அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

எதிர்கால அரசியல் வியூகம் எதிர்க்கட்சி கூட்டமைப்பு ஆராய்வு

ஐக்கிய தேசியக் கட்சி மேலக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஆகியவற்றைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான கேம்ப்ரிட்ஜ் றெரஸிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி., முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மக்கள சமரவீர ஆகியோரே இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.  இதேநேரம், இந்த கூட்டமைப்புக்கான இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கென ஐ.தே.க. அரசியல் குழுவினரால் நியமிக்கப்பட்ட அக் கட்சியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

இக்குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை அரசியல் குழுவினால் ஆராய்ந்து அங்கீகரிக்கப்பட்டு அதன் பின்னர் ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்திடம் அனுமதி பெறப்படுமென அக் கட்சியின் தவிசாளரான காமினி ஜயவிக்ரம பெரேரா கூறினார்.

இதேநேரம், இந்த அறிக்கையூடாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் பொது இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கையே கூட்டமைப்பின் கொள்கை அறிக்கையாக இருக்குமென மனோகணேசன் எம்.பி.கூறினார்.

வன்னி முகாம்களிலுள்ள மாணவர்க்கு விசேட வகுப்பு

schoolgirls-sri-lanka.jpgவன்னி இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மாணவர்களின் நலன்கருதி விசேட வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மற்றும் உயர்தர வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விசேட உபகார வகுப்புகளை நடத்துவது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவுள்ளதாகவும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிப்புற்ற மாணவர்களை அடையாளப்படுத்தி ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் பிரதிக்கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தெரிவித்தார். மேலும், அம் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்யவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

இந்த உபகார வகுப்புகளை நடத்துவது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரபல தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் உதவியைப் பெற்று மேலதிகமான வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் லால் நோனீஸ் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் மேற்படி வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எகிப்தில் இந்தியப் பிரதமரை ஜனாதிபதி சந்திப்பார்

he_president.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம் மாத நடுப்பகுதியில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவிருப்பதாக அறியவருகிறது.  எகிப்தில் இந்த சந்திப்பு நடைபெறவிருக்கிறது. எகிப்தின் சார்ம் எல்ஷெய்க் நகரத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் அணிசேரா அமைய நாடுகளின் 15 ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவரும் சந்தர்ப்பத்திலேயே இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாநிதி மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாக இந்திய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த அவரை சந்திக்கும் முதலாவது சந்திப்பாக இது அமையும்.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் அணிசேரா இயக்க நாடுகளின் 15 ஆவது உச்சிமாநாடு நிகழ்வுகள் முதல் 4 நாட்களுக்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்கள் நடைபெறவுள்ளன இறுதி இரு தினங்களான 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டுத் தலைவர்களின் மாநாடு நடைபெறவிருக்கிறது.

இதில் கலந்துகொள்வதற்கென ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம அடங்கலான உயர்மட்ட தூதுக் குழு எகிப்து செல்லவிருக்கிறது.

இந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ள வரும் இந்தியப்பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடனான இருதரப்பு சந்திப்புக்கு இலங்கை சார்பில் அனுமதிகோரப்பட்டிருப்பதாகவும் அதற்கான அனுமதி கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் யுத்தத்தின் பின்னரான, அரசாங்கத்தின் தற்போதைய மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தீர்வு குறித்த செயற்பாடுகள் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடனான இந்த நேரடி சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விளக்கமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இநேநேரம், அணிசேரா இயக்க நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான இருதரப்பு சந்திப்புகளுக்கும் இலங்கை அனுமதி கோரியிருப்பதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்

நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக மிலிந்த மொரகொட நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இச் சத்தியப்பிரமாண நிகழ்¡வு அலரிமாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்றதுடன், தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நந்தன குணதிலக்க, பியசிறி விஜேநாயக்க ஆகியோரும் நேற்று அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி; நந்தன குணதிலக்க எம். பி. சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா பயணத்துறை ஊக்குவிப்பு (அமைச்சரவை அந்தஸ்துள்ள) அமைச்சராகவும் பியசிறி விஜேநாயக்க எம். பி. கலாசார, மரபுரிமை (அமைச்சரவை அந்தஸ்தற்ற) அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வு நேற்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

ஏற்கனவே, சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த மிலிந்த மொரகொட எம். பி. நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த அமரசிறிதொடங்கொடவின் மறைவுக்குப் பின்னரான வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மிலிந்த மொரகொட அப்பதவியைப் பொறுப்பேற்றபின் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே நந்தன குணதிலக்க எம். பி. சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுற்றுலாத்துறை பிரதியமைச்சராகப் பதவி வகித்த பைசர் முஸ்தபா எம். பி. நேற்று சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தேசியப் பிரச்சினை சமாதான ரீதியில் தீர்த்து வைக்கப்படும் – இந்தோனேஷியாவில் பசில் ராஜபக்ஷ

basil.jpgஇலங் கையின் தேசிய பிரச்சினை சமாதான ரீதியில் தீர்த்து வைக்கப்படுமென ஆசே சென்றிருக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஆசேயில் சமாதானம் எட்டப்பட்டமை தொடர்பாக நேரடியான விடயங்களை அறிந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தற்பொழுது இந்தோனேஷியா சென்றுள்ளார்.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேஷியாவின் ஆசே மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான பணிகளுக்காக ஆசே போராளிகளுக்கும், இந்தோனேஷிய அரசாங்கத்துக்குமிடையில் நடைபெற்றுவந்த மோதல்கள் முடிவுக்கு வந்ததுடன், அங்கு சமாதானம் ஏற்படுத்தப்பட்டது.  ஆசேக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு இலங்கை இனப்பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டுமென அரசியல் ஆர்வலர்களும், பல்வேறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தன.

எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களிலும், பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டிவந்த இலங்கை அரசாங்கம் ஆசேயின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்குச் செல்ல விரும்பவில்லை.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இராணுவ ரீதியாக வெற்றிபெற்றிருக்கும் இலங்கை அரசாங்கம், ஆசேயில் ஏற்பட்ட சமாதான முயற்சிகளின் அனுபவத்தை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியுள்ளது.

இது தொடர்பில் இந்தோனேஷிய அரசியல் தலைவர்களுடன் பசில் ராஜபக்ஷ ஆலோசனை நடத்தியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருர் பசில் ராஜபக்ஷ, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஹசன் விராஜுடாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். 29ம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருவரும் இலங்கையின் நிலை தொடர்பாகவும் இந்தோனேசியாவில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் தூதுவர் நந்தா மல்லவராய்ச்சியும், கலந்துகொண்டார்.

இலங்கையில் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட வடக்கில் எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள் தொடர்பாக பசில் ராஜபக்ஷ எம். பி. இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சிரிடம் எடுத்துக் கூறினார். இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும் இருவரும் பேசும் போது; இருநாட்டு மக்களின் நன்மை கருதிய உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டுமென கருத்துகள் பரிமாறப்பட்டன.

பயங்கரவாதத்தை இலங்கையில் முற்றாக முறியடித்து நாட்டில் ஸ்திரத் தனிமையை ஏற்படுத்தியமைக்காக பசில் ராஜபக்ஷவுக்கும், இலங்கை அரசுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார் இந்தோனேஷிய அமைச்சர்.

ஆசே சமாதான முன்னெடுப்பு வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்துள்ளது. ஆசேயின் சமாதான மாதிரியை அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக பசில் ராஜபக்ஷ கூறினார்.  ஆசே சமாதான ஒருமைப்பாட்டு திட்டம், பொருளாதார அதிகாரங்கள், கைதிகளுக்கான பொதுமன்னிப்பு, மற்றும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் அறிய ஆர்வமாக உள்ளதாகவும் பசில் எம். பி. சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஆசே தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரும்பு தொழிற்சாலையொன்றையும் பசில் எம். பி. பார்வையிட்டார். இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர், பசில் எம். பி. க்கு இராப் போசன விருந்தளித்துக் கெளரவித்தார்.

ஈரானில் கைதான ஏழு இலங்கையருக்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல்

ஈரானில் வைத்துக் கைதான ஏழு இலங்கைப் பிரஜைகளையும் விடுதலை செய்வதற்கு பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

