யாழ். வவுனியா தேர்தல்கள் – சகல முன்னோடி நடவடிக்கைகளும் தங்கு தடையின்றி முன்னெடுப்பு

images-elc.jpgயாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான சகல முன்னோடி நடவடிக்கைகளும் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை; வாக்குப் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் வாக்காளர் அட்டைகள் விநியோக நடவக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கருணாநிதி தெரிவிக்கையில்,

வவுனியா நகர சபைத் தேர்தல் தொடர்பான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 500 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 7 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்புச் சான்றுப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வும் 8 ஆம் திகதி சிரேஷ்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வும் 9 ஆம் திகதி சிரேஷ்ட கணக்காளர்கள் உள்ளிட்ட இதர உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கென 1,000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. அத்துடன் வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள் எவ்வித தங்கு தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *