வேலணை வைத்தியசாலை மருத்துவமாது மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியருக்கு தமிழ் சட்டத்தரணி ஒருவரே அதி தீவிரமாக வாதாடி பிணையில் செல்ல வழிசமைத்துள்ளமை வேதனைக்குரியது என தமிழர்விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பொன்றை தமிழர்விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா. சங்கையா வெளியிட்டுள்ளார்.
மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணத்தின் சோகமும். அது குறித்த செய்திகளின் சூடும் தணியுமுன் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியருக்கு பிணை வழங்க வேண்டுமென யாழ்.மேல் நீதிமன்றத்தில் அதி தீவிரமாக வாதாடியுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில் தமிழ் சட்டத்தரணியான இவர் கொலை சந்தேக நபரான வைத்தியருக்காக வாதாடி பிணை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றால் அவரின் சட்டவாதத்திறமையை எண்ணி பெருமைப்படுவதா வேதனைப்படுவதா அல்லது வெற்கித் தலை குனிவதா என்று தெரியவில்லை. எத்தனையோ அப்பாவித் தமிழர்கள் விசாரணைகள் எதுமின்றி சிறைகளில் வருடக்கணக்கில் வாடும்போது அவர்களுக்காக இந்த சட்டத்தரணி ஏன் தனது வாதத்திறமையை பயன்படுத்தக் கூடாது?
தர்சிகாவின் மரணம் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தொலைபேசி மூலமும், நேரடியாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தர்சிகாவின் தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட வைத்தியர் தமிழ் சட்டத்தரணியின் வாதத்திறமையால் பிணையில் சென்றுள்ளார்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.