செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தென்னிலங்கைக்கு உண்மையை கூற முயற்சிக்கிறேன் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

தென்னிலங்கைக்கு உண்மையை கூற முயற்சிக்கிறேன் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன். வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன் என்றும் ஆளுநர் தெரிவித்தார். பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகை 25.12.2024 வயாவிளானில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் வேதநாயகன், 2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம். இங்கு காணிகள்இ வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன” எனவும் இவற்றை தென்னிலங்கை மக்களுக்கும் தெரியப்படுத்தி வருகின்றேன் என்றார் ஆளுநர்.

அரகலய போராட்டங்கள் அனுர அலையினால் காணாமல் போன 6,000 அரசியல்வாதிகள் – FAFERAL

அரகலய போராட்டங்கள் அனுர அலையினால் காணாமல் போன 6,000 அரசியல்வாதிகள் – FAFERAL

2022ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிரான அரகலய போராட்டத்தின் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக 6,000 அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் பெப்ரல் (Faferal) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில், “போராட்டத்தின் பின்னர் பல அரசியல்வாதிகள் நம்பிக்கை இழந்து அரசியலில் இருந்து விலகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்

பல்வேறு நிலைகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியலுடன் தொடர்புடைய மேலும் 2,000 பேர் இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மேலும், ஏனைய கட்சிகளை உருவாக்குதல், ஏனைய கட்சிகளுடன் இணைதல் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் சுமார் 30 அரசியல் கட்சிகள் செயலிழந்துள்ளன. இந்நிலையில், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு கோரப்பட்ட நிலையில் 80,000க்கும் அதிகமானோர் வேட்பாளர்களாக தாம் தோற்றியிருந்த – தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் இல்லை, என ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசியமக்கள் சக்தியின் அனுர அலையால் மிக நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வந்த தலைவர்கள் முதல் நூற்றுக்கணக்கான சிங்கள, தமிழ் தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி கண்டமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைவர்களை பொருத்தவரையில் எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பே சிவம், ஆனால் லூசியம் சிவன் ஆலயத்தில் ஏன் சமரசம் உலாவவில்லை? நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை!

அன்பே சிவம், ஆனால் லூசியம் சிவன் ஆலயத்தில் ஏன் சமரசம் உலாவவில்லை? நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை!

ஆலயத்தின் ஆரம்ப உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல்..!

சர்ச்சைக்குரிய லண்டன் லூசியம் சிவன் கோயிலில் மீண்டும் மருத்துவ கலாநிதி துரைராஜா சிறீஸ்கந்தராஜா ஆலயத்தின் செயற்குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பதவியில் இருக்கும் தன்னோடு போட்டியிடும், போட்டியாளர்களோடு பேசி அவர்களை ஒதுங்கச் செய்து பதவியிலிருப்பதாக தில்லைநாயகம் அருள்தாஸ், விஸ்வலிங்கம் கணேசமூர்த்தி மற்றும் என் சர்ச்சிதானந்தன் ஆகியோர் தேசம்நெற்க்குத் தெரிவித்தனர். அவர்கள் தொர்ந்தும் குறிப்பிடுகையில் நியாயமற்ற முறையில் அறங்காவல் சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட தில்லைநாயகம் அருள்தாஸ், விஸ்வலிங்கம் கணேசமூர்த்தி மற்றும் ஒருவரையும், மீள உள்வாங்குமாறு பிரித்தானிய நீதிமன்றம் ஆலய அறங்காவல் சபைக்குத் தெரிவித்து இருந்தது. ஆனால் துரைராஜா சிறீஸ்கந்தராஜா தொடர்ந்தும் தங்களை மீள உள்வாங்காமல் தடுப்பதாகத் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் துரைராஜா சிறீஸ்கந்தராஜாவின் நடவடிக்கைகளால் ஆலயம் நீதிமன்றத்திற்குச் செல்கின்றபோது ஏற்படும் பெரும் நிதிச் செலவுகள் ஆலயத்தின் நிதியிலிருந்தே செலவிடப்படுகின்றது என்றும் இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குத்தகைக் காணியில் 1.6 மில்லியன் பவுண்செலவில் ஆலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. லூசியம் சிவன் கோவில் மட்டுமல்ல புலம்பெயர்நாடுகளில் உள்ள சிவன் கோவில்களில் இவ்வாறான எதேச்சை அதிகாரங்களைக் காணலாம். ஏனைய ஆலயங்களும் இதற்கு விதி விலக்கல்ல.

கிளி. பிரபல சூழலியல், புலனாய்வு ஊடகவியலாளர் தமிழ் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் ! வேடிக்கை பார்த்த மக்கள் !

கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன்.

தேசம்நெற்க்கு தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்.

சூழலியல், மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டதை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கின்றது. “கிளிநொச்சியில் சட்டம், ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும், கிளிநொச்சியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், கசிப்பு காய்ச்சுவது, கள்ள மண் கடத்துவது, கள்ள மரம் வெட்டுவது என்பனவற்றுக்;கு எதிராக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர் மு தமிழ்ச்செல்வன். அவர் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு சமூகக் காவல்காரன். இவரைத் தாக்கியது ஒட்டுமொத்த ஊடக சமூத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்” என லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் தேசம்நெற் ஊடகக் குழுமத்தின் ஆசிரியர் த ஜெயபாலன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “வடமாகாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றது. ஊடகவியலாளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல், மக்களின் குரல்களை மழுங்கடிப்பதற்கான ஒரு முயற்சியே” என்றும் வடக்கு ஆளுநர் வேதநாயகன் பொலிஸாருடன் பேசி வடக்கில் இவ்வாறான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழ்ச்செல்வனைத் தாக்கிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை வடக்கு ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

யாழில் மற்றுமொரு வாள் வெட்டு: காடையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் ஏன் ?

யாழில் மற்றுமொரு வாள் வெட்டு: காடையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் ஏன் ?

யாழ் . மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் டிசம்பர் 24  இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ். காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த மூன்று பேரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் டிசம்பர்  முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார். குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த 8 ஆம் திகதி வவுனியா பொலிசார் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பலோ என அறியப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ரிக்ரொக்கில் பெண்களை இழிவுபடுத்திய பேர்வழி ஓகஸ்டில் வவுனியாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தார். மற்றுமொரு ரிக்ரொக் பிரபல்யம் பிரான்ஸைச் சேர்ந்த ராசன் என்பவர் சுயேட்சையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் வடக்கில் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் நடைபெறும் சில வன்முறைச் செயற்பாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுவருவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.

வன்முறைக் குழக்களின் வாள் வெட்டுக்கள் இதுவரை நின்றபாடாக இல்லை. வடக்கு ஆளுநர் பொலீஸ் பிரிவினருடன் இதுபற்றி உரையாடி அழுத்தங்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேசிய மக்கள் சக்தியுடைய அரசில் பாதாளக் குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அரசு சூளுரைத்திருந்தது. அந்த வகையில் வடக்கில் உள்ள ஆவா குழு போன்ற வன்முறைக்கும்பல்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும். இக்குழுவின் தலைவர்களில் ஒருவரான சன்னா என்று அறியப்பட்ட நல்லநாதன் பிரசன்னா கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.

நாட்டின் அரிசி மாபியாக்களுக்கு வடக்கிலும் சவால்: நெல் அறுவடைக்கு முன் விலை நிர்ணயம்! கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவுத் திட்டம்!

நாட்டின் அரிசி மாபியாக்களுக்கு வடக்கிலும் சவால்: நெல் அறுவடைக்கு முன் விலை நிர்ணயம்! கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவுத் திட்டம்!

நெல் அறுவடைக்கு முன்னதாக நெல் மற்றும் அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்குமாறு அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரா நெல், அரிசி மாபியாக்களுக்கு எதிராக ஒரு அரிசிப் போரை ஆரம்பித்து உள்ளார். இந்நிலையில் ஆளுநரின் தலைமையில் நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை டிசம்பர் 24 இல் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேபோன்று அரிசி ஆலை உரிமையாளர்கள், வடக்கில் விளையும் நெல்லில் பெரும் பகுதியைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அதிகரித்த கடன் வழங்கலுக்கு வங்கிகளுடன் கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

May be an image of 2 people, dais and textவடக்கில் 3 லட்சம் மெட்ரிக் தொன் நெல் விளையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதில்; ஆகக் குறைந்தது 30 ஆயிரம் மெட்ரிக் தொன்னையாவது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் வடக்கிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகக் கொள்வனவு செய்வது தொடர்பான யோசனையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் கலாநிதி அகிலன் கதிர்காமர் முன்வைத்தார். வடமாகாணம் நெல் விளையும் பூமியாக இருந்தாலும் இதுவரை நெல் காயவிடுதல், களஞ்சியப்படுத்தல் வசதிகள் இங்கு இல்லை என்பதும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்தவுடனேயே குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதையும் விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

வடக்கின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த விவசாய அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அதன் பிரதிநிதிகள், விவசாயிகள் நெல் அறுவடை முடிந்தவுடனேயே கொடுப்பனவை எதிர்பார்ப்பார்கள் என்பதைக் குறிப்பிட்டார்கள். அத்துடன் இடைத்தரகர்கள் மூலமே பிரச்சினைகள் உருவாகுவதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையோ, கூட்டுறவு சங்கங்களோ ஈர நெல்லை கொள்வனவு செய்ய முன்வரவேண்டும் எனவும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர்.  நெல் கொள்வனவுக்கான அறிவுறுத்தல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவுச் சங்கங்கள் வசம் உள்ள நெல் உலர விடும் தளங்களை தயார்படுத்த பணித்துள்ளதாகவும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்தார். அத்துடன் நெல்கொள்வனவுக்கு சங்கங்களுக்கு முற்கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்தார்.

அரசாங்கம் உள்ளூர் நெல் உற்பத்தி விவசாயிகளை பாதுகாப்பதற்காக அரிசி இறக்குமதியின் போது ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் இறக்குமதி வரி விதித்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யும் அரிசியின் விலையை கிலோவுக்கு 220 ரூபாய்க்கு விற்கப் பணித்துள்ளது. இதன் மூலம் உள்;ர் உற்பத்தியாளர்களையும் காப்பாற்றி அரிசியின் விலையை ரொக்கற் வேகத்தில் அதிகரிக்காமல் தடுத்து மக்களையும் காப்பாற்றியுள்ளது.

தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுங்கள் – ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அவசர கடிதம்!

தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுங்கள் – ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அவசர கடிதம்!

தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இரத்தினபுரி, எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும் ஏழை மக்களை வெளியேற்ற தோட்ட நிர்வாகம் முயற்சிக்கின்றது. தோட்டங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்படக் கூடாது. புதிய காணி உரிமை வழங்கும் முன் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடை உத்தரவை அறிவிக்க வேண்டும். “மொடர்ன் ஸ்லேவரி (modern slavery)” என்று அடையாளம் காணப்பட்டுள்ள தற்போதைய அமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டும் என அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை முதற் தடவையாக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மலையகத் தமிழரான சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தோட்ட மற்றும் சமூகக் கட்டுமான பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்களுக்கு காணிகளை வழங்கி வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான தீவிர முயற்சிகளை அரசு எடுத்து வருவதை பிரதி அமைச்சர் பிரதீப் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையின் கடன்தரம் உயர்வுக்கு ரணிலின் அரசாங்கமே காரணம் – ஹர்ஷ டி சில்வா புகழாரம்

இலங்கையின் கடன்தரம் உயர்வுக்கு ரணிலின் அரசாங்கமே காரணம் – ஹர்ஷ டி சில்வா புகழாரம்

கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களே இலங்கையின் கடன் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளமைக்குக் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடனை மீள செலுத்த முடியாத நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டு உள்ளமை மகிழ்ச்சிக்குரியது. மற்றும் மூடீஸ் (ஆழழனல’ள) ரேட்டிங் நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றமடைந்து உள்ளமை ஆகியவை முன்னைய அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியென ஹர்ஷ் டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத்துக்கு கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டமையானது தனியார் துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.

“எவ்வாறிருப்பினும் சர்வதேச சந்தையில் கடன் பெறக் கூடிய தரப்படுத்தலை நாம் இன்னும் அண்மிக்கவில்லை. அதற்கு மூடீஸ் ரேட்டிங் தரப்படுத்தலில் டீடீடீ நிலைக்கு வர வேண்டும். அந்த நிலைமையை அடைவதற்கு பொருளாதாரம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களாலேயே இந்த பிரதி பலன் கிடைத்துள்ளது. தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டதைப் போன்று கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை இரத்து செய்து, கடன் மறுசீரமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தால் இந்தப் பலனைப் பெற்றிருக்க முடியாது” எனவும் ஹர்ஷ் டி சில்வா தெரிவித்தார்.

யேசு பிறந்த நாளில் கிளிநொச்சியில் குடிபோதையில் டிப்பரையோட்டி சிறுமியை பலியெடுத்த விபத்து !

யேசு பிறந்த நாளில் குடிபோதையில் டிப்பரையோட்டி சிறுமியை பலியெடுத்த விபத்து !

May be an image of 2 people and people smilingகிளிநொச்சியில் நேற்று டிப்பர் மோதி 2வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். தாய், தந்தை மற்றும் 7 வயது மகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய் ஆபத்தான நிலையில் யாழ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி வலயக் கல்விப்பணிமனை முன்பாக நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. மதுபோதையிலிருந்த டிப்பர் வாகன சாரதி மோட்டார் சைக்கிளில் குடும்பமாக வந்தவர்களை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிய வருகின்றது. சராசரியாக நாளொன்றுக்கு 7 பேர் இலங்கையின் வீதிகளில் கொல்லப்படுகின்றார்கள். தென்னாசியாவில் இலங்கையின் வீதிகள் உயிராபத்தானவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 24ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 25ஆம் திகதி காலை 6மணி வரையான 24 மணி நேர காலப் பகுதியில் நாட்டின் எப்பாகத்திலும் பாரிய விபத்து சம்பவங்களோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்டு அடுத்த 90 நிமிடத்தில் இவ்விபத்து ஒரு குழந்தையின் உயிரைப் பறித்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பொலிஸாரினால் விசேட  போக்குவரத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இவ்வாறு விதிமீறல்களுக்கு உட்படும் வேளையில் சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருந்தது.

வறிய போராளிக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு !

வறிய போராளிக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு !

பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 2025ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் மார்ச் வரை ‘நிலையற்றவர்கள்’ என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு தலா 5,000 ரூபாவும் ‘பாதிப்புக்குட்பட்டவர்கள்’ என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தலா 5,000 ரூபாவும்  அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பால் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் பெரிதும் பயனடைவர். குறிப்பாக தமிழ்ப் பகுதிகளிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போரில் அங்கவீனமடைந்துள்ளவர்கள், முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு இது நன்மை கொடுக்கும். ‘வறியவர்கள்’ என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 9,60,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை தலா 10, 000 ரூபாவும் ‘மிகவும் வறியவர்கள்’ என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை 17, 500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது 2க்கு குறைவாகக் காணப்பட்டால் பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவில் அரைவாசி மாத்திரமே வழங்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 4,10, 000 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பெறுபவர்களுக்கு தலா 7,500 ரூபாவும், சிறுநீரக நோய்க்கான உதவி பெறும் 50, 000 பேருக்கு தலா 7,500 ரூபாவும் மற்றும் முதியோருக்கான உதவி பெறும் 8,20, 000 பேருக்கு தலா 3,000 ரூபாவும் 2025 ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படவுள்ளன.

இது பற்றிக் கருத்து வெளியிட்ட போராளிகளான மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட ஒளிரும் வாழ்வு அமைப்பின் முக்கியஸ்தர் அனஸ்லி, “தேசிய மக்கள் சக்தி அரசு சரியான திசையில் அடி எடுத்து வைத்துள்ளது. ஆனால் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் விடயத்தில் இந்த அதிகரிப்பு மிகச் சொற்பம்” எனத் தெரிவித்தார். “மாற்றுத் திறனாளிகளுடைய நிலை வானவில் போன்று பல நிலைப்பட்டது. இவர்களுடைய நிலையை ஆராய்ந்து அதற்கமைவாக விசேட திட்டங்களின் கீழ் அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள், அவர்களுக்கு உதவியாளர்கள், மற்றும் தேவயான உபகரணங்கள் வழங்க புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசும் முன்வரவேண்டும்” என்றும் அனஸ்லி தெரிவித்தார்.