எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கையிலிருந்து தேர்தல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் தேசம்நெற் ஆசிரியர். – த சோதிலிங்கம்

இன்றைய இலங்கை அரசியல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் 24ம் திகதி நடைபெற்ற அரசியல் கருத்துப்பகிர்வும் ஆய்வும் என்ற நிகழ்வின்போது தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன் தனது அவதானங்களை இலங்கையில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். அவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்.

ஜெயபாலன் தனது இலங்கைக்கான பயண நோக்கம் பற்றி தெரிவிக்கையில்: செஞ்சோலை காந்தரூபன் குழந்தைகள் இல்லத்தின் நிதிப்பொறுப்பை லண்டன் ‘அகிலன் பவுண்டேசன் பொறுப்பெடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காக மன்னார் வன்னிப் பிரதேசத்திற்குப் போயிருந்ததாகவும், இந்த செயற்திட்டத்தை ஏற்படுத்திய ‘லிட்டில் எயிற்’ மற்றும் ‘தேசம்நெற்’ சார்பில் தான் கலந்து கொண்டதாகவும் கூறினார். இந்தக்காலங்களில் தான் அவதானித்த அரசியல் நிலைமைகளை ரிபிசி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கொழும்பு விமான நிலையம் முதல் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா வரையிலான தெருக்கள் வீதிகள் எங்கும் உள்ள பதாகைகள் சுவரொட்டிகள் யாவுமே மகிந்த ராஜபக்கவின் விளம்பரங்களாகவே இருந்தன. கிட்டத்தட்ட 90 சதவிகிதமானவை மகிந்தாவினுடையதாகவும் 10 சதவிகிகதமானவைகள் சரத்தினுடையதாகவும் இருந்தன. இவை தவிர இதர வேட்பாளர்களின் விளம்பரங்களோ அன்றி வேறெந்த அடையாளங்களோ காணப்படவில்லை. இந்த தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவும் பாரபட்சம் நிறைந்ததாகவும் சமத்துவமற்ற பிரச்சாரமாகவும் இருந்தன. மகிந்த ராஜபக்ச பலமடங்கு அதிகமான பணம் செலவு செய்து இத்தேர்தலைச் சந்திக்கின்றார்.

பிரதான வேட்பாளர்கள் தவிர்ந்த மற்றைய வேட்பாளர்களில் சிவாஜிலிங்கம் விக்கிரமபாகு போன்றோரை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர் ஆனால் ஏனையோரை அறிந்திருக்கும் வாய்புக்கள் மிகவும் குறைவானதாகவே தென்படுகிறது. இலங்கையில் உள்ள ஊடகங்களின் செயற்பாடுகள் பற்றி ஜெயபாலன் குறிப்பிடுகையில் முழு அரசு சார்பு ஊடகங்களும் தமது நேரடி ஆதரவினை மகிந்தாவிற்கு வெளிப்படையாகவும் மற்றைய தேர்தல் வேட்பாளர்களை சிறிதும் கவனத்தில் கொள்ளாது இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களிடம் பக்க சார்பு ஊடகமுறைமை உள்ளது. இது சமூகத்தின் ஜனநாயக தன்மையின் ஆரோக்கியத்தின் அளவுகோலாக இருப்பதை காணலாம்.

மட்டக்களப்பில் மகிந்தா ஆதரவு சுவரொட்டிகள் பெருமளவில் தமிழில் காணப்படும் அதேநேரம் கருணா பலத்த பாதுகாப்புடன் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து சென்றதையும் நேரில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அநுராதபுரத்தில் லக்மிக செய்தியாளரிடம் கருத்து கேட்டபோது இவர் மகிந்தா மீது மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த குடும்ப அரசு மாற்றப்பட வேண்டும், இதன் மூலமே இலங்கையில் மீண்டும் ஜனநாயக நிலைமைகளை வளர்க்கமுடியும் என்று கூறினார். அநுராதபுரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தான் ஜேவிபி ஆதரவாளன் என்றும் தமது கட்சியின்படி தான் சரத்தையே முழுமையாக ஆதரிப்பதாகவும் மகிந்தா சகோதரர்களால் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்தாகவும் தெரிவித்தார்.

தான் சரத்தையே ஆதரிப்பதாக கூறிய மட்டக்களப்பில் பணிபுரியும் டாக்டர், மட்டக்களப்பில் புத்திஜீவிகளும் சமூகத்தின் உயர் மட்டத்தினரும் சரத்தையே ஆதரிக்கின்றனர். ஆனால் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி யாராலும் சரியாக கணிப்பீடு செய்ய முடியாதுள்ளது. ஆனால் இந்த வாக்குகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும் என்றும் கூறினார்.

இந்த நிலையே இலங்கை எங்கும் உள்ளன. ஊடகங்கள் மேல்தட்டு வர்க்கத்தையே பிரதிபலிக்கின்றன. கீழ்மட்டத்து மக்களின் ஆதரவு நிலையில் உள்ள மாற்றங்களை சரியாக கண்டுகொள்ள முடியாது உள்ளதென ஜெயபாலன் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்பே வட-கிழக்கு மக்களில் பெரும்பாலானோர் சரத்திற்கும் யாழ்ப்பாணத்தில் கணிசமாணேர் சிவாஜிலிங்கத்திற்கும் ஆதரவளிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் இதன் பின்னரே ரிஎன்ஏ தாமும் சரத்திற்கே ஆதரவளிக்க முடிவு கொள்ள வேண்டியிருந்தது என்ற அபிப்பிராயங்களும் பரவலாக உள்ளது. இதை சிலவேளை ரிஎன்ஏ யினர் தாம் கேட்டுக்கொண்டதன்படி மக்கள் சரத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று பின்னாளில் பிரச்சாரங்களை அவிழ்த்துவிடக்கூடும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இலங்கையில் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் அந்த ஜனாதிபதி தான் தமிழ் மக்களின் ஆதரவாளன் என்ற கருத்தை முன்வைத்து சிங்கள மக்களிடம் வாக்கு கேட்க முடியாத நிலையே உள்ளது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக யாருக்கு வாக்களிக்கிறார்களோ அந்த வேட்பாளருக்கு சிங்கள மக்கள் பெருபான்மையினர் வாக்களிப்பதில்லை அவர் ஜனாதிபதியாக வந்ததுமில்லை எனவும் ஜெயபாலன் தன் கருத்தைத் தெரிவித்தார். இதன் காரணமாகவே தேர்தல் வேட்பாளர்கள் தமது தமிழ் ஆதரவினை மிகவும் கடுமையாகவே கையாளுகின்றனர்.

நீர்கொழும்பில் உள்ள மீனவ குடும்பங்களை சந்திக்கையில் அவர்களின் அபிப்பிராயப்படி இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் மகிந்தாதான் என்றும் இலங்கையில் நடைபெறும் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மகிந்த அரசினாலேயே செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து மகிந்தா ஆட்சிக்கு வருவதாலேயே இந்த அபிவிருத்தி தொடரும் எனவும் அபிவிருத்திப்பணங்களில் மோசடி என்ற குற்றச்சாட்டு வருவது தவிர்க்க முடியாதது ஆனால் சரத் ஆட்சிக்கு வந்தால் முழுமையாகவே நிதி மோசடிகளையே செய்வார் என்றும் கருத்து கொண்டுள்ளனர்.

மன்னார் இளைஞர் கருத்துக் கூறுகையில் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது இவர்களே எமது மக்கள் மீது யுத்தத்தை நடாத்தியவர்கள் எமது மக்களை கொன்று குவித்தவர்கள் இவர்களுக்கு நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று கருத்துக் கொண்டுள்ளார். அதே வேளை புலிகள் இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது செய்த வன்முறையிலும் இவ்விளைஞன் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். புலிகள் மக்களை பழிவாங்கியுள்ளனர் என்று கூறினார்.

சுதந்திர நடமாட்டம் பற்றி கருத்து கேட்டபோது அரசியல் நிலைமைகள் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் தாண்டி மக்களிடம் வேறான ஒரு போக்கு உள்ளது என்றும் இராணுவம் பொலீஸ் மக்களை சோதனையிடும் முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடம் பாரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்றும் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக போய்வரும் நிலைமைகள் உள்ளதாக கூறிய ஜெயபாலன் அதேவேளை இன்றுள்ள சமாதான சூழ்நிலையை வைத்துக்கொண்டு இலங்கையில் சமாதானம் வந்துவிட்டது என்று முடிவு எடுக்க முடியாதுள்ளது நாட்டில் முக்கியமாக தலைநகரில் இராணுவம் பொலீசார் மிகவும் உசார்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது பிறப்பிடமான அநுராதபுரத்தில் தான் ஒருவிலாசத்தை அறிய முற்பட்டபோது 5 நிமிடத்தில் இரகசியப் பொலீசார் தம்மிடம் வந்து விசாரித்ததாகவும் பின்னர் சீருடைப்பொலிசார் வந்து விசாரித்ததாகவும் ஆனால் எந்த காரணத்திற்காகவும் முறைகேடாக நடாத்தப்படவில்லை என்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் அரசியல் மாற்றங்களுக்கு புறம்பாக வட-கிழக்கு பிரதேசம் பின்தங்கிய நிலையிலும் தெற்பகுதி பாதிப்படையாத ஆனால் பாரிய முன்னேற்றமடையாத நிலையிலும் மன்னார் வன்னிப் பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருக்கின்றது. கிளிநொச்சி மன்னார் பிரதேசங்களில் புலிகளின் கல்லறைகள், நினைவாலயங்கள் இருந்த இடம்தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. வன்னிமுகாம்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வெளியேறிவிட்டதை தான் அவதானித்ததையும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மிகவும் வசதிகள் அற்று அல்லலுறுவதாகவும் இந்த மீள்குடியேற்றம் பொறுப்பற்ற முறையில் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அடிப்டைவசதிகள் அற்றிருப்பதை அவதானித்ததாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.

தான் சந்தித்த புலி ஆதரவாளர்கள் இன்றும் தமிழ் அரசியல் தலைமைகளையே குறை கூறுகின்றனர். தமிழ் தலைமைகள் தமிழர்களின் அரசியல் உரிமைகளில் அக்கறையற்று இருப்பதாகவும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மையினத்தினரே. ஆனால், ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது…? – பீ.எம். புன்னியாமீன் –

pon-mahi.jpgஎதிர்வரும் 26ஆந் திகதி இலங்கையில் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றினை நோக்குமிடத்து 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலையடுத்து நாட்டில் சுமுகமான நிலையில் நடைபெறும் ஒரு தேர்தலாகவே இந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிட முடியும்.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற வேளையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளின் பலத்த நெருக்கடிகள் காணப்பட்டிருந்தன. அதேநேரம், தென்னிலங்கையிலும் மக்கள் விடுதலை முன்னணியினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் உச்ச நிலையையடைந்திருந்தன. மிகவும் பயங்கரமான ஒரு நிலையிலேயே இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். 1994ஆம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலகட்டத்திலும் விடுதலைப் புலிகளின் தாக்கங்கள் நாடளாவிய ரீதியில் வியாபித்தே காணப்பட்டிருந்தன. இத்தேர்தலில் போட்டியிட்ட பிரதம வேட்பாளர்களில் ஒருவரான காமினி திசாயநாயக்கா கொலை செய்யப்பட்டார். அச்சமிகு சூழ்நிலையில் இத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல 1999ஆம் ஆண்டு நான்காவது ஜனாதிபதித் தேர்தலின்போதும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தலின்போதும் விடுதலைப்புலிகளின் தாக்கங்கள் அதிகரித்துக் காணப்பட்டிருந்தன. இத்தேர்தல்களில் ஒப்பீட்டு ரீதியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் வெகுவாகக் குறைந்திருந்தன.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலின் நடைபெறும் இக்காலகட்டமானது நாட்டில் மிகவும் ஒரு சுமுகமான நிலைமை நிலவும் ஒரு காலகட்டமாகும். 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்பு விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பூச்சிய நிலையை அடைந்தன. அதேநேரம், தென்பகுதியில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் குண்டுத்தாக்குதல்கள் முற்றுமுழுதாக இல்லாமல் போய்விட்டது. எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சரி, இலங்கையின் தென்பகுதியிலும் சரி தேர்தல் வாக்களிப்பு தொடர்பான எவ்வித நெருக்கடிகளுமின்றி இயல்பு நிலையில் நடைபெறும் ஒரு தேர்தலாக இத்தேர்தலை இனங்காட்ட முடியும். அரசியல் அவதானிகளின் கருத்துப்படி இத்தேர்தலில் 72க்கும் 78க்குமிடைப்பட்ட வீதத்தினர் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு இயல்பு நிலையயடைந்தாலும்கூட, தேர்தலில் போட்டியிடும் பிரதான அபேட்சகர்களின் ஆதரவாளர்களின் தேர்தல் அடாவடித்தனங்கள் அதிகரித்து வருவதை இத்தேர்தலில் அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய நாடுகள் சபைகூட இலங்கைத் தேர்தல் வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலே தேர்தல் வன்முறைகள் மிகைத்த ஒரு தேர்தலாக இனங்காட்டப்பட்டது. அத்தேர்தலில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தையடுத்து தேர்தல் தினம் வரை 500க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலின் போது இதுவரை 4 கொலைகள் இடம்பெற்று விட்டன.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும்கூட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையிலான போட்டியே முதன்மைப்படுத்தப்பட்டு உள்ளது.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு ஜனாதிபதி ஆதரவு நிலை மிகவும் அதிகரித்தே காணப்பட்டது. யுத்த முடிவின் பின்பு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனை நன்கு வெளிப்படுத்தின. இத்தகைய சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தியே தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்தார். இவரின் பிரதான எதிர்பார்க்கையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் அமோக வெற்றியீட்டுவதுடன்,  அதைத் தொடர்ந்து வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது இருந்திருக்கலாம். இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நடைபெற இருந்த போதிலும்கூட, பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் நோக்கம் மேற்குறிப்பிட்டவாறே அமைந்திருக்கலாம். ஆனாலும் யுத்த முடிவடைந்த நிலையில் காணப்பட்ட யுத்த வெற்றி மனோநிலை மக்கள் மத்தியில் படிப்படியாக குறைவடையலாயிற்று. குறிப்பாக இலங்கையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் யுத்தத்தால் மூடிமறைக்கப் பட்டிருந்தாலும்கூட,  யுத்த முடிவினையடுத்து அப்பிரச்சினைகளும் மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்தன.

