எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வடக்கில் வசந்தம்; தெற்கில் டெங்கு அரசு மீது ஐ.தே.க.குற்றச்சாட்டு

நாட்டில் பயங்கரவாதம் போல் டெங்கு பாரிய பிரச்சினையாகியுள்ள நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குற்றச்சாட்டினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

நாட்டில் வடக்கில் வசந்தம் இடம்பெறுகின்ற அதேநேரம், தெற்கில் டெங்கு நோய் பரவுகின்றது. அதாவது இன்று டெங்கு பிரச்சினை பயங்கரவாதம் போன்று பெரிய பிரச்சினையாக நாடு பூராவுமுள்ளது. இந்நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இவ்வருடத்தில் முதல் ஐந்து மாதத்தில் 90 பேர் பலியாகி 7,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரமான சூழ்நிலையாகும். கேகாலை மாவட்டத்தில் அதிகளவானவர்கள் இறந்துள்ளனர். இதேவேளை, ஏனைய மாவட்டங்களிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததால் டெங்கினால் பலி கொள்ளப்பட்டுள்ளனர்.

எமது சுகாதார அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராகவுள்ள நிலையில் நாட்டில் டெங்கினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவரது தலைமைத்துவத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. டெங்கினை ஒழிப்பதற்கு சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உருவாக்கப்பட்டுள்ள போதும் இது எந்தளவு சாத்தியப்படுமென்பது கேள்விக்குறியாகவுள்ளது. இவர்கள் சகல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

இதேவேளை, டெங்கிற்குரிய சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகளில் மருந்துகள் போதியளவு இல்லை. அத்துடன் இதற்கு சிகிச்சையளிப்பதற்கான அடிப்படை வசதியில்லை. இத்தகைய கஷ்டமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு இன்று எதுவித மருத்துவ வசதியுமின்றி செயற்படுகின்றது.

அங்கு 60 மாணவர்கள் கல்வி கற்கவேண்டிய நிலையில் 176 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உரிய வசதிகளை அம்மணவர்கள் பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இவர்களது பட்டத்தின் மீதே அச்சம் கொள்ளவேண்டியுள்ளது. எனவே எமது கட்சி ஆரம்பித்த இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் முற்படவேண்டுமென்றார்.

இன்று புனித பொசன் தினம்: மிஹிந்தலையில் ஆலோக பூஜை

poson_s.jpgஇன்று புனித பொசன் தினமாகும். மஹிந்த தேரர் இலங்கையில் பெளத்த மதத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வு இன்றைய தினத்திலேயே இடம்பெற்றது.

இதனை நினைவுகூரும் பொசன் பண்டிகையை முன் னிட்டு லேக் ஹவுஸ் நிறுவ னம், மிஹிந்தலையில் 47வது தடவையாகவும் ஆலோக பூஜை (மின்னொளி ஏற்றல் பூசை) நடத்துகின்றது.

இந்தப் பூஜை நேற்று சனிக்கிழமை ஆறாந் திகதி முதல் திங்கட்கிழமை எட்டாந் திகதி வரை நடை பெறுகின்றது. இன்றைய தினம் இந்து ஆலயங்களில் வைகாசிப் பெளர்ணமி விசேடபூஜைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன உறவில் முன்னேற்றம் அவசியம் – ஒபாமா

obamaspeech.gifஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் தேக்கமான உறவுநிலையை முறிப்பது மிக முக்கியமான விஷயம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசியுடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர் பேசிய அவர், இருநாடு தீர்வு அடிப்படையில் தீவிரமான பேச்சுக்கள் இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறும் என தான் நம்புவதாக கூறினார். மேலும் இரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சிக்கு தானும் பிரான்ஸ் அதிபரும் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். இரான் தனக்கு அப்படியெல்லாம் எந்த ஒரு திட்டமும் கிடையாது என கூறி வருகிறது.

பஹ்ரேனுக்கு செல்வதற்கு ‘ஸ்பொன்சர்’ தேவையில்லை – ஒகஸ்ட் மாதம் முதல் அமுல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று பஹ்ரேன் செல்லும் இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நேரடியாக அவர்களுக்கே விசா வழங்கும் நடைமுறையை பஹ்ரேன் அரசு நடைமுறைப் படுத்தவுள்ளது.

