மலையகம்

மலையகம்

தெள்ளு கடித்ததால் ஹட்டன் மகளிர் கல்லூரி பூட்டு

மாணவிகள் பலரை தெள்ளுப் பூச்சிகள் கடித்ததால், ஹட்டன் புனித கப்ரியல் மகளிர் வித்தியாலயம் நேற் றுக் காலை 10 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை பாடசாலையின் தமிழ்ப் பிரிவின் சுமார் 50 மாணவிகள் தெள்ளுப் பூச்சிக்கடிக்கு உள்ளாகியமை கண்டறியப்ப ட்டு காலை 10 மணிக்கு உடனடியாக பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஹட்டன்-டிக்கோயா சுகாதாரப் பரிசோதகர்கள் விரைந்து வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், பாடசாலை திங்கள் வரை மூடப்பட்டது.

தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான இரு பிரேரணைகள் மீதான விவாதம் இன்று

parliament.jpgமத்திய மாகாண சபைக்கு உட்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற இரண்டு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாணசபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை இந்தச்சபையின் விவாதத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

இன்று தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச சம்பளமே கிடைத்து வருகின்றது. இதனால், தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்ந்து பல்வேறுவகையில் ஏனைய சமூகங்களை விட பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. இந்த நாட்டுக்கு பொருளாதார வளத்தினைப் பெற்றுத்தருகின்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

ஆகவே தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டுமென்பதை மத்திய மாகாணசபையின் ஊடாக அழுத்தமொன்றைக் கொண்டு வருவதற்குத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக மத்திய மாகாணசபையில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன், அரசாங்கத்தின் எந்தவொரு வறுமை நிவாரணமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. உலக வங்கி தனது அறிக்கையொன்றில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் 32 வீதமான வறுமையுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அரசாங்க வரவுசெலவுத்திட்டப் பிரேரணையிலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்குச் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படாதுள்ளமை பாரியதொரு அநீதியாகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களும் சமுர்த்தி நிவாரணத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவதற்கு மத்திய மாகாணசபையின் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொண்டு வரும் வகையில் மேலும் ஒரு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன். ஆகவே, இந்தப் பிரேரணைகளை மத்திய மாகாணசபையில் நிறைவேற்றுவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் முன்வரவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் இடி, மின்னலுடன் மழை தெலைபேசி, மின்சார உபகரணங்கள் சேதம்

rain.jpgமலை யகத்தில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இடிமின்னலுடன் கடும் மழை பெய்து வருவதோடு பலத்த காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் மின்சார உபரகணங்கள், தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டிகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது மின்சார உபகரணங்கள் மற்றும் தொலைபேசி முதலானவற்றைப் பயன்படுத்துவதில் கவனம் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடை மழைபெய்து வருவதால் வரட்சியின் போது வற்றியிருந்த மவுசாக்கலை, காசல் ரீ ,கெனியன், நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திர நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து வருகின்றது. அத்தோடு புதுவெள்ளம் பாய்ந்து வருவதால் நீர்த்தேக்கங்களின் கரையோரத்தில் மீன் பிடிப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றது.

அரச படையினர் வென்றது புலிகளையே அன்றி தமிழ் மக்களையல்ல என்பதை உணர்த்தும் வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்

அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் தெரிவித்தார்.

கட்டபுலாத் தோட்டக் கீழ்ப்பிரிவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்கி ஒடுக்கி விட்டதாக அமைச்சர்கள் மார்தட்டி மகிழ்ச்சியில் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைவர்களையும் மிஞ்சும் வகையில் அதிகாரிகள் எதிர்க்கட்சியினர் மீது குற்றஞ் சுமத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.  ஏதோ ஒரு வழியில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. ஆனால் அந்த வெற்றியை காரணங்காட்டி காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பது விவேகமற்ற செயல். அத்துடன் தூர நோக்கின்றி கேளிக்கைகளை முன்னெடுப்பது பாமர மக்கள் மத்தியில் நச்சு விதைகளை விதைப்பது போன்றது. இது ஆரோக்கியமானதாக அமையாது. மாறாகப் பாரதூரமான விளைவுகளுக்கே வழிவகுக்கும்.

அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இந்த வேளையில் இந்நாட்டில் இன மோதல்கள், பாரிய யுத்தம், ஆயுதக் கலாசாரம் என்பன ஏற்பட ஆணிவேராக அமைந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப உடனடி அரசியல் தீர்வு காண வேண்டியது தலையாய கடமை.

அந்தக் கடமையிலிருந்து தவறி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் வகையில் செயற்படின் முன்னொருபோதும் ஏற்படாத அளவில் பாரிய இனப்பிரச்சினை வெடித்து இந்நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதியையும் கூடப் பறிகொடுக்க நேரிடும்.

இன்று சாதாரண தமிழ், முஸ்லிம் மக்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போதும் அன்றாட அலுவல்களுக்காக வெளியில் நடமாடும் போதும் மானசீகமாக எதிர்நோக்குகின்ற தொல்லைகளும் துயர்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்நாட்டில் விதைத்த இனத்துவேச விதைகளினையே அண்மைக் காலத்தில் அறுவடை செய்யப்பட்டது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் நெஞ்சில் நிலைநிறுத்தி மீட்டிப் பார்த்து தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் கௌரவமான அரசியல் தீர்வைக் காணவேண்டும்.

அத்துடன், பேரினவாதிகள் சந்தர்ப்பத்தைச் சாதகமாகக் கொண்டு இனவெறியைத் தூண்டும் வ?யில் தமிழ் மக்களை அவமதித்து அவதூறு செய்கின்ற அருவருக்கத்தக்க அனைத்துச் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

“இரத்துச் செய்யப்பட்ட பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிக்க பிரதிக் கல்வியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

teacher.jpgபத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் குறிப்பிட்ட மூன்று பாடநெறிகள் இரத்துச் செய்யப்பட்டதனால் இவ்வாண்டில் இக்கல்லூரியில் 150 ஆக இருந்த பெருந்தோட்டத்துறை சார்ந்த ஆசிரிய பயிலுநர்கள் எண்ணிக்கை 47 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை பெருந்தோட்ட ஆசிரிய பயிலுநர்களைப் பாதிக்கும் செயலென முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார், பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தனுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கல்லூரியில் தமிழ், ஆரம்பக்கல்வி, சமூகக்கல்வி போன்ற பாடநெறிகளை இவ்வாண்டு முதல் இரத்துச் செய்யத் தாங்களே காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இக்கல்லூரி பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே உருவாக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஏனைய சமூகத்தவர்களையும் இக்கல்லூரியில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது. அனுமதி பெற்றவர்களின் உள்ளக பயிற்சிகளைப் பெறும் வகையில் பத்தனைப் பகுதியின் ஐந்து பாடசாலைகள் அபிவிருத்தியும் செய்யப்பட்டன.

எமது சகோதர சமூகமான முஸ்லிம் சமூகம் இன்றைய நிலையில் கல்வியில் உயர்வதற்கு அமைச்சராக இருந்த அமரர் பதியூதீன் முகம்மத்தே காரணமாக இருந்திருக்கின்றார். அவரது தொலைநோக்குப் பார்வையின் பிரகாரம் தரம் 8 இல் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன். எமது நாட்டின் தேசிய கல்லூரிகளில் இக்கல்லூரி மாத்திரமே அதிகளவிலான எமது சமூகம் சார்ந்த ஆசிரியர் பயிலுனர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இதன் பிரகாரம் ஆண்டுதோறும் இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும் 200 பயிலுநர் ஆசிரியர்களில் 150 பேர் பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்திய வம்சாவளியினர். இக்கல்லூரியின் ஆரம்பந்முதலே தமிழ்மொழி, ஆரம்பக்கல்வி, சமூகக்கல்வி, கணிதம், விஞ்ஞானம், நாடகம், சங்கீதம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடநெறிகள் கடந்த வருடம் வரை பயிற்றப்பட்டு வந்தன.

க.பொ.த. உயர்தரத்தில் கலை, வர்த்தகப்பிரிவுகளில் அதிகமான பெருந்தோட்டத்துறை சார்ந்த மாணவர்கள் சித்தியடைவதால் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறாமல் கல்வியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் மூன்று ஆண்டு பயிற்சியின் பின்னர் டிப்ளோமாப் பட்டம் பெற்று ஆசிரியர்களாக வெளியேறுகின்றனர். மலையகத்தில் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் உயர்தரம் கற்கப் போதிய பாடசாலைகள் இல்லாமையினால், எமது மாணவ சமூகத்தினர் கலை மற்றும் வர்த்தகத்துறை பாடநெறிகளில் விரும்பியோ விரும்பாமலோ தொடர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இதன் பிரதான காரணம் கணிதம் , விஞ்ஞானம் போன்ற பாடநெறிகளில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு மலையகப் பாடசாலைகளில் இருந்து 150 பயிலுநர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதேயாகும். இந்நிலையில் 103 பயிலுநர்களுக்கான வெற்றிடங்களை ஏனைய சமூகத்தைச் சார்ந்தவர்களால் நிரப்பப்படுகிறது. ஆரம்பக்கல்வி, தமிழ்மொழி, சமூகக்கல்வி போன்ற பாடநெறிகளுக்கு இனிமேல் புதிதாக ஆசிரியர்கள் தேவையில்லையென்ற நிலைப்பாடே இம்முடிவிற்கு காரணமென்று கருதப்படுகின்றது.

போதியளவு பயிலுநர்களை கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடநெறிகளில் உள்வாங்க தொலைநோக்குப் பார்வையோடு அதனை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் வருடத்திற்கு 150 கணித, விஞ்ஞானப் பயிலுநர்களை முழுமையாக எப்போது தயார்ப்படுத்தப் போகின்றோமென்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. எமக்குக் கிடைத்திருக்கும் இவ் அரியவாய்ப்பினை ஏனையவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் நிலையினை நாமே ஏற்படுத்தியிருக்கின்றோம்.

நிறுத்தப்பட்டிருக்கும் பாட நெறிகளில் போதியளவு ஆசிரியர்கள் மலையகப் பாடசாலைகளில் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில், குறிப்பிட்ட பாடநெறிகளை இரத்துச் செய்வதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆகவே, தாங்கள் இதுவிடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இரத்துச் செய்யப்பட்ட பாடநெறிகளை மீளவும் ஆரம்பிப்பதுடன், எமது சமூகத்திற்கென்று ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வியியல் கல்லூரியையாவது பாதுகாத்துத் தரும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மஸ்கெலியா டவுன்சைட் தோட்ட பகுதியில் மண் சரிவு அபாயம்; எச்சரிக்கை

மஸ்கெலியா, மோகினி நீர் வீழ்ச்சி பகுதியிலும், ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டப் பிரதேசத்திலும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான முன்னறிகுறிகள் தோற்றம் பெற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன நேற்று தெரிவித்தார்.

இதே நேரம் காலநிலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் காரணமாக அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய கூடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பி. டி. ஆனந்த பெரேரா கூறினார். நுவரெலியா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மண் சரிவு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகவும் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நல்ல தண்ணீர் மோகினி நீர் வீழ்ச்சி பிரதேசத்திலுள்ள வீதியில் திடீரென மண் மேடுகள் நேற்று முன்தினம் விழுந்துள்ளன. இது பெரிய மண் சரிவுக்கான முன்னறி குறியாகக் கூட இருக்கலாம். அதனால் இப்பகுதி ஊடாக வாகனங்கள் பயணிக்கும் போது வேகமாகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிவிப்பை இப்பிரதேசத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஹட்டன் பொலிஸாருக்கும், அம்பகமுவ பிரதேச செயலாளருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டத்தின் நிலப்பகுதியிலும் வெடிப்பு ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை ஆரம்பித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

“அரச பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை; குற்றச்சாட்டு’

sri-lanka-upcountry.jpg அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமறிக்கப்படுவதில்லை. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்விலை லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்த பேசுகையில்;

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த மார்ச் மாத இறுதியோடு கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதால் சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுலுக்கு வருவதாகவிருக்க வேண்டும் என்பதையும் முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்கள் முறையாகப் பராமறிக்கப்படாமல் சீரழிந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் மிகவும் நல்ல முறையில் இயங்கிவந்த அநேகமான தோட்டங்கள் தற்போது காடுகளாகியுள்ளன. முறையான பராமறிப்பின்றிக் காணப்படுகிறது. இத்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து மாதாமாதம் அறவிடப்படும் சேமலாப நிதியைக் கூட நிர்வாகங்கள் மத்திய வங்கிக்கு அனுப்புவதில்லை. சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்றவற்றை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கங்கள் தொடர்ந்தும் தொழிற்காரியாலயங்களின் மூலம் நீதிமன்றங்களையே நடவேண்டியுள்ளது.

இதன் காரணமாகத் தொழிலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகளை காலக்கிரமத்தில் பெற்றுக் கொள்வதில் வீண் தாமததிற்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடாது. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்து பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தோட்டங்களை அரச நிறுவனங்களால் முறையாக நடத்தமுடியாதென்றால், இவற்றை முறையாக நடத்தக்கூடிய சிறந்த தனியார் கம்பனிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகங்களை அவர்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது உசிதமானதாகும்.

உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை நடத்த இது உகந்த தருணமல்ல என்று முதலாளிமார் சம்மேனமும் தொழில் அமைச்சும் அபிப்பிராயம் தெரிவித்துள்ள இந்த சந்தர்ப்பத்திலேயே நாம் சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம். பேச்சுவார்த்தையின் மூலம் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே முயற்சித்து வருகிறோம். சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு 2009 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுல் நடத்தப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியிருக்கிறோம் என்றார்.

சம்பள மீளாய்வு பேச்சுவார்த்தை குறித்து தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் – பிரகாஷ் கணேசன் கூறுகிறார்

sri-lanka-upcountry.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிற தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டொப்பந்தம் காலாவதியாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் இதுவரை புதிய கூட்டொப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் புதிய கூட்டொப்பந்தம் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த விபரங்களைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தாது இரகசியம் காத்து வருகின்றன. இது கூட்டொப்பந்தத்தில் பங்குபற்றாத தொழிற்சங்கங்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் குறைந்த வருமானத்தினைப் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளன. தமது நாளாந்த வாழ்க்கையைக்கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகளுக்குத் தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கென அரசாங்கத்தின் எந்தவொரு நிவாரணத் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைப்பதாகவில்லை. எனவே, தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் தமது உழைப்பையே நம்பி வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தினையே தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர்.

எனவே இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வொன்று தற்போது உடனடியாகத் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெறுமனே காலந்தாமதிக்காமல் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றார்.

சாமிமலையில் மண்சரிவு – குடியிருப்புகள் சேதம்

earth-slip.jpgதற் போதைய மழையுடனான காலநிலைமாற்றத்தினால் சாமிமலை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மண் சரிவினால் இரண்டு தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. மின்சிங்டே பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த மண்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கலரவில பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கி காரணமாக 42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச் சம்பவங்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பாதிக்கப்பட்டோர் கலரவில தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நுவரெலியாவில் மழை காரணமாக 28 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கேல்ட்டன் பிரதேசத்தில் தாழ் நிலப்பரப்பில் காணப்பட்ட 6 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அவற்றிலிருந்த 19 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வீடுகள் மண்சரிவினால் சேதமடைந்தன. அங்கிருந்த 20 பேர் மாற்றிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அந்தந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடசாலைகளுக்கு வேற்று மொழியில் சுற்று நிருபங்கள் அனுப்பப்படுவதால் சிரமம்

கல்வி அமைச்சு மற்றும் சில மாகாணக் கல்வித் திணைக்களங்கள், வலயக் கல்விக் காரியங்களிலிருந்து தமிழ்ப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சுற்று நிருபங்கள் மற்றும் கடிதங்கள் தனிச் சிங்களமொழிமூலம் மட்டுமே அனுப்பிவைக்கப்படுகின்றன. இதனால், மொழி புரியாத அதிபர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, பாடசாலையின் விபரம் மற்றும் கடமையிலுள்ள ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள் ஏனைய தரவுகள் தொடர்பாக கேட்டு அனுப்பப்படும் படிவங்களும் சிங்கள மொழியில் காணப்படுவதுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் படிவங்களைப் பூர்த்திசெய்து அனுப்பி வைக்கப்படுகின்ற போதிலும் எவ்வித பயனும் கிடைப்பதில்லையென சில அதிபர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.  இதேவேளை, கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைப் பிரிவினால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களும் மற்றும் விபரங்களைக் கேட்டு அனுப்பப்படும் படிவங்களும் ஆங்கிலமொழியிலேயே அனுப்பப்படுகின்றன.

கடந்த 16 ஆம் திகதி பெருந்தோட்டப் பாடசாலைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு இரத்தினபுரி, பரக்கடுவ மெனேரிப்பிட்டிய கல்வி வள நிலையத்தில் நடைபெற்ற பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களுக்கான முகாமைத்துவ செயலமர்வு பற்றி அனுப்பப்பட்டிருந்த கடிதம் கூட ஆங்கில மொழியிலேயே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில வலயக் காரியாலயங்களில் பாடசாலை மாணவர்கள் பாடசாலையைவிட்டு விலகும் போது வழங்கப்படும் விடுகைப் பத்திரம் கூட தனிச்சிங்கள மொழியிலேயே வழங்கப்படுகின்றது.

எனவே, தமிழ்ப் பாடசாலைகளில் கடமைபுரியும் அதிபர்கள் தம் கடமைகளை இலகுவாக மேற்கொள்ள தமிழ்மொழி மூலமே கடிதங்களும் சுற்றுநிருபமும் அனுப்பி வைக்கப்படல் வேண்டுமென அதிபர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.