புலிகளின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கி அவற்றை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
இது தொடர்பாக உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்; சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து வெளிநாடுகளின் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொள்ள உதவ முன்வர வேண்டுமென சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரக்கை விடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்பட்டு வருகின்றது. அதனை தடை செய்து வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்குவது குறித்து தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் அதற்கு உலக நாடுகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.
அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளினூடாக காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.