இதுவரை காலமும் பஹ்ரேன் செல்லும் இலங்கையரை அந்நாட்டில் பொறுப்பேற்பதாக உத்தரவாதமளிக்கும் (ஸ்பொன்சர்) நபர் ஊடாகவே விசா வழங்கப்பட்டு வந்தது.

இனிமேல் அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் இலங்கையிலிருந்து செல்லும் நபரை பஹ்ரேன் அரசே பொறு ப்பேற்கும் வகையில் அனுசரணையாளர் அல்லது உத்தர வாதமளிக்கும் நபரின் பெயரில் விசா வழங்கப்படமாட் டாது.

இந்த நடைமுறையினால் இலங்கையிலிருந்து செல்லும் நபர் சுதந்திரமாக தொழில்புரிய முடியும். தான் வெளியே செல்வதாயினும் உத்தரவாதமளிக்கும் நபரின் அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும் என்ற நிலையும் இனிமேல் ஏற்படமாட்டாது. தொழில் புரியும் இடங்களிலும் அவருக்குரிய உரிமையும் கிடைக்க வழிவகை ஏற்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார். பஹ்ரேன் போன்று சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் போன்ற நாடுகளும் இவ்வாறான விசாக்களை விரைவில் வழங்கவுள்ளது.

போர் நிறைவடைந்துவிட்டதாக அரசு அறிவித்திருப்பதால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு நாம் முன்வந்துள்ளோம்

vanangaaman-captainali.jpg“கப்டன் அலி’ (வணங்கா மண்) நிவாரணக்கப்பல் விவகாரத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாக “வணங்கா மண்’ அமைப்பின் உறுப்பினரான அர்ஜுனன் எதிர்வீரசிங்கம் தெரிவித்துள்ளார். லண்டன் பி.பி.சி.செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்; வணங்கா மண் கப்பலில் 880 தொன் உணவுப் பொருட்களையும் மருத்துப் பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளோம்.

இடம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களுக்காக புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களால் சேகரிக்கப்பட்ட உணவு, மருத்துப்பொருட்கள் இக்கப்பலில் உள்ளன. சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக அனுப்பப்பட்ட அக்கப்பலை இலங்கை கடல்வலயத்துக்கு அப்பாலுள்ள 18 மைல் தூரத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கப்பலிலுள்ள மாலுமிகளை இலங்கை கடற்படையினர் தயவாக அணுகியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த தமிழ்த் தொண்டர் ஒருவரும் ஐஸ்லாந்தைச்சேர்ந்த கண்காணிப்பாளர் ஒருவரும் இக்கப்பலில் உள்ளனர்.

போர் நிறைவடைந்துவிட்டதாக அரசு அறிவித்திருப்பதால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு நாம் முன்வந்துள்ளோம்.

தமது உறவுகள் குறித்து புலம்பெயர் மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ள நிலையில் இந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க அரசு அனுமதி அளிக்குமென நாம் நம்புகின்றோம்.  அத்துடன், இவ்விடயத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்த சூழ்நிலையில் யாழ்.குடாநாட்டு மாணவர்கள் கணினி தொடர்பான கல்வியில் பின்தங்கியுள்ளனர்

யுத்த சூழ்நிலை காரணமாக யாழ்.குடாநாட்டில் கணினி தொடர்பான கல்வியில் மாணவர்கள் பின்தங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு கடந்த இருபது வருடங்களாக கொழும்பு மற்றும் கண்டியில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்பநிறுவனம் தற்போது யாழ்ப்பாணத்திலும் தனது கிளையைத் திறக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அல்பிரட் பெரேரா தெரிவித்தார். தமது கிளை நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் திறப்பது தொடர்பாக அண்மையில் யாழ்ப்பாணம் பிள்ளையார் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கணினி விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், மதத்தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் பேராசிரியர் அல்பிரட் பெரேரா தொடர்ந்து பேசுகையில்; கல்வியே வாழ்க்கையின் மூலதனம். உலகமயமாக்கலில் கணினி கல்வி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில், நாம் அனைவரும் கணினி கற்கைநெறியில் உயர்வான பட்டங்களைப் பெறுவதன் மூலமே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறப்பான தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். யுத்த சூழ்நிலைகளால் யாழ்.குடாநாட்டில் கணினிக் கல்வி பின்தங்கி இருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது.

