எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“மோதல் பகுதியிலிருந்து வெளியேறியோருக்கு அவசர மருத்துவ, உளவியல் சிகிச்சை உதவி தேவை’

trico.gifமோதல் பகுதிகளிலிருந்து வெளியே வரும் மக்களுக்கு அவசர மருத்துவ, உளவியல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போதும் மோதல் பகுதியில் சிக்கியுள்ள 1 1/2 இலட்சம் மக்களின் நிலைமை தொடர்பாகவும் இந்த சர்வதேச அமைப்பு தீவிரமான கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறது.

வன்னியிலிருக்கும் சுமார் 1 1/2 இலட்சம் மக்களின் நிலைமை தொடர்பாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வெளியேறியோரில் அநேகமானோருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாகவும் அநேகமானவை சிதறல்களாலும் (ஆயுத) சுடப்பட்டதாலும் ஏற்பட்ட காயங்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. எந்தத் தரப்பையும் அந்த அமைப்பு குற்றம் சாட்டவில்லை.

பலர் உறவினர்களையும் முழுக் குடும்பத்தினரையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு தமது குடும்பத்தினருடனோ நண்பர்களுடனோ தொடர்பு இல்லை. அவர்கள் எங்கு சென்றுவிட்டனர் என்பதும் உயிருடன் இருக்கின்றார்களா என்பதும் அவர்களுக்கு தெரியாது. 40 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் 70 ஆயிரத்திற்கும் குறைவானோரே வன்னிப்பகுதியில் இருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை. முகாம்களில் வேலையோ, பாடசாலையோ இல்லை. சுயாதீனமான சகலவற்றையும் அவர்கள் இழந்துவிட்டனர். தமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு தொடர்பான தொடர்ச்சியான பீதியுடனேயே அவர்கள் இருக்கின்றனர் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

வருண் காந்தியை கைது செய்ய இடைக்காலத் தடை

20-varun-ganthi.jpgஉத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வருண் காந்தி அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில், முஸ்லிம்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசினார்.

இது குறித்து தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில், வருண் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றதில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதே போல தான் கைது செய்யப்படுவதைத் தவி்ர்க்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது

மக்களை மீட்கும் அரசின் மீது குறைகூறும் சர்வதேசம் புலிகளை கண்டிக்காதது ஏன்?

pm-srilanka.jpgவிடுதலைப் புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் மீது குறைகூறும் சர்வதேச சமூகம் தப்பிவிடும் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தும் புலிகளின் செயல் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினரின் விதவைகள், குழந்தைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையினூடாக விரைவிலேயே வடக்கின் அனைத்து பகுதிகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும். குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதியில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது? என கேட்கலாம்.

றிப்பாக வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுடன் மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுக்கவும் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் ஊடாக அவர்களது பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்யும் நிலைமையை உருவாக்குதல். நானே மக்களின் பிரதிநிதி என ஒருவர் தெரிவிப்பதை விடுத்து உண்மையான பிரதிநிதியை மக்களே தெரிவு செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குதல், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியுடனேயே நாம் பேசுவோம்.

அதுமட்டுமல்ல வடக்கையும், கிழக்கையும் பிரதானப்படுத்தி நாடுமுழுவதும் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ளல் இதுவே எமது இலக்காக இருக்கிறது. இதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் முப்படையினர் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. உண்மையிலேயே அவர்களுக்கு நாம் நன்றியுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு படையில் நிரந்தர சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் தொண்டர் அடிப்படையில் இருப்பவர்களதும் சேவைகள் சம மானவை. எனினும் ஓய்வூதிய வழங்குதலில் சமநிலை பேணப் படவில்லை. நீண்டகாலமாக இழைக்கப்பட்டுவந்த அநீதி இந்த திருத்தச் சட்டத்தினூடாக தீர்வு வழங்கப்படுகிறது என் றும் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

நாளையே புலிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தால் சிறந்த அமைச்சுப் பதவியொன்று பிரபாகரனுக்கு வழங்கப்படும் -தயாசிறி ஜயசேகர

parliament.jpgபடையினர் வெற்றிகளைக் குவித்து வருகின்ற இவ்வேளையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய விடயத்தில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.

