எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அமைச்சர் டக்ளஸ், கட்டளைத் தளபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் முடிவு

21deva.jpgயாழ்ப் பாணக் குடாநாட்டில் ஊரடங்கு சட்ட நேரத்தைக் குறைக்கவும் மூடப்பட்ட பாதைகளைத் திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ் குடா ஊரடங்கு சட்டத்தை இரவு 11 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்துவதென உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ள்ளது.

இதேவேளை, ஸ்டான்லி வீதி, யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மணிக்கூட்டுக் கோபுர வீதி, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி உட்பட சில முக்கிய வீதிகளை பொதுமக்களின் பாவனைக்காகத் திறப்பதென முடிவு செய்யப்பட்டது. யாழ். குடாநாட்டு பொதுமக்கள் முகங்கொடுத்து வருகின்ற முக்கிய சில பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துதல், வீதித் தடைகளை அகற்றுதல், யாழ். மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள், பாதுகாப்பு அனுமதி பெறுவதில் முகங்கொடுக்க நேரிடுகின்ற சிரமங்களை அகற்றுதல், தற்காலிக நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் முகங்கொடுத்துள்ள குறைபாடுகளை நீக்குதல், ஊரடங்குச் சட்டத்தை நீக்குதல், சோதனைச் சாவடிகளை அகற்றுதல், தடைசெய்யப்பட்ட பொருட்களின் தடைகளை அகற்றுதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வலிகாமம் பிராந்திய படை அதிகாரி, யாழ். அரச அதிபர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஊரடங்குச் சட்டத்தை முற்றாக அகற்றுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்ட போதிலும், சில சமூக சீர்கேடுகளை கருத்தில் கொண்டு விழிப்புக்குழுக்கள் பரவலாக உருவாக்கப்படுதல் மற்றும் தமிழ் பொலிஸாரை பொலிஸ்துறையில் இணைத்துக் கொள்ளல் போன்ற சிவில் நிர்வாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை தற்போதைக்கு இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் திட்ட வரைபொன்று உருவாக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

இதேநேரம், இராணுவ வாகனத்தொடரணி போக்குவரத்தின் போது மக்கள் முகங்கொடுக்க நேரிடுகின்ற அசெளகரியங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமெனவும், பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கான பாதுகாப்பு அனுமதி கிடைப்பதில் ஏற்படுகின்ற தாமதங்கள் அகற்றப்படும் என்றும், பல வீதிகளில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. பருத்தித்துறை வரணி ஊடான கொடிகாமம் வீதி, மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவது குறித்து ஆராய்வதாக தீர்மானிக்கப்பட்டது.

இதேநேரம், யாழ் லொறி உரிமையாளர்களது ஏ-9 பாதையிலான போக்குவரத்து தொடர்பிலும் ஆராயப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், ஏ9 பாதையில் வரையறுக்கப்பட்ட பயணிகள் பஸ் சேவையை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

யுத்தம் காரணமாக யாழ். குடாநாட்டிற்கு கொண்டு வர தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களின் தடையை நீக்குவது தொடர்பில் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடுவதாகக் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரம்

aedes_aegypti.jpgஇந்த ஆண்டின் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் 191 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் ஆறு பேர் இந்நோயினால் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.கே.ரத்நாயக்க, மழைகாலம் ஆரம்பமாகி யுள்ளதால் டெங்கு நோய் மேலும் பரவும் ஆபத்து இருப்பதால் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க சகலரும் ஒன்றுபட்டு முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் முந்தல், மாரவில, கல்பிட்டி, ஆராச்சி கட்டு,மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேர் டெங்கு நோய்க்கு ஆளாகி மரணமடைந்துள்ளனர். புத்தளம் மாவட்டத் தில் தங்கொட்டுவ பிரதேசத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குண்டுத் தாக்குதலுடன் கெயார் நிறுவனத்துக்குத் தொடர்பு

care-international.jpgபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைப் படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு கெயார் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் வாகனத்தின்மூலமே கொழும்புக்கு எடுத்துவரப்பட்டதாகப் பொலிஸார், கொழும்பு நீதிமன்றத்திடம் தெரிவித்தனர். கெயார் நிறுவனப் பணியாளர்களான தர்மலிங்கம் தர்மதரன், இராசையா கண்ணன் ஆகிய இருவருமே குறிப்பிட்ட வாகனத்தில் குண்டைக் கொழும்புக்கு எடுத்துவந்தார்கள் என்பது விசாரணைகள் மூலம் அறியப்பட்டதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.

இவ்வாறு கொழும்புக்கு எடுத்தவரப்பட்ட குண்டை வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையிலுள்ள வீடொன்றில் மறைத்து வைப்பதற்கான ஏற்பாடுகளை சிவலிங்கம் ஆரூரன் என்ற நபர் மேற்கொண்டிருந்ததாகவும், அந்தக் குண்டு மோதரைப் பகுதியைச் சேர்ந்த லத்தீஃவ் முகமட் என்பவரின் முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.இந்தக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைதுசெய்திருப்பதுடன், குண்டைக் கொழும்புக்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் வழங்கிய கட்டளையின் படி ஆரூரன் என்பவர் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைப் படுகொலை செய்வதற்கு முயற்சித்ததாகப் பொலிஸார் கூறினர்.பொலிஸாரின் அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்திப் பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை இலக்குவைத்துத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வணங்கா மண் கப்பல் ஊழியர்களில் சிலருக்கு உடல் நலம் பாதிப்பு

vanangaaman-captainali.jpgஇலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்டு தற்போது சென்னை அருகே நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் வணங்கா மண் நிவாரணக் கப்பல் ஊழியர்களில் இருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வணங்கா மண் கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டால் உடனடியாக செய்ய சென்னை துறைமுகம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.வி. கேப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்கா மண் கப்பலில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்களுடன் வன்னிப் பகுதிக்கு இக்கப்பல் வந்தபோது கப்பலை உள்ளே நுழைய விடாமல் அப்படியே திருப்பி அனுப்பி விட்டது இலங்கை அரசு.

இதனால் எங்கு போவது என்று தெரியாமல் வணங்கா மண் கப்பல் சென்னைக்கு அருகே 18 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இக்கப்பலில் 13 ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் உடல் நலம் தற்போது மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரோக்கியமான குடிநீர், உணவு ஆகியவை கிடைக்காததால் கப்பல் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சிரியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆகிய இருவருக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாம். இவர்கள் இருவரும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவில் முன்பு இடம் பெற்றிருந்தவர்கள்.

கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை சென்னையில் இறக்குவதற்காக தற்போது கப்பல் காத்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாம். இந்த நிலையில் கப்பல் ஊழியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதால், அவசர உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது எகிப்து

sc-19-06-2009.jpgதென்னா பிரிக்காவில் நடைபெற்றுவரும் கொன்பெடரேஷன் கிண்ண கால்பந்து போட்டியில் உலக சாம்பியனான இத்தாலி அணியை எகிப்து 10 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இத்தாலி அணி சர்வதேச கால்பந்து வரலாற்றில் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணி ஒன்றிடம் தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜொஹன்னஸ்பேர்க் எலீனா பார்க் அரங்கில் நேற்று “பி’ பிரிவுக்காக நடந்த இந்த போட்டியில் எகிப்து அணி இத்தாலிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதன்மூலம் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் எகிப்தின் மொஹமட் ஹோமோஸ் கோலொன்றை போட்டு வெற்றியை உறுதிசெய்தார். உலக சாம்பியனான இத்தாலியினால் கடைசிவரை கோலொன்றை போடமுடியாமல் போனது.

கடந்த 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்படும் கொன்பெடரேஷன் கிண்ண போட்டி ஒன்றில் ஐரோப்பிய கண்ட அணி ஒன்றை ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணியொன்று வீழ்த்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னர் 2003 ஆம் ஆண்டு கொன்பெடரேஷன் போட்டியில் கெமரூன் அணி ஐரோப்பிய கண்டத்தில் இருந்து தேர்வான துருக்கி அணியை வீழ்த்தி இருந்தது.

இந்த வெற்றியுடன் எகிப்து அணி கொன்பெடரேஷன் கிண்ண அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. எனினும் “பி’ பிரிவில் இருந்து பலம்வாய்ந்த பிரேசில் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

முள்வேலிக்குள் உள்ள எம் இன விடுதலைக்காக இன்று லண்டனில் மாபெரும் பேரணி

londonparliament.jpgயூன் மாதம் 20ம் (இன்று)திகதி சனிக்கிழமை லண்டன் மாநகரில், முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்கள் மீட்கப்பட்டு அவர்கட்கு இயல்பு நிலை வாழ்க்கை ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என்பதனை அடிநாதமாகக் கொண்டு மாபெரும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள சகல அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களையும் இணைத்து பிரித்தானிய தமிழர் பேரவையால் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. காணாமல் போனவர்கள் மீட்கப்பட வேண்டும்.
2. முகாம்களில் வாழும் மக்கள் இயல்பு நிலைக்கு மீளவேண்டும்.
3. இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடி மறைப்போரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

என்பவையே இப்பேரணியில் மையப்படுத்தப்பட்டுள்ள கோரிக்கைகளாகும். ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தபின்னர் நடைபெறும் இப்பேரணி மேற்குலக அரசுகளினாலும் ஊடகங்களினாலும் உற்று நோக்கப்படுகின்றன.

