கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

Constantine_T_and_Minister_DDயாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் தெரிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி இணைய வலையில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்  ( யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன் ) பிரதிகளை ‘டயஸ்பொறா டயலக்’ அமைப்பின் சார்பில் ரி கொன்ஸ்ரன்ரைன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார். நேற்று (ஒக்ரோபர் 17 2010) கொழும்பில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாவணம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற உரையாடலில் புலம்பெயர்ந்தும் தாயகத்திலும் வாழும் யாழ் பல்கலைக்கழக்தின் நலன்விரும்பிகளின் நிலைப்பாட்டை தான் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதாகவும் அவர்களுடைய எண்ணப்பாடுகளைக் கவனத்தில் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தெரிவுசெய்யும்படி கோரும் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை எனத் தெரிவித்த ரி கொன்ஸ்ரன்ரைன் நலன்விரும்பிகள் தொடர்ந்தும் கையெழுத்துக்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm இக்கையொப்பப் போராட்டத்தின் பிரதிகள் கல்வி அமைச்சர் எஸ் பி திஸ்ஸநாயக்காவிடம் ஒக்ரோபர் 21ல் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

யாழ் பல்கலையில் பொறியியல் பீடம் அமைப்பது பற்றி வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு அமைச்சருடன் சந்திப்பு:

இந்நிகழ்வுக்கு முன்னதாக வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் (Institution of Engineers Sri Lanka – North)  குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது தொடர்பாக இக்குழு இச்சந்திப்பை மேற்கொண்டது. இச்சந்திப்பின் போது அமைச்சரின் அழைப்பில் ரி கொன்ஸ்ரன்ரைன்,  மற்றும் பேராசிரியரும் ஒக்ரோபர் 6 பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப்பட்டம் பெற்றவருமான  பாலசுந்தரம்பிள்ளை ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழுவிற்கு இலங்கை மின்சாரத் திணைக்களத்தின் ஜிஎம் ஆர் முத்துராமநாதன் தலைமை தாங்கினார். இக்குழுவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், டொக்டர் அற்புதராஜன், டொக்டர் பிரபாகரன், தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். பேராசிரியர் நவரட்ணராஜா கலந்துகொள்வதாக இருந்த போதும் அவரால் இச்சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

Minister_DD_17Oct10_Colomboஇச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் விசேட ஆலோசகர் திருமதி விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், சந்திரமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, 2006ல் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் உப வேந்தராக தெரிவு செய்ய தான் போராடியதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனால் அவர் அப்பதவியை ஏற்று செயற்பட முற்பட்ட போதும் கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியதை ஒரு குற்றச்சாட்டாகவே தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை அமைச்சர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழுத்தமாகவே தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ”என்னுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து மிரட்டல்களை விட்டனர். எனது மகளுக்கு அவளுடைய தம்பியை துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டினர். மனைவியை வெள்ளைச் சேலை அணிய வேண்டி வரும் என மிரட்டினர். உங்களைப் போன்ற தைரியம் எனக்கில்லை. அதனால் நான் நாட்டைவிட்டு வெளியேறி விட்டேன். ஆனால் இப்போது திரும்பி வந்திருக்கிறேன்” என்றார்.

இச்சந்திப்பில் தற்போதைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றிய அதிருப்தி அமைச்சரவைக் குழுவில் வெளிப்பட்டது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்களின் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அதற்கு அங்கு கடமையாற்றுகின்ற பேராசிரியர்களே காரணம் என்றும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னணியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிருப்தியும் வெளிப்பட்டது.

வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கு அமைச்சரின் ஒத்துழைப்பையும் கோரினர். யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் பீடத்தை அமைக்க வேண்டும் என்று சில அறிக்கைகளை வெளியிட்டதற்கு அப்பால் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. யாழ் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தை அமைக்கும் முயற்சி நீண்டகாலமாக கிடப்பிலேயே உள்ளது. அதனால் வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு தங்கள் ஆர்வமேலீட்டால் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அழுத்தத்தை மேற்கொண்டனர்.

”பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது என்பது சாதாரண விடயமல்ல” என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான திட்ட ஆவணங்களையும் திட்ட வரைபுகளையும் தயாரித்து தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். பொறியியல் பீடத்திற்கான திட்ட ஆவணங்களும் திட்ட வரைபுகளும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் அது பற்றி கவனம் கொள்ளாததால் அமைச்சர் தன்னைச் சந்தித்த பொறியியலாளர் குழுவிடம் அவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றி கருத்து வெளியிட்ட விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், ”முறையான திட்ட ஆவணங்கதை தயாரித்து வந்தால் 2011 – 2012 நிதி ஆண்டிலேயே அந்த நிதிக் கோரிக்கையை வைக்கமுடியும்” என்பதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உலகம் முழுவதுமே அரசாங்கங்கள் பொதுத்துறைக்கான நிதியை குறைக்கின்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கோரிக்கை அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரவைக் குழு இந்தியாவினதும் சர்வதேச அணுசரனையுடனும் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கான உதவியைப் பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

”ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்த போதும் அவ்வாறான உதவிகள் வருவதில்லை” என பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். ”இந்தியா உதவி அளிப்பதாக செய்திகள் வந்ததைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தான் அங்குள்ள கல்வியியலாளர்களுடன் பேசும்போது அவர்கள் அவ்வாறான எவ்வித உதவியும் வழங்கப்படுவது பற்றி அறிந்திருக்கவில்லை” எனச் சுட்டிக்காட்டினார்.

Minister_DD_17Oct10_Colomboஇது பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சரவைக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ”அரசாங்கம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கைகள் பலனளிக்காது” எனத் தெரிவித்தார். ”இலங்கையில் இவ்வளவு மோசமான அழிவுக்கு வித்திட்டதில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது” எனவும் அவர் குற்றம் சாட்டினார். ”பல்கலைக்கழகத்தினுள்ளேயே பொங்குதமிழ் கொண்டாடி விட்டு, இப்போது பல்கலைக்கழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இடித்துக் கேட்க முடியாது” எனவும் சந்திரமோகன் குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கு தான் முழு முயற்சி எடுப்பேன் என உறுதியளித்த அமைச்சர் வேண்டிய அவணங்கள் தயாரிக்கப்பட்டதும் அமைச்சரவையில் முன்வைத்து வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதி அளித்தார்.

(தகவல் ரி கொன்ஸ்ரன்ரைன்)

._._._._._.

லண்டன் குரல் (ஒக்ரோபர் 07 2010) இதழ் 36ல் வெளியான செய்தி:

தமிழ் கல்விச் சமூகத்தை யாழ் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வர வேண்டும்!

யாழ் பல்கலையின் நலன்விரும்பிகள் இணைய வலையில் கையொப்பப் போராட்டம்!!!

University_of_Jaffna”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”
எஸ் சுவர்னஜோதி, ஓடிறர் ஜென்ரல், ஓடிற் 2009 

இது மலையெனக் குவிந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சீரழிவின் ஒரு சிறு பகுதியே.

யுத்த சூழலில் இருந்து மீண்டுள்ள தமிழ்க் கல்விச் சமூகம் தமது கல்விக் கட்டமைப்புகளில் உள்ள சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளினால் அதிர்ந்து போயுள்ளனர். தமிழ் சமூகத்தினை வேரறுக்கும் அளவிற்கு கல்விக் கட்டமைப்புகளில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகச் சீர்கேடு, ஊழல், மோசடி, பாலியல் பலாத்காரம் என்பன மலிந்து போயுள்ளன. யாழ் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் அர்த்தமற்றவையாகிக் கொண்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தைச் இச்சீரழிவில் இருந்து மீள்விக்க அமைச்சர் தேவானந்தாவும் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நலன்விரும்பிகள் இணையப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

நவம்பரில் நடைபெறவுள்ள யாழ் பல்கலையின் உபவேந்தர் பதவிக்கான போட்டியில் இப்பல்கலைக்கழகத்தை ஆசியாவின் சிறந்ததொரு பல்கலைக் கழகமாக்க கனவு கண்ட பேராசிரியர் கைலாசபதியின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே அமைச்சர் தேவானந்தாவும் கவுன்சில் உறுப்பினர்களும் தெரிவு செய்ய வேண்டும் என்கிறார் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் ரரின் கொன்ஸ்ரன்ரைன்.

இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கம், கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமரன், வரலாற்றுத்துறையின் தலைவர் பேராசிரியர் சத்தியசீலன் ஆகியோர் முக்கியமாகப் போட்டியிடுகின்றனர். யாழ் பல்கலைக்கழகம் சீரழிந்து கீழ்நிலைக்குச் சென்றதற்கு மிகமுக்கிய பொறுப்புக்களில் இருந்த இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் பல நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இவர்களே காரணமாகவும் இருந்தள்ளனர்.

அதனால் யாழ் பல்கலைக்கழகத்தை மீள்விக்க சிரழிவுக்கு வெளியே இருந்து கல்வித் தகமையும், நிர்வாகத் திறனும் உடைய ஒருவரைக் கொண்டுவருவதே பொருத்தமானது என போராட்டத்தில் இணைந்து கையொப்பம் இட்டுள்ள பலரும் கருத்து வெளியிட்டு உள்ளனர். அந்த வகையில் உபவேந்தர் பதவிக்கு போட்டியிடுகின்ற சர்வதேச பல்கலைக்கழக அனுபவமும் தகமையும் நிர்வாகத் திறனும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களே இப்பதவிக்கு பொருத்தமானவர் எனக் கருதப்படுகிறார்.

Douglas_and_Studentதமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ் கல்விச் சமூகத்தை 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப கட்டியெழுப்ப விரும்பினால் அமைச்சர் தேவானந்தா பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலுக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று அமைச்சருக்கு நீண்டகாலம் தம் அரசியல் ஆதரவை வழங்கிவரும் வி சிவலிங்கம், எம் சூரியசேகரம், ராஜேஸ் பாலா உட்படப் பலர் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் ஹூல் இலங்கையிலேயே தகமைபெற்ற ஒருவர் என்றும் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பணியாற்றுவதற்கு வாழத்துக்கள் என்றும் ஈபிடிபி கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா ரிபிசி வானொலியில் தெரிவித்து இருந்தார்.

தமிழ் மக்களின் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற அமைச்சர், பரிசு பெறும் மாணவி தன் காலத்தில் யாழ் பல்கலையில் பாதுகாப்பாகவும் பெருமிதத்துடனும் கற்க வழிசெய்வார் என நம்புவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவில் ஐந்து தினங்கள் தங்கியிருக்க முடிவு

obamas.jpgஅடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கு அதிக நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். “இது இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது’ என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்து நாட்கள் வரை, அவர் இங்கு தங்கியிருக்க கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒபாமா இத்தனை அதிக நாட்கள் வேறு எந்த வெளிநாட்டிலும தங்கியது இல்லை என அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடனான நட்பை பலப்படுத்துவதற்கு, அமெரிக்கா அதிக ஆர்வமுடன் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் மும்பை, அமிர்தசரஸ், டில்லி உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒபாமா பங்கேற்கவுள்ளார். மும்பையில் கடந்த 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறுகையில், “அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்துக்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும, அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப் பயணம், இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஒக்டோபர் எழுச்சியும்:- கனடாவில் கலந்துரையாடல்

Senthiveel_Si_Kaதீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஒக்டோபர் எழுச்சியும்: ஒரு போராளியின் பார்வையில் என்ற தலைப்பில் தோழர் சி கா செந்திவேல் அவர்களின் உரையும் கலந்துரையாடலும் கனடா ஸ்காபொறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேடகம் – தமிழர் வகைதுறைவள நிலையம் இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றிலும் வட இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களிலும் இரண்டறக்கலந்தவர் தோழர் சி. கா. செந்திவேல். 1963ல் தனது இருபதாவது வயதிலேயே கொம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், 1965ம் ஆண்டு முதல் தன்னை கட்சியின் முழுநேர அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் 1989ம் ஆண்டிலிருந்து புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தேடகம் குழுவினர் அனைவரையும் அழைத்துள்ளனர்.

சி.கா.செந்தில்வேல் எழுதிய நூல்கள் :
1. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்
2. புதிய ஐனநாயகமும் போராட்ட மார்க்கமும்
3. சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்.
4. கைலாசபதியும் சமூகப் பங்களிப்பும்.
5. மனிதரும் சமூக வாழ்வும்.

Senthiveel_Si_Kaகுறிப்பு: 45 வருட இடதுசாரி அரசியல் வரலாற்றையும் போராட்ட வரலாற்றையும் கொண்ட ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவம் இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமானதாகிறது. அந்த வகையில் தோழர் சி. கா. செந்தில்வேல் அவர்களின் இந்நேர்காணல் ஜனவரி 6, 2008ல் தேசம்நெற் இணையத்திற்காகப் பதிவு செய்யப்பட்டது. அதன் pdf இணைப்பு: Senthiveel Interview_Book

நிகழ்வு விபரம்:
Saturday, October 23rd 2010 @4:30P.M
Mid Scarborough Community Centre
(Don Montgomery CRC)
2467 Eglinton Ave East (@Kennedy)

Contact:
thedakam@gmail.com
0014168407335

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு யூரேன் (U-turn)

TNAநல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் சாட்சியங்களை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நல்லிணிக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கத் தயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீ ஆனந்தசங்கரி ஆகியோரின் வழியைக் கடைப்பிடிக்க முடிவெடுத்து உள்ளது. வழமையாக காலம் கடந்து ஞானோதயம் பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தடவை குறித்த காலத்திற்குள் தன்நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் சிபார்சுகள் நடைமுறைக்கு வரும் சாத்தியம் இல்லாத போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாட்சியங்கள் வரலாற்று ஆவணமாக அமையும் என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு முன்னதாக லண்டனில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த வீ ஆனந்தசங்கரி நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தோன்றிச் சாட்சியளிக்க ததேகூ தயங்கலாம் எனவும் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். சில சமயம் நேரில்சாட்சியம் அளிக்காமல் எழுத்தில் தங்கள் சாட்சியங்களை எழுதி அனுப்பி விட்டு இருந்துவிடுவார்கள் எனவும் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

சாட்சியங்களில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று சனிக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற விடயங்கள், தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் இன்னல்கள், தமிழ் மக்களின் வரலாறு, அவர்களின் அபிலாசைகள் ஆகிய விடயங்கள் கூட்டமைப்பின் சாட்சியங்களில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ததேகூ நேரடியாக சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த போதும் ஏன் அவர்களை விடுவிக்கும்படி ததேகூ கோரவில்லை போன்ற கேள்விகள் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்கப்படும். மேலும் புலிகளுக்கும் ததேகூ க்கும் இருந்த உறவு பற்றியும் பல சிக்கலான கேள்விகள் கேட்கப்படலாம்.

ஒருநாள் போட்டியில் இருந்தும் முரளிதரன் ஓய்வு

muralidharan.jpgஇலங்கை அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு பிரவேசித்த முரளிதரன் பல்வேறு சாதனைகளையும், சோதனைகளையும் தாண்டித்தான் கிரிக்கெட் உலகில் தனது இடத்தை நிலை நாட்டியிருந்தார். முரளிதரனைப் போன்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் இலங்கை அணிக்கு மட்டுமல்ல உலக அணிக்கும் கிடைக்கமாட்டார்.

முரளிதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் அதாவது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இடம்பெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்துள்ளார்.

இவரது ஓய்வு அறிவிப்பானது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும் காலத்தின் கட்டாயம் அவர் ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவரது உடற்தகைமை, குடும்ப நோக்கம் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கம் எனப் பல காரணங்கள் உண்டு. எது எப்படியோ முரளிதரன் ஓய்வு பெற்றாலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவரை பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பயன்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

50 வருடங்களாக வசித்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு காணிகளுக்கான உரிமம் இல்லை.

Douglas_Devanandaசங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி ஊரத்தி, சங்கானை மத்தி ஆகிய பிரதேசங்களில் 50 வருடங்களாக வாழ்ந்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளான மக்களுக்கு இன்னமும் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கி உதவுமாறும் குறிப்பிட்ட மக்கள் வடமாகாண ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

“சங்கானை மத்தியில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வாழ்நது வருகின்றோம். எம்முடன் வாழ்ந்த 21 குடும்பங்களுக்கு 1979 இல் உள்ளுராட்சி சபையின் விசேட ஆணையாளராக அப்போதிருந்த இராசு தணிகாசலம் என்பவரால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள எமக்கு காணி உரிமம் எவையும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்குமாறு மாகாணசபை அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். ஆனாலும், தீர்வு எதுவும் இது வரை எட்டப்படவில்லை. எனவே சங்கானை மத்தி, அராலி ஊரத்தியிலுமுள்ள 65 சுத்திகரிப்புத் தொழிலாளிகளுக்கு வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்கி, அவற்றுக்கான உரிமங்களையும் வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்” என இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிதைவடைந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழரின் வரலாற்று ஆதாரங்கள். : அ மயூரன்

Yamuna Eri”கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடிகள் நாம்” போன்ற உணர்வூட்டி உசுப்பேத்தும் உரைகளில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒர் சிறு பங்கையேனும் எமது வரலாற்று முதுசம்களை பேணுவதில் நாம் காட்டுவதில்லை. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை.

யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லூர் இராசதானியின் இறுதி எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளவற்றுள் பிரதானமானது ”யமுனா ஏரி” எனப்படுகிற மன்னர்கள் பயன்படுத்திய ப வடிவ தடாகம்.புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு அது இன்றுமிருக்கிறது.

யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட அவ்விடத்தில் இருக்கும் இளைஞர்கள் கூட சரியாக அடையாளங்காட்ட மாட்டார்கள். அந்த அளவில் யமுனாஏரி பற்றிய விழிப்புணர்வு எங்கள் யாழ் மக்களிடம் இருக்கின்றது.

Sangiliyan Manthiri Manai Jaffnaஅடுத்தது யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை அண்மித்து அமைந்துள்ள ”மந்திரிமனை”. இது ஓர் புராதன மாடி வீடு.பிரதான வாசலிலிலே அவ் வீடு பற்றி சாசனம் ஒன்று பழந் தமிழில் எழுதப்பட்டிருக்கும். உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம்.அதுவும் சிதைவடைந்த வாறேயுள்ளது.

முன்பு ஒரு முறை அங்கு செல்கையில் ஒர் ஏழைக் குடும்பமொன்று அதன் ஒரு பகுதியைத் தமது வசிப்பிடமாக்கி இருந்தார்கள். எஞ்சிய பகுதிகளை அவ்விடத்தில் வசிக்கும் மூதாட்டியொருத்தி தனது ஆடு மாடுகளைக் கட்டுமிடமாக உபயோகித்துக் கொண்டிருந்தார். இவ்வாறாக எங்கள் வளங்களின் உச்சப் பயன்பாடு சென்றுகொண்டிருந்தது.

King Sangiliyan Palace Entranceஅடுத்தது யாழ் பருத்தித்துறை வீதியில் நல்லூரில் அமைந்துள்ள ஒரு நுளைவாயில் ஒன்று. பழைய அரண்மனையின் சிதைவு இது என்கிறார்கள். இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று (வரலாற்று ஆதாரக் காப்பிற்காக ஒரு சில நடவடிக்கைகளை நம்மவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இக் கொட்டகை. அதனை யார் எப்போது அமைத்தார்கள் என்பது தெரியவில்லை.) அமைத்து மழை, வெயிலிலிருந்து பாதுகாத்திருந்தார்கள். அண்மையில் நல்லூரில் நட்சத்திர விடுதியொன்று இதற்கு அண்மையில் கட்ட முற்படுகையில் எங்கள் கலாசார காவலர்கள் (!!??) பொங்கி எழுகையில் இது பற்றிய விழிப்புணர்வு ஓரளவு மக்களிற்கு ஏற்பட்டிருக்கலாம்.

இப்படியாக எங்கள் மரபுவழி முதுசங்கள் பேணப்படும் ஆர்வம் சென்று கொண்டிருக்கிறது. எப்போது தான் நாமெல்லாம் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றோமோ? ஆனால் தாமதமாகும் ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டும் வருத்தத்திற்குரிய உண்மை. அத்துடன் இலங்கை அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் ஒரு ஈழத்தமிழர் புராதன அருங்காட்சி சாலை.

Museum_in_Jaffnaஅத்துடன் நல்லூரில் நாவலர் றோட்டில் நாவலர் கலாச்சார மண்டபத்திற்குப் பின்னால் யாழ் நூதண சாலை உண்டு. அதன் கேவலத்தைப் பாருங்கோ. 

எத்தனை எத்தனை வீரபுருஷர்கள் மாமன்னர்களாய் ஆண்ட தேசம் இந்த யாழ்ப்பாண இராச்சியம். அந்த அரசாட்சிகளின் சுவடுகளைக் காவல்காக்கும் கலா நிலையமான நூதனசாலையின் கோலத்தைப் பாருங்கள். சாயமிழந்த நூற்சேலை பிச்சைக்காரியின் உடலை மறைப்பது போல ஒரு கட்டிடம். அதுவும் நாவலர் மணிமண்டபத்துக்குப் பின்புறமாகஇ கழிப்பறை போல ஏனோ தானோவென்ற அங்கீகாரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை என்ற கல்விப்பீடம் மூலம் அறிஞர்கள் பலரை உருவாக்கி அங்கீகரிக்கக் காரணமாகவும் இருந்த இந்தக் கலைக்களஞ்சியங்கள் கடைசிக்காலத்தில் தம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் போல இருக்கும் நூதனசாலை.

Related Articles:

வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் தமிழரின் வரலாற்றுத் தொல்பொருட்கள்!

லண்டன் தமிழர் தகவல் நடுவம் யாருக்குத் தகவல்கள்’ கொடுக்கின்றது? : ஆர்.வி. குமார்

tic_logoதகவல் நடுவங்கள் என்பது, மக்களுக்கான பல தகவல்களை, அரசியல் சார்பன்றி, சாதி, சமய, பிராந்திய வேறுபாடுகளுக்கும் கட்சிக் கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பாலிருந்து கொடுப்பதாகும். இந்தத் தகவல் நடுவங்கள் பொது மக்களின் கல்வி கலாச்சார வளர்ச்சிகளுக்கும் கேந்திரமாகவும் செயற்படுவதுண்டு. அத்தோடு இந்த நடுவங்கள், தங்கள் மக்களின் வாழ்க்கை வழிமுறைகள், பண்பாடு கலாச்சாரங்கள், சமுதாயத்தில் நடக்கும் பொருளாதார விருத்தி வேலைகள், மக்களால் முன்னெடுக்கப்படும் சமய விழாக்கள், நெறிகள் போன்று பற்பல விடயங்களை மற்ற இனத்தார் வந்து அறிவதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் தேவையான ஆவணங்களைப் பராமரிக்கும் முக்கிய கேந்திரமாகவும் பணிபுரிய எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் லண்டனில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தமிழர் தகவல் நடுவம், தமிழர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியன விதத்திற் கொடுக்காமல், வேறு விடயங்களில் தன்னைப் பிணைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாத் தன்னை ஒரு இரகசிய ஸ்தாபனமாக்கிக் கொண்டு வருவதாக எண்ணத் தோண்றுகிறது. இங்கு நடக்கும் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்டவர்களுக்காக மட்டும் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் வந்திருக்கிறது. தமிழர் தகவல் நடுவம் என்பது பல்தரப்பட்ட தமிழர்களின் பங்களிப்பையும் ஒன்று கூடல்களையும் உதாசீனம் செய்தால் இந்தத் தகவல் நடுவம் யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது, யாரின் இலாபத்திற்காகப் பணி புரிகிறது என்பதைக் கேட்கத் தமிழர்களுக்கு உரிமையுண்டு.

ஓருகாலத்தில் தமிழ்த் தேசியத்தின் மத்திய கேந்திரமாக இயங்கிய இந்த ஸ்தாபனம், 2009ம் ஆண்டு முடிந்த போரின் பின் ஏற்பட்ட புலிகளின் பிரிவுகளின் எதிரொலியாக இன்று மிகவும் தூரத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உலகத் தமிழர்பேரவை, நாடு கடந்த ஈழத்தினர் அவர்களின் பிரதமர் என்போர் லண்டன் தமிழர் தகவல் நடுவத்தைக் கணக்கெடுப்பதில்லை என்றே தெரிகின்றது. புலிகளின் ஒருபிரிவு, ஏதோ ஒரு குழப்பத்தை (பேராட்டம்?) இலங்கையில் உண்டாக்கி அதனால் தமிழ் மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் விடயங்களைக் காய்நகர்த்துவது பலருக்குத் தெரியும். புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து போருக்காக அவர்கள் சேர்த்த தொகையின் ஒருசிறு பகுதியை இலங்கையில் வாழும் ஏழைத் தமிழர்களுக்குக் கொடுக்கத் தயாரில்லை. அப்படியிருக்கம் போது, பிரிந்த புலிகளின் லண்டன் ‘கோஷ்டியின்’ குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கின்றது. (இலங்கையில் இன்னுமொரு ஆயதப்போராட்டம் எப்போது வரும் என்ற கேள்வி அன்று கேட்கப்பட்டது).

ஜனநாயக (???) முறையில் கடல் கடந்த தமிழர்களின் பிரதமரானவர்களைக் கொண்டிருக்கும் ஒரு கூட்டமும், எப்படியும் ஏதோ ஒரு மோசடி செய்து, தாங்கள் வைத்திருக்கும் பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் இன்னொரு புலிக் கூட்டமும் எங்கெங்கே பயணிக்கிறது? இலங்கைத் தமிழரின் எதிர்கால அழிவுக்கு யார் யாருடன் தொடர்புகளை (மேற்கத்திய அழிவு சக்திகள்) ஏற்படுத்துகிறது? அதில் தமிழர் தகவல் நடுவத்தின் பங்கென்ன என்பதை ஆராய்வது தவிர்க்க முடியாத முக்கிய விடயமாகும்.

இலங்கை ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகளின் பயணம், உருத்திரகுமாரின் தமிழ்ப் பிரதமர் பிரகடனம், தகவல் நடுவத்தின் இரகசிய கூட்டங்கள் என்பன தற்செயலாக நடப்பவையா? அல்லது ‘ஏதோ ஒரு சக்தி’ செய்யும் மாய விளையாட்டுக்களா? இந்த இரு புலிக் கோஷ்டியும் போராற் துயர்படும் தமிழ் மக்களுக்கு ஒருநேர உணவோ ஒரு முழுத் துணியோ இதுவரை கொடுக்கவில்லை. தமிழரின் பெயரில் பல மகாநாடுகளை ஒழுங்கு செய்த தகவல் நடுவம், தமிழ் மக்களுக்கு உதவுவதற்காகப் பணம் கேட்க ஒரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்தது கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் புரிந்ததாக அறிய முடியவில்லை. அந்த நிலையில், போராற் துன்புறம் மக்களின் மீள்வாழ்வுக்குப் புலம் பெயர்ந்த மக்களின் பங்கு என்ற வெற்று வார்த்தைகளைத் தமிழர் தகவல் நடுவம் அள்ளிக்கொட்டுவதே வெட்கம்.

தமிழர் தகவல் நடுவத்தில், இலங்கையிலிருந்து அவ்வப்போது லண்டனுக்கு வரும், கல்வி கலாச்சாரப் பிரமுகர்களை வைத்துச்சில கருத்தரங்கங்கள் நடப்பதுண்டு. தகவல் நடுவத்திற்குப் பேச்சாளராக வரும் அத்தனைபேரும் இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவர வெளிநாட்டாரின் ‘உதவியை’ நாடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார்கள். இங்கு வந்த எந்தப் பிரமுகர்களும் ஒரு நாட்டுக்குள்ளே எவ்வாறு வேலை செய்து எங்கள் மக்களுக்கு உதவ முடியும் என்பது பற்றி ஆராய்வதில்லை. தமிழர் தகவல் நடுவம் இலங்கை அரசை வசைபாடி புலிகளைக் காப்பாற்றுவதிலேயே கடந்த முப்பது வருடங்களைச் செலவளித்திருக்கிறதே தவிர, சாதாரண தமிழ் மக்களுக்கு உதவ எந்த முயற்சியும் செய்தது கிடையாது.

02.10.2010 அன்று தமிழர் தகவல் நடுவத்தில் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும் மீள நம்பிக்கையூட்டுதலிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குத் தமிழ் தகவல் நடுவக் கூட்டங்களுக்கு வழக்கமாக வரும் பலருக்கு அழைப்புக் கொடுபடவில்லை. வழமைபோல் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபடுத்தும் பலரும் அதனுடன் உடன்படாத சிலரும் வந்திருந்தனர்.

நேற்று, இன்று, நாளைக்கு என்று எப்படிப் பார்த்தாலும் எப்போதும் இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்களான சிங்களவர்ளாற் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். சிறுபான்மையான நாங்கள் இதை உணர்ந்து கொண்டு எங்கள் உரிமையை ஜனநாயக வழியில்பெற முயற்சிக்க வேண்டும். என்றும் இல்லாத அளவுக்கு, இன்று பல வாழ்க்கைத் தேவைகளை எதிர்பார்த்து எங்கள் மக்கள் இலங்கையில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு, லண்டனில் முன்னெடுக்கப்படும் நாடுகடந்த, கடல்கடந்த தமிழீத்தினாலும் முரண்பாட்டு அரசியல் மகாநாடுகளால் ஒரு பிரயோசனமும் கிடையாது. லண்டனில் வாழத்தேவையான  ஊதியத்தைத் தமிழரின் சோகத்தை வைத்து முகாரிபாடிச் சேர்த்தவர்கள் பலநூறாகும். வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சேர்க்கப் படிப்புத் தேவைப்படுபவர்கள் பெரும்பாலோனோர். தங்கள் சொந்த இனத்தையே முதலீடாக்கியவர்கள் நாங்கள். இப்படியாக உழைப்பில் பலவடிவங்கள் பரிணமிக்கும். அதில் ஒன்றுதான் இந்த தமிழர் தகவல் நடுவத்தின் ஒன்று கூடல்கள் என்றால் அதனை மறுத்துரைப்பதும் கடினமானதே.

முதலைக் கண்ணீர்!

அன்று (02.10.10) தமிழர் தகவல் நடுவக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தத் தமிழத் தகவல் நடுவ முதல்வர் திரு வரதகுமார் அவர்கள் தன் ஆரம்பவுரையில், ‘இன்று இலங்கையில் இருக்கும் பொதுமக்கள் சபைகள் – சிட்டிசன் கொமிட்டிஸ் – அங்கிருக்கும் அரசியல் நிலையால் பெரும்பாலும் செயலிழந்திருக்கின்றன. சிவில் சொசைய்ட்டிகள் மக்களுக்காகக் குரல் கொடுக்காவிட்டால் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களைக் காண முடியாது.

நாங்கள்  இலங்கையிலிருந்து சில மூத்த அறிஞர்களை இவ்விடயம் பற்றிப் பேச அழைத்திருக்கிருந்தோம். கடந்த சில நாட்களாக அவர்கள் பலர் சேர்ந்து பல ஆய்வுகளை நடத்தி, அவர்கள் அங்கு மக்களின் வாழ்க்கையை முன்னேறாமல் தடுக்கும் சில விடயங்களை அடையாளம் கண்டு, அவற்றை நிவர்த்தி செய்யச் சில சிபாரிசுகளை முன்வைத்திருக்கிறார்கள். இலங்கையிலிருந்த இந்த அறிஞர்களும் இலங்கையின் ஜனநாயக வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும் சந்தித்துக் கொள்ளக்கூடிய கருத்தரங்கங்களையும் ஏற்பாடு செய்திருந்தோம்’ என்று சொன்னாhர்.

வரதகுமார் குறிப்பிட்ட ‘ஆய்வுக் கூட்டங்கள்’ பற்றிய விடயம் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கோ இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கோ அவர்களின் தலைவர்களுக்கோ எதுவும் தெரியாது என்பதும் இது பற்றி எதுவுமே அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதும் தெரிந்தது.

தமிழ் மக்களுக்கான தலைவர்களுடன் இரகசிய கூட்டத்தை கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் நடத்தியவர் இன்று அவர்களுக்கே தெரியாமல் இன்னுமொரு கூட்டம் வைப்பது தமிழ்த் தலைவர்களுக்குக் குழி பறிப்பதற்கா என்ற கேள்வியை இலங்கையிலுள்ள அத்தலைவர்களே விசாரித்தும் வருகின்றனர்.

கூட்டத்துக்குத் தரப்பட்டிருந்த தலையங்கத்துக்கும் அதுவரை அங்கு இரகசியமாக நடைபெற்று முடிந்த ஆய்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது போலிருந்தது. இலங்கையில் பொதுமக்கள் அமைப்புக்களை வலிமைப்படுத்தி அதன் மூலம் இலங்கைத் தமிழருக்கு உதவி செய்ய இலங்கை அறிஞர்கள் ஏன் வேலை மெனக்கெட்டு லண்டனுக்கு வரவேண்டும் இரகசியமாகக் கலந்துரையாடல்களை வைக்க வேண்டும் என்பது புரியாத விடயமாகும்.
 
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எப்படியான உதவிகளை இலங்கையில் வாடும் தமிழருக்குச் செய்யலாம் என்று கலந்துரையாட கூடியிருப்பதற்கும் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ‘இரகசிய’ கலந்துரையாடலுக்கும் பெரிய தொடர்பில்லை. ஏதோ ஒரு சாட்டுக்கு இந்தக் கூட்டத்தை வைத்து மழுப்பப் பார்க்கிறார் என்பது முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் மூலம் தெரியவந்தது. புலம்பெயர்ந்த மக்கள் என்ற வார்த்தையைப் பாவித்து அவர்களுக்கு உசுப்பேத்த எடுத்த முயற்சி சுவிஸில் சரிவரவில்லை.

அத்துடன், அனுதாபத்துடன் புலம்பெயர் தமிழர் நாட்டில் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்ன திரு வரதகுமர் அவர்களுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் பல நாடுகளிருந்தும் பல தடவைகள் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நல்லிணக்கக் குழு’க்களாகப் போயிருந்தது தெரியும். ஆனால் இதுவரையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நல்லிணக்கக் குழுக்கள் செய்யும் பணிகள் பற்றிய தகவல்களைச் சொல்ல தகவல் நிலையத்தில் ஒரு கருத்தரங்கு வைக்கச் சொல்லிப் பல தடவைகள் கேட்டும் கேளாச் செவியனாக இருந்துள்ளார். அண்மையில் இணையத் தளங்களில் இதுபற்றி எழுதப்பட்டுமிருக்கிறது. அவர்களுடன் சம்பந்தப் பட்டவர்களால் தொடங்கப்பட்டு இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் ஸ்தாபனங்கள் நபர்கள் பற்றியும் இவருக்குத் தெரியும். இருந்தும் அங்கு தமிழருக்கு உதவி செய்ய யாருமே முன்வராத பாணியில் தகவல் நடுவம் ஒரு அபிப்பிராயத்தைத் தொடந்து செய்து கொண்டிருக்கிறது. அத்துடன் ஒரு காலத்தில் புலியின் மிகப் பெரிய ஆதரவாளராக இருந்தவர்கள்கூட இன்று இலங்கையில் அல்லற்படும் தமிழர்களுக்கப் பல வித்தில் உதவுகிறார்கள் இவர்களையழைத்து, இலங்கையில் என்ன நடக்கிறது என்று ஒரு கருத்தரங்கம் வைத்ததே கிடையாது.

பெரும்பாலான தமிழர்களுக்கு அறிவிக்காமல், நடந்த இரகசியக் கருத்தரங்குக்கு அழைத்த பிரமுர்களில் சந்திரகாசன் (தமிழத் தேசியத்தின் தலைவர் செல்வநாயத்தின் தனயன்), மனித உரிமைவாதி சரவணமுத்து பாக்கியசோதி (கொழும்பு), ராஜன் பிலிப்(கனடா) என்போர் 2ம் திகதி தமிழர்களுடன் லண்டனில் நடந்த சந்திப்புக்கு முன்னரே பயணமாகிவிட்டார்கள்.

2ம் திகதி கூட்டத்திற்கு வந்திருந்தோர்  பேராசிரியர் சீலன் கதிர்காமர், பேராசிரியர் சித்தம்பலம், முக்கியமான (பழைய) தமிழ்த்  தேசியவாதி (அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த இந்திய வெளிநாட்டுத் தூதுவர் நிருபமாவிடம் கேள்விகேட்டதால் பிரமுகரானவர்), பேராசிரியர் கணேஸ், பேராசிசியர் மூக்கையா (மலைநாட்டின் பிரச்சினைகளை முன்வைத்தார்.)

அன்று நடந்த கூட்டத்தில், பேராசிரியர் சீலன் கதிர்காமர், தமிழர் தகவல் நடுவம் பல அறிஞர்களுடன் நடத்திய ஆய்வுகளின் (இரகசியமாக) சாராம்சத்தைக் கருத்தரங்கில் முன்வைத்தார். போராசிரியர் சீலன் கதிர்காமர் அவர்கள், தங்களின் ஆய்வில் அடையாளம் காணப்பட்ட, இலங்கைத் தமிழ் மக்களுக்காகச் செய்ய வேண்டிய முக்கியமான பத்து அம்சங்களை விளக்கினார். இந்தப் பத்து விடயங்களும் பல தடவை இலங்கையில் பல தூதுக் குழுக்களாலும் இந்திய, பிரிட்டிஷ்  அரச தரப்புக்களாலும் இலங்கை அரச தரப்புக்கு எடுத்தச் சொல்லப்பட்ட விடயங்கள் என்பது தகவல் நடுவ முதல்வருக்கு நன்றாகத் தெரியும். முப்பது வருடப் போரால் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தள்ளப்பட்டிருந்த இலங்கை அரசால், இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்த 300,000 மேற்பட்ட தமிழர்களின் மீள் குடியேற்றத்தைச் செய்ய பல காலம் எடுக்கும் என்று தெரிந்தவர்கள், தென்னிந்திய முதல்வாரின் மகளும் இலங்கைத் தமிழரின் துயரைத் துடைக்க மிகவும் அக்கறை கொண்டவருமான கனிமொழியின் மூலம் இந்திய அரசின் உதவியை நாடியதும் தெரியும். அதன்பின் போராற் துன்பப்பட்ட மக்களுக்கான மீள் குடியேற்ற விடயங்களில் நடக்கும் மாற்றங்களையும் அந்த நடவடிக்கைகளில் இந்தியா உட்படப் பலநாடுகளின் ஈடுபாடும், திரு வரதகுமார் தெரியாமலில்லை.

போரசிரியர் கதிர்காமரோ அல்லது வந்திருந்த மற்ற அறிஞர்களோ, போரால் அல்லலுறும் மக்களின் விடயத்தில் இதுவரை எந்த வித்திலும் ஈடுபட்டதாக எந்த தடையமும் கிடையாது. அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகவும் படித்த பேராசிரியர்களாக இருந்திருக்கலாம் ஆனால், இன்று சட்டென்று பொதுவேலைகளில் ‘குதிக்கும்’ வயது வலிமையோ அல்லது அரசியல் வலிமையோ அற்றவர்கள்.

திரு கதிர்காமர் அவர்கள் பேசும்போது, லண்டனில் 1998ல் நடந்த கூட்டத்தின்பின் எந்த மகாநாடுகளிலும் தான் கலந்து கொள்ளவில்லை என்றார். பொதுவுடமைவாதியும் புலிகளின் பிரசார பீரங்கியுமாயிருந்த டாக்டர் விக்கிரமசிங்கவின் நண்பர் என்று தன்னை அறிமுகப் படுத்தினார். அவர் தனது பேச்சில்  தமிழர்கள் தங்கள்  பிரச்சினைக்கு ஆசிய நாடுகளின் உதவியை நாட வேண்டும், முக்கியமாகச் சீனாவின் உதவியை நாடவேண்டும் என்று சொன்னார். தங்களின் ஆய்வில் இலங்கைக்குத் தேவையான 5-6 வருடத் திட்டத்தை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், (முடிந்தவரை அவரினுரை தரப்பட்டிருக்கிறது);

”18வது சீர்திருத்தச் சட்டத்தினால் யாருக்கும் நன்மையில்லை, எங்களது ஆய்வின் முதலாவது விடயமாக, நிலப் பிரச்சினையயைப் பார்க்கிறோம். அதிலும் அகதிகளாக இருப்பவர்களின் நிலையும் இத்தோடு சம்பந்தப்படுகிறது. 2014 – 15 க்கிடையில் பெரிய மாற்றங்களை உண்டாக்க வேண்டும், எங்கள் ஆய்வில் தமிழ் மக்களின் விழிப்புணர்வை முன்னெடுக்கும் விடயங்கள் பற்றியும் முக்கியமாகக் கலந்துரையாடினோம். எங்களின் பிரச்சினைகளைச் சிங்கள மக்கள் பாராளுமன்றவாதிகள், முக்கியமாக ஜேவிபியுடன் பேசவேண்டும் வெளிநாட்டு அரசாங்ககங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். தமிழ்த் தகவல் நடுவத்துடன் சேர்ந்து இந்தியாவை நாட வேண்டும்.

கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும், வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தங்கள் திறமைகளை எங்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் பகுதியிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும், அவசரகால சட்டத்தை எடுக்க வேண்டும், பலகாலமாகச் சிறையிலிருக்கும் தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும், மிக மிக முக்கியமாக சிறையிலிருப்பவர்களின் பெயர் பட்டியல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

மலையகப் பேராசிரியரான மூக்கையா அவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள் தமிழ்ப் பாராளுமன்றவாதிகளின் உதவியுடன் பிராஜாவுரிமையை இழந்த காலத்திலிருந்து இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் பல சட்டதிட்டங்களாலும் பாதிக்கப்படுவதை விளக்கிக் கூறினார்.

புலம்பெயர்ந்த அரசியற் தலைமை!

வந்திருந்த பேராசிரியர்களில், பேராசிரியர் சித்தம்பலம்;, ‘இலங்கையில், தமிழ்ப் பகுத்களில் அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் விடயங்கள் பேசப்படுகின்றன, ஆனால் தமிழர்களுக்கான அரசியலுரிமை பற்றி எந்தப் பேச்சும் கிடையாது. தமிழ்பேசும் மக்கள் அத்தனைபேரும் ஒன்றுபட்டு எங்கள் உரிமைக்குப் போராட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். ‘இதுவரை பல முறைகள் பல தலைவர்களால் அரசியல்த் தீர்வுகள் வைக்கப்பட்டன. இன்று நாங்கள் இருக்கும் நிலையில் வடக்கு கிழக்கை இணைத்துக் கேட்க முடியாது ஆனால் பிராந்திய ஆட்சி பற்றிப் பேசினால் சிங்களத் தலைவர்களே ஆதரவு தருவார்கள். இன்று அங்கு நடைபெறும் அரசியலில் தமிழரின் பங்கு ஒன்றுமில்லை. அங்கிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் வலிமையற்றவை. அரசியலுக்குத் தேவையான அறிவோ அனுபவமோ அற்றவர்கள் பதவிகளில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தமிழருக்கான ஒரு நல்ல தலைமை உருவாக வேண்டும்’ என்பதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தார்.

பேராசிரியர். கணேஸ் பேசும்போது ‘ராஜபக்சா அரசு தமிழர்களுக்கு ஒன்றும் தரப்போவதில்லை தமிழ்பேசும் மக்கள் தங்கள் போராட்டத்தை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன் முன்னெடுக்க வேண்டும்’ என்றார். (சீனா புலிகளுக்கு நிறைய ஆயதங்களை விற்ற அதே காலகட்டத்தில் சிங்கள அரசுக்கும் பெருவாரியான உதவிகளைச் செய்வதும் இவர்களுக்குத் தெரியும்.)

இந்தியா, இலங்கைத் தமிழருக்குத் தூக்கிக்கொடுத்த ஈழத்தைத் தூக்கி எறிந்து விட்டுத் தமிழரின் பரமவைரியாகத் தமிழத் தேசியத்தால் கருதப்படும் சிங்களவருடன் சேர்ந்து இந்தியரைத் துரத்திய பெருமையையும் ரஜிவ் காந்தியைப் புலிகள் கொலைசெய்ததால் இனி ஒருநாளும் இந்திய மத்திய அரசின் இலங்கைத் தமிழருக்குக் கிடைக்காது என்பதையும் ஏன் இந்தப் பேராசிரியர்கள் உள்வாங்க மறுக்கிறார்கள்?

இதுவரை இலங்கையில் நடந்த போராட்டங்கள் பற்றி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தெரியாதா? இவர்கள் என்ன கருத்தைப் பின்னணியாக வைத்தக்கொண்டு மேற்கண்ட கருத்துக்களைச் சொல்கிறார்கள் என்பதற்கு அவர்கள் பல நாட்கள் இரகசியமாக நடத்திய ஆய்வுகளின் உரையாடல்கள் காரணிகளாக இருக்கலாம். மூன்றாவது நாடொன்றின்  ஈடுபாட்டையும் சிலர் உறுத்திச் சொன்னார்கள். மகாநாட்டுக்கு வந்திருந்த அறிஞர்கள் இதுபற்றி, தமிழருக்கு உதவும் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசியதாக திரு வரதகுமார் கூட்டத்தின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தார். இவர்கள் யாரைச் சந்தித்தார்கள் என்பது சொல்லப்படவில்லை – இரகசியம். அதுவரை நடந்த ஆய்வுகள் பற்றித் தகவல் நடுவத்தின் அறிக்கையும் வரவில்லை. அறிக்கையை உடனடியாக எழுத யாருமில்லை என்றும் சொல்லப்படலாம்

முப்பது வருடங்களாகத் தொடர்ந்து இயங்கும் இந்த ஸ்தாபனத்தில் தகவல் நடுவ முகவரைத் தவிர யாரும் முழு நேர ஊழியராக நியமிக்கப்படவில்லை. இலங்கையில் பல வருடங்களாகத் தனது பதவியாளரை வைத்திருக்கும் தகவல் நடுவத்திற்கு ஏன் லண்டனில் ஒரு காரியதரிசியை நியமிக்கத் தயக்கமாக இருக்கிறது என்பது புரியாத பல விடயங்களில் ஒன்றாகும்.

வருடா வருடம் பல்லாயிரக்கணக்கான மானியத்தை பல ஸ்தாபனங்களிலிருந்த பெற்று மகாநாடுகளை தகவல் நடுவம் நடத்துகிறது. இதனால் யாருக்கு என்ன பயன் என்று எந்த ஆவணங்களும் பிரசுரிக்கப்படவில்லை. அடிக்கடி பாக்கியசோதி சரவணமுத்து போன்றவர்களை அழைத்து ஒன்று கூடல் வைப்பது என்பதன் காரணம், உலகறிந்த என்ஜிஓ நபரான பாக்கியசோதியின் பெயரைப் பயன்படுத்தி தகவல் நிலையம் பெறும் வருடாவருட மானியத்தை உயர்த்திக்கொள்ளவா என்பதும் தொடரும் கேள்விகளில் ஒன்று.

இலங்கையிலிருந்து அவ்வப்போது ஒரு சிலர் லண்டன் தகவல் நடுவம் சார்பில் வெளிநாட்டார் உதவியுடன் இலங்கையிலிருந்து வெளிநாடுவர உதவி செய்யப்படுகிறது என்றும் அதனால் சிலர் நன்றிக்கடனுக்காக தகவல் நிலையம் பற்றித் தெரிந்தும் தெரியாமலிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 
முப்பது வருடங்களாகத் தகவல் நடுவத்தில் ஒரு நிரந்தர காரியதரிசி இல்லாததால் அவ்வப்போது சில ‘இளம்தலைமுறை'(?)யினர் ‘வாலண்ட்டியஸாக’ வந்து ஏதோ செய்வார்கள். பொது மக்கள் நெருங்க முடியாத ‘தகவல்களைக் கொண்டிருப்பதாலோ என்னவோ அங்கு என்ன நடக்கிறது என்பது ஒரு துப்பறியும் கதை மாதியே இருக்கிறது. அங்கு வேலை செய்வோர் ஓருத்தருக்கு ஒருத்தர் விசுவாசமான – இரகசியமான ஒரு ‘குடும்பம்’ மாதிரியான சூழ்நிலையில் தகவல் நடுவம் இயங்குவது புலிகளின் புலனாய்வுத்துறை என்ற பாணியிலேயே.

தகவல் நடுவத்திற்கு உதவிக்குச் செல்பவர்கள் இந்தத் தகவல் நடுவம் தமிழரின் முன்னேற்றத்துக்காக உழைப்பதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் அங்கு என்ன நடக்கிறது? யாருக்காக நடக்கிறது இதுவரை நடந்த விடயங்களால் என்ன பிரயோசனம் வந்தது  போன்ற தகவல்களைத் தகவல் நடுவ முகவர்  தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டுள்ளது.

அன்றைய கூட்டத்துக்கு வந்திருந்த அறிஞர்களும் தகவல் நடுவ முகவரும் தங்களின் முக்கிய கோரிக்கைகளாகத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும், சிறையில் இருக்கும் போராளிகள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்களின் பெயர்ப்பட்டியல் உடனடியாக வெளிவர வேண்டும் என்பவையாகும். இவை அத்தனையும் நல்ல கோரிக்கைகள்தான், அரசாங்கமும் அடிக்கடி கொஞ்சப்பேரை விடுதலை செய்கிறது. ஆனாலும்;;;;; தகவல் நடுவத்தார், உள்ளிருக்கம் பேராளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றும் ஏன் இப்படிப் பதறுகிறார்கள் என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இராணுவத்தை அகற்றிவிட்டு, போராளிகளை வெளிக்கொணர்ந்து தூண்டிவிட்டு இன்னுமொரு பயங்கரவாதத்தை முன்னெடுக்கப் போகிறார்களா? கடந்த ஆண்டு போர் முடிய முதல் ஐக்கிய நாடுகள் படையை இலங்கையில் இறக்க வேண்டும் என்று தகவல் நடுவம் பிரச்சாரம் செய்தது. அப்படி ஒரு படைபோனால் சிங்களவர்கள் ஆயதமெடுப்பார்கள் என்று தெரியும். இப்போது, பட்டினியான அகதிகளுக்குச் சாப்பாடு போடாமல், தற்கொலைதாரிகளாகப் போராட்டத்தில் பயிற்சி பெற்ற  போராளிகளை வெளிக்கொண்டுவரக் கோருகிறார்கள். ஏன்?

தங்களுக்குப் பிடிக்காத அரசுகளுக்கத் தலையிடி கொடுக்க அந்த நாடுகளில் பிரச்சினைகளை உண்டாக்குவது மேற்கு நாடுகளின் ஒரு பெரிய ‘ஜனநாயகப் பணியாகும்’. இதனால் மேற்கு நாடுகளின் முக்கிய விற்பனையான ஆயத விற்பனையைக் கூட்டுவார்கள். ஓரு கட்டத்தில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை ‘விடுதலைப் போராளிகள்’ என்று போற்றி மேற்கு நாட்டில் ஒரு மாயையை உண்டாக்குவார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை முன்னெடுக்க அமெரிக்கா செய்த பணிகள் இதற்கு உதாரணம்!

மேற்கு நாடுகளின் இந்த மனித உரிமை விடயத்தை ஆழமாகத் தெரிந்து கொள்ளாத, பாதிக்கப்பட்ட நாடுகளின் பொது மக்கள், ஸ்தாபனங்கள், இவர்களின் ‘மனித உரிமைக்குரலின் இரக்கத்தை’ உண்மையென்று நம்புவார்கள். ஆயதத் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் தங்கள் வியாபாரிகளை ‘’மனித உரிமைவாதிகள்’ என்ற பெயரில் பாதிக்கப்படும் நாடுகளுக்குப் பல போர்வைகளிற் செல்வார்கள். ஏன்.ஜி.ஓ. என்ற பெயரில், தங்களுக்குக் குழல் ஊதும் ஒரு கோஷ்டியை உருவாக்குவார்கள். அவர்கள் பல நாடுகளுக்குச் செல்லவும் மகாநாடுகளிற் பங்கு பற்றவும், தங்களின் நாட்டைப் பற்றித் திட்டித் தீர்க்கவும் நல்ல சம்பளம் கொடுப்பார்கள். அந்தச் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்க உண்மையாகக் குரல் கொடுப்பவர்களைத் தங்களின் ஊது குழல்களால் தாக்கித் தள்ளுவார்கள் (புலிகளிடம் வாங்கிக் கட்டியவர்களுக்கு இது புரியும்)

ஏற்றுமதிகளுக்குப் பெரிதாக ஒன்றமில்லாமல் பணம் படைக்கத் தங்கள்  நவீன ஆயதத்தையே நம்பியிருக்கும் மேற்கு நாடுகளுக்கு இலங்கையில் போர் முடிவு பெற்றது பெரிய ஒரு அடியாகும். எப்படியும் ஒரு பிரச்சினையை உண்டாக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். சரத் பொன்சேகாவை ஆதரித்தால் சிங்களவர் தங்களுக்குள் அடிபடுவார்கள் என்று புத்தியுள்ள தமிழர்கள் சொன்னார்கள். பொன்சேகாவை ஆதரித்தவர்கள் நினைத்தார்கள். சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்தார்கள். 1971, 89ம் ஆண்டுகளில் ஜேவிபி யின் ஆயுதப் புரட்சியை மனதில் வைத்துக்கொண்டு, சரத் பொன்சேகாவின் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பத்தை வைத்து, ஆயுதம் விற்கலாம் என்று போட்ட கணக்கும் பிழைத்து விட்டது. அதற்கான முற்கட்டமாக சுவிட்சர்லாந்தில்’ இரகசியமாக’ நடந்த கூட்டத்தில் தமிழ்த் தலைவர்களுக்கு, மேற்கு நாட்டு எஜமான்கள்  சொன்னபடி அவர்கள் நடந்தும் பொன்சேகாவால் வெல்ல முடியவில்லை.

இப்படியான இரகசியக் கூட்டங்களுக்குப் பின்னாலிருக்கும் பாரதூரமான விளைவுகளைத் தமிழர்கள் உணர வேண்டும். ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்வாழ்க்கை…..’ என்ற பெரிய வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் பயங்கரங்களைத் தமிழ்பேசம் மக்களுக்குத் தெரியப்படுத்த புத்தி ஜீவிகள் முன்வர வேண்டும். இந்தக் கூட்டங்களுக்குத் தொடர்ந்தும் பொருளாதார உதவி செய்யும் ஸ்தாபனங்களின் உள்ளுணர்வை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையின் துன்பத்தில் இலாபம் காணும் நாடுகளை அடையாளம் காண வேண்டும். அமெரிக்கப் படைகள் 133 நாடுகளில் தளங்களை வைத்திருக்கிறது. அவர்களின் ஆயுதங்களை வாங்கப் பல நாடுகளை ‘வியாபார’ ஒப்பந்தங்கள் மூலம் அவர்களின் ஆயுதங்களை வாங்க நிர்ப்பந்திக்கப் படுவதுண்டாம். இன்று பொருளாதாரத்தில் பின்னடையும் மேற்கு நாடுகளுக்கு ஆயுத விற்பனை உடனடியாகத் தேவைப்படுகிறது. அதற்குப் பலியாவது அப்பாவி இலங்கை மக்களா?

தமிழருக்கு உதவி செய்யும் நாட்டுப் பிரதிநிதிகளுடன் வந்திருந்த அறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அந்த ‘நல்ல’ மனிதர்கள் பற்றிய விடயங்கள் என் இரகசியமாகவிருக்க வேண்டும்? உருரத்திர குமார் கூட்டத்தால் ஓரம் கட்டப்பட்ட வரதகுமார் இன்ற யாருடன் துணை சேர்ந்திருக்கிறார். ஐரிவி இல் பேட்டி கொடுத்த பிரமுகர்களுக்கு ஐரிவி யாரால் நடத்தப்படுகிறது என்று தெரியாதா?

இதுபற்றிய – அதாவது லண்டன் தமிழர் தகவல் நடுவத்தால் தொடரப்படும் இரகசியக் கலந்துரையாடல்களைப் பற்றிய சில கேள்விகளை முதலில் வைக்க வேண்டும், தமிழர்களுக்குத் தகவல்கள் தருவதற்காக இயங்குவதாகச் சொல்லப்படும் ஒரு ஸ்தாபனம் ஏன் பல விடயங்களை இரகசியமாக நடத்துகிறது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். மக்களுக்காச் சேவை செய்வதாகச் சொல்லும் அமைப்புக்கள் மக்களை இருட்டில் வைப்பது ஏன் என்ற கேள்விக்கு தமிழர் தகவல் நடுவகம் பதில் சொல்ல வேண்டும்.

இலங்கை நாணய மதிப்பின்படி ஒரு சில கோடிகள் செலவழித்து சுவிட்சர்லாந்தில் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்காக இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் பாராளுமன்றவாதிகள் அழைக்கப்பட்டார்கள். அந்தக் கூட்டத்தைப் பற்றிய விடயம் இரகசியமாக கசிந்தபோது, இலங்கையிலுள்ள பலர் தமிழ்த் தலைவர்களைத் தொடர்பு கொண்டார்கள். இராஜபக்சா சகோதரர்களைப் பதவியிலிருந்து தூக்கியெறிய, வெளிநாட்டுச் சக்திகள் பணம் கொடுத்துத் தமிழ்த் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்கள் சரத் பொன்சோகவுக்கு வாக்களிக்கச் செய்யப் பண்ணப்போவதாக வதந்திகள் உலவின.

பிரித்தானிய அரசியற் துப்பறியும் கதைகளில் மிகவும் பிரசித்தகான கதைகளின் பின்னணியில் வெளியாகும் ஜேம்ஸ் படங்களில் அதி வீரனான ஜேம்ஸ் பொண்ட், பிரிட்டனுக்குப் பிடிக்காத நாடுகளின் தலைவர்களை மாற்றப் பல சாகசங்கள் செய்வார். சாகசங்ளின் மகிமையால் வெல்வார். திரு வரதகுமார் ஜேம்ஸ்பொண்டாக மாறி இலங்கை அரசைத்  தூக்கியெறிய எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவது சொஞ்சம் கஷ்டமான விடயமே. குழந்தைகளுக்குத்தான் ஜேம்ஸ் பொண்ட் படம் சரியானது, யதார்த்த விடயங்களுக்கல்ல.

கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் தலைவர்களை அழைத்து வைக்கப்படவிருந்த கூட்டம்  பற்றிய நிகழ்ச்சிநிரல்கூட, கூட்டத்திற்கு, இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. தமிழ்த் தலைர்கள் மேற்கு நாட்டு மேடைக்கு வந்தபோது, ஓரு வெள்ளையினத்தவர் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகவிருந்ததைக் கண்டார்கள். ”கூட்டத்துக்குரிய நிகழ்ச்சி நிரல் எங்கே?, தமிழ்த் தலைவர்களுடன் பேசுவதற்கு ஏன் ஒரு அன்னியன் தலைமை தாங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானனந்தா கேள்விகள் கேட்டதும், அந்தக் கேள்வியின் ஆத்திரத் தொனியில் அல்லாடிப்போன தகவல் நடுவ முகவர் வரத குமார் ஏதோ ஒரு வகையில் கூட்டத்தை நடத்தியதும் வெளிவந்தது. கூட்டத்திற்குச் சமுகம் தந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டணியின் சம்பந்தர் பட்டாளம் இலங்கையில நடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழ் இனத்தின் பகைவனாக, ‘தமிழர்கள் இலங்கை மண்ணின் மைந்தர்கள் அல்லர் அவர்கள் இந்நாட்டுக்கு வந்தேறு குடிகள், அவர்கள் தங்களுக்கு என்று எதையும் கேட்க உரிமை கிடையாது, சிங்களவர் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று கிண்டலடித்த சரத் பொன்சேகாவுக்காக வாக்குக் கேட்டது.
 
அப்படியான சிங்களத் தலைவர்களைத் தூக்கிப் பிடிக்கும் தமிழர் தகவல் நடுவம் அண்மையில் தங்கள் ‘மீட்சி’ பத்திரிகையில் இதுவரை தமிழர்களுக்குத் துரோகம் செய்த அரசியலைக் கண்டித்து எழுதியிருந்தது. அதே துரோகத்தை யார் தொடர்கிறார்கள் என்பதை உணராமற் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பது மிகவும் தான்தோன்றித் தனமாகும். நேரத்துக்கு நேரம் தனது கொள்கைகளையும் கணிப்புகளையும் மாற்றிக்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் யாருக்காக வேலைசெய்கிறது என்ற கேள்வி கேட்கப்படுவது தவிர்க்க முடியாதது.

தகவல் நடத்தும் பல கூட்டங்களின் தொடர்பாக எதிர்வரும் 23ம் திகதி, ‘போருக்குப் பின் இலங்கையில், பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்’ என்ற பெயரில் இன்னுமொரு கருத்தரங்கு நடக்கிறது. இக்கூட்டத்திற்கு அகில உலக என்.ஜி.ஓ ஸ்தானங்களின் உதவியுடன் இலங்கையிலிருந்து யார் பேச்சாளராக வரப்போகிறார்கள் என்பதும் இதுவரை இரகசியமாகவே இருக்கிறது.

Related Articles:

தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்! : த ஜெயபாலன்

சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

Imelda_Sugumar_GA_JaffnaUoJ_Signboardயாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 11 (நேற்று) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இமெல்டா சுகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாகவே என்றுமில்லாதவாறு இத்தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்ந்து ஒரு வாரத்திற்குள் இப்பாரிய குற்றச்சாட்டை அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளியிட்டு உள்ளார்.யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான நீண்ட விவாதம் யூலை 01 2010 முதல் தேசம்நெற் இல் இடம்பெற்று வருகின்றது. இதில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட பல்வேறு சீரழிவுகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகி உள்ளமை தெரிந்ததே. அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக நிர்வாகச் சீரழிவையும் கல்வித் தகமையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியையும் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட அங்குள்ள நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முடிவுகட்ட இவை தொடர்பான உடனடியான சுயாதீன விசாரணைக்கு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உத்தரவிட வேண்டும். இவ்வாறான ஒரு விசாரணைக்கு யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்தில் அதிகாரத்தைக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முழுமையான ஆதரவளிக்க வேண்டும். இவற்றின் மூலமாக மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சீரழிவுக்கு முடிவு கட்டுவதுடன் யாழ் பல்கலைக்கழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல முடியும்.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் விரிவுரையாளர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர் என சுவரொட்டிகளை ஒட்டியது தெரிந்ததே. இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் வெளியான சுவரொட்டி

”இறுதி எச்சரிக்கை

போரின் கோரப்பிடியில் சிக்கி தமது வாழ்வைத் தொலைத்த உறவுகள் மற்றும் சொத்துக்களை இழந்த வன்னி மக்கள் அலல்படும் வேளையில் தமது கலாச்சார விழுமியங்களை சீர்குலைக்கும் ஒரே நோக்கமாகவும் சமூக நிறுவனமான யாழ் பல்கலைக்கழகப் பெயரைக் குலைக்கும் நோக்கமாகவும் சில விரிவுரையாளர்களின் நடத்தை காணப்படுகிறது. குறிப்பாக மாணவிகளை வற்புறுத்தி தமது காம இச்சைகளை தீர்த்து வருகின்றனர். ஆலயம் போல் காணப்படும் இப்பல்கலைக்கழகத்தினதும் எமது சமூகத்தினதும் கலாச்சாரத்தினைச் சீரழிக்கும் இவ்வாறான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இவர்களது இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இன்னும் சில காலப்பகுதியினுள் உங்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்படும். இது உங்களுக்கு நாங்கள் விடுக்கும் இறுதி எச்சரிக்கை. இதனை நீங்கள் அலச்சியப்படுத்தினால் உங்கள் மனைவிகள் விதவையாவதை யாராலும் தடுக்க முடியாது.

எனவே கீழ் குறிப்பிடப்படும் விரிவுரையாளர்கள் உடனே இந்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

இளங்குமரன்
விசாகரூபன்
நவரத்தினம்
அருந்தாகரன்

எச்சரிக்கைகளை அலச்சியப்படுத்தினால் தண்டனைகள் நிறைவேற்றப்படுவது தவிர்க்க முடியாதது.

மாணவர் சமூகம்
யாழ் பல்கலைக்கழகம்.”

இச்சுவரொட்டி ‘மனைவிகள் விதவையாக்கப்படுவார்கள்’ போன்ற கடுமையான தண்டனைகளைக் குறிப்பிட்டிருந்த போதும் இது மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு இந்த எச்சரிக்கையை ஒருவழிமுறையாகவே பயன்படுத்தி உள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் தற்கொலை முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மௌனமாக தமக்குள் அழுகின்ற பல நூற்றுக் கணக்காண மாணவிகளின் வாழ்நிலையை எதிரொலித்து உள்ளார். முன்னர் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் பின்னணியில் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளமை கண்டறியப்பட்டு இருப்பதையும் அரச அதிபர் உறுதிப்படுத்தி உள்ளார். பெயர் குறிப்பிடாத வைத்திய அதிகாரி ஒருவர் இதனைத் தனக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்களின் பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அரச அதிபர் குற்றம்சாட்டி உள்ளார்.
 
அண்மையில் யாழ் மாவட்ட சிறார்கள் மீதான துஸ்பிரயோகங்கள் தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே சுகாதார திணைக்களப் பெண் வைத்திய அதிகாரி இந்தத் தகவல்களை வெளியிட்டதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். அண்மைக் காலங்களில் மட்டும் 77க்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று இருக்கின்றமை தொடர்பான பதிவுகள் வந்திருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் அண்மைக் காலங்களில் வேகமாக அதிகரித்து இருக்கின்றமை அதிர்ச்சியை தருவதாயும் அரச அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அரச அதிபருடைய இக்குற்றச்சாட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கான காலகட்டத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அரச அதிபர் குற்றம்சாட்டிய விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் போன்றோரே மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்ற உபவேந்தருக்கான பதவிகளிலும் போட்டியிடுகின்றனர். பாலியல் துஸ்பிரயோகம் அதிக அளவில் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டப்படும் கலைப்பிரிவுத் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமாரன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சத்தியசீலன், தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கு போட்டியிடுபவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் ஸ்தாபனமயப்படுத்த காரணமாக இருந்ததுடன் இவர்களே இவ்வாறான பாலியல் மற்றும் நிர்வாகத் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

சுயாதீன விசாரணைக் குழு ஒன்றின் மூலம் யாழ் பல்கலைக்கழக பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதற்கு இதுவே சிறந்த தருணமாக உள்ளது.

யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் பற்றி தேசம்நெற்க்கு கருத்து வெளியிட்ட யாழ் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கபொத உயர்தர மாணவிகள், ‘நாங்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கே படிக்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கதைகளை மூத்த சகோதரிகள் சொல்வதை கேட்டால் பயமாக இருந்தது. அங்கு செல்வதற்கு பயந்தே இருந்தோம். அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இது வந்தது ஆறுதலாக உள்ளது’ எனத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

தாயக மக்களின் அபிவிருத்திக்கு உதவ முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கிழக்கு லண்டனில் ஒன்றுகூடினர்! : ரி சோதிலிங்கம்

நேற்று 10/ 10/2010 லண்டன் லேயிட்டனில் ரெலோவின் பல முன்னாள் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நடைபெற்றது. முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா மற்றும் ரெலோவின் அப்போதைய படைத்துறைத் தளபதி இளங்கோ ஆகியோர் அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று பல முன்னாள் ரெலோ உறுப்பினர்களையும், இன்றைய ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறீரெலோ உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றோர்களை சந்தித்து உரையாடி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து லண்டன், லேய்டனில் ரெலொ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள், புலிகளுடனான சகோதரப் படுகொலைகளில் பாதிப்புற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பல முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் அமைப்பு ரீதியாக இயங்காமலும், நாட்டில் உள்ள ரெலோ அமைப்புடன் இணைந்து வேலை செய்யாமலும் வாழ்கின்றார்கள். இவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் தமது மக்களுக்கான பணிகள், மக்களுக்கு சிரமதான உதவிகள், மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகள் புரிய வேண்டும் என வலியுறுத்தியும், தாம் மக்களின் அபிவிருத்தி நலனில் அக்கறையுடன் செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதரவினையும், உதவிகளையும் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் கேட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைகள் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினரிடையே ஒரு ஒன்று கூடலை வற்புறுத்தியும் உள்ளது.

மேலும் புலம்பெயர்நாட்டில் உள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் பலர் தாம் தனிப்படவும், பல்வேறுபட்ட பொது அமைப்புகள் ஊடாகவும் தமிழ் மக்களுக்கான உதவிகள் மேற்கொள்வதையும், இந்த உதவிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு, ரெலோ உறுப்பினர்கள் ஸ்தாபன மயப்படுத்தப்பட்டு உதவிகள் புரிய விரும்புவதாகவும் தெரிவித்தமையையும் தொடர்ந்து இந்த ஆரம்பக் கூட்டம் கூட்டப்பட்டது.

இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எந்த வழிகளிலும் உதவி செய்தலையே அடிப்டையாக கொண்டு இயங்குவது என்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ரெலோ உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தமது முன்னாள் உறுப்பினரிடையே நிநி சேகரிப்புக்களை நடாத்தி, வடகிழக்கில் கஸ்ட நிலையில் உள்ள மக்களுக்கு சிறுகைத்தொழில் மற்றும் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் மேற்கொள்வது என்றும் இது பற்றிய மேலதிக முடிவுகளை பரந்த ரெலோ உறுப்பினர்களின் ஒன்றுகூடலில் முடிவு செய்வது என்றும் முடிவானது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஒன்றுகூடலை நவம்பரில் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இன்று நாட்டில் இருக்கும் ரெலோவினரிடையே ஒரு ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் மக்களின் அரசியலையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஒருசாரர் கருத்து வெளியிட்டனர். நாட்டிலுள்ள ரெலோவின் அரசியலில் புலம்பெயர் ரெலொ உறுப்பினர்கள் நேரடியாகத் தலையீடக்கூடாது என மறுசாரர் கருத்து வெளியிட்டனர். லண்டனில் ரெலோவிற்கு  உத்தியோகபூர்வ அலுவலகத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என முன்னையோரும், ரெலோ அலுவலகம் அல்ல தாயக மக்களின் உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் ஒன்று அவசியம் என மறுசாராரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் வேண்டும் என்பவர்கள் ஒரு உதவி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த மாறுப்பட்ட கருத்துக்களில் எதை ஏற்றுக் கொள்வது என்பது விரைவில் கூட்டப்படவுள்ள ரெலோ உறுப்பினர்களின் பரந்த கூட்டத்திலேயே முடிவு செய்யப்படவுள்ளது.