கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

சங்ககராவின் முடிவு தவறானது : ஷேவாக்

catak.jpgஇலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  316 இலக்கை இந்திய அணி 11 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்த வெற்றிக்கு காம்பீர் (137 பந்தில் 150 ரன். 14 பவுண்டரி), வீரட் கோக்லி (114 பந்தில் 107 ரன். 11 பவுண்டரி, 1 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டமே காரணம். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 214 பந்தில் 224 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 5-வது முறையாக இலங்கைக்கு எதிராக தொடரை வென்றது.

வெற்றி குறித்து இந்திய அணியின் பதில் கேப்டன் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது, இலங்கை கேப்டன் “டாஸ்” வென்று முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு தவறானது. ஏனென்றால் பனி பொழிவில் பந்து வீச்சாளர்கள் சரியாக வீச இயலாது. பந்தை “கிரீப்” செய்வது கடினம். 2-வது பவுலிங் செய்தால் இந்த நிலைமை இருக்கும் என்று ஏற்கனவே அறிந்து இருந்தோம். நான் “டாஸ்” ஜெயித்து இருந்தாலும் முதலில் பீல்டிங்கைதான் தேர்வு செய்து இருப்பேன். தொடக்கத்தில் எந்தவித ஈரப்பதமும் இல்லாததால் எங்களது சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக வீசினார்கள்.

315 ரன்னை மிகப்பெரிய ஸ்கோராக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் எங்களது பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. ஆனால் எங்களது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. நானும், தெண்டுல்கரும் எளிதில் ஆட்டம் இழந்துவிட்டோம். காம்பீரும், கோக்லியும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரது ஆட்டம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கோக்லி சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே அவர் இந்த தொடரில் அரைசதம் அடித்து இருந்தார். சாம்பியன் டிராபி போட்டியில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தார்.

இளம் வீரர்களான கோக்லி, ரெய்னா, ஜடேஜா தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை நம்மால் வெல்ல முடியும். கோக்லி திறமையானவர். அவருக்கு காம்பீர் ஆலோசனை வழங்கினார். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை காம்பீர் கோக்லிக்கு வழங்கியதை பாராட்டுகிறேன். தெண்டுல்கரின் ஆலோசனைப்படி தில்சானை தொடக்கத்திலேயே “அவுட்” செய்தோம். அவர் பந்தை இடது கால் பகுதியில் போடுமாறு கூறினார்.

இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த போட்டிக்காக காத்திராமல் கொல்கத்தாவிலேயே வென்று தொடரை வெல்ல விரும்பினேன். நான் விரும்பியபடி நடந்தது. ஏனென்றால் டெல்லி ஆடுகளம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல இயலாது. கடைசி போட்டியில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இலங்கைக்குதான் நெருக்கடி என்றார்.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறும்போது, எங்களது பந்து வீச்சு சரியில்லை. நேர்த்தியாக வீசவில்லை என்றார்.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று டெல்லி பெரோசா கோடலா மைதானத்தில் நடக்கிறது.

தமிழ் மக்கள் வாக்குகள் யாருக்கு?: குலன்

Sivajilingam_M_Kஎதிர்வரும் தை மாதம் இலங்கைக்கான ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் நிற்கதான் வேண்டுமா? இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன? என்னவிதமான எதிர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்? சிவாஜிலிங்கம் நிற்பதனால் அரசியல் உலகிற்கு நாம் காட்டும் கணக்கு என்ன? எதை மக்கள் விரும்புகிறார்கள்? என்பது போன்ற தகவல்களை என் அறிவுக்கு எட்டிய வரையில் தேசம்வாசக வட்டங்களுக்குச் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

தமிழர் தேசிய கூட்டமைப்பு (த.தே.கூ-ரிஎன்ஏ) தனது பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாத பட்சத்தில் தான் சுயேட்சையாகத் தேர்தலில் நிற்பேன் என்று கொடுத்தவாக்கைக் காப்பாற்ற சிவாஜிலிங்கம் (சிவாஜி) தேர்தலில் நிற்கிறார். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவது என்பது ஒரு பெரியவிடயம். சிவாஜியின் கூற்றுப்படி நிச்சயமாக ஒரு தமிழன் தேர்தலில் நிற்கவேண்டுமா? ஏன்? வெற்றி பெறமுடியாத தேர்தலில் நிற்பதால் என்ன பலன்?

தேர்தல் வெறும் வெற்றிக்காகவும் ஜனாதிபதியாவதற்கும் நடத்தப்படும் ஒன்றல்ல. மக்களின் கருத்தையும், நிலைப்பாட்டையும், தேவைகளையும், அபிலாசைகளையும், உரிமைகளையும் வெளிக்கொணரும் உண்மை ஊடகமே தேர்தல். த.தே.கூட்டணியினர் கடைசி நிமிடம்வரை அரசியல் நிலைப்பாடு எதுவுமின்றி சரியான தெளிவான முடிவின்றி நின்ற வேளைதான் சிவாஜி தன்முடிவை எடுத்தார். இதுகூட எமக்கு ஒரு சரியான பதிலைச் சொல்கிறது. த.தே.கூ யிடம் இன்னும் சரியான அரசியல் போக்கும், தெளிவும் இல்லை என்பது தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. இத்தேர்தலில் நிற்பதாலும், மறுப்பதாலும் எற்படும் நன்மை தீமைகளை தமிழ்மக்களுக்கத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை தமிழர்களின் பெருங்கூட்டமைப்பான த.தே.கூட்டமைப்புக்கு உண்டு. இதை இவர்கள் சரியாகச் செய்யவில்லை. மாறாக வன்னியில் எம்மக்களை கொன்று குவித்து இரத்தம் தோய்ந்த கைகளுடன் நிற்கும் மகிந்த, சரத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தையைப் பிழை எனக்கூறவில்லை. இது இராஜதந்திர நடவடிக்கைகளின் முன்னெடுப்பாக இருந்தாலும் மக்கள், மனம், மானம், எதிர்காலம், உணர்வென்றும் பலவிடயங்கள் இருப்பதை மறந்து விட்டார்கள்.

மனுத்தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்ட நிலையிலும், இன்னும் த.தே.கூ தன்முடிவு என்ன? நிலைப்பாடு என்ன? மக்கள் என்ன செய்ய வேண்டும்? தாம் யாரை ஆதரிக்கப் போகிறோம்? தேர்தலை நிராகரிக்கப் போகிறோமா? என்ற எந்த வினாக்களுக்கும் பதில் இல்லாமாலேயே நிற்கிறார்கள். இப்படியான நொண்டிக் குதிரைகளை நம்பி தமிழ்மக்கள் எப்படி அரசியல் ஆற்றைக் கடப்பது?

30 000 தமிழ்மக்களின் ஆண்டுத்திவசம் முடியுமுன்னரே உதிரம் தோய்ந்த முகங்களுடனும், வெட்டி வீழ்திய வாள்களுடனும் வோட்டுக் கேட்டு வந்து நிற்கும் இருபெரும் சிங்களக் கட்சிகளுக்கு எந்த மனத்துடன், எந்த முகத்துடன் வோட்டுப் போடமுடியும்? தமிழ்மக்கள் வேட்டுப் போட்டால் அவர்கள் செய்த கொலைகளை, சர்வதேச போர்குற்றங்களை தமிழர்கள் சேர்ந்து மூடிமறைக்கிறீர்கள் என்று ஆகாதா? தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் தேவையில்லை, சிங்களப் பேரினவாத்திற்கு தலைவணங்கி, தலைகுனிந்து, வெட்டுவாள்களுக்கு இரையாகத் தயார் என்று சொல்லாதா? இப்பெருங் கட்சிகளை விட்டால் வேறு எந்தக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது? விக்கிரமபாகுவின் நவசமாசக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்கிறீர்களா? அதுவும் வெற்றி பெறமுடியாத கட்சியல்லவா?

தமிழர்களைத் தீவீரவாதிகளாக, திராவிடராக துவேசிக்கும் தெற்கில் தனித்து நின்று தமிழ்மக்களின் தனியுரிமை, தேசியம், சுயநிர்ணயம், மனிதம் என்பவற்றைப் பற்றிப் பேசியவர் போராடியவர் விக்கிரமபாகு. இவருக்கு தமிழர்களின் வாக்குக்கள் போவதால் எந்த ஒரு பெருமாற்றத்தையோ திடமான செய்தியையோ யாருக்கும் சமர்பிக்காது. சில தமிழ் சிங்கள வாக்குகளால் திடமான ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை தென்படும். இதனால் சிவாஜி நிற்பதால் புலம்பெயர் தமிழர்களுக்கும், அரசியல் அரங்கிற்கும் தமிழர்களின் செய்தியை வெளிக்கொணர உதவும். அங்குள்ள தமிழ்மக்களின் தீர்ப்புத்தான் எம்மரின் தீர்பாக இருக்கவேண்டுமே அன்றி புலம்பெயந்தவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் ஈழம்வாழ் தமிழ்மக்களின் தீர்வாக இருக்கமுடியாது. இருப்பினும் புலத்துப் பொழுதுபோக்குகள் தேர்தல் விஞ்ஞாபனங்களை உருவாக்கி விளையாடுகிறது. புலி சிதைந்து பூனையாகி பின் பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகும் நிலைதான் இன்று இருக்கிறது.

சிவாஜி தேர்தலில் நிற்பதால் த.தே.கூட்டணியினரும் தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டியவர்களே. இன்நிலையில் த.தே.கூ தன் நடுநிலையைப் பேணி நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி தமிழ்மக்களின் உரிமைகளை, அபிலாசைகளை வென்றெடுக்க இன்று சிவாஜி தேர்தலில் நின்று களம் ஒன்று திறந்தது சிறந்ததே. இதை ஏன் த.தே.கூ விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை. சிவாஜியின் தேர்தல் நிலைப்பாடு இரண்டு பெரும் சிங்களக் கட்சிகளுக்கும் ஈபிடிபி, கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் பெரும் பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது. காரணங்கள் பின்வருமாறு:

தமிழர்களின் வாக்குகளுக்காகவே ஈபிடிபி, கருணா, பிள்ளையானை மகிந்த வைத்திருக்கிறார். தமிழரின் வாக்குக்கள் பிரிக்கப்பட்டோ அன்றேல் மொத்தமாக சிவாஜிக்குப் போடப்பட்டாலோ மகிந்தவின் செல்வாக்கை மேற்கூறியவர்கள் இழப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழர்களின் வாக்குகள் சிதறுண்டு போவதால் 50வீதத்தை ஒரு தனிக்கட்சி எதுவும் பெறாமல் போகும். வோட்டுப்போட்டோர் தொகை அதிகரித்திருக்கும் ஆனால் வோட்டுகள் சிதறிப்போயிருக்கும் 50விதத்தை எப்படித் தேடிப்பொறுக்குவது. இன்னுமொரு காரணம் 22 கட்சிகள் தேர்தலில் நிற்பதால் சிங்கள வாக்குகளும் சிதறுண்டு போகும். அங்கேயும் எப்படி 50வீதத்தைத் தேடுவது? சிவாஜியின் எண்ணம் எதுவாக இருந்தாலும் தேர்தலைக் குழப்பி, கலக்கி விட்டிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிவாஜி தான் இன்றை தேர்தல் கீரோ. இவர் ஜனாதிபதியாகப் போவதில்லை என்பது திண்ணம். ஆனால் அரசியல் உலகிற்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும், பிராந்திய வல்லாதிக்கங்களுக்கும், சர்வதேசத்துக்கும் சுட்டிக் காட்டப்போகும் சமிஞ்ஞைகள் பல. சுருங்கக் கூறின் ஒரு தேர்தல் கலகக்காரனும், பலிக்கடாவும் ஜனாதிபதித் தேர்தலில் நின்ற தமிழனும் சிவாஜி ஆகும்.

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு போனதின் பின்பு தமிழர்களின் தலைகளை உருட்டியே இலங்கையில் தேர்தல் வெற்றிகள் இருந்தன. தமிழ்ஒழிப்பு, சிங்கள சிறீ அமைப்பு, பிராந்தியக் குடியேற்றங்கள், கலகங்கள், கலவரங்கள், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம், சமாதானத்துக்காகப் போர் இப்படியெல்லாம் தமிழர்கள் தலைகளை உருட்டித்தான் சிங்களப்பேரினவாத அரசியல்கட்சிகள் தேர்தலில் தன்தலையை நிமிர்த்தின. இந்தத் தேர்தல் அதைவிட மோசமான ஒன்றே. இம்முறை தாமாகவே தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, மார்புதட்டிப் பெருமைகொண்டு எம்மக்களிடமே வந்த போடு வோட்டு என்று கேட்பதுதான் வேதனைக்குரியது. உன்தாயை, உன்சகோதரனை நான்தான் கொன்றேன் எனக்கு வோட்டுப் போடு என்று கேட்கிறார்கள் போடப்போகிறீர்களா? இவர்களை எப்படி நம்பப் போகிறீர்கள்? எம்மைப் போட்டி போட்டுக் கொன்று பெருமை கொண்டவர்களுக்கு போய் போடுவோமா வோட்டு அல்லது வேட்டு?

வன்னியில் அகற்றப்படாத பிரேதங்கள் இன்றும் மணத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அகதியாய் அடைக்கப்பட்டவர்கள் இன்னும் தம்மனத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவில்லை. சரத், மகிந்த இருவரின் கைகளில் இருக்கும் உங்கள் உறவுகளின் உதிரங்கள் உலகின் கண்ணில் காட்டப்படமுன் மறைத்து, குற்றவாளிகளை மன்னித்து, எறிவதை எடுத்து நக்கி நீங்களே உங்கள் உறவுகளின் உதிரத்தைக் களுவப்போகிறீர்களா?

இன்று சிவாஜி தேர்தலில் நிற்பதால் எமக்குக் கிடைக்கும் சமிஞ்ஞைகளும், அறிந்து கொள்ளக்கூடிய உண்மைகளும்:
1.த.தே.கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. அரசில் தெளிவும், எதிர்காலத் திட்டமும், தீர்க்க தசிசனமும், முடிவெடுக்கும் திறனும் அவர்களிடம் இன்னும் இல்லை என்பது. எதிர்கால அரசியற்பயணம் அவர்களுக்குப் பயமாகவே இருக்கிறது.
2.சிங்களக் கட்சிகளுக்கு எம்மக்கள் பழக்கப்படாது வைத்திருப்பதற்கும் ஒரு வழிசமைக்கப்பட்டிருக்கிறது.
3.சிவாஜி தானே பலிக்காடா ஆவதனால் த.தே.கூட்டமைப்பு தன்னை தமிழர்களின் பிரதிநிதியாகவும் நடுநிலை வாதியாகவும் காட்டிக்கொள்வதூடு நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் பகைமை உணர்வின்றி இராஜதந்திர உறவுகளை தமிழர்களுக்காகப் பேணலாம்
4.தமிழர்களின் வோட்டுக்கள் எம்மக்களைக் கொன்ற உதிரம் தோய்ந்த கைகளுக்குப் போகாமல் காக்கலாம்.
5.சிவாஜிக்கு விழும் வோட்டுகளை வைத்து இன்று தமிழ்மக்களின் மனோநிலை, எதிர்கால எண்ணம், வாக்களிக்காத வாக்களிக்க முடியாதவர்கள் நிலை, போர்குற்றவாளிகளை எப்படித் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள் என்ற சமிஞ்சைகளை நாம் பெறலாம்.
6.தமிழீழம் வேண்டுமா? வேண்டாமா என்று சாட்டுக்கு வோட்டுக்கேட்டு திரியும் புலம்பெயர் அரசியல் பொழுது போக்காளர்களுக்கும் பதில்கள் இங்கே கிடைக்கும். அங்கே வாழும் மக்களின் மனங்களைகளை ஊகிப்பதற்காவது இத்தேர்தல் உதவும். (அங்கே உள்ள மக்களின் தேவையை அறியாமல் இங்கே தேர்தல் வைப்பது அங்கே பசிப்பவனுக்கு இங்கே நாம் சாப்பிடுவது போன்றது. இதனால்தானோ என்னவோ புலத்தில் ஆடடித்துக் கூடிக் குடிக்கிறார்கள். இவர்கள்தான் அன்று பிரபாகரனை மேதகுவாக்கிய மேன்மையாளர்கள். அவதாரமாகக் கருதிய அரைகுறைகள். சூரியதேவன் என்று வர்ணித்த வக்கிரகங்கள்.)
7.சிவாஜி, விக்கிரமபாகுவுடன் இணைந்த தேர்தலில் நிற்பது நாம் சிங்கள மக்களுடன், அரசில்வாதிகளுடனும் இணைந்து ஒருஐக்கிய இலங்கைக்குள்ளும் செயற்படமுடியும் என்ற சமிஞ்ஞையை தெளிவாகக்காட்டுகிறது. இது உடனடியான சரியான விளைவுகளைத் தராவிட்டாலும் எதிர்காலத்தில் சிங்கள மக்களையும், அரசியல்வாதிகளையும் சிந்திக்கத் தூண்டும். நாளை தோன்ற இருக்கும் வர்க்கப்போராட்டத்திற்கு தமிழர், சிங்களவர் இருசாராரும் கைகோர்த்து நின்று போராடத் தூண்டும். (இப்படியான இணைவுப்போரைப் புலிகள் நிச்சயமாகச் செய்திருக்கவேண்டும். செய்யவில்லையே!!! செய்திருந்தால் உலகமயமாதில் தமிழீழக் கோரிக்கை உடைக்கப்படாது வர்க்கப் போராட்டமாய் இலங்கை முழுதும் வியாபித்திருந்திருக்கும்.)
8.சிவாஜி, விக்கிரமபாகுவை ஆதரிப்பதால் தமிழர்களின் சிலவாக்குகள் சிதறிப்போனாலாலும் கொடுக்கப்படும் சமிஞ்ஞைகள் தெளிவாத்தானே உறுதியாகவுமல்லவா இருக்கப் போகிறது.
9.வாக்குக்கள் சிதறுவதனூடாக நிச்சய வெற்றி உறுதியற்று விடும். இரண்டாம் தெரிவுச் சுற்றில் சிறுபான்மை இன, மத வாக்குக்களே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகிறது. இங்கே சிவாஜியின் பங்கு மிக மிகப்பெரியதே.
10.மக்களின் பாவங்களைச் சுமந்த யேசுபோல், தான் கறுப்பாடாகி தமிழ்மக்களை நிர்கதியாக விட்டுப்போன புலிகளுக்குத் தோள்கொடுத்து குச்சு விளக்கொன்றைக் கொண்டு வந்திருக்கிறார் சிவாஜி.
11.இருபெரும் சிங்களக்கட்சிகளுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையின்றி, போர்க்குற்றங்களை மன்னித்தோம் என்ற சமிஞ்ஞைகளின்றி, தமிழ்மக்களின் கருத்துக்களைத் தெளிவாக வைப்பதற்கு சிவாஜி களம் தந்திருக்கிறார்.
12.எமது அபிப்பிராயங்களை, அபிலாசைகளை சிங்களஅரசியல் சார்ந்துதான் செய்யவேண்டும் என்று இன்றை நிலையை சிவாஜி உடைத்திருக்கிறார்.
13.தமிழ்மக்கள் சிங்களத்தமிழ் அரசியல்வாதிகளால் மட்டுமல்ல போராட்டம் என்ற போர்வையில் இயக்கங்களாலும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். இனியாவது சிந்தித்து சுயமாக முடிவெடுத்து இந்த அரசியல் களத்தில் ஊடகங்களின் உண்மை நிலை அறிந்து இம்முறையாவது சிவாஜி திறந்து வைத்த களத்தில் களமாடுவார்களா? சிவாஜிக்குத்தான் வோட்டுப் போடுங்கள் என்று கூறவில்லை. அங்குள்ள மக்களின் சரியான களமாடல் புலத்துத் தமிழர்களுக்கும், சர்வதேசத்துக்கும் சிங்களமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சரியான செய்தியைச் செல்லும்.
14.தேர்தலைப் பகிஸ்கரித்திருக்கலாம் என்கிறீர்களா? பகிஸ்கரிப்பதனால் மகிந்த, சரத்துக்கு ஒருபெரும் தலையிடி குறைந்துவிடும். கட்சியில் இன்று தொங்கும் தமிழ்குழுக்களின் மதிப்பும் மங்கிவிடும். ஆனால் தேர்தலைப் பகிஸ்கரிப்பதனால் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் சிங்களக்கட்சிகளுக்கு இருக்காது போய்விடும். சிங்கள மக்களின் வோட்டுக்களில் அவர்கள் தங்கியிருப்பதால் தேர்தலின் முன்னும் பின்னும் தமிழர்களின் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டிய தேவை அற்றுவிடும். தமிழர்கள் பகிஸ்கரிப்பதனால் வோட்டுக்கள் எந்தப்பக்கமும் போய் எதிரியைப் பலப்படுத்தாது என்பதை சிங்கள இருபெருங்கட்சிகளும் உணர்ந்திருக்கும். அதனால் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் தனிச்சிங்களவர்களாகவே இருப்பார்கள். ஆதலால் தமது கவனத்தையும், ஜனாதிபதியான பின் தம் நன்றிக்கடனையும் சிங்கள மக்களுக்கே செய்வார்கள். தமிழர்கள் தேவையற்றவர்களாக எதிரிகளாவே தொடர்ந்து பார்க்கப்படுவார்கள். இன்றைய நிலையில் பேரினவாதக்கட்சிகளின் கவனம் தமிழர்களின் வோட்டுகளில் இருக்கிறது. முக்கியமாக யாழில் மகிந்தவிற்கு டக்லஸ் ஊடாக விழும் வாக்குக்கள் சிவாஜியால் தடுக்கப்படப் போகிறது. இது சிவாஜியின் உயிருக்கு உலைப்பாகவும் இருக்கலாம்.
15.அன்றைய போர், இன்றைய தேர்தல் பலாற்காரம் எல்லாம் மக்களுக்கு என்ன சொல்கிறது வெற்றிக்கு வழி பலாற்காரமே என்று. ஆதனால் மக்கள் தொடர்ந்து பலாற்காரத்தின் பாதையிலேயே பிரச்சனைகளுக்கு முடிவு காண முயல்வர். இது மனோவியல் உண்மை. இதன் தொடர்ச்சியான வளர்ச்சி இன்னுமொரு ஆயுதப் போராட்டமாக உருப்பெறும். 72ல் செகுவேரா, 76ல் நாங்கள். செகுவேராவின் ஆயுதப்போராட்டம் 70தின் கடைசிப்பகுதியில் முற்றாக முறியடிக்கப்பட்ட போதும் அந்த ஆயுதங்களை குறுகிய காலத்தில் நாம் எடுத்தோமல்லவா. இதைத் தவிர்க்க சரியான அரசியல் அடித்தளத்தை நிறுவுவது சிங்களவரசின் கடமையாகும்.
16.சிவாஜியின் கொள்கைகளோ, கோட்பாடுகளோ, கடந்தகால அரசியலோ சரி என்று நான் கருதவில்லை. சுயேட்சையாக ஒரு வேட்பாளர் நிற்பது தவறும் இல்லை என்கிறேன். சிவாஜி நிற்பதனால் வோட்டுப் போடுவர்கள் தொகை கூடப்போகிறது. சிங்களப் பெருங் கட்சிகளுக்கு விழும் வோட்டுக்கள் பிரியப்போகிறது. இதனால் 50வீதம் சாத்தியமற்று விடப்போகிறது. இப்போ இவ்விரு பேரினவாதக்கட்சிகளும் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியுமா?
17.சிவாஜி கடந்தகாலத்தில் என்ன அரசியலைக் கொண்டிருந்தார் என்பதை விட இன்றைய அரசியல் சூழ்நிலைதான் களத்தைத் தீர்மானிக்கிறது, தீர்மானிக்க வேண்டும்.
18.சிவாஜிக்கு விழப்போகும் வோட்டுக்கள் எமக்கு பல விடயங்களைச் சொல்லும்.

•தமிழ்மக்கள் போர் வெறியர்களை மன்னித்தார்களா?
•சிங்களப் பேரினவாத அரசியலுக்குப் பயந்து பணிகிறார்களா? விரும்பித்தான் இணைகிறார்களா?
•இராமன் ஆண்டாலும் சரி இராவணன் ஆண்டாலும் சரி என்று இருக்கப் போகிறார்களா?
•புலிகளின் போக்கை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்களா?
•தேசியமா? தமிழ்தேசியமா? தமிழர்களின் தெரிவு?
•எதிர்காலத்தில் தமிழர்களின் பாதை எப்படி வகுக்கப்படவேண்டும் என்பதற்கான ஆரம்பம்
•வட்டுக்கோட்டை தமிழ்ஈழமா இல்லையா என்ற புலம்பெயர் தமிழர்களுக்கான பதில்…
•பலபிரதமரைக் கொண்ட சுழற்சிமுறை ஜனாதிபதியாட்சி முறையை மக்கள் அறிவதற்கான வாய்ப்பு

பலகேள்விகளுக்கு விடை இத்தேர்தலில் இருக்கிறது. இதில் சிவாஜி பலிக்கடாவாகி ஒருகளம் திறக்கப்பட்டிருக்கிறதே தவிர தேர்தலின் பதில் என்ன என்பது தான் எமது எதிர்பார்ப்பு. ஈழத்துச் செய்திகளின்படி வன்னிமக்கள் மனங்களில் போரின் கொடுமையும், கடுமையும் இன்னும் விடவில்லை. தேர்தல் அவர்களுக்கு வந்தாலும் சரி, விட்டாலும் சரி என்ற நிலை. தேர்தலுக்கு வோட்டுப்போடப் போவதற்கே நல்ல உடுப்பில்லா நிலை. சில பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் அரசு சில உதவிகளை டக்லஸ் மூலம் செய்வதால் அவர்கள் மகிந்தவுக்கு வோட்டுப் போடுவார்கள் என்று தெரியவருகிறது. யாழ்பாணம் வெளிநாட்டுப்பணங்களின் களியாட்ட கூடமாய் ஆகிவிட்டபடியால் சாப்பிடமட்டும் வாய்திறக்கும் நிலையில் சிலர். கூத்தடிக்கும் நிலையில் பலர். வன்னிமக்கள் அழிவைப்பற்றி யாழ்மக்கள் ஆதங்கப்படுவதாகத் தெரியவில்லை. தமிழ்பகுதிகளில் மகிந்தவுக்கும் பலம் இருப்பது போன்று தெரிகிறது. சரத்தும், சிவாஜிலிங்கமும் அதிகசக்தியை அங்கே பயன்படுத்த வேண்டியிருக்கும். மட்டக்களப்பு துப்பாக்கி அமைச்சர்களால் வாய் பூட்டப்பட்டு இருக்கிறது. அங்கும் அடாவடி வாக்குகள் மகிந்தவின் பக்கமே இருப்பதற்கான சந்தர்பமே அதிகமுண்டு. சரத் தன்பலத்தை தென்பகுதியில் இருந்தே பெறவேண்டியிருப்பதால் சரத் ஜனாதிபதியாக வந்தாலும் தம்மினத்துக்கு மட்டுமே நன்றியுள்ளவராக இருக்கக்கூடிய நிலைதான் தென்படுகிறது. எந்தநேரமும் இன்நிலைகள் மாற்றப்படலாம். அரசியல் ஒரு சதுரங்கமே!.

என்கருத்தைச் சொல்லிவிட்டேன் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

-உங்கள் குலத்திலும் நிலத்திலும் ஒர் குலன்-

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 02 -புன்னியாமீன் –

sri-lanka.jpg(கடந்த வாரத் தொடர்ச்சி….)

இலங்கையில் ஜனாதிபதிப் பதவி பதவிக்காலத்துக்கு முன் வறிதாகினால் (வெற்றிடமாகினால்)…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன் வறிதாகினால் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் 37ம் உறுப்புரை,  40ஆம் உறுப்புரை போன்றவற்றிலும் 1981ஆம் ஆண்டு 2ம் இலக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) சட்ட மூலத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 37ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தியில் ஜனாதிபதிக்குரிய தத்துவங்களும், கடமைகளும், பணிகளும் பிரதமரினால் பிரயோகிக்கப்படுதலும், புரியப்படுதலும், நிறைவேற்றப்படுதலும் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுகவீனம் காரணமாக,  இலங்கையில் இல்லாமை காரணமாக அல்லது வேறேதும் காரணமாகத் தமது பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும்,  பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பாரெனக் கருதுவாரெனில் அத்தகைய காலத்தின்போது ஜனாதிபதி என்ற பதவியில் பிரதமரை ஜனாதிபதி என்ற பதவிக்குரிய தத்துவங்களையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அவர் (ஜனாதிபதி) நியமிக்கலாம் என்பதுடன்,  அத்தகைய காலத்தின்போது பிரதமர் என்ற பதவியில் பதிற்கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம். (இச்சந்தர்ப்பத்தில் பிரதமர், பதவி வறிதாகியிருப்பின் அல்லது செயலாற்ற இயலாதிருப்பின் அத்தகைய காலப்பகுதியின்போது ஜனாதிபதியின் பதவிக்கான தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும்,  புரிவதற்கும்,  நிறைவேற்றுவதற்கும் அவர் சபாநாயகரை நியமிக்கலாம்)

37ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் ஒரு தற்காலிக ஏற்படாகும்.

1993 மே 1ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் பதவி வெற்றிடமானது. (யாப்பின் 38ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தி பின்வரும் சூழ்நிலைகளில் ஜனாதிபதிப்பதவி வெற்றிடமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ) அவர் இறப்பதன் மேல்
ஆ)அவர் இராஜினாமாச் செய்வதன் மேல்
இ) அவர் இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழக்கும்போது
ஈ) தமது பதவிக்காலம் தொடங்கியது முதல் ஒரு மாதத்துக்குள் பதவி ஏற்காவிடில்
உ) 38(2) படி பதவி நீக்கம் செய்யப்பட்டால்
ஊ) 130(அ) படி அவரது தெரிவு பிழையானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால்
 இந்நிலையில் ஜனாதிபதியின் பதவி வறிதாகும்.

இந்நிலையில் (ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் அவரின் பதவி வறிதாகும் நிலையில்) நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினருள் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென அரசியலமைப்பின் 40ம் உறுப்புரையில் (1) அ,  ஆ,  இ பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதிப் பதவிக்கு அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் பதவி வறிதாகிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.

அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட பின் இயன்றளவு விரைவாகவும், எச் சந்தர்ப்பத்திலும் அத்தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். நாடாளுமன்ற சட்டத்தினால் ஏற்பாடு செய்யக்கூடியதான அத்தகைய நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல், இரகசிய வாக்களிப்பு மூலமும், அளிக்கப்பட்ட வாக்குகளின் பூரணப் பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்.

அரசியலமைப்பின் 40(1) (இ) பிரிவு அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட காலத்திற்கும், புதிய ஜனாதிபதிப் பதவி ஏற்கின்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தின் போது ஜனாதிபதிப் பதவியில் பிரதமர்  பதிற் கடமையாற்ற வேண்டும் என்பதுடன், பிரதமர்  பதவி, வறிதாக இருக்குமெனின் அல்லது பிரதமர் பதிற் கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருப்பாரெனின் ஜனாதிபதி என்ற பதவியில் சபாநாயகர் பதிற் கடமையாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அவர்களின் மறைவையடுத்து மேற்படி ஏற்பாடுகளுக்கமைய (அரசியலமைப்பின் 37(2), 40 (1) (இ) 1993 மே 01ம் திகதி இலங்கையின் பிரதமர் திரு. டி.பி. விஜயதுங்க அவர்கள் பதில் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின்படி பதில் ஜனாதிபதிக்கு 1 மாதம் மட்டுமே கடமையாற்ற முடியும். இதற்கிடையில் 40ம் உறுப்புரைப்படி நாடாளுமன்றம் தமது உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) நாடாளுமன்ற சட்ட மூலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிப்பதவி வெற்றிடமாகி 3 தினங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படல் வேண்டும். அவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் 48 மணிநேரத்திற்குள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் விசேட பிரகடனத்தின்படி ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்களை (நாடாளுமன்ற அங்கத்தவர்களிடமிருந்து) கோரப்படுவதுடன் வேட்புமனு பெறும் காலம்,  நேரம் என்பனவும் அறிவிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தினுள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடாத்துவதற்குப் பொறுப்பாக பாராளுமன்றச் செயலாளர் நாயகமே இருப்பார்.

இத்தகைய தேர்தலின்போது கடைபிடிக்கப்படும் ஒழுங்குமுறைகள் சாதாரண தேர்தல் முறைகளை ஒத்ததாகும். வேட்புமனு கோரப்படுதல் எனும்போது இங்கு வேட்பாளரின் அனுமதியுடன் ஒரு அங்கத்தவர் அவர் பெயரைப் பிரேரித்து மற்றொருவர் ஆமோதிக்க வேண்டும். எதிர்ப்போட்டிகள் இல்லாதிருப்பின் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் ஏகமனதாக இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அறிவிப்பார். அதையடுத்து ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து ஏற்கனவே பதவி வறிதான ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்வார்.

இதன்படி 1993-05-07ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது பதில் ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க அவர்களின் பெயர் முன்மொழியப்பட்டு (திரு. விஜயபால மென்டிஸ் முன்மொழிந்தார்.) வழிமொழியப்பட்டு (திரு. ஏ.ஸீ.எஸ். ஹமீட் வழிமொழிந்தார்) எதிரப்பிரேரணைகள் இல்லாதிருந்தமையால் ஜனாதிபதியாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். (இவரின் பதவிக்காலம் 1995-01-02 உடன் முடிவடையும். (1988-01-02ஆம் திகதியன்று ரணசிங்க பிரேமதாஸ பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையவது 1995-01-02 ஆகும்)

ஜனாதிபதிக்கெதிரான  குற்றப்பிரேரனை ஒன்றினை பாராளுமன்றத்தில் கொண்டு வரக் கூடிய சந்தர்ப்பங்கள்:

ஜனாதிபதிக்கெதிராகக் குற்றப்பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் வழி முறைகளைப் பற்றி நோக்குமிடத்து,  யாப்பில் 38ம் உறுப்புரையின்படி பின்வரும் சந்தர்ப்பங்களில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

38(2)அ – பாராளுமன்ற உறுப்பினர் எவரும் சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் கடிதத்தின் மூலம் மனப் பலவீனம் அல்லது உடற் பலவீனம் காரணமாக அவரது பதவிக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நிரந்தரமாக இயலாதுள்ளார் எனச் சார்த்துகின்ற அல்லது ஜனாதிபதி பின்வருவனவற்றைப் புரிவதற்குக் குற்றவாளியாக உள்ளாரெனச் சார்த்துகின்ற தீர்மானம் பற்றி அறிவித்தல் ஒன்றைக் கொடுக்கலாம்.

1. அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம்
2. தேசத்துரோகம் புரிந்த குற்றம்
3. இலஞ்சம் பெற்ற குற்றம்
4. தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் து~;பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழல் குற்றம்
5. அல்லது ஒழுக்கக்கேட்டை உற்படுத்தும் ஏதேனும் சட்டத்தின் கீழான ஏதேனும் தவறு.

மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்தும்படி உயர்நீதிமன்றத்தைக் கோர நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியும். இச்சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச்சாட்டுகள் எழுத்து மூலம் குறிக்கப்பட்டு நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 2/3 குறையாதோர் கையொப்பத்துடன் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கலாம். இக்கையொப்பம் 2 /3க்குக் குறைவாக இருப்பின் குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகரால் மறுக்கவும் முடியும். இருப்பினும் குறித்த பிரேரணைக்குப் நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 1/2 பாதிப் பங்கினருக்கு மேல் கையொப்பமிடப்பட்டிருப்பின், நியாயங்கள் காணப்படுமிடத்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சபாநாயகர் திருப்திப்பட்டு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற முடியுமென கருதினால் குறித்த பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சபாநாயகரால் சேர்க்க முடியும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் முறை

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டிய தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியைக் குறித்து தேர்தலை நடாத்துவார். தேர்தல் ஆணையாளரின் அதிகாரப்படி ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி 2010 ஜனவரி 26ம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய அபேட்சகர்:-

1. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றினூடாக அல்லது
2. ஒன்றில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராயிருப்பின் அல்லது இருப்பவராயிருப்பின் சுயேட்சை வேட்பாளராக நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் பின்வரும் தகைமையீனங்களுள் எதற்கேனும் உட்பட்டவராகயிருத்தலாகாது என்று யாப்பின் 92ம் உறுப்புரை எடுத்துக் கூறுகிறது.

தகைமையீனங்கள் 31(1)

அ)  முப்பது வயதையடையாதவராக இருத்தல்
ஆ)  91ம் உறுப்புரை (1)ம் பந்தியின் ஈ,  உ அல்லது எ எனும் உற்பத்தியின் கீழ்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமை அற்றவராக இருத்தல்
இ) ஜனாதிபதிப் பதவிக்கு மக்களினால் இரு தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருத்தல்
ஈ) 38ம் உறுப்புரையின் 2ம் பந்தியின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டவராக இருத்தல்

தேர்தல் ஆணையாளரால் நியமனப் பத்திரம் கோரப்பட்டதும் நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்தல் வேண்டும். கட்டுப்பணமாக அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாகப் போட்டியிடுவதாயின் 50, 000வும், சுயேட்சையாகப் போட்டியிடுவதாயின் 75, 000வும் செலுத்தல் வேண்டும்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 2010 ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு,  தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக வேட்பு மனுத்தாக்கல்; செய்யப்பட்ட தினமான 2009 டிசம்பர் 17ம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் குழுக்களின் ஊடாக 23 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

2009 டிசம்பர் 17ம் திகதி காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிடுவார். இதற்கிணங்க இம்முறை மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாக ஆட்சேப மனுவொன்று மற்றுமொரு வேட்பாளரான சரத் கொங்காஹே மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.  மேற்படி மனுவை சமர்ப்பித்தவர் “சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாதெனவும்” குறிப்பிட்டிருந்தார். உரிய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையாளர் கோரினார். ஆதாரங்கள் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறித்த ஆட்சேபனை மனுவை நிராகரித்ததுடன் மனுதாரர் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டார். அதேபோல ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில் அவர்களுக்கெதிரான ஆட்சேபனை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர்,  ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இம்முறையே முதற்தடவையாகும்.

சிறிதுங்க ஜயசுரிய (ஐக்கிய சோசலிசக் கட்சி)
எம்.பி.தெமினிமுல்ல (ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு)
சரத் மனமேந்திர (நவ சிஹல உறுமய)
அச்சல அசோக்க சுரவீர (தேசிய அபிவிருத்தி முன்னணி)
ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி)
பத்தரமுல்லே சீலரதன தேரர் (ஜனசெத முன்னணி )
ராஜபக்ஸ பேர்சி மஹிந்த (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி)
விக்ரமபாகு கருணாரத்ன (இடதுசாரி முன்னணி)
ஐ.எம். இல்யாஸ் (சுயேச்சை)
விஜே டயஸ் (சோசலிச சமத்துவக் கட்சி)
கார்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா (புதிய ஜனநாயக முன்னணி)
சரத் கோன்கஹகே (ஐக்கிய தேசிய மாற்று முன்னணி)
கே.பி.ஆர்.எல்.பெரேரா (எமது தேசிய முன்னணி)
மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா (சுயேச்சை)
கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (சுயேச்சை)
டபிள்யூ.எம்.யூ.பி. விஜேகோன் (சுயேச்சை)
எம்.சீ.எம்.இஸ்மாயில் (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி)
ஹித்தக ஒஸ்வல்ட் அருண த சொய்ஸா (ருகுணு மக்கள் கட்சி)
சனத் பின்னதுவ (தேசிய மக்கள் கட்சி)
எதுருகே சேனாரத்ன சில்வா (தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி)
சன்ன ஜானக சுகத்சிறி கமகே (ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி)
வேகட வித்தாரணகே மஹிமன் ரஞ்சித் (சுயேச்சை)

இலங்கை அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக நீளமான வாக்குச் சீட்டு இத்தேர்தலின் போது வழங்கப்படவுள்ளது. வாக்குச் சீட்டின் நீளம் 22 அங்குலமாகும். அதாவது 56 செ.மீற்றர்களாகும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்படும் வாக்குச் சீட்டில் அபேட்சகர்களின் பெயர்கள் சிங்கள அகர வரிசைக்கிணங்க மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும். அபேட்சகர்களின் பெயருடன் கட்சியின் சின்னம் அல்லது அபேட்சகருக்கு வழங்கப்பட்ட சின்னம் இரண்டாம் கட்டத்தில் அச்சிடப்பட்டிருக்கும். 3ம் கட்டத்தில் வாக்களிப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். வாக்களிக்கும் போது ஏனைய தேர்தல்களைப் போல “புள்ளடி” ( X ) யிடத் தேவையில்லை. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளரின் விருப்பத்திற்கமைய 1ம்,  2ம்,  3ம்,  4ம்….. விருப்பங்களைப் பதியலாம். இத்தேர்தலில் பிரதம வேட்பாளராகளாகக் கருதப்படும் சரத் பொன்சேக்காவின் சின்னம் அன்னப் பறவையாகும். மஹிந்த ராஜபக்ஸவின்  சின்னம் வெற்றிலையாகும். வாக்குச் சீட்டின் நகல் அமைப்பின் பிரகாரம் சரத் பொன்சேக்காவின் பெயர் 9வது இடத்திலும், மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் 22வது இடத்திலும் அச்சாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. 

இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலில் 2 வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது விருப்பத்தை ஒரு வேட்பாளருக்கும், 3 வேட்பாளர்கள் போட்டியிடின் 1ம்,  2ம் விருப்பங்களையும்,  மூவருக்கு மேல் போட்டியிடின் 3ம்,  4ம் விருப்பங்களையும் வழங்குமாறு வாக்காளர் கேட்கப்படுவர். வாக்களிக்கும் போது ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் புள்ளடி இட்டால் அந்தப் புள்ளடி உரிய வேட்பாளருக்கான விருப்பத் தெரிவாகக் கொள்ளப்படும். மாறாக ஒரே வாக்குப் பத்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு புள்ளடி இடப்பட்டிருப்பின் அந்த வாக்குப் பத்திரம் நிராகரிக்கப்படும்.

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்.

இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

வேட்பாளர்கள் 3 அல்லது 3க்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் 50 சதவீத வாக்குகளை எவரும் பெறாத நிலை ஏற்படின் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர் (அல்லது வேட்பாளர்கள்) போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

இவ்வாறு நீக்கப்பட்ட போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு பதியப்படும். இக்கணிப்பீட்டின்படி பின்பும் 50 சதவீதம் பெறாவிடின் 3ம்,  (4ம்) விருப்ப வாக்கு கணிக்கப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 32ம் உறுப்புரையின் 1ம் பந்திக்கிணங்க பிரதம நீதியரசரின் முன்னிலையில் அல்லது அந்நீதிமன்றத்தின் வேறு எவரேனும் நீதிபதியின் முன்னிலையில் சத்தியம் செய்து கீழ் ஒப்பிடுவதன் மேல் பதவியேற்றுக் கொள்வார்.

அடுத்த வாரம் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான குறிப்புகள் இடம்பெறும்.

Dec 20 -இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் – 01 : பீ.எம். புன்னியாமீன்-

சமூகப் பணிகளைத் தவற விட்ட சைவ சமயமும் அதன் ஆலயங்களும் : மருத்துவ கலாநிதி என் சிவராஜா

Sivarajah_N_Dr( தற்போது வடக்கு கிழக்குத் தமிழர்கள் மிக மோசமான வாழ்நிலையை எதிர்கொள்கிறார்கள். அதுவும் இறுதியாக நடைபெற்ற யுத்தம் அவர்களது வாழ்நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது. அவர்களது வாழ்நிலையை மேம்படுத்துவதிலும் எதிர்கால நம்பிக்கையை அளிப்பதிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சைவ ஆலயங்கள் மிக முக்கியமான பங்களிப்பினை அளிக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் ஆலயங்கள் கட்டப்பட்ட போதும் அவை மிகுந்த வருமானத்தை ஈட்டிய போதும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஆலயங்கள் மட்டுமே சமூக அக்கறையுடன் செயற்படுகின்றன. ஏனையவை சுமூக கடமைகளை புறக்கணிக்கின்றன அல்லது தங்கள் இயலுமைக்கு ஏற்ப சமூகக் கடமைகளை மேற்கொள்வதில்லை.

அவ்வகையில் என் சிவராஜாவின் கீழுள்ள ஆய்வு பத்தாண்டுகள் பழமையானது ஆனாலும் சமூகநிலை இன்னமும் மோசமடைந்து உள்ளதே அல்லாமல் அதில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

யதார்த்தத்தை மீண்டும் ஓங்கிச் சொல்வதற்காக இதனைப் பிரசுரிக்கின்றோம்.

டொரன்டோ நகரில் 1999 ஆடித்திங்கள் 30 முதல் ஆவணித் திங்கள் 1 வரை நடைபெற்ற 7வது உலக சைவ மாநாட்டில் வாசிக்கப்பட்டது. )

._._._._._.

இந்த மாநாட்டின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பெருமுயற்சி வரவேற்கத் தக்கது. போற்றத் தக்கது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த முயற்சிக்கான வழிமுறைகளைப் பற்றி, பல கோணங்களிலிருந்து சிந்தித்துள்ளோம். விவாதித்துள்ளோம். பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்தே தீர்வுகளை தேடியுள்ளோம்.

நம் சொந்த மண்ணிலே, முக்கியமாக ஈழத்திலே தமிழிற்கும் சைவத்திற்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்ற ஒரு எண்ணத்தை பலரிடையே இது உருவாக்கியுள்ளது. இது ஒரு தவறான எண்ணமாகும்.

1995ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ம் திகதி, ஏறக்குறைய 700,000 தமிழர்கள், ஒரு இரவில் இடம்பெயர்ந்தார்கள். 7 மாதங்களின் பின், இடம்பெயர்ந்தோரில் அரைவாசிப்பேர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள். அங்கு அவர்களை வரவேற்றது இடிந்த சூறையாடப்பட்ட வீடுகளும், பள்ளிக்கூடங்களும், கோவில்களுமே.

வசதியுள்ளவர்கள் தங்கள் வீடுகளை திருத்தி அதில் வாழத்தொடங்கினார்கள். வசதியற்றவர்கள் செய்வதறியாது ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு சிலர் உதவினார்கள். இடிந்து போயிருந்த உள்ளங்களுக்கு ஊன்றுகோலாக இருந்தார்கள். குடிசைகளை திருத்துவதற்கு உதவினார்கள், சமைப்பதற்கு பாத்திரங்கள் கொடுத்தார்கள், பாலர்களுக்கு பாடசாலைகளை அமைத்து ஆசிரியர்களை நியமித்தார்கள். பாடசாலை உபகரணங்களை கொடுத்தார்கள்.

இதற்கு மாறாக அந்த மக்கள், தங்கள் சைவ சமயத்தை விட்டு, அவர்களின் சமயத்தைத் தழுவினார்கள். இது நடந்து முடிந்த கதையல்ல, இன்னும் நடந்து கொண்டிருக்கும் கதை. நாளையும் தொடரும் கதை.

இது மதம் மாறியவர்களினதோ, அல்லது மாற்றியவர்களினதோ தவறு அல்ல. எங்கள் தவறு. சைவ மக்களின் தவறு. எமது சமூகத்தில் வாழும், நலிந்த சைவ மக்களுக்கு நாம் உதவவில்லை. இன்று நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், ஏறக்குறைய 1500 கோவில்களில், மூன்றில் ஒரு பங்கு கோவில்களில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். மை பூசுவது முதல் புதிய தேர் அமைப்பது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும். பெரிய பெரிய வாகனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டு இருக்கும் – ஆனால் திருவிழாக் காலங்களில் வாகனங்களை தூக்குவதற்கு போதிய ஆட்கள் இருக்க மாட்டார்கள். இந்தத் திருப்பணி வேலைகள் பெருஞ் செலவில், பெரும்பாலும் புலம்பெயர்ந்தோரின் பணச்செலவில் செய்யப்படுகின்றன.

கோவில் திருப்பணிக்காக சேர்க்கும் பணத்தில், ஏன் ஒரு பகுதியை, கோவிலை அண்டியுள்ள ஏழை மக்களுக்காக செலவிடக்கூடாது? அன்பளிப்பு கொடுப்பவர்கள் ஏன் இந்த நிபந்தனையை விதிக்கக் கூடாது?.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி 6 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளில் சராசரி 8% பாடசாலை போவதில்லை. யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள வசதி படைத்தோரின் பிள்ளைகளில் 100% பாடசாலை சென்றபோதும் பின்தங்கிய கிராமங்களிலும், பின்தங்கிய சமூகங்களிலும் உள்ள பிள்ளைகளில் 30-60% பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை. இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் வறுமையாகும். பாடசாலை பருவப் பிள்ளைகளில் 10 சதவீதமானவர்களுக்கு தந்தை இல்லை. ஒன்றில் அவர் இறந்திருப்பார், காணாமற் போயிருப்பார், அல்லது படையினரால் பிடிபட்டிருப்பார்.

3-5 வயதிற்கு இடைப்பட்ட முன்பள்ளிச் சிறுவர்களில் அரைவாசிக்கு மேல் பாலர் பாடசாலைக்கு போவதில்லை. இந்த வயதினரில் 50% போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சனத்தொகையில் 12% ற்கு மேற்பட்டவர்கள் 60 வயதை தாண்டியவர்கள். பெரும்பாலானவர்கள் தனித்து வாழ்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் மருந்துகள் பாவிக்கிறார்கள்.

கர்ப்பமாக உள்ள தாய்மாரில் 6% குருதிச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் யாழ். வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளில் 23 சதவீதமானவர்கள் நிறை குறைந்த பிள்ளைகளாக பிறக்கிறார்கள்.

இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக சைவ மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம். மற்றைய சமயங்களை சார்ந்தவர்களுக்கு அவர்களின் சமய நிறுவனங்கள் உதவுகின்றன.

எனக்குத் தெரிந்தவரையில் யாழ்ப்பாணத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு கோவில்கள்தான் இப்படியான சமூக சேவைகளை செய்கின்றன. தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம் இந்தப்பணியில் முன்னணியில் நிற்கிறது.

கடந்த 17 ஆண்டுகளாக ஒரு மகளீர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இன்று 60 ற்கும் மேற்பட்ட, பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகள் வளர்கிறார்கள். அனைவரும் பாடசாலை செல்கிறார்கள். நால்வர் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள்.

அனாதரவான முதியோரையும் சேர்த்து பராமரிக்க சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதைவிட சைவநூல்கள் வெளியிட ஒரு அச்சகம், நூல் நிலையங்கள் முதலியவற்றை இந்தக் கோவில் நடத்துகிறது.

ஆனைக்கோட்டை கரைப்பிரான பிள்ளையார் கோவிலின் சிவகுமார சர்மா என்ற ஒரு சிவாச்சாரியார் இருக்கிறார். அந்தக் கோவிலைச் சுற்றி ஏழைக்குடும்பங்கள் பல உள்ளன. அவர்களில் சிலர் மதம் மாறிக்கொண்டிருக்கின்றனர். அந்தச் சிவாச்சாரியார் கோவிலுக்கு அருகாமையில் ஒரு பாலர் பாடசாலையை ஆரம்பித்துள்ளார். இரண்டு ஆசிரியர்களை அமர்த்தியுள்ளார். பாலர் பாடசாலை பிள்ளைகளை ஒழுங்காக கோவிலுக்கு வந்து பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளச் செய்கிறார். குழந்தைகளுக்கு விளங்கக்கூடிய வகையில் சைவ நெறிகளை புகட்டுகிறார். கிராமத்து முதியவர்களை பயன்படுத்தி பிள்ளைகளுக்கு அறநெறி வகுப்புக்கள் நடத்துகிறார். அத்துடன் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்குகிறார், சீருடை வழங்குகிறார். இவ்வளவையும், தனது சொந்த முயற்சியால் ஊரில் பணம் சேர்த்து, செய்கிறார்.

இப்படி ஏன் மற்ற கோவில்கள் செய்ய முடியாது?

கோவில் திருப்பணிகளை நிறுத்திவிட்டு சமூகத்தொண்டு செய்ய வேண்டும். என்று நான் சொல்லவில்லை. கோவிலுக்கு சேரும் பணத்தில் குறைந்தது 10 சத வீதத்தையாவது. சமூகப்பணிக்கு செலவிட வேண்டும் என்றே கேட்கிறேன்.

அன்பர்களே,

இக்கருத்துகள் புரட்சியானவையல்ல. புதியதும் அல்ல. இவை எமது பழம்பெரும் சமயப் பண்பாடு. இல்லையேல்

‘நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பரமர்க் கங்காமே’.

என்று திருமூலர் கூறியிருக்க முடியாது. ‘அநாத இரட்சகர்’ ‘ஆபத் பாந்தவர்’ என்று எம் இறைவனை போற்றுவதிலும் அர்த்தமில்லை.

கனடா இந்து மாமன்றம், லண்டன் மெய்கண்டான் ஆதீனம் trust, உலக சைவப் பேரவை போன்ற நிறுவனங்கள் ஒரு நிதியத்தை உருவாக்கி, அந்த நிதியத்தின் மூலம் கோவில்களால் நடத்தப்படும் சமூகப் பணிகளுக்கு (முக்கியமாக கல்வி, போசாக்கு, சுகாதாரம் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து) பண உதவி செய்யும் முயற்சியை ஆரம்பித்து வைத்தல், அது தமிழுக்கும், சைவத்திற்கும் செய்யும் பாரிய பணி எனவும். இந்த மகாநாட்டிற்கு கிடைத்த பெரிய வெற்றி எனவும் கருதுகிறேன்.

இந்த ஏழாவது உலக சைவ மகாநாட்டில் பங்கு பற்றும் வாய்ப்பை எனக்கும் எனது துணைவியாருக்கும் தந்துதவியதற்காக மாநாட்டு அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கம்.

Dr. N Sivarajah
Consultant / Coordinator, Jaffna Field Unit
WORLD HEALTH ORGANIZATION

Violence hurts more If you do nothing about it.

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 4வது போட்டி இன்று

catak.jpgஇந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியில் 3 ஓட்டங்களிலும், கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் 7 விக்கெட்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2வது போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 4வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றனர். கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக யுவராஜ் சிங் இன்றைய, கடைசி போட்டியிலும் ஆடவில்லை. இந்த தொடரில் அவர் கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் மட்டுமே ஆடினார்.காயத்தால் ஆடியதால் அவரால் சோபிக்க இயலவில்லை. மேலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவரை ஷெவாக் பந்துவீச அழைத்தார். 1 ஓவருக்கு மேல் அவரால் வீச இயலவில்லை. யுவராஜ்சிங்குக்கு பதிலாக விராட் கோலி இடம்பெறுவார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும். கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதால் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது.

தற்காலிக கப்டன் ஷெவாக், டெண்டுல்கர் ஆகியோர் தொடர்நது துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசையும் வலுவாக இருந்தால் நன்றாக இருக்கும். தொடக்க ஜோடியின் அதிரடியான ஆட்டத்தை பொறுத்தே ரன் குவிப்பு இருக்கும். கடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் சிறப்பாக வீசினார்கள். இதேபோல் திறமையான பந்துவீச்சை இன்றும் வெளிப்படுத்தினால் நான்றாக இருக்கும். 2 போட்டி தடை காரணமாக டோனி ஆடமாட்டார்.

நெருக்கடியில் இருக்கும் இலங்கை அணி கொல்கத்தா போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரையும் இழக்காமல் இருக்கும் வகையில் கடுமையாக போராடும். அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்சான் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருக்கிறார். அவர் களத்தில் இருக்கும் வரை அபாயம்தான். இதனால் அவரை தொடக்கத்திலேயே ‘அவுட்’ செய்ய இந்திய வீரர்கள் புதிய யுக்தியை கையாள வேண்டும்.

மற்றொரு தொடக்க வீரர் உபுல்தரங்க, கப்டன் சங்கக்கார ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசை பலவீனமாக இருப்பதால் ஜயசூரிய இன்று களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது. ஈடன்கார்டன் மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் 2வது களத்தடுப்பு செய்வதில் சிரமம் ஏற்படலாம் என்று தெரிகிறது.

பகல் இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 117வது போட்டியாகும். இதுவரை நடந்த 116 ஒருநாள் போட்டியில் இந்தியா 62 ஆட்டங்களிலும், இலங்கை 44 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லை.

பெடரர், செரீனாவுக்கு விருது

சர்வதேச டென்னிசில் இந்த ஆண்டின் உலக சாம்பியன்களாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம், மற்ற சர்வதேச போட்டிகள், டேவிஸ், பெட் கோப்பை டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வீரர், விராங்கனைகளின் செயல்பாட்டை கணக்கில் கொண்டு இந்த விருதுக்கு ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அமெரிக்க பகிரங்க அரை இறுதியின் போது லைன் பெண் நடுவரை மிரட்டி பெரும் தொகையை அபராதமாக இழந்த போதிலும் செரீனா 2-வது முறையாக இந்த விருதினை பெற்றிருக்கிறார். பெடரர் இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்படுவது இது 5-வது முறையாகும்.

‘களத்திலும் சரி, வெளியிலும் சரி இந்த ஆண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றியது.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற சாம்ப்ராசின் சாதனையை முறியடித்தது. மீண்டும் முதல் இடத்தை பிடித்தது எல்லாமே இந்த ஆண்டில் தான்’ என்று பெடரர் குறிப்பிட்டார்.

யாழ் உதயன், சுடரொளி பத்திரிகைகள் யுஎன்பி நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றன ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு – தொகுப்பு : ரி சோதிலிங்கம்

Sivajilingam_M_Kயாழ் உதயன் சுடரொளிப் பத்திரிகைகள் யுஎன்பி நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டி உள்ளார். லண்டன் மற்றும் தமிழகத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் ஏற்பாடு செய்த கேள்விநேரம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். டிசம்பர் 21ல் கிழக்கு லண்டன் குவேக்கர்ஸ் ஹவுஸில் இக்கேள்விநேரம் இடம்பெற்றது. நிகழ்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன் இடம்பெற்ற கடுமையான பனி மழையினால் லண்டன் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்த நிலையில் மூன்று மணிநேரம் தாமதமாக நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இறுதியில் கருத்து வெளியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கோ அல்லது சரத் பொன்சேகாவுக்கொ வாக்களிப்பார்களானால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்புகளிற்கு எவ்வித அர்த்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கத்தின் பக்கம் தள்ளிவிடாமல் அவர்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

லண்டன் விஜயத்தின் போது பிரிஎப் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியதாகவும் அவர்களின் ஆதரவு கோரப்பட்டு உள்ளதாகவும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். பிரிஎப் இதுவரை உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் பிரிஎப் இல் உள்ள சிலர் தனிப்பட்ட முறையில் சிவாஜிலிங்கத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கி உள்ளதுடன் பிரிஎப் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். மகேந்திரன், குகன், ராசா ஆகியோர் தனிப்பட்ட முறையில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதை வரவேற்றுள்ளனர். சிவாஜிலிங்கம் சுயேட்சையாக நிற்பது என்று எடுத்த முடிவை ஒரு பேப்பர் பத்திரிகையின் பாலா வரவேற்றுக் கருத்து வெளியிட்டார்.

ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற கேள்விநேரத்தின் தொகுப்பு கீழே:

ரி சோதிலிங்கம்: நீங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராட்ட காலங்களில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை ஆதரித்து பல போராட்ட வடிவங்களில் புலிகளின் ஆதரவு அமைப்புக்களுடன் இணைந்து செயற்ப்பட்டவர். இன்று நீங்கள் தமிழ் தேசியத்தின் சமஸ்டிக்காகான குரலாக இந்த தேர்தலில் நிற்கிறீர்கள். புலிகளின் இவ் ஆதரவு அமைப்புக்கள் இன்று உங்களை ஆதரித்து உங்களுடன் நிற்கிறார்களா? அல்லது ஆதரவு தருவார்களா? அவர்களது நிலைப்பாடுகள் என்ன?

புலிகளின் ஆதரவாளர்களும், முன்னாள் புலிகளின் தலைவர்களும் இங்கே இருந்து கொண்டு மேற்குலகின் ஆதரவுடன் சரத்தை அதரிக்கிறார்கள் மகிந்தாவை வீழ்த்தலாம் என்று செயற்படுவதாகவும் கருத்துள்ளதுஇ மேலும் யாழ்ப்பாணத்தில் உதயன் கொழும்பில் சுடரொளி யுஎன்பியை அதரிப்பதாக அறியப்படுகிறதே. இது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: புலிகளின் ஆதரவாளர்கள் என்ற ரீதியில் அவர்களிடம் நான் ஆதரவு கேட்கவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும்இ நாட்டில் யாருடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதுவும் பின்பு உலகுக்கு தெரியவரும். நான் இந்த மூன்று நாளும் என்னால் முடிந்த அளவு புலம்பெயர் நாட்டில் பேட்டிகள்இ பேச்சுக்கள் செய்கிறேன். பின்பும் இலங்கை போன பின்பும் தொலைபேசியூடாக செய்வேன்.

உதயன் சுடரொளி பத்திரிகைகள் கட்சிப் பத்திரிகைகளை மீறிய அளவில் கடுமையாக விமர்சனங்களையம் வார்த்தைப் பிரயோகங்களையும் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். யுஎன்பியின் நிகழ்ச்சி நிரலில் இருப்பவர்கள் என்று. ஒருவேளை அடுத்தமுறை வித்தியானந்தனின் மைத்துணர் சரவணபவன் கொழும்பு மாவட்ட யுஎன்பி யில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அமைச்சராக வர ஆசை. அதில் தவறு இல்லை. ஆனால் நாம் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு இடைஞ்சலாக இருப்போம் என்பதை இவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். யுஎன்பியுடன் சேர்ந்து விட்டால் சரி என்று நினைக்கிறார்கள். ரனில் அடுத்த Eexecutive President தான் என்ற கனவில் மிதக்கிறார்.

நாங்கள் அரச தரப்பில் இருக்க முடியாது, எதிர்த்தரப்பில்தான் இருக்க முடியும். எதாவது ஒரு அரசியல் தீர்வு எழும்பும் என்றால் தமிழ் மக்களுக்கு நன்மையான விடயம் என்றால் அது பற்றி பரிசீலிக்க நாம் தயார். வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரவில் இருப்பவர்கள் இலங்கையில் உள்ள விடயங்களில் பல தாழ்ந்துபோன விடயங்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக நாம் தமிழ் மக்களுக்கான உதவிகளை பெறுவதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

பாண்டியன்: எமது மக்களை அழித்த யுத்த குற்றவாளிகளுக்கு வாக்களித்தால் செய்த குற்றத்தை ஆதரித்தாகிவிடும் என்று சொல்லுகிறீர்கள். சரி மக்கள் வாக்களித்துவிட்டால் அது யுத்த குற்றவாளிகளை எமது தலைவர்களாக ஏற்றுக்கொண்டதாகி விடுமா?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் சொல்வது இந்த இரண்டு வேட்பாளர்களும் இலங்கையில் எல்லா மாகாணங்களிலும் வாக்குகள் பெறுவார்கள். கிழக்கில் சிங்கள முஸ்லீம் மக்கள் ஆதரிப்பார்கள். ஆனால் வட மாகாணத்தில் மிகப்பெரும்பான்மை தமிழர்கள். இங்கே அவர்கள் வாக்களித்தால் அவர்கள் இந்த குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகவே கருதப்படும். அடுத்தநாள் பத்திரிகைகளில் இப்படித்தான் எழுதப்படும்.

ஆனால் நான் போட்டியிடுவதால் வடமாகாணத்தில் இவர்களில் ஒருவர் பெரும்பான்மை வாக்குகளை பெறுவது தவிர்க்கப்படும். இதற்கு நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். நான் ஜனாதிபதியாக வர இந்த தேர்தலில் நிற்கவில்லையே! இந்த யுத்த குற்றவாளிகளின் மத்தியில் எமது தமிழர்களின் நிலைப்பாடு என்ன? யாரை ஆதரிப்பது என்பது தான் இங்கே உள்ள நிலைமை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரங்களை செய்திருந்தால் நிலைமைகள் வித்தியாசமாக இருந்திருக்கும். எனக்கு முழு ஆதரவு உண்டு என்று நான் சொல்லவில்லை. தனித்த ஆதரவும் அந்த தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்ற எண்ணத்தை கொண்டவர்களின் ஆதரவும் உண்டு. இரண்டு பேருக்கும் கிடைக்கும் வாக்குகளினை குறைப்பதே நோக்கம்.

நான் இதை விக்கிரமபாகு கருனாரத்னாவின் தேர்தல் மேடையில் பேசியுள்ளேன். வடக்கு -கிழக்கிலும் மலையகத்திலும் மேலும் பேச உள்ளேன். இலங்கை வரலாற்றிலேயே இரண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ஒன்று சேர்ந்து மேடைகளில் பிரச்சாரம் செய்வது இதுதான் முதல் தடவையாக நடைபெறுகிறது. இரண்டு பேரும் ஒரே கருத்து கொண்டவர்கள். இந்த இரண்டு வேட்பாளருக்கும் வாக்களிக்காதீர்கள் வேறு யாருக்கும் வாக்களியுங்கள் என்பதே எமது செய்தி. நான் சொன்னேன் உங்களுக்கு விருப்பம் என்றால் அந்த புத்தபிக்கு வேட்பாளர்க்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இந்த இரண்டு பேருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று கேட்டேன்.

தயா: ஏன் நீங்கள் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடக்கூடாது? கடந்த தேர்தலில் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடவில்லை. திரும்பவும் மக்களை சுதந்திரமாக வாக்களிக்கவிடாமல் வாக்குகளை திசை திருப்பவே இப்படி நடக்கிறதாக எதிர்பாக்கப்படுகிறதே?

எம் கெ சிவாஜிலிங்கம்: எங்களுடைய பேச்சை மிககுறைந்த சதவிகிதத்தினரே கேட்பார்கள். பெரும்பான்மையானோர் தங்கள் இஸ்டப்படியேதான் வாக்களிப்பர். இடம்பெயர்ந்த மக்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். மக்கள் மனம் நொந்து போயுள்ளனர். அவர்கள் சுதந்திரமாகவே முடிவு எடுப்பவர்கள். அவர்கள் அங்கே போய் என்ன எழுதுவார்கள் என நாங்கள் போய் பார்த்தா சொல்வது. எப்பவும் போலவே அவர்கள் சுதந்திரமாகத்தான் வாக்களிப்பார்கள்.

இந்த தேர்தல் இம் முறையும் ஒரு சிக்கலை உருவாக்குகிறது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரின் வாக்காளர் பட்டியலை தேடவே 15 நிமிடம் எடுக்கிறது என்றால் சாதாரணமானவர்களை அதுவும் கிராமசேவகர் பிரிவுகளை பலவாறு பிரித்தும் இணைத்தும் உள்ள நிலைமையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. அந்த மக்கள் தமது பெயரைத் தேடிப்பிடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும்.

முகாம்களில் உள்ள மக்களின் தேர்தல் இடாப்பு கச்சேரியில் உள்ளது. ஏன் இந்த நிர்வாகத்தை முகாமுக்கு கொண்டுவர முடியாது?. முகாமில் உள்ள மக்கள் நல்ல உடுப்புக்கள் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த ஊத்தை உடுப்புடன் எப்படி கச்சேரிக்கு போவதென எனக்கு நேரடியாகவே சொல்லியும் உள்ளனர். இப்படியானவர்கள் எது எப்படியும் நடந்து விட்டுப் போகட்டும் என்றே இருந்து விடுவர். இவர்களில் பலர் தமக்கு ஏன் பதிவு என்றாகிவிடும் நிலையில் உள்ளனர்.

தயா: மக்களை கட்டாயப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்கவிட வேண்டும் என்றே கருதுகிறோம். மக்களை வாக்குபோடு என்று கூட சொல்லாமல் மக்களை சுதந்திரமாக விட வேண்டும் அதாவது மக்களை தமிழ் தேசியம் என்ற சிக்கலுக்குள் கொண்டுவராமல் விரும்பியபடி வாக்களிக்க விடவேண்டும். அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: யார் மக்களை கட்டாயப்படுத்தியது. நாங்கள் முதலாம் இடம் மகிந்தா அல்லது சரத்தான் வரப்போகிறார்கள் என்று சொல்லுகிறோமே வேறென்ன வேணும். நாங்கள் யாரைக் கட்டாயப்படுத்தினோம். கட்டாயப்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் தாங்களாகவே வாக்களிக்காது விட்டாலேயொழிய வேறு எதுவும் நடக்காது. கடந்த சில நாட்களாக புதிய ஜனநாயக கட்சி வாக்குகளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்று கோருகிறது. சிலர் இதை செய்யக் கூடும். ஆனால் பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள் என்று தான் நாங்கள் கூறுகின்றோம்.

தயா: உங்கள் கூட்டமைப்பில் உள்ள ஒருவர் நீங்கள் மகிந்தாவிடம் காசை வேண்டிக்கொண்டே இந்த தேர்தலில் நிற்பதாக கூறியுள்ளார் அது பற்றி உங்கள் கருத்து என்ன?

Sivajilingam_M_Kஎம் கெ சிவாஜிலிங்கம்: இந்த செய்தி வீரகேசரி ‘e’ பேப்பரில் வந்திருந்தது. பின்னர் இச் செய்தி எடுக்கப்பட்டு விட்டது. செய்தியை வீரகேசரி பத்திரிகையில் வெளியிடவில்லை. ஆனால் தமிழ்வின் இதை பிரசுரித்திருந்தது. அதேபோல 12ம் திகதி வலம்புரியிலும் முன்பக்கத்தில் தலைப்பு செய்தியாக பிரசுரிக்கப்பட்டடிருந்தது. தலையங்கம் “அரசாங்கத்திற்கு எதிராக விழும் வாக்குகளை தடுப்பதற்காக சிவாஜிலிங்கம் தேர்தலில் நிற்கிறார் சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு.”
யாழ்ப்பாணத்திலிருந்து அன்று இரவே நான் இந்த குற்றச்சாட்டிற்கான பதிலை கூறிவிட்டேன்.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியாதே. யார் உனக்குப் பின்னால் இருப்பவர்கள் என்று எனக்கு தெரியும். துணிவிருந்தால் அவர் முன்னால் வந்து என்மீது இந்த குற்றச்சாட்டை முன்வைக்கட்டும். நான் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக வழக்கு போட உள்ளதையும் குறிப்பிட்டிருந்தேன். இதைவிட 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசாங்கத்திடம் காசுவாங்கிக் கொண்டு அரசுக்கு வாக்களி என்று நான் கேட்க முடியமா? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

நான் எனது அறிக்கைகளை எப்பவும் துணிந்து விட்டுள்ளேன் மாசி மாதம் 10ம்திகதி தேசம் இணையத்தளத்திற்கு பேட்டி கொடுத்திருந்தேன் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக புலிகள் மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களை கையளிக்க வேண்டும் என்ற கோரியவன் நான். அதற்காக புலிகள் வன்னியிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள் என்னிடம் பேசினார்கள். அன்றும் நான் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் நின்றேன். நான் கைது செய்ப்பட்டடேன். அன்று புலிகள் அப்படி ஆயுதங்களை கையளித்திருந்தால் இன்று நிலைமைகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் அல்லவா.

அந்தக் காலத்தில் வாய் மூடிக்கொண்டு எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமலே இருந்த பல தமிழர்கள்; இன்று எனக்கு எதிராக பேசுகிறார்கள். சிவாஜிலிங்கம் என்ன செய்தார் என்று இந்த உலகுக்குத் தெரியும். சரியோ பிழையோ எனது மனச்சாட்ச்சிக்கு தெரிந்தபடி தமிழ்நாடோ டெல்லியோ போய் பின்னர் பிரித்தானியாவுக்குத் துரத்தியடிக்கப்பட்டு இப்படி நாடுநாடாய் ஓடித்திரிந்தவன் நான். இதற்கு பிறகும் என்னை மகிந்தாவிடம் காசு வாங்கியுள்ளேன் என்றால் என்ன சொல்வது.

போல் சத்தியநேசன்: 22பேர் தேர்தலில் நிற்கவுள்ளனர் இதில் எல்லோருக்கும் பத்து இருபது வாக்குகள் என்றாலும் கிடைக்கும் நீங்கள் நிற்பதால் என்ன வித்தியாசத்தை கொண்டுவர முடியும்?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் தேர்தல் மனு தாக்கல்செய்த பின்பு எதிர்க்கட்சி தரப்பில் பெரிய கலக்கம் ஏற்ப்பட்டுள்ளது இது வெற்றியே.

அதைவிட டக்ளஸ் தேவானந்தா சொல்லியுள்ளார் ‘சிறீகாந்தாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்தான் இந்த சிவாஜிலிங்கத்தின் தேர்தல் சந்திப்பு’ என்று. இதில் சிரிப்பு என்ன என்றால் நான் மகிந்தாவுக்காக நிற்கிறேன் என்றால் மகிந்தா வெற்றி பெற்றால் நன்மை அடையப்போவது டக்ளஸ்ம் ஈபிடிபியும் தான். நான் தேர்தலில் நிற்பதை டக்ளஸாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் இறங்கி வேலை செய்யப் போகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன சொல்வது.

இதைவிட வல்வெட்டித்துறையில் 10 வருடமாக இருந்த எனது அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் பலவந்தமாக கைப்பற்றியுள்ளார். நான் அங்கு போக முடியாதுள்ளது. யாழ்ப்பாணத்திலேயே இருந்து எனது வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி நிலைமைகள் இருக்க நான் இந்த உடுப்புடன் திரிவதில் அர்த்தமில்லை என்ற நிலைமையில் நான் போய் அரசாங்கத்திடம் காசு வாங்கித்தான் தேர்தலில் நிற்கிறேன் என்றால் என்ன சொல்வது இதை.

நான் என்ன அழுத்தத்தை கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களே? நான் ஒரு லட்சம் வாக்குகளை என்றாலும் பெற்றேன் என்றால் இது அந்த இரண்டுபேருக்கும் ஒரு பயத்தை உருவாக்குமல்லவா. இது பேரம் பேசும் நிலைமையை உருவாக்கியுள்ளது. சரி சம்பந்தர் ஜயா பேரம் பேசுகிறார் என்றால் சிவாஜிலிங்கம் நின்றிருந்தால் எப்படி பேரம் பேசலாம். நிற்காமல் இருந்தால் எப்படி பேரம் பேசலாம். இது பேரம் பேசும் சக்தியை கூட்டும்.

நாங்கள் எங்கள் பிரச்சிகைகளை சொல்கிறோம். எமக்கு பிரதேச சுயாட்சி மாநிலங்கள் எமது அரசியல் தீர்வு இது பற்றி எமது கருத்துக்களை சொல்லுகிறோம். இவை எல்லாம் விவாதங்களுக்குள் எடுபடும். சும்மா 13வது திருத்தம் என்று நில்லாமல் நாம் இவ்வளவு காலமும் 1.5 லட்சம் மக்களை பலி கொடுத்துள்ளோம், 40 ஆயிரம் போராளிகள், 23 ஆயிரம் படை வீரர்கள் இவ்வளவும் இழந்தபிறகும் 13வது திருத்தம் என்றால் ஏன் நாங்கள் இந்தளவு சண்டைகள் நடந்து 2009 வரை வந்திருக்க வேண்டும். இதை 1980லேயே முடித்திருக்கலாம்தானே.

பேசாமல் இருப்பது அழுத்தம் அல்ல. பேசுவது தான் அழுத்தம். இதை நீங்கள் புரிந்து கொள்வில்லை என்றால் நான் என்ன சொல்வது.

எஸ் தவராஜா: இன்றுள்ள எமது பிரச்சினைகளுக்குள்ளே பதிலை தேடுகிறோம். எமக்கென்று 3 வழிகள் உண்டு. ஒன்று மகிந்தா மற்றது சரத் மூன்றாவது உலகநாடுகளை பாவித்து அழுத்தம் கொடுத்து அரசியல் தீர்வுகளை கொண்டு வருவது. வெளிநாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி போராட்டங்களை செய்து எந்தப் பலனும் கிடைக்கவில்லை, இந்த உலகத்தை திருப்ப முடியவில்லை.

இப்போதுள்ள வழி அரசுடன் சேர்ந்து எமது உரிமைகளை பெறுவது தான். மற்ற உண்மை என்ன என்றால் இந்த அரசு தமிழர்க்கு ஒன்றையும் செய்யாது என்பது. இவை யாவற்றையும் பார்க்கும்போது இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டை ஏற்ப்படுத்தும் தேவை உள்ளது. எனது கேள்வி என்னவென்றால் ஏன் ரிஎன்ஏ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசுடன் ஒரு உடன்பாட்டை உருவாக்கவில்லை?

எம் கெ சிவாஜிலிங்கம்: இந்த உடன்பாட்டுக்கு வருதல் முயற்சி பண்ணுகிறோம். செய்கிறோம் எண்டு சம்பந்தர் ஜயா சொல்கிறார். இவர்களுடன் கனவான் ஒப்பந்தம் என்று சொல்லுகிறார்கள். எனது அபிப்பிராயம் என்னவென்றால் இந்த அரசுடன் இந்த அரசியல்வாதிகளுடன் கனவான் ஒப்பந்தம் செய்ய முடியாது. யாராவது ஒரு வெளிநாட்டின் உயர் ஸ்தானிகர் அலவலகத்தில் நான்கு சுவருக்குள் செய்யும் ஒப்பந்தங்களால் எந்த பிரயோசனமும் வராது. காரணம் சர்வதேச ஒப்பந்தம் இந்திய – இலங்கை ஒப்பந்தம் இதையே நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. வட-கிழக்கு இணைவை ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பினால் உடைத்துவிட்ட இந்த அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள். இந்த வட – கிழக்கு துண்டிப்பும் இந்தியாவும் சேர்ந்து தான் செய்துள்ளது எனது கருத்து. இரு மாகாணங்களும் இணைந்தால் இவர்கள் தனிநாடு என்கிறார்கள். உடைத்து விட்டுப் பார்ப்போம் என்பது தான் இந்தியாவின் பரிசோதனை. சிலவேளை தேவை ஏற்பட்டால் திரும்பவும் இணைப்பார்கள்.

இன்றுள்ள சர்வதேச அரசியல் நிலைமைகளில் வெளிநாட்டு தூதுவர்கள் நித்திரையில்லாமல் இருக்கிறார்கள். இதுதான் எமக்கும் சந்தர்ப்பம். எங்கே எந்த தலைவர் சரி சொல்லட்டும் தமிழ் மக்களுக்கு சமஸ்டி ஆட்சி என்று வட – கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ளட்டும். இதை சிங்கள மக்கள் மத்தியில் சொல்ல பயப்பிடுகிறார்கள். முன்பு சொன்னார்கள் நாட்டை துண்ணடாட பார்க்கிறார்கள் என்று. இப்ப அது எல்லாமே முடிந்து விட்டதே? ஏன் சமஸ்டி பற்றிபேசக் கூடாது? இப்ப ஒரு நாடுதானே இருக்கிறது ஏன் பிரச்சினைகளை தீர்க்கக் கூடாது?

இவர்கள் எங்களின் வாக்குகளால் வெல்ல மட்டும் வராமல் நீங்களே உங்களின் war heroகள் யார் என்று தீர்மானியுங்கள். நாங்கள் விலத்தி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்களால் அடிபட்டு உதைபட்டு நொந்து இருக்கிறோம். நாங்கள் உங்களைப் பார்த்து நீதான் நீதிபதி, நீதான் குற்றவாளி என்று சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் இரண்டு பேரும் சண்டியர்கள். நீங்களே அடிபட்டு முடியுங்கள். சிங்கள மக்கள் தீர்மானிக்கட்டும் யார் champion என்று நாங்கள் அல்ல. இதுதான் எங்களின் நிலைப்பாடு.

பாரி: மகிந்தாவை ஆட்சி மாற்றம் செய்யவே உலக நாடுகள் சரத்தை இங்கே களம் இறக்கியுள்ளனர். மகிந்தாவை போர்க்குற்றவாளியாக்க வல்லரசுகள் முயற்ச்சிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: இது சர்வதேசங்களின் விளையாட்டுக்கள் தான். அதில் நாங்களும் இழுபடுகிறோம். 50 ஆயிரம் மக்கள் சாகும்போது வராத இந்த சர்வதேசம் இன்று வருவது எண்டால் நாங்கள் ஏன் பின்னால போக வேணும் என்பதுதான் எனது கேள்வி.

புலிகளை விடுவோம் சண்டைபிடித்து சாவதே என்றவர்கள். ஆனால் மக்கள் சாகும் போது எந்த உதவிக்கும் வராத சர்வதேசம். எங்கே சர்வதேச மனிதாபிமானம். நாங்களே எங்கள் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும். இன்று அமெரிக்கா சொல்லும்இ இந்தியா சொல்லும்இ பிறகு புதிய ஜனாதிபதி வந்ததும் புதிய தலைவர்இ புதிய தொடர்பு என்று போய்விடுவார்கள். அடுத்த பிரச்சினை வரும்வரைக்கும் நாங்கள் இப்டியே இருக்க வேண்டியதுதானா?

ஒருவர் தோற்கடிக்க மற்றவர் எங்களை மீண்டும் பழிவாங்க விடமுடியுமா? நாம் நொந்துபோயுள்ளவர்கள் எம்மை ஒருபக்கத்தில் விடுங்க.

ரி சோதிலிங்கம்: தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்வைக்கும்படி மகிந்தா ராஜபக்சவையும் சரத் பொன்சேகாவையும் நீங்கள் நேரடியாக கேட்டுள்ளீர்களா?

எம் கெ சிவாஜிலிங்கம்: பல தடவைகள் நாட்டில் கேட்டுள்ளேன். சர்வகட்சி மாநாடு என்று 126 தடவைகள் கூட்டங்கள் நடாத்திவிட்டு எதுவுமே இல்லாமல் போனது. தேர்தலின் பின்பு பார்ப்போம் என்று சொல்வதை நம்பமுடியாது. ஜனவரி 26ம் திகதி மாலையின் பின்னர் இந்த அரசியல்தீர்வு என்ற கதை முடிந்துவிடும். முன்பு சொன்னார்கள் புலி அழிப்பில் அரசியல்தீர்வு என்று. புலி முடிந்தது எங்கே அரசியல்த்தீர்வு? அதேபோல் 26ம் திகதிக்கு பின்பும் இதே கதைதான் இருந்து பாருங்கள்.

புலிகளை அழிக்க அரசியல்தீர்வே வழி என்று பல தடவைகள் நாம் கேட்டுள்ளோம். அரசியல்தீர்வு என்பது இவர்கள் சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் விடும் ரீல் தான்இ வேறு எதுவுமல்ல.

அண்மையில் டில்லி போய் இதைத்தான் இவர்கள் இந்தியாவிற்கு சொல்லி விட்டு வந்துள்ளனர். இந்த விடயங்களில் இரண்டு பேருமே இதைதான் செய்கிறார்கள் சரத் டில்லி போய் ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்கிறார், 13வது திருத்தச்சட்ட மூலம் என்கிறார்இ இவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை எங்கே கிடைக்கப்போகிறது? இன்றுள்ள சூழ்நிலையில் என்ன கிடைக்கும் இந்த ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க இவை யாவும் பேய்க்காட்டல்களே.

அப்படி இல்லை என்றால் 1970களில் சிறிமாவோ செய்தது போன்று புதிய அரசியலமைப்பை கொண்டுவரத் தயாரா? இதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லிவிட்டு செய்யுங்கோ நாங்களும் ஆதரவு தருகிறோம். ஒரு கொன்ஸ்ரிற் ரியூசன் அசம்பிளியை உருவாக்கி சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றி விட்டு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள். பழைய குப்பைகளை கீழே போடுங்கள். புதிய யாப்பை கொண்டு வருவோம். இதை விட்டுவிட்டு பௌத்தர்களின் நாடு, அவர்களுக்கு முதலிடம் இப்படியான சேட்டைகள். இலங்கையை ஒரு செக்குலர் நாடாக்குவதே சிறந்தது. இதை நாங்கள் சிங்கள மக்களுக்கு சொல்லியுள்ளோம்.

இனப்பிரச்சனையின் நேரடி வெளிப்பாடுதான் புலி. அது இன்று இல்லாமல் போய்விட்டது. ஆனால் அதற்கான கிருமி உள்ளே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது மீண்டும் எழுலாம். இதே போலத்தான் ஜேவிபி யினரை அழித்தார்கள். ஆனால் மீண்டும் ஜேவிபி எழுந்து நிற்கிறது. இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு வைக்கப்படாவிட்டால் மீண்டும் பிரச்சினைகள் எழும். இப்ப உள்ளது ஒரு இடைவேளையே தான்.

மூன்றாவது அணியை நோக்கி : ச அரவிந்தன்

Aravinthan_S_TULFஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலும் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இத்தேர்தல் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதும் காத்திரமானதுமான ஒரு தேர்தலாகவே அமைந்துள்ளது. காரணம் கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் நிலவிவந்த அரசியல் சூழல்கள் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இத்தேர்தலை நடாத்தத் திட்டமிடப் பட்டிருப்பதுவே.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு ஆட்சிக்கு வந்த பச்சை மற்றும் நீலக்கட்சிகள் தத்தமது சுயநல அரசியலுக்காக இனவாதத்தைப் பேசிப்பேசி ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சியமைத்ததன் விளைவுதான் இலங்கையில் வாழும் பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் இனரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தியமையே நாட்டில் ஏற்பட்ட பேரவலங்களுக்குக் காரணமாக அமைந்தது. பதவிவெறி பிடித்த ஆட்சியாகையில் குரோதத்தனமான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கைவாழ் சகல தரப்பினருமே. இருப்பினும் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது சிறுபான்மைச் சமூகம்தான் என்பதை நாம் மிகுந்த தேவதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை அரசியல்த் தலைமைகள் இதுவரை காலமும் காத்திரமான பங்கு வகித்ததாகச் சரித்திரமே கிடையாது. காரணம் இத்தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கே அதிலும் ஆட்சியமைக்கக் கூடிய பச்சை அல்லது நீலக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்புக்கள் அதிகம் என்பதனால் அந்தந்தக் காலங்களில் எந்தெந்தப் பக்கம் காற்று வீசுகின்றதோ அந்தந்தப் பக்கங்களில் சாய்வதை வழமையான ஒரு செயற்பாடாக சிறுபான்மை அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதுவரை காலமும் நாட்டில் மக்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவது தொடர்பில் எந்தவொரு சக்தியும் சிந்தித்தது கிடையாது. அதுபற்றி சிந்திப்பதற்கு நாட்டில் இருந்த சூழலும் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் இனியாவது இதுதொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கடமை சிறுபான்மைத் தலைமைகளுக்கு உண்டு.

இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது. இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கௌரவமான அரசியல்த் தீர்வினை முன்வைக்கக் கூடிய ஒரு சக்தியை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழுல் உருவாக வாய்ப்புண்டு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கம் முன்னணி வேட்பாளர்களில் யாரை சிறுபான்மை இன மக்கள் ஆதரிக்கப் போகின்றார்கள் என்ற கேள்விக்கு முடிவு காணவேண்டிய காலமும் தேவையும் வந்துள்ளது. இவ்விடயத்தில்தான் சிறுபான்மை இன மக்களுக்கு மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மிகவும் நிதானத்துடனும் அவதானத்துடனும் அற்ப சொற்ப சலுகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காது சிறுபான்மை இன மக்களுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை முன்வைத்து அதனை முன்கொண்டு செல்லக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் மகிந்தாவோ அல்லது பொன்சேகாவோ சிறுபான்மை இனத்துக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் எத்தனையோ இளைஞர் யுவதிகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொண்றுகுவித்து அவர்களின் உடலத்தின்மேல் மேடை போட்டு அரசியல் பேச நினைக்கின்றனர். மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அகதி முகாம்களில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக்கொண்டு உறவுகளைப் பிரிந்தும், இழந்தும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். நடத்தி முடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் வடுக்களை எமது சமூகம் இன்னமும் 60, 70 ஆண்டுகளுக்கு சுமக்கப் போகின்றனர் என்பதை நாம் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் மறந்து நாம் எவ்வாறு இவர்கள் இருவரையும் ஆதரிக்க முடியும். இத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெல்வதற்குரிய வாய்ப்புக்கள் மகிந்தாவுக்கு அல்லது பொன்சேகாவுக்கேதான் அதிகம் உள்ளது. என்றாலும் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அநீதிகள் எல்லாவற்றுக்கும் இவ்விருவருக்கும் சமமான பங்குண்டு.

எம்மில் சிலர் சிந்திக்கக் கூடும் எய்தவன் இருக்க நாம் ஏன் அம்பை நோக வேண்டும் என. யுத்தத்திற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட காலம்முதல் இந்த யுத்தத்தை வென்றே தீருவேன் எனக் கங்கணங் கட்டிக்கொண்டு நின்றது சரத் பொன்சேகாதான் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. அது மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இலங்கை வாழ் சிறுபான்மை இன மக்கள் தொடர்பாக மிகவும் கேவலமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அக்கருத்துக்களுக்கு எந்தவொரு சிறுபான்மை இனத் தலைவர்களும் கண்டனத்தை வெளியிடவில்லை. ஆனால் அண்ணன் ஹக்கீம் மட்டும் அதற்கான கண்டனத்தை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.

யுத்தம் உக்கிரமடைந்த காலங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி யுத்தப் பிரதேசங்களில் அகப்பட்டிருக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கு UNHCR, ICRC போன்ற நிறுவனங்களின் உதவியைப் பயன்படுத்தி அந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுங்கள் என பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் அதை செவிமடுக்காதது எத்தனையோ எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது அரச தலைவர் மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும்தான்.

இன்று சிறுபான்மை மக்கள் தொடர்பில் இருந்துவந்த கரிசனை அன்று இருந்திருந்தால், யுத்தப் பிரதேசத்தில் பொதுமக்கள் இருக்கும்வரை என்னால் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அரச தலைவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தால், எத்தனையோ அப்பாவி உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். இவை எல்லாவற்றையும் மறந்து நாம் இவர்களை ஆதரித்தால் விலை மதிப்பற்ற உயிர்களையும் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு இன்னும் பல ஆண்டுகள் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு வாழப் போகும் எமதினிய உறவுகளுக்கு நாம் செய்யப்போகும் வரலாற்றுத் துரோகமாகும். அதுமட்டுமல்ல வடகிழக்குப் பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. கண்டதுண்டமாக வெட்டி சந்திகளில் போடப்பட்டவர்கள் எத்தனையோ பேர். குற்றங்கள் ஏதும் செய்யாது சந்தேகத்தின் பேரில் சிறைகளில் வாடுகின்ற அப்பாவிகள் எத்தனையோ. இவை எல்லாவற்றுக்கும் பொறுப்பான இந்தக் கொடூர அரசியல் சாம்ராஜ்யத்துக்கும் இந்த சாம்ராஜ்யத்துக்கு விலை போகும் சிலருக்கம் முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதற்படியாக இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கல் போன்றதோர் அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்தி இலங்கையில் வாழும் சகல தரப்பு மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். அதற்கான அரசியல் சூழ்நிலையை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை இலங்கைவாழ் மக்கள் அனைவரும் வழங்க வேண்டும். இத்தேர்தல் தொடர்பில் நாம் நிதானமாகவும் தெளிவாகவும் ஆராய்ந்து வருகின்றோம். வெகுவிரைவில் தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தியோக பூர்வமான முடிவினை வெளியிடும்.

ச அரவிந்தன் (மத்திய குழு உறுப்பினர், தமிழர் விடுதலைக் கூட்டணி)

கட்டக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

catak.jpgஇந்திய இலங்கை அணிகளுக்கு இடையே கட்டக்கில் இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கட்டக் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்க அதிகபட்சமாக 73 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் 96 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து தமது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். கட்டக் போட்டியில் அவர் அடித்த அரைசதத்துடன் இது வரை ஒரு நாள் போட்டிகளில் டெண்டூல்கர் 93 அரைசதங்களை அடித்துள்ளார். இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

Sri Lanka in India ODI Series – 3rd ODI
India v Sri Lanka
India won by 7 wickets (with 44 balls remaining)
ODI no. 2934 | 2009/10 season
Played at Barabati Stadium, Cuttack
21 December 2009 – day/night (50-over match)
       
 Sri Lanka innings (50 overs maximum)
 WU Tharanga  b Jadeja  73 
 TM Dilshan  c †Karthik b Nehra  41 
 KC Sangakkara*†  st †Karthik b Sehwag  46 
 DPMD Jayawardene  c Raina b Harbhajan Singh  2 
 SHT Kandamby  b Sharma  22
 CK Kapugedera  b Jadeja  15 
 KMDN Kulasekara  lbw b Jadeja  10 
 S Randiv  c †Karthik b Sharma  0 
 SL Malinga  b Nehra  13 
 BAW Mendis  b Jadeja  6 
 UWMBCA Welegedara  not out  2  
 Extras (b 1, lb 2, w 6) 9     
      
 Total (all out; 44.2 overs; 190 mins) 239 (5.39 runs per over)
Fall of wickets1-65 (Dilshan, 6.2 ov), 2-165 (Sangakkara, 22.3 ov), 3-169 (Tharanga, 24.4 ov), 4-173 (Jayawardene, 25.6 ov), 5-204 (Kapugedera, 34.3 ov), 6-210 (Kandamby, 35.5 ov), 7-210 (Randiv, 35.6 ov), 8-218 (Kulasekara, 38.1 ov), 9-236 (Mendis, 42.6 ov), 10-239 (Malinga, 44.2 ov) 
        
 Bowling 
 Z Khan 7 0 49 0  
 I Sharma 7 0 63 2
 A Nehra 6.2 0 32 2
Harbhajan Singh 9 0 29 1
 V Sehwag 4 0 26 1 
 RA Jadeja 10 0 32 4 
 Yuvraj Singh 1 0 5 0  
       
 India innings (target: 240 runs from 50 overs)
 V Sehwag*  c Dilshan b Welegedara  44
 SR Tendulkar  not out  96  
 G Gambhir  c & b Randiv  32 
 Yuvraj Singh  c †Sangakkara b Welegedara  23 
 KD Karthik†  not out  36  
 Extras (lb 5, w 6) 11     
      
Total (3 wickets; 42.4 overs) 242 (5.67 runs per over)
Did not bat SK Raina, RA Jadeja, Harbhajan Singh, Z Khan, A Nehra, I Sharma 
Fall of wickets1-55 (Sehwag, 6.6 ov), 2-127 (Gambhir, 21.3 ov), 3-169 (Yuvraj Singh, 32.5 ov) 
        
 Bowling O M R W   
 UWMBCA Welegedara 8 1 35 2
KMDN Kulasekara 8 0 47 0
 SL Malinga 9.4 1 55  
 BAW Mendis 9 0 67 0  
 S Randiv 8 1 33 1
 
Match details
Toss Sri Lanka, who chose to bat
Series India led the 5-match series 2-1

இந்திய அணிக்கு இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக்

ms-dhoni.bmpஇலங்கை அணிக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது.

நாக்பூரில் நடந்த போட்டியில் இலங்கை வெற்றிபெற தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. மூன்றாவது போட்டி இன்று ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கிறது. நான்காவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இவ்விரு போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் மற்றும் இஷாந்த் சர்மா புதிதாக சேர்க்கப்பட்டனர். தடை விதிக்கப்பட்டுள்ள டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயற்படுவார்.

பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்ட ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். விரல் காயம் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் அணியில் நீடிக்கிறார். அடுத்து வரும் போட்டிகளில் இவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று, நான்காவது போட்டிக்கான இந்தியா அணி: செவக் (தலைவர்), காம்பிர், சச்சின், யுவராஜ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஜாகிர் கான், நெஹ்ரா, இஷாந்த் சர்மா, விராத் கோஹ்லி, சுதிப் தியாகி, பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா.