ஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்தது.
எனினும் பாகிஸ்தானில் அப்போது ஏற்பட்ட உள்நாட்டு மோதல்கள் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டு இத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டதோடு அதனை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சீ.சீ.) தீர்மானித்தது. இதன்படி 14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையவுள்ளது.
மினி உலகக் கிண்ணம் எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளதோடு அவை ஏ மற்றும் பி என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் பி குழுவில் தென்னாபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் அடங்குகின்றன. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில் பங்குபற்றவுள்ள 15 பேரடங்கிய இலங்கை அணி வீரர்களின் விபரம் வருமாறு:- குமார் சங்கக்கார (தலைவர்), முத்தையா முரளிதரன் (உப தலைவர்), சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான், சாமர கபுகெதர, எஞ்சலோ மெத்திவ்ஸ், திலிண கண்டம்பி, நுவன் குலசேகர, திலிண துஷார, அஜந்த மெண்டிஸ், லசித் மாலிங்க, திலான் சமரவீ, உபுல் தரங்க மற்றும் தம்மிக பிரசாத்.