பாகிஸ்தானில் நேற்று நடந்த தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 50 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானின் எல்லைப்புறத்தில் இருக்கும் பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நேற்று சோதனை சாவடி ஒன்றில் தீவிரவாதிகள் தற்கொலை படைதாக்குதல் நடத்தினர்.
அந்த தீவிரவாதி, ஆப்கானிஸ்தான் போலீசார் நேற்று ரமலான் நோன்பை முடித்துவிட்டு உணவு அருந்தும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் அந்த தீவிரவாதி உட்பட 22 பேர் பலியானார்கள். இதில் பெரும்பான்மையோனோர் போலீசார் தான். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
இந்த சம்பவத்துக்கு தாலிபான்களுடன் தொடர்புடைய அப்துல்லா அசம் சாகீத் படை என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 8 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். தாலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹகிமுல்லா மசூத்தை கொல்ல அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாகிஸ்தான் போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 35 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.அதேபோல் மாலகன்ட் பகுதியில் 4 தீவிரவாதிகளும், பனர் மாவட்டத்தில் 7 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டு கொன்றனர்.