். இந்த 54 வயதில் எதுவுமில்லாமல் வந்து இனிமேல்தான் புதிதாக எல்லாத்தையும் ஆரம்பிக்கவிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்றார்.

‘கிளிநொச்சி போக விடுகிறாங்களில்லை. ஏன் என்றும் தெரியாது. நாங்கள் எல்லோரும் எப்பிடி ஒன்றாய்ச் சேர்ந்து புலிகளை மீறி இராணுவத்திடம் வந்து சேர்ந்தோமோ எப்படி உந்த செல்லடி குண்டடிக்குள்ளால அடிபிடிக்குள்ளால் வெளியே வந்தோமோ அதேமாதிரி இனி வவுனியாவிலிருந்து நாங்கள் எல்லோருமாக சேர்ந்து உந்த முள்ளுவேலி இராணுவத்தை தள்ளிப்போட்டு கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போவதுதான் ஒரே வழி போலுள்ளது’ என வேகத்துடன் சொன்னார்.

குடும்ப வன்முறையும் சமூகத் தனிமைப்படுத்தலும் தாயையே குழந்தைகளைக் கொல்வதை நோக்கித் தள்ளியது நீதிபதி பிரைன் பாக்கர் :

Sanjayan NavaneethanSarani Navaneethanகுடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல்’ போன்ற காரணங்களே சசிகலா நவநீதன் தனது குழந்தைகளைக் கொலை செய்வதை நோக்கித் தள்ளியதாக வழக்கின் நீதிபதி பிரைன் பார்க்கர் தெரிவித்துள்ளார். ‘இது மிகவும் மனவருத்தமான கொடுமையான நிகழ்வு’ என்று தெரிவித்த நீதிபதி, ‘நீர் அந்த நேரத்தில் நீரும் உமது குழந்தைகளும் இறப்பதே மேல் என்று நம்பி உள்ளீர்கள். நீர் குடும்ப வருமானம், ஒழுக்கமற்ற உறுவு, குடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை கவனத்தில் எடுத்தள்ளீர். உம்முடைய மனக் குழப்பமும், நீர் எடுத்த நடவடிக்கையும் வெளியில் உள்ள ஒருவருக்கு விளங்கிக் கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார். தாய்மைக்கால மன உளைச்சலால் தனது குழந்தைகளைக் கொலை செய்த சசிகலா நவநீதனின் வழக்கில் தீர்ப்பளிக்கையில் நீதிபதி அவ்வாறு தெரிவித்தார். காலவரையறையற்று சசிகலா நவநீதன் மனநோயாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடன்பட்டு உள்ளார்.

‘என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்’ தாய்மைக்கால மனஉளைச்சல் காரணமாக தன்னிரு குழந்தைகளினதும் தொண்டையில் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த தாய் சசிகலா நவநீதன் கதறினார். தான் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறிய அவர் தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு பொலிசாரை மன்றாடினார். சசிகலா நவநீதன் தனது குழந்தைகளான சன்ஞயன் (5), சாராணி (4), ரிசானா (6 மாதம்) ஆகிய தன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தார். அதில் சன்ஞயன், சாரணி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் லண்டன் புறநகர்ப் பகுதியான கார்ஸ்கால்ரன் என்ற இடத்தில் இருந்த அவர்களின் வீட்டில் சென்றவருடம் மே 30ல் இடம்பெற்றது.

மருத்துவர்களின் போராட்டத்தின் பின் ரிசானா உயிர் தப்பினார். ரிசானாவும் ஜனவரியில் நவநீதன் சசிகலாவின் நான்காவது குழந்தையும் அவர்களுடைய தந்தை நவராஜா நவநீதனுடன் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

20 யூலையில் ஓல்ட் பெயிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சசிகலா நவநீதன், சொந்தமாகக் கடை வைத்திருந்து அதில் பணியாற்றிய கணவர் நவராஜா நவநீதன் திருமணத்திற்குப் புறம்பான உறவை வைத்திருந்தார் என்றும் தன்னை அடிப்பதாகவும் தனது தலையில் ஒலித்த யாருடையதோ குரல்கள் அதனை தான் நம்பும்படி உணத்தியதாகவும் தெரிவித்தார்.

சன்ஞயன் சாரணி ஆகியோரின் கொலைகளை புரிந்ததாகவும் ஆனால் தன்னுணர்விற்கு அப்பாற்பட்டு (diminished responsibility) நடந்ததாகவும் ரிசானா மீதான கொலை முயற்சியையும் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இடம்பெற்றதற்கு ஒரு மாதத்திற்கு முன்னிருந்து குழந்தைகளைக் கொலை செய்யும்படியாக அந்தக் குரல்கள் தனது தலையில் ஒலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த சசிகலா சம்பவதினமும் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தாகவும் அன்று தான் அந்தக் குரல்கள் கூறியபடி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Funeral_of_the_Childrenசசிகலா சார்பில் ஆஜரான கியூசி டேவிட் எதரிங்ரன், ‘சசிகலா தனது காலாச்சார காரணங்களுக்காக தனக்கு ஏற்பட்ட உடற்காயங்களை மருத்துவருக்கு காட்டினார். ஆனால் தனது மனநிலையை வெளிப்படுத்தவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தனது வாழ்க்கையில் இனிமேல் எவ்வித அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த சசிகலா தனது குழந்தைகளை தனது கணவனுடன் விட்டுச் செல்லவும் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். ‘தற்போது அவர் தான் மிகப் பயங்கரமான விடயத்தைச் செய்திருப்பதை அறிய வந்துள்ளது. அவர் அப்போதும் மிக நோயாளியாக இருந்தார். இப்போதும் அவர் மிகவும் நோயாளியாகவே உள்ளார்’ என கியூசி டேவிட் எடிங்ரன் நீதிமன்றில் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி நவநீதன் பொலிஸாருக்கு அவசர அழைப்பை விடுத்தார். தனது மனைவி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். பொலிஸார் வந்ததும் நவநீதன் மனைவி கொலைக்குப் பயன்படுத்திய கத்திகளை கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். வீட்டைச் சோதணையிட்ட பொலிஸார் கட்டில் மெத்தைக்குக் கீழிருந்த 3 கத்திகளையும் ஒரு கடிதத்தையும் நவநீதன் சசிகலாவிற்கு தங்கள் திருமணத்தின் ஞாபகார்த்தமாக வழங்கிய நெக்லஸையும் கண்டெடுத்தனர்.

அக்கடிதத்தில் நவநீதனுக்கு ‘திருமணத்திற்குப் புறம்பாக இரு உறவுகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்ததுடன் ‘நான் கண்ணீர் வர அழுது புலம்புகின்றேன்’, ‘உதவிக்கு யாரும் இல்லை’, ‘நாங்கள் எல்லோரும் இறப்பதே நல்லது’ போன்ற வரிகள் இருந்தது.

பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் தனக்கு வாழ விருப்பமில்லை தன்னை கொலை செய்யுமாறு சசிகலா பொலிஸாரைக் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்யும் முயற்சியில் எலிகளைக் கொல்வதற்கு வைக்கின்ற மாத்திரைகளை தான் உட்கொண்டாதகவும் சசிகலா பொலிஸாருக்கு தெரிவித்து இருந்தார்.

1999ல் இங்கிலாந்து வந்த சசிகலாவை இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தமும் பாதித்து இருந்தது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு யுத்தம் தொடர்பான கெட்ட கனவுகள் வந்து போயிருந்ததாகவும் பழைய சம்பவங்கள் மீண்டும் வந்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது.

சசிகலாவை பரிசோதணை செய்த மூன்று மருத்துவர்களும் அவர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர்.

Rita Ariyaratnam with her childrenஇச்சம்பவத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சம்பவத்திலும் தனது குழந்தைளுடன் தற்கொலை செய்ய முற்பட்ட தாய் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டார். குழந்தைகள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த இளம்தாயொருவர் தனது கணவனது இறப்பைத் தாங்க முடியாமல் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இச்சம்பவத்தில் பிள்ளைகள் உயிரிழந்தனர். தாய் காப்பாற்றப்பட்டார்.

இந்தியா, இலங்கை முதல் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

20112009.jpgஇலங் கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரும் இக்கட்டான நிலையில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா கடுமையாகப் போராடி வெற்றி தோல்வியின்றி  முடித்து விட்டது.

இன்று சச்சின் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் 30,000 ஓட்டங்களைக் கடந்து அவர் புதிய சாதனை படைத்தார். தனது 20வது வருட கிரிக்கெட் வாழ்க்கையை புதிய சாதனையுடன் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இன்று சச்சின் பெற்றது 43வது டெஸ்ட் சதமாகும்.

இப்போட்டியில் முக்கிய நிகழ்வுகளாவன.

– மொத்தம் 6 பேர் சதம் அடித்தனர். டிராவிட் (177), டோணி (110), தில்ஷான் (112), பிரசன்னா ஜெயவர்த்தனே (154), கெளதம் கம்பீர் (114), சச்சின் (100).

– மஹேல ஜெயவர்த்தனா இரட்டை சதம் எடுத்தார்.

– சச்சின் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் 30 ஆயிரம்  ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார்.

– 72 ஆண்டு காலமாக இருந்து வந்த 6வது விக்கெட் இணைப்பட்ட சாதனையை ஜெயவர்த்தனாவும், பிரசன்னா ஜெயவர்த்தனாவும் முறியடித்தனர்.

– மஹேல ஜெயவர்த்தனா டெஸ்ட் போட்டிகளில் 9000 ஓட்டங்களைக் கடந்தார்.

India 426 & 412/4 (129.0 ov)
Sri Lanka 760/7d
India 2nd innings 

G Gambhir  c Prasad b Herath  114 
V Sehwag  c Mathews b Herath  51
R Dravid  lbw b Welegedara  38
A Mishra  c Dilshan b Mathews  24 
SR Tendulkar  not out  100  
 VVS Laxman  not out  51  
 Extras (b 12, lb 9, w 2, nb 11) 34     
      
Total (4 wickets; 129 overs) 412 (3.19 runs per over)
Did not bat Yuvraj Singh, MS Dhoni*†, Harbhajan Singh, Z Khan, I Sharma 
Fall of wickets1-81 (Sehwag, 16.6 ov), 2-169 (Dravid, 40.1 ov), 3-209 (Mishra, 55.6 ov), 4-275 (Gambhir, 79.6 ov) 
        
 Bowling
 UWMBCA Welegedara 21 1 76 1
 KTGD Prasad 13 0 56 0  
 HMRKB Herath 40 6 97 2
M Muralitharan 38 6 124 0  
AD Mathews 15 6 29 1
 TM Dilshan 1 0 2 0 
 NT Paranavitana 1 0 7 0

Match details
Toss India, who chose to bat
Series 3-match series level 0-0
Player of the match DPMD Jayawardene (Sri Lanka)
 Umpires DJ Harper (Australia) and AL Hill (New Zealand)
TV umpire AM Saheba
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire SD Ranade

மஹேல – பிரசன்ன உலக சாதனை;

mahela_prasanna.jpgஅகமதா பாத் டெஸ்டில் இலங்கை அணியின் 6வது விக்கெட்டான மஹேல – பிரசன்னா ஜயவர்தன ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. இந்த ஜோடி 351 ஓட்டம் குவித்தது. இதன் மூலம் 72 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது. இதற்கு முன்பு 1937ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பிங்கின்டன் – பிராட்மேன் ஜோடி 346 ஓட்டம் குவித்ததே சாதனையாக இருந்தது.

mahela-jayawardene.jpgமஹேல 275 ஓட்டங்களை குவித்து இந்தியாவுக்கு எதிராக சாதனை புரிந்தார். இதற்கு முன்பு 1999ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக 242 ஓட்டம் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 2வது அதிகபட்ச எண்ணிக்கை எடுத்தது. 1997ம் ஆண்டு அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 952 ஓட்டம் குவித்து இருந்தது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட துடுப் பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 ஆயிரம் ஓட்டங்களைத் தாண்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை தட்டிக் கொண்டார்.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்திய அணி சார்பாக காம்பீர் ஆட்ட மிழக்காமல் 74 ஓட்டங்களுடனும் மிஸ்ரா ஆட்ட மிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடினர்.

இதேவேளை ஷெவாக் 51 ஓட்டங்களுடன் டிராவிட் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து சென்றனர். பந்து வீச்சில் வெலகெதர, ஹேரத் தலா ஒரு விக்கெட்டை யும் வீழ்த்தினர். இன்று 5வது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்திவைப்பு

janka.jpgஉள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். 2010ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு பிரதான தேர்தல்கள் நடாத்தப் படவிருப்பதால்தான் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலும் நடாத்தப்படவுள்ளது. அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையவிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இரண்டு பிரதான தேர்தல்கள் எப்ரல் மாதத்திற்குள் நடைபெறவிருப்பதால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பதற்கு முடிவு செய்துள்ளேன். இது விடயமாக கலந்துரையாடி வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு இறுதியாக 2005ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடாத்தப்பட்டது. அதன்படியே 2010ம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவடைகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டப்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரு வருட காலத்திற்கு ஒத்திவைக்க அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.

உருப்படுமா இந்த யாழ் இனவாதச் சிந்தனை? : யூட் ரட்ணசிங்கம்

Palmyra_Treeyarl_instrumentதமிழரசுக் கட்சியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தொட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் இராணுவப் பிரிவான விடுதலைப் புலிகள் வரை அத்தனையும் யாழ் இனவாதச் சிந்தனையின் பிரதிபலிப்பாகவே இருந்திருக்கிறது. கடந்த 60 ஆண்டுகாலம் சிங்கள இனவாத அரசில் சிக்குண்டு தமிழ்பேசும் மக்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்களோ அதேயளவு கொடுமைகளையும் வெட்டியோட்டங்களையும் யாழ் இனவாதச் சிந்தனையில் சிக்குண்ட மற்றைய மாவட்டத்து மக்களும் அனுபவித்தார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அண்மைக் காலமாக நடந்து வருகின்ற சம்பவங்கள் எம்மை தள்ளியிருக்கின்றன.

வீரகேசரி, டான் ரிவி  என்று யாழ் இனவாதச் சிந்தனைக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் குடாநாட்டுச் செய்திகள் யாழ் செய்திகள் என்று special attention கொடுத்து மற்றைய மாவட்ட மக்களை குறிப்பாக கிழக்கு மாகாண மக்களை கடுப்பேத்தும் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

டான் ரிவி  வக்காலத்து வாங்குவதென்றால் வாங்கட்டும் அதன்பின் பார்வைகள் போர்வைகள் நேர்காணல் ஓற்றுமை சமத்துவம் என்று தமிழ் பேசும் மக்களுக்கு காதில பூவைக்கிற வேலையை விட்டிருஙகோ. இது 21ம் நூற்றாண்டு குடாநாட்டிலிருந்து வந்து மற்ற மாவட்டங்களின் மீது சவாரி விடுகின்ற நோக்கம் இருந்தால் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து விட்டு வாருங்கள்.
 
கைகழுவிய தண்ணீரை புகையிலையில் தெளித்து சிங்கள மக்களுக்கு புகையிலை வியாபாரம் செய்த காலம் இல்லை இது. சிங்கள மக்களுக்குச் செய்த புகையிலை வியாபாரம் கடைசியில புதுமாத்தளனில கொண்டுவந்து விட்டுது. திரும்பவும் டான் ரிவி  வீரகேசரி போன்ற வடிகட்டிய யாழ்ப்பாணத்து இனவாதச் சிந்தனையின் பிரதிநிதிகள் வெளிக்கிட்டிற்றினம் புகையில வியாபாரத்துக்கு.

மற்றைய மாவட்ட மக்களையும் அவர்களின் தனித்துவங்களையும் தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்பில்லைத்தானே. நீங்கள் கிணற்றுத் தவளைகள்போல் நான்கு வேலிகளையும் கிடுகுகளால் அடைத்து நடுவிலே ஒரு சிறிய ஓட்டையைப் போட்டு அதனூடாக பக்கத்து வீட்டையும் உலகையும் பார்ப்பவர்கள் உங்களுக்கு எங்கே உண்மையான உலகம் தெரியப் போகிறது?

முஸ்லீம் மக்களுடன் வியாபாரத்தில் ஈடுகொடுக்க முடியாத யாழ் சமூகம் ஆயுதப் பலத்தோடு இருந்த புலிகளைப் பயன்படுத்தி அவர்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்து அத்தனை வியாபார ஸ்தாபனங்களையும் தமதாக்கிக் கொண்டதைப் பார்த்தோம் தானே. அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் காட்டிக்கொடுப்பு என்றது. காட்டிக்கொடுப்புதான் அவர்களின் வெளியேற்றத்துக்கு காரணம் என்றால் யாழ்ப்பாணத் தமிழரின் முதல் துரோகி யாழ்ப்பாணத் தமிழன் துரையப்பாதானே (இதை நான் சொல்லவில்லை சொல்லியவர்கள் யார் என்பது கொன்றவர்கள் யார் என்பதும் யாவரும் அறிந்ததே.)

Eelam_and_Panaiயாழ்ப்பாணத்திலிலுந்து வந்து வன்னியில் பாராளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கத்தை வன்னி மக்கள் பாடசாலை கட்டித்தரும்படி கேட்க நீங்கள் படித்தால் யாழ்ப்பாண மக்கள் என்ன மாடா மேய்ப்பது என்று வன்னி மக்களைக் கேட்டதும், இராசதுரையை ஓரம்கட்டி அமிர்தலிங்கத்தை தலைவனாக்கியதும், காசிஆனந்தனை ஒதுக்கி புதுவை ரத்தினதுரையை ஆஸ்தான கவிஞன் ஆக்கியதும் பாலசிங்கத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை கலாச்சார நகரமாக்க முயன்றதும் புலிகள் யாழ் முரியை அறிமுகம் செய்ததும் அதன்பின் வந்த அத்தனை புலிகளின் அடையாளச் சின்னங்களிலும் யாழ் கருவியையும் பனை மரத்தையும் இழுத்து வந்து இருத்தியதும் யாழ்ப்பாண இனவாத சிந்தனையின் வெளிப்பாடே. இது இலங்கை அரசின் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கும் செயல்பாட்டிற்கு ஒப்பானது.

கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்ட கசப்பான அனுபவங்களை தமிழ்பேசும் மக்களின் மனங்களிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட முடியாத நிலை இருக்கின்றதோ அதே நிலைதான் யாழ் இனவாத சிந்தனையில் சிக்கித்தவித்த மற்றைய மாவட்டத்து மக்களின் மனங்களிலும் நினைவுகள் நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டன.

கொழும்பு ஆட்சியாளர் தமது இனவாத அரசியலை மாற்றாதவரை தமிழ்பேசும் மக்களின் மனங்களை வெல்லமுடியாது என்ற யதார்த்த நிலையை நம்புகின்ற அதே மனங்கள் யாழ் சிந்தனை என்ற யாழ் இனவாத சிந்தனையை கைவிடாதவரை மற்றைய மாவட்ட மக்களின் மனங்களை வெல்வது என்பது முடியாத காரியம் என்பதையும் நம்ப வேண்டும். 

அதுவரை தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது மூன்று ஆட்சி அதிகார அலகுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண அதிகார அலகு யாழ்ப்பாண அதிகார அலகு (ஆனையிறவுக்கப்பால்) வடமாகாண அதிகார அலகு மட்டுமே யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையிலிருந்து மற்றைய மாவட்டத்து மக்களைக் காப்பாற்றும் சிறந்த அரசியல் பொறிமுறையாக இருக்கும். அதுவே மற்றைய மாவட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகும்.

யாழ்ப்பாணத்து தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அதை அவர்கள் அந்த மண்ணிலிருந்து கொண்டு செய்யட்டும். யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையின் பாதுகாப்பு அரணாக  மற்றய மாவட்டங்களையும்  மக்களையும் பயன்படுத்தி பலிக்கடா ஆக்கப்படுவதை இனி ஒருபோதும் அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. (குறிப்பாக வன்னி மக்கள்) வைப்போம் இந்த சிந்தனைக்கு முற்றுப்புள்ளி.