சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

அமெரிக்காவில் தொழில் உற்பத்தி குறைந்துள்ளது

_car2.jpgஅமெரிக்காவில் ஆலைத் தொழில் உற்பத்தி அளவு, கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத மிகவும் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வ அமெரிக்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவந்த உற்பத்தி கடந்த மார்ச் மாதத்தில் 1.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் உபயோகிப்பாளர்கள் செலுத்திய விலைகளும் தொடர்ந்து சரிவைக் கண்டன. கடந்த ஆண்டைவிட 4 விழுக்காடு அதிகமாக சரிவைக் கண்ட விலைகள், கடந்த 50 ஆண்டுகளில் காணப்படாத முதலாவது வருடாந்திர விலை வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.

அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் ஆழ்ந்த மந்த நிலையிலேயே இருக்கிறது என்றும் அதிபர் ஒபாமா குறிப்பிட்ட நம்பிக்கைச் சுடர் மிகவும் பரீட்சார்த்த நிலையிலேயே இருக்கிறது என்பதனையே இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

வடக்கில் காற்றுடன் கூடிய மழை; சூறாவளி இல்லையென வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு

lighting.jpgயாழ். குடாநாட்டுக்கு கிழக்கே சுமார் 1200 கிலோ மீற்றர் தொலைவில் சூறாவளியாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் தமிழக கரையோரங்களை நோக் கியே நகர்கிறது.

இதனால் அடுத்த 48 மணி நேரத்தின் பின்னர் வடக்கில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யுமே தவிர சூறாவளி தாக்கம் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

வங்கக் கடலில் தென்கிழக்கு திசையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் உட்பட தென்மா நிலங்களில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்றும் தமிழகத்திலுள்ள சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரித்துள்ளது.

இக்காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் ஏற்பட்டதைவிட வலுவடைந்து காணப்படுவதாகவும் கரையோரத்தை அணுகும்போது புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்போது இத்தாழமுக்கம் அந்தமான், நிக்கோபார் தீவுகள் அருகே நிலை கொண்டுள்ளதால் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது இலங்கையில் சகல பகுதிகளிலும் இரவு நேரங்களிலும் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. இக் காலங்களில் இலங்கையில் சூரியன் உச்சத்தில் இருப்பதால் வெப்ப நிலை அதிகரித்திருப்பதுடன் பூமியின் உஷ்ண நிலையும் அதிகரிக்கிறது.

இரவு நேரங்களில் காற்று வீசினாலும் உஷ்ணமடைந்த காற்றாகவே வீசுகிறது. கடற்பரப்பிலிருந்து தரைப் பகுதியை நோக்கி காற்று வீசினாலும் கடற்பகுதியும் உஷ்ண நிலையிலேயே காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓரிரு தினங்களுக்கு தொடரலாம் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

நில அதிர்வின் ஆரம்பம் அம்பாறை மாவட்டமாக இருக்கலாம்? – பேராசிரியர் கபில தஹநாயக்க தெரிவிப்பு

கிழக்கு, மலையகம், மற்றும் தென் பகுதிப் பிரதேசங்களில் நேற்றுக் காலை உணரப்பட்ட நில அதிர்வின் ஆரம்பம் அம்பாறை மாவட்டத்தின் நிலப்பகுதியாகவோ அல்லது அதனை அண்மித்த கடல் பகுதியாகவோ இருக்கலாம் என்று பேராதனைப் பல்கலைக் கழக பூகற்பவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹநாயக்கா நேற்றுத் தெரி வித்தார்.

நில அதிர்வு காரணமான பாதிப்புக்கள் அம்பாறை மாவட்டத்திலேயே அதிக ளவு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இவ்வதிர்வு இம் மாவட்டத்தின் நிலத்திலோ அல்லது இம் மாவட்டத்தை அண்டிய கடலிலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த அதிர்வு காரணமாக அம்பாறை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகளிலும், கட்டடங்க ளிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. இவ்வாறான பாதிப்புக்கள் இவ்வதிர்வு காரணமாக ஏனைய பிரதேசங்களில் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் அண்மைக்காலமாக இவ்வாறான நில அதிர்வுகளை பல பிரதேசங்களில் ஏற்கனவே உணர முடிந்தது. அதனால் நில அதிர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்வதும், அது குறித்து விசேட கவனம் செலுத்துவதும் மிக அவசியம் எனவும் இவ்வாறான சிறிய நில அதிர்வுகள் பாரிய பூகம்பத்தின் முன்னறிகுறியாகக்கூட இருக்க முடியும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பூகற்பவியல் பணியக உதவிப் பணிப்பாளர் டப்ளியு. கே. பிரேம், நேற்று காலை 8.50 மணி முதல் 9.00 மணி வரையான காலப் பகுதியில் சில வினாடிகள் நாட்டின் பல பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளன.

கிழக்கு, மலையகம் மற்றும் தென் பகுதி பிரதேசங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. இந்த அதிர்வு 4 ரிச்டர் அளவுக்குக் குறைவாகவே இடம் பெற்றிருக்கிறது. இது கிழக்கு மாகாணத்தின் நிலப் பகுதியிலோ அல்லது அம்மாகாணத்தை அண்டிய கடல் பகுதியிலோ தான் முதலில் தோற்றம் பெற்றிருக்க முடியும்.

கடற்கொள்ளையை எதிர்த்து உலகம் உறுதியுடன் செயல்பட சோமாலியா கோரிக்கை

somaliya-robbery.jpgஆப்பிரிக்க முனை வழியே பயணம் செய்யும் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை சம்பவங்களை எதிர்த்து அனைத்துலக சமூகம் உறுதியுடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சோமாலியாவின் பிரதிநிதி கேட்டுள்ளார்.

இந்த கடற்கொள்ளையர்களுக்கு நிதியுதவி வழங்கி, பின்னணியில் இருந்து இயக்கி வரும் சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்றும் கண்டிக்க வேண்டும் என்றும் சோமாலியத் தூதர் ஐக்கிய நாடுகள் சபைபில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் மட்டும் சோமாலிய எல்லையை அண்மித்த கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது கைப்பற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளன.

சோமாலியாவின் தென்புறத்தே, பிரான்ஸின் போர்க்கப்பல்களில் ஒன்று, கென்யாவின் கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் 11 பேரை கைப்பற்றியுள்ளதாகவும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பூமி அதிர்ச்சியால் பொத்துவில் பகுதியில் சிறு சேதங்கள்!

நாட்டில் இன்று காலை ஏற்பட்ட மிதமான பூமியதிர்ச்சியால் பொத்துவில் பானம பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் அகழ்வாராய்ச்சி மத்திய நிலையத்தின் சுனாமி மற்றும் பூமியதிர்ச்சி எச்சரிக்கை நிலையத்தின் விஞ்ஞானியான  எஸ்.ரீ. களுபண்டார தெரிவித்தார்.

இன்று காலை 8.50 அளவில் இந்தப் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகவும் இதன் அளவு சுமார் நான்கு ரிச்டர் எனவும் கூறினார். இரண்டு விநாடிகள் மட்டும் இது நீடித்ததால் இதன் பாதிப்பு வெகுவாகக் குறைந்தே எனவும் கூறினார். நில அதிர்வு மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்குப் பரவியுள்ளது.

கூடுதலான அதிர்வு பொத்துவில் பானம பகுதிகளில் உணரப்பட்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த வீடுகளின் ஜன்னல்களின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடலுக்கடியில் அன்றி தரைப்பகுதிலேயே இந்த பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதால் சுனாமி அனர்த்தம் ஏற்பட வழியில்லை என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.

உற்சவ தினங்களில் மூவர் மரணம்: 447 பேர் காயம்

தமிழ் சிங்கள புத்தாண்டு தினமான 13 ஆம் 14 ஆம் திகதிகளில் ஏற்பட்ட விபத்துக்களால் மூவர் உயிரிழந்ததுடன் 447 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அந்தப்பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றும் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரியவன்ச தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை 447 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 173 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மூவர் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அவர் கூறினார். அம்மூவரில் ஒருவர் மரத்திலிருந்து விழுந்தவர் என்றும் ஏனைய இருவரும் ரயிலுடன் மோதியவர்கள் எனவும் குறிப்பிட்டார்.

பட்டாசு கெளுத்தியதில் இம்முறை இருவரே காயமடைந்துள்ளனர். வீதி விபத்துக்கள் மூலம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது. அதன்படி 155 பேர் வீதி விபத்துக்களில் காயமடைந்துள்ளனர்.

மேலும் வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களால் 78 பேரும், மோதல்களால் 66 பேரும், ஏனைய விபத்துக்களால் 62 பேரும், விளையாட்டுகளின்போது 18 பேரும், தொழில்துறைகளின்போது 18 பேரும், தமது கவனயீனத்தால் 06 பேரும் காயமடைந்துள்ளனர் என டொக்டர் ஆரியவன்ச மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இன்று காலை சிறிய நில நடுக்கம்

சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கையின் பல பகுதிகளிலும் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வினை உணரக் கூடியதாக இருந்தது.

இந்த நில அதிர்வானது பண்டாரவளை, அட்டாம்பிட்டிய, நுவரெலியா, பொத்துவில், அம்பாறை, கல்முனை, கண்டி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் தொடர்பான உத்தியோகபூர்வமான செய்திகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இது குறித்த மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, இலங்கை நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் மே 13 வரை கருத்து கணிப்புக்கு தடை

india-election.jpgஇன்று மாலை 3 மணி முதல் மே 13ம் தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடவும், ஒளிபரப்பவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் மே 13ம் தேதி வரை ஒளிபரப்பவோ, பிரசுரிக்கப்படவோ கூடாது.

இதுதொடர்பாக பிப்ரவரி 17ம் தேதியே உத்தரவிடப்பட்டு விட்டது. ஜனவரி 19ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் கடைசிக் கட்டத் தேர்தல் முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் இடைநிறுத்தத்தை புலிகள் ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தத்துக்கு வழிகோல இந்தியா உதவும். – பி.சிதம்பரம்

chidambaram1.jpgஇலங்கை அரசு அறிவித்துள்ள தாக்குதல் நிறுத்தத்தை விடுத லைப்புலிகள் முறைப்படி அனு சரித்துச் செயற்பட்டால், போர் நிறுத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர அது உதவும் என்று இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தமை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்று கொண்டுவரப் படவேண்டும் என்று இந்தியா இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.

போர் நிறுத்தம் இரு தரப்புகளும் சம்மதித்தாலேயே நடைமுறைப்படுத்த முடியும் விடுதலைப்  புலிகளும் போர் நிறுத்த அறிவிப்பை உடன் வெளியிடவேண்டும். தாக்குதல் இடைநிறுத்தம் இரு நாள்களில் முடிவடையாமல் தொடரவேண்டும் என்பதனையே சமாதானத்தை விரும்பும் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.

தாக்குதல் இடைநிறுத்தம் சிறிய அளவிலாளன செயற்பாடுதான். ஆனால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். நாம் தொடர்ந்து வழங்கிய அழுத்தத்தினாலேயே இலங்கை அரசு இரண்டு நாள்களும் தாக்குதல் இடைநிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் விடுதலைப்புலிகளும் இந்தியாவின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டால், நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர நாம் எடுக்கும் முயற்சி பலன் தரும்  என்றார் அமைச்சர் சிதம்பரம். 

உள்ளூராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்ட அங்கீகாரம் குறித்து கி.மா.சபை வியாழனன்று முடிவெடுக்கும் : ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpg“மத்திய அரசு கொண்டுவரப்படவுள்ள உள்ளூராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்டத்திற்கான அங்கீகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை கூடி முடிவு எடுக்கும்” என சபையின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இத்திருத்தச் சட்டமூலத்திற்கு சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் வேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக இச்சட்ட மூலம் முன் வைக்கப்படுகின்றது சபையின் எதிர்க்கட்சிகள் இச்சட்ட மூலத்தை எதிர்ப்பது அல்லது நிராகரிப்பது என ஏற்கனவே அறிவித்துள்ளன.

ஆளும் கட்சியின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “மத்திய அரசாங்கம் கொண்டு வரப்பட்டவுள்ள உத்தேச சட்ட மூலம் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

இதன் படி சபை முதல்வர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இதனை சபையில் சமர்ப்பிக்கவிருக்கின்றார். உத்தேச சட்டத்தைப் பொறுத்த வரை வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிப்பதாக தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையே அச்சம் நிலவுகின்றது. மாகாண சபைக்குரிய அதிகாரப் பரவலாக்கத்திலும் சில பிரச்சினைகள் உள்ளன.

அதே நேரம் சில சாதகமான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாகத் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இதனை ஆதரிப்பதா, இல்லையா என்பது குறித்து இது வரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை. எதிர்வரும் வியாழக்கிழமை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சி உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்