எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“பொலிஸ் சோதனை நிலையங்கள் அமைத்தால் பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டம்’

kelaniya-sri-lanka.jpgபல்கலைக் கழகங்களினுள் பொலிஸ் சோதனை நிலையங்கள் அமைக்கப்படுமாயின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ரஜரட்ட மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் பொலிஸ் சோதனை நிலையங்களை அமைப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஒன்றியத்தின் இணைப்பாளர் உதேவ பிரேமரட்ன இதனைத் தெரிவித்தார்.

இவ்விரு பல்கலைக்கழகங்களிலும் சோதனை நிலையங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த செயற்பாட்டை கைவிடுமாறு நாம் கோருகின்றோம். எமது வேண்டுகோளையும் மீறும் பட்சத்தில் இதற்குத் எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

கொழும்பு – யாழ்ப்பாண பஸ் சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது

bus.jpgஏ9  பாதையூடாக கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பஸ் போக்குவரத்தை ஆரம்பிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்து தன்னிடம் அது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.  இதன்படி சாதாரண தனியார் பஸ்களும் சொகுசு பஸ்களும் சேவையிலீடுபடவுள்ளன.

சுமார் 500 தனியார் பஸ்கள் ஏ9 பாதையூடாக சேவையிலீடுபடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். தெற்கில் இருந்து பௌத்த யாத்திரிகர்கள் நயீனாதீவுக்கு போய்வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடமும் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதேபோல இ.போ.ச.பஸ்களும் இச் சேவையில் ஈடுபடவுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

“ஏ 9 வீதியூடாக வந்த உணவுப்பொருட்கள் தனியார் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் ‘

lorries.jpgஅத்தியாவசிய சேவைகள் ஆணையாளரால் ஏ9 வீதியூடாக லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தனியார் வர்த்தகர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்துள்ளார்.  சிவப்பு நாட்டரிசி , கோதுமை மா, சீனி, பருப்பு, தேயிலை, லக்ஸ்பிறே, அங்கர் பால்மா வகைகள் என்பனவே இவ்வாறு வழங்கப்படவுள்ளன.

குடா நாட்டில் உணவுப்பொருட்களின் விலைகளை தரமாக கட்டுப்படுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனை செய்யப்படும் விலைகளிலேயே தனியார் வர்த்தகர்களுக்கும் விநியோகிக்கப்படும் எனவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் 2500 மெற்றிக்தொன் உணவுப்பொருட்கள் களஞ்சியங்களில் இருந்து தனியார் வர்த்தகர்களுக்கும் கூட்டுறவுச்சங்கங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.

சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 75 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 69 ரூபாவுக்கும் பருப்பு கிலோ 138 ரூபாவுக்கும் தேயிலை கிலோ 150 ரூபாவுக்கும் லக்ஸ்பிறே 400 கிராம் பைக்கட் 200 ரூபாவுக்கும் அங்கர் 400 கிராம் பைக்கற் 278 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

கூட்டுறவுச்சங்கங்கள் தமக்கு தேவையான பொருட்களை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பும் தனியார் வர்த்தகர்கள் 21 ஆம் திகதிக்கு முன்பும் செயலக புனர்வாழ்வுப் பகுதியுடன் தொடர்பு கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். இதேநேரம் குடாநாட்டில் பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மன்னாரில் சுற்றிவளைப்பு தேடுதல்

chk-poli.jpgமன்னார் மூர்வீதி பிரதான வீதி மற்றும் சின்னக்கடை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் 10.30 மணிவரை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல்களினை மேற்கொண்டனர்.

இதன் போது அப்பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் அலுலகங்களுக்குச் சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் தேடுதல்களை மேற்கொண்டதோடு வீடுகளில் உள்ளவர்களது பெயர் விபரங்கள்களையும் பதிவு செய்து கொண்டனர்.

இதேவேளை மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் காலை 10.30 மனிமுதல் 11.30 மணிவரை பொலிஸார் வரவழைக்கப்பட்டு சோதனைகள மேகொள்ளப்பட்டது.

இதன் போது போக்குவரத்திற்காக காத்திருந்த மற்றும் தேவைகளுக்கா வந்திருந்தவர்கள் என சுமார் 500 பேர் வரை சோதனைக்குற்படுத்தப்பட்டனர்.எனினும் இந்த நடவடிக்கைகளின் போது எவரும் கைது செய்யப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

2009ஆம் ஆண்டில் இலங்கை சுகாதார துறையில் பாரிய முன்னேற்றம். வெளிவிவகார அமைச்சர்

uvs.jpg2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2009 ஆம் ஆண்டு இலங்கை சுகாதார துறையில் பாரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக பிராந்திய அமைச்சர்களின் மாநாடு (17) கொழும்பில் ஆரம்பமானது இதில் பல நாடுகளின் பிராந்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“சுகாதாரம் தொடர்பான கல்வியினை இன்று நாட்டில் அனைவருக்கு பெற்றுக்கொடுக்க கூடியதாக அமைந்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக அமைச்சர்களின் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறுவது எமக்கு கௌரவத்தை ஈட்டித்தந்துள்ளது. அதேவேளை எதிர்வரும் ஜூலை மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ நா கூட்டத்தொடரில் சுகாதார சேவை அபிவிருத்தி தொடர்பான யோசனைகளை முன்வைத்து விளக்கமளிப்பதற்கு தேவையான அனுபவங்களை பெறக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இம்மாநாடு அமைந்துள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதர சேவைகள் அமைச்சு மற்றும் சக துறையை சாந்தவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவிக்கிறோம்.உலக பொருளாதார நெருக்கடியான் நிலையில் காணப்பட்டபோதிலும் எமது பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதார கல்வி அறிவை அரசு உரிய வகையில் நடைமுறைப்படுத்துகிறது. ஜப்பான் இத்தாலி போன்ற நாடுகள் எமது சுகாதார சேவையின் அபிவிருத்திற்கு பல வழிகளில் உதவி உள்ளன. இன்று இலங்கை அனைவரது கவனத்திற்கும் வந்துள்ளது.எனவே தான் இவ்வருடம் பல நிகழ்வுகளையும், மாநாடுகளையும் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அவற்றுள் முக்கியமாக சார்க் வலய நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.

.தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க பல படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் சமாதானத்தினை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவது எமது நோக்கம் இவை அனைத்தும் ஜனாதிபதியே சாரும்.எமது நாட்டிற்கு சர்வதேச சமூகம் பல உதவிகளை செய்து வருகிறது. வடக்கு, கிழக்கு என்ற பாரபட்சம் இன்றி மக்கள் ஒரே இன மக்கள் என நோக்கப்படுகிறார்கள்.” என தெரிவித்தார்.

அதேவேளை ஜெனீவாவில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “விடுதலை புலிகளிற்கு ஆதரவு தெரிவித்ததே இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லோரிற்கும் தெரியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விடுதலை புலிகளை ஆதரிப்பது பயங்கரவாதிகளை நேரடியாக ஆதரிப்பதாகவே கருதப்படும்.” எனத்தெரிவித்தார்

மூன்று பேரைக் காப்பாற்றிய 9 வயது தினேஷ்

nalanda.jpgமஹியங் கணையில் கால்வாயொன்றினுள் விழுந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த மூன்று பேரைக் காப்பாற்றிய 9 வயது தினேஷ் சந்தகெலும் என்ற சிறுவனை ஜனாதிபதி நேற்று முன்தினம் பாராட்டி கெளரவித்தார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் தற்போது கல்வி பயிலும் தினேஷ¤க்கு மக்கள் வங்கி சிசு உதான திட்டத்தின் கீழ் இரண்டு இலட்சம் ரூபாவும், நாலந்தா கல்லூரி நிர்வாகம் 5 இலட்சம் ரூபாவும் வழங்கியுள்ளன. படத்தில் நாலந்தா அதிபர் ஹேமந்த பிரேமதிலகவும் காணப்படுகிறார்.

ஐ.தே.கவினுள் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை. பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பெரும் குழப்பம்; சூடான விவாதம்

ranil-wickramasinghe.jpgஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டதையடுத்தே கூட்டத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடந்தது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க.வின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கினார். கட்சியின் நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆராய்வதற்கான ஏற்பாடு நடந்துகொண்டிருந்த வேளையில், கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அதிருப்திக் குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்த வேளையில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டுமெனக் கோரி பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் செனவிரட்ன இதற்கான பிரேரணையை முன்மொழிந்தார். ரஞ்சித் மத்துமபண்டார எம்.பி இதனை வழிமொழிந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக நீக்கும் வகையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நேற்று காலையில் ஐ. தே. க. பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கட்சியின் இணைச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் செனவிரத்னவினால் முன் வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மொனராகலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்துமபண்டார வழிமொழிந்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் செனவிரத்ன உரையாற்றுகையில், ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவராக இருந்து கொண்டு எடுக்கும் தவறான தீர்மானங்களே இன்று ஐக்கிய தேசியக் கட்சி வங்குரோத்தான நிலைக்குச் சென்றதற்கான காரணமாகும்.

கட்சி எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணாமல் கால தாமதப்படுத்துவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கிராமப் பிரதேசங்களில் நூற்றுக் கணக்கில் ஐ. தே. க. உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்கின்றனர். இதனால் கட்சி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.  இந்த நிலையிலிருந்து கட்சியைக் காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்கவினால் இனி ஒருபோதும் முடியாது என்றார். கட்சியின் உபதலைவர் ருக்மன் சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், இனியும் வீணாக காலத்தைக் கடத்தாமல் ரணில் விக்ரமசிங்க தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

காமினி ஜயவிக்ரம பெரேரா, டொக்டர் ஜயலத் ஜயவர்தன, ஜோன்ஸன் பெர்னாண்டோ மற்றும் தயாசிறி ஜயசேன ஆகிய உறுப்பினர்களும் இதனை வரவேற்றுப் பேசினர். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் பெறுபேறுகளின் பின்னர் ஐ. தே. க. உறுப்பினர்கள் கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். தலைமைத்துவத்தின் தவறான வழிகாட்டல் காரணமாக தொடர்ச்சியாக 14 தேர்தல்களில் ஐ. தே. க தோல்வியுற்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்தன ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதரவாகப் பேசினார். இந்திக பண்டாரநாயக்க அதற்கு பதில் கூற முனைந்த போது சபையில் சூடான விவாதம் இடம்பெற்றது. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது எவ்வித தீர்மானமும் இன்றி பாராளுமன்றக் குழுக் கூட்டம் முடிவடைந்தது.

இலங்கைப் பிரச்சினைக்கு இந்தியாவால் மட்டுமே தீர்வுகாண முடியும்

மத்திய பகுதியில் இருப்பதால் போர்விபரம் தெரியாது; முத்து சிவலிங்கம் இந்தியாவால் மட்டுமே இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் கூறியுள்ளார். தமிழ்நாடு கும்பகோணத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில், இலங்கைத் தோட்ட உட்கட்டமைப்பு துறைப் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், கல்வி அமைச்சர் சச்சிதானந்தம், அரசியல் விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக நிருபர்களிடம் முத்துசிவலிங்கம் கூறியதாவது; இலங்கைப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்தியா, இலங்கை இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டனர். போரைத் துவக்கி விட்டனர். நாங்கள் மத்திய இலங்கைப் பகுதியில் இருப்பதால் போர் குறித்த முழு விபரம் தெரியவில்லை. பத்திரிகை செய்திகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனாலும், இந்தியாவால் மட்டுமே இலங்கைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கையில் விரைவில் அமைதி ஏற்பட்டால் அனைவருக்கும் நல்லது.

ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் நுவன் குலசேகர முதலிடத்தில்

nuwankulasekara.jpgசர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி.) புதிதாக வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தரவரிசையில் இதுவரை முதலிடதிலிருந்த நியூஸிலாந்து அணித் தலைவர் டேனியல் விட்டோரி இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் சோபிக்கத் தவறியதை அடுத்தே இரண்டாவது இடத்தில் இருந்த நுவன் குலசேகரவுக்கு முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதில் இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே வீழ்த்திய டேனியல் விட்டோரி புதிய தரவரிசைப்படி 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நெதன் பிரக்கன் இப்புதிய தரவரிசையில் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார்.

இதேவேளை,ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் நுவன் குலசேகர முதலிடததைப் பெற்றிருப்பது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ஆஸ்திரியாவில் மகளை அடைத்துவைத்து பிள்ளைகள் தந்தவர் மீது வழக்கு ஆரம்பம்

austria_incest.jpgசென்ற வருடம் ஆஸ்திரியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிருந்த யோசஃப் ஃப்ரிட்ஸல், பாலியல் வல்லுறவு மற்றும் குடும்பத்துக்குள் கூடா உறவு ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் தனது மகளையே பல ஆண்டுகள் நிலவறையில் அடைத்து வைத்ததோடு மகளுடனே உறவுகொண்டு ஏழு பிள்ளைகளை பெற்றிருந்தார் என்ற விபரங்கள் சென்ற ஆண்டு வெளியாகியிருந்தன. வியன்னாவுக்கு மேற்காக செயிண்ட் பொயல்டன் என்ற நகரில் ஃபிரிட்ஸல் மீதான வழக்கு திங்களன்று ஆரம்பமானது.

மகளை அடிமைப்படுத்திவைத்திருந்தது மற்றும் பிறந்தவுடன் இறந்துபோன ஒரு குழந்தையின் மரணத்துக்கு அவரே பொறுப்பு என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

நீதிமன்றத்திற்குள் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டபோது, ஒரு நீல நிற ஆவணக் கோப்பினால் அவர் தனது முகத்தை மறைத்துக்கொண்டார். இந்த வழக்கின் பெரும்பகுதி பொதுமக்கள் பார்வைக்கு இடமின்றி நடக்கிறது. விசாரணை ஒரு வாரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.