காற்றைக் கரியாக்காதே- (குறியீட்டு படிமக்கவிதை)
பெருமூச்சு விட்டபடி
பேருந்து ஊருந்தும்.
ஊரெங்கும் உள்ளுந்தும்.
எம்மைச் சுமந்த கூலிக்காக
எம் உயிர்மூச்சை
ஊதியம் கேட்கும்.
உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.
தரிப்பு நிலையமொன்றில்
தலைசுற்றிய
தலையில் சுற்றிய
ஒரு ஈராக்கியத்தாய்
ஆணாதிக்க மதத்தின்
அடிமையாய் ஏறினாள்.
அம்மா என்றழைத்தபடி
பாலர் பாடசாலை ஒன்றே
அவளில் தொங்கிக் கொண்டிருந்தது.
அவள் தன்மொழியிலும்
ஓட்டுணரோ நோர்வேயின் மொழியிலும்
ஏதோ புரிந்தும் புரியாததுமாய்
தலையை
அங்குமிங்கும் ஆட்டிவிட்டு
ஓட்டுணர் ஓடினார்
ஓடாத இடம் தேடி
உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.
அடுத்த தரிப்பில்
இன்னொருத்தி தலையில் கூடாரத்துடன்…
பயணிகள்
மூக்குகளை பொத்திக் கொண்டார்கள்
குசினியையே
கூடாரத்துள் கூட்டி வந்திருக்கிறாள்
கண்மட்டும் தெரியுமாறு
ஒருகாப்பிலிப் பெண்
வெளியில் மூன்று
வண்டிக்குள் ஒன்று
அவள் வண்டிக்குள்ளும் ஒன்று.
உலகம்
பாரம் தாங்காது
உருண்டு கொண்டே இருக்கிறது.
அருகிருக்க வெறுக்கும்
கறுப்பனென்னருகில்
அழகான ஒருத்தி.
நிரம்பிவிட்டது என்மனம்போல் பேருந்தும்
இருக்கை சொர்க்கமானது எனக்கு.
திரும்பிப்பார்க்கிறேன்
இசைகேட்கும் சாட்டில்
காதுகளை அடைத்து
செவிப்புலனைக் காவு கொடுத்திருந்தது
செவிட்டுச்சமூகம்
இவர்களிடமா?
எம்மக்களைக் காப்பாற்று என்று
கேட்டோம்.
கேட்குமிடமறிந்து கேட்காததால்
வந்த வினை
நந்திக்கடலில் முடிந்ததே
உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
பட்டையும்
சொட்டையுமாய்
நாறல்பாக்குப் போட்டு
நாறடித்துக் கொண்டிருந்தான்,
பிரம்மமறிய வேண்டிய ஆனால்
பிரபஞ்சமேயறியாத பிராமணி
உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
உள்ளேயும் மொட்டை
வெளியேயும் மொட்டையாய்
ஒரு ஆமுத்துறு
ஆத்திரப்படுகிறான்
மதகுருமாருக்கு இடமெங்கே?
மதம்
மதம் பிடித்து நிற்கிறது
உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
பூச்சடித்த சப்பறமாய்
ஒரு வெள்ளைக்காரக்கிழவி
ஏறிக்கொள்கிறாள்
உலக வரைபடத்தின்
எல்லைக்கோடுகள் அவள் முகத்தில்.
எழும்பி இடம்கொடுத்தேன்
முறைத்தபடி கேட்டாள்
”வயது போய்விட்டது என்று எண்ணுகிறாயா?
நான் சமாளிப்பேன்”
அந்திமகாலம் வரையப்பட்ட
முந்தியவயது பெண்டிர்க்கு –
தாரமாகத் துடிக்கும் தாரகைக்கு –
என்மரியாதை மானக்கேடுதான்.
அடங்கி அமரமுன்
ஆமுத்துறு பாய்ந்து கொண்டான்
என்னிருக்கையில்
உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது
வேதமறியா பாதிரி
பாதி வேதம்கொண்டு
ஊதிஊதி ஓதுகிறான்
பேருந்தில்
உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது
காதலர்கள் கைகளை
இறுகப்பற்றியபடி
இருக்கையிலும்
வெளியே நடக்கையிலும்…
கையை விட்டால்
ஓடிவிடுவார்களோ?
சந்தேகத்தில் காதலும் குடும்பமும்.
நெரிசல்
சனநெரிசல்
மனநெரிசல்
காற்றெடுக்கும் கரியமிலவாயு
கண்களை உருட்டியது
யன்னலை திறந்து
பார்வையை எறிந்தேன்
கண்டகாட்சி வெருட்டியது
வானத்தைப் பழுக்கவைக்க
படுத்திருந்து
சுருட்டடித்துக் கொண்டிருந்தன
தொழிற்சாலைகள்
ஓசோன் ஓட்டையூடு
சுருட்டைப் பிடித்துத்தான்
யமன்
பூமிக்கு வருவானோ?
காலச்சக்கரம் காற்றின்றி
வெடித்துச்சிதற
ஞாலச்சக்கரம் பிரளத்தொடங்கியது
உச்சி மலையில் இருந்து
பாதாளத்துள்
உலகம்
சிதறத்தொடங்கியது
காற்றைக் கணக்கெடுக்காததால்
கரியாய் போன காற்றால்
காலனின் கையில்
கலண்டர் முடிந்தது.