இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. தொலைபேசியில் கதைத்துள்ளதாக இன்றைய சிங்கள பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது மலேசியாவில் இருப்பதாக கருதப்படும் கே.பி.யுடன் தொடர்பு கொள்வதற்காக வேண்டி நம்பியார் தேர்ந்தெடுத்த இடம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடமென்றும் இப்பத்திரிகை மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளார். நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுத கடத்தல்களுடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் சர்வதேச இரகசிய பொலிஸாரினால் (இன்டர்போல்ட்) தேடப்பட்டு வரும் கே.பி. தாய்லாந்திலிருந்து திருட்டுத்தனமாக மலேசியாவினுள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு நபருடனேயே ஐ.நா.வின் பிரதிநிதி இரகசியமாக தொடர்புகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இச்செய்தி இலங்கையிலிருந்து வெளிவரும் முக்கிய தினசரிகளில் ஒன்றான திவயினவில் முதல் பக்க செய்தியாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.