அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆங்கிலம் தெரியாதா? பிரஜாவுரிமை இல்லை – கனடா அறிவிப்பு

flag_canadian.jpgபிரஜா வுரிமை பெறுவதற்கு மொழித்தேர்ச்சி அவசியமென்ற அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் கனடிய, குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னேய், குடியேற்றவாசிகள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சை கற்றிருக்க வேண்டும் அல்லது பிரஜாவுரிமை மறுக்கப்படுவதை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கஸ்சாரியில் இடம்பெற்ற குடிவரவுத்துறை விவகாரம் சம்பந்தப்பட்ட மாநாட்டில் உரையாற்றிய ஜாசன் கென்னேய், புதிய குடியேற்றவாசிகள் இரு மொழிகளில் (ஆங்கிலம், பிரெஞ்சு) ஒன்றை கற்பது அவசியம் என்றும் கனடிய சமூகத்துடன் ஒன்றிணைய அது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரு மொழிகளையும் கற்பதற்கு குடியேற்றவாசிகள் முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்பதற்கு உதாரணமொன்றை கூறிய அமைச்சர் கடந்த ஜனவரி இந்தியாவுக்கு தான் சென்றபோது புதுடில்லியில் குடியேற்றம் தொடர்பான சில நேர்முகப்பரீட்சைகளில் கலந்துகொண்டதாகவும் அச்சமயம் 12 வருடமாக கனடியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள பெண் ஒருவர் ஆங்கில அறிவு சிறிதும் இல்லாமல் இருந்ததையிட்டு ஆச்சரியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தப்பெண் தனது கணவன் கனடாவுக்கு வருவதற்கு “அனுசரணை’ வழங்கியுள்ளார். எனக்கு வியப்பாக இருந்தது கவலையாகவும் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடா பிரஜாவுரிமை பெற உத்தியோகபூர்வ மொழிகளை அறிந்திருப்பது அவசியமென்ற வகையில் குடிவரவுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் 2 1/2 இலட்சம் பேர் கனடாவுக்குப் புதிய குடியேற்ற வாசிகளாக வருகின்றனர். 66 ஆயிரம் பேர் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்துகொள்ள வருகை தருகின்றனர். குடும்பத்துடன் இணைந்து கொள்வோருக்கு மொழிப்புலமை அவசியமானதல்ல என்ற ஏற்பாடே இருந்து வருகிறது.

ஒருவரைத் தாக்கிய இரு பௌத்த பிக்குகளையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல நீதிவான் அனுமதி

mihintale.jpgமிகிந்தலை புனித பிரதேசத்தில் வைத்து ஒரு நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரு பௌத்த பிக்குமாரையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அநுராதபுரம் தலைமை நீதிவான் ருஸிரா வெலிவத்தை அனுமதித்தார். இரு சந்தேக நபர்களையும் மீண்டும் மே ஆறாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மிகிந்தலைக்கு அண்மையாகவுள்ள அம்பஸ்தல செய்த்தியா என்ற இடத்தைச் சேர்ந்த தான வீரரத்ன என்ற நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மிகிந்தலை ராஜமகா விகாராதிபதி வலக வெங்குணவேவ தம்மாரத்ன மற்றும் மிகிந்தலை சீலரத்ன தேரர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து இவர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இரு பௌத்த பிக்குகளுக்காகவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, சிரேஷ்ட சட்டத்தரணியான சந்தான வீரக்கோன், டாக்டர் ராஜா ஜோன் புள்ளேயின் வீட்டைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முறைப்பாட்டாளரான சந்தான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மிகிந்தலை சீலரத்ன தேரரின் சாட்சியத்திலும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் ‘சுற்றாடல் நட்பு’ சேவை ஆரம்பம்

sri-lanka-air-lanka.jpgஸ்ரீலங்கன் விமான சேவையின் ‘சுற்றாடல் நட்பு’ விமான சேவை முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் (21) பிற்பகல் 12.35 மணியளவில் பிரெங்பொட் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ. எல். 557 என்ற விமானத்தின் மூலம் முதலாவது பயணிகள் குழு புறப்பட்டது.

சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் ‘சுற்றாடல் நட்பு’ என்ற விமான சேவையை தெற்காசிய வலயத்தில் ஆரம்பித்த முதலாவது நாடு இலங்கையாகும் என்று ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஜ் குணவர்தன தெரிவித்தார்.

அமெரிக்கா நிஜமாக மாறினால் இரானும் மாறும் என்கிறார் கமெனி

_khamenei.jpgஇரானுடனான உறவில் ஒரு புதிய துவக்கத்தை அமெரிக்கா விரும்புகிறது என்று அதிபர் ஒபாமா கூறியிருந்தமைக்கு பதில் தரும் விதமாக கருத்து வெளியிட்டுள்ள இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இரான் தொடர்பில் அமெரிக்கா தனது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நிஜமாகவே மாற்றிக்கொண்டால், இரானும் மாறும் என்று தெரிவித்துள்ளார்.

வெறும் வாய் வார்த்தைகள் என்று குறிப்பிட்டு அவை மட்டும் போதாது என்றார் அவர். இரான் மீதான பொருளாதாரத் தடைகளை, இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் நிபந்தனைகளற்ற ஆதரவு என்று குறிப்பிட்டு அவ்விவகாரம் போன்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் நிஜமான மாற்றங்கள் எதனையும் தான் இதுவரைக் கண்டிருக்கவில்லை என்றும் கமேனி கூறியுள்ளார்.

அமெரிக்க இரான் உறவில் முப்பது ஆண்டு காலமாக நீடித்துவரும் பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர தான் விரும்புவதாக அதிபர் ஒபாமா வீடியோ உரையில் பேசியிருந்தற்கு அடுத்த நாள் அயதுல்லாவின் கருத்துகள் வெளியாகியுள்ளன.

1625 தாதியருக்கு இன்று நியமனம்

sri-lanka-hospitals.jpgஅரசாங்க சுகாதார சேவைக்கு 1625 தாதியர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான நிய மனக் கடிதங்கள் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று (23ம் திகதி) கொழும்பில் வழங்கப்படவிருக்கிறது.

மருதானை, எல்பின்ஸ்டன் திரையரங்கில் காலை 10.00 மணிக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் இத்தாதிரியருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. இன்று நியமனம் பெறுபவர்களில் 110 தாதியர் வடமாகாண ஆஸ்பத்திரிகளிலும், 260 தாதியர் கிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதேநேரம் 28 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு 25 சிங்கள மொழி தாதியர் கடமைக்கென நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார்: நரேந்திரமோடி 23.03/06

_ipl_graphic_.jpgஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10ந் தேதி முதல் மே 24ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடப்பதால் பாதுகாப்பு அளிப்பது கடினம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
 
இதையடுத்து போட்டி அட்டவணையை மாற்றும்படி அறிவுறுத்தியது. ஆனால் 3 முறை மாற்றப்பட்டும் மத்திய உள்துறை அமைச்சகம் அதை ஏற்க இயலாது என்று கூறியது. இதை தொடர்ந்து இன்று நடந்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்றும், இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடு பாதுகாப்பு தர முடியாதது வெட்கக்கேடு. காமன்வெல்த் போட்டிகளுக்கு மட்டும் பாதுகாப்பு தர முடியுமா? என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் நாட்டின் மானத்தை காப்பாற்ற குஜராத் அரசு ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு தர முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த குமார சுவாமி நிவாரண கிராமத்தில் மக்களை தங்கவைக்கும் பணிகள் ஆரம்பம்

_mullai_.jpgவன்னி யிலிருந்து வரும் மக்களை தங்க வைப்பதற்கென வவுனியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிவாரணக் கிராமமான ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்தில் மக்களை தங்கவைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 849 குடும்பங்களைச் சேர்ந்த 3215 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார். இக்கிராமத்துக்கு நேற்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் விஜயம் மேற்கொண்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்ந்தார். இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் தடையின்றி துரிதமாக வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

வவுனியாவுக்கு இதுவரை 40 ஆயிரம் பொதுமக்கள் வந்துள்ளதோடு அவர்கள் தாங்களாகவே சமைப்பதற்குத் தேவையான பொருட்கள் வழங்கும் நடவடிக்கை புதன் கிழமைக்கு முன் பூர்த்தி செய்யப்பட உள்ளன. நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் புதன்கிழமை முதல் தாங்களாகவே சமைக்க உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார். இதேவேளை வவுனியா வந்துள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தலைமையில் வவுனியா கச்சேரியில் நடைபெற்றது.

வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் அதிகளவான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்கள் என நாம் அறிகின்றோம். இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களில் மட்டும் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை நான் சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்ட தூரம் நடைபவனியாக வந்து இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளார்கள் என்பதை அறிந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த உயர்மட்ட மகாநாட்டில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம், தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.ஆனந்த குமார சுவாமி கிராமத்தில் உள்ள சில நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சையளிக்க தேவையேற்படின் அவர்களை மன்னார் வைத்திய சாலைக்கு உடன் அனுப்பு வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை அங்கவீனமுற்ற வர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் என்பனவற்றை யும் அமைச்சர் வழங்கி வைத்தார். இதேவேளை அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்தார். நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. மக்களுக்கு இதன்போது குடிநீர் வசதி அளிப்பதற்கென 2 பவுசர்கள் வழங்க அரச சார்பற்ற நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மூன்றாவது நிவாரணக் கிராமம் அமைப் பதற்கான பணிகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதோடு இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

புதியதொரு நாட்டை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியினதும் அரசினதும் நோக்கம் – அமைச்சர் டளஸ்

நாட்டினதும் மக்களினதும் தேவைக் கேற்ப புதியதொரு நாட்டை கட்டியெழு ப்புவதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கமாகும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

கடந்த காலத்தையும் கடந்த காலத்தில் நடைபெற்ற தவறுகளையும் பற்றி பேசிக் காலத்தை கழிப்பதைவிட சிறந்ததொரு எதிர்காலத்திற்காக திட்டமிடுவது காலத் தின் கட்டாயத் தேவையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் www.sandanaya.lk என்ற தேர்தல் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கும் பிரதான வைபவம் கடந்த வெள்ளிக் கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது. அலரி மாளிகையிலிருந்தவாறே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்மதி ஊடாக இணையத் தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும இங்கு மேலும் உரையாற்றுகையில் :- வீணான செலவுகளை தவிர்த்து இந்த இணையத் தளத்தின் ஊடாக எமது சகல பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளோம். எங்களது சகலவிதமான புதிய திட்டங்களையும் எமது ஆதரவாளர்களுக்கு இதன் மூலம் தெளிவுபடுத்தவுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக் கைகள், பொருளாதார அபிவிருத்தி திட்டம், அரசியல் மேம்பாடு என்ற பல வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தலை மையிலான அரசாங்கம் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது என்றும் தெரிவித்தார்.

மடகாஸ்கர் அதிபராக அண்ட்ரி ரஜோலீன் பதவியேற்பு

andry.jpgமட காஸ்கர் தலைநகரின் முன்னாள் மேயரான அண்ட்ரி ரஜோலீன், நாட்டின் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  நாட்டின் முக்கிய விளையாட்டு மைதானத்தில் நடந்த பதவியேற்பு வைபவத்தில், தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ரஜோலீன் பதவியேற்றார்.

வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொள்வதை புறக்கணித்திருக்கிறார்கள். அதிபர் மார்க் ரவலொமனானிடம் இருந்து நான்கு நாட்களுக்கு முன் ரஜொலீன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. இது ஒரு சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவை கூறுகின்றன.

மடகாஸ்கரின் உறுப்புரிமையை ஆப்பிரிக்க ஒன்றியம் இடைநிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உதவிப் பொருட்கள் மடகாஸ்கருக்குச் செல்வதை அமெரிக்காவும் நோர்வேயும் நிறுத்தியுள்ளன.

இந்தியாவில் தேர்தல்; இன்று முதல் 30 வரை வேட்பு மனு

india_.jpgஇந்தியா வின் 17 மாநிலங்களிலுள்ள 124 பாராளுமன்றத் தேர்தல் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நடைபெறவிருக்கும் முதல் கட்ட தேர்தலுக்கு இன்று திங்கட் கிழமை முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவிருக்கின்றது.

வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் தினமாக மார்ச் 31ம் திகதியும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் தினமாக ஏப்ரல் 2ம் திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 16ம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். இதன் நிமித்தம் வேட்பு மனுக்களை தயாரிப்பதிலும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளிடையே இழுபறி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமைகளுக்கு அடுத்துவரும் சில தினங்களுக்குள் தீர்வு காணப்படலாமென அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து கட்டமாகத் தேர்தல் நடாத்தப்படவிருக்கிறது.

முதற்கட்டத் தேர்தல் ஆந்திரமாநிலத்தில் 22 தொகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16 தொகுதிகளிலும் மராட்டிய மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், சதீஷ்கார் மாநிலத்தில் 11 தொகுதிகளிலும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 06 தொகுதிகளிலும், அஸாம் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும், அருணாசலம் பிரதேச மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், மேகாஸா மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், லட்சத்தீவு மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மிசோரம் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், நாகலாந்து மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மணிப்பூர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெற விருக்கிறது.

இதேவேளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்க ளிலுள்ள 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி நடைபெறவிருக்கிறது.  இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட விருக்கிறது.