எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மட்டு.- கொழும்பு கடுகதி ரயில் சேவையில் மாற்றம்

train0000.jpgமட்டக் களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான கடுகதி ரயில் சேவையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாற்றம் கொண்டு வரப்படவிருப்பதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளின் நலன் கருதியே இம்மாற்றத்தைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் தற்போது காலை சேவையில் ஈடுபட்டுள்ள ‘உதயதேவி’ கடுகதி ரயில் சேவை இரவு ரயில் சேவையாக மாற்றப்படும்.

ஆனால் உறங்கல் வசதிகள் இதில் இருக்க மாட்டா. அப்பெட்டிகளுக்குப் பதிலாக இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கை ஆசன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

தற்போது இரவு நேர சேவையில் ஈடுபட்டுள்ள ரயில், காலை நேர சேவையாக, இதற்குப் பதிலாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள இம் மாற்றம் காரணமாக மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான ஆசன முன்பதிவுகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மின்சார சபை வேலை நிறுத்தத்திற்கு பொறியியலாளர், முக்கிய சங்கங்கள் எதிர்ப்பு

ecblogo.jpgஅரசாங் கம் ஒரு இலக்கை நோக்கி உத்வேகத்துடன் பயணிக்கும் இத்தருணத்தில் வேலை நிறுத்தத்தில் குதித்து அரசை அசெளகரியத்துக்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர் ஜோன் செனவிரத்ன மின்சார சபை ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள் இன்று சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளன.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; பொது மக்களின் நலனையும், மின்சார சபையின் கீர்த்தியையும் மதித்து வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு சகல ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-

மின்சார சபைத் தொழிற்சங்கங்கள் இன்று மேற்கொள்ளத் தீர்மானித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதில்லையெனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் மின்சார சபை பொறியியலாளர் உட்பட பல முக்கிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்தொழிற்சங்கங்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது கடமைக்குச் சமுகமளிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 2009 ஆண்டுக்கான சம்பள உயர்வைப் பெற்றுத் தருமாறு கோரி மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று மேற்கொள்கின்றன. எனினும் பத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இதில் பங்கேற்கமாட்டார்களென மின் வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

கடந்த 30 வருட காலம் தொடர்ந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாத்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதில்லையென ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை சகல அரச ஊழியர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனத் தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கம் தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘ஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ணம்’ செப்டம்பா; 22 இல் தென்னாபிரிக்காவில் ஆரம்பம்

eng0000.jpgஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்தது.

எனினும் பாகிஸ்தானில் அப்போது ஏற்பட்ட உள்நாட்டு மோதல்கள் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டு இத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டதோடு அதனை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சீ.சீ.) தீர்மானித்தது. இதன்படி 14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையவுள்ளது.

மினி உலகக் கிண்ணம் எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளதோடு அவை ஏ மற்றும் பி  என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ குழுவில் அவுஸ்திரேலியா,  இந்தியா,  பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் பி குழுவில் தென்னாபிரிக்கா,  இலங்கை, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் அடங்குகின்றன. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் பங்குபற்றவுள்ள 15 பேரடங்கிய இலங்கை அணி வீரர்களின் விபரம் வருமாறு:- குமார் சங்கக்கார (தலைவர்), முத்தையா முரளிதரன் (உப தலைவர்), சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான்,  சாமர கபுகெதர,  எஞ்சலோ மெத்திவ்ஸ்,  திலிண கண்டம்பி,  நுவன் குலசேகர,  திலிண துஷார,  அஜந்த மெண்டிஸ், லசித் மாலிங்க, திலான் சமரவீ, உபுல் தரங்க மற்றும் தம்மிக பிரசாத்.

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மானப்பணிகள் விரைவில் நிறைவு பெறும்

hambantota_harbour.jpgஹம்பாந் தோட்டை துறைமுக நிர்மானப்பணிகள் அடுத்த ஒன்றரை வருடத்தில்  நிறைவடையவுள்ளன. இது வரையில் அதன் நிர்மானப்பணிகளின் 40 வீதமான வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.

இத்துறைமுக கடற்பிரதேசத்தின் ஆழம் 17 மீற்றர்களாகும. இதன் வேலைத்திட்டம் பூர்த்தியானதன் பின்னர் தனியார் கைத்தொழிற்றுறையும் ஏனைய தொழிற்றுறைகளும் விருத்தியடையும்.  இத்துறைமுகத்தினால் தெற்கில் பெரியளவிலான வர்த்தக மேம்பாடு ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் அதிகமான வேலைவாய்ப்புக்கள்  உருவாவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஐ.பி.எல்.அணி வாங்கும் பொலிவூட் நாயகன் சல்மான் கான்

salman_khan.pngஐ.பி.எல்., அணியை வாங்க பொலிவுட் நாயகன் சல்மான் கான் ஆர்வமாக உள்ளார். இதையடுத்து சல்மான், ஷாருக்கான் அணிகளின் மோதலை ரசிகர்கள் காணலாம

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் ஏலம் மூலமாக கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் ஜுஹி சாவ்லா இணைந்து கொலகாத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கினர்.  நடிகை பிரித்தா ஜிந்தா (கிங்ஸ் இலவன் பஞ்சாப்), ஷில்பா ஷெட்டி(ராஜஸ்தான் ரோயல்ஸ்) என்ற வகையில் அணிகளை வாங்கினர்.

இவர்கள் வரிசையில் சல்மான் கானும் சேருகிறார். முதலாவது ஐ.பி.எல்.,  தொடரின் நிறைவு விழாவில் நடனம் ஆடி இரசிகர்களை கிறங்கடித்த இவர், சொந்தமாக ஒரு அணியை வாங்க முடிவு செய்துள்ளார்.

வரும் 2011ல் நடக்க உள்ள நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இவற்றில் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியை நேற்று மும்பையில் சந்தித்து பேசியுள்ளார்;.

2011ல் நடக்க உள்ள ஐ.பி.எல்., தொடரில் 2 அணிகளை அறிமுகப்படுத்த உளளதாகவும். அதற்கான ஏலம் 2010,  ஜனவரியில் நடக்க உள்ளது எனவும்  ஒரு அணியின் விலை  1000 கோடி ரூபா முதல் ஆயிரத்து 500 கோடி வரை இருக்கலாம என்றும் லலித் மோடி கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் வைத்திருக்க அரசுக்கு எவ்வித தேவையும் இல்லை

anurapriyadarsanayapa.jpgஇடம் பெயர்ந்த மக்களை முகாம்களில் தொடர்ந்து வைத்திருக்க அரசாங்கத்துக்கு எவ்வித தேவையும் இல்லை என்றும் அவர்களின் தேவைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது என்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அகதிகளின் வாக்குகளை சுறையாடி அரசாங்கம் தேர்தலை வெல்ல முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் வெளிவந்திருந்த செய்தியைச் சட்டிக்காட்டியே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் பலர் பல கருத்துக்களை கூறி வருகின்ற போதிலும் அவர்களால் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்க முடியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் பலதரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அண்மையில்கூட முகாம்களில் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதனை சீராக செய்து முடித்த பின்னரே அவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதுவரைக்கும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது என அமைச்சர் மேலும் கூறினார்.

விக்டோரியா அணியில் முரளி

murali.jpgஅவுஸ் திரேலிய முதல்தர இருபது20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விக்டோரியா அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன்படி முரளி 2009-10 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் இருபது20 தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடவுள்ளார். ஏற்கனவே விக்டோரியா அணியில் மேற்கிந்திய சகலதுறை ஆட்டக்காரர் ட்வாயன் பிராவோ ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இலங்கை அணியின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் இந்த தொடரில் தெற்கு அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே விக்டேõரியா அணியில் இணைக்கப்பட்டது தனக்கு கிடைத்த கௌரவம் என்று முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாவை – கடுவளை புறச் சுற்றுவட்டப்பாதை

pr-mahi.jpgநகர்ப்புற போக்குவரத்து அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொழும்பு நகருக்கான இலகு பிரவேச தென்பகுதி சுற்றுவட்டப்பாதை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி கொட்டாவையில் இருந்து கடுவளை வரையிலான சுற்றுவட்டப்பாதை அமைப்புக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி இதற்கு நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்துக்கு 2498 கோடியே 26 இலட்சத்து 1824 ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கெழும்புக்கு 10 முதல் 15 கிலோ மீட்டர் வெளிப்புறமாகச்; செல்லும் இச்சுற்றுவட்டப்பாதையின் முழு நீளம் 29.10 கிலோ மீட்டர் ஆகும். கடுவளைக்கும் கொட்டாவைக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள இதன் முதல் கட்டத்தின் நீளம் 11 கிலோ மீட்டராகும். இதன் நிர்மானப்பணிகள் சீன ஹாபர் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்பட்டுள்ளது.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது வீடமைப்புத் திட்டம்

home.jpgஅம்பாரை கரையோர மாவட்டத்தில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசப் பிரிவுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான விசேட வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசத்தைக் கட்டி எழுப்பும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இரண்டாம் கட்டத்துக்கு நிதியுதவி வழங்க கொரியாவின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்கா இதற்கு 6.653 மில்லியன் டொலரை வழங்குகிறது.

இரண்டாம் கட்ட செயற்பாட்டுக்கு 63,45,604 டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பீ. பி. ஜயசுந்தரவின் மனுவை விசாரிக்க ஏழு பேர் கொண்ட நீதியரசர் குழுமம் – செப். 24 இல் விசாரணை

00000court.jpgதிறை சேரியின் முன்னாள் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை இல்லாமல் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்காக ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுமம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான நீதியரசர்கள் குழுவினர் நேற்று பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்ந்தனர். இந்த மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமம் நியமிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்த வழக்கின் பிரதிவாதியான வாசுதேவ நாணயக்கார சார்பில் ஆஜரான எம். ஏ. சுமந்திரன், ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தின் நியமனத்தை எதிர்த்து வாதிட்டதுடன் 05 பேர் கொண்ட குழுமத்தை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தினை நியமித்திருந்தார்.

அவர் ஓய்வுபெற்றதையடுத்து வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட புதிய பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான குழுவினர், ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்திற்கு மேலதிகமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சிராணி திலக்கவர்தன மற்றும் பி. ஏ. இரத்நாயக்க ஆகியோரையும் இக்குழுமத்தில் நியமித்துள்ளனர்.