கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணம் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில்,
கொலராடோ கப்பலில் எடுத்து வரப்பட்ட நிவாரணப் பொருட்களை அங்கிருந்து வெளியகற்றுவதற்காக சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், துறைமுக அதிகார சபைக்கு 6.5 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.
இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர், இன்றைய தினத்திற்குள் அதற்கான இணக்கம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்நடவடிக்கை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தகவல் தருகையில்,
நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் சுமார் ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன. எனவே இந்த பொருட்களில் சில காலாவதியாகி இருக்கக்கூடும் அல்லது பழுதடைந்திருக்கக்கூடும் என கருதப்படுகின்றபோதிலும் அதனை உறுதிப்படுத்த எம்மால் முடியவில்லை.
இவற்றை வவுனியாவுக்கு கொண்டு சென்று விநியோகிக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதிலும் புதிய புதிய தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்போது நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று விநியோகிப்பதற்கான சகலவிதமான அங்கீகாரங்களையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். ஆயினும் கொலராடோ கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றமைக்கான தாமதக் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளது.