வன்னி இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மாணவர்களின் நலன்கருதி விசேட வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மற்றும் உயர்தர வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விசேட உபகார வகுப்புகளை நடத்துவது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவுள்ளதாகவும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிப்புற்ற மாணவர்களை அடையாளப்படுத்தி ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் பிரதிக்கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தெரிவித்தார். மேலும், அம் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்யவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
இந்த உபகார வகுப்புகளை நடத்துவது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரபல தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் உதவியைப் பெற்று மேலதிகமான வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் லால் நோனீஸ் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் மேற்படி வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.