ஈரானில் வைத்துக் கைதான ஏழு இலங்கைப் பிரஜைகளையும் விடுதலை செய்வதற்கு பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
இவர்களுக்கு எதிராக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
ஈரான் நாட்டு கடல் எல்லைக்கு சட்ட விரோதமாக நுழைந்த டுபாய் நாட்டுக் கப்பல் கடந்த வாரம் ஈரான் படையினரால் கைப்பற்றப்பட்டது. கப்பல் சிப்பந்திகளுக்கு எதிராக சட்ட விரோதமாக எரிபொருள் போக்குவரத்து செய்தது மற்றும் சட்டவிரோதமாக ஈரான் கடல் எல்லைக்குள் நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடல் எல்லைக்கு சட்ட விரோதமாக நுழைந்தது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு 50 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வாரம் விசாரிக்கப்பட உள்ளது. இவர்களை விடுதலை செய்வது குறித்து ஈரான் தூதரகத்தினூடாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதோடு டுபாய் நாட்டு தூதரகத்தினூடாகவும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது டுபாய் நாட்டு கப்பல் கம்பனியுடனும் இவர்களை விடுவிப்பது தொடர்பாக பேசி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.