நாம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம், பாடசாலைகள், தனியார் கல்விநிறுவனங்கள், வணிகர் கழகங்கள், தொழிற்கூடங்கள் எனச் சகலவற்றின் பிரமுகர்களையும் சந்தித்தோம்.நாம் சந்தித்த அனைவரும் எமது நிறுவனக்கிளையை ஆரம்பிப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதுடன், யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கல்வி மேம்பாட்டுக்கும் அவர்கள் கொழும்பு சென்று உயர்கல்வியைப் பெறுவதற்காக அனுபவிக்கும் கஷ்டங்களைப் போக்கவும் இம் முயற்சி எமது மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமெனவும் கூறினார்.

எமது நிறுவனம் இங்கு திறக்கும் கிளையில் இப்பிரதேச வளவாளர்களைக் கொண்டு கல்வியை வழங்கவே விரும்புகின்றது. தேவையேற்படும் போது கொழும்பு வளவாளர்களும் விரிவுரையை வழங்குவர். ஆரம்பத்தில் பதினைந்து பேர் அடங்கிய மாணவர் குழு இருக்குமானால் கற்கைநெறியை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும். மாணவர்களுக்கான நூலகவசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், கற்றல் சாதனங்களை வழங்கமுடியும். எமது நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வெஸ்மினிஸ்ரர் பல்கலைக்கழகப் பாடவிதானத்துக்கேற்ப இலங்கையில் பட்டக் கற்கை நெறிகளை வழங்கிவருகின்றது. 1990 ஆம் ஆண்டு முதல் வெள்ளவத்தையில் இராமகிருஷ்ணா வீதியில் அமைந்துள்ள வளாகத்தில் பல்கலைக்கழகத்துக்குரிய சகல பௌதிகவளங்களுடன் நாம் செயல்பட்டு வருகின்றோம். எமது நிறுவனம் இரு தசாப்தமாக பிரித்தானிய பட்டங்களை வழங்கிவரும் கல்விக்கூடமாகும். எமது நிறுவனத்தில் இருந்து ஏறத்தாள 1800 கணினிப்பட்டதாரிகள் வெளியேறியுள்ளனர். இவர்கள் உலகின் பல பாகங்களிலும் திறமையுடன் பணியாற்றி வருவது எமக்குப் பெருமைதரும் விடயமாகும்.

சிறப்புக்கணினிமாணிப்பட்டம், முதுமாணிப்பட்டம், கலாநிதிப்பட்டங்களை இக்கல்வி நிறுவனத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.கற்கை நெறிக்கான காலம் முழுநேரம் நான்காண்டுகளாகவும் பகுதிநேரக் கற்கைநெறி ஐந்தாண்டுகளாகும் வெஸ்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் பாடவிதானங்களுக்கு அமைவான முறையில் கற்கைநெறி நடைபெற்று பரீட்சை நடைபெறுகிறது. மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் திறமைசித்தியும் உயர்தரப்பரீட்சையில் குறைந்தது மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் கற்கைநெறிகளில் இணைந்து கொள்ளலாம்.

முதுமாணிப் பட்டக்கற்கை நெறி இரண்டு ஆண்டுகளைக் கொண்டது.இக் கற்கைநெறி ஆழமான ஆய்வுகளை மையமாகக்கொண்டது. முதுமாணி கற்கைநெறியைப் பூர்த்தி செய்பவர்கள் கலாநிதிப்பட்டத்திற்கான முயற்சியிலும் ஈடுபடலாம். அனைவரும் கல்வியில் உயர்வானவர்களாக அறிவுசார் பொருளாதார இலக்கை நோக்கிச்செல்வது அவசியம். அதற்கு எமது நிறுவனம் யாழ்.பிரதேசத்தில் சேவையாற்றுமென்றார்.

முன்னாள் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் கருத்துரைக்கையில்: கல்வியை வழங்கும் தனியார் நிறுவனங்கள் எமது பிரதேசத்தில் தமது கிளையை ஆரம்பிக்கவிருப்பது பாராட்டுக்குரியது. பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் பெரும் பணச்செலவுடன் தலைநகரில் பட்டக்கற்கை நெறிகளைக் கற்கச் செல்கின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல், பெரும் பணச்செலவுடன் அவர்கள் அங்கு தங்கி கற்க வேண்டியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தமது கிளையை யாழ்ப்பணத்தில் அமைப்பதற்கு முன்வந்திருப்பதைப் பாராட்டுகின்றேன். திறமைமிக்க மாணவர்கள் பட்டக் கற்கைநெறிகளை எமது பிரதேசத்தில் கற்று உயர்வடைவது காலத்தின் தேவையாகும். உங்கள் முயற்சிக்கு நாம் உதவியாக இருப்போம் என்றார்.

தாண்டிக்குளம் வரை யாழ்தேவி சேவை – வன்னி மாவட்ட பா. உ. சிவநாதன் கிஷோர்ரும கலந்துகொண்டார்

yaal-devi.jpg‘தெற்கின் தோழன்’ என்ற தொனிப்பொருளில் வவுனியா தாண்டிக்குளம் நோக்கி நேற்றுக்காலை 6.10க்கு புறப்பட்ட யாழ் தேவி ரயில் பகல் 12.00 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. 20 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக தாண்டிக் குளம் வரை யாழ் தேவி ரயில் சென்றுள்ளது.

தாண்டிக்குளத்திலிருந்து காங்கேசன்துறை வரை ரயில் பாதையை அபிவிருத்தி செய் வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நிதி சேகரிப்பு நிகழ்வும் நேற்று தாண்டிக் குளம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. போக்குவ ரத்து அமைச்சர் டலஸ் அழ கப்பெரும 1000 ரூபா பெறு மதியான முதலாவது யாழ் – கொழும்பு ரயில் பயண சீட்டை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜ பக்ஷவுக்கு வழங்கினார்.

கொழும்பில் நேற்றுக் காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக மத வழிபாடுகள் நடைபெற்றன. அமைச்சர் டலஸ், லசந்த அழகியவன்ன, திஸ்ஸ கரலியத்த ஆகியோர் ரயிலிலேயே பயணம் செய்தனர்.

நேற்றுக்காலை சுமார் 12.00 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்தை அண்மித்த போது பாதையின் இரு மருங்கிலும் பாடசாலை மாணவர்கள் தேசியக் கொடியை அசைத்தவாறு ரயிலை வரவேற்றனர். முதல் தடவையாக ரயில் இப்பகுதிக்குள் வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

ரயில் வவுனியாவை சென்றடைந்த போது வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டிபிரேமலால் திஸாநாயக்க உட்பட பலரும் ரயில் பயணத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தாண்டிக்குளம் ரயில் நிலையத்தில் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களான டலஸ் அழகப் பெரும, லசந்த அழகியவன்ன, சுசந்த புஞ்சிநிலமே, திஸ்ஸ கரலியத்த, டக்ளஸ் தேவானந்தா, விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிறி உட்பட பலரும் கலந்து கொண்டனர். நேற்றைய நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கலந்துகொண்டார்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு – யாழ் பயணச் சீட்டொன்றையும் கிஷோர் எம். பிக்கு வழங்கினார்.

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பயணச் சீட்டு 1000 ரூபா பெறுமதியானதுடன் கெளரவ வகுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வவுனியா ரயில் நிலையத்தில் வைத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை வரவேற்ற போது கிஷோர் எம். பியும் வரவேற்றார். அங்கிருந்து தாண்டிக்குளம் வரையிலும் ரயிலிலேயே அமைச்சர்களுடன் சென்றனர்.

இதனையடுத்து ஓமந்தைக்கு வந்த அமைச்சர்கள் குழுவினர் ஓமந்தை ரயில் நிலையத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினர். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் ரயில் நிலையத்திற்கான அடிக்கல்லை நட்டதுடன், ரயில் நிலையத்திலேயே மனிதாபிமான கரும பீடம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

நேற்று மாலை 3.00 மணிக்கு யாழ்தேவி ரயில் மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டது. தேசியக் கொடிகளாலும் மலர் மாலைகளினாலும் யாழ் தேவி ரயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள், அமைச் சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ரயில்வே பாதுகா ப்பு பிரிவினர், ஊடகவியலாளர்கள், மட்டு, வவுனியா இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர்கள் உட்பட சுமார் 300 பேர் இந்த ரயிலில் பயணம் செய்தனர்.

நாடு முழுவதும் 48 நீதிமன்றங்கள் அமைக்க அரசு தீர்மானம்

நாடு முழுவதும் புதிதாக 48 நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது நாட்டில் 250 நீதிமன்றங்கள் உள்ள போதிலும், மேலதிகமாக இவை அமைக்கப்படவுள்ளன.

நீதிமன்ற அதிகார எல்லைகள் கண்காணிப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய, அமைக்கப்படும் 48 நீதிமன்றங்களில், 3 மேல் நீதிமன்றங்களும், 14 மாவட்ட நீதிமன்றங்களும், 18 நீதிவான் நீதிமன்றங்களும், 13 சுற்று நீதிமன்றங்களும் அடங்கும். வடக்கு மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவும் இந்நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலை, மாத்தளை, நுவரெலியாப் பகுதிகளில் இம் மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றது.  மேலும், புதிதாக அமைக்கப்படவுள்ள 14 மாவட்ட நீதிமன்ற பிரதேசங்களாவன, கெப்பிட்டிகொல்லாவ, கெக்கிராவை, ஹிங்குராங்கொடை, பத்தேகம, கொடபொல, தெல்தெனிய, தம்புள்ளை, வளபபண்ணை, மகியங்கனை, ருவன்வெல்ல, மூதூர், வாழைச்சேனை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களாகும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள 18 நீதிவான் நீதிமன்றங்களாவன; ஹிங்குராங்கொடை, உடுகம, தெய்யன்தர, கலகெதர, நாவுல, வளப்பண்ணை, ஆனமடுவு, பசறை, பிபிலை, சியமலாண்டுவ, மஹர, மீரிகம, ஜாஎல, பேருவலை, லாகுகல, தெஹியத்தகண்டிய, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களாகும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள 13 சுற்று நீதிமன்றங்களாவன;  பதவியா, பகமூண, தவளம், அகுணகொளபெலஸ்ஸ, கொத்மலை, ஹங்குராங்கேத்த, ஹல்துமுல்லை, தனமல்வில, அகலவத்தை, பானம, பதியத்தலாவை, குச்சவெளி மற்றும் வேலணை பிரதேசங்களாகும்.

இது தொடர்பான நீதிமன்ற அதிகார எல்லைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை பிரதம நீதியரசர் சரத்.என். சில்வாவிடம் கையளிக்கும் வைபவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதி நீதியமைச்சர் வி. புத்திரசிகாமணி, மேன்முறையீட்டு நீதிமன்றத் தகவல் சத்திய ஹெட்டிகே உட்பட நீதிபதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

D-Day தினத்தில் கூட்டணிப்படைகள் காட்டிய வீரத்திற்கு அமெரிக்க அதிபர் புகழாரம்

d-day.jpgபிரான் ஸின் வட பகுதியில் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் இதே தினம் கூட்டணிப் படைகள் காட்டிய வீரம் வரலாற்றின் போக்கையே மாற்றியது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

பிரான்ஸின் நோர்மாந்தி பிராந்தியத்தில் ஒரு சிறிய கடற்கரைப் பகுதியில் நடந்த யுத்தம், இருபதாம் நூற்றாண்டில் காணப்பட்டிருந்த முன்னேற்றங்களோடு பெருமளவில் தொடர்புடையது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கடற்கரைப் பகுதியில் கிடைத்த வெற்றி நாஜி ஜெர்மனி மீது கூட்டணிப் படைகள் வெற்றிகொள்ள வழிவகுத்திருந்தது.

D-Day  என்று கூறப்படுகின்ற தினத்தன்று மிக மோசமான மிக உக்கிரமான சண்டைகள் நடந்திருந்த ஒமாஹா கடற்கரையில் அமைந்துள்ள அமெரிக்க போர் வீரர்களின் கல்லறைகளிலிருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா D-Day  நினைவு தின சடங்கில் இதனைத் தெரிவித்துள்ளர்.

ஏ9 வீதியூடாக யாழ். குடாநாட்டுக்கு அதிகளவு பொருட்கள் எடுத்துவர அனுமதி

யாழ்ப்பாணத்துக்கு “ஏ9′ தரை வழிப்பாதையூடாக அதிக பொருட்கள் எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. தற்போது வராந்தம் 17 லொறிகளில் மட்டுமே பொருட்கள் எடுத்துவரப்படுகின்றன. இனி வாரத்தில் நாற்பது லொறிகளில் பொருட்களை எடுத்துவர அனுமதிக்கப்படவுள்ளது.  யாழ்ப்பாணத்துக்கு 17 லொறிகளில் பொருட்களை எடுத்துவர ஏற்பாடாகியுள்ளது. இதில் சைக்கில்கள், வாளிகள், உணவுப்பொருட்கள், கூட்டுறவுசங்கத்திற்கான பொருட்கள், மின்சார உபகரணங்கள் எடுத்து வரப்படுகின்றன. பொருட்களை எடுத்துவருபவர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தால் தாராளமாக விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன,