வன்னியில் இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் பணியாற்றிய மருத்துவர் கைலைநாதன் சுதர்சன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களாக தன்னை ஒரு மருத்தவர் என வெளிக்காட்டாது நிவாரண முகாமிலிருந்து வெளியேறி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து இந்தியா சென்றிருந்தார்.
அங்கு தனது மேற்படிப்பு தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை, ‘கியூ’ பிரிவினருக்கு இவர் ஒரு மருத்துவர் என்றும், இறுதி யுத்தம் வரை மருத்துவராக பணியாற்றியவர் எனவும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இவரிடம் சென்று பல தடவைகள் விசாரணை நடத்திய ‘கியூ’பிரிவுப் பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் மீண்டும் தமிழகத்திலிருந்து குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றார். எனினும், ‘கியூ’ பிரிவு பொலிஸார் சிங்கப்பூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விமான நிலையத்தில் வைத்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும் சிங்கப்பூர் பொலிஸார் இலங்கைக்கு நாடு கடத்தினர். பின்னர் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு சிங்கப்பூர் புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் இரண்டாம் மாடியில் விசாரணகளுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