2009 நவம்பர் மாதமளவில் வடக்கு யுத்த வெற்றிற்கு இராணுவ தலைமை வழங்கிய ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்ற நிலை தெரிய வந்ததும் யுத்த வெற்றிகள் பகிரப்படுவதைப் போல மக்கள் மத்தியில் ஒரு சலன நிலை ஏற்பட்டது. யுத்த வெற்றிற்கு தனித்துவமான உரிமையாளராகக் காணப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ: சரத் பொன்சேகா களம் இறக்கப்பட்டதும் அவரின் தனித்துவ நிலை மக்கள் மத்தியில் பிளவடைந்து பரவலடையலாயிற்று. எனவே,  ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே அடுத்த ஜனாதிபதி மஹிந்தவா? பொன்சேகாவா? என்ற நிலை ஐம்பதுக்கு ஐம்பது என்ற நிலையில் தளம்பலடையக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாயிற்று.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும், ஐக்கிய தேசியக்கட்சி தனித்துவ சக்தியாக யானை சின்னத்தின் கீழ் அனைத்துத் தேர்தல்களையும் எதிர்கொண்டே வந்துள்ளது. ஆனால்,  தனது கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்தில் நம்பிக்கையிழந்த நிலையிலேயே பொதுவேட்பாளர் என்ற அடிப்படையில் சரத் பொன்சேக்காவை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தியதுடன்,  இலங்கையில் நடைபெற்ற பிரதான தேர்தலொன்றில் முதல் தடவையாக தனது கட்சி சின்னத்தையும் விட்டுக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எதிர்பார்க்கப்படும் பிரதான எதிர்பார்க்கையாக இருப்பது ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றியீட்டினால் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை 6 மாதங்களுக்குள் நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சிமுறை ஏற்படுத்தப்படுமெனவும் பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழ் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமராக செயலாற்றக்கூடிய நிலை உருவாகும் என்பதுமாகும்.

ஆனால்,  ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தான் பதவிக்கு வந்தவுடன் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி வழங்குவது இது முதற் தடவையல்ல. 1994ஆம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளர் சந்திரிக்கா குமாரதுங்க மிகவும் அழுத்தமான முறையில் தான் பதவிக்கு வந்தவுடன் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பல இடங்களில் பல வாக்குறுதிகளை வழங்கினார். இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட நிஹால் கலபதி போட்டியிலிருந்து விலகி சந்திரிக்காவுக்கு ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கது. அதேபோல மஹிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்படுமென்று வாக்குறுதிகளை 2005ஆம் ஆண்டு அளித்திருந்தார். அச்சந்தர்ப்பத்திலும் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதிக்கு பூரண ஆதரவை வழங்கியது.

ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு எந்த ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பொன்சேக்கா இவ்வாக்குறுதியை எவ்வளவு தூரம் நிறைவேற்றுவார் என்பது இலங்கையில் படித்த மக்கள் மத்தியில் ஒரு கேள்வியை தோற்றுவித்துள்ளது. மறுபுறமாக இவர் இலங்கையில் இராணுவத் தளபதியாக இருந்தவர். ஆகவே அதிகாரம் கைக்குக் வந்தவுடன் அதிகாரத்தை எடுத்த எடுப்பிலே கொடுத்துவிடுவாரா? ஏன்பதும் சிந்திக்கக்கூடிய ஒரு விடயமே. மறுபுறமாக இவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுமிடத்து பிரதம மந்திரியாக ரணில்விக்கிரமசிங்க அல்ல முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஏதாவொரு வகையில் கொண்டு வரப்படுவார் என்ற ஒரு ஊகமும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதாயின் அரசியலமைப்பிலே பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மாற்றியமைக்க வேண்டும். ஒரு பிரதான கட்சியே இல்லாத நிலையில் பொன்சேகாவால் இது சாத்தியப்படுமா?…. எவ்வாறாயினும்,  இத்தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றிபெற்றாலும், மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றாலும் உண்மையிலேயே தோல்வியடைப் போவது ஐக்கிய தேசியக் கட்சியும், ரணிலுமே என்பது மக்கள் மத்தியில் பரவலான கருத்தாக நிலவுகின்றது.

மறுபுறமாக பொன்சேக்காவை ஜனாதிபதி பொது வேட்பாளராகக் கொண்டு வருவதில் மக்கள் விடுதலை முன்னணியும்,  ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்த மங்கள சமரவீரவும் பிரதான பாகம் ஏற்றனர். இந்நிலையில் பொது வேட்பாளர் பொன்சேகா ஐக்கிய தேசியக்கட்சியினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் வேட்பாளராகவே மக்கள் முன் காட்சியளித்தார். சரத் பொன்சேகா பொது வேட்பாளராக இருந்த போதிலும்கூட, நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக மஹிந்தவும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் இணைவேட்பாளராக பொன்சேகாவும் என்ற நிலையே வலுவடைந்தது.

1956ஆம் ஆண்டின் பின்பு இலங்கை அரசியலில் தேர்தல்களை விரிவாக ஆராயுமிடத்து எந்த சந்தரப்பத்திலும் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களாகவும், 20 தொடக்கம் 22 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்ளாகவுமே இருந்துள்ளனர். இவ்விரு கட்சிகளுக்கும் நிலையாக வாக்குகளாகக் கூட இவற்றைக் கொள்ளலாம். 1980களின் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் ரொஹன விஜயவீர கொல்லப்பட்டதுடன்,  படிப்படியாக ஜே.வி.பி. ஜனநாயக நீரோட்டத்தில் மீண்டும் கலந்தது. பொதுவாக 4 வீதமான வாக்குகள் ஜே.வி.பி.க்கு உள்ளதென கருதப்பட்ட போதிலும்கூட,  தற்போதைய நிலையில் ஜே.வி.பி.க்கு சுமார் 2.5வீதமான வாக்குகள் நிலையான வாக்குகளாக இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியும், பாராளுமன்றத் தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நிர்ணயிக்கும் சக்தியாக 40க்கும் 45 வீதத்துக்குமிடைப்பட்ட மிதக்கும் வாக்காளர்களாகவே உள்ளனர். எனவே,  6வது ஜனாதிபதித் தேர்தலையும் இந்த மிதக்கும் வாக்காளர்களே தீர்மானிக்கப் போகின்றார்கள்.

தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நிகழ்ந்து வரும் அதிரடி நிகழ்வுகள் நிலையில் மிதக்கும் வாக்காளர்களையும் தளம்பல் நிலையை  ஏற்படுத்தியது. மஹிந்தவினதும், பொன்சோக்காவினதும் வெற்றி நிலையின் உறுதிப்பாடு நாளுக்குநாள் தளம்பலடைந்து வந்ததையே அவதானிக்க முடிந்தது.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் யுத்தவெற்றியே பலவகைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். மஹிந்த ராஜபக்ஸவின் பிரசாரத்தில் பிரதான இடத்தைப் பிடித்த கருப்பொருளாக விளங்கியதே தான் 2005ஆம் ஆண்டு பதவிக்கு வரும்போது யுத்தத்தை முடித்துத் தர வேண்டுமென்றே மக்கள் தனக்கு ஆணை தந்தனர் எனவும், அதற்கமைய தனது பதவிக்காலத்தில் உலகிலே பயங்கரவாத இயக்கங்களில் முதலாமிடத்தை வகித்த விடுதலைப் புலிகளை ஒழித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டுக்கு அமைதியை ஏற்படுத்தியதை தனது பதவிக்கால சாதனையாகவே கூறிவந்தார். மறுபுறமாக சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதி என்ற வகையில் மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளை அடக்க மேற்கொண்ட நடவடிக்கையை இறுதிவரை தொடர்ந்து வெற்றிக்கு தானே காரணம் என்பதை கூறிவந்தார்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான ஒரு விடயம். தேர்தல் நிலவரங்கள் நாளுக்குநாள் மாறிக் கொண்டு வருவதே இதற்குப் பிரதான காரணம். இருப்பினும்,  ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களிலும்,  நகர்சார் பிரதேசங்களினதும் ஆதரவு பொதுவேட்பாளர் சரத் பொன்சேக்காவுக்கு இருப்பதையும், சிங்கள மக்கள் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் குறிப்பாக கிராமப்புற மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவுக்கு சார்பாக இருப்பதையும் இந்நிலையில் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒரு பிரதான தேர்தலாகும். உள்ளுராட்சித் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள்  என்பன குறிப்பிட்ட பிரதேசத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் செல்வாக்கு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால்,  ஜனாதிபதித் தேர்தலை எடுத்துநோக்குமிடத்து போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் முழு நாட்டுக்குமுரிய வேட்பாளர். நாடளவில் குறித்த வேட்பாளருக்கு சில பிரதேசங்களில் செல்வாக்கு அதிகரித்திருக்கும். சில பிரதேசங்களில் செல்வாக்குக் குறைவாகக் காணப்பட்டிருக்கும். இலங்கையிலுள்ள 22 மாவட்டங்களிலும் வைத்து உத்தேச ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதும் கணிப்பீட்டுக் கருத்துக்களைப் பெறுவதும் கடினமான காரியம். அதேநேரம்,  சகல ஆட்சி அதிகாரங்களைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி இந்த ஜனாதிபதித் தேர்தலினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. இத்தேர்தலில் வெற்றிபெறக்கூடிய அபேட்சகர் சார்பான கட்சி நிச்சயமாக எதிர்வரும் மாதங்களில் நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தல்களில்  நிச்சயமாக வெற்றியீட்டும். இதில் சந்தேமில்லை.

இலங்கையில் நடைபெற்ற 5வது ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. 2005ஆம் ஆண்டு இத்தேர்தல் நடைபெற்ற காலகட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார் என்ற பரவலான நிலையே காணப்பட்டது. தேசிய சர்வதேச ஊடகங்கள்கூட அன்று ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை முன்கூட்டியே உறுதிப்படுத்தி  கருத்துக்களை வெளியிட்டன. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முதன்மைப்படுத்திய பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து சுமார் 11 ஆண்டுகளாகிய நிலையில் அக்கட்சியின் போக்கு மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு நிலை ஏற்பட்டிருந்ததும் மாறாக அச்சூழ்நிலையில் மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பியதும் இந்நிலைக்குக் காரணமாகும்.  2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் சிறுபான்மையின சார்புக் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பகிரங்க ஆதரவினை வெளிப்படுத்தின. ஆனால், அத்தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியும், இடதுசாரி கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செல்வாக்கு நிலை மிகைத்திருந்த காலகட்டமாகவே இக்காலகட்டம் விளங்கிற்று. 2002ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக ரணில்விக்கிரமசிங்க பதவியேற்றபோது விடுதலைப் புலிகளுக்கும்,  ரணில் அரசாங்கத்துக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் வன்னிப் பிரதேசம் உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கிய நிலையே காணப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் ரணிலுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக விடுதலைப் புலிகளின் ஆதரவு ரணிலுக்குக் கிடைக்குமென்ற நிலைப்பாடு தென்பகுதியில் உறுதியாக நிலவியது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஒப்புநோக்குமிடத்து சிறுபான்மை இனத்தினர் செறிவாக வாழக்கூடிய மாகாணங்களின் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் சகல மாவட்டங்களிலும் ரணில்விக்கிரமசிங்கவே அமோக வெற்றியீட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 79.51 வீத வாக்குகள் கிடைத்தன.  மஹிந்த ராஜபக்ஸவினால் 18.87 வீத வாக்குகளையே பெறமுடிந்தது. அதேபோல திகாமடுல்லை மாவட்டத்தில் 55.81 வீத வாக்குகளையும், திருக்கோணமலை மாவட்டத்தில் 61.33 வீத வாக்குகளையும் பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினார். வட மாகாணத்தில் வாக்களிப்பில் கலந்து கொள்வதற்கு விடுதலைப் புலிகள் கடைசிநேரத்தில் வாக்காளர்களுக்கு தடைவிதித்தனர். இத்தடையே ரணிலின் தோல்வியை உறுதிப்படுத்திய கருவியாக அமைந்தது. வடமாகாணத்தில் வன்னி மாவட்டத்தில் 77.89வீத வாக்குகளையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 70.20வீத வாக்குகளையும் ரணில்விக்கிரமசிங்க பெற்றபோதிலும்கூட, இம்மாவட்டங்களில் வாக்களிப்போர் வீதம் இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு குறைவாக இருந்தது. வன்னி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களுள் 34.30வீத வாக்குகளும், யாழ் மாவட்டத்தில் 1.21வீத வாக்குகளும் மாத்திரமே பதிவாகின. யாழ், வன்னி மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு திறந்த அடிப்படையில் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருப்பின் அந்த வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் ரணிலுக்கே சென்றிருக்க முடியும் என எதிர்பார்க்க முடியும்.

இதேபோல மலையகத்தில் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். நுவரெலியா மாவட்டத்தில் ரணில்விக்கிரமசிங்க பெற்ற வாக்குகள் 250,428 ஆகும். (70.37வீதமாகும்) இங்கு மஹிந்த ராஜபக்ஸவால் 99, 550 வாக்குகளையே பெற முடிந்தது. இது 27.97 வீதமாகும்.) இதேபோல மலையகப் பகுதியில் பதுளை மாவட்டத்திலும் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றியீட்டியிருந்தார். மேலும், கண்டி மாவட்டம், மாத்தளை மாவட்டம் ஆகியவற்றிலும் நகர்சார் பிரதேசமான கொழும்பு மாவட்டத்திலும் ரணிலால் வெற்றிபெற முடிந்தது.

கிட்டத்தட்ட மக்களின் மனோநிலைகளையும், மக்களின் எழுச்சிகளையும் பார்க்கும்போது மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்தத் தேர்தலில் சரத் பொன்சேக்காவுக்கு உறுதியான ஆதரவு நிலை காணப்படுகின்றது. ஆனாலும்,  2005ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டிய நுவரெலியா,  பதுளை ஆகிய மாவட்டங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நேரடியாகத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதினாலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவான பிரசாரங்கள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப் படுவதினாலும் கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்குவீதம் குறைவடையலாம் என எதிர்பார்க்கலாம். 23 ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2008 இல் கனடாவின் “நெசனல் போஸ்ட்” இதழுக்கு சரத் பொன்சேகா வழங்கிய பேட்டியில் “சிறுபான்மையினராக இருக்கின்றோம் என்ற காரணத்துக்காக மித மிஞ்சிய விடயங்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். “இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சிறுபான்மையினர் இங்கு விருந்தாளிகள் மட்டுமே” என்று அவர் ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கடைசி நேரத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்தடுத்தியுள்ளது என்பது பல அவதானிகளின் கருத்தாக உள்ளது. 

அரசாங்க ஊடகங்கள் தவிர, பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பொன்சேகா சார்பு நிலையை எடுத்திருப்பதையும் சர்வதேச ஊடகங்கள் மஹிந்தவுக்கு எதிரான முறையில் பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்குவதையும் வைத்து நோக்குமிடத்து பொன்சேகாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவே தோன்றியது. 2005ஆம் ஆண்டிலும் ரணிலின் வெற்றியும் இதேபோல காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையை நோக்குமிடத்து,  சிறுபான்மை சமுகத்தினரின் வாக்குகள் அரைவாசிக்கு அரைவாசி இரு பிரதான வேட்பாளர்களுக்கும் பிரிந்து போகலாம் என கருதப்படுகின்றது. அவ்வாறு ஏற்படுமிடத்து ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபாண்மை இனத்தவர் வாக்கு என்ற நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

தேர்தலுக்கு முந்திய ஒரு வாரத்தை அவதானிக்கும்போது இலங்கையில் சிங்களக் கிராமப்புறங்களில் மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டணியினர் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலை கிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில் ஒரு ஐயப்பாட்டையே உருவாக்கியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டணியினர் யுத்த காலத்தில் கடைசி நிமிடம் வரை விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே செயற்பட்டார்கள். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தோல்வியையடுத்து சில சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் நாடுகடந்த தமிழீழத்துக்கான வாக்கெடுப்புகளும் வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கான வாக்கெடுப்புகளும் சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுமோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்த நிலையில் கடைசிநேரத்தில் இரா. சம்பந்தன் பிரதம வேட்பாளரான சரத் பொன்சேகாவுடனும் மஹிந்த ராஜபக்ஸவுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். அப் பேச்சுவார்த்தைகளின்போது பொன்சேகாவின் பக்கத்திலிருந்து தமக்கு சாதகமான நிலை கிடைத்ததினால் பொன்சேகாவை ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தல் விடுத்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துரைசிங்கம் இலங்கையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேக்கா பதவிக்கு வருமிடத்து உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுமெனவும், கைதிகளாக்கப்பட்ட விடுதலைப் புலிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும், வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படும் எனவும் இதன் மூலம் சுயாட்சி,  சுயநிர்ணய உரிமைக்கான வழி திறக்கப்படுமெனவும் தெரிவித்தார். மேற் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சரத் பொன்சேக்கா கையொப்பமிட்டு,  ஒப்பந்தத்துக்கு இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இக்கருத்து தமிழ் வாக்காளர்களைக் கவர்வதற்காகக் கூறப்பட்டாலும்கூட,  கிராமம்சார் சிங்கள வாக்காளர்களை வெகுவாகப் பாதித்த ஒரு கூற்றாகவே இருக்கின்றது. அதேநேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது தேர்தல் பிரசாரங்களின் போது சம்பந்தன் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய நேரத்தில் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட வேண்டும்,  விடுதலைப் புலிக் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும்,  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் நீக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும் அக்கோரிக்கைகளை தான் தேசத்தின் நலன்கருதி தான் நிராகரித்ததாகவும் தேர்தல் என்பதைவிட தனக்கு நாடு தான் முக்கியம் என பகிரங்கமாக அறிவித்தார். இக்கருத்து ஊடகங்களில் முக்கியத்துவப் படுத்தப்பட்டன.

இந்நிலையில் சிங்கள மக்களை பாதித்த இக்கருத்தானது மஹிந்தவின் ஆதரவு நிலையை சிங்கள மக்கள் மத்தியில் மேலும் உறுதிப்படுத்துவதாகவே காணப்படுகின்றது. தேர்தலுக்கு முந்திய வாரங்களில் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மூலமாக அவர்களின் ஏற்பாட்டின் கீழ் ஒவ்வொரு சிங்களக் கிராமங்களிலும் “வீட்டுக் கென்வசிங்” மூலம் இக்கருத்துக்கள் வாக்காளர்கள் மத்தியில் தனித்தனியாக விதைக்கப்பட்டன. இதனை மஹிந்த சார்பு தேர்தல் பிரசார வியூகங்களில் ஒன்றாகவும் கொள்ளலாம். மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இப்பிரசார வியூகம் மிதக்கும் வாக்குகளிலும் தாக்கங்களை உருவாக்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. மறுபுறமாக சரத் பொன்சேக்கா ஜனாதிபதி வேட்பாளராக நியமனப் பத்திரம் தாக்கல் செய்த பின்பு யுத்த நிலையை காட்டிக் கொடுத்தமைக்கான குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து அவரின் ஆயுதக் கொள்வனவு ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டும் இத்தகைய தேர்தல் பிரசாரங்களில் மக்களுக்கு தெளிவுபடுத்தப் பட்டதாகவும் தெரியவருகின்றது.

இத்தகைய தேர்தல் உத்திகள் சிங்களப் பிரதேசங்களில் பொன்சேக்காவின் ஆதரவு நிலையை கடைசிநேரத்தில் சரியச் செய்துள்ளன. ஆட்சி மாற்றம் ஒன்றை வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பது உண்மை. அதேநேரம்,  தற்போது இலங்கையில் நிலவும் அமைதியான நிலைமை தொடர வேண்டும் என்பதையும் விரும்புகின்றார்கள் என்பதும் உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொன்சேகா மீண்டும் பதவிக்கு வரும்போது விடுதலைப் புலிகள் வளர்க்கப்படலாம் என்ற ஒரு ஐயப்பாடு சிங்கள வாக்காளர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளமையினால் இறுதி நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸ சிறிய வாக்கு வீதத்தில் வெற்றியீட்டலாம் என்ற நிலை தற்போது வலுவடைந்து வருகின்றது. அது மாத்திமன்றி,  இந்த நிலைமை தொடர்பான பிரசாரங்கள் மிக வேகமாக வாக்காளர்கள் முன் எடுத்துச் செல்லவும் படுகின்றன.

எவ்வாறாயினும் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ளன. சரத் பொன்சேக்கா வெற்றியீட்டினாலும்,  மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டினாலும் அவர்கள் இருவரும் தனித்தனியாக எதிர்பார்ப்பதைப் போன்று கூடிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்ட முடியாது என்பது மாத்திரமே உண்மை.     

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு?

sri-lankan-election-01jpg.jpgஜனாதி பதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்களுக்குரியவரை புள்ளடியிட்டு வாக்களிப்பதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிட்டு வாக்களிப்பதா? என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது தொடர்பான விபரம் வருமாறு:

* வாக்காளர்கள் தனியொருவருக்குத் தமது வாக்கை அளிக்கலாம். அல்லது மூன்று வேட்பாளருக்குத் தமது விருப்பத் தெரிவின் ஒழுங்கில் வாக்களிக்க முடியும்.

* ஒரேயொரு வேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை அளிக்க விரும்பும் வாக்காளர் தமது வாக்குச் சீட்டில் தான் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கும் சின்னத்துக்கும் அருகில் உள்ள கூட்டில் ‘X’ அடையாளத்தையிடலாம். அல்லது ‘1’ என்ற அடையாளத்தையோ இடுவதன் மூலம் தமது வாக்கை அளிக்க முடியும்.

* ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு தமது விருப்புத் தெரிவின் அடிப்படையில் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் தமது வாக்குச் சீட்டில் அந்த விருப்பத் தெரிவின் ஒழுங்குப்படி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களுக்கு எதிரே உள்ள கூட்டில் ‘1’, ‘2’, ‘3’ என்ற இலக்கங்களை வரிசைப்படி இடவேண்டும்.

அந்த வாக்காளர் ‘1’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வேட்பாளர் அவரின் (அந்த வாக்காளரின்) முதல் தெரிவாகவும், ‘2’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வேட்பாளர் அவரின் இரண்டாவது தெரிவாகவும், ‘3’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வாக்காளர் மூன்றாவது தெரிவாகவும் கருதப்படுவர்.

இதைவிட, முதலாவது தெரிவை ‘1’ எனக் குறிப்பிடாது விட்டுவிட்டு, ‘2’ மற்றும் ‘3’ தெரிவுகளை மட்டும் வாக்குச் சீட்டில் குறிப்பிட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதேசமயம், ஒரு வாக்காளர் தமது முதலாவது மற்றும் இரண்டாவது தெரிவைக் குறிப்பிட்டுவிட்டு, மூன்றாவது தெரிவைக் குறிப்பிடாமல் விட முடியும். அத்தகைய சந்தர்ப்பத்தில் வாக்கு எண்ணிக்கையில் அந்த வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் வாக்கு செல்லுபடியற்றதாகும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

* வாக்குச் சீட்டில் வேட்பாளர் எவருக்கும் வாக்களியாது விட்டால்.

* முதலாம் தெரிவைக் குறிப்பிடாது இரண்டாம், மூன்றாம் தெரிவைக் குறிப்பிட்டிருந்தால், இவ்வாறு தேர்தல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயற்சித்தவர்களுக்கு சிறை

விடுதலைப் புலிகளுக்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இதர இராணுவ உபகரணங்களை வாங்க முயற்சித்தமைக்காக இருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மிக நீண்டகால சிறைத்தண்டனைகளை விதித்துள்ளது. சதாஜன் சரசந்திரன் மற்றும் யோகராசா நடராசா ஆகிய இருவருக்கும் முறையே 26 மற்றும் 14 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  2006 ஆம் ஆண்டு ஆயுதங்கள் வாங்க முயற்சித்த போது அமெரிக்காவின் எஃப் பி ஐ புலனாய்வு அமைப்பு வைத்த பொறியில் நான்கு பேர் சிக்கி கைதானார்கள்.

திருக்கேதீஸ்வரம் ஆலயப் பிரதேசம் புனரமைப்பு

aalayam.jpgபாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயப் பகுதி புனித பிரதேசமாக 270 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

மாசி மாதம் நடைபெறவுள்ள சிவராத்திரி தினத்துக்கு முன்னதாக ஆலயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் முதற்கட்ட வேலைகள் யாவற்றையும் பூர்த்தி செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இப்பகுதிக்கு

விஜயம் செய்து மக்கள் சுதந்திரமாக ஆல யத்திற்குச் சென்று வழிபாடு செய்வதற்கான வசதிகளை செய்துகொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆலயப்பகுதிக்கு மக்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டது. சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மறுநாள் காலை பாலாவி கடல் நீரேரியில் தீர்த்த மாடுவதற்கு ஏதுவாக புனரமைப்பும் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு 69,000 பொலிஸார், முப்படைகள் கடமையில்

sri-lanka.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்ற நிலையில் நாடுமுழுவதிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய இம்முறை தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், பொலிஸாருக்கு உதவியாக முப்படையின ரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகை யில்:-

அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துள்ளது.

27 வருடங்களுக்கு பின்னர் நாடு முழு வதிலும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறு வது இதுவே முதற்தடவையாகும். இம்முறை நாடு முழுவதிலும் 11 ஆயிரத்து 155 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 413 பொலிஸ் நிலையங்களும், 40 பொலிஸ் பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழு வதிலும் 2,523 நடமாடும் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒவ்வொரு பொலிஸ் குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஐவர் இருப்பர்.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பொலிஸார் ஆயுதங்களுடன் கடமையில் ஈடுபடுவார்கள்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் தெற்கின் சில பிரதேசங்களிலும் தேவைப் படும் சில வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸாருடன், முப்படையினருடனான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி ஆகிய பிரதேசங்களிலேயே இம்முறை முதற் தடவையாக தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள வீதிகளின் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை இம்முறை தேர்தல் முடிவுற்ற பிறகும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதா கவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் ஒரு பிரதேசத்தில் இடம்பெறும் பட்சத்தில் 119 என்ற அவசர இலக்கத்திற்கு பொது மக்கள் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பொலிஸ் மா அதிபர், அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்தப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினதும் வழிகாட்டலில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை சில பிரதேசங்களில் அடையாள அட்டைகள் பலாத்காரமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்தக் காலகட்டத்தில் பொது மக்கள் எக்காரணத் தைக் கொண்டும் அடையாள அட்டைகளை எவருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களது அடையாள அட்டைகளை தாங்கள் பாதுகாத்து தங்களது வாக்குரி மைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எவர் செயற்பட்டாலும் கட்சி பேதமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவு

election-commisone.jpg2010 ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவு ள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வந்த அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 22 வேட்பாளர்களும் தமது பிரதான கட்சி அலுவலகத்தைத் தவிர ஏனைய பிரசார அலுவலகங்கள் அனைத்தையும் மூடிவிட வேண்டும் என்பதுடன் பிரசார கூட்டங்கள் நடத்துவதோ, சுவரொட்டிகள் ஒட்டுவதோ கட்டவுட்டுகள், பெனர்கள் போன்றவற்றை காட்சிக்கு வைப்பதோ தடை செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 26ஆம் திகதி தேர்தல் நடைபெறும் வரை வீடு, வீடாகச் சென்று பிரசாரங்களை செய்வதும் அச்சுறுத்தல் விடுப்பதும் சட்டவிரோதமானது என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரம் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகிறது. இப்பாதுகாப்பு வலயத்தினுள் எந்தக் கட்சி நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

குழப்பம் விளைவிக்க முற்படுவோர் கைது செய்யப்படுவார்கள்.

குழப்பம் விளைவிக்கும் வாக்குச் சாவடிகளின் வாக்களிப்புகள் ரத்துச் செய்யப்படுவதுடன் முடிவுகள் வெளியிடப்படும் பணி ஒருவார காலத்துக்கு பின் போடப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்த சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் முறைகேடுகள் நடப்பின் 011-2877629, 011-2877630, 011-2877631 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் தேர்தல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை தமது அனைத்து கட்சி அலுவலகங்களையும் சமாதான அலுவலகமாக செயற்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

வெற்றி பெறுபவர்களை மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா?: வாசுதேவன்

பதவிக்கு வரும் ஒருவரை மட்டும் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தில் சிலவேளை ஒரு அரசியல் ஆதாயம் இருக்கலாம். ஆனால் ஒருவரை மீளவும் பதவிக்கு வரவைக்க கூடாது என்ற பழி வாங்கும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தர எடுத்திருக்கும் முடிவு சரியானதா என்ற விவாதமே தற்போது மிகவும் சூடுபிடித்துள்ள விவாதமாகும். ஆனால் 30 வருட காலமாக தமிழ் பேசும் மக்கள் எந்த அரசியல் உரிமைக்காக போராடினார்களோ அந்த போராட்டத்தை நிவர்த்தி செய்ய குறைந்த பட்சம் விரும்பும் பிரதிநிதிகளையாவது ஆதரித்திருக்கலாம் என்ற ஆதங்கமும் பலர் மனதில் தோன்றியுள்ளது. 2010 ஜனாதிபதி தேர்தலில் தற்போது போட்யிடும் 20 பேரில் மிகவும் புதிய திட்டங்களுடன் ஒரு உண்மையான மாற்றத்தை தேடி நிற்கும் ஒரு வேட்பாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியலில் அக்கறையுள்ளவர்களிற்கு தெரியாமல் போனது மிகவும் வேதனையான ஒரு விடயம். இங்கே தான் தனியே வெற்றி பெறும் வேட்பாளர்கள் நோக்கிய ஒரு பார்வை புலனாகிறது.

கட்சியில்லா மக்கள் அரசியலதிகாரம் என்ற கோஷத்தின் அடிப்படையில் சுவராஜ்ய என்ற அமைப்பு அரசியல் அதிகாரம் மக்களாகிய நமக்கே என்ற மாற்றத்தினை கொண்டு வருவதினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரை சுயேட்சையாக நியமனம் செய்துள்ளது. இன்று தேர்தலில் நிற்கும் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் மீளவும் இனங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் பேச்சுகளை பேசி வருகிறார்கள். சிங்கள தேசிய வாதத்தை மிகவும் முனைப்போடு பேசும் அதேநேரம் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் சில சலுகைகளை இவர்கள் ஏலம் போடுகிறார்கள். ஆனால் மக்களின் உண்மையான விடுதலையை நேசிக்கும் வேட்பாளர்கள் வெல்ல முடியாதவர் என்ற ஒரு காரணத்திற்காக ஓதுக்கப்படுவதுடன் அவர்கள் சொல்ல வரும் செய்தியையும் இந்த ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது மிகவும் வேதனையானது.

பிளவுகளை ஏற்படுத்தும் இந்த அரசியற் கட்சிகளுக்கு மாற்றாக சுதந்திரம் என்பது அடி மட்டத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும், ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவுடையதாகவும் தனது விவகாரங்களை தானே கையாளக் கூடிய ஆற்றல் மிக்கதாக வளரவேண்டும் என்ற காந்திய கொள்கையை பின்பற்றும் சுவராஜ்ஜியவின் சார்பில் போட்டியிடும் திரு யு. பி விஜேகோன் தமிழ் பேசும் மக்களிற்கு மிகவும் அறிமுகமானவர். சுவராஜ்யாவின் அரசியல் அமைப்பு இனவாதத்தால் பிரிந்து போயுள்ள நாட்டை மீள இணைப்பதுடன் மக்கள் தமது சொந்த தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும் புதிய திட்டம். இதில் அரசியல் கட்சிகள் கிடையாது! மாறாக 14500 கிராம சபைகளும் சுதந்திரமான சுயாட்சி அலகு முறைக்குள் உட்படுத்தப்படும். நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் தொடர்புடைய ஒவ்வொரு படிமுறையும் இந்த கிராம சபைகளில் இருந்தே ஆரம்பிக்கும்!

இவ்வாறு மக்களிடம் மீள ஆதிகாரங்களை கையளிக்கும் வகையிலான திட்டங்களை வெளிப்படுத்தும் இந்த அமைப்பு 60வருட காலமாக காலனித்துவ ஆட்சியார்கள் விட்டுச்சென்ற அரசியல் அமைப்பை உதறித் தள்ளி விட்டு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அரசியல் அமைப்பை மீள புதுப்பிக்க முனைகிறது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தவறிழைக்கும் பட்சத்தில் மக்களால் திருப்பியழைக்கும் உரிமையையும் இது உத்தரவாதம் செய்கிறது. இது நடைமுறைக்கு சாத்தியம் அற்ற ஒரு அமைப்பு எனவே இதைப்பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை என்பதே அனேகரின் வாதம். ஆனால் புதிய அரசில் மாற்றம் ஒன்றை ஆரம்பிக்க எங்காவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் என் இந்த மாற்றமாக இருக்க கூடாது?

அரசியல் அதிகாரங்கள் குவிந்து போயுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அல்ல யு பி விஜேக்கோனின் நோக்கம். அந்த புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை நாட்டும் முகமாக ஒரு செய்தியாளனாகவே இவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். யு பி விஜேக்கோன் வெறும் வார்தை ஜாலங்களுக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லது ஒரு வேட்பாளரை தோற்க வைப்பதற்காகவோ இந்த தேர்தலில் நிற்கவில்லை. அரசியல் அதிகாரம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற தனது கொள்கையை இவர் மந்திரியாக இருந்தபோதே சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தியவர். கிராம சபைகள் கூடிய அதிகாரங்களை பெற இவர் அதிகாரத்தில் இருந்தபோதே பல வேலைத்திட்டங்களை செய்துள்ளார். பிரேமதாச ஆட்சிக் காலத்தில் இவர் கிராமசபைகளை மறு சீரமைத்ததுடன் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை வலுவூட்டினார். அரசியல் அதிகாரம் அடிமட்ட மக்களிடமிருந்து வரவேண்டும் என்ற தன் கொள்கையை யுஎன்பி ஆட்சிக்காலத்திலும் அறிமுகப்படுத்திய ஒருவர். யு பி விஜேக்கோன் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் 1980களில் யாழ் மாவட்ட அமைச்சராக பதவி வகித்தவர். அமரர் திரு அமிர்தலிங்கத்தாலேயே பாராட்டப்பட்ட ஒரு மனிதர். அவரின் மனித பண்புகளுக்காக யாழ் மக்கள் அவரை கௌரவித்தனர்.

இவ்வாறு இலங்கை அரசியலில் உண்மையான மாற்றத்தை தேடும் ஒரு நேர்மையான மனிதர் தமிழ் பேசும் கட்சிகளின் கண்களுக்கு தெரியமால் போனதன் காரணம் என்ன? விஜேக்கோன் விரும்பும் மாற்றத்தால் இந்த அரசியல்வாதிகளிற்கு ஒரு இலாபமும் இல்லாமல் போய்விடும் என்பதாலா? அல்லது கட்சிகள் இல்லாது போனால் தங்கள் இருப்பே போய்விடும் என்பதாலா? மக்களின் விடுதலையை நேசிக்கும் எந்த ஒரு சக்தியும் இந்த மாற்றத்தை விரும்பும். கடந்த முப்பது வருட காலமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காக தமிழீழ தனியரசமைக்க முனைந்த தமிழ் தேசியம் கிராம ராஜ்யம் என்ற அமைப்பின் ஊடக அந்த மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாதா? தேசிய விடுதலைப் போராட்டதில் புலிகளிற்கு எந்தவித நிபந்தனையும் இன்றி தமது ஆதரவை செலுத்திய இந்தக் கூட்டமைப்பினர் கண்களுக்கு மாநில சுயாட்சி தான் தெரியுமா? அதைவிட மக்களிடம் அதிகாரங்களை வழங்க கூடிய கிராமிய சுயாட்சி இவர்களின் கண்களிற்குத் தெரியாது போனதன் மர்மம் என்ன?

இந்த உலகத்தில் நீங்கள் காண விரும்புகின்ற அந்த மாற்றம் நீங்களேயாக வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் வாசகங்கள் பொறித்த சுவராஜ்ய அல்லது கிரமா ராஜ்ய என்ற அமைப்பின் தேர்தல் துண்டுப்பிரசுரம் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் இதை யாரும் கண்டு கொள்ளாது விட்டது நாம் தொடர்ந்தும் வெற்றிபெறக் கூடியவர்களை மட்டுமே ஆதரிப்பதாக முடிகிறது

விளையாட்டு வீரர்களை அரசியல் விளம்பரங்களுக்காக பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை மாற்றப்படல் வேண்டும் அர்ஜுன ரணதுங்க

arjuna-ranatunga.jpgகொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் விளையாட்டுத்துறையைக் கிராம மற்றும் தோட்டப் பகுதிகளுக்கும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் இந்த நாட்டு விளையாட்டுத்துறை இன்று அரசியல் மயப்பட்டுள்ளது. திறமை அடிப்படையில் அல்லாது அரசியல் செல்வாக்கினால் வீரர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். தேசிய சொத்துகளான விளையாட்டு வீரர்களை அரசியல் நலன்கருதி அரசியல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலைமை மாற்றப்படல் வேண்டும். கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளை எமது நாட்டின் கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் கொண்டு வருவதே எனது இலக்காகும்.

அவுஸ்திரேலியாவில் முரளிதரனுக்கு அநீதி ஏற்பட்டபோது முழு அணியையும் மைதானத்தில் இருந்து திருப்பி எடுத்தவன் நான். ஆனால், இன்று அவரது செயற்பாடுகள் கவலையளிக்கின்றன. நான் உலகக்கிண்ணத்தை ஏந்திவந்த காலத்தில் இந்த நாட்டில் தேர்தல்கள் நடந்தன. நான் அரசியல் குடும்பத்தில் வந்தவன். ஆனால், எனது கிரிக்கெட் பிரபலத்தை எனது தந்தையின் அரசியலுக்கோ அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அவர்களுக்காகவோ நான் விற்கவில்லை. கிரிக்கெட்டை அரசியலாக்கவில்லை. ஆனால், இன்று நடப்பதென்ன என்பதை நீங்கள் ஊடகங்களில் பார்க்கிறீர்கள். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னரே அரசியலுக்கு வந்தேன். அதுவும் யாருக்காகவும் வாக்குக் கேட்கும் விளம்பரக்காரனாக இல்லை. மக்களுக்கு தலைமை கொடுக்கும் தலைவனாகவே செயற்படுகிறேன்.

கிரிக்கெட் சபை நிர்வாகம் கிரிக்கெட் தெரியாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு ஊழல் இடம்பெறுவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று நீதியை வென்றெடுத்தேன். ஆனாலும், அரசாங்கம் கிரிக்கெட் சபையை அரசியல் ரீதியாகவே நடத்துகின்றன.

அரசியலில் எப்போதும் சுயமாக முடிவெடுக்கவேண்டும். அடுத்தவர் கயிற்றை விழுங்கக்கூடாது. நான் இன்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்காரர். எனது தந்தை தனது வாழ்நாள் முழுவதையும் சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணித்தவர். ஆனால், இன்று அந்தக் கட்சி ஊழல்களின் கூடாரமாகிவிட்டது. அதனால்தான் நான் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே தொடர்ந்திருப்பேன். அந்தப்பலம் பெரும் கட்சியை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்குள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மண்டைதீவு இராயப்பர் தேவாலயம் நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பு

images1.jpgயாழ். மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம் நேற்று மாலை ஆலய நிர்வாகத்தினரிடம் கடற்படையினரால் கையளிக்கப்பட் டது.  அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இதுவரை காலமும் கருதப்பட்ட மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயப்பகுதி வழிபாடுகளுக்காக விசேட அனுமதி பெற்றே அடியார்கள் செல்ல வேண்டியிருந்தது.

இப்பகுதியின் அதி உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுவதுடன் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 3.30 மணியளவில் புனித இராயப்பர் தேவாலயம் கையளிக்கப்பட்டதுடன் ஆசிர்வாத பூஜையும் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய தோமஸ் செளந்தரநாயகம் அடிகளாரும் இந்த ஆசிர்வாத பூஜையில் கலந்து கொண்டார். யுத்தம் காரணமாகவும், அண்மையில் குடாநாட்டை ஊடறுத்துச் சென்ற புயல் காற்றினால் சேதமடைந்திருந்த மேற்படி ஆலயத்தின் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருடந்தோறும் வரும் ஆனி 29 இல் ஆலய மகோற்ஸவமும் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.