இடம் பெயர்ந்த மக்களை முகாம்களில் தொடர்ந்து வைத்திருக்க அரசாங்கத்துக்கு எவ்வித தேவையும் இல்லை என்றும் அவர்களின் தேவைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது என்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அகதிகளின் வாக்குகளை சுறையாடி அரசாங்கம் தேர்தலை வெல்ல முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் வெளிவந்திருந்த செய்தியைச் சட்டிக்காட்டியே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் பலர் பல கருத்துக்களை கூறி வருகின்ற போதிலும் அவர்களால் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்க முடியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் பலதரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அண்மையில்கூட முகாம்களில் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதனை சீராக செய்து முடித்த பின்னரே அவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதுவரைக்கும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது என அமைச்சர் மேலும் கூறினார்.