பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குண்டுத் தாக்குதலுடன் கெயார் நிறுவனத்துக்குத் தொடர்பு

care-international.jpgபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைப் படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு கெயார் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் வாகனத்தின்மூலமே கொழும்புக்கு எடுத்துவரப்பட்டதாகப் பொலிஸார், கொழும்பு நீதிமன்றத்திடம் தெரிவித்தனர். கெயார் நிறுவனப் பணியாளர்களான தர்மலிங்கம் தர்மதரன், இராசையா கண்ணன் ஆகிய இருவருமே குறிப்பிட்ட வாகனத்தில் குண்டைக் கொழும்புக்கு எடுத்துவந்தார்கள் என்பது விசாரணைகள் மூலம் அறியப்பட்டதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.

இவ்வாறு கொழும்புக்கு எடுத்தவரப்பட்ட குண்டை வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையிலுள்ள வீடொன்றில் மறைத்து வைப்பதற்கான ஏற்பாடுகளை சிவலிங்கம் ஆரூரன் என்ற நபர் மேற்கொண்டிருந்ததாகவும், அந்தக் குண்டு மோதரைப் பகுதியைச் சேர்ந்த லத்தீஃவ் முகமட் என்பவரின் முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.இந்தக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைதுசெய்திருப்பதுடன், குண்டைக் கொழும்புக்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் வழங்கிய கட்டளையின் படி ஆரூரன் என்பவர் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைப் படுகொலை செய்வதற்கு முயற்சித்ததாகப் பொலிஸார் கூறினர்.பொலிஸாரின் அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்திப் பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை இலக்குவைத்துத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *