உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வவுனியாவில் இரட்டை கொலை சந்தேகநபர்களுக்கு பிணை ! 

வவுனியாவில் இரட்டை கொலை சந்தேகநபர்களுக்கு பிணை !

வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த காரணங்கள் இல்லை என்று பிணை வழங்க வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலின் போது பெற்றோல் ஊற்றி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் எரித்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள் முன்வைக்கப்பட வில்லை. அதனால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதவில்லை என்று கூறி குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது குற்றவாளிகள் தப்பிக்கின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது குற்றவாளிகள் தப்பிக்கின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை !

 

பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கு ஒவ்வொருவரும் தயாராகினால் சமூக மாற்றம் தானாகவே ஏற்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது எனவும் அப்போது அவர் கவலை தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும் ஓரணியில் கைகோர்த்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் ஆளுநர் அறைகூவல் விடுத்தார். பெண்களின் உரிமைகள் இன்றும் மறுக்கப்படுவதனால்தான் மகளிர் தினத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் என்று கூறிய ஆளுநர் இன்று பெண்கள் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் குறிப்பாக வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகள் என எங்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். சமூக மாற்றம் என்பது நாம் அனைவரும் பெண்களை மதிக்கும் போது தானாக வரும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இணக்க அரசியல் சாபக்கேடு இல்லை என்கிறார் மகிந்தவின் கிளி அமைப்பாளர் மதனவாசன்

இணக்க அரசியல் சாபக்கேடு இல்லை என்கிறார் மகிந்தவின் கிளி அமைப்பாளர் மதனவாசன்

பேரம்பேசும் சக்தியாக இல்லாமல் ஆட்சியில் பங்களராக தமிழர்கள் இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கிளி அமைப்பாளராக பொறுப்பேற்ற மதனவாசன் தமிழ்மக்களுக்கு ஆலோசனை. இளையோர் தங்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியல் மட்டுமே எமது அரசியல் என்பதை கைவிட்டு இணக்க அரசியலில் இணைய வேண்டும் என்று மேலும் கூறினார். ப. மதனவாசன் அண்மையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

தொடரும் தையிட்டி விவகாரம் சிறிதரனோடு கை கோர்க்கின்றார் மகிந்தவின் மதனவாசன் !

தொடரும் தையிட்டி விவகாரம் சிறிதரனோடு கை கோர்க்கின்றார் மகிந்தவின் மதனவாசன் !

யாழ்-தையிட்டி பகுதியில் விகாரை கட்டவென காணிகள் சுவீகரிக்கப்படவில்லை. ஆகவே அங்கு விகாரை கட்டியிருப்பது சட்ட விரோதமானது. இதனை புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் ஏற்றுக் கொள்வாரா?. காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன? என பாராளுமன்றில் எம்பி சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இவ் விடயம் தொடர்பில் காணி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தகவல்கள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்பின்னர் முழுமையான பதிலை வழங்குகின்றேன் என்று பதிலழித்தார்.

இதேவேளை இன நல்லிணத்திற்காக யாழ் தையிட்டி விகாரையை அகற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஆதரவு என்கிறார் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன்.

இளகிய ரணிலை கண்டு மெஹ்தி ஹசன் தூக்கி தூக்கி அடித்தார் – அலி சப்ரி கொந்தளிப்பு

இளகிய ரணிலை கண்டு மெஹ்தி ஹசன் தூக்கி தூக்கி அடித்தார் – அலி சப்ரி கொந்தளிப்பு

 

அல்ஜசீராவின் மெஹ்தி ஹசனுடனான முன்னாள் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய நேர்காணலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்காக வக்காலத்துக்கு வந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி.

சப்ரி அல்ஜசீராவின் பேட்டியை ஊடக வேடமிட்டு நடத்தப்பட்டதாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் அலிசப்ரி மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ

நான் மெஹ்தி ஹசனை முன்னரும் பார்த்திருக்கின்றேன்இஅவர் எப்போதும் மோதல்போக்கை கொண்ட ஆக்ரோஷமானவராக காணப்படுவார்.

ரணில்விக்கிரமசிங்க உடனான அவரது நேர்காணால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இது பதில்களைபெறுவது பற்றியது அல்ல. இது ஊடகத்துறை தொடர்பானது இல்லை. இது நிகழ்ச்சிநிரல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பானது இது தாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு நேரடி விசாரணை.

பேட்டி வழங்குபவருக்கு எதிரியின் பகுதிக்குள் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இலங்கை எதிர்ப்பு உணர்வு கொண்ட பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மெஹ்தி பதில்கள் குறித்து கூச்சலிட்டார்இ விளக்கங்களை துண்டித்தார்இமேலும் தனது சொந்த சொல்லாடலிற்கு ஏற்றவாறு வார்த்தைகளை திரித்தார். பதில்கள் தனது விருப்பத்திற்கு ஏற்ப இல்லாவிட்டால் அவர் செவிமடுக்க மறுத்தார்.

உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்களை அவர் இவ்வாறு கையாள்வாரா என்ற கேள்வி எழுகின்றது.அவர்களின் யுத்த குற்றங்கள்இஅவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து இதேயளவு ஆக்ரோசத்துடன் விமர்சிப்பாரா? அல்லது நம்மை போன்ற சிறிய நாடுகளின் தலைவர்களிற்காக இது ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று குறிப்பிட்டுள்ளார். சப்ரியின் மன வேதனை நியாமனதாகவே படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்இ சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில்இ சனல் 4 இல் கிருஷ்ணன் குருமூர்த்தியின்இ ரணில் விக்கிரமசிங்கவுடனான நேர்காணல் போன்று மெஹ்தீனூடனான நேர்காணல் வினைத்திறனாக அமையவில்லை என தேசம் ஜெயபாலன் தெரிவிக்கின்றார். சனல் 4 இல் குருமூர்த்தியால் ரணில் அம்பலப்படுத்தப்பட்டார். அல்ஜசீராவில் ரணிலை பதிலளிக்க விடாமல் தொடர்ந்து குறுக்கிட்டமையால் இந்த நேர்காணல் இறுதியில் எதையும் சாதிக்க வில்லை. போர்க்குற்றம் தொடர்பான கேள்விகளில் ரணில் நழுவலாகவே பதிலளித்தார். உண்மையில் ரணிலிடமிருந்து இன்னும் காத்திரமான வாக்குமூலத்தை வாங்கும் சந்தர்ப்பத்தை மெஹ்தீன் தவறவிட்டுவிட்டார். செத்த பாம்பை அடித்தது தான் மிச்சம் எனவும் அவர் தெரிவித்தார்.

அல்ஜசீராவுடன் மோதியது ஃபெராரி கார் – ரணிலுக்கு என்.பி.பி பதிலடி!

அல்ஜசீராவுடன் மோதியது ஃபெராரி கார் – ரணிலுக்கு என்.பி.பி பதிலடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஊடகங்களை சந்தித்த வேளையில், நீங்கள் மீண்டும் பாராளுமன்றம் செல்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த போது ”பெராரி உரிமம் உள்ள ஒருவர், ‘எல்’ போட் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அல்ஜசீரா ஊடகத்துக்கு ரணில் வழங்கிய நேர்காணலில் பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கும் முகம்கொடுத்திருந்த நிலையில், இது தொடர்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, கவலையான செய்தி ஒன்றை தெரிவிப்பதாக குறிப்பிட்டு அல்ஜசீராவுடன் ஃபெராரி கார் ஒன்று மோதியதாக பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறாம் திகதி 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் போக்குவரத்து அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்ற முற்பட்டபோது, மிகவும் கவலையான செய்தியுடனேயே விவாதத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பேச ஆரம்பித்த போது, சபையில் இருந்த சகல எம்.பிக்களும் ஏதோவொரு கவலையான செய்தியொன்றையே அவர் கூறப் போகின்றார் என்று அதிர்ச்சியுடன் அவர் கூறுவதை உன்னிப்பாக கேட்டனர்.

இதன்போது அவர், அண்மையில் இடம்பெற்ற பெரிய வாகன விபத்தொன்று தொடர்பில் இங்கே அறிவிக்க வேண்டியுள்ளது. பெராரி வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரின் மூளைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவர் இந்த தினங்களில் பல்வேறு கதைகளை கூறுகின்றார். போக்குவரத்து அமைச்சு மீதான விவாதம் நடக்கும் இந்த நேரத்தில் பெராரி வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவருக்கு எங்களின் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார். அவர் கூறியதை கேட்டு எம்.பிக்கள் சிரித்தனர்.

சிற்றிசன் ஊடகவியலாளர்களான யுரீயூப்பேர்ஸ்க்கு அங்கீகாரம் !

சிற்றிசன் ஊடகவியலாளர்களான யுரீயூப்பேர்ஸ்க்கு அங்கீகாரம் !
யுரீயூப் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் . எம் மரிக்கார் கோரினார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எம்.பி மரிக்கார்,
யூடியுப் ஊடகவியலாளர்களையும் ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்வது மிக முக்கியமாகும். யூடியுப் ஊடகவியலாளர்கள் யூடியுப் ஊடாக எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு அவசர தேவையின் போது அவர்களுக்கு வங்கிகளுக்குச் சென்று கடனுதவி பெற்றுக் கொள்ள முடியாது காணப்படுகின்றது.
177 யூடியுப் சனல்கள் மூன்று வருடங்களாக மக்கள் விடுதலை முன்னணியின் திசைக்காட்டிக்காக பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக பணியாற்றின . 400 பேஸ்புக் பக்கங்கள் காணப்பட்டன . தொழில் ரீதியாக அவர்களுக்கு வரவேற்பும் நன்மதிப்பும் கிடைக்குமெனில் அவர்களுக்கு 15 வீத வரி விதிப்பதில் தவறில்லை . ஊடகவியலாளர்களையும் அதனால் யூடியுப் ஊடகவியலாளர்களாக அங்கீகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் . எம் . மரிக்கார் கோரிக்கை முன் வைத்தார்.

தமிழ்கட்சிகளுடன் ஒரு தோணியில் பயணிக்க ஈபிடிபியும் பச்சைக்கொடி !

தமிழ்கட்சிகளுடன் ஒரு தோணியில் பயணிக்க ஈபிடிபியும் பச்சைக்கொடி !

 

தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தயாராக உள்ளதாக அதன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இவ்வேளையில் பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என்று கூறிய பன்னீர்செல்வம். கடந்த காலங்களைப்போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் இருந்தும் தமது கட்சி பின்வாங்க வில்லை என்ற கருத்துப்பட தெரிவித்தார்.

வாள்வெட்டுக்குழுக்கள் வடக்கு கிழக்கின் அடையாளமாகி வருகிறது !

வாள்வெட்டுக்குழுக்கள் வடக்கு கிழக்கின் அடையாளமாகி வருகிறது !

மட்டக்களப்பில் திட்டமிட்ட வகையில் வாள்வெட்டு குழு உருவாக்கப்படுவதாகவும் இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், சமீபத்தில்

மட்டக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் இது தொடர்பில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என வலியுறுத்தினார். மறைமுகமாக இவ்வாறான குழுக்களை இராணுவத்தினரே உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.

இந்த விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் நேரடியாகவே இராணுவத்தை குற்றம் சாட்டினார். போதைப்பொருள் வியாபாரம் , வாள்வெட்டு என சமூக சீரழிவுகளில் ஈடுபடுபவர்கள் இராணுவ முகாம்களிலேயே தஞ்சம் அடைகின்றனர் என்று சாடினார்.

யாழ்.பல்கலைகழகத்தின் வெளிவாரி பேரவை 16 புதிய உறுப்பினர்கள் நியமனம்

யாழ்.பல்கலைகழகத்தின் வெளிவாரி பேரவை 16 புதிய உறுப்பினர்கள் நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் வெளிவாரி பேரவைக்கு உறுப்பினர்களாக இருந்த தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் உட்பட அனைவரும் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குச் செயற்படும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒரு உறுப்பினர் அதிகமாக எண்ணி வெளிவாரி பேரவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழமையாகும். ஒருவாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை கிளீன் செய்யப்பட்டுவிட்டது. அதேமாதிரி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்வாரியாக குறிப்பாக கலைப்பீடமும் விரைவில் கிளீன் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:

பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் (ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரியர்),

இ.பத்மநாதன் (முன்னாள் பிரதம செயலாளர் – நிதி),

எஸ்.வினோதினி (பிரதம பொறியியலாளர், கட்டடங்கள் திணைக்களம்),

ஏ.சுபாகரன் (திட்டப்பணிப்பாளர், ஏசியா பவுண்டேசன்),

வைத்திய நிபுணர் என். சரவணபவ மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர்),

ஷெரீன் அபதுல் சரூர் ( எழுத்தாளரும், பெண் உரிமைச் செயற்பாட்டாளர்),

கலாநிதி எம். அல்பிரட் (முன்னாள் பீடாதிபதி, பேராதனைப் பல்கலைக்கழகம்),

அ. குணாளதாஸ் (பட்டயப் பொறியியலாளர்),

என். செல்வகுமாரன் (முன்னாள் பீடாதிபதி, சட்டபீடம், கொழும்பு),

வனஜா செல்வரட்ணம் (பணிப்பாளர், வட மாகாண தொழிற்றுறை திணைக்களம்),

டி. கே.பி.யூ. குணதிலக (முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர், இலங்கை மின்சார சபை),

எம். ஜே. ஆர். புவிராஜ் ( முன்னாள் பணிப்பாளர், திறைசேரி),

பேராசிரியர் சி.சிவயோகநாதன் ( வாழ்நாள் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்),

பி. ஏ. சரத்சந்திர ( முன்னாள் அரச அதிபர், வவுனியா), க.பிரபாகரன் (சட்டத்தரணி),

ஏ.எம்.பி.என். அபேசிங்க (மாகாணப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், வடமத்திய மாகாணம்.)