இரண்டொரு வாரங்களில் 950 டொக்டர்கள் நியமனம்

nimal-sripala.jpgஅரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு 950 டொக்டர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இன்னும் இரண்டொரு வாரங்களில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

950 டாக்டர்களில் 122 பேர் வட மாகாணத்தில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவர்கள் நிரந்தரமாகவே வடக்கில் பணியாற்றுவார்கள் என்றார். வடக்கு வசந்தத்திற்கு ஒரு உந்து சக்தியாகவே 122 டொக்டர்களும் அங்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதிக்கும் படை உயர் அதிகாரிகளுக்கும் இன்று சுதந்திர சதுக்கத்தில் கௌரவம் – அமரபுர மற்றும் ராமன்ய நிக்காயக்கள் ஏற்பாடு

mahinda-rajapaksha.jpgபயங் கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் உன்னதப் பணிக்குத் தலைமை தாங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  இதனை சிறப்பாக வழிநடத்திய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வொன்றை ஸ்ரீலங்கா அமரபுர நிக்காய மற்றும் ஸ்ரீலங்கா ராமன்ய நிக்காய ஆகிய உயர் பௌத்த பீடங்கள் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளன.

இந்த வைபவம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இடவசதி மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு சுமார் ஆயிரம் பேரளவானோரே இவ்வைபவத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இரு பௌத்த பீடங்களும் தெரிவித்துள்ளன.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் இரு பீடங்களும் ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் இவ்விரு பீடங்களும் ஒன்றிணைந்து நிகழ்ச்சியொன்றை நடத்துவது வரலாற்றில் இதுவே முதல்தடவையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  இந்த வைபவத்தை முன்னிட்டு இன்று பகல் 1.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்து அனுமதிக்கப்பட் மாட்டாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நலன்புரிநிலைய பாடசாலைகளுக்கு 03ஆம் கட்ட வழிகாட்டி நூலும், வினாப்பத்திரங்களும் அனுப்பி வைப்பு – த. ஜெயபாலன் & புன்னியாமீன்

Class 05 Text Bookவவுனியா நலன்புரிநிலைய பாடசாலைகளில் தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக சிந்தனைவட்டம், தேசம்நெற் இணைந்து வழங்கிவரும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03உம், விசேட மாதிரிவினாப்பத்திரங்கள் (இலக்கம் 1 – 4 வரையும்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இம்மாணவர்களுக்கு 02 வழிகாட்டிப் புத்தகங்களும், 14 மாதிரிவினாப்பத்திரங்களையும் தனித்தனியே மாணவர்களுக்கு வழங்கத்தக்க வகையில் வழங்கப்பட்டிருந்தன. இத்தொடரில் மேலும் ஒரு புத்தகத்தையும் (தொகுதி 04) 12 விசேட மாதிரிவினாப்பத்திரங்களையும் எதிர்வரும் வாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தேசம்நெற், சிந்தனைவட்டமும் இணைந்து மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வன்னி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் தரம் 05இல் பயிலும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 3815ஆக உயர்ந்துள்ளது. நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 பாடசாலைகளில் இம்மாணவர்கள் பயில்கின்றனர். நலன்புரிநிலைய பாடசாலை இணைப்பாளரும், கல்வி அதிகாரியுமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக நலன்புரிநிலையங்களில் இணைந்த 3815 மாணவர்களுக்கும் உதவிகளை வழங்க தேசம்நெற், சிந்தனைவட்டம், மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம், ஐக்கிய இராச்சியத்தில் அகிலன் பவுண்டேசன் போன்ற நிறுவனங்களும் மேலும் சில பரோபகாரிகளும் முன்வந்துள்ளனர். இதற்கான வேலைத்திட்டம் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றது. புதிதாக இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் தனித்தனியே 04 வழிகாட்டி நூல்களையும், 30 மாதிரிவினாப்பத்திரங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 23ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் நீர்வெட்டு – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் நாளை இரவு 9.00 மணி வரையான 36 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கலட்டுவாவிலிருந்து தெஹிவளை நீர்த் தேக்கம் வரை நீர் விநியோகம் செய்யும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி தெஹிவளை-கல்கிஸ்ஸ மாநகர சபை எல்லை,  சொய்சாபுர, மொரட்டுவை, வெள்ளவத்தை,  பாமன்கடை, கிருலப்பனை, ஹெவலொக்டவுன்,  கொஹவல, மாளிகாகொடல்ல,  கிம்புடான,  முல்லேரியாவ,  ஐ.டி.எச்.,  அங்கொடை, முல்லேரியா ஆஸ்பத்திரி, பன்னிபிட்டிய, ஹோமாகம,  ருக்மல்கம,  மத்தேகொட,பெலவத்த மற்றும் மஹரகம ஆகிய பகுதிகள் நீர்வெட்டினால் பாதிக்கப்படும் என்றும் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.