அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இன்று சுதந்திரக்கட்சி மாநாடு தேர்தல் அறிவிப்பு வெளிவரும்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் தொடர்பாக கட்சியின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து அறிவிப்பு வெளிவரலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரலுடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்தப்படும் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இரு தேர்தல்களும் அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் முதலில் இடம்பெறும் என்றும் அமைச்சர்கள் அண்மைக்காலமாக சூசகமாகக் கூறிவருகின்றனர். தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இரு வருடங்களை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதேவேளை பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான கருத்துகளும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் அரசியல் தீர்வால் மட்டுமே மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் – முகர்ஜி

1411prafp.jpgஇலங்கையில் அரசியல் தீர்வு திட்டமொன்று ஏற்படுவதன் மூலம் மட்டுமே இன-மத அடையாளங்களால் வேறுபட்டுள்ள மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற மறைந்த லக்ஷ்மண் கதிர்காமரின் நான்காவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றிய போது அவர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

5வயது குழந்தை கழுத்து நெரித்து கோரக் கொலை வென்னப்புவயில் சம்பவம்

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து படுகொலை செய்த சம்பவமொன்று வென்னப்புவ பொலிஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது.குழந்தையின் தந்தையுடன் கூலித் தொழிலுக்கு செல்லும் நபரே இந்த படுகொலையை செய்துள்ளார். சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால தெற்கு பகுதியில் வசிக்கும் குழந்தையின் தந்தையும் சந்தேக நபரும் ஆற்றில் மணல் அள்ளும் கூலித் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். சம்பவ தினம் மாலை குழந்தையின் தந்தையும், தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரும் வைக்கால இல்லத்துக்கு வந்துள்ளனர். இருவரும் மது அருந்திய நிலையில் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தந்தைக்கு தெரியாமல் தங்கொட்டுவ வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன் உடலை ரயில் பாதையருகே வீசியுள்ளார்.

போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள் : மல்வத்த பீடாதிபதி அறிவுரை

“மக்களின் நலன்கருதி வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கும் அதேவேளை, பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

தமது கொள்கை விளக்கக் கோவையினை ஐக்கிய தேசிய முன்னணியினர் மல்வத்த பீடாதிபதியிடம் இன்று சனிக்கிழமை காலை கையளித்து ஆசிபெற்ற பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“மாகாண சபைகளினூடாக மக்களுக்கு உரிய சேவைகள் ஆற்றப்படுவதில்லை என்பதே எனது கருத்தாகும். நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரமில்லாத மக்கள் பலம் கொண்ட ஆட்சி பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இது எனது சொந்த அபிப்பிராயமாகும்.  நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு அரசியல் தலைவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என பீடாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

புலமைப்பரிசிலில் சித்தியடைந்தவர்களுக்கு விரைவில் பாடசாலை – கல்வி அமைச்சு நடவடிக்கை

261009school_child_dp.jpgஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாடசாலை மற்றும் நிதியுதவி வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கிடைத்து மூன்று வார காலத்திற்குள் புதிதாக பாடசாலைகளை கேட்டுள்ளவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை பூர்த்திசெய்ய கல்வி அமைச்சு எதிர்பார்க்கின்றது. புதிதாக பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் அதிபர்களிடம் சமர்பிக்கவேண்டிய கால எல்லை கடந்த 12 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளது. அந்த விண்ணப்பங்களை அதிபர்கள் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு பணித்துள்ளது. திங்கட்கிழமைக்குள் அவற்றை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

பொன்சேகாவின் கடிதத்துக்கு பொருத்தமான பதில் அளிக்க ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவு – சீருடையில் எழுதிய கடிதம் வெளியானது நெறிமுறையற்றது; அமைச்சர் சமரசிங்க

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா தனது சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கான அனுமதி கோரியும் தனது இந்த தீர்மானத்திற்கான காரணங்களை விளக்கப்படுத்தியும் எழுதிய கடிதத்திற்கு சரியான பதிலொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனரல் பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு அனுமதி கோரி அதற்கான காரணங்களை 3 பக்கங்களில் விளக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இதற்கே உரிய பதிலொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் இந்த பதிலை ஜெனரல் பொன்சேகாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.  ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் விதம் மனிதாபிமானமற்றதென குறிப்பிட்டிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோதே மஹிந்த சமரசிங்க இந்த தகவலை தெரிவித்தார்.

இதேநேரம், ஜெனரல் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் விபரங்கள் தனக்குத் தெரியாதென உத்தியோகபூர்வமாக மறுத்த அமைச்சர் சமரசிங்க கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற வகையில் ஜெனரல் பொன்சேகா சீருடையுடன் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் பிற இடங்களுக்கு வெளியிடப்பட்டிருக்குமானால் அது நீதி நெறிமுறைகளுக்கும் நேர்மைக்கும் முரணானது என்றும் சுட்டிக்காட்டினார்.  இந்த நிலையில் ஜெனரல் சரத்பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வுபெற உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுமதி வழங்கியிருப்பதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாடு நாளை

041109ma.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு நாளை கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் கெத்தாராம விளையாட்டரங்கு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்தது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுதந்திரமான நாட்டில் நடத்தப்படவுள்ள இம்மாநாடு பிரமாண்டமான ஏற்பாட்டுடன் நடைபெறுவதுடன் இம்மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையுடன் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ள 35 நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய சர்வதேச ரீதியில் இயங்கும் சுதந்திர கட்சி கிளைகளின் அமைப்பாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் ஒரு இலட்சம் பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்வரென மாநாட்டின் சார்பில் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சர்வதேச பிரதிநிதிகள் நேற்று முதலே வருகை தர ஆரம்பித்துள்ளனர். அத்துடன் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அமைப்பாளர்கள் உப தலைவர்கள் பேராளர்கள் பலரும் வருகை தரவுள்ளனர்.

மாநாட்டையொட்டிய பிரமாண்டமான முன்னேற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தேசிய சர்வதேச கட்சி அமைப்பாளர்கள் ஆகியோருக்கு விசேட ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடெங்கிலுமிருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தருபவர்களுக்கென விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மாநாடு இடம்பெறும் பகுதியை ஊடறுக்கும் போக்குவரத்துப் பாதைக்குப் பதிலாக மாற்றுப் பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டையொட்டியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நான்காவது பதவிப் பிரமாண நிறைவும் (19ம் திகதி நிறைவு கூரப்படுவதால் இம்மாநாடு விசேடம் பெறுகிறது.

நாடு தேர்தல்களிரண்டை எதிர்கொள்ளவுள்ள இன்றைய கால கட்டத்தில் இம்மாநாட்டில் வெளியிடப்படவுள்ள தீர்மானங்கள் சகல தரப்பினரதும் ஆர்வங்களைத் தூண்டியுள்ளன. அத்துடன் அடுத்து வருவது ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்பதை வெளிப்படுத்துவதாகவும் இம்மாநாடு அமைகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 58 வருட அரசியல் வரலாற்றைக் கொண்டது. நான்கு முக்கிய தலைவர்கள் இதற்கான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதுடன் பல்வேறு சவால்கள், தடைகளுக்குள்ளும் முன்னேறும் கட்சியாக அது திகழ்கிறது. குறிப்பாக கடந்த 30 வருட காலமாக நாட்டை ஸ்தம்பிதமடையச் செய்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாட்டில் அமைதிச் சூழல் நிலவும் தருணமொன்றில் அதற்குக் காரணமானவராகத் திகழும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இம்மாநாடு சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்னம் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் புலனாய்வு பிரிவு பொலிசாரினால் வெள்ளிக்கிழமையன்று முதற்தடவையாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, நீதவான் இவரை வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வன்னிப் பிரதேசத்தில் சண்டைகள் தீவிரமடைந்தது முதல் கனகரட்ணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தைப் படையினர் கைப்பற்றிய போது, பொதுமக்களோடு, இவரும் தனது குடும்பத்தினருடன் இராணுவத்தினரிடம் சரணடைந்தவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் படையினர் இவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தார்கள். கடந்த ஆறுமாத காலமாக விசாரணை செய்ததன் பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A9 பொதுமக்கள் யாழ் சென்றுவர பாதுகாப்பு அனுமதி தேவையில்லை – அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி லைசன்ஸ் இருந்தால் போதும்

road-a9.jpgஏ-9 வீதியூடாக யாழ். நகர் சென்று வருவதற்கு பயணிகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இலங்கைப் பிரஜையாகவுள்ள அனைவரும் ஏ-9 வீதியூடாக சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகள், மற்றும் விசேட பஸ் வண்டிகளூடாக சென்று வரலாம். பயணிகள் அனைவரும், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றில் ஒன்றை காண்பித்து செல்லமுடியும்.

பயணிகள் அனைவரும் வவுனியா சோதனைச் சாவடியில் சாதாரண சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய ஏ-9 வீதி மக்களின் போக்குவரத்துக்காக 13 ஆம் திகதி திறக்கப்பட்டது. முதற் தடவையாக நேற்று 10 பஸ் வண்டிகளில் பயணிகள் யாழ். நோக்கி வவுனியா ஊடாக சென்றனர். வவுனியா இரட்டைப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வழமையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் பயணிகள் பஸ் வண்டி புறப்பட்டன.

பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஏ-9 வீதியை திறப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு செயலாளர் வீதியை திறப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார். யாழ். குடாநாட்டிலிருந்து பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லவும், வெளிமாவட்டங்களிலிருந்து குடாநாட்டுக்குள் கொண்டு செல்லவும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென பயன்படுத்தப்படும் லொறிகள், பார ஊர்திகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் பதிவு செய்யப்படல் வேண்டும். எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்தப் பதிவுகளை செய்துகொள்ள முடியும்.

ஏ-9 வீதியூடாக வவுனியா வரை வரும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நடவடிக்கை எடுத்திருந்தார். கடந்த ஜுலை மாதம் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.

இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை வருகிறார்

1411prafp.jpgஇந்திய நிதியமைச்சரான பிரணாப் முஹர்ஜி அவர்கள்  இன்று இலங்கைக்கு  வரவுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ள அவர், இலங்கையில் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களைத் தரக்கூடிய அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களை தேசிய நீரோட்ட அரசிலுக்குள் இணைப்பதற்கான முயற்சிகள், அவர்களுக்கான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள், இந்தியாவின் நிதியுதவிகளை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்திய குழுக்களுக்கு உதவும் முகமாக மேலதிகமாக அங்கு பணியாளர்களை உதவிக்கு அனுப்புவது குறித்தும் அவர் இலங்கையில் கலந்துரையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.