இவர்களுக்கு எதிராக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஈரான் நாட்டு கடல் எல்லைக்கு சட்ட விரோதமாக நுழைந்த டுபாய் நாட்டுக் கப்பல் கடந்த வாரம் ஈரான் படையினரால் கைப்பற்றப்பட்டது. கப்பல் சிப்பந்திகளுக்கு எதிராக சட்ட விரோதமாக எரிபொருள் போக்குவரத்து செய்தது மற்றும் சட்டவிரோதமாக ஈரான் கடல் எல்லைக்குள் நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடல் எல்லைக்கு சட்ட விரோதமாக நுழைந்தது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு 50 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வாரம் விசாரிக்கப்பட உள்ளது. இவர்களை விடுதலை செய்வது குறித்து ஈரான் தூதரகத்தினூடாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதோடு டுபாய் நாட்டு தூதரகத்தினூடாகவும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது டுபாய் நாட்டு கப்பல் கம்பனியுடனும் இவர்களை விடுவிப்பது தொடர்பாக பேசி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

யாழ். வவுனியா தேர்தல்கள் – சகல முன்னோடி நடவடிக்கைகளும் தங்கு தடையின்றி முன்னெடுப்பு

images-elc.jpgயாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான சகல முன்னோடி நடவடிக்கைகளும் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை; வாக்குப் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் வாக்காளர் அட்டைகள் விநியோக நடவக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கருணாநிதி தெரிவிக்கையில்,

வவுனியா நகர சபைத் தேர்தல் தொடர்பான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 500 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 7 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்புச் சான்றுப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வும் 8 ஆம் திகதி சிரேஷ்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வும் 9 ஆம் திகதி சிரேஷ்ட கணக்காளர்கள் உள்ளிட்ட இதர உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கென 1,000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. அத்துடன் வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள் எவ்வித தங்கு தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் தொகை 235ஆக உயர்வு

மாத்தளை மாவட்டத்தில் எலி நோயினால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது என மாத்தளை சுகாதார சேவைப் பணிப்பாளர் அநுர திஸாநாயக தெரிவிக்கி ன்றார். கடந்த வாரம் 223ஆக இருந்த இந்நோயாளிகளின் எண்ணிக்கை இவ் வாரம் 235ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் இதுவரை எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இருவர் மரண மடைந்துள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை, யட்டவத்த, முவன்தெனிய, பண்டாரபொல, மஹவெல, மடவள உல்பத்த தம்புள்ள ஆகிய பகுதிகளிலே இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது எனவும் பணிப்பாளர் அநுர திஸாநாயக மேலும் தெரிவித்தார்.

சிறுபோகத்தில் 70,000 மெ.தொ. நெல் கொள்வனவு -அரசு முடிவு

anura_priyadarshana_yapa_1806_press.jpgசிறுபோ கத்தின் போது 70 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 28 ரூபா முதல் 30 ரூபா வரையான நிர்ணய விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (2) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இங்கு அவர் மேலும் கூறியதாவது, இதன்படி உர நிவாரணம் பெற்ற சகல விவசாயிகளும் 10 வீதமான நெல்லை அரசாங்கத்திற்கு நிர்ணய விலையில் வழங்க வேண்டும்.

நெல் கொள்வனவு செய்ய 230 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய இடங்களிலிருந்தும், கிழக்கு, தென்மற்றும் வடமேல் மாகாணங்களில் இருந்தும் இம்முறை நெல் கொள்வனவு செய்யப்படும்.கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் மலைகளில் காடு வளர்க்கும் திட்டத்துக்கம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி பெருந்தோட்டப் பகுதியில் இடங்கள் அரசுக்கு பொறுப்பேற்கப்படும்.

“புலிகளின் குரல்” வானொலி ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பம்

“புலிகளின் குரல்” வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் யூலை 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1990ம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட “புலிகளின் குரல்” வானொலிச் சேவை உலக வரலாற்றில் எந்தவொரு வானொலியும் சந்திக்காத இன்னல்களைச் சந்தித்த போதிலும் துவண்டு விடாது நிமிர்ந்து நின்றது.

“புலிகளின் குரல்” வானொலியை இலக்கு வைத்து 23 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த போதிலும் தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் அந்த வானொலிச் சேவை மீண்டும் வானலைகளில் தவழ்ந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்னியில் மிக மோசமானதாக்குதல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போதும், தனது ஒலிபரப்பை தொடர்ந்து நடத்தி வந்த இந்த வானொலி கடந்த மே மாதம் 16ம் திகதி  தனது   ஒலிபரப்பையும் நிறுத்திக்கொண்டது. தற்பொழுது இணையத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சேவை, பின்னர் செய்கோள் ஒலிபரப்பாக விரிவாக்கம் பெறும் என, “புலிகளின் குரல்” வானொலி நிலைய கலையகத்தினர் தெரிவித்துள்ளனர்.