கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல் : உதயன் (யாழ்) & சுடரொளி

Front_Cover_UoJ_A_Viewயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தருக்கான இந்தத் தேர்தலில் எட்டுப்பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் பல்கலைகக்கழகக் கவுன்சில் உறுப்பினர்கள் 25 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த 25 பேரில் 12 பேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாகவும் 13 பேர் யுனிவர்சிற்றி கிரான்ட் கொமிஸனால் (University Grant Commission) நியமிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 கவுன்சில் உறுப்பினர்களில் நால்வர் துணைவேந்தராகப் பதவிக்குப் போட்டியிடுவதால் அவர்கள் வாக்களிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். ஆகவே கவுன்சிலின் 21 உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் முன்னுரிமை அடிப்படையில் தெரிவாகும் மூவரின் பெயர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும். அம்மூவரில் ஒருவரை ஜனாதிபதி துணைவேந்தராக நியமனம் செய்வார்.

இத்தேர்தலில் கபொத உயர்தரத்தில் இரு பாடங்கள் மட்டுமே சித்தியடைந்த தனேந்திரன் முதல் இலங்கையிலேயே மிகச் சிறந்த கல்வித்தகமையுடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்வரை எட்டுப் பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ராஜரட்ணம் ஆகிய இருவரும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து வந்து இப்பதவிக்கு விண்ணப்பித்து உள்ளனர். ஏனைய நால்வரும் யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக நீண்ட காலம் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் பேராசிரியர் என் சண்முகலிங்கம் சென்றமுறையும் உபவேந்தராக இருந்தவர்.

உபவேந்தருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களின் தகமைகளும்:

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் – D.Sc. (Eng.) London, Ph.D. Carnegie Mellon, IEEE Fellow, Chartered Engineer
பேராசிரியர் (செல்வி) வசந்தி அரசரட்ணம் – B.Sc. Madras, MSc. , Ph.D. Jaffna
சிரேஸ்ட விரிவுரையாளர் ஆல்வாப்பிள்ளை – Faculty of Agriculture
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் — B.A.(Peradeniya), M.A.(Jaffna), Ph.D.(Jaffna)
பேராசிரியர் என் ஞானகுமரன் – B.A.(Kelaniya), M.A.(Jaffna), Ph.D.(India)
பேராசிரியர் என் சண்முகலிங்கன் – B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna)
ராஜரட்னம் – ( பொறியியல் பட்டதாரி.)
தனேந்திரன் – Ununion Member with 2 A/L s

இத்துணைவேந்தர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு – கவுன்சில் உறுப்பினர்களுக்கு 25ஆம் திகதி விளக்கமளிக்க உள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலருக்கும் ஆங்கிலப் பரீட்சயம் காணாதபடியால் அவர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விளக்கமளிக்குமாறு கேட்கப்பட்டு உள்ளனர்.

ஒரு காலத்தில் கல்வித் தரத்தின் உச்சத்தில் இருந்த யாழ்ப்பாணத்தின் கல்விநிலை தற்போது மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது. தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட யாழ் மாணவர்கள் இப்போது தரப்படுத்தல் இல்லாவிட்டால் பல்கலைக்கழகம் செல்ல முடியாது என்ற நிலைக்குச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் முன்னின்றவரும் அதன் முதலாவது அதிபராக இருந்தவர் பேராசிரியர் கைலாசபதி. இவர் யாழ் பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதல்தரப் பல்கலைக்கழகமாக்க கனவு கண்டார். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 10 000மாவது இடத்திற்கு அண்மையாக உள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகம் முழு உலகிலும் முன்நிற்கின்ற 2000 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை யாழ்ப்பாணக் கல்வி நிலையின் வீழ்ச்சியை காட்டி நிற்கின்றன. இன்றைய உலகமயமாகி உள்ள உலகில் கல்வியே செல்வச்செழிப்பின் அடிப்படையாக உள்ளது. கல்வியை இழக்கின்ற சமூகம் பொருளாதார ரீதியாவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் பலவீனமான நிலைக்கே செல்கின்றனர். அதிலும் குறிப்பாக சிறுபான்மைச் சமூகமான தமிழர்கள் தங்கள் கல்விநிலையில் வீழ்ச்சி அடைவது மிகவும் ஆபத்தானது.

ஆகவே தமிழ் கல்விச் சமூகம் மீண்டும் தனது கல்விநிலையை முன்னைய உயர்நிலைக்கு இட்டுச்செல்ல வேண்டும். அதற்கு எமது மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுகின்ற ஆசிரியப் பெருந்தகைகளை உருவாக்குகின்ற பல்கழைக்கழகம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ் பல்கலைக்கழகம். அதற்கு ஏற்றாற் போல் அப்பல்கலைக்கழகம் இயங்க வேண்டும். சிறந்த கல்வித்தகமையும், நிர்வாகத் திறமையும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அனுபவமும் உடைய ஒருவராலேயே வீழ்ச்சியடைந்துள்ள தமிழ்க் கல்விச் சமூகத்தின் கல்வியை உயர்நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்கள்:
பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கவுன்சில் உறுப்பினர்கள்:

பேராசிரியர் கெ சிவபாலன் – (Dean/Medicine), பேராசிரியர் கெ தேவராஜா – (Dean/Management Studies & Commerce), கலாநிதி திருமதி சிவச்சந்திரன் – (Dean/Agriculture), பேராசிரியர் கந்தசாமி – (Dean/ Science), பேராசிரியர் கெ குகபாலன் – (Rep of Senate), கலாநிதி மங்களேஸ்வரன் (Dean/Business Studies, Vavuniya Campus), திரு எஸ் குகனேசன் (Dean/Applied Science, Vavuniya Campus), திரு ஆர் நந்தகுமார் – (Rector/Vavuniya Campus)

பல்கலைக்கழகத்தைச் சாராத University Grand Commission ஆல் நியமிக்கப்பட்ட செனட்சபை உறுப்பினர்கள்:

திரு கெ கணேஸ் (முன்னாள் யாழ் அரசாங்க அதிபர்.), அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் (அடுத்த யாழ் பிஸப் ஆகக் கருதப்படுபவர்.), திரு கெ கேசவன் (பிரபலமான சட்டத்தரணி – சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்.), திரு ஏ திருமுருகன் (தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர், சைவ மற்றும் சமூக வேகைகளில் ஈடுபட்டு உள்ளவர்.), திரு ஏ தியாகராஜா (பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் இரசாயனப் பொறியியலாளராக இருந்தவர்.), திரு ரி ராஜரட்ணம் (கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபராக இருந்தவர். பின்னர் SLIATE (Sri Lanka Institute for Advanced Technical Education) என்ற தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியவர்.), இன்ஜினியர் எம் ராமதாசன் (Euroville Engineers and Constructors (PVT) Ltd இன் முகாமைத்துவ இயக்குநர்.), திருமதி என் குணபாலசிங்கம் (யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை.), திரு கெ தேவேந்திரன் (Jaffna Multi Purpose Cooperative Society – MPCSக்கு பொறுப்பானவர்.), திருமதி சரோஜா சிவச்சந்திரன் (மிகவும் அறியப்பட்ட பெண்ணிலைவாதி. சர்வதேச அரங்குகளில் பேச்சாளராக அழைக்கப்பட்டவர். இலங்கைத் தேசிய சமாதான கவுன்சிலின் உறுப்பினர்.) திரு எம் சிறிபதி (பாடசாலை அதிபர்), சுசிலா சாரங்கபாணி (ஓய்வுபெற்ற ஆசிரியை. சமாதான நீதவான்), டொக்டர் எஸ் ரவிராஜ் (யாழ் போதனா வைத்தியசாலை சிரேஸ்ட சத்திரசிகிச்சை மருத்துவர்)

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஒருவரை நிர்ணயிக்கின்ற பொறுப்பை தமிழ் கல்விச் சமூகத்தின் சார்பில் மேலுள்ள 21 பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்கள் மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் தமிழ் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்தை மட்டும் முன்நிறுத்தி, தங்கள் வாக்குகளை மிகப்பொறுப்புடன் வழங்கி, தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடமாய் உள்ள யாழ் பல்கலைக்கழகத்துக்கு மிகச் சிறந்த கல்வி ஆளுமையும் நிர்வாக ஆளுமையும் பரந்த அனுபவமும் உடைய ஒருவரை உபவேந்தராகத் தெரிவு செய்ய வழிசெய்ய வேண்டும். தமிழ் கல்விச் சமூகம் மீண்டும் தளைத்தோங்க வழியேற்படும் என நம்புவோம்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (2)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் முக்கிய அமைப்பாக இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான நீண்ட விவாதம் ஒன்று தேசம்நெற் இணையத்தில் அண்மைக்காலமாக நடந்து கொண்டு உள்ளது. இவ்விவாதத்தில் வெவ்வேறு இணையத் தளங்களில் பங்கு பற்றியவர்களும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய உறுப்பினர்களும் பங்குபற்றுகின்றனர். கருத்தாளர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தியும் கருத்துக்களை முன்வைப்பதால் விவாதம் மேலும் ஆரோக்கியமாகி வருகின்றது. தேடலையும் தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் தேசம்நெற் வரவேற்று இவ்விவாதத்தைத் தொடர்கிறது.

முன்னைய பதிவில் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த விவாதத்தளம் கனதியாகி உள்ள நிலையில் அதற்குச் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகின்றது. அதனால் இவ்விவாதத்தை பகுதி (2) ஆகத் தொடர்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் தற்போதும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அவர்களுடைய கடந்தகால வரலாறு சங்கடங்களை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் அந்த வரலாற்றை கடந்து செல்வதற்கு இவ்வாறான ஆய்வுகள் அவசியம். உண்மைகளை அறியாமல் அவற்றை அப்படியே கைவிட்டு நாம் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது. அதற்காகவே தென்னாபிரிக்காவில் உண்மையும் மீளுறவுக்கும் ஆன ஆணைக்குழு – Truth & Reconciliation Commission அமைக்கப்பட்டது.

ஆகவே இந்த வரலாறு தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றிய உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டுவர தற்போதைய தமிழீழ விடுதலைக் கழக உறுப்பினர்களும் தலைமையும் முன்வரவேண்டும். அதற்கூடாக மட்டுமே தமிழீழ விடுதலைக் கழகம் தனது அரசியல் பயணத்தை தொடரமுடியும். அதைச் செய்யாதவிடத்து கடந்தகாலம் அவர்களைத் துரத்துவதை தவிர்க்க முடியாது.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை தாங்கள் எழுதி வருவதாக சிலர் தேசம்நெற் க்கு தெரியப்படுத்தி உள்ளனர். தேசம்நெற் இல் வரும் பின்னூட்டங்கள் தாங்கள் எழுதுகின்ற வரலாற்றுக் குறிப்பை செழுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் தேசம்நெற் கருத்தாளர்கள் ஒரு வரலாற்று ஆசிரியனுக்கு உரிய கண்ணியத்துடன் தங்கள் உணர்வுகளுக்கு இடம்கொடாமல் தொடர்ந்தும் தாங்கள் அறிந்த உண்மைகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கு உண்மையைத் தேடுகின்ற பலர் உலாவுகின்றனர். அவர்களுடைய தேடலுக்கும் ஆய்வுக்கும் உங்கள் பதிவுகள் மிகப்பயனுள்ளதாக அமையும்.

தேசம்நெற்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (1)
http://thesamnet.co.uk/?p=23085

மாவீரர்களை மதிப்போம்! அவர்கள் பெயரில் மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்போம்!!! : த ஜெயபாலன்

IDP_Camp_Injuredநினைவு நாட்கள் என்பது சமூக மேற்கட்டுமானங்களில் ஒன்று. அனைத்து தமிழீழ விடுதலை இயக்கங்களுமே போராட்டங்களில் உயிர்நீத்த போராளிகளுக்கான அஞ்சலிகளை, நினைவுகளை வெகு சிறப்பாகவே கொண்டாடி வந்தனர். இதன்மூலம் போராட்டத்தில் இணைகின்ற ஒவ்வொரு போராளியும் மரணத்தின் பின்னரும் தங்களது நினைவுகள் தொடரும் என்பதையும் தங்களது சமூக மதிப்பையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் தங்களது உயிர்கள் மிக உன்னதமான நோக்கத்திற்காக இழக்கப்படுவதை பெருமையாகவும் கருதினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது உயிரிழப்பு உரும்பராயைச் சேர்ந்த பொன் சிவகுமாரனின் உயிரிழப்பாகவே கொள்ளப்படுகிறது. யூன் 05 1974 பொன் சிவகுமாரன் சயனைட் (நஞ்சு) உட்கொண்டு உயிரிழந்தார். இதிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட உயிரிழந்த போராளிகளின் பட்டியல் மிக நிளமானது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்த விடுதலை இயக்கங்களிடமே தங்கள் அமைப்பில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் விபரங்கள் முழுமையாக இருக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தங்கள் இயக்கத்தில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் முழுமையான பட்டியலை வைத்திருந்தனர். அதற்கான நிர்வாகக் கட்டமைப்பையும் அவர்கள் கொண்டிருந்ததால் ஆவணப்படுத்தவும் அவர்களால் முடிந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உன்னத நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போதும் அது ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே தடம்புரண்டது. போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், உன்னத நோக்கத்திற்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் போராட்டத்தை முன்னெடுத்த தலைமைகள், பெரும்பாலும் தமிழ் மக்களின் அதிகார மையத்தை, தங்கள் கைகளில் வைத்துக்கொள்வதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தினர். இலங்கை அரசாங்கத்துடனான அதிகாரத்திற்கான போட்டியாக மட்டுமே இப்போராட்டம் அமைந்தது.

ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் உன்னத நோக்கங்களுக்காகச் சென்றவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகக் கருதப்பட்ட, இலங்கை அரச படைகளினால் கொல்லப்படவில்லை. கணிசமானவர்கள் தங்கள் இயக்கங்களில் இடம்பெற்ற உட்படுகொலைகளிலும், இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதல்களிலும் கொல்லப்பட்டனர். அதனை விட இவ்வியக்கங்கள் தமிழ் மக்கள் மீதும், சகோதர இனங்களான முஸ்லீம், சிங்கள மக்கள் மீதும் படுகொலைத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகூரல் என்பது போராளிகளின் நினைவுகூரலாக மட்டுமல்லாமல் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த அனைவரினதும் நினைவாகக் கொல்லப்பட வேண்டும்.

அல்பிரட் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் அவரைப் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்தது. இவ்விரு கொலைகளுக்கும் இடையே நடந்து முடிந்த உயிரிழப்புகள், அவலங்கள் இவற்றின் சாட்சியாக நாம் தற்போது வாழ்ந்துகொண்டு உள்ளோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது பாதையில் இருந்து தடம்புரண்டதால் அதற்காக உயிர்நீத்த போராளிகள், அந்தப் போராட்டத்திற்காகச் சென்றவர்கள், வேறு வேறு நோக்கங்களுக்காக உயிர் பறிக்கப்பட்ட போராளிகள் என, இவர்களது தியாகங்களைச் கொச்சைப்படுத்திவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகச் சென்ற போராளிகள், அவர்கள் எந்த விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நினைவுகூரப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரிழந்த போராளிகளை கௌரவிக்கின்ற ஒரு கலாச்சாரத்தை தங்கள் அமைப்பிற்குள் மிகத் திட்டவட்டமாக வளர்த்தெடுத்தனர். ஏனைய அமைப்புகளும் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்ட போதும் அவை தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஸ்தாபனமயப்பட்டதாக அமையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை மாவீரர்களாகக் கௌரவிக்கின்ற முறைமையானது தொடர்ச்சியாக போராளிகளை உள்வாங்கவும் கரும்புலிகளை உருவாக்கவும் உதவியது.

1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகார்த்தமாக உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரதும் தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. இது விடுதலைப் புலிகளின் நாட்காட்டியில் ஒரு முக்கிய தினமாகும். உத்தியோகபூர்வமாக பிரபாவின் வருடாந்த அறிக்கையும் இத்தினத்தில் வெளியிடப்படுவதால், இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மிகமுக்கிய தினமாக அமைந்தது.

1982ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும் 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால் 1992 முதலே பிரபாவின் மாவீரர் தின உரைகள் பதிவில் உள்ளது.

1982 நவம்பர் முதல் 2008 ஓகஸ்ட் வரை விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டும் உயிரிழந்த போராளிகள்:
1982 – 1, 1983 – 5, 1984 – 36, 1985 – 123, 1986 – 258, 1987 – 451, 1988 -363, 1989- 372, 1990 -961, 1991- 1614,
1992 – 788, 1993 – 925, 1994 – 375, 1995 – 1505, 1996 – 1376, 1997 – 2106, 1998 – 1798, 1999 – 1545, 2000 – 1980, 2001 – 759, 2002 – 38, 2003 – 72, 2004 – 80, 2005 – 56, 2006 – 1002, 2007 – 954, 2008  ஒக்ரோபர் 31 வரை 1974 போராளிகள் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் போரளிகளது உயிரிழப்புகளை 2008 ஒக்ரோபர் 31 வரை 22 114 உயிரிழந்த போராளிகளை முறையாக ஆவனப்படுத்தி உள்ளனர். அதற்குப் பின் மே 18 2009 வரையான 7 மாதங்களிள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்காண போராளிகள் தலைவர்கள் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட பெரும்பாலான போராளிகளை அவர்களால் ஆவணப்படுத்த முடியவில்லை. அவர்களது விபரங்களும் சேர்க்கப்படும் பட்சத்தில், முதல் போராளி லெப் சங்கர் முதல் 25,000க்கும் அதிகமான போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டும் உயிரிழந்து இருப்பர். இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உட்கட்சிப் படுகொலைகளில் கொல்லப்பட்ட மாத்தையா மற்றும் நூற்றுக்கணக்கான போராளிகள் இடம்பெற்றிருக்கவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகள் ஆவணப்படுத்தப்படாமைக்கு அவர்கள் அமைப்பில் இருந்ததை உறுதிப்படுத்த முடியாமையும், உயிரிழப்பை உறுதிப்டுத்த முடியாததும் முக்கிய காரணமாகும். ஆனால் தலைமைகளது உயிரிழப்பைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை தொடர்ந்தும் குலையாமல் வைத்திருக்க அவர்களது உயிரிழப்பை மறைத்து ஒரு மாயவலையே பின்னப்பட்டு உள்ளது.

மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்பதில் யாரும் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க முடியாது. தலைமைகள் தவறான அரசியலை முன்னெடுத்ததற்காக, உன்னத லட்சிம் ஒன்றிற்காகப் போராடுவதாக எண்ணி, தம் இன்னுயிரை ஈர்ந்தவர்களை உதாசீனம் செய்வது மிகத் தவறு. ஆனால் அவர்களை எவ்வாறு நினைவுகூருகிறோம் என்பது மிகவும் முக்கியம். பல இலட்சக்கணக்கான செலவில் ஒரு பணச்சடங்காக மாவீரர் தினம் ஆக்கப்படுவது எந்த நோக்கத்திற்காக என்ற கேள்வி தவிர்க்க முடியாது. லண்டனைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மாவீரர் தினக் கணக்கு வழக்குகள் சில ஆயிரம் பவுண்கள் நட்டமாகக் காட்டப்பட்டு முடிக்கப்பட்டதாக அதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்தார். இவ்வாண்டும் 300 000 பவுண்வரை செலவிடப்படுகின்றது.

அதேசமயம் மே 18 2009ல் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் பல நூறு ஆயிரம் போராளிகள் மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பியுள்ளனர். இவர்களில் பலநூறு ஆயிரம் பேர்கள் அங்கவீனர்களாக காயம் பட்டவர்களாக உறவுகளை இழந்தவர்களாக உள்ளனர். இவர்களைப் போராட்ட களத்திற்கு அனுப்பியதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. இன்று இவர்கள் அனாதரவாக யாருக்கு எதிராகப் போராடினார்களோ, அவர்களின் பாராமரிப்பிலும், அவர்களின் உதவியிலுமே முழுமையாகத் தங்கி இருக்க வேண்டிய நிலையுள்ளது.

இவ்வாறான போராளிகளை இந்தப் போராட்டத்திற்குள் தள்ளிய, மேற்குநாடுகளில் வாழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலருக்கு மே 18 2009ல் ‘ஜக் பொட்’ – லொட்ரி விழ்ந்தது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதியான ஆண்டு வருமானமும் 5 பில்லியன் வரை பெறுமதியான சொத்துக்களும் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது. லொட்ரியில் வென்றவர்கள் தங்கள் தங்கள் தொகையைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் கோட்டை விட்ட பலரும் உள்ளனர். ‘தலைவர்’ கேட்டுக் கொண்டதற்காக, திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கையில், தங்கள் வீடுகளை வைத்து கடன்பெற்று (லோன் அல்லது ரீமோட்கேஜ்) வசூல் ராஜாக்களிடம் பணம்கொடுத்த பலருக்கு நாமம் போடப்பட்டு உள்ளது. மே 18க்கு சில தினங்களுக்கு முன்னாகக் கூட பல ஆயிரம் பவுண்களை, இந்த வசூல் ராஜாக்களிடம் வழங்கியவர்கள் உள்ளனர்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிக்கொண்ட பலரை இப்போது காணமுடிவதில்லை என மேற்குலகில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அல்லாமல் நேர்மையாக நடந்தவர்கள் லண்டனில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கௌரவிக்கப்பட்டும் உள்ளனர்.

இது இப்படியிருக்க மீண்டும் வசூல் ராஜாக்கள் நிதி சேகரிப்பிற்குப் புறப்பட்டு உள்ளனர். தற்போது மாவீரர் தினத்துக்கான நிதி சேகரிப்பு. பிரித்தானியாவில் இயங்கும் தொலைபேசி அட்டை நிறுவனம் ஒன்று மிகப்பெரும் தொகைப் பணம் வழங்கியதாகத் தெரியவருகிறது. அதனைவிட தனிப்பட்ட வர்த்தகர்களிடமும் பல ஆயிரங்கள் வசூலிக்கப்படுகிறது. இதற்குமேல் கலந்துகொள்பவர்கள் 50 பவுண் ரிக்கற் மற்றும் பூ விற்பனை, கொடி விறபனை என்று எல்லா விற்பனையுடன் தமிழீழமும் 5 பவுணுக்கு விற்கப்படும். இதற்கான கணக்கு வழக்குகள் சில மாதங்களுக்குப் பின் சில ஆயிரம் பவுண்கள் நட்டம் என்றும் காட்டப்படும். இதுவே வழமையான மாவீரர் தினக் கொண்டாட்டம்.

ஒருநாள் கொண்டாட்டத்திற்கு இவ்வளவு செலவு செய்யும் இவர்கள், உயிரிழந்த மாவீரர்களுக்கு ஒரு உத்தியோகபூர்வ இணையத்தை உருவாக்கி அவர்களது விபரங்களை அங்கு முழுமையாகப் பதிவிடவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாகக் குழப்பங்கள் இருந்த போதும் 2008 ஓக்ரோபர் 31 வரை ஆவணப்படுத்தப்பட்ட விபரங்களைக் கூடப் பதிவிடவில்லை.

மாவீரர் தின நிகழ்வை மிக எளிமையாக செலவுகள் எதுவும் இன்றி கொண்டாட முடியும். லண்டன் நகரில் உள்ள மிகப்பெரும் பூங்காவான ஹைட்பார்க் கோனருக்கு உறவுகளை மாவீரர்களுடைய படங்களுடனும் மெழுகுவர்த்தியுடன் வந்து நினைவுகூரச் செய்ய முடியும். திறந்தவெளிப் பூங்காவில் இதனைச் செய்யலாம். ஆனால் அதனைவிடுத்து லண்டனில் எக்செல் போன்ற மண்டபங்களில் பணத்தை வாரி இறைத்து எதற்கு இந்த ஆடம்பரம்? இந்த ஆடம்பரத்திற்கு வழங்கும் செலவுகளை பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் செலவிட ஏன் இவர்கள் முன்வரவில்லை? பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களையும் பாதிக்கப்பட்ட போராளிகளையும் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து விட்டு பிரான்ஸ், லண்டன், ரொறன்ரோ, சிட்னி என்று மாவீரர் தினத்தைக் கொண்டாடுவது அந்த மாவீரர்களை அவமதிப்பதற்குச் சமன்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பது இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்றும் அவ்வாறு மறுவாழ்வு அளிக்கக் கோருவது இலங்கை அரசின் உளவியல் யுத்தம் என்றும் கண்டுபிடிக்கின்ற கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் அல்லது மார்க்ஸியப் புலிகள் சில தற்போது உறுமிக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உலாவருகின்றன. இவர்கள் இன்னமும் அவலத்தை வைத்து அரசியல் செய்கின்ற புலி அரசியலையே தொடர முற்படுகின்றனர். மக்கள் அடிப்படைத் தேவைகளுடன் இருந்தால் அவர்கள் போராட வரமாட்டார்கள், மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு தொடர்ந்தும் கோஸம் எழுப்பிக்கொண்டிருக்க முடியாது, தங்கள் அரசியல் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போன்ற காரணங்களுக்காக இவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இன்றி அரசியல் செய்ய முற்படுகின்றனர்.

IDP_Camp_Injured_Manபிரித்தானியாவில் மட்டும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு 300 000 பவுண்கள் செலவிடப்பட உள்ளது. இவ்வாறு மேற்கு நாடுகளின் தலைநகரங்கள் எல்லாம் இந்நிகழ்வு பெரும் நிதிச் செலவில் நடாத்தப்பட உள்ளது. ஆனால் தாயகத்திலோ போராடச் சென்றவர்கள் அடிப்படை வசதிகளின்றி தங்கள் கால்களை இழந்து, கைகளை இழந்து தங்களுக்கான செயற்கை உறுப்புகளுக்குக் கூட வசதியின்றி வாழ்கின்றனர். மாவீரர்களின் பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் மட்டுமே அம்மாவீரர்களை மதிக்க முடியும். தாயகத்தில் அரச படைகள் மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகளை பெயர்த்தெடுத்தனர். ஆனால் புலம்பெயர் உறவுகளோ மே 18 2009 வரை தொப்புள்கொடி உறவென்றனர் ஆனால் இப்போது அந்த உறவுகளின் உணர்வுகளையும் பெயர்த்தெறிகின்றனர்.

Speech from Vanni 27/11/2010
:http://www.youtube.com/watch?v=jDH_U5uZLMA&feature=player_embedded

தமிழ்பேசும் மக்கள்: அடையாள இருட்டடிப்பு – இலங்கை முஸ்லீம்கள் சோனகர்.: நிஸ்தார் எஸ் ஆர் எம்

Mohamed S R Nisthar1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நீறுபூத்த நெருப்பாய் இருந்து வந்த இன அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் 1983இல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இரண்டு தசாப்தங்கள் தாண்டி இன்று இந்த இனப்பிரச்சினைத் தீ அணைந்து போகப் பலரும் பல வழிகளிலும் முன்னின்றுழைப்பது மகிழ்ச்சி தருவதாய் இருந்தாலும் இனப்பிரச்சினையின் உச்சகட்ட காலங்களில் ஆங்காங்கே முளைவிட்ட ஒரு கேள்வி இப்போது மரமாகிக் கிளை பரப்பியுள்ளது. இது பெரு விருட்சமாகி புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காமல் இருக்க தேவைக்கேற்ப அழகாய், அளவாய் கத்தரித்து பராமரித்து வளர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் மிகத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கின்றது.

பல்லின மக்களைக்கொண்ட இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையைத் தீர்க்க சிங்கள இனத்தின் சார்பில் இலங்கை அரசும் (ஜனாதிபதி நீங்கலாக) தமிழினத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகளும் (வேறு யாரும் சேர்க்கப்படாமல்) பிரதிநிதிகளாகச் செயற்படுவதால் இலங்கையில் இரண்டு இனங்கள் மட்டும் தான் உள்ளன என்பதோ அல்லது வேறு இனங்களுக்கு அரசியலை அடியொட்டியதான பிரச்சினைகள் இல்லை என்பதோ பொருளல்ல. தவிர, போரிட்ட இரண்டு இனங்களும் ஏதோ வொரு தீர்வை அடைந்தால் அது எல்லா இனங்களையும் திருப்திப்படுத்தும் என்ற உத்தரவாதமுமாகாது. ஏனெனில் இலங்கையின் இன்னுமொரு சிறுபான்மையினம் தொடர்பான அதன் அடையாளப் பிரச்சினையில் சில சிக்கல்கள் இருப்பதால் இனப்பிரச்சினை தொடர்பாக அதன் பங்களிப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

“இலங்கை முஸ்லிம்கள்” என்போரே இந்தப் புதிய பிரச்சினையின் கருப்பொருளாகும். 1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்தப் புதிய பிரச்சினைக்கான தீர்வொன்றின் தேவையை உணர்த்தியது. இதில் 1வது, கிழக்கிலங்கையில் தொழுகை நேரத்தின்போது வயதுபேதமின்றி சிறியோர் முதல் தள்ளாடும் வயதினர்வரை நூற்றுக்கு மேற்பட்டோர் மசூதிக்குள் வைத்து புலிகளால் ஒரே நேரத்தில் காரணமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 2வது அதே ஆண்டில் யாழ், மன்னார், முல்லைத்தீவு ஆகிய தமிழ் – முஸ்லீம் பூர்வீக பகுதிகளிலிருந்து பலாத்காரமாக ஒரு சில மணிநேரத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை.

மேற்படி இரண்டு சம்பவங்களில் இருந்தும் எழும்பிய புதிய கேள்விகள் இக்கட்டுரையின் அடிப்படைப் பிரச்சினையாகிய “சிறுபான்மையினம்” என்ற பதப்பிரயோகத்தின் சரியான விளக்கமொன்றின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

இந்த “முஸ்லிம்களை” விடுதலைப்புலிகள் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதப்பிரயோகத்தின் கீழ் அடக்கித் தாம் இனப்பிரச்சினை விவகாரத்தில் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் என்றும், தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் ஏற்படும் தீர்வும் உடன்பாடும் “தமிழ் பேசுவோர் எல்லோருக்குமான தீர்வே” என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். புலிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பது போல் இலண்டனில் மையம் கொண்டுள்ள தமிழ் வானொலிகளும் பத்திரிகைகளும் இலங்கை முஸ்லீம்கள் தொடர்பாக எந்தவித விளக்கமுமின்றி “இஸ்லாமியத் தமிழர்” என்றும் “தமிழ் பேசும் முஸ்லீம்கள்” என்றும் இந்த இனத்தை அடையாளப்படுத்துகின்றனர்.

ஓரு இனம் தொடர்பான மேற்படி அனைத்து பதப்பிரயோகங்களும் அரசியல்ரீதியில் தெளிவை ஏற்படுத்தாதது மாத்திரமின்றி பிற்காலத்தில் புதிய பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கக் கூடியதாகவே உள்ளன.

விடுதலைப்புலிகளின் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதம் இனபேதமின்றி தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். அப்படியானால் 1990இல் நடந்த துயரச் சம்பவங்களும் இதுபோன்ற சிறிய அளவிலான குரங்கு பாஞ்சான், ஏறாவூர், மூதூர் போன்ற இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும், இனித் தொடரப் போகும் சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளின் சார்பில் சராசரி மனிதர்தானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள், நியாயங்கள், உத்தரவாதங்கள் எதுவுமே இல்லை.

எனவே “தமிழ்பேசுவோர்” என்ற சொற்பிரயோகம் நடைமுறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது மிகத்தெளிவு. மேலும் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் தான் புலிகள் என்றால் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) உடனான ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது? அது எதுகுறித்துச் செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கப்பால் அப்படியொரு உடன்படிக்கை தேவையும் இல்லாதது. (ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தெளிவாகப் பகிரங்கப் படுத்தப்படவில்லை). ஆகவே தமிழரும் முஸ்லீம்களும் அரசியல்ரீதியிலும் வேறுபட்டவர்கள் என்பது மிகத்தெளிவு.

மறுபுறத்தில் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் கூறும் “இஸ்லாமியத் தமிழர்”, தமிழ் பேசும் முஸ்லீம்கள், என்ற பதப் பிரயோகங்களும், மயக்கம்தரும் பண்புகளையே கொண்டுள்ளன. ஏனெனில் தமிழ் இனத்தில் உள்ளவர்கள் “சைவத் தமிழர்” என்றோ, “கிறிஸ்தவத் தமிழர்” என்றோ மதரீதியில் அடையாளம் காணப்படுவது இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவர்களும் கிறீஸ்தவர்களும் (அதன் உட்பிரிவினரும்) இனரீதியில் தமிழரென்றே கொள்ளப்படுகின்றனர். தமிழ் பேசும் சைவர், தமிழ் பேசும் கிறிஸ்தவர் என்று யாரும் அழைக்கப்படாத நேரத்தில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று மாத்திரம் வரையறைக்குட்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். இதிலிருந்து தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்போர் இனத்தால் தமிழர் அல்லர் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சிங்களம் பேசும் முஸ்லீம்கள் என்போரின் இருப்பையும் உறுதி செய்கின்றது. இது ஒருவகையில் சிங்களம் பேசும் கிறிஸ்தவரின் நிலைபோன்றது.

சிங்களம் பேசும் கிறிஸ்தவரை தமிழ் இனம் உள்வாங்க முடியாது. காரணம் அவர்கள் இனத்தால் சிங்களவர். அதேபோல் தமிழ்க் கிறிஸ்தவர் மதத்தால் சிங்களவர் போன்று கிறிஸ்தவராயினும் இனத்தால் தமிழராகவே இருக்கின்றனர். (இது பேசும் மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது போல் காணப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சாரும் இனத்தை அடிப்படையாகக் கொண்டது.) எனவே இங்கு சிங்களம் பேசும் முஸ்லீமை எவ்வாறு சிங்களவர் எனக் கருதக் கூடாதோ, கருத முடியாதோ, அதேபோல் தமிழைப் பேசுவதால் மட்டும் தமிழ் பேசும் முஸ்லீம்களை தமிழர் என்று வரையறுத்துவிட முடியாது.

இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு விடயம், புதிதாகச் சமயம் மாறுவோர், சமயம் மாறி முஸ்லிமாகவரும் தமிழரும், சிங்களவரும் சமயத்தால் முஸ்லீம் என்பவரே தவிர அவர் இனத்தால் இன்னும் தமிழரும் சிங்களவருமே.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் பௌத்தம் செழிப்புற்றிருந்ததை வரலாறு கூறுகின்றது. அப்போது பௌத்தத்தைப் பின்பற்றிய தமிழர் சமயத்தால் பௌத்தர் என்று இனங் காணப்பட்டதால், அவர்களின் இனம் சிங்களம் என்றாகி விடவில்லை. அவர் அன்றும் இன்றும் என்றும் தமிழரே. அதேபோல் சமயத்தால் முஸ்லிமாக இருக்குமொருவர் சைவராகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ சமயத்தை மாற்றிக்கொண்டாரென்றால் அவர் சைவர், கிறிஸ்தவர் அல்லது பௌத்தரே தவிர அவரின் இனஅடையாளம் தமிழர் என்றோ அல்லது சிங்களவரென்றோ மாறிவிடப் போவதில்லை. அப்படியானால் இங்கு எழும் நியாயமான கேள்வி இந்த இலங்கை முஸ்லீம் என்போர் இனரீதியில் யார் என்பதே.

இதற்கான பதில்

இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கி முன்னேறும் இந்த முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நியாயமானதும் அரசியல் ரீதியில் மிக முக்கியமானதுமான (Politically crucial) விடயம் முஸ்லீம்கள் பற்றிய நிலைப்பாடு ஆகும்.

இக்கட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தவறுகளும் செய்யத் தவறும் விடயங்களும் நாளைய அமைதியான ஒன்றுபட்ட இலங்கையில் அல்லது சிங்களவர் தமிழர் சுயாட்சிப் பிரதேசங்கள் என்ற அமைப்புக்குள் அல்லது ஸ்ரீலங்கா, தமிழீழம் என்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும்.

இன்று சிங்கள பேரினவாதம் (மறைமுக) தமிழ்ப் பேரினவாதம் என்பவை மாத்திரமல்ல வளர்ந்து வரும் தனி பௌத்த மதவாதமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகின் முதல் பிக்குகளாட்சி (Theocracy) ஆட்சிக்கான நாடிப்பிடிப்புகளையும் இந்த இடத்தில் மறுப்பதற்கில்லை. (ஆனால் தமிழரிடையே மதவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறி அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றது).

இலங்கை முஸ்லீம்கள் இன அடையாளம் இல்லாமல் மத அடையாளத்திலேயே தமது அரசியலை நடத்த விரும்பினால் பல இனங்கள் வாழும் நாட்டில் மாறுபட்ட சூழலிலுள்ள ஒரு நாட்டில் அதிலும் நாம் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாய் வாழும் நாட்டில் சர்வதேசங்களின் கவனம் அதிகரித்து வரும் ஒரு நாட்டில் அது நமது இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக விடுதலைப் புலிகளின் முஸ்லீம்கள் தொடர்பான நிலைப்பாட்டை நோக்கும் போது அதில் சந்தர்ப்பவாதம் இழையோடுவதை இலகுவாகக் காணலாம். அவர்களில் தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையை விடுத்து இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முஸ்லீம்களை ஒரு கலாச்சாரக் குழுவாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்தக் கலாச்சாரக் குழு என்ற சொற் பிரயோகம், தமிழ் பேசும் மக்கள் என்பதை விடவும் குறைவான நிலை. ஒரு மக்கள் கூட்டத்தில் பல வகையான கலாச்சாரங்கள் பின்பற்றப்படலாம். ஒருவன் உணவு உண்ணும் முறையிலிருந்து நாட்டை நிர்வகிக்கும் விடயங்கள் வரை பலவிதமான கலாச்சாரப் போக்குகளை கடைப்பிடிக்கலாம். இனம் என்ற பரந்த பரப்புக்குள் கலாச்சாரம் என்பது ஒரு சிறு பகுதியே. சரி ஒரு பேச்சுக்காக கலாச்சாரக் குழு என்பதை ஏற்றுக் கொண்டாலும் அக் குழுவின் நிலை என்ன, உரிமைகள் என்ன என்பதற்கு இன்னும் விடை கொடுக்கப்படவில்லை.

இதைவிடவும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும் அதன் பிறகு அவர்கள் தனியான குழுவாக (Entity) பேச்சு வார்த்தை மேசைக்கு வரலாமா என்பது பற்றித் தீர்மானிக்கலாம் என்று கூறியது மிகவும் அவதானத்துக்குரியது.

ஆலோசகர் பாலசிங்கத்தின் அரசியல், கூட்டல் கழித்தல் படி ‘இலங்கை முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர்கள். 1990களில் துடிப்போடு முன்னேறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அதன் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரஃப்பின் திட்டமிட்ட கொலையின்பின் துண்டு துண்டாகி முஸ்லிம்களின் அரசியல் குரல் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது’ என்பதாகும்.

‘இலங்கை முஸ்லிம்கள் தனியான பிரிவினர் எனவே நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முன்னெடுப்புகளில் அவர்கள் பங்குகொள்ள வேண்டியது அவசியம். அதை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் உத்தரவாதப்படுத்துகிறோம். ஆகவே முஸ்லிம்கள் அதற்கான அதிகாரத்தை அவர்கள் விரும்பும் தலைமைக்கு அல்லது கட்சிக்குக் கொடுக்கலாம்’ என்று பாலசிங்கம் கூறி இருந்தால் அதில் சந்தேகிக்க எந்த விடயமும் இல்லை. இதைவிடுத்து முஸ்லிம்கள் முதலில் ஒன்றுபடுங்கள் (ஒன்றுபடமாட்டார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு) அப்புறம் மிகுதியைப் பார்க்கலாம் என்பது இனப்பிரச்சினையின் சமாதானத் தீர்வு பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்களுக்குத் தனியிடம் இல்லை என்பதற்கான முன் அறிவிப்பாகும்.

இந்த இடத்தில் கலாநிதி சித்தீக்கின் கூற்றொன்றும் சாலப்பொருந்தும். அதாவது முஸ்லிம்களை விட மிக அதிகமாக தமிழர்களே இன்று பிரிந்து காணப்படுகின்றனர். அவர்களின் பிரிவை பத்துக்கும் மேற்பட்டதாக அடையாளங் காணலாம் என்பதாகும். ஆக, இங்கு எத்தனையாக யார் பிரிந்துள்ளனர் என்பது பிரச்சினையல்ல. பேச்சுவார்த்தைக்கு யார் தகுதியான பிரிவினர் என்பதே முக்கியம். அரசதரப்பு, தமிழர்களே முதலில் ஒன்றுபடுங்கள். அப்புறம் மீதியைப் பார்க்கலாம் என்றால், போர் தொடருமே தவிர அருமையான இந்தச் சமாதான ஒப்பந்த சூழல் இன்று இருந்திருக்காது. என்றும் இருக்காது. ஏனெனில், ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ், தமிழர் எல்லோரும் ஒன்றுபடுவதென்பது நடக்க முடியாத விடயம்.

இலங்கையில் முஸ்லிம் என்ற சமயவழிப் பதப்பிரயோகம் இலங்கையின் எதிர்கால அரசியலில் அவர்களை ஒரு தேசிய இனத்தின் அந்தஸ்திலிருந்து கீழிறக்கிவிடும். ஆகவே அவர்கள் தமது இனத்தின் பெயரை தூசுதட்ட வேண்டும்.

இலங்கை முஸ்லீம்கள் சமய அடையாளத்தினூடே அரசியலில் செயற்பட விரும்பினால் நாளை சிங்கள இனத்தின் கிறிஸ்தவர்களும் தமிழினத்தின் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களின் சிறுசிறு சமயப் பிரிவினரும் (Cult), ஏன் முஸ்லீம்களின் உட்பிரிவினரும் கூட தங்கள் இருப்புக்கான சட்ட அங்கீகாரம் கோரலாம். இலங்கையின் இன்றைய கிறிஸ்தவர், சிங்கள பௌத்தர்களின் உன்னிப்பான அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். சமயரீதியான நெருக்குவாரங்கள் கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும்போது அதற்கான நிவாரணமாக முஸ்லீம்களுக்கான பிரத்தியேக ஏற்பாட்டை கிறிஸ்தவர்களும் கோரலாம்.

விடுதலைப் புலிகளும் கூட முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளைத் தட்டிக் கழிக்க தமிழ் கிறிஸ்தவர்களைக் காரணம் காட்டி தமதாட்சியில் ஒரு சமயப் பிரிவினருக்கு மாத்திரம் பிரத்தியேக சலுகை தரஇயலாது எனலாம். நிலைமையை தங்களது அடக்குமுறைக்குச் சாதகமாகவும் பயன்படுத்தலாம்.

இதையெல்லாம் விட மிகப் பயங்கரமான விடயம், விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேரலாம். அதிலும் விஷேடமாக அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ அல்லது இரண்டு நாடுகளோடும் சேர்ந்து இலங்கை முஸ்லீம்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்று பெயரிட்டு மிக இலகுவாக ஓரங்கட்டி விடலாம். இது அதீத கற்பனை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளினதும் பேரினவாதிகளினதும் கைவந்த கலை. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம், நாட்டு நிர்மாணம், உலக ஒழுங்கு, நாகரீக உலகு என்ற பதப்பிரயோகங்கள் அவரவர்களின் நலன் கருதியே பொருள் வழங்கப்படும்.

ஆகவே நாம் நமது இனப்பெயரில் அரசியல் நடத்துவதே அரசியல் சாணக்கியமாகும் (Political manoeuvring). நமது இனத்தின் பெயர் நமது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் மிகத்தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. சிங்களத்தில் “யோனக்க” என்றும், தமிழில் “சோனகர்” என்றும் ஆங்கிலத்தில் “மூர் (MOOR)” என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது எமக்கு இழுக்கல்ல. இது ஒரு காரணப் பெயர். எந்த இனமும் தூய்மையான இனமல்ல. அதனால் மாசுபட்டவர் என்ற பொருளல்ல.

நாம் ஒரு கலப்பினம். ஓன்றில் தமிழ்நாட்டில் காயல்பட்டினம், கீழ்க்கரையில் இருந்து வந்த அரபுக் கலப்புடைய தந்தையருக்கும் இலங்கையின் பெரும்பாலும் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது நேரடி அரபுத் தந்தையர்களுக்கும் உள்ளுர் தமிழ், சிங்களத் தாய்மார்களுக்கும் அல்லது அரபு கிழக்கு ஐரோப்பியக் கலப்பில் வந்த தந்தை வழியினருக்கும் உள்ளுர் சிங்களத் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது மேற்சொன்ன தந்தைவழி வட ஆபிரிக்கக் கலப்பில் தந்தை வழியினருக்கும் உள்ளுர் தமிழ் சிங்களத் தாய்மார்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவில் அல்லது திருமணப் பந்தத்தின் வழிவந்தவர்கள் இலங்கைச் சோனகர்கள்.

இந்தச் சோனகர் என்போர் இலங்கையில் மாத்திரம் அல்ல, மொரோக்கோ, தமிழ்நாட்டின் சில பகுதிகள் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் வாழ்வதால் இலங்கையில் உள்ளோர் இலங்கைச் சோனகர் (Ceylon Moor) என அழைக்கப்படுக்கின்றனர்.

இலங்கைச் சோனகர்களின் இருப்பு, இஸ்லாம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு அல்லது அதன் சமகாலத்தில் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆக, சோனகர் என்பதை இஸ்லாத்துடன் முழுக்க முழுக்கத் தொடர்புபடுத்தி தமிழரில் இருந்தும் சிங்களவரில் இருந்தும் மதமாற்றம் பெற்றோர் எனச் சில இலண்டன் வானொலிகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் கூறிவருவது நிரூபிக்கப்பட முடியாத வரலாற்றுப் பிழை. இலங்கைச் சோனகரின் தோற்றமும் வாழ்வும், அதன் மொழி, கலாச்சாரத் தாக்கங்கள், ஐரோப்பியப் படையெடுப்புக் காலங்களில் அந்த இனம் நாட்டுக்கு ஆற்றிய சேவை என்பன எல்லாம் நீண்ட வரலாறு ஆகும்.

ஆக, இலங்கைச் சோனகர் என்போர் தனித்தவொரு இனம். அவர்கள் ஒரு தேசியம் (Nation). அந்தத் தேசியம் தனது விவகாரங்களைத் தானே கவனிக்கும் சுயநிர்ணய உரிமை (Right to Self Determination) அதற்குண்டு. தேவைப்படின், நிபந்தனைகளுடன் கூட்டுச் சேரவும் (இதுதான் விடுதலைபுலிகள் – முஸ்லிம் காங்கிரஸ் வன்னிச் சந்திப்பும் ஒப்பந்தமும் என்றால் பாராட்டப்பட வேண்டியதே) தனியே பிரிந்து செல்லவும் அதற்கு உரிமையுண்டு.

இந்த உரிமையைத்தான் இதுவரை காலமும் இலங்கையின் பேரினவாத அரசுகள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு கொடுக்க மறுத்து வந்தனர். இப்போதும் மறுக்க முயல்கின்றனர். சுயநிர்ணய உரிமையை தமிழர் தரப்பு சோனகர்களுக்குத் தரமறுத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமற்றதாகிவிடும். அது அவர்களுடைய போராட்டத்தினை போலியாக்கிவிடும்.

மேலும் ஏதாவது ஒரு இடத்தில் இனசுத்திகரிப்பு (Ethnic Cleancing) என்றால் சற்று நின்று உலக நாடுகள் அப்படியா என்று கேட்கின்றன. அதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென முன்வருகின்றன. புயல் என்றால் வள்ளம் என்றால் பூகம்பம் என்றால் நோய் என்றால் உதவ முன்வரும் நாடுகள் கூட ஒரு சமயத்தவருக்கு பிரச்சினை என்றால் அடிப்படைவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் உதவ முன்வருவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மதத்தவருக்கு எதிரானவருக்கு கை கொடுத்து உதவுகின்றன. இதில் உள்நாடு வெளிநாடு என்ற பேதமெல்லாம் கிடையாது.

இவை அனைத்தையும் நாம் கவனத்தில் கொண்டால், உலகின் சமகாலப் போக்குக்கேற்பவே எமது உரிமைகளைப் பெறவும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும். சமயம் என்ற போர்வைக்குள் எமது அரசியலுக்கு பலம் சேர்க்க முயலலாம். ஆனால் இனம் என்ற வலுவான அடித்தளத்தில் இருந்து நமது கோரிக்கைகள் பிறக்க வேண்டும் என்பது எனது வாதம்.

(தேசம் இதழ் 17 – 2004) & (தேசம் இதழ் 18- 2004 )

தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

David_Burgess_SoniaDavid_Burgessடேவிட் பேர்ஜஸ் இன் இறுதி நிகழ்வு நேற்று (நவம்பர் 17, 2010) சென் மார்டின் இன் தி பீல்ட் இல் நடைபெற்றது. முற்போக்குத் தன்மைக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற தேவாலயம் சென் மார்ட்டின் இன் தி பீல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேவாலயம் தற்பால் உறவுகளை அங்கீகரிக்கின்ற தேவாலம். இங்கு டேவிட் பேர்ஜஸ், சோனியா என்ற பெயரில் சேவையில் ஈடுபட்டு இருந்தவர். இங்கு ஓலையால் வேயப்பட்ட பெட்டியில் உடலை வைத்து பாடல்களுடன் அவரது இறுதி அஞ்சலி இடம்பெற்றது. மனித உரிமை அமைப்புகள், மெடிக்கல் பவுண்டேசன், சட்ட நிறுவனங்கள், தற்பால் சமூகத்தினர், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சமூக அமைப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகைளச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதி அஞ்சலியில் டேவிட் பேர்ஜஸ் இன் பிள்ளைகள் தங்கள் இறுதி அஞ்சலியை அவர்களின் தந்தைக்குச் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

இக்கட்டுரை சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் உடன் அரசியல் தஞ்ச வழக்குகளில் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய அவரின் நண்பர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் வழங்கும் ஒரு அஞ்சலிக் குறிப்பு. கவுன்சிலர் சத்தியநேசன் ஒலிப்பதிவாக வழங்கிய அஞ்லியை ரி சோதிலிங்கம் கணணிப்படுத்தி உள்ளார்.

._._._._._.

‘அப்போது தமிழ் அகதிகள் லண்டனில் பெருமளவு வந்திறங்கிய காலம். தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பிய பல தமிழர்கள் என்ன செய்வது என்று தெரியாது இருந்த காலம். தம்மால் ஆன எந்த உதவிகளைச் செய்தும் ஏதும் பலன் இல்லை என்றிருந்த காலம்.’ லண்டன் ஏஞ்சலில் உள்ள JCWIல் பணியாற்றிய Jane Coker இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அப்போது உதவி வந்தவர். அவர், அகதிகள் திருப்பி அனுப்பப்படவதற்கு எதிரான அதாவது தஞ்சம் கோருவோரை மீண்டும் நாட்டுக்கு அனுப்புகின்ற பிரித்தானிய உள்நாட்டு அமைச்சின் கொள்கைகளை எதிர்த்து, உயர்நீதிமன்றில் சட்டப்படி சவால்விடுக்க, டேவிட் பேர்ஜஸ் ஜ TRAG (Tamil Refugee Action Group – Co-Ordinator Mr V Varathakumar) க்கு அறிமுகப்படுத்தினார். இன்று இந்த Jane coker ஒரு பிரித்தானிய நீதிபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

”1985 காலப்பகுதிகளில் பிரித்தானிய உள்நாட்டமைச்சு இலங்கைத்தமிழ் அகதிகளை உனடியாகவே திருப்பி அனுப்பவதில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இரவு, பகல் பாராது அகதிகளை ஏற்றிச்செல்லும் பொலீஸ் வாகனங்களுக்கு பின்னால் கலைத்து திரிந்தும், ஓடித்திரிந்தும் பொலிசார் அகதிகளை ஒளித்து வைத்திருக்கும் இடங்களுக்கு இரகசியமாக சென்று, அவர்களிடம் வாக்கு மூலங்களைப் பதிவுசெய்தும் அந்த அகதிகளை நாடுகடத்த விடாமல் செய்த பணிகளில் டேவிட் பேர்ஜஸ் இன் பணி அளப்பரியது. பொலீசார் டேவிட் பேர்ஜஸ் இவர்களுடைய வழக்குகளில் ஈடுபடுகிறார் என்று தெரிந்ததும், அகதிகளை Holiday Inn போன்ற ஹோட்டல்களில் ஒளித்து வைத்தபோதும் அகதிகளை ஹோட்டல்களின் வாசல்களில் சந்தித்து வாக்கு மூலங்களை பதிவு செய்து அந்த அகதிகளை திருப்பி அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியவர் டேவிட் பேர்ஜஸ். பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் அவர்களுக்கு நன்றிக் கடமை உடையவர்கள்.” என்று TRAG – தமிழ் அகதிகள் நடவடிக்கைக் குழுவின் முன்னாள் இணைப்பாளர் திரு வி வரதகுமார் குறிப்பிடுகின்றார்.

1985 காலப்பகுதிகளில் இலங்கையில் நடைபெற்ற இனக்குரோத நடவடிக்ககைளில் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறும் தமிழர்கள், உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சேவையாற்றியவர் திரு டேவிட் பேர்ஜஸ்.

இலங்கையின் இனப்பிரச்சினை முழுஅளவிலான வன்முறை வடிவம் எடுக்க ஆரம்பித்த காலங்களில் 1985ம் ஆண்டு பிரித்தானியா தனது குடிவரவுச் சட்டத்தில் கொமன்வெல்த் நாடுகளில் இருந்து வருபவர்களில் முதலாவதாக இலங்கையருக்கு விசா முறையை அமுல்ப்படுத்துகின்றனர். இதன்படி விசா இல்லாமல் வரும் அகதிகள் உடனடியாகவே திருப்பி அனுப்பப்படுவார்கள். இது இலங்கைத் தமிழர்களுக்கு பாரிய பாதிப்புக்களை கொடுத்திருந்தது.

யூலை 11 1986 உள்நாட்டு அமைச்சராக இருந்த டக்ளஸ் ஹேட், இலங்கைத் தமிழர்க்கு Exceptional Leave to Remain தரப்படும் என தெரிவிக்கிறார். இது இலங்கையில் இருந்து வரும் தமிழர்கள் இலங்கையில் இனரீதியாக பாதிப்படைந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாது அகதிகளின் தனிப்பட்ட நிலைமைகளை ஆராய்ந்தே அவர்களுக்கு தங்குமிட அனுமதி வழங்குவது என்ற சட்டமாகும். இது தமிழர்கள் பாதிக்கப்பட்ட இனம் என்று பிரித்தானிய அரச ஏற்கவில்லை என்பதேயாகும்.

1987 ஹீத்துரோ விமான நிலையம் Terminal 3 அல்லது Terminal 4ல் தமிழர்கள் தமது உடுப்புக்களை கழற்றி எறிந்துவிட்டு தம்மை நாடு கடத்த வேண்டாம் எனப் போராட்டம் நடாத்திய நேரம். போராட்டம் நடத்தியவர்களை Ford House Hotelல் தடுத்து வைத்திருந்தனர். Winstanly Burgrs சட்ட நிறுவனம் சட்டத்தரணிகள் டேவிட் பேர்ஜஸ், Chris Landel ஆகிய இருவரும் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது தொடர்பான இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுக்க முன்வந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல UNHCR அன்றைய உதவி உயர் ஸ்தானிகர் Irin Khan இன்றைய IOM Secretary General இதற்கான பின்புல உதவிகளை செய்ய முன்வந்திருந்தார்.

இந்த வழக்கில் டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்று தமிழர்கள் நாடு கடத்தலை தடுத்து நிறுத்தினார். இந்த வழக்கின் வெற்றியில் இன்று வரையில் இலங்கைத் தமிழ் அகதிகள் மட்டுமல்ல பல்வேறுபட்ட நாட்டு அகதிகளும் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி இலங்கைத் தமிழ் மக்களால் அகதிகள் சமூகத்திற்கு வழங்கிய பெரிய விடயமாகும்.

1987 கீத்துரோ விமான நிலையத்தில் நாடுகடத்த முற்பட்ட வேளை தம்மை நாடு கடத்த வேண்டாம் என போராட்டம் நடாத்தியவர்களை Ford House Hotel ல் இருந்து தடுப்புக்காவல் முகாமிற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இவர்கள் படிப்படியாக நாட்டுக்குள் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே காலகட்டத்தில் ஆறு எகிப்தியர்களை நாடுகடத்தப்பட இருந்ததும் அவர்களும் இந்த தமிழ் அகதிகளின் நீதிமன்றின் வெற்றியினால் பலன் பெற்றனர். இந்தக் காலகட்டத்தில் சனல் 4 இந்த விடயங்களை Black Back Series என்ற தொடரில் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்பட்டது.

நீதிமன்றில் பெற்ற வெற்றியின் பின்னர் டேவிட் பேர்ஜஸ் இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினைகளில் மிகவும் அக்கறையுடன் செயற்பட ஆரம்பித்தார். இதன் காரணமாகத் தான் இலங்கைக்குச் சென்று நிலமைகளை ஆய்வுசெய்து வந்தும், வேறு சில சட்டத்தரணிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்தும் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்திருந்தார். பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் முன்னர் எப்போதும் இப்படியான ஒரு சட்டச் சவாலை எதிர்கொள்வில்லை. பிற்காலங்களில் அகதிகளை ஏற்றி வரும் விமான நிறுவனங்களுக்கு 2000 பவுண்ஸ் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகளை உருவாக்கி இருந்த காலத்திலும், டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்றார். இந்த வெற்றி பலருக்கு நின்மதி அளித்திருந்தது.

பிரித்தானிய சட்டத்துறைக்கும் பிரித்தானிய அரசுக்கும் அதன் சட்டவாக்க கொள்கை வகுப்புக்களுக்கு டேவிட் பேர்ஜஸ் இன் நீதிமன்ற வெற்றி உதவியது. இது பிரித்தானியாவின் சட்டத்துறையில் மாற்றங்களை உருவாக்கியது. டேவிட் பேர்ஜஸ் ஒவ்வொரு அகதியையும் தனது முழுமையான அர்ப்பணிப்புடனும் உத்தியோக சிறப்புடனும் அணுகினார். அகதிகளிடம் வாக்கு மூலம்பெறுவதற்கும் இலங்கை பற்றி அறிவதற்கும் மிகுந்த நேரத்தைச் செலவிட்டார். டேவிட் பேர்ஜஸின் கடுமையான உழைப்பின் பயனை தனிப்பட்ட அகதிகள் மட்டுமல்லாமல், அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளும் கூட வெற்றியின் பயனைப்பெற்றனர். இந்தக் காலத்தில் லண்டனில் இருந்த பல தமிழ் சட்டத்தரணிகளில் அனுபவம், சட்டத்தேர்ச்சி பெற்றவர்கள் ஒருசிலரே. பல சட்டத்தரணிகள் தமது தொழில் ரீதியாக தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை டேவிட் பேர்ஜஸ் உருவாக்கி இருந்தார்.
டேவிட் பேர்ஜஸ் உடைய வழக்கு வெற்றியினை ஆதாரமாகக் கொண்டு தமது வழக்குகளை வெல்ல அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதனை இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள், தங்களுக்கு பெரும் பணமீட்டும் உழைப்பாக்கிக் கொண்டனர். அதிலும் சாதாரணமாக உள்ளுராட்சி திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் கிடைக்கக்கூடிய Exceptional Leave to Reamin ஜ கூட பல நூறு பவுண் பணங்களை வாங்கிக் கொண்டே தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வோர் என்ற பெயரையும் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் அகதிகள் பெருமளவு பிரித்தானியாவுக்கு வந்த காலத்தில் அகதிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்த British Refuge Council, UKIAS, AI, UNHCR போன்ற பல அமைப்புக்களுக்கும் இந்த டேவிட் பேர்ஜஸ் இன் வெற்றி உதவிக்கரமாக இருந்தது.

மேலும் பல தமிழ்அகதிகள் அமைப்புக்கள் அரசிடமிருந்து நிதி உதவிகளையும் பெற்று மேலும் பல அகதிகளுக்கு உதவும் வாய்ப்பும் கிட்டியது. இந்தப் பரீட்சார்த்த வழக்கு வெற்றிகளினால் வேறு பல நாட்டு அகதிகளின் வழக்குகளும் வெற்றி வாகை சூடிக்கொண்டது. பங்களாதேஸில் இருந்த வந்திருந்த அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு டேவிட் பேர்ஜஸ் இனால் கிடைத்த சட்ட வெற்றியைப் பயன்படுத்தி, அடுத்த தொகுதி பங்களாதேஸ் அகதிகள் திருப்பி அனுப்பப்படாமல் தடுக்க இந்த வழக்கு வெற்றி உதவியது. இன்று பிரித்தானியாவில் தமிழ் சமூகம் வல்லமையும் ஆளுமையும் கொண்ட சமூகமாக இருப்பதற்கு டேவிட் பேர்ஜஸ் செய்த உதவிகள் முக்கியமானவை.

டேவிட் பேர்ஜஸ் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தனது சேவையினை மனப்பூர்வமாக வழங்கியுள்ளார். டேவிட் பேர்ஜஸ் தமிழ் மக்களுக்கும் ஏனைய அகதி மக்களுக்கும் ஒரு பாதுகாக்கும் கரமாக இருந்துள்ளார். இன்று பிரித்தானியாவில் தமிழர்களும் மற்றைய நாட்டவர்களும் அகதிகளாக வந்து பயனை அடைந்திட டேவிட் பேர்ஜஸ் ன் பங்களிப்பு அளப்பரியது.

பாதிக்கப்பட்ட இனமான தமிழ் இனம் சர்வதேச அகதிகளுக்கான மனித உரிமைகளுக்கான சட்டங்களான 1951 Convetion, 1967 Protocol ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு தரப்படவில்லையானாலும் பிரித்தானிய சட்டதிட்டங்களில் மாற்றங்களை உருவாக்கி தமக்கான சட்டப் பாதுகாப்பினை இலங்கைத் தமிழர்கள் பெற்றுள்ளனர். டேவிட் பேர்ஜஸ் பணத்தையும் பெருமையயும் முதன்மைப்படுத்தாமல் பிரித்தானிய உள்நாட்டு சட்டத்துக்கு சவாலாகவும் பாதிக்கப்பட்ட இனத்திற்காக உதவி செய்வதையும் முதன்மைப்படுத்தி தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதனுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

டேவிட் பேர்ஜஸ் தொடர்பான முன்னைய பதிவுகள்:

தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

டேவிட் பேர்ஜஸ் உடைய இறுதி நிகழ்வு இன்று நவம்பர் 17ல்

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!

ஐக்கியத்தை உணர்த்தும் ஹஜ்ஜுப் பெருநாள் – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

 இலங்கை உட்பட உலகெங்கிலும் பரந்து வாழும் தங்களது சகோதர முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பெருநாள் வசதி படைத்தவர்கள் ஆவலோடு மேற்கொள்கின்ற புனித ஹஜ் யாத்திரையையும் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள உயர்ந்த தியாகத்தையும் நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.

இந்த வருடமும் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து சுமார் 6,000 யாத்திரிகர்கள் புனித மக்கா சென்று பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இலட்சக் கணக்கான முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து இறைவனின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றுவது ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

இஸ்லாம் போதிக்கின்ற இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களோடும் மானிட சகோதர உணர்வுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் ஐக்கியத்திற்கும் குறிப்பிட த்தக் களவு பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்து எமது நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதோடு அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளால் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற் றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் இவ்வருட ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது அவர்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்லிணக்க ஏற்பாடாகும்.

முஸ்லிம்கள் இன்றைய நாளில் செய்கின்ற பிரார்த்தனைகளில் எமது எல்லா மக்களுக்கும் கெளரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைப்பதற்காக வுமிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எமது எல்லா முஸ்லிம் சகோதரர்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

EPDPNewsLogoதமிழ் குறிப்பாக யாழ்ப்பாண சமூகம் கல்விசார் சமூகம், தமது பிள்ளைகளின் கல்வியில் 100 சதவிகிதம் அக்கறையுடன் செயற்படும் சமூகம். கடந்த 30 வருட போர் நடவடிக்கைகளினால் தமது கல்வியை சீரழித்து இலங்கையில் கல்வியில் பின்தங்கிய சமூகம் என்ற நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம் சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளாத கல்விமான்கள், அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் இன்னும் பல காரணங்களைக் கூற முடியும்.

தவறிப்போன – தோற்றுப்போன எமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி சம்பந்தப்பட்ட ஒருதலைப்பட்சமான முடிவுகளினாலேயே ஆயுதம் தூக்கும் போராட்டமாக மாறியது என்பது வரலாறு. இதில் யாழ் மாவட்ட மாணவர் சமூகத்தின் எழுச்சி மிக முக்கியமானது. இந்த கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்களுக்காகவும் கல்வி வெள்ளை அறிக்கையை எதிர்த்தும் நாம் பாரிய எழுச்சிக் கூட்டங்களையும் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக பல்கலைக்கழக தெரிவுகள் பற்றிய விடயத்திலும் அரசுக்கு எதிராக பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய போராட்த்தை மேற்கொண்டோம்.

இந்தப் போராட்டங்களில் அன்றைய மாணவர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பெற்ற ஈழமாணவர் பொதுமன்றத்தின் நடவடிக்கைகளில் ஒருவனாக நான் என்னையும் அன்று இணைத்துக் கொண்டிருந்தேன் இந்த போராட்டங்களில் இன்றுள்ள ஈபிடிபி தோழர்களில் பலரும் இணைந்தே செயற்பட்டிருந்தனர்.

இந்தப் போராட்டங்களை செழுமைப்படுத்தி இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் இப்போராட்டங்களை தங்கள் கட்சி சார்ந்தும் தங்கள் சொந்த விரும்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் பயன்படுத்திக் கொண்டனர். கட்சி நலன்சார்ந்த அல்பிரட் துரையப்பாவின் படுகொலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர் படுகொலை வரை இவற்றை ஆதரித்த அரசியல் தலைவர்களும் கல்விமான்களும் எமது சமூகத்தில் இருந்துள்ளனர் என்பது வேதனையானது. ஒவ்வொரு கொலையிலும் இரத்தம் காயுமுன்னரே அதனை நியாயப்படுத்த எமது கல்விமான்கள் தயங்கியதில்லை. இவற்றை ஆதரித்த பேராசிரியர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியேயும் இருந்துள்ளனர். இன்னமும் இருக்கின்றனர். ஆனால் இப்போது தங்கள் நிறத்தை மாற்றிக் கொண்டு விட்டனர்.

இன்று தமிழ் சமூகம் தனது போர்க்கால அவஸ்தைகளில் இருந்து இளைப்பாறி தமது பிள்ளைகள், அவர்களின் கல்வி என்பவற்றை முன்வைத்து தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இந்தவேளையில் இலங்கை அரசினதும் தமிழ் அரசியல் தலைமைகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றனர். இந்த தமிழ் அரசியல் தலைமைகளில் வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாது அதற்கு அப்பாலும் மக்களினது குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வல்லமையை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஈபிடிபி கட்சியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமே கொண்டுள்ளனர்.

அரசாங்கத்துடன் இணக்கப் போக்கைக் கடைப்பிடித்து தமிழ் மக்களது வாழ்வை வளம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எப்போதும் கூறிவருகின்றார். இப்போது ஈபிடிபி கட்சிக்கும் அதன் அமைச்சருக்கும் தமிழ் மக்களது வாழ்வை வளம்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் உள்ளது. அதனை வடமாகாண மக்கள் அவர்களுக்கு வழங்கி உள்ளனர்.

இந்த வடமாகாண மக்களின் முக்கிய தேவையாகி உள்ள கல்விசார் நிலைப்பாடுகள் உட்பட முக்கிய முடிவுகளை எடுக்கின்ற பொறுப்பு ஈபிடிபி கட்சியின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உள்ளது. இந்த முக்கிய முடிவுகளில் ஈபிடிபி கட்சியும் அமைச்சரும் தமிழ் மக்களுக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய எந்தவொரு முடிவும் எடுக்கப்படாது என்ற உறுதியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேளையிலேயே பிரபல பாடசாலையொன்றின் மூன்று மாணவிகளின் தற்கொலை முயற்சி பற்றிய செய்தி வந்துள்ளது. அதற்கு முன்னதாக பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கு விரிவுரையாளராக இருக்கும் பிரபல மருத்துவ நிபுணரின் பாலியல் துஸ்பிரயோகம் அம்பலமாகி உள்ளது. இவற்றுக்கும் மேல் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் தற்கொலை முயற்சிகள் பற்றி வெளியிட்ட கருத்துக்கள். இவையெல்லாம் வடமாகாண மாணவர்களின் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் பற்றிய பயப்பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இவற்றைப் பார்க்கும் போது தமிழ் கல்விச் சமூகத்திற்கு நம்பிக்கையூட்ட வேண்டிய தேவை இப்போது மிக அவசியமாகி உள்ளது. தேசம்நெற்றில் வெளியான கட்டுரைகள் தமிழ் கல்விச் சமூம் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதனை வெளிக்கொண்டு வந்துள்ளன.

தமிழ் மக்கள் தமது இன்றுள்ள பிரச்சினைகளில் தமது பிள்ளைகளின் கல்வி, சர்வதேச தரத்திலான கல்வியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தமது பிள்ளைகள் பெறும் பட்டம் – பட்டம் விடுவதற்கு அல்ல, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.  தமது பிள்ளைகள் பெறும் கல்வித்தரம், புலம்பெயர்ந்து வாழும் தமது உறவுகளின் கல்வித் தரத்திற்கு நிகராக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

தமிழ் மக்கள் கல்விசார் நிலையில் தமது இருப்பை மீண்டும் உறுதிசெய்ய யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு தகமையின் அடிப்படையிலும் முகாமைத்துவ ஆளுமையின் அடிப்படையிலுமே அமைய வேண்டும் என கல்விசார் தமிழ் சமூகம் எதிர்பார்க்கின்றது. அதனை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. குறிப்பாக அந்தத் தெரிவை மேற்கொள்கின்ற அரசியல் பலத்தை உடைய ஒவ்வொரு ஈபிடிபி உறுப்பினரும் அதன் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அமைச்சரும் அரசியல் நேர்மையுடன் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

தகமையின் அடிப்படையிலும் முகாமைத்துவ ஆளுமையின் அடிப்படையிலும் அல்லாமல் யாழ்-சைவ-வேளாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரோ அல்லது ஈபிடிபி கட்சிக்கும் அமைச்சருக்கும் நன்றாக வாலாட்டக் கூடிய ஒருவரையோ நியமிக்க முற்படுவது தமிழ் கல்விசார் சமூகத்திற்கு செய்யப்படும் பாரிய அநியாயமாகும். இன்றும் ஈபிடிபி கட்சிக்கும் அமைச்சருக்கும் வால் ஆட்டுபவர்கள் முன்னர் வேறு யாருக்கோ வால் ஆட்டியவர்களே. அவர்கள் நாளை இன்னுமொரு எஜமானர் வந்தால் அவருக்கு வாலில் குஞ்சமும் கட்டி ஆட்டுவார்கள். இவர்களுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன எல்லாம் ஒன்றுதான்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சில்வேஸ்திரி அலன்டின் (உதயன்), முருகேசு சந்திரகுமார் (அசோக்), மற்றும் ஈபிடிபி யின் முக்கிய உறுப்பினர்கள் பொறுப்பாளர்களான தோழர் தவராஜா, தோழர் மித்திரன், தோழர் மார்டின் ஜெயா, தோழர் ஆறுமுகம், தோழர் விந்தன், தோழர் திலக், தோழர் ஜெயராஜா மற்றும் தோழர்கள் தங்களுடைய கட்சி எப்போதும் தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி சரியான முடிவை எடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தவறான தெரிவுகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் இவர்கள் பொறுப்பாவது தவிர்க்க முடியாதது. தமிழ் கல்விசார் சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்ட அரசியல் சக்திகள் அதற்கான விலையைச் செலுத்தியே உள்ளனர். தமிழ் சமூகம் தங்கள் கல்வியை பாதிக்கும் விடயங்களை நீண்டகாலத்திற்கு பொறுத்துக் கொள்ளப் போவதில்லை.

ஆகவே ஈபிடிபி கட்சி பொறுப்பான முடிவுகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். இன்று நவம்பர் 17 யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிக முக்கிய முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னுடைய ஆதரவை அல்லது அதற்கான சமிஞ்சையை அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தமிழ் கல்விசார் சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.

ஈபிடிபி தோழர்களே நல்லதொரு இதய வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். 

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

பல்கலைக்கழகம் முதல் மருத்துவமனை வரை தொடரும் துஸ்பிரயோகங்கள் : மாணவியின் சாட்சியம் : த ஜெயபாலன்

”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என்றும் ”யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தற்கொலை, தற்கொலை முயற்சிகள் அதிகரித்து உள்ளது” என்றும் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அண்மைய நிகழ்வுகளில் சுட்டிக்காட்டி இருந்தார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் பின்னணியில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.

நீண்ட காலம் இலங்கையில் நிலவிய யுத்த சூழலை தங்களது துஸ்பிரயோகங்களுக்கான விளைநிலமாகப் பயன்படுத்திய பாதகர்கள் தற்போது ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சூழலில் வெளிச்சத்திற்கு வந்துகொண்டுள்ளனர். தேசம்நெற் இல் வெளியான கட்டுரைகளை அடுத்து பாதிக்கப்பட்ட சிலர் வெவ்வேறு வழிகளில் எம்மை மறைமுகமாக அணுகி உள்ளனர். அவர்கள் தங்களை இனம் காட்டமுடியாத நிலையில், அவர்களது வாக்கு மூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் இவற்றைக் கடந்து உறுதியான சாட்சியங்களுடன் மாணவி ஒருவர் முன்வந்துள்ளார். அதிபர் இமெல்டா சுகுமார் வெளிப்படுத்தியது எமது சமூகத்தில் மறைந்து குவிந்து கிடக்கின்ற சீரழிவின் ஒரு பகுதியே என்பதனை அந்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியானது உறுதிப்படுத்துகிறது.

பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் இளம்பெண்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து விசேடமாகக் கவனிக்கும் மருத்துவர்கள் – மாணவியின் சாட்சியம்

1984ல் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டியில் பிறந்த பெண் இவர். இவரின் பெற்றோர் தமிழும் சிங்களமும் என்பதால் சிங்களத்திலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். மலையகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் உழைப்பிற்காக கொழும்புக்குச் சென்று வாழ்ந்தனர். கபொத சாதாரண தரத்தில் (O/L) படித்துக் கொண்டிருந்த காலம் அது. இளமையில் வறுமை இருந்த போதும் அம்மாணவியின் அழகில் வறுமை இருக்கவில்லை. துரதிஸ்ட வசமாக மிகுந்த நோய்வாய்ப்பட்டார். அடிக்கடி மயக்கம் ஏற்படும். கடுமையான வலி ஏற்படும். அதனால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அம்மாணவியைப் பரிசோதித்ததில் அவர் இதயம் தொடர்பான நோயுடையவராகவும் அது சிக்கலானதாகவும் விசேட நிபுணத்துவம் பெற்ற ஒருவரின் கீழ் பார்க்கப்பட வேண்டியதாகவும் இருந்தது. அதனால் இலங்கையில் மிகவும் பிரபல்யமான மருத்துவ நிபுணரின் கீழ் பதிவு செய்யப்பட்டார்.

இவருடைய இதய நோயக்கு சிகிச்சை அளிக்க வந்தவர் இதயமற்ற ஒரு மருத்துவ நிபுணர் என்பதை அம்மாணவி வெகுவிரைவிலேயே அறிந்துகொண்டார். இந்த மருத்துவ நிபுணர் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை ஆசிரியரினதும் பிரபல்யமான கல்லூரியினது அதிபரினதும் புதல்வர். யாழ் வைத்தியசாலையின் தலைமை வைத்தியராக இருந்தவர். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் விரிவுரையாளராக இருந்தவர். தற்போது பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தெற்கு ஆசியாவில் உள்ள குறிப்பான நோய்கள் பற்றி கருத்துப் பரிமாற்றத்திற்கு வருபவர்.

மாணவியைப் பரிசோதித்ததில் அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாணவிக்கு ஏற்பட்ட இதய நோய்க்கான சிகிச்சை என்பது இலங்கையில் சாதாரணமான ஒரு விடயமல்ல. இலங்கை முழுவதிலும் உள்ள இதயநோய் சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டிய நோயாளிகள் அனைவருமே கொழும்பு பொது மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்படுவர். பணவசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கே உடனடியாகச் சிகிச்சையை முடித்துக்கொள்வர். ஆனால் வசதி அற்றவர்கள் பொது மருத்துவமனையில் மாதங்களாக வருடங்களாக காத்திருக்க வேண்டி ஏற்படும்.

காரணம் இவ்வாறான நிபுணர்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவ மனைகளிலேயே பணி செய்கின்றனர். தனியார் மருத்துவமனையில், பொது மருத்துவமனையில் ஒரு சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியைவிடப் பல மடங்கு அதிகம் வழங்கப்படுகிறது. அதனால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இவர்கள் பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். (இவ்வாறு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல.) இலங்கை முழுவதும் இருந்து இவ்வாறான சிகிச்சைக்கு வரும் பல நூற்றுக் கணக்காண இந்த மாணவியைப் போன்ற ஏழைக் குடும்பப் பின்னணியில் வருவோர் மாதங்களாக வருடங்களாக கொழும்பு மருத்தவமனையில் காத்துக் கிடக்கின்றனர்.

இவ்வாறு 1999ம் ஆண்டில் கொழும்புப் பொது மருத்துவமனையில் இம்மாணவி அனுமதிக்கப்பட்டார். நோய் சிக்கலானதாக இருந்தமையால் 2001 முதல் குறிப்பிட்ட மருத்துவ நிபுணரின் கீழ் இந்த மாணவி பதிவுசெய்யப்பட்டார். முதற் சந்திப்பில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவ, மாணவிகளுடன் அந்த மருத்துவ நிபுணர் அந்த மாணவியை முதற் தடவையாகப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்த பார்வையிடல்களின் போது மாணவி மீது தனிப்பட்ட அக்கறை ஆரம்பமானது. நிரையாக அடுக்கப்பட்ட கட்டில்கள் ஒரு திரையினால் மட்டும் மறைக்கப்பட்ட நிலையில் நிபுணர் பிரிசோதணை என்ற பெயரில் தகாத தொடுகைகளில் ஈடுபட்டு உள்ளார். ஒரு வைத்திய நிபுணரின் பரிசோதணையின் எல்லைகளைக் கடந்த இந்தச் செய்கைகளை இளம் மாணவி உணர்ந்து கொள்ள நீண்ட காலம் எடுக்கவில்லை. அந்த மருத்துவ நிபுணர் இந்த மாணவியை தன்னுடைய இச்சைகளுக்கு உட்படுத்த ஆரம்பித்தார்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு பத்து வருடங்களுக்கு முன் இந்த மருத்துவ நிபுணர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். பிரேமதாசா அரசாங்கத்துடனும் நெருக்கமாக இருந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசாங்கத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இவர் முக்கிய பங்கெடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இப்பேச்சுவார்தை முறிவடைந்த போது இம்மருத்துவ நிபுணர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முற்பட்டு இருந்தார். அப்போது வே பிரபாகரன், ”நீங்கள் வைத்தியத்தைப் பாருங்கள். நான் அரசியலைப் பார்க்கிறேன்’ என்று தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தது. மேலும் மாத்தையா தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதுடன் இந்த மருத்துவ நிபுணரும் கொழும்பு வந்துவிட்டார்.

இவ்வாறு அரசியல் செல்வாக்கும் பண பலமும் தொழிற் திறமையும் உடைய ஒருவர் இவ்வாறான குற்றத்தைப் புரிகின்ற போது பாதிக்கப்படுபவர்கள் அதனை எதிர்க்கின்ற தடுக்கின்ற ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை என்பதை சரியாகக் கணித்தே அந்தக் குற்றத்தை இழைக்கின்றனர். மலையகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தன்னுடலின் மீது ஒரு மருத்துவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை தன் பெற்றோரிடமே எடுத்துச் சொல்ல முடியாத நிலையில் தனக்குள்ளேயே புளுங்கவே முடிந்தது.

நாட்கள் நகர நகர அந்த மாணவியின் உள்ளமும் பாதிப்படைந்தது. 2002ல் அந்த மருத்துவ நிபுணர் மாணவியை மாதத்தில் ஒரு தடவை பார்வையிட நேரம் வழங்கப்பட்டது. மாணவியை பரிசோதணைக்கு முன் குளித்துவிட்டு இருக்குமாறும் அணியும் ஆடைகள் பற்றியும் கட்டளையிட்டுள்ளார் மருத்துவ நிபுணர். மருத்துவ நிபுணரை சந்திக்கும் நாள் நெருங்கும் போதெல்லாம் அந்த மாணவி பயத்தினால் மயங்கி வீழ்ந்தால். தனக்கிருந்த நோயின் வலியிலும் பார்க்க அந்த நோயைக் குணமாக்க வந்த மருத்துவ நிபுணர் அப்பெண்ணின் உடல்மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறை அவருக்கு அதிக வலியையும் உளைச்சலையும் கொடுத்தது.

மாணவியின் பெற்றோரோ மருத்துவ நிபுணர் தங்கள் மகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து சிகிச்சை அளிக்கின்றார் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். மனித இயல்புகளையும் நடவடிக்கைகளையும் மிகுந்த நிபுணத்துவத்துடன் அறிந்திருந்த அந்த மருத்துவ நிபுணர், பெற்றோருடன் மிக நட்பான உறவை ஏற்படுத்திக் கொண்டார். அந்த மாணவியை அப்பலோ தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கவும் முன்வந்தார். தங்களிடம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வசதியில்லை என்பதனை அவர்கள் தெரிவித்த போது, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் அங்கு பார்வையிட அழைத்து வருமாறும் அதற்கான செலவை தானே செலுத்தவும் முன்வந்தார். பெற்றோரைப் பொறுத்தவரை அந்த மருத்துவ நிபுணர் கடவுளுக்கே சமமானவர் ஆனார்.

ஆனால் அந்த மாணவியின் வலியோ உச்சத்திற்கு சென்றது. வெறும் திரை மறைவிலேயே தன்னுடல் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட மருத்துவ நிபுணர், தனியார் மருத்துவமனையின் மூடிய அறையில், தன்னை என்ன பாடுபடுத்துவார் என்பதை அம்மாணவி ஊகித்துக் கொள்ள அதிகநேரம் ஆகவில்லை. அம்மாணவியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு தனிப்பட்ட முறையில் விசேட கவனிப்பை மருத்துவ நிபுணர் வழங்குகிறார் என்று காத்திருக்க, உள்ளே மருத்துவ நிபுணர் முழுஅளவிலான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார். இவ்வாறு ஒரிரு தடவைகள் அல்ல பலமுறை அம்மாணவி அவஸ்தைக்கு உள்ளானாள். ஒவ்வொரு தடவையுமே பெற்றோர் அவளுக்கு சிகிச்சை இடம்பெறுகிறது என்று எண்ணி மருத்துவ நிபுணருக்கு தங்கள் வேண்டுதலைச் செய்து கொண்டிருந்தனர்.

பெண்ணுடைய சம்மதம் இன்றி பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்துவது மட்டும் தான் பாலியல் பலாத்காரம் என்ற முன்னைய வரையறைகள் அடிப்படையில் அந்த மருத்துவ நிபுணர் செய்தது பாலியல் பலாத்காரம் அல்ல. ஆனால் பெண்ணுடைய சம்மதம் இன்றி அவளுடலை ஆக்கிரமிப்பதும் அவளுடலை வன்முறை செய்வதும் பாலியல் பலாத்காரம் என்ற தற்போதைய வரையறைகளை இந்த மருத்துவ நிபுணர் மிகமோசமாக மீறியுள்ளார். அதிலும் ஒரு மருத்துவராக தொழில் நேர்மையுடன் தொழிலுணர்வுடன் செயற்பட வேண்டிய ஒருவர், அம்மாணவியின் கையறுநிலை, ஏழ்மை இவற்றைப் பயன்படுத்தி மிகத் திட்டமிட்டு தன்னுடையை இச்சைக்கான இரையைத் தேர்வுசெய்துள்ளார்.

அந்த மாணவியை தன்னுடைய பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திய அந்த மருத்துவ நிபுணர், அவருடைய மருத்துவ கண்காணிப்பில் இருந்த நான்கு ஆண்டுகளில், அம்மாணவியினுடைய நோய்க்கு குறைந்தபட்ச சிகிச்சையைக் கூட அளிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் அந்த மாணவியைப் பார்வையிட வரும்போதும் தனது காமத்தைத் தீர்த்துக் கொண்டதற்கு அப்பால் அம்மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தன்மீதான வன்முறையை நிறுத்தும்படி அம்மாணவி பலதடவை மன்றாடிய போதும், மருத்துவ நிபுணர் தன் வன்முறையை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த நிபுணர், அந்த மாணவியை தனது இச்சைக்கு பயன்படுத்துகிறார் என்று அறிந்து கொண்ட அம்மாணவியைப் பார்வையிடும் சிங்கள மருத்துவரும், அம்மாணவி மீது தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அந்த மாணவி அதற்கு சம்மதிக்காதபோது அவர் தனது இச்சையை நிறுத்திக் கொண்டார்.

பெற்றோர் அந்த மருத்துவ நிபுணரை கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துள்ளனர். அந்த மாணவி உண்மையைக் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள சமூகக் கட்டமைப்பும் சமூகச் சூழலும் இடம்கொடுக்காது. இந்த வன்முறையில் இருந்து தன்னுடலைக் காப்பாற்ற அதனை அழிப்பதே ஒரேவழியென்ற முடிவுக்கு அந்த மாணவி வருகின்றாள். மாதங்களாக, வருடங்களாக தன்னுடல் மீது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறலை தாங்க முடியாத அந்த மாணவி ஒரிரு தடவை தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். மரணம் சாத்தியப்படவில்லை.

தன்னைக் காப்பாற்ற இலங்கையை விட்டு வெளியேறுவதே அவருக்கு அடுத்த உபாயமாக இருந்தது. தங்களுக்கு இருந்த சொத்துக்களை விற்று ஒருவகையில் படிப்பதற்கு என்ற போர்வையில் லண்டன் வந்து சேர்ந்தார், அந்த மாணவி. 2001ல் ஆரம்பித்தது 2005ல் லண்டன் வந்ததுடன் அதற்கு முற்றுப்புள்ளி என்றே நினைத்திருந்தார். ஆனால் மருத்துவ நிபுணர் விடவில்லை. பெற்றோரிடம் அந்த மாணவியின் தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட அந்த மருத்துவர் கற்கைகளுக்காக பிரித்தானியா வரும் ஒவ்வொரு தடவையும் இந்த மாணவியை முயற்சித்துள்ளார். ஆனால் மீண்டும் தன்னுடல் மீது இந்த மருத்துவ நிபுணர் வன்முறையில் ஈடுபடாதவாறு அவரை அந்த மாணவி தவிர்த்துள்ளார்.

இலங்கையில் இருந்த போது அந்த மாணவியின் உடல்மீது மேற்கொண்ட பாலியல் வன்முறையை இப்போது வார்த்தைகளில் தவளவிட்டார், அந்த மருத்துவ நிபுணர். அந்த மாணவி தொலைபேசியைத் துண்டிக்கும் பட்சத்தில் அவரின் பெற்றோரிடம் முறையிட்டு மீண்டும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வார். தொலைபேசியில் மாணவியுடன் கதைத்தபடி சிற்றின்பத்தில் திளைத்தார்.

இந்த மாணவி மருத்துவ நிபுணரைத் துண்டிக்க முயலும் ஒவ்வொரு தடவையும் அவரின் தாயார் அவரை நன்றி மறந்து செயற்படுவதாகவும், எதிர்காலத்தில் அப்படிச் செய்தால், தான் தற்கொலை செய்வேன் என்றும் தனது மகளை மிரட்டியுள்ளார். மிகவும் பலவீனமான உளவியல் தன்மையுடைய இப்பெண் யாரையும் எளிதில் நம்பக் கூடியவர். அவருடைய உளவியலையும் குடும்பத்தின் நிலையையும் ஏழ்மையையும் மிக அவதானமாகக் கைக்கொண்டு தன்இச்சையை அம்மருத்துவ நிபுணர் தொடர்கின்றார்.

இந்த நிலையில் அந்த மாணவிக்கு இருந்த சிறு வேலையும் இல்லாது போக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் வீட்டில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். அப்போது தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாத நிலையில் தேசம்நெற் ஆசிரியர் என்றும் அறியாத நிலையிலேயே எமது உதவியை நாடினார். அதிலிருந்தே அந்த மாணவியினுடைய கடந்த காலம் பற்றியதும் தொடர்வதுமான கசப்பான சம்பவம் எமக்குத் தெரியவந்தது.

இச்சம்பவம் தெரிய வந்ததும் ஆதாரத்தைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டோம். இந்தப் பின்னணியை அறியாத அந்த மருத்துவர் அன்றும் ஒருநாள் தொடர்புகொண்டார். அவர் தனது வார்த்தைகளால் பாலியல்வல்லுறவு கொண்டு சிற்றின்பத்தில் திளைத்தது முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. இந்தப்பதிவில் அவர் பல வருடங்களாக அந்த மாணவியை தன்னுடைய பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்டது பற்றிய குறிப்புகளும் பதிவாகியது. இதே போன்று மற்றுமொருநாளும் இவருடைய இந்த காமுகத்தனம் பதிவாக்கப்பட்டு அவர் கடந்த மாதம் (ஒக்ரோபர்) இறுதிப்பகுதியில் எச்சரிக்கப்பட்டார்.

பதிவு செய்யப்பட்ட உரையாடல் முற்றுமுழுதான பாலியல் பிரயோகங்களைக் கொண்டிருப்பதால் அதன் ஒலியையோ எழுத்துருவையோ இங்கு பதிவு செய்வதை தவிர்க்கிறேன்.

இன்றுள்ள சமூகக் கட்டமைப்பில் தனக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை தன் அடையாளத்துடன் அப்பெண் வெளியே கொண்டுவர அஞ்சுகின்றார். அரசியல் செல்வாக்கும், செல்வச் செழிப்பும், தொழிற்திறமையும் கொண்ட ஒரு சமூகப் பிரபல்யம் பெற்ற மருத்துவ நிபுணரை கூலி வேலை செய்கின்ற குடும்பத்தில் இருந்து வந்த ஒரு இளம்பெண் சட்டப்படியும் சமூகக் கட்டமைப்பிலும் எதிர்கொள்வது என்பது சாத்தியமானதாக இல்லை. அதனால் அந்த மாணவியின் மட்டுமல்ல பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட மாணவிகளின், பெண்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது. அதனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் இவ்வாறான மருத்துவர்களும் தொடர்ந்தும் தங்கள் வன்முறைகளை பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றனர். முத்தையா யோகேஸ்வரி என்ற 13 வயதே நிரம்பிய வேலைக்கு அமர்த்தப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய விரிவுரையாளர் தங்கராசா கணேசலிங்கம் தற்போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். ஆனால் இதனை வெளிக்கொண்டுவந்த இளம் பெண் முத்தையா யோகேஸ்வரி தற்போது உயிருடன் இல்லை என்றே தெரியவருகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியையே இடமாற்றுகின்ற அரசியல் பலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு இருந்தது. ஆனால் முத்தையா யோகேஸ்வரியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தங்கராசா கணேசலிங்கம் இன்னமும் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். தங்கராசா கணேசலிங்கம் தவறு செய்திருக்கலாம் அல்லது நிரபராதியாக இருக்கலாம். ஆனால் ஒரு பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் பல்கலைக் கவுன்சிலின் எந்தவொரு விசாரணையும் இன்றி எப்படி மீண்டும் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்? சிவச்சந்திரன் போன்ற பெண்ணிலை வாதியைக் கொண்டுள்ள பல்கலைக்கழகக் கவுன்சில் எப்படி பெண்கள் மீதான இந்த பாலியல் துஸ்பிரயோகங்களை தொடர்ந்தும் அனுமதிக்கிறது?

பல்கலைக்கழகமும் தமிழ் அரசியல் தலைமைகளும் தவறான முன்னுதாரணங்களை அமைப்பதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறான நபர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பவர்களும் அந்தத் தவறுகளுக்கு பொறுப்பாகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சில தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சாட்சியங்களை தேசம்நெற் இல் எதிர்பார்க்கலாம்.

(குறிப்பு: தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டுவர விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் அனாமதேயமாகவும் தொடர்பு கொள்ளலாம்.)

அண்மையில் யாழ் பல்கலைக்கழகம் பற்றி அங்கு பட்டப்படிப்பை முடித்த மாணவனுடன் உரையாடிய போது, சில பெண்கள் விரிவுரையாளர்களிடம் தங்களை இழந்து திறமைச் சித்திபெறத் தயாராக இருப்பதாகவும் அதனால் விரிவுரையாளர்களை பேராசிரியர்களைத் தவறு சொல்வதில் அர்த்தமில்லை என்றார். ஒரு விரிவுரையாளருடைய ஒரு பேராசிரியருடைய கடமை தொழில் பொறுப்பு என்பனவற்றை கவனத்திற்கொள்ளாமல் பாதிக்கப்படுகின்ற மாணவிகள் மீதே குற்றம் சுமத்துகின்ற ஒரு போக்கே உள்ளது. இது ஆணாதிக்க சமூக்க கட்டமைப்பின் ஒரு பிரதிபலிப்பே. பட்டப்படிப்பிற்கு செல்கின்ற மாணவிகளுடைய நிலை இப்படி இருக்கும் போது கண்டியில் கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தில் இருந்து கொழும்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற 14 வயதான இளம்பெண், அரசியல் செல்வாக்கும், செல்வச் செழிப்பும், தொழிற்திறமையும் கூடிய ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டால் பெற்றோரிடமே சென்று முறையிட்டால் நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் எங்கு சென்று முறையிட முடியும்?

இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)

Maaveerar_Thuyilum_Illam_2010இது கார்த்திகை மாதம். நம் இல்லங்கள் தோறும் சோகத்தின் வெளிச்சம். அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான். ஆனால் எல்லாமும் முடிந்துவிட்டது. சரிகளுடனும் பிழைகளுடன் முன்று தசாப்த கால அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அது பல்லாயிரக் கணக்கான மக்களின், போராளிகளின் தியாகத்தால் உருப்பெற்ற ஒன்று. வெறும் வாய்ச் சொல் வீரத்தாலோ, விதண்டா வாதங்களாலோ நிலைபெற்ற ஒன்றல்ல. எனவே இனி அதனை நாம் காயப்படுத்தவும் தேவையில்லை. கொச்சைப்படுத்தவும் தேவையில்லை.

சமீப நாட்களாக நடந்தேறிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு போனால் என்ன என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு புறம், உணவுக்காவும், தங்கள் மானம் மறைப்பதற்கான உடு துணிக்காகவும் கையேந்தி நிற்கும் மக்கள். மறுபுறமோ எதுவுமே நடக்காதது போன்று நல்லூர் கோயில் திருவிழாவில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அடுத்து தமிழ்செல்வனுக்கு சிலை வைப்பதாகக் கூறி இன்னொரு கூட்டம். இப்போது மாவீரர் தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்பு விடும் பிறிதொரு கூட்டம். இது போதாதென்று தங்களை தாங்களே பிரதமர் என்றும் அமைச்சர்கள் என்றும் சொல்லிக் கொண்டும், அதற்காக பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு பிரிவு. கோமாளித்தனத்தின் எல்லை கூட எங்களுக்குத் தெரியவில்லை.

கடந்த முன்று தசாப்த கால போர் வாழ்வில் தன்னலமற்று தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவு கொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை ஆனால் இறந்தவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது இறந்து கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்கும் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கும் ஏன் எங்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் குறித்து ஏன் எங்களால் கசினை கொள்ள முடியவில்லை. அவர்கள் செய்த துரோகம்தான் என்ன?

இப்படி எத்னையோ கேள்விகள் மனதை வருத்தும் போது கூடவே இன்னொரு கேள்வியும் எழுவதுண்டு. உண்மையிலேயே நாங்கள் ஒரு விடுதலை அவாவிய சமுகம்தானா? நடப்பவற்றை பார்த்தால் அப்படி நம்ப மனம் ஏனோ மறுக்கிறது. எப்படி எங்களால் இவ்வளவு சாதாரணமாக எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சிந்திக்க முடிகின்றது. கடந்த மூன்று தசாப்பங்களாக போராட்டத்தின் பக்கபலமாக இருந்த உறவுகள்தான் இன்று நடு வீதியில் வாழ வழியின்றி இருக்கின்றனர். இந்த போராட்டத்தின் உயிர் மூச்சாக இருந்தவர்கள்தான் இன்று சரணடைந்து எதிகாலத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் விருப்பங்களுக்கு பலியான மக்கள் இன்று மரணத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் கனவிற்கு முகம் கொடுக்க போராடிவர்கள் இன்று தங்கள் சமூக-முகமிழந்து (social face) இருக்கின்றனர். இவர்களை காப்பாற்ற வேண்டிய பெறுப்பு ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் உண்டு. இதனை தட்டிக் கழிக்கும் எவருமே நிட்சமாக மனச்சாட்சியுள்ள மனிதர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் இன்று சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களது பேரால்தான். இன்று களத்திலும் புலத்திலும் நீங்கள் தூக்கி பிடிக்கும் அரசியல் சுலோகங்களில் இருப்பதெல்லாம் அவர்களின் குருதி தொட்டு எழுதிய வாசகங்களே!

இந்தச் சூழலில்தான் மாவீரர் தினத்திற்கான அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. உண்மையில் இது ஒரு கொச்சைப்படுத்தலுக்கான அழைப்புத்தான். இறந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வு மீது சிறிதளவு கூட அக்கறை கொள்ளாதவர்கள் இறந்து போன போராளிகளை நினைவு கொள்வதை எந்தவகையில் உண்மையானது என்று நம்புவது? தயவு செய்து அவர்களை உங்களது அற்ப பிழைப்புக்காக கொச்சைப்படுத்தாதீர்கள். பல்லாயிரக்க கணக்கான போராளிகளும் பல நூற்றுக் கணக்கான தளபதிகளும் தங்களை இழந்த இந்த போராட்டத்தில்; சு.ப.தமிழ்செல்வனுக்கு மட்டும் ஏன் ஒரு பிரத்தியேக சிலை வழிபாடு.  அந்த பணத்தில் பத்து குழந்தைகளுக்கான எதிகாலத்தை உவாக்க முடியும். முகம் சிதைந்து மற்றவர்கள் முன் தோன்றுவதற்கே அஞ்சி ஒழியும் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வை மீட்டெடுக்க முடியும்.

துரோகத்திற்கு உங்களிடம் ஏராளம் விளக்கங்கள் இருக்கலாம் நன்பர்களே! ஆனால் நம்மை நம்பிய ஏழை மக்களை வஞ்சிப்பதுதான் உண்மையான துரோகம். இன்று புலம்பெயர் சூழலில் வசதியாக இருந்து கொண்டு அரசியல் செய்வோரும், உதவி செய்ய முன்வருவோரைக் கூட தடுத்துக் கொண்டிருக்கும் கனவான்களும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உங்களால் பலிக்கடாவாக்கப்பட்ட அந்த ஏழை மக்களுக்கும், எங்கள் அண்ணன்மார் இருக்கின்றனர் அவர்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த போராளிகளுக்கும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த பச்சை துரோகத்தை வரலாறு நிட்சயம் பதிவு செய்யும்.

ஆயிரம் சாட்சிகளை விட பெரியது மனச்சாட்சி என்று ஒரு கருத்துண்டு. மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்ட ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும் முன்னாள் போராளிகள் குறித்தும் ஏதோவொரு வகையில் குற்ற உணர்விற்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். கே.பி அண்ணருடன் கதைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் அவ்வாறானதொரு குற்ற உணர்விற்கு ஆட்பட்டவராகவே பேசுகின்றார். எல்லோரும் ஒன்றுபட்டு கண்ட கனவு, தொடங்கிய பயணம் ஆனால் அதன் வலிகளையும் வேதனைகளையும் ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் அனுபவிக்கச் சொல்லுவது என்ன நியாயம். இதுதான் அவரின் வாதம். மனச்சாட்சிக்கு அஞ்சும் ஒவ்வொரு மனிதனையும் இந்த கேள்வி அலைக்கழிக்கின்றது. கே.பி ஒரு மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் மனிதர். அவர் பாவப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களை விட்டுவிட்டு ஒதுங்கி வாழ விரும்பவில்லை. இந்த போராட்டத்தின் ஆதி அந்தம் வரை இருந்த ஒருவர் என்ற வகையில் அவர்களது இன்றைய துயர் வாழ்வில் தனக்கும் பங்குண்டு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் துனிவு அவரிடமுண்டு. எனவே தனது இறுதிக் காலத்தில் தன்னால் இயன்றதை அந்த மக்களுக்காக செய்ய முயல்கின்றார். அவருடன் பேசிய சந்தாப்பங்களிலெல்லாம் நான் இதனையே புரிந்து கொண்டேன். இதுதான் அவரது பணியின் அடிப்படை. இதற்கு பலரும் பல்வேறு விளங்கங்களைச் சொல்லலாம். நாம் விளக்கங்களில் காலங்களை கடத்தியதுதானே அதிகம்.

கார்த்திகை மாதத்தை முன்வைத்து புதுவை அண்ணன் எழுதிய கவிதை வரிகள்  இவை. கேட்கிறதா மணி? கேட்கிறதா பாடல்? தெரிகிறதா நெய் விளக்கு? எங்களாலும் சில ஓலிகளை கேட்க முடிகிறது. எங்களாலும் சில காட்சிகளை கான முடிகின்றது நன்பர்களே! அது – எங்களை காப்பாற்றுங்கள் என்னும் பாதிக்ப்பட்ட மக்களின் கதறல்கள். இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் அங்கவீனமடைந்த அந்த போராளிகளின் இறுதிக் குரல்கள். வெள்ளத்தில் இடுப்பளவு தண்ணீரில் தனது கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் தாய்மாரின் காட்சிகள். இரவில் தான் தூங்கிவிட்டால் தன் குழந்தைகளை பாம்பு தீண்டிவிடுமோ, நட்டுவக்காலி குத்திவிடுமோ என்று அஞ்சி விழித்துக் கொண்டிருக்கும் உறவுகளின் காட்சிதான் எங்குமே தெரிகிறது. மணியும் இல்லை, பாடலும் இல்லை, எரியும் நெய்விளக்கும் இல்லை. நன்பர்களே கதறலும் கண்ணீரும் அவமானத்தில் கூனிக்குறுகிய முகங்களும்தான் இங்கு வாழ்வு. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் பின்னர் இறந்து போகலாம். இறந்து கொண்டிருப்பர்களை காப்பாற்றுவதே எங்கள் முன்னுள்ள ஒரேயோரு கடமையாகும். மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் ஒரு கணம் இறந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் குறித்து சிந்திக்குமாறு நாம் கோருகிறோம். இறந்த போராளிகள் குறித்து சிந்திக்க முற்படும் இவ் வேளையிலாவது இறந்து கொண்டு இருக்கும் மக்கள் குறித்தும் முன்னாள் போராளிகள் குறித்தும் ஒரு கணம் சிந்தியுங்கள்.

ஆங் சாங் சூச்சி விடுதலை : பிபிசி தமிழழோசை

Aung_San_Suu_Kyiஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில் இருந்து ஆங் சாங் சூச்சி வெளியே வந்த போது ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் ஆரவாரித்தனர். கடந்த ஏழாண்டு காலமாக இவர் இந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

அவரது இல்லத்தை சுற்றியிருந்த பாதுகாப்பு தடைகளை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றினர். ஆதரவாளர் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து ஏராளமான அதிரடி பொலிஸார் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான 65 வயதான ஆங் சாங் சூச்சி கடந்த 21 ஆண்டு காலத்தில், 15 ஆண்டு கால பகுதி தடுத்தே வைக்கப்பட்டிருந்தார்.

இவர், முன்னரே, அதாவது கடந்த வருடமே விடுவிக்கப்பட வேண்டியவராக இருந்தார். ஆனால் அமெரிக்கர் ஒருவர் வாவியைக் கடந்து நீந்திச் சென்று சூச்சியின் வீட்டுக்குச் சென்ற சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அவர் சூச்சியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனக்கூறி, இறுதியாக மீண்டும் தடுத்துவைக்கப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று இராணுவ ஆட்சியாளர்களின் ஆதரவுபெற்ற கட்சியே, இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. ஆனால் இந்தத் தேர்தல் முறைகேடுகள் மிக்கது என பரவலாக கண்டிக்கப்பட்டது.

சனிக்கிழமை காலை முதலே, சூச்சியின் விடுதலைச் செய்தியைக் கேட்பதற்காக, அவரது வீட்டுக்கருகிலும் இதுவரை தடை செய்யப்பட்ட நிலையிலுள்ள என்.எல்.டீ என்ற ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைமையகத்துக்கு அருகிலும் மக்கள் கூட்டம் உணர்வுபூர்வமாக காத்திருந்தது.

அனேகமானவர்கள் ‘நாம் ஆங்சாங் சூச்சிக்கு தோள்கொடுப்போம்’ என்ற பொருள்படும் டீசர்ட்டுகளுடன் காணப்பட்டனர்.

மாலை நேரமளவில், சூச்சியின் வாவிக் கரையோரத்து வீட்டுக்குச் செல்லும் பாதையை மறித்து போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைக்கு எதிர்ப்புறமாக இருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் ஆயுதந் தரித்திருந்த கலகத்தடுப்புப் பொலிசாருக்கும் இடையில் வாக்குவாதங்களும் தள்ளு முள்ளுகளும் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து, அந்த மக்கள் கூட்டத்தில் பலர் நடு வீதியிலேயே அமர்ந்துவிட்டனர்.

பின்னர், மாலை ஐந்து மணியளவில் நிலைமை இன்னும் மோசமடைந்த போது பாதுகாப்புப் படையினர் தடைகளை அகற்றத் தொடங்குவதாக செய்திகள் வர ஆரம்பித்தன.

இறுதியாக,அதிகாரிகளின் கார்கள் வீட்டு வளாகத்துக்குள் நுழைவதைக் காணமுடிந்தது.பின்னர், விடுதலை உத்தரவு சூச்சியிடம் வாசிக்கப்பட்டதாக சிவில் உடையில் வந்த அதிகாரிகள் அறிவித்தனர்.

உடனடியாக நூற்றுக்கணக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சூச்சியை வாழ்த்துவதற்காக அவரது வீட்டை நோக்கி ஒடிச்சென்றனர்.

அதனையடுத்து, பாரம்பரிய உடையுடன் ஆங்சாங் சூச்சி, அவரது வீட்டுவளாக வாயிலில் உள்ள பீடத்திலிருந்து மக்கள் முன்னிலையில் தோன்றினார்.மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.தேசிய கீதத்தைப் பாடி மக்கள் கௌரவத்தை செலுத்தினார்கள்.

1947ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட, பர்மாவின் சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்படும் ஜெனரல் ஆங் சானின் மகளாக 1945 ஆம் ஆண்டில் பிறந்தார் சூச்சி.

1960களில் பர்மாவிலிருந்து வெளியேறிப்பின் பிரிட்டனில் கல்வி பயின்ற இவர், 1988 ஆம் ஆண்டில் தனது தாயாரின் உடல்நலனைக்கருத்தில் கொண்டு நாடுதிரும்பினார்.

இக்காலத்தில், சர்வாதிகார ஆட்சிநடத்திய ஊன ந வின் இற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோதே 89 இல், பர்மிய ஜூன்டா ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இராணுவ சட்டத்துக்குள்ளாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

1990 ஆம் ஆண்டில் சூச்சியின் ஜனநாயக ஆதரவு முன்னணிக்கட்சி வெற்றிபெற்றபோதும் இராணுவத்தினர் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.

1991 ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற ஆங்சாங் சூச்சி, 1995 ஆம் ஆண்டில் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் அவரது நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

2000 ஆம் ஆண்டில் மீண்டும் வீட்டுக் காவலுக்குள்ளானார் சூச்சி.

இறுதியாக இந்த மாதத்தில் நடைபெற்ற தேர்தலை, சூச்சியின் என்.எல்.டி கட்சி நிராகரித்த நிலையில், அந்தக்கட்சி தடைசெய்யப்பட்டது.

தற்போது சூச்சியின் நீண்ட வீட்டுக் காவலும் ஒருவாராக முடிவுக்கு வந்துவிட்டது. பர்மாவின் அடுத்த அரசியல் களம் எவ்வாறு அமையப்போகிறது.

சூச்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முழு உலகும் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.