வவுனியாவில் இரட்டை கொலை சந்தேகநபர்களுக்கு பிணை !
வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த காரணங்கள் இல்லை என்று பிணை வழங்க வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலின் போது பெற்றோல் ஊற்றி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் எரித்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள் முன்வைக்கப்பட வில்லை. அதனால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதவில்லை என்று கூறி குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.