ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் தொடர்பாக கட்சியின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து அறிவிப்பு வெளிவரலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரலுடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்தப்படும் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
இரு தேர்தல்களும் அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் முதலில் இடம்பெறும் என்றும் அமைச்சர்கள் அண்மைக்காலமாக சூசகமாகக் கூறிவருகின்றனர். தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இரு வருடங்களை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதேவேளை பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான கருத்துகளும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.