கருணா அணியினர் 2,000 பேரோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஆயுதங்களோடு திரிகின்றனர். இந்த வகையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் தற்கொலைப் படையினர் உள்ளனர். தெற்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை இதனுடன் தொடர்புபடுத்தி சந்தேகப்பட வேண்டியுள்ளது.

நாளையே புலிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தால் சிறந்த அமைச்சுப் பதவியொன்று பிரபாகரனுக்கு வழங்கப்படும். ஆயுதத் தாங்கியுள்ளமை ஒரு பிரச்சினை இல்லை.

புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென கூறும் அரசாங்கம் கருணா, பிள்ளையான், பிரபாகரன் என சகலரும் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அரசாங்கம் சகலருக்கும் ஒரே விதமான சட்டங்களைப் பிரயோகிக்க வேண்டும். தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய ஜே. வி. பி. யும் கருணாவும் இப்போது அரசாங்கத்திற்குள் உள்ளனர். கருணாவையும் விமல் வீரவன்சவையும், அருகில் வைத்துக் கொண்டே தலதா மாளிகை மீதான தாக்குதல் பற்றி அரசாங்கம் பேசுகிறது.

பாதுகாப்புப் படையினரின் விதவைகள், அனாதைகள் ஓய்வூதியத் திட்ட திருத்தச் சட்டமூலத்தை சபையில் விவாதித்துப் பேசும் போதே தயாசிறி ஜயசேகர (ஐ.தே.க. எம்.பி) மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் ஐ. தே. க. உறுப்பினர்கள் ஒருவரும் சபையில் இல்லை.- அனுர பிரியதர்ஷன யாப்பா

anura-piriyadarshana-yappa.jpgசிலர் வெளிநாடுகளில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு இலங்கையை பற்றித் தவறான தகவல்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு இங்குள்ள சிலரும் துணை போவதற்கு ஏற்றால் போல் தவறான தகவல்களையும் வழங்கி வருகிறார்கள்.

இலங்கையில் மிகவும் ஒழுக்க சீலமான முப்படையினர் இருக்கிறார்கள். முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களும் குறைவின்றி அனுப்பப்படுகின்றன. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் தகவலின்படி 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மக்களுக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் சேர்த்துத்தான் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

இன்று மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு ஒய்வூதியம் வழங்கல் விதவைகள் ஓய்வூதிய வழங்கல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான மிக முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் ஐ. தே. க. உறுப்பினர்கள் ஒருவரும் சபையில் இல்லை. ஐ. தே. க.வினருக்கு இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கான தார்மீக பொறுப்பும் இருக்கிறது. இதனையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன்.

பாதுகாப்பு படையினரும் தொண்டர் படையினரும் களமுனையில் ஒரே கடமையைத்தான் செய்கிறார்கள் -கலாநிதி சரத் அனுமுகம

dr-sarath-amunugama.jpgபாதுகாப்பு படைக்கு நிரந்தரமாகவோ, தொண்டர் அடிப்படையிலோ ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட போதும் களமுளையில் இருவரும் ஒரே கடமையைத்தான் செய்கிறார்கள். எனவே தொண்டர் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களும் விதவைகள், அனாதைகளுக்கான ஒய்வூதியக் கொடுப்பனவுக்கு உரித்துடையவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.பாதுகாப்புப் படையினரின் விதவைகள், அனாதைகள் ஓய்வூதியத் திட்ட திருத்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்து பேசும் போதே அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையில் நிரந்தர சேவைக்கு உள்வாங்கப் பட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் போரில் மரணமானால் அவர்களது மனைவிக்கு, கணவனுக்கு, குழந்தைக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. எனினும் தொண்டர் அடிப்படையில் பாதுகாப்புப் படைக்கு சேர்த்துக் கொள்பவர்களுக்கு ஓய்வூதியம் இருக்கின்ற போதும் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இல்லை.

தொண்டர் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒருவர் இன்றைய பயங்கரவாத பிரச்சினையின் காரணமாக தொடர்ந்தும் சேவையில் ஈடுபட வேண்டியுள்ளது. களமுனையிலும் அவர் அல்லது அவள் கடமை புரிய வேண்டியுள்ளது. தொண்டர் அடிப்படை என்றும் நிரந்தர சேவை என்றும் ஏட்டில் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர களமுனையில் இருவரும் சமமானவர்களே. இருவரும் ஒரே வகையில் தான் களமுளையில் இருக்கிறார்கள். எனவே விதவைகள் ஓய்வூதிய விடயத்தில் மட்டும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவே கருதப்படுகிறது.

எனவே, தொண்டர் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய படைத் தரப்பு ஒருவரின் மனைவி, கணவன், குழந்தைகளும் ஓய்வூதியம் பெறும் வகையிலேயே சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

கிழக்கு இளைஞர் அபிவிருத்திக்கு 48 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – அமைச்சர் முரளிதரனிடம் பவித்திரா உறுதி

pavitra.jpgகிழக்கு மாகாணத்தின் இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கென 48 மில்லியன் ரூபாவை 2009 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கியுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் குழுவொன்று அமைச்சர் முரளிதரன் தலைமையில் பாராளுமன்றத்தில் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை சந்தித்து பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் காலை 11.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடம் மீட்கப்பட்டதன் பின்னர் ஆயுதமேந்தி போராடிய கிழக்கு மாகாண ஆயுதக் குழுக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இதிலிருந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சி, சிங்கள, ஆங்கில மொழி பயிற்சி, நூலக வசதிகள், கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைத்தல், கணனி பயிற்சி, புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், கடன் வழங்குதல், உயர்கல்வி முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல் மற்றும் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்த இளைஞர் யுவதிகளின் மனோ நிலையை சரியான வழிக்கு இட்டுச் செல்வதற்கான ஆலோசனைகள் வழங்கும் சேவைகளை உருவாக்குதல் போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் முரளிதரனுக்கும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டது. இதன் பிரதிபலனாகவே அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி 48 மில்லியன் ரூபாவை 2009 ஆம் ஆண்டுக்காக வழங்குவதாக உறுதியளித்தார்.

நாட்டு மக்களின் உயாந்த கௌரவம் படை வீராகளுக்கே – பாதுகாப்பு அமைச்சு செயலாளர்

defence-sec.jpgதாய் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் படை வீரர்களுக்கு நாட்டு மக்களின் உயர்ந்த கௌரவம் உரித்தாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல், போயகனவில் அமைந்துள்ள விஜயபாகு காலாற் படை றெஜிமன்ட் மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ. எனும் பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடிக்க முடியாது என்ற கருத்து முன்னர் நிலவியது. எல்.ரீ.ரீ.ஈ.யினரிடமுள்ள ஆட்பலம் மற்றும் ஆயுத பலம் என்பவை தொடர்பாக இராணுவ புலனாய்வுகள் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொண்டதன் பின்பே அவர்களுடன் போராடுவதற்கு நாம் முடிவு செய்தோம். இத்தாக்குதலுக்கு நாம் திட்டங்களை வகுத்ததபோது சில தியாகங்களை செய்ய வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தோம். எனினும் இத்தியாகங்கள் மூலம் கிடைக்கும் பலாபலன்கள் எமது நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு பேருதவியாக இருக்கும்.

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள எமது படை வீரர்களின் பெயர்களை எதிர்காலத்தில் வரலாறுகள் நினைவு கூறும். நாட்டுக்காக உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரது பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி உறுதிபூன்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். 

