உள்ளூராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்ட அங்கீகாரம் குறித்து கி.மா.சபை வியாழனன்று முடிவெடுக்கும் : ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpg“மத்திய அரசு கொண்டுவரப்படவுள்ள உள்ளூராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்டத்திற்கான அங்கீகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை கூடி முடிவு எடுக்கும்” என சபையின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இத்திருத்தச் சட்டமூலத்திற்கு சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் வேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக இச்சட்ட மூலம் முன் வைக்கப்படுகின்றது சபையின் எதிர்க்கட்சிகள் இச்சட்ட மூலத்தை எதிர்ப்பது அல்லது நிராகரிப்பது என ஏற்கனவே அறிவித்துள்ளன.

ஆளும் கட்சியின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “மத்திய அரசாங்கம் கொண்டு வரப்பட்டவுள்ள உத்தேச சட்ட மூலம் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

இதன் படி சபை முதல்வர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இதனை சபையில் சமர்ப்பிக்கவிருக்கின்றார். உத்தேச சட்டத்தைப் பொறுத்த வரை வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிப்பதாக தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையே அச்சம் நிலவுகின்றது. மாகாண சபைக்குரிய அதிகாரப் பரவலாக்கத்திலும் சில பிரச்சினைகள் உள்ளன.

அதே நேரம் சில சாதகமான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாகத் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இதனை ஆதரிப்பதா, இல்லையா என்பது குறித்து இது வரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை. எதிர்வரும் வியாழக்கிழமை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சி உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *