கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் வியாழக்கிழமை குடிநீரென நினைத்து தவறுதலாக நச்சுத்திராவகத்தை அருந்திய இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். நோயாளர்களைப் பார்வையிடுவதற்குச் செல்வோர் தங்கியிருக்கும் பகுதியில் பொறுப்பற்ற விதத்தில் குடிநீர்ப் போத்தலில் இந்த நச்சுத் திராவகம் வைக்கப்பட்டிருந்ததே இந்தத் துயர சம்பவத்திற்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
நோய்வாய்ப்பட்டு பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர் ஒருவரைப் பார்வையிட வேறு சிலருடன் சென்ற இந்த யுவதி நோயாளர்களை பார்வையிடுவோர் தங்கியிருக்கும் பகுதியில் இருந்துள்ளனர்.
அவ்விடத்தில் குடிநீர் போத்தல் ஒன்று (மினரல் வோட்டர் போத்தல்) இருக்கவே தன்னுடன் வந்தவர்களது குடிநீர் போத்தலென நினைத்து அதிலிருந்ததை அந்த யுவதி குடித்துள்ளார். ஆனால், அதிலிருந்ததோ நச்சுத்திராவகம் நிலத்தை மெருகூட்டுவதற்காக (பொலிஷ்) குடிநீர் போத்தலினுள் அந்த திராவகத்தை வேலையாட்கள் அங்கு வைத்திருந்துள்ளனர்.
அதிலிருந்ததை அந்த யுவதி குடித்ததும் அவருக்கு தலைசுற்றலுடன் மயக்கமேற்படவே அவருடன் சென்றவர்கள் அந்த யுவதியை உடனடியாக அந்த ஆஸ்பத்திரியின் வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
5,000 ரூபா அறவிடப்பட்ட பின்னர் அவரை டாக்டர் ஒருவர் பரிசோதித்ததுடன் அது சாதாரண தலைச்சுற்றலெனவும் வேறொன்றுமில்லையென்றும் கூறியுள்ளார். எனினும் அந்த யுவதி பெரும் அவஸ்தைப்படவே டாக்டரிடம் மீண்டும் அவரைச் சோதனையிடுமாறு யுவதியுடன் சென்றவர்கள் கூறவே அவருக்கு ஒன்றும் இல்லை பயப்பட வேண்டாமென டாக்டர் மீண்டும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் நோயாளர்களை பார்வையிடுவோர் அமரும் பகுதிக்கு வந்த ஆஸ்பத்திரி ஊழியரொருவர் அந்தப் போத்தலை அங்கு தேடவே நடந்த விபரத்தை அங்கிருந்தவர்கள் கூறியதுடன் அந்த யுவதியை வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளனர். பதற்றமடைந்த அந்த ஊழியர் உடனடியாக வெளிநோயாளர் பிரிவுக்குச்சென்று அந்த டாக்டரிடம் விடயத்தை கூறியதுடன் அது நிலத்தை பொலிஷ் செய்யப்பயன்படும் நச்சுத் திரவமெனக் கூறவே மயக்க நிலையிலிருந்த அந்த யுவதியை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அந்த யுவதி உயிரிழந்துள்ளார். மேல்மாகாண சபை கல்வித்திணைக்களத்தில் பணியாற்றும் யோ.சண்முகப்பிரியா (32 வயது) என்ற திருகோணமலையைச் சேர்ந்தவருக்கே இந்த பரிதாபநிலை ஏற்பட்டது.