புதுமாத்தளன் பகுதிக்கு 1265 மெற்றிக்தொன் உணவு 52 வகையான மருந்துகள் அனுப்புவைப்பு – அமைச்சர் சமரசிங்க

mahinda-samarasinha.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கென 1265 மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களும், 52 வகையான மருந்துப் பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்க ளுக்கோ மருந்து வகைகளுக்கோ எவ்விதத் தட்டுப்பாடுகளும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் அவ்வாறு தட்டுப்பாடுகள் நிலவுவதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் அவர்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர் மஹிந்த சமர சிங்க தலைமையில் நடை பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில், வெளி விவகார அமைச்சின் செய லாளர் கலாநிதி பாலித கொஹன மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக் கார மற்றும் சுகாதார அமைச்சின் (மருந்து விநி யோகம்) பிரதிப் பணிப் பாளர் நாயகம் டாக்டர் விமல் ஜயந்த ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

முல்லைத்தீவில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கென கடந்த மூன்று வாரங்களுக்குள் 1265 மெற்றிக்தொன் உணவுப் பெருட்களை அரசாங்கம் அனுப்பிவைத்துள்ளது. கடந்த 17ம் திகதி முதல் 19ம் திகதி வரையான மூன்று நாட்களுக்குள் மாத் திரம் மூன்று தடவைகள் 515 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. அதில் 15 மெற்றிக்தொன் மரக்கறி வகைகளும் அடங்கும்.

அரசாங்கம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை அனுப்பிவைக்கும் அதே சமயம், உலக உணவுத் திட் டம் உதவிகளை வழங்கியுள்ளது. முல்லைத்தீவிலுள்ள மக்களுக்குத் தேவையான ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கடந்த 5ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அங்கு தேவையான மருந்து பொருட்கள் களஞ்சியப்ப டுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் விமல் ஜயந்த தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களுக்குள் அண்டிபயோடிக் உட்பட 52 வகையான மருந்துப் பொருட்கள், திரு கோணமலையிலுள்ள பிரா ந்திய மருத்துவ விநி யோகப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை திருமலையிலுள்ள கடற்படையினருக்கு ஒப்ப டைக்கப்பட்டு திருமலை பிராந்திய கடற்படைத் தளபதியின் வழிகாட்டலின் தேவைக்கேற்ப உரிய நேரத்தில் அனுப்பிவைக்கப்படும் என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரா ந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ரி. வரதராஜாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தப் பிரதேசத்தில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடுகள் நிலவுவதாக புலிகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறுபட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாகவும் அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்கள் இரண்டின் “கடிதத் தலைப்புக்கள்” ஒன்றுக்கு ஒன்று முரணானதாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி னார். அந்தத் கடிதத் தலை ப்புக்களில் எழுத்துப் பிழைகள் இருப்பதையும் ஆதாரமாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இவை போலியானவை என்றும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்தலியனகே முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி. வரதராஜாவுடன் ஏற்கனவே தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது பெயர்பயன் படுத்தப்பட்டு மாறுப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுவதாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ளத் தவறிவிட்டது – மனோ கணேசன்

mano.jpgஅரசாங்கம்,  தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ள தவறி விட்டது. அதனால் தான், வன்னியில் உள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரத் தயங்குகின்றனர்.

தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு வவுனியாவுக்குச் செல்ல அழைப்பு விடுக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏன் மதவாச்சிக்கு அப்பால் அனுமதிப்பதில்லை என்று மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவர் மனோகணேசன் எம்.பி. கேளள்வி எழுப்பினார்.

வெறுமனே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரை விமர்சித்துக்கொண்டிருக்காமல் அது தொடர்பாக ஐ.நா.வின் பிரதிநிதிகளை அழைத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் உண்மை தன்மையினை நிரூபிக்கலாமே என்றும் அவர் கூறினார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் முதலாவது செய்தியாளர் மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கையிலேயே மனோ கணேசன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவும் பொருளாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியும் செயற்படுகின்றனர்.

அங்கு தொடர்ந்து மனோகணேசன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில்

நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதில் மறு கருத்துக்கு இடமில்லை. பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இதிலிருந்தே சட்டம் மற்றும் ஒழுங்கின் சீர்குலைவு தெரிகின்றது. கடத்தல்கள் சட்டவிரோத கைதுகள் என மனித உரிமைகள் மீறப்படுகின்றன. சீருடை இல்லாமல் வெள்ளைவானில் வந்து கடத்திச் செல்கின்றனர். இதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் பொறுப்புக்கூறவேண்டும்.

இந்நிலையில் மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு உருவாக்கப்படாவிடின் அர்த்தம் இல்லாமல் போய்விடும். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளோம்.