எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மேர்வின் சில்வாவின் இடையூறு குறித்து பாராளுமன்றத்தில் சபாநாயகர் கடும் விசனம்

parliament.jpgசபை நடவடிக்கைகளின் போது தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இடையூறுகள் குறித்து விசனம் வெளியிட்ட சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, இவ்வாறான செயற்பாடுகளால் தான் வீண்பழியை சுமக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிக்கைக்கான நேரம் தொட்டே அமைச்சர் மேர்வின் சில்வா அவ்வப்போது குறுக்கிட்டு பேசிக் கொண்டிருந்தார்.  அத்துடன், சபாநாயகர் தொடர்பாக ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பில் சுட்டிக்காட்டி சபாநாயகர் பேசிக் கொண்டிருந்தவேளை, அமைச்சர் மேர்வின் சில்வா குறுக்கிட்டு (ஒலி வாங்கிமுடுக்கிவிடப்பட்டிருக்கவில்லை) ஏதோ கூறவே, நான் விடுக்கும் அறிக்கைகளை உங்களால் ஆட்சேபனைக்குட்படுத்த முடியாது என்று அமைச்சரை நோக்கி சபாநாயகர் கடுமையான தொனியில் தெரிவித்தார்.

இதன் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கருணாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்க அமைச்சரொருவரும் மத்திய வங்கியின் ஆளுநரும் சென்றிருப்பது ஏனெனக் கேட்டு ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வியெழுப்பினர்.

இதன்போதும் குறுக்கிட்ட அமைச்சர் மேர்வின் சில்வா ரவி கருணாநாயக்காவை நோக்கி ஏதேதோ கூறிக் கொண்டிருந்தார். இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்த ரவி கருணாநாயக்க எம்.பி., இது அங்கொடையல்ல, பாராளுமன்றம் என்பதை சபாநாயகர் அவருக்கு (மேர்வின் சில்வாவுக்கு) கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எனினும் மேர்வின் சில்வா தொடர்ந்தும் குறுக்கீடு செய்து கொண்டிருக்கவே அதை மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்த எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா சபையில் தவறான செயற்பாடுகளுக்கும் அவமதிப்புகளுக்கும் இடமளித்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என சபாநாயகரை குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய சபாநாயகர், முதலில் அறிவுறுத்த முடியும் .அதை அறிந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது உங்களுக்கு தெரியும் என்று ஜோசப் மைக்கல் பெரேராவை நோக்கி கூறியதுடன், அதைத் தொடர்ந்து பிரதம கொறடாவின் குற்றச்சாட்டை பாருங்கள். எனக்கு ஏன் இந்த வீண்பழி? நான் எப்போதும் உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். இடையூறு செய்ய வேண்டாமென கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேர்வின் சில்வாவை நோக்கியும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே ஒரு கட்டத்தில் கேள்வி நேரத்தின் போது உரிய பதில்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சபைக்கு சமுகளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

இயக்குனர் சீமானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

seeman.jpgஇலங் கைத் தமிழர் பிரச்சினைக்காக புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புதுச்சேரி காவல்துறையினர் அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் சீமான் நெல்லை பொலிஸ் ஆணையர் மஞ்சுநாதா முன்னிலையில் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சீமானை கைது செய்த பொலிஸார், புதுச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு நேற்று புதுச்சேரி மாவட்ட உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இயக்குனர் சீமானிடம், நீங்கள் விடுதலை பிணை கேட்டு உள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு இயக்குனர் சீமான், இது சம்பந்தமான விவாதம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சீமானை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்

குடிநீரென நச்சு திராவகத்தை பருகிய தமிழ் யுவதி உயிரிழப்பு

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் வியாழக்கிழமை குடிநீரென நினைத்து தவறுதலாக நச்சுத்திராவகத்தை அருந்திய இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். நோயாளர்களைப் பார்வையிடுவதற்குச் செல்வோர் தங்கியிருக்கும் பகுதியில் பொறுப்பற்ற விதத்தில் குடிநீர்ப் போத்தலில் இந்த நச்சுத் திராவகம் வைக்கப்பட்டிருந்ததே இந்தத் துயர சம்பவத்திற்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

நோய்வாய்ப்பட்டு பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர் ஒருவரைப் பார்வையிட வேறு சிலருடன் சென்ற இந்த யுவதி நோயாளர்களை பார்வையிடுவோர் தங்கியிருக்கும் பகுதியில் இருந்துள்ளனர்.

அவ்விடத்தில் குடிநீர் போத்தல் ஒன்று (மினரல் வோட்டர் போத்தல்) இருக்கவே தன்னுடன் வந்தவர்களது குடிநீர் போத்தலென நினைத்து அதிலிருந்ததை அந்த யுவதி குடித்துள்ளார். ஆனால், அதிலிருந்ததோ நச்சுத்திராவகம் நிலத்தை மெருகூட்டுவதற்காக (பொலிஷ்) குடிநீர் போத்தலினுள் அந்த திராவகத்தை வேலையாட்கள் அங்கு வைத்திருந்துள்ளனர்.

அதிலிருந்ததை அந்த யுவதி குடித்ததும் அவருக்கு தலைசுற்றலுடன் மயக்கமேற்படவே அவருடன் சென்றவர்கள் அந்த யுவதியை உடனடியாக அந்த ஆஸ்பத்திரியின் வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

5,000 ரூபா அறவிடப்பட்ட பின்னர் அவரை டாக்டர் ஒருவர் பரிசோதித்ததுடன் அது சாதாரண தலைச்சுற்றலெனவும் வேறொன்றுமில்லையென்றும் கூறியுள்ளார்.  எனினும் அந்த யுவதி பெரும் அவஸ்தைப்படவே டாக்டரிடம் மீண்டும் அவரைச் சோதனையிடுமாறு யுவதியுடன் சென்றவர்கள் கூறவே அவருக்கு ஒன்றும் இல்லை பயப்பட வேண்டாமென டாக்டர் மீண்டும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நோயாளர்களை பார்வையிடுவோர் அமரும் பகுதிக்கு வந்த ஆஸ்பத்திரி ஊழியரொருவர் அந்தப் போத்தலை அங்கு தேடவே நடந்த விபரத்தை அங்கிருந்தவர்கள் கூறியதுடன் அந்த யுவதியை வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.  பதற்றமடைந்த அந்த ஊழியர் உடனடியாக வெளிநோயாளர் பிரிவுக்குச்சென்று அந்த டாக்டரிடம் விடயத்தை கூறியதுடன் அது நிலத்தை பொலிஷ் செய்யப்பயன்படும் நச்சுத் திரவமெனக் கூறவே மயக்க நிலையிலிருந்த அந்த யுவதியை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அந்த யுவதி உயிரிழந்துள்ளார். மேல்மாகாண சபை கல்வித்திணைக்களத்தில் பணியாற்றும் யோ.சண்முகப்பிரியா (32 வயது) என்ற திருகோணமலையைச் சேர்ந்தவருக்கே இந்த பரிதாபநிலை ஏற்பட்டது.
 

தனியார் துறையினரும் வாகன அணி மூலம் ஏ9 வீதியூடாகப் பொருள்களை எடுத்துவர ஏற்பாடு

lorries.jpgகொழும்பில் இருந்து ஏ9 வீதியூடாக தனியார் வர்த்தகர்களும் தமக்குத் தேவையான பொருள்களை அனுப்ப வசதியாக வாகன அணியை ஏற்பாடு செய்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் நாயகம் அலுவலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகள் நாயகத்தின் ஏற்பாட்டில் 22லொறிகள் மூலம் நிவாரணப் பொருள்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.

குடாநாட்டைச் சேர்ந்த தனியார் துறையினரும் ஏ9 வீதியூடாக பொருள்களை வாகன அணி மூலம் எடுத்துச் செல்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களான அரிசி,  சீனி, பருப்பு, கோதுமைமா ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரால்  ஏற்பாடு செய்யப்படும் வாகன அணிகள் மூலமாகவும்
ஏனைய பொருள்களை  தனியார் துறையினர் ஏற்பாடு செய்யும் வாகன அணி மூலமாகவும்   குடாநாட்டுக்கு எடுத்துச் செல்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது. யாழ். செயலகத்தினரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திணைக்களமும் இணைந்து தனியார் துறைக்குரிய வாகன அணியை ஏற்பாடுகள்  செய்யவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகன அணிக்குப் புறம்பாக கப்பல் கள் மூலமும் குடாநாட்டுக்குப் பொருள்களை எடுத்துவரும் பணிகள் தொடர்ந்து நடை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் பெயரில் குண்டு மிரட்டல்

kerala-airport.jpgகேரளாவில் உள்ள விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் 3 மணி நேரத்தில் கேரளாவில் உள்ள ஒரு விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம்என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

இது குறித்து கேரள போலீசாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த விமான நிலையங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு பிரிவு போலீசாரும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர். விமான நிலையத்துக்கு வருபவர்கள், பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. புலிகள் பெயரில் குண்டு மிரட்டல் வந்ததால் கேரளாவில் பரபரப்பாக இருக்கிறது.

மகன் சார்லஸ் அந்தோணியுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபாகரன்!

lankadisplaced.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் உள்ள முல்லைத்தீவு பகுதியை கைப்பற்ற சிங்கள ராணுவம் பல முனைகளிலும் தாக்குதல் நடத்தி முன்னேறியது. அங்குள்ள புதுக்குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது விட்டதாக ராணுவம் அறிவித்து உள்ளது.

இதற்கிடையே, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து அவ்வப்போது மாறுபட்ட தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில், பிரபாகரன் புதுக்குடியிருப்பு பகுதியில் தான் இருப்பதாக இலங்கை ராணுவம் கூறி உள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபாகரனையும் அவரது மகன் சார்லஸ் அந்தோணியையும் பார்த்ததாக, அங்கிருந்து வெளியேறி பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வந்துள்ள மக்கள் தெரிவித்ததாக இலங்கை ராணுவம் கூறி உள்ளது

கேரளா மாநில 3 விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு -புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலையடுத்து நடவடிக்கை

kerala-airport.jpgபுலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலையடுத்து இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள மூன்று சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன

திருவனந்தபுரம், கொச்சின் கரிப்பூர் ஆகிய விமான நிலையங்கள் மீது எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுப் பிரிவினர் தெரிவித்ததையடுத்தே இவற்றின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை பாதுகாப்பு நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவித்தலையடுத்து இந்த மூன்று விமான நிலையங்களுக்குமான மேலதிக பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேரளா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நலன்புரி முகாம்களிலுள்ள சிறுவர்,பெண்களை உளத்தாக்கத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை – யுனிசெப் தெரிவிப்பு

un-logo.jpgவவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள சிறுவர்களையும் பெண்களையும் உடல், உள ரீதியான தாக்கங்களிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வன்னிப் பிராந்தியத்துக்கான யுனிசெப் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாமில் சேவையில் ஈடுபடும் மூவரடங்கிய யுனிசெப் குழுவினரை வன்னிக்கான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே யுனிசெப் அதிகாரிகள் இவ்வாறான பணிகளை தாம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், மோதல்களால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சகல விதமான உதவிகளையும் வழங்கும் அதேநேரம், நீண்டகால நோய்களுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைகளை வழங்க உதவுவதாகவும் யுனிசெப் தெரிவித்தது.

இதேவேளை, இச்சந்திப்பின்போது கருத்துத்தெரிவித்த கட்டளைத் தளபதி ஜெகத் ஜெயசூரியா, யுனிசெப்பின் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாகவும் யுனிசெப் அதிகாரிகளுக்கான பாதுகாப்புகளைப் பலப்படுத்துவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறுவர் போராளிகள் சகலரையும் ரி.எம்.வி.பி. விடுவித்துவிட்டது – கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

cm-ep.jpgரி.எம்.வி.பி. தம்மிடமிருந்த அனைத்து சிறுவர் போராளிகளையும் விடுவித்துவிட்டது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வியாழக்கிழமை திருகோணமலை வெல்கம் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

நீதி அமைச்சர் சுகத் கமலத், கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, யுனிசெப் திருமலை மாவட்டத் தலைமைப் பிரதிநிதி ஜொய்ஸ் கச்சாரி ஆகியோர் முன்னிலையில் இவ்வறிவிப்பினை வெளியிட்டார். இதற்காகவே, இச்செய்தியாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளின் பெயர்ப்பட்டியலை முதலமைச்சர், பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அந்நிகழ்வில் கையளித்தார். சிறுவர் போராளிகள் தமது அமைப்பில் இருப்பதாக இதுகாலவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கிவிட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, நீதி அமைச்சின் செயலாளர் சுகத் கமலத், யுனிசெப் அமைப்பின் திருமலை மாவட்டப் பிரதிநிதி ஜொய்ஸ் கச்சாரி ஆகியோரும் பேசினர். இந் நிகழ்வின் பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ” மாணவி வர்ஷாவின் கொலை குரூரத்தனமானது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இச்சம்பவத்துக்கும் ரி.எம்.வி.பி.க்கும் சம்பந்தமே இல்லை. எமது அமைப்பின் உறுப்பினர் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர் எமது அமைப்பின் உறுப்பினர் என்று வெளியான தகவல் பிழையானது. அந்த நபர் எமது உறுப்பினர் அல்ல அவர் தேர்தல் காலத்தில் வேலை செய்தவராக இருக்கலாம். திருமலையில் உள்ள ரி. எம். வி. பி. அலுவலகங்கள் எல்லாம் இப்போது வேறு கட்சியின் அலுவலகங்களாக மாறிவிட்டன. நாம் மக்களிடமிருந்து வரி சேகரிக்க வேண்டிய தேவையில்லை. மக்கள் எமது நிலையைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்’ என்றும் முதலமைச்சர் கூறினார்.

“நான் இனவாதத்தை ஆதரிக்கும் நபர் அல்ல” என ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தெரிவிப்பு

tnayagam.jpg“நான் இனவாதத்தை ஆதரிக்கும் நபர் அல்ல” என ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன் அவர் விடுத்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது .

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அங்கம் வகித்த காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் (OPFMD) என்ற அமைப்பிற்கு பல்வேறு வழிகளில் ஊடக ரீதியான பங்களிப்பை தாம் வழங்கியுள்ளதாகவும் மேலும் ஜனாதிபதியும், வாசுதேவ நாணயக்காரவும் எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் போது மனித உரிமை மீறல்கள் குறித்து போராட்டங்களை வழிநடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் அவலங்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து அவற்றை ஜெனீவாவிற்கு எடுத்துச்செல்ல தாம் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து தாம் தமது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்த போதிலும் அவை பின்னர் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலத்தில் தாம் மேற்கொண்ட ஊடகம் சார் நடவடிக்கைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை சட்டத்திற்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்குமூலம் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எழுதப்பட்டது என்றும், தமது முதன்மை மொழியான ஆங்கிலத்தில் வாக்குமூலத்தை எழுத அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.