அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கு அதிக நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். “இது இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது’ என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்து நாட்கள் வரை, அவர் இங்கு தங்கியிருக்க கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒபாமா இத்தனை அதிக நாட்கள் வேறு எந்த வெளிநாட்டிலும தங்கியது இல்லை என அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுடனான நட்பை பலப்படுத்துவதற்கு, அமெரிக்கா அதிக ஆர்வமுடன் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மும்பை, அமிர்தசரஸ், டில்லி உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒபாமா பங்கேற்கவுள்ளார். மும்பையில் கடந்த 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
இது குறித்து தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறுகையில், “அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்துக்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும, அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப் பயணம், இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.