அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

போலி பிரிட்டிஷ் விசா ஒத்திவைக்கப்பட்ட சிறை

court222.jpgபோலி பிரிட்டிஷ் விசாவுடன் லண்டன் செல்ல முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகி டீ அல்விஸ் 50 ஆயிரம் ரூபா அபராதமும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்தார்.  2008 ஏப்ரல் 24 ஆம் திகதி இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இவ்வாறு நீதிவான் தீர்ப்பு வழங்கினார்.

வெளிநாட்டுப் பயண முகவர் ஒருவரே தனக்குப் பயண ஏற்பாடு செய்துதந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலீடுகளுக்கு வரிச்சலுகை – நிதி அமைச்சு தகவல்

ep-map.jpgகிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கிழக்கின் உதயம  வேலைத்திட்டத்தின் கீழ் இந்த முதலீட்டு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் 3 கோடி ரூபாவுக்கு குறைவில்லாத முதலீடுகளுக்கு வருமானவரி விலக்களிக்கப்படும். இயந்திரங்கள் இறக்குமதி மீதான வரி விதிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சு மேலும்  தெரிவித்துள்ளது.

அரசு மேலதிக வரிச்சுமைகளை சுமத்தாது; மானியங்களும் குறைக்கப்படமாட்டா சபையில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

26parliament.jpgதுண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக எக்காரணம் கொண்டும் அரசாங்கம் மக்கள் மீது மேலதிக வரிச்சுமைகளை சுமத்தவோ மானியங்களை குறைக்கவோ நடவடிக்கை எடுக்காது. இந்த வருட முடிவுக்குள் வருமான இலக்குகளை எட்ட ஆவன செய்யப்படுமென அரச வருவாய்த்துறை அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (20) பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க வருமானம் குறைந் துள்ளதால் துண்டு விழும் தொகையை 6.5ல் இருந்து 7 வரையாக உயர்த்த நேரிடுகிறது. ஆனால் இந்த வருட முடி வுக்குள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள வருமான இலக்குகளை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

துண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக புதிதாக வரிகளை அமுல்படுத்தவோ மானியங்களை குறைக்கவோ மாட்டோம். வருவாயை அதிகரிக்க அரசாங்கம் சகல நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளது.

2003ம் ஆண்டில் 105 வீதமாக இருந்த கடன் வீதம் தற்பொழுது 81 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வருமானம் வேகமாக அதிகரித்து வருவதோடு வருமான முரண்பாடுகளை குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அரசாங்க வருவாய் 255 பில்லியன் ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் துண்டுவிழும் தொகையை நிரப்புவதற்கு அரசாங்கம் வரிகளை அதிகரிக்கவும் மானியங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டார்.

சிறுமிகளின் மரணம்; விசாரணைக்கு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் – ஆகஸ்ட் 23இல் மஸ்கெலியாவில்

girl2222.gifமஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தைச்சேர்ந்த சிறுமிகள் இருவர் கொழும்பில் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பில், உரிய விசாரணைகளைப் பக்கச்சார்பின்றி நடத்தக்கோரி மஸ்கெலியா நகரில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடப்போவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.  திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சிறுமிகளின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சிவசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு திகாம்பரம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; குடும்பத்தின் வறுமைகாரணமாக கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமிகள் இருவர் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையானது பேரதிர்ச்சியைத்தருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தாம் பெரும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளதாக மரணமான சிறுமிகளின் பெற்றோர் எமது கவனத்துக்கொண்டு வந்துள்ளனர். கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் யுவதிகள் இளைஞர்கள் சொல்லொணா துயரங்களுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் கல்விகற்க வேண்டிய வயதிலுள்ள சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு தோட்டப்பகுதி சிறுவர்களை வெளிமாவட்டங்களில் வீட்டு வேலைக்கு அமர்த்துவதற்கு தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த ஒரு சிலர் உடந்தையாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், முள்ளுகாமத்தோட்டத்தைச்சேர்ந்த இரண்டு சிறுமிகளின் மரணமானது, முழு மலையக தமிழ் சமூகத்துக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமது வறுமையைப்போக்கிக் கொள்வதற்காக தலைநகரம் சென்ற சிறுமிகளின் இந்தப்பரிதாபகரமான நிலைமைக்கு யார் காரணம், என்பதை கண்டறிந்து சட்டத்துக்கு முன்நிறுத்துவதற்கு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு இவ்வாறு இடம்பெற்ற இந்த அநீதிக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில், மஸ்கெலியா பிரதேச பொதுமக்கள், மலையக சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.

தென்னிலங்கை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கும் “தண்டனை விலக்கீட்டு உரிமை’

court222.jpgஇலங் கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது குற்றச் செயல்களுக்கு தண்டனையிலிருந்தும் விலக்கீட்டு உரிமை பெறும் விவகாரம் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்துவதாக உருவாகியுள்ளது. 1971 இல் மாக்ஸிஸ்ட் கிளர்ச்சி ஏற்பட்ட காலம் முதல் பாதுகாப்பு சேவைத்துறையின் உறுப்பினர்கள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் நாட்டின் செல்வாக்கும் அரசியல் ரீதியில் தொடர்பும் உடைய வட்டாரங்களில் தந்திரோபாயமான ஆதரவுடன் சித்திரவதை அல்லது தண்டனைகளை முன்னெடுத்துச் சென்ற, செல்கின்ற வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட அல்லது வர்த்தக அல்லது அரசியல் காரணங்களுக்காக இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு விலக்கீட்டு உரிமை பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பொறுமை காக்கப்படும் நிலைமை இல்லாமல் போய்விடும் நிலைமை உருவாகியிருக்கிறது. தண்டனை விலக்கீட்டு உரிமையானது முதலீட்டாளர்களுக்கு நட்புறவுடனான நாடு என்ற பிரதிமையை இலங்கை மீள ஏற்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிக்கு சவாலாக உள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மீது பொதுமக்கள் விசனமடைந்துள்ளதை வெளிக்காட்டுவதாக ஆசிரியர் தலையங்கங்கள் வெளிவந்திருக்கின்றன. யுத்தகாலத்தில் விமர்சிப்போரை துரோகிகளென பட்டியலிடும் நிலையில் இது அபூர்வமாக உள்ளது. தப்பிச் செல்ல முடியாத யதார்த்தம் என்னவெனில் இயல்பு நிலை அல்லது இயல்பு நிலையை அண்மித்த நிலை உருவாக்கப்பட்ட நிலைமையில் மக்கள் தமது கண்களை திறந்து வைத்திருக்கின்றனர். சாதாரண மக்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் இப்போது தமது கண்களை திறந்துள்ளனர் என்று ஞாயிறு ஐலண்ட் பத்திரிகை இந்த வாரம் தெரிவித்துள்ளது.  இப்போது எமக்கு தேவை…. தெளிவான முறையில் சிதைவடைந்திருக்கும் முறைமையை துப்புரவு படுத்துவதே என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாணவன் ஒருவனை கடத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் திங்கட்கிழமை 11 பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. செல்வாக்குமிக்க பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனுடனான தகராறு தொடர்பாகவே நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவை விடுத்திருந்தது. சிரேஷ்ட அதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார். ஆனால் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் பொதுமக்கள் பொலிஸ் நிலையமொன்றை முற்றுகையிட்டு ரயில்களை தடுத்தனர். இருவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரியின் பெண் சிநேகிதியை இந்த ஆட்கள் கடுமையாக விமர்சித்திருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

பொலிஸார் அவர்களை கைது செய்திருந்ததன் பின்னர் இருவரின் சடலங்கள் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. பொறுப்பதிகாரி உட்பட 7 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். குற்றத் தொடர்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் முறைமையானது சிலசமயம் ஸ்திரமின்மையையும் குழப்பத்தையும் தோற்றுவித்திருக்கலாம். இதற்கு இலங்கையிலுள்ள பொலிஸார் அதிகளவு பங்களிப்பை செலுத்தியுள்ளனர் என்று ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்த பசில் பெர்னாண்டோ கூறியுள்ளார். பாதாள உலகத்தவருக்கு எதிரான யுத்தத்தை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

குற்றச்செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. கிடைக்கும் சான்றாதாரத்தின் அடிப்டையில் எந்த நிலைமையில் அல்லது சிரேஷ்ட தரத்தில் இருந்தாலும் குற்றச் செயலில் ஈடுபட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் தயங்கமாட்டோம் என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறியுள்ளார்.

பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயரிடுங்கள் : -வைகோ

vaiko-pira.jpgதேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டடிருந்த பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் பொருட்டு புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வொன்றில் பேசிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வை.கோபாலசாமி தமிழ் நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என பெயரிடுங்கள் என வேண்டியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றை ஆதரித்து பேசுவது குற்றம் என்பது ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் தேர்தலில் வன்முறை – 4 இடங்களில் குண்டுத்தாக்குதல்

ஆப்கா னிஸ்தானின் தலை நகர் காபூல் உட்பட 4 இடங்களில் இன்று தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான் தீவிரவாதிகள் விரட்டப்பட்ட பிறகு 2ஆவது முறையாக இன்று அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா உட்பட 41 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் கடந்த 2 நாட்களாக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் காபூல் நகருக்குள் புகுந்து ஜனாதிபதி மாளிகை மீது ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள். நேற்றும் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் மீண்டும் வன்முறையில் இறங்கினார்கள். தலைநகரம் காபூல் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை.

தேர்தல் பாதுகாப்பு பணியில் அமெரிக்கக் கூட்டு படைகள் உட்பட 3 லட்சம் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள 8 மாவட்டங்களில்  இன்று வாக்குப்பதிவு நடக்கவில்லை 

வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கான தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையம்!

anurapriyadarsanayapa.jpgகொக்கா வில் ஒலி, ஒளிபரப்பு பரிவர்த்தனை மத்திய நிலையத்துக்கான அடிக்கல்லை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யும் ஊடகத்துறையமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் நாட்டினர். நேற்று நண்பகல் 12.45 அளவில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் 180 நாள் திட்டத் தின்கீழ் வட மாகாண ஒலி, ஒளிபரப்பு தொலைத் தொடர்பு தேவைகளை; பூர்த்தி செய்யும் வகையில் 400 மில்லியன் ரூபா செலவில் உருவாகவுள்ள 172 மீற்றர் உயரம் கொண்ட தொலைத் தொடர்பு கோபுரத்துடனான பரிமாற்று நிலையம் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி,  முல்லைத்தீவு,, யாழ்ப்பாணம் ஆகிய  மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையம் செயற்படவுள்ளது. அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் உட்பட அனைத்து தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் இதனூடாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில்,  அமைச்சர்கள் ரோஹித்த அபேகுணவர்தன,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,  இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், ஐ.ரீ.என். ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புலிகள் மீதான தடை இந்தியா நீக்காது

pathmanathan.jpgஇலங் கையில் கைது செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் குமரன் பத்மநாதன் அல்லது கே.பி.யை நாடு கடத்துமாறு இந்திய விசாரணை முகவரமைப்புகள் கோரிக்கை விடுக்கும் சாத்தியம் உள்ளது.  இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையின் பின்னணியில் உள்ள “உண்மைக் கதை’யைக் கண்டுபிடிக்க இந்த வலியுறுத்தலை இந்திய விசாரணை முகவரமைப்புகள் விடுக்கும் சாத்தியம் இருப்பதாக “டெக்கான் றெரால்ட’ பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிருடன் இருக்கும் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் பத்மநாதனாகும். 1991 இல் தமிழ் நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட சதியாளர்களுக்கு இடவசதி வழங்கியதில் பத்மநாதன் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாக அறியவருவதாகவும் தமிழ் நாட்டிற்குப் பல தடவைகள் அவர் வருகை தந்ததாகவும் புலி உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாகவும் வட்டாரங்கள் கூறியுள்ளன. பத்மநாதனுக்கு பிடியாணை பிறப்பித்த பின்னர் பத்மநாதனைத் தேடப்படும் குற்றவாளியென்று இன்ரர்போல் அறிவித்திருந்தது.

குற்றச்சதி, ஆயுதக் கடத்தல், இந்திய ஆட்புல எல்லை வெடிபொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக புலிகளின் தலைவரை இன்ரர்போல் கைது செய்ய வேண்டுமென இந்தியா விரும்பியது.  பத்மநாதன் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் ஆர்வம் குறித்து கேட்கப்பட்ட போது, புலிகளின் தலைவர் இந்தியாவில் தேடப்பட்டவர் என்று இந்திய மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.

பத்மநாதனை தனது பாதுகாப்பில் கைது செய்து வைத்திருக்க இந்தியா முயற்சிக்குமா என்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்திருக்கும் பிள்ளை, “உடனடியாக இல்லை. அவர் இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஓடிவிட மாட்டார்’ என்று பிள்ளை கூறியுள்ளார். உரிய வேளையில் அந்த நடவடிக்கை இடம்பெறும் என்பதை இவர் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாவிடினும் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு நிதி, ஆயுதங்கள், வெடிமருந்துகள் தொடர்பில் உபகரணங்களை வழங்கியதில் கே.பி. முக்கிய பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுதாரி தனு அணிவதற்கு ஆர்.டி.எக்ஸ். மற்றும் சி4 அங்கியையும் சிவராசனுக்கு ஏ.கே47 மற்றும் செக் 9.மி.மீ. பிஸ்ரல்களையும் கே.பி. வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது

ஐ.நா. தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர் பான் கீ மூன் – இலங்கை விவகாரத்தையும் சுட்டிக்காட்டும் நோர்வே இராஜதந்திரி

இலங்கை உட்பட சர்வதேச விவகாரங்களை வழிநடத்திச் செல்வதற்குரிய தலைமைத்துவத்தை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்றும் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியாதவரென்றும் அதிகாரம் இல்லாதவராகவும் முற்கோபக்காரராகவும் இருப்பதாகவும் ஐ.நா.வுக்கான நோர்வேத் தூதுவர் மோனா ஜூல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நோர்வேயின் வெளிவிவகார அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மோனா ஜூல் இதனை தெரிவித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகையான “அவ்ரென்பொஸ்ரன்’ நேற்று புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

பான் கீ மூன் எப்போதும் சடுதியாக ஆத்திரப்படுபவர் என்றும் அவரிடம் பணியாற்றுவது கடினம் என்றும் தலைமைத்துவத்தைப் வெளிப்படுத்த போராடுவதாகவும் பற்றுதிப்பாடு குறைவாக அவரிடம் இருப்பதாகவும் மோனா ஜுல் இரகசியமான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக “அவ்ரென் பொஸ்ரன்’ பத்திரிகை கூறியுள்ளது. “முன்னொருபோதுமில்லாத வகையில் உலக நெருக்கடிக்கு ஐ.நா.வானது பலதரப்பட்ட தீர்வுகளைக் காணவேண்டிய தருணத்தில் பான் கீ மூனும் ஐ.நா.வும் கவனிக்கத்தக்க முறையில் பிரசன்னமாகியிருப்பதில்லை என்று ஜூல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்னும் இரு வாரங்களில் ஒஸ்லோவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மியன்மார் மற்றும் இலங்கைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அண்மையில் மேற்கொண்ட விஜயங்களின் போது அவரின் பங்களிப்புத் தொடர்பாக நோர்வை இராஜதந்திரி ஜூல் விமர்சித்திருக்கிறார். ஐ.நா.தலைவரென்ற தமது தகைமையிலிருந்து அவர் தோல்வி கண்டுள்ளதாக ஜூல் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜூலின் விமர்சனம் குறித்தோ அல்லது பான் கீ மூனின் செயற்பாடு தொடர்பாகவோ தான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார்ஸ்ரோர் அவ்ரென் பொஸ்ரன் பத்திரிகைக்குக் கூறியுள்ளார். அதேசமயம், இராஜதந்திரி ஒருவரின் பங்களிப்பானது மனநிலை தொடர்பான அறிக்கையிடுவது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

“சகல விடயங்களுமே செயலாளர் நாயகத்தைச் சார்ந்ததல்ல. ஐ.நா.வின் உறுப்பினர்களாக நாடுகள் பல உள்ளன. அவையாவற்றினதும் கருத்தொருமித்த அபிப்பிராயத்திற்கு இணங்கவே ஐ.நா.நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பது எனது கருத